இன்று உலகை உலுக்கி வரும் பிரச்சினைகளுள் பொருளாதாரப் பிரச்சினை முன்நிற்கின்றது. வேலை இழந்தவர்கள் நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கையும் தாண்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இதை நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இவ்வித சீர்கேடுகள் எதனால் ஏற்படுகின்றன? ஒரு முறை ஏற்பட்டதென்றால் அது தற்செயலாக நேர்ந்தது என கூறலாம். ஆனால், இது அடிக்கடி ஏற்படுகிறது. இதன் விளைவாக சமூகத்தில் பல சீர்கேடுகள் விளைகின்றன. வேலை இழந்தவர்கள் என்ன செய்வார்கள்? திருட்டுகள் நடக்க ஆரம்பித்துவிடும். தற்கொலைகள் கூட நிகழலாம்.

1920-களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவில் பல அமெரிக்கர்கள் நியூ யார்க்கில் உள்ள “The Empire State” கட்டிடத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை புரிந்துகொண்டனர். வருவாய் இன்றி உணவுக்கு திண்டாடியவர்கள் வரிசை வரிசையாக கையில் தட்டேந்தி அரசாங்கத்தின் உணவளிப்புத் திட்டத்தில் உயிர்வாழ்ந்தனர். அதன் பிறகு அது போன்ற பொருளாதார சீர்கேடுகள் நிகழ்ந்தாலும், 1920-இல் நிகழ்ந்தது போன்ற சீர்கேடு இதுவரை நிகழவில்லை.

அதற்காக அதுபோன்ற ஒன்று நிகழாது என உத்திரவாதமும் கிடையாது. இவ்வித சீர்கேடுகளுக்கு மூலகாரணம் என்ன? பல வல்லுனர்கள் பல விதமான விளக்கங்களை அளிக்கின்றனர். பலவிதமான இடைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன மற்றும் தற்போது எடுக்கப்பட்டும் வருகின்றன. இத்தனை நடவடிக்கைகளிலும் மூல காரணத்தைப் பொதுவாக யாரும் கருத்தில் கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் மனிதனின் ஒழுக்கநெறியின்மையே இதற்கான மூலகாரணமாகும். பொருளாதாரக் கொள்கைகள் தன்னலம், பேராசை போன்றவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும் வரையில் இவ்வித சீர்கேடுகள் தொடர்ந்து நிகழவே செய்யும். பஹாய்களின் உலக நீதி மன்றம் இது குறித்து தனது அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளது:
இதற்கு முன்பு ஏற்பட்டிறாத இந்தப் பொருளாதார நெருக்கடியும், அது மறைமுகமாக உருவாக்கியுள்ள சமூகச் சீர்கேடும், மனித இயல்பு குறித்த பெரும் தவறான கருத்துணர்வு ஒன்றை (conception) ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடப்பிலுள்ள அமைப்புமுறைகள் மனிதர்களுள் ஊக்குவிக்கும் செயல்பாடுகளின் தர அளவுகள் பற்றாதவை மட்டுமல்ல, பார்க்கப்போனால் உலக நிலவரங்களுக்கு முன் அவை பெரும்பாலும் பொருத்தமற்றவையாகவும் காணப்படுகின்றன. சமுதாயத்தை மேம்படுத்துவதானது வெறும் லெளகீக நிலைகளின் மேம்பாட்டிற்கும் அப்பால் உயர்வான குறிக்கோள் ஒன்றை கண்டு கொண்டால் ஒழிய, அது இந்த இலக்குகளைக் கூட அடையத் தவறிவிடும் என நமக்கு எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இக் குறிக்கோள் தொடர்முறையாக மாறிவரும் பொருளாதார காட்சிநிலை மற்றும் மானிட சமுதாயத்தின்மீது “மேம்பட்ட” எனவும் “மேம்படாத” எனவும் செயற்கையாக சுமத்தப்பட்டிருக்கும் வகுப்புமுறைகளினும் உயர்வான வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்கள் மற்றும் ஊக்குவிப்புமுறைகளிலும் காணப்படவேண்டும்.