வருங்காலத்தில் மனிதர்களின் உணவு எதுவாக இருக்கும் என அப்து’ல்-பஹாவிடம் வினவப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
“பழங்களும் தானியங்களும். புலாலே உண்ணாத ஒரு காலம் வரும். மருத்துவ அறிவியல் இப்போது அதன் ஆரம்பப் பருவத்தில் இருக்கின்றது, இருந்தபோதும் அது நமது இயல்பான உணவு பூமியில் விளையக்கூடியவையே என எடுத்துக்காட்டியுள்ளது. இந்த இயற்கை உணவுக்கான நிலையை மனிதர்கள் படிப்படியாக அடைவார்கள்.”
வேறோர் இடத்தில், அவர் மனிதர் மற்றும் மிருகங்களின் பற்கள் மற்றும் ஜீரன உருப்புக்கள் குறித்து விளக்கினார். மனிதர்கள், தாவரவுண்ணிகள், புலாலுண்ணிகள் ஆகியவற்றின் பற்களை ஒப்பிட்டு, மனிதர்களின் பற்கள் தாவரங்கள் மட்டும் உண்பதற்கோ புலால் மட்டும் உண்பதற்கோ படைக்கப்பட்டதல்ல என்கிறார். அவை பழங்கள், தானியங்கள், கிழங்குகள் போன்றவற்றை உண்பதற்கான அமைப்பைக் கொண்டுள்ளன எனவும், அதே போன்று இம்மூன்று வகை உயிரினங்களின் ஜீரண உறுப்புக்களான குடல்களை ஒப்பிட்டு மனிதர்களின் குடல்முறை புலால் உண்பதற்கோ தாவர வகைகளை உண்பதற்கோ தேவையான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை என விளக்கினார். மாறாக, தானியங்கள், பழங்கள் போன்ற உணவு வகைகளை ஜீரணிப்பதற்கான அமைப்பை மட்டுமே அவை கொண்டிருக்கின்றன என அவர் மேலும் விளக்குகிறார்.
இன்று உலகின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என நாம் அடிக்கடி செவிமடுக்கின்றோம். இது ஓர் உலகளாவிய பிரச்சினையாகவும் இருக்கின்றது. மனிதர்கள் புலால் உண்பதற்கும் உலகின் வெப்பநிலை அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கின்றது என்பது நமக்குத் தெரியுமா?
உலகம் முழுவதும் எரிபொருளைப் பயன்படுத்தும் யந்திரங்கள் வெளியாக்கும் புகைகளின் அதிகரிப்பு காற்று மண்டலத்தை பாதிக்கிறது என்கிறார்கள் இது உண்மைதான். ஆனால், இதைவிட அதிகமாக, காற்றுமண்டல தூய்மைக் கேட்டிற்கு, ஐந்தில் ஒரு பகுதி பங்களிக்கும் ஒரு தொழில் இருக்கின்றது. அது உலகளாவிய கால்நடை தொழிலாகும் (Global livestock production). கால்நடைகளிலிருந்து வெளிப்படும் (மீத்தேன்)methane வாயு காற்று மண்டலத்தில் சேர்ந்து வெப்பத் தேக்கத்தை அதிகரிக்கின்றது.
இப்பிரச்சினை போக, கால்நடைகள் வளர்ப்புக்கு மற்ற உணவு வகைகளுக்குத் தேவைப்படும் வளங்களின் அளவைவிட இருமடங்கு தேவைப்படுகின்றது. மற்றும், மீன்பிடி தொழிலினால் இன்று கடுமையான பின்விளவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அதை இங்கு விளக்குவதற்கு இடம் போதாது.
மனிதர்கள் புலால் உண்ணும் பழக்கத்திற்கு சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பே ஆளாகிவிட்டனர் என்பது தொல்பொருள் ஆய்வுகளின் வாயிலாக தெரிய வருகின்றது. ஆனாலும், இது இடையில் ஏற்பட்ட பழக்கமே ஆகும். ஆங்கிலத்தில் இது (acquired habit) என அழைக்கப்படுகிறது.
மனிதர்கள் புலால் உண்ணிகள் இல்லையென தெரிந்துகொண்டோம். அப்படியானால் அவர்களின் உண்மையான இயல்புதான் என்ன? மனிதன் தன் உண்மை நிலை அறியாமல் ஏன் ஏதேதோ செய்துகொண்டிருக்கின்றான். உண்மையில் மனிதனை கடவுள் எதற்காக படைத்துள்ளார் எனும் கேள்வியை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், மனிதர்களின் வாழ்க்கைமுறையில் அவர்கள் தங்கள் உண்மையான இயல்புக்கு எதிர்மாறான பல பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரியவரும். அவற்றோடு ஒப்பிடும்போது புலால் உண்ணுவது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தோன்றாது.
“மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை தெரிந்துகொண்டான்… மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை” எனும் பாடலை நாம் அடிக்கடி கேட்டதுண்டு. மனிதன் என்பவன் உண்மையில் யார் எனும் கேள்விக்கு காலம் காலமாக மனிதர்கள் பதில் தேடி அலைந்துள்ளனர். ஆனாலும், “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே” எனும் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மற்றும், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,” என்னும் பாடலும் ஞாபக்திற்கு வருகிறது.
அவ்வாறாயின், மனிதன் எவ்வாறு தெய்வமாகலாம்? மனிதன் தெய்வமாக முடியாது, ஆனால் அவன் தெய்வதன்மையை அடையலாம். தெய்வத்தன்மை என்பது கடவுளின் ஆன்மீக சிறப்புகளை பிரதிபலிப்பதன் மூலம் அடையப்படும். அன்பு, கருணை, இரக்கம், தயவு, பொறுமை, போன்ற ஆன்மீகப் பண்புகளே மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்துகின்றன. அவற்றை நாம் தேடி அலைய வேண்டியதில்லை, அவை நமக்குள்தான், மறைந்திருக்கும் இரத்தினங்களைப் போன்று இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர வேண்டியதே நம் கடமை. அதற்கு முதல் படி, கடவுளை அறிந்துகொள்வது. அதையடுத்து அவருடைய சேவையில் ஈடுபடுவது. இதைச் செய்யும் போது ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’.
அற்புதம். படிப்பதற்கு சுவையாக இருக்கிறது.