ஆசிரியர் குறிப்பு: கடந்த 30 ஆண்டுகளாக, இரான் நாட்டின் பஹாய் சமூகத்தினருக்கான உயர்கல்வி வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டதன் விளைவாக BIHE எனப்படும் திறந்தமுறை பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது புதிய பகிஷ்காரமுறை ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. பஹாய் மாணவர்கள் ஆரம்ப மற்றும் இடைநிலை கல்விநிலையங்களில் தங்களைப் பதிந்துகொள்வதினின்று தடுக்கப்பட்டு வருகின்றனர். (Iran Press Watch , பார்க்கவும்). இச்சூழ்நிலையின் பின்னனியிலேயே பின்வரும் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை வழங்கப்படுகிறது.
நன்றி, சமந்தர் மிஷ்கிபாஃப்
என் சினேகிதி ஒருவர் தமது மூத்த மகவை பள்ளிக்கு அழைத்து சென்ற போது (தானும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனும் பெரும் ஆர்வமுடைய) அவருடைய இரண்டாவது குழந்தை தன் தாயைப் பார்த்து தனக்கு ஏன் தன் மூத்த சகோதரனுடையதைப் போன்றே பிறந்த பத்திரம் எடுக்கவில்லை எனவும் அப்படி எடுத்திருந்தால் தானும் தனது சகோதரனோடு பள்ளிக்கு செல்ல இயலுமே என ஆத்திரத்துடன் கூறினாளாம்…
அவ்விஷயம் நடந்து இப்போது பல வருடங்களாகிவிட்டன ஆனால், நமது குழந்தைகள் வாஞ்சைமிகுந்த அன்பான ஆசிரியர் ஒருவரின் கீழ் அகர வரிசையையும் அதற்கு மேலும் கற்கும் அதே ஆர்வத்துடன் இருந்தும் பள்ளி செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர்… ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பள்ளி சென்றிட மாணவர்கள் மும்முரமாக இருப்பார்கள்; சிறார்கள் புதிய புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் பிற பள்ளி சாதனங்களை வாங்கிட தங்கள் பெற்றோர்களுடன் பெரும் உற்சாகத்தோடு செல்வார்கள்.
ஆனால் என் குழந்தைக்கோ, அதே பள்ளி திரும்பும் மாதம் பெரும் பயம், ஏமாற்றம் மற்றும் சோகம் நிறைந்ததாக இருக்கும். ஆகவே, உங்கள் நாடுகளில் பெரும் சுதந்திரத்துடன் வாழ்வோர்களே, உங்கள் குழந்தைகளை எந்த நேரத்திலும், எந்தப் பள்ளியிலும் பதிந்து அவர்கள் விரும்பும் கல்வியைக் கற்க அவர்களை வழியனுப்பும்… அந்திப் பொழுதில் உங்கள் நாற்காலிகளில் அமர்ந்து பெட்ரோலிய மூலப்பொருள் குறித்தும் உலக சந்தையில் அதன் விலையின் ஏற்ற தாழ்வுகள் போன்ற உலக செய்திகள் குறித்தும்… இந்த தொழிற்சாலை பொருளின் அல்லது வாணிபத்தின் சந்தை விலைகளின் ஏற்றதாழ்வு குறித்தும்… அல்லது ராக்கெட் அறிவியல் ஆய்வு மற்றும் அனு ஆற்றலை மேம்படுத்திக்கொண்டிருக்கும் நாடுகள் குறித்தும் வானொலியில் செவிமடுத்துக்கொண்டிருப்போர்களே… உங்களை நான் கூவியழைக்கின்றேன்…
பள்ளி திரும்பும் காலம் குறித்து தனது பேரார்வத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் என் மகவின் குரலை சற்று செவிமடுக்கக் கோரி… உங்களை நான் கூவியழைக்கின்றேன்:
இவ்வுலகில் என்னைப் பற்றி சிறிதேனும் சிந்திக்கும் எவராவது இருக்கின்றார்களா? பள்ளிக்கால நாட்கள் ஆரம்பிக்கும்போது, என்னை ஏற்றுக்கொள்ளும் பள்ளி எங்கேனும், ஏதாகிலும் உள்ளதா எனும் விளக்கமுடியாத பயம் என்னை கவ்விக்கொள்கிறது… நானும் என் அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய இடம் எதையாவது காண்பேனா? உலகின் மற்ற நாடுகளில் பிறந்த உங்கள் குழந்தைகளுக்கும் இரான் நாட்டில் பிறந்த என் போன்ற குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குழந்தைகள் எனும் வகையில் நாங்களும் இந்த உலகின் வருங்கால சந்ததியினர்தானே? பின் நான் என் அடிப்படை உரிமையை இழந்து நிற்கும் அதே வேளை உலகின் பிற பாகங்களில் சுகத்துடன் அமைதியாக உட்கார்ந்துகொண்டு இத்தகைய கேடுகெட்ட ஒரு நிலை குறித்து நீங்கள் ஏன் குரலேதும் எழுப்பாமல் இருக்கின்றீர்? அல்லது என் போன்ற குழந்தைகளின் நிலையை ஒரு பேரிடருக்கு இணையாக நீங்கள் கருதவில்லையா? ஒருவரை தாக்கும் ஒரு தோட்டா அல்லது வெடி அவரது உயிரை உடனடியாக பறித்து அவர் அக்கணமே இவ்வுலக வாழ்வை இழக்கும்படி செய்யும்… ஆனால் என் ஆன்மா அனிதினமும் வதைக்கப்படுகின்றது… இல்லை இல்லை ஒவ்வொரு மணி நேரமும் உலகின் இந்த மூலையில் இப்பேரிழப்போடு வாழும் என் ஆன்மா வதைக்கப்படுகின்றது – இருந்தும் இவ்வுலகம் என்னைப் பற்றி அக்கறைப்படுவதாக தெரியவில்லை!
என் தாயாரின் கையைப் பிடித்துக்கொண்டு நான் பள்ளிக்கூடத்தின் பதிவுக் காரியாலயத்தினுள் நுழைகின்றேன். என் தாயாரால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பார்த்த அந்த மனிதர் ஏமாற்றத்துடன் தன் தலையை ஆட்டிக்கொள்கிறார்… என் தாயாருக்கும் அவருக்கும் இடையில் சட்டம் போன்றவை குறித்து நடக்கும் வாக்குவாதம் எதையும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை… இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நாங்கள் அனுப்பப்படுகின்றோம். நான் என் தாயாரின் முகத்தை ஆர்வ மிகுதியுடன் பார்க்கின்றேன், அவர் வாஞ்சைமிகுந்த தமது பார்வையால் என்மீது தமது அன்பை பொழிகின்றார். ஆனால், எங்கள் புகார் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர் தம்முன் உள்ள காகிதங்களில் இருந்து தமது பார்வையை அகற்றாமல் தமது தலையை இல்லையென்பதற்கு அடையாளமாக ஆட்டிக்கொண்டு – வாசலை நோக்கி தமது விரலைச் சுட்டி – எங்களை வெளியேறும்படி கூறிகிறார்… அப்போது நான் இந்தப் பள்ளியும், அதற்கு முன்பு நாங்கள் சென்ற மற்ற பள்ளியைப்போல் எனக்கு இடம் தர மறுத்துவிட்டது என்பதை உணர்கின்றேன்…
தொலைக்காட்சி செய்திகள் மற்றும் என் பெற்றோர்களின் உரையாடல்களிலிருந்து, தங்கள் குழந்தைகளுக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் உலகத்தின் பிற பாகங்களில் உண்டு மற்றும் அங்கு இளம் ஆன்மாக்களை அரசாங்கங்கள் ஆதரித்தும் பாதுகாக்கவும் செய்கின்றன… இந்த அரசாங்கங்கள் தங்கள் குழந்தைகள் யாவும் அந்த நாடுகளின் வருங்காலத்திற்கான பொக்கிஷங்கள என நம்புவதால், அவை எல்லா வாழ்க்கை நிலைகளிலும் உள்ள குழந்தைகளுக்கான கல்வியை தாங்களே ஒருங்கிணைக்கின்றன.
என் நாட்டில் மட்டும் ஏன் அப்படியில்லை என என்னால் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை!!! நான் ஒரு பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு பந்தாடப்படுகின்றேன்; அல்லது ஏதோ ஒரு பள்ளி என்னை ஏற்றக்கொண்டாலும் அப்பள்ளியில் நான் எவ்விதம் நடத்தப்படுவேன் என்பதும் தெரிவில்லை. இவ்விதமான குழப்ப சூழ்நிலைக்கு என் பெற்றோர்கள் பஹாய்களாக இருப்பதுதான் காரணம் என்பது தெரியும். நெறிமுறை ஒன்றை விளக்குவதற்கான வார்த்தை ஒன்றை அவ்வப்போது நான் செவிமடுத்திருக்கின்றேன்… சிலர் பெற்றிப்பதும் சிலர் பெறாதிருப்பதுமான ஓர் ஒழுக்கசீலம் அது … அவ்வார்த்தை “நியாசிந்தனை” என்பதாகும்… என்னைப் பொருத்தவரையில் இந்த ஒழுக்கநெறி இல்லாதவர்களுள் இரான் நாட்டின் பள்ளி தலைமை ஆசிரியர்களும் அடங்குவர். அவர்கள் மேலிடத்திலிருந்து தங்கள் ஆணகளை பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். உங்களிலும் பெரும்பாலானோர் நியாயமனப்பான்மை மிக்கவர்களாக இருப்பீர்கள், ஆகவே என்னுடைய கேள்வி: என் சார்பாக நீங்கள் ஏன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கின்றீர்கள்? “ஒவ்வொரு மனிதனும் கல்வி பெறுவது அவரவர்களின் உரிமை இவ்வுலகில் எவருமே கல்வியற்றவர்களாக இருக்கக்கூடாது,” என ஏன் கூறமால் இருக்கின்றீர்கள்? அனுசக்தி போன்றவற்றில் மட்டும்தான் உங்கள் சிந்தனைகள் இலயித்திருக்குமா? போர்கள் மற்றும் கொலைக்குற்றங்களில் மட்டும்தான் நீங்கள் ஆர்வாமாக இருப்பீர்களா? நீங்கள் அனைவரும் என்னை ஏன் மறந்துவிட்டீர்கள்? இவ்வுலகின் பெரும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்னைப்போன்ற பாதுகாப்பற்ற குழந்தைகளுக்காக ஏன் வாதாடாமல் இருக்கின்றார்கள்? பெரிய பெரிய விஷயங்களில் மட்டும்தான் நீங்கள் மேன்மையானவர் என காண்பிப்பீர்களா? உங்கள் வீட்டிலேயே உங்கள் குழந்தை ஒன்றுக்கு இந்த கொடுமை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்களுக்காவும் மற்றவர்கள் முன்னெழுந்து வருவார்கள் என எதிர்ப்பார்க்கமாட்டீர்களா? ஆகவே – நான் மீண்டும் உங்களை கேட்கின்றேன் – என்னை மறந்துவீட்டீர்களா?
ஒவ்வொரு வருடமும் இதே காலத்தில் மற்ற எல்லோரும் பள்ளி திரும்பும் உற்சாகத்துடன் இருக்கையில் கல்விக்கான வாய்ப்பை இழந்துவிடுவோம் என மனதில் பயமும் குழப்பமும் கொண்ட பல பஹாய் குழந்தைகள், பால்ய இளைஞர் மற்றும் இளைஞர் மனதில் இந்தக் கேள்விகளே தீபோல் எரிந்துகொண்டிருக்கின்றன… இக்கூக்குரலுக்கு செவி சாய்ப்போர் யாரும் இல்லையா? என் குழந்தையின் இக்கூக்குரலை யாராவது செவிமடுப்பார்களா?
பஹாய் உலக நிலையத்தில் திரு அலி நாக்ஜவானி அவர்களால் ஆற்றப்பட்ட உரை
24 நவம்பர் 2001
அரை மணி நேரத்திற்கு மேல் பேசக்கூடாது என செயற்குழு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளது, ஆகவே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்! மதிய வேளையிலிருந்து நீங்கள் அணைவரும் ஓய்வின்றி இருந்திரப்பீர்கள் என்பதும், பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியிருப்பீர்கள் எனவும் எனக்குத் தெரியும்.
உலக நீதி மன்றம் எண்ணியுள்ள விஷயத்தின் உணர்வை எய்திட நீங்கள் பல அப்புதமான முடிவுகள் கண்டுள்ளீர்கள் என்பதை நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன்.
பஹாய் உலகத்திற்கும், தேசிய ஆன்மீக சபைகளுக்கும் சுமார் பத்துப் பதினான்கு நாள்களுக்கு முன் உலக நீதி மன்றம் அனுப்பிய கடிதத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அவை உலகத்தில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.
நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளை, பஹாய் அனைத்துலக நிதிக்கு மேலும் அதிகமான உதவியை எவ்வாறு வழங்கக்கூடும் என்பது குறித்து தேசிய ஆன்மீக சபைகள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றன. அதே வேளை, உலக நீதி மன்றமும் தங்களுடைய ஒதுக்கீடுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து வழிவகைகளைப் பற்றி சிந்திக்கும்படி தனது காரியாலயங்களையும், இலாகாக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது; அந்த நடவடிக்கையும் நடந்துகொண்டிருக்கின்றது;
இந்தச் செயற்பாடுகள் இயங்கிக்கொண்டிருக்கும் அதே வேளை, இங்கும் உலக நீதி மன்ற அடித்தள ஊழியர்களிடையேயும் ஓர் இயக்கம் தோன்றியுள்ளது; இது வரவேற்கப்படக்கூடியது, பெரிதும் மதிக்கப்படுகின்றது, மேலும், அவ்வித நடவடிக்கை உருவாகியுள்ளது மிகுந்த ஆரோக்கியமானதும்கூட. எனக்குத் தெரிந்த வரை இவ்வித ஒரு நடவடிக்கைத் தொன்றியுள்ளது இதுவே முதன் முறையென நான் நினைக்கின்றேன்.
இந்த விஷயத்தைப் பற்றி எப்படி உரையாற்றுவது என நான் நிறைய சிந்தித்தேன்; பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து ஒரு சில வார்த்தைகளை குறிப்பிடுவது என நான் முடிவுசெய்துள்ளேன். அவ்வார்த்தைகள் எச்சரிக்கை விடுப்பவையாக உள்ளன:
“உதாரித்தனம் எப்போதும் கடுந்துன்பத்திற்கும், குழப்பத்திற்கும் இட்டுச்செல்லும். ஒரு தேவையை அல்லது கடமையை நிறைவுசெய்வதற்காகவே நாம் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். உணவில் கூட, தேவைக்கு அதிகமாக ஒருவர் உண்பாரெனில், அது நிலைகுலைவுக்கும், உடல்நலக்குறைவுக்கும் இட்டுச்சென்று, நோய்களிலும், வியாதிகளிலும் முடியும்.”
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)
மேலும், ஓர் உண்மையான ஆர்வலரின் பண்புகள் குறித்து கித்தாப்-இ-இஃகானில் பஹாவுல்லா கூறியவை குறித்து நீங்கள் பரிச்சயம் அடைந்திருப்பீர்கள். அவற்றுள் ஒன்று பின்வரும் பண்பு:
நமது புனிதவாசகங்களில் பொருளாதாரம் பற்றிய விஷயம் எவ்வாறு அனுகப்பட்டுள்ளது என்பதை இவ்வொருசில வாசகப்பகுதிகள் காண்பிக்கின்றன. இந்த இடத்திலாகட்டும் அல்லது உலகின் வேறு இடங்களிலும் சரி, அவற்றைப் படிக்கும்போது, அவற்றை நமது வாழ்க்கைமுறைகளோடு சில வேளைகளில் நாம் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை.
“ஊதாரித்தனம்,” எனும் வார்த்தையை பஹாவுல்லா பயன்படுத்தியுள்ளார். “ஊதாரித்தனம்” என்பதன் அர்த்தம், “மிதம் மீறி செலவளித்தல்” என்பதாகும், மேலும், “தேவைக்கும் அதிகம்” என்பதும் ஆகும். அது ஒரு கோடியுள்ள நியையாகும். மறு கோடியில், “ஊதாரித்தனம்” என்பதன் எதிர்ப்பதம், “கஞ்சத்தனம்” அல்லது “கருமித்தனம்” என்பதாகும். அதுவும் நல்லதல்ல. ஆனால், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையுள்ளது. ஒரு முறை, பஹாய் சமயம் என்பது நடுநிலையிலுள்ள ஒரு சமயமாகும் என ஷோகி எஃபெண்டி கூறியதாக ரூஹிய்யி ஃகானும் தெரிவித்துள்ளார்.
அவ்விரு கோடி நிலைகளுக்கும் இடையிலான நிலையை சிக்கனம் என வருணிக்கலாம். “சிக்கனம்,” என்பது “செலவுகள் குறித்து கவனமாக இருப்பது, மேலும், பணம் நமது பணமாக இருந்தாலும், சமயத்தின் நிதியாக இருந்தாலும், செலவுகள் மிகக் கவனமாக செய்யப்பட வேண்டும்.
நாம் இன்று பகல் முழுவதும் இவ்விஷயங்கள் குறித்தே சிந்தித்தும், கலந்துரையாடிக்கொண்டும் இருந்தோம். “நாம் இப்போது ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளோம். இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக மட்டுமே நான் பொருளாதாரம் குறித்து சிந்திக்க வேண்டுமா,” என்பதே நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது.
அல்லது பொருளாதாரத்தைப் பற்றிக்கொள்வதென்பது தனியாகவும், செயல்பாடு வாயிலாகவும் பெரும் ஆன்மீக மதிப்பினைக் கொண்டுள்ளதா? என் பனிவான கருத்து என்னவென்றால், நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, பணத்தைச் செலவு செய்வதன்பால் நாம் கொள்ளவேண்டிய மன்ப்பான்மை என்பது, தானாகவும், தனியதிகாரம் பொருந்தியதுமான ஒரு நற்பண்பாகும். அஃது இறைவனின் பார்வையில் தனிச்சிறப்புடையதாகும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இவ்வித மனப்பான்மையாடு அனுக்கமாகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது பஹாய் வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
உதாரணமாக, 1911ல் அப்து’ல்-பஹா பாரீசில் இருந்தபோது, அவர் பாரீசின் மிகவும் ஆடம்பரமான பகுதியில் ஒரு நேர்த்தியான அடுக்குமாடி விடுதி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். இந்த விடுதி இப்போது பிரான்ஸ் நாட்டின் தேசிய ஆன்மீக சபையினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது:
அவ்வேளையில் அப்து’ல்-பஹா தம்மோடு வந்திருந்த அனைவரும் தம்முடைய காரியத்தைக் கண்டு சிறிது சஞ்சலமடைந்திருப்பதாக உணர்ந்தார். ஆகவே, அவர் தமது காரியத்திற்கு விளக்கமளிக்கவேண்டியிருந்தது. ஒன்றை நாம் உணர வேண்டும். பாரீஸ் நகரம் அப்போது பிரமுகர்கள் நிறைந்த ஓர் உலக நகரமாக விங்கியது. குறிப்பாக, கிழக்கிலும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஈரானிலிருந்தும் தொடர்ச்சியாகப் பிரமுகர்கள் ஒன்றுகூடும் இடமாக அது திகழ்ந்தது. சமயத்தின் நற்பெயரை நோக்கமாகக் கொண்டு, அவர், பிறர் கண்களுக்கு கௌரவமாகத் தென்படும் ஓரிடத்தை வாடகைக்கு அவர் அமர்த்த வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு விளக்கத்தைத்தான் அப்து’ல்-பஹா தமது குழுவிருக்கு வழங்கினார். அவர் பின்வருமாறு கூறினார்:
“செலவீட்டிற்கு இட்டுச் செல்லும் சம்பிரதாயமான செயல்களில் நான் ஈடுபடுவதை நீங்கள் கண்டீர்களென்றால், சமயத்திற்கு அது நன்மை பயக்கும், அதன் மரியாதை காப்பாற்றப்படும் எனும் ஒரே காரணத்திற்காகத்தான். நான் பாக்தாத்திலும், ஏட்ரியாநோப்பிலிலும் இருந்தபோது, என் தலைப்பாகையும், என் துணிகளும் பல வருடங்கள் பழையனவாக இருந்தன. அவற்றின் பின்னல் வேலைகளெல்லாம் நைந்துபோயிருந்தன. கடனுக்குக்கூட புதியவற்றைப் பெறும் நிலையில் நான் அப்போது இல்லை. இப்போது, ஒரு சில காரணங்களுக்காக அல்லாது இவ்விதமாக நான் செலவு செய்திருக்கமாட்டேன்; இந்நகரத்தில் ஆகத் தாழ்வானதும், விலை மலிவானதுமான விடுதியையே நான் வாடகைக்கு அமர்த்தியிருப்பேன்.
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)
அப்து’ல்-பஹா இவ்விஷயத்தை அதிகம் விளக்க வேண்டியிருக்கவில்லை, ஏனெனில், அவருடன் இருந்த பாரசீக நண்பர்கள், அவர்மேல் பெரும் அன்பு வைத்திருந்தனர், அவரைப் பெரிதும் மதித்தனர், ஆகவே இறுதியில் பிரச்சினை எதுவுமே எழவில்லை.
ஆனால், அவர் தமது கோட்பாடு என்னவென்பதை விளக்க விரும்பினார். இப்போது, புனித நிலத்தில் உள்ள நினைவாலயங்களை நீங்கள் காணுகின்றீர்கள். அவற்றின் உள்ளும் புறமும் காணுகின்றீர்கள், அவற்றைச் சுற்றியுள்ள பூங்காக்களையும் நீங்கள் காணுகின்றீர்கள். என்ன கோட்பாட்டையொட்டி இது உருவாக்கப்பட்டுள்ளது?
வெளிப்படையாக பார்க்கும்போது அது பெரும் ஆடம்பரச் செலவாகத் தென்படும். நினைவாலயங்களிலும், நிலவடிவமைப்பு வேலைப்பாடுகளிலும், படிக்கட்டு வேலைகளிலும் பெரும் பொருள் வளத்திற்கு மேல் பொருள் வளத்தை நீங்கள் காணுகின்றீர்கள். இத்தோட்டங்கள், இவ்வுலகத்திலேயே அதிப்புனிதமான நினைவாலயங்களுக்கான சுற்றுச் சூழல்களாகும்.
ஷோகி எஃபெண்டி அவர்கள் விளக்கியது போல, இப்பூவுலகின் ஆன்மீக மையமாக இவ்விடம் விளங்குகின்றது. ஆகவே, இக்கட்டிடங்களும், தோட்டங்களும் உலக மையத்தில் வாழ்க்கை முறை இத்தகைய படாடோபம் மிக்கதாக இருக்கும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு இல்லை. இது பாரீசில் அப்து’ல்-பஹா வாடகைக்கு அமர்த்திய அடுக்குமாடி விடுதியைப் போன்றது. இது சமயத்தின் நன்மதிப்பைக் காரணமாகக் கொண்டது. அவ்விரண்டையும் நாம் ஒன்றுகலக்க முடியாது.
அப்து’ல்-பஹா தமது தலைப்பாகை நைந்துபோயிருந்தது என்றார். நீங்கள் பழம்பொருள் காப்பகத்திற்குச் சென்றீர்களென்றால் ஷோகி எஃபெண்டி அவர்களின் துணிகளைப் பாருங்கள். அவை எவ்வளவு எளிமையானவை என்பதையும், எவ்வளவு நைந்துபோயுள்ளன என்பதையும் பாருங்கள்.
அவரை நண்பர்கள் காண வந்த போது அவர் அந்த பொருள்களைத் தான் அணிந்திருந்தார், அந்தக் காலனிகளைத்தான் பயன்படுத்தியிருந்தார். அவர் பொதுமக்களிடையே காட்சி தரவில்லையாதலால் அவர் அத்தகைய துணிகளை அனிந்திருந்தார்.
அங்கு நண்பர்களையெல்லாம் ஆட்கொண்டது, அவர் பிரகாசித்த மேன்மையும், அவருடைய புனிதத் தன்மையுமே, அவர் அணிந்திருந்த துணிகளல்ல. அவருக்காக எனப் பார்க்கும் போது அவர் பெரும் சிக்கனமாகவே வாழ்ந்தார், உணவும் உட்கொண்டார். அவ்விரு நிலைகளுக்கிடையிலும் பெரும் வேறுபாடு உண்டென்பதை நாம் உணரவேண்டும்.
உதாரணமாக, உணவைப் பற்றிக் குறிப்பிடுகையில், பஹாவுல்லா கூறியருளிய வாக்கொன்று உள்ளது. அவர் கூறுவது என்னவென்றால்:
“உணவு ஒரே வகையாக இருக்குமானால், இறைவனின் பார்வையில் அது மிகவும் விரும்பத் தக்கதாக இருக்கும்”.
(கித்தாப்-இ-படீ – தற்காலிக மொழிபெயர்ப்பு)
இவை வெரும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடவில்லை; பஹாவுல்லா, அப்து’ல்-பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோரின் இல்லங்களில் இவை செயல்படுத்தப்பட்டன. ஷோகி எஃபெண்டி அவர்களின் காலத்தில் நானும் இத்தகைய நாட்களைக் கண்டிருக்கின்றேன். ஒரே சமயலறைதான் இருந்தது. அச்சமயலறை ஷோகி எஃபெண்டி அவர்களின் இல்லத்திற்கு மட்டுமல்ல, உலக மையத்திற்கே அதுதான் சமயலறையாக விளங்கியது.
ஆனாலும், இப்போது இருப்பதுபோல், அப்போது உலக மையத்தில் 700 அல்லது 800 ஆட்கள் வேலை செய்யவில்லை. அது மிகவும் சிறிய மையமாக இருந்தது. ஆனால், வீடுகள் ஒரு சிலரை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாஸ்டர் அவர்களின் வீட்டில் சுமார் 100 பேர்கள்தங்கியிருந்தனர்; அது சுமார் 200 பேர்களுக்காவது உணவு வழங்கவேண்டியிருந்தது. வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள், என பலர் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது. புனித யாத்ரீகர்களும் இருந்தனர்; அவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்கள் உலக மையத்தின் விருந்தினர்களாக இருந்தனர். உணவு ஒரு வகையாக மட்டுமே இருந்தது, ஷோகி எஃபெண்டி அவர்கள் உட்பட.
பழம்பொருள் காப்பகத்தில் ஷோகி எஃபெண்டி அவர்களின் பத்திரங்களும், தாள்களும் உள்ளன. அவர் கணக்குகள் வைத்திருந்தார்; அவர் தமக்கென பற்று வரவு கணக்குப்புத்தகம் வைத்திருந்தார்; ஒவ்வொரு புனித இடத்திற்கும் அவர் கணக்குகள் வைத்திருந்தார்; ஒவ்வொரு திட்டத்திற்கும் அவர் கணக்குகள் எழுதி வைத்திருந்தார். அவர் தமது கைகளாலேயே எழுதப்பட்ட கணக்குகளை வைத்திருந்தார். அவற்றை நாம் பழம்பொருள் காப்பகத்தில் காணலாம்.
உதாரணமா, “பிச்சைக்காரனுக்கு அறை பியாஸ்தர் கொடுக்கப்பட்டது,” என படிக்கலாம். அறை பியாஸ்தர் என்பது அறைக்காசு கூட பெறாது! “பற்பசைக்கு 15 பியாஸ்தர்கள்” எனப் படிக்கலாம். ஷோகி எஃபெண்டி அவ்வாறுதான் கணக்கு வைத்திருந்தார். அவர் நினைவாலயங்களின் காப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிதவை நிதி ஒன்றை கொடுத்திருந்தார். அஃது அக்காலத்து அமெரிக்க வெள்ளிகள் இரண்டுக்குச் சமமானது. அவ்வளவுதான். செலவீடுகள் இரண்டு வெள்ளிக்கும் அதிகமானால், பிரச்சினை அவரிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும்; அவர்தான் முடிவு செய்வார்.
அவர் தமது வசந்தகாலத்திற்கென தனி நிதி ஒதுக்கீடு வைத்திருந்தார். அதை அவர் தமது பயணங்களுக்கு முன்பாகவே, உதாரணமாக சுவிட்சர்லாந்துக்குப் போகுமுன், ஒதுக்கி வைத்திருப்பார்; அவர் தமது நிதியொதுக்கீட்டை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுவார். அவரைக்கான விருந்தினர்கள் வருவார்கள்; உதாரணமாக அவருடைய குடும்பத்தினர்கள் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரைக்கான வருவார்கள்.
விருந்தோம்புபவர் அவரே; அவரே அவர்களுக்கெல்லாம் உணவளிப்பார்; அவை யாவும் அவருடைய நிதியொதுக்கீட்டுக்கு உட்பட்டே இருக்கும். அவரோடு எப்போதும் இருந்த ரூஹிய்யா ஃகானும், இவ்விதமான மேற்படி செலவுகளால் அவருடைய நிதியொதுக்கீடு குறைந்துகொண்டே போயிற்றாம். ஆகவே, அவர் குறைவாகவே உண்பார், உடன் ஃகானும் அவர்களும் அதில் பங்குகொள்வார். இத்தகையவையே ஷோகி எஃபெண்டி அவர்களின் செயல்முறைக்கொள்கைகள், அவ்வாறுதான் அவர் உலக மையத்தையும் நடத்தி வந்தார்.
தேசிய ஆன்மீக சபைகளுடனான அவருடைய உறவுகளில், இவை போன்றுதான் அவர் கூறக்கூடியவைகளும் இருக்கும். உதாரணமாக, ஆப்பிரிக்காவில் உள்ள தேசிய ஆன்மீக சபை ஒன்றுக்கு அவருடைய சார்பாக அவருடைய செயலாளர் எழுதிய கடிதத்தில்:
அவர்… உங்களுடைய ஆன்மீக சபை தனது செலவீடுகளை… கவனமாக கண்கானிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றார்… விவேகமான சிக்கனத்தின் வாயிலாக மட்டும், தேவையற்றவற்றை நீக்குவதன் வாயிலாகவும், தேவையானவற்றின்பால் கவனம் செலுத்துவதன் மூலமும், மிகவும் விழிப்புடனான கண்காணிப்பின் வாயிலாகவுமே உலக மையத்தில் நினைவாலயத்தையும், அனைத்துலக பழம்பொருள் காப்பகத்தையும் கட்டி, புனித நிலங்களைச் சுற்றிலும் மிகவும் படாடோபமான தோட்டங்களோ எனத் தோன்றும், ஆனால் உண்மையில் தீவிரமும், சிக்கனமும் மிகுந்த திட்டமிடுதலின் பயனான பூங்காக்களை உருவாக்கவும் பாதுகாவலரினால் முடிந்தது. இது பஹாய்களுக்கு மிகவும் அனுகூலமான ஓர் உதாரணமாக இருக்கும்… எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமும், நுண்ணறிவுமிக்க கண்கானிப்பும் நிறைந்த நடவடிக்கைகளை அவர்கள் காண்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு… அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க தேசிய ஆன்மீக சபைக்கு, 8 ஆகஸ்ட் 1957)
இவ்விதமான ஆலோசனைகளையே அவர் தேசிய ஆன்மீக சபைகளுக்கு வழங்கிவந்தார்.
உலக மயைத்திலுள்ள நாம் உலகம் உழுவதிலுமுள்ள மற்ற பஹாய்களோடு தொடர்புகொண்டுள்ளோம். நாம் இங்கு தன்னந்தனியாக இல்லை. 100 – 500 புனிதயாத்ரீகர்கள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். மூன்று நாள் யாத்ரீகர்கள் வருடம் முழுவதும் வந்து போகின்றார்கள். அவர்கள் நம்மைக் காண்கின்றார்கள். அவர்களை நாம் நமது இல்லங்களுக்கு அழைத்துச் செல்கின்றோம். அவர்களுக்கு நாம் விருந்தோம்பல் வழங்குகின்றோம். அவர்களுடைய மனதில் நாம் என்னவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றோம், அவர்கள் அந்த எண்ணங்களைத்தான் தங்களோடு தங்களுடைய நாடுகளுக்கு கொண்டுசெல்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அவர்கள் இங்கிருக்கும் போது தங்களுடைய அனுபவங்களைப் பற்றி பேசுகின்றனர்: வீடுகள் எப்படியிருந்தன, உணவு எப்படியிருந்தது, எத்தனை வகையான உணவு பரிமாறப்பட்டது போன்றவை. நாம் சிக்கனமாக இருந்தோமானால், நாம் சிக்கனமாக இருப்பது தெரியவரும், பஹாய் உலகமும் அதிலிருந்து கற்றுக்கொள்ளும். நமது நடத்தை, போக்கு ஆகியவற்றின் மூலமாக பல்வேறு சமூகங்களின்பால் நாம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு சிறப்பான நிலையை நாம் இங்கு பெற்றிருக்கின்றோம்.
உலக மையத்தை ஷோகி எஃபெண்டி நிர்வகித்த பாங்கையும், அவருடைய வாழ்க்கை முறையையும், அவர் கடைப்பிடித்து வந்த மூன்று பரந்த செயல்முறைக் கொள்கைகளின் வாயிலாக வரையறுக்கலாம். ஒன்று, உலக மையத்தின் எல்லா வரவுசெலவுகளையும் மிகுந்த கவனத்துடன் கண்கானித்தது. அடுத்தது நினைவாலயங்கள் குறித்தது.
அவர், சமயத்தின் கௌரவத்தின் காரணமாக நினைவாலயங்களை பெரும் வள்ளன்மையுடனும், பெருந்தன்மையுடனும், தாரளத்துடனும் நிர்வகித்து வந்தார். மூன்றாவது, அவருடைய தனிப்ப்டட வாழ்க்கை, அவரோடு அனுக்கமாக இருந்தோர் ஆகிவற்றைப் பொருத்த வரையில், அவர் கண்டிப்பு, கடுமை ஆகியவை கூடிய சிக்கனத்தையே கடைப்பிடித்தார். அவ்விஷயத்தில் அவர் செலவீடுகள் குறித்து விழிப்போடும், எல்லா சூழ்நிலைகளிலும் சிக்கனத்தையும் கடைப்பிடித்து வந்தார்.
மீண்டும், ரூஹிய்யா ஃகானும் அம்மையார் கூறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. பாதுகாவலர் அவர்கள் நினைவாலயங்களுக்குப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது, உதாரணமாக லண்டன் நகரின் கடைகளுக்குச் செல்லும் போது, தாம் விரும்பும், தமக்குத் தேவைப்படும் பொருட்களைக் காண்பார், அவை அதிக விலை மிக்கதாக இருக்கும். அஃது அவருக்உகத் தேவைப்பட்டதென்றாலும் அவர் அதை வாங்க மாட்டார். அவர் கடைக்காரரிடம் தாம் விதிக்கும் விலையைக் கூறுவார்; அஃது ஏற்கப்ட்டதென்றால் ஏற்கப்பட்டது, இல்லையெனில் அஃது ஏற்கப்படவில்லை. அவருக்கென ஒரு கோட்பாடு இருந்தது, அவர் அக்கோட்ப்பாட்டைப் பற்றியே செயல்பட்டு வந்தார்.
தெய்வச் சமயத் திருக்கரம் திரு பல்யுஸி அவர்கள், அப்துல் பஹா குறித்த ஒரு கதையைச் சொன்னார். திலு பல்யுஸியின் தந்தை மாஸ்டர் அவர்களோடும், மற்றும் சில பஹாய்களோடும் லண்டனில் இருந்ததாகவும், அவ்வேளை அவர் ஹேரட்ஸ் எனப்படும் டிபார்ட்மண்ட் ஸ்டோருக்குச் சென்றதாகவும் கூறினார். இந்த ஹேரட்ஸ் என்பது மிகவும் பெரிய விற்பனைக்களமாகும்; பல மாடிகள் கொண்ட இதில் தேவைப்படும் எந்தப் பொருளையுமம் நாம் வாங்கலாம். மாஸ்டர் அங்கு எதையோ வாங்கச் சென்றார். விலையை விசாரித்தார், அது மிகவும் அதிகமாக இருந்தது.
அதற்கு அவர், “நான் இவ்வளவிற்குதான் அதை வாங்க இயலும்,” என தமது விலையைக் குறிப்பிட்டார். ஆனால், ஹேரட்ஸ் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் பேரமெல்லாம் பேச முடியாது. ஆனால், அப்து’ல்-பஹா தாமே விலையை நிர்ணயித்தார். விற்பணைப் பணிப்பெண், “மன்னிக்கவும், நான் அவ்வாறு உங்களுக்கு விற்க இயலாது,” என்றாள். ஆனால், மாஸ்டர் அவர்களின் இயல் தோற்றத்தையும், போக்கையும் கண்ட அப்பெண், அவர் அப்பால் திரும்பியவுடன், நிர்வாகியிடம் ஓடிச்சென்று நடந்தவற்றைக் கூறினாள். நிர்வாகியும் உடனடியாக வெளிய வந்து, வெளியேறிக்கொண்டிருந்த மாஸ்டர் அவர்களைப் பார்த்து, “தயவு செய்து திரும்பி வாருங்கள்; நீங்கள் கேட்ட விலைக்கே நாங்கள் அப்பொருளை விற்கின்றோம்,” என்றார். ஆக, செலவு செய்வதில் நமது சமயத்தின் தலைவர்கள் அனைவருமே பெரும் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் காண்கின்றோம்.
இப்போது, சில இறுதி வார்த்தைகள். ஆடம்பரச் செலவு என்பது நல்லதன்றென்பது நமக்குத் தெரியும், இருந்தும் நம்மையறியாமலேயே நாம் ஒரு சில வேளைகளில் இவ்விஷயத்தில் விட்டுக் கொடுப்பவர்களாக தேவையற்று செலவுகளை மேற்கொள்கின்றோம். இது ஒரு வேளை மனித இயற்கையோ என்னவோ. இதைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வளவோ முயன்றுள்ளேன். பெஞ்சமின் ஃபிராங்லின் என்பவரின் பிரபலமான கூற்றாகிய, “நேரம் பணத்திற்குச் சமம்,” என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். “சரி, நான் இப்போது நேரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என எனக்கு நானே கூறிக்கொண்டேன். அப்போது நேரத்தைப் பற்றி பஹாவுல்லா கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன:
“மூச்சுக் காற்று ஒன்றைப்போல் உங்கள் வாழ்நாட்கள் மறைந்தோடிக்கொண்டிருக்கின்றன… இறைவனை ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள்… சோம்பலிலும், சுறுசுறுப்பின்மையிலும் உங்கள் நேரங்களை வீனாக்காதீர்கள்.”
(கித்தாப்-இ-அக்டாஸ், பாரா. 40 & 33)
நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நமக்கு ஆலோசனை வழங்கும் நமது சமய ஸ்தாபகரின் குரல் இது. சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலே ஆகும். நானும் அவருடைய நம்பிக்கையாளர்களில் ஒருவர். பஹாவுல்லா, நான் சோம்பலாக இருக்கக்கூடாது எனவும், நேரத்தை வீனாக்கக்கூடாது எனவும் கூறுகின்றார், ஆனால், நான் என்னுடைய 24 மணி நேரத்தைக் ஆய்வு செய்யும் போது, “ஆஹா!” நிமிடங்கள் அல்ல, மாறாக பல மணி நேரங்களைக் கூட ஒன்றும் செய்யாமல் நான் வீணாக்கியுள்ளேன்!
“பெரும் கலைப்பினாலோ, சோம்பலினாலோ நான் ஒன்றுமே செய்ய இயலாமல் இருக்கின்றேன்.” எனக்கு நானே கூறிக்கொள்ளும் சமாதானம் இது. நாம் பெஞ்சமின் ஃபிராங்க்லின் வார்த்தைகளோடு ஒத்துப்போனால், “நேரம் பணத்திற்குச் சமம்,” என நினைத்தால், நாம் நேரத்தை எவ்வாறு செலவளிக்கின்றோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நேரம் பணத்திற்குச் சமமென்றால் வீனான நேரங்களை நாம் பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் சுலபத்தில் சோம்பலில் ஆழ்ந்துவிடுகின்றோம். நாம் செய்வன குறித்து நாம் உணர்வற்று இருக்கின்றோம். துரதிர்ஷ்ட வசமாக இதுவே மனித இயல்பாக உள்ளது.
மற்ற நேரங்களில், பஹாய் நிதியின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் செயலைச் சாறாத ஒன்றை உலக மைய ஊழியர் ஒருவர் செய்கின்றார் என வைத்துக்கொள்வோம்; பிறகு அதே போன்ற ஒரு செயலை மற்ற ஓர் ஊழியரும் செய்கின்றார். சாதாரணமாக, அக்காரியத்தை இரு நபர்கள் செய்ததனால், அதைப் பொதுவான ஒரு கருத்தாக்கி, பலர் அவ்விதமாக செயல்படுகின்ற காரணத்தினால், எல்லாரும் அவ்விதமாகவே செயல்படுகின்றனர் என நாம் கற்பனை செய்யக்கூடும்.
அதனால்: “உலக மையத்தில் இதுவே நடைமுறை போலிருக்கின்றது,” என நாம் முடிவு செய்யலாம். “நாம் ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போன்றுதான் நாமும் செய்யவேண்டும். உலக மையத்தில் இதுதான் முறை,” ஆனால், அதே வேளை அவ்வாறு நடந்துகொள்ளாத ஒருவரோ, இருவரோ, அல்லது ஐந்து அல்லது பத்து தனிநபர்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் கண்டுணரக்கூடாதா? அஃது அவர்களுடைய பிரச்சனை. ஒரு மனிதனின் நம்பிக்கை அம்மனிதனாலன்றி வேறு யாராலும் முடிவு செய்யப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்
அதே போன்று, ஒரு மனிதனின் செயல்கள், மற்றவர்களின் செயல்கள் அல்லது துர்செயல்களின் அடிப்படையில் நிலைப்படுத்தப்படக்கூடாது. இறைவனின் முன்னிலையில் நானே பொறுப்பாளியாவேன். மற்றவர்கள் செய்யக்கூடியன அல்லது செய்யாமலிருப்பனவற்றுக்கு நான் பொறுப்பாளியல்ல. எனக்கு நானே பொறுப்பாளியாவேன்; நான்தான் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்; சரியானவையோ, தவறானவையோ, மற்றவர்கள் செய்யும் காரியங்கள், தெளிவாகவே, என் பிரச்சனைகள் அல்ல! நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம், ஆனால், அவர்களை நான் பின்பற்றக்கூடாது.
பாரசீகத்தில் “ஹம் சிஸ்மி”, என பாரசீகர்களால் அழைக்கப்படும் ஒரு மனப்போக்கு உள்ளது. அது, ஏறத்தாழ போட்டி மனப்பான்மையைக் குறிக்கும், அல்லது, ஒருவர் மற்றவரைவிட மேலும் நன்கு செய்யவேண்டும் எனும் மனப்போக்கையும் அது குறிக்கும். இம்மனப்பான்மையை பின்வருமாறு விளக்கப்படுத்தலாம்: “அந்த மனிதர் அதை செய்கின்றார், நானும் அதையே ஏன் செய்யக்கூடாது? நான் அவரைவிட ஒன்றும் குறைந்தவனல்லவே.” அல்லது, “அவள் அதைச் செய்கின்றாள், நானும் அதையே செய்யவேண்டும்.”
அஃது ஒரு விதமான பொறாமையாகும், அல்லது போட்டியாகும். இது ஆரோக்கியமானதல்ல, மிக மிக ஆரோக்கியமற்றதாகும்; இது துராசை; இத்தகைய ஆசைகளை பஹாவுல்லா கண்டித்துள்ளார். உங்களுக்குப் பழக்கமானவையான வார்த்தைகளை உங்களுக்கு இப்போது படித்துக்காண்பிக்க விரும்புகின்றேன்: “எல்லாப் பேரிச்சைகைைளயும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக”. (பாரசீக மொழி தெரிந்த அன்பர்களுக்கு: பஹாவுல்லா இங்கு உபயோகிக்கும் வார்த்தை “ஃகணா’அத்”, எனனும் வார்த்தையாகும்; பாதுகாவலர் மறைமொழி நூலில் அதை “மனநிறைவு” என மொழிபெயர்த்துள்ளார்). நான் மீண்டு அதை கூறுகின்றேன்:
இறுதியாக, ஒன்றே ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இங்கு நிற்கும் மேடையை ஓர் உதாரணமாகக் கொள்ள விரும்புகின்றேன். இதன் ஒரு மூலை படாடோபமெனவும், மறு மூலை கஞ்சத்தனம் எனவும் எடுத்துக்கொள்வோம். அந்த இரண்டு குணங்களும் பஹாவுல்லாவால் கண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நடுவில் ஒன்று உள்ளது; அதுதான் சிக்கனம். ஆக, இதுவே நாம் இருக்க வேண்டிய நிலையாகும். ஆனால், எத்தனை முறை பஹாய்கள் நடுப்பாகத்திலிருந்து ஓரங்களான படாடோப நிலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு மூலை புயலைப் போன்றது, அதன் மறு மூலை பஞ்ச நிலையைப் போன்றது! நடுவில் விழுவதே தூரல். அவர் நாம்னைவரும் நடுவில் இருக்க வேண்டுமென கூறுகின்றார்; கூடக்குறைய ஐந்து விழுக்காடு அங்கும் இங்கும் இருக்கலாம். பாதுகாவலர் ரூஹிய்யா ஃகானும் அவர்களுக்கு கூறியது போல, “பஹாய் சமயம் நடுநிலை சமயமாகும்”.
கடந்த பல வருடங்களாக வளர்ச்சி, முறைப்பாட்டுடனான வளர்ச்சி எனும் வார்த்தைகளை நாம் அடிக்கடி செவியுறுகின்றோம். அவை பயிற்சி முறையோடு ஒன்றிணைத்துப் பேசப்படுகின்றன. சமயம் தோன்றியதிலிருந்து அதன் வளர்ச்சியென்பது இயல்பான ஒன்று எனவே நாம் அணைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். நாம் விரும்புகின்றோமோ இல்லையோ சமயம் அதன் போக்கில் வளரவே செய்யும் என்றும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அவருடைய சமயப் பணிக்கு நாம் நம்மை அர்ப்பணிக்கவில்லையெனில், அவர் சுள்ளிகளையும் கற்களையும் கொண்டு தமது காரியத்தை நிறைவேற்றுவார் எனவும் பஹாவுல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆக, சமயத்தின் வளர்ச்சியென்பது நிச்சயமான ஒன்று என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அஃது எவ்வளவு விரைவில் அடையப்படக்கூடும் என்பதே கேள்வி. தம்முடைய வார்த்தைகளுக்குப் பஹாய்கள் செவி சாய்த்திருப்பார்களேயானால், தம்முடைய காலத்திலேயே உலகம் பெரும்பாலும் தமது சமயத்தைச் சார்ந்திருக்கும் என பஹாவுல்லா ஒரு மிகவும் ஆர்வமூட்டும் விஷயத்தை இன்னமும் மொழிமாற்றம் செய்யப்படாத ஒரு நிருபத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அது கூறப்பட்டு இப்போது நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பஹாவுல்லாவின் காலத்திலேயே சமயம் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்துள்ளது. ஆனால் அது நடைபெறவில்லை. அதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. ஒரே காரணம்தான் இருக்க முடியும். பஹாய்கள் தங்கள் வாழ்க்கைகளில் பஹாவுல்லா கூறியவற்றை தக்க முறையில் செம்மையாகக் கடைப்பிடிக்கவில்லை என்பதே ஆகும்.
சமயம் தோன்றியதிலிருந்து அது சமயத்தின் எதிர்ப்புச் சக்திகளால் பெரும் சோதனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துள்ளது. ஆயிரக்கணக்கில் நம்பிக்கையாளர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் சமயத்தை அழிக்கும் நோக்கோடு செயல்படுத்தப்பட்ட இத்தகைய செயல்கள் குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:
இச்சமயப் பணிக்காலத்தில் பேரழிவு, சூரையாடல், நாடுகடத்தல் போன்ற செயல்களின் மூலமாக தெய்வீக சக்தி எனும் கரம் ஏற்றிவைத்துள்ள விளக்கை அனைத்திடவோ என்றும் நிலையான பிறங்கொளியெனும் பகல் நட்சத்திரத்தை மறைத்திடவோ முடியும் என மதிப்பற்றவர்களும் மூடர்களும் களிப்புடன் கற்பனை செய்வதைப் பாருங்கள். இந்த விளக்கின் தீயைத் தூண்டிவிடும் எண்ணெயாக அவ்வித கஷ்டமே உள்ளதெனும் உண்மை குறித்து அவர்கள்தாம் எவ்வளவு உணர்வற்றவர்களாக உள்ளனர்.
-பொறுக்குமணிகள், பக். 72-
ஆனால், சமயத்திற்கு உண்மையிலேயே கேடு விளைவிக்கக்கூடியவர்கள் தமது நாமத்தைத் தாங்கிக்கொண்டிருப்பவர்களே என்பதை பஹாவுல்லாவின் பின்வரும் வாசகத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது:
எமது சிறைவாசமோ யான் அனுபவிக்கும் கொடுமைகளோ, அல்லது எமது கொடுமைக்காரர்களின் கைகளினால் எமக்கு நேர்ந்துள்ளவற்றாலும் எமக்குத் தீங்கு நேரவில்லை. எமக்குத் தீங்கிழைக்கக்கூடியவை, எமது நாமத்தைத் தாங்கியிருந்த போதிலும், எமது உள்ளத்தையும், எழுதுகோலையும் புலம்பச் செய்யக்கூடியவற்றை இழைப்பவர்களின் நடத்தையே ஆகும்.
-ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்-
சமயத்தின் வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தைத் துரிதப்படுத்த நம்மால் முடியும். இது நமக்கருளப்பட்டுள்ள ஒரு கருணையாகும். அதே வேளை அதன் வேகத்தை நாம் அறிந்தோ அறியாமலோ குறைக்கவும் முடியும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாம் நம்மை ஆளாக்கிக்கொள்ளவும் முடியும். சமய வளர்ச்சியை நாம் எந்தெந்த வழிகளில் தடுக்கின்றோம் என்பதை இப்போது பார்ப்போம். ஒன்று, பஹாவுல்லா கூறியுள்ளது போல், அவரது நாட்களில் அவருடைய சொற்படி பஹாய்கள் வாழ்ந்திருந்தார்களேயானால் பெரும்பாலன உலகமே அவரது சமயத்தை ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால் அப்போது வாழ்ந்த பல பஹாய்களின் செய்கைகள் அவ்வாறு நடக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பஹாவுல்லா கூறியபடி எதை பஹாய்கள் செய்ய தவறிவிட்டனர்? சமயத்தின் வளர்ச்சிக்கும், அதன் கௌரவத்திற்கும் பெரும் பாதகம் விளைவித்த சில நம்பிக்கையாளர்களின் செயல்களை இப்போது பார்ப்போம்.
முதலாவதாக, பாப் அவர்கள் இறந்தவுடன் அவரது சிஷ்யர்களில் மூவர் மூளை குழம்பிய நிலையில் செய்த காரியத்தைப் பார்ப்போம். அந்த மூவரும் பாப் அவர்களின் இறப்புக்கு அந் நாட்டு அரசனான நாசிருத்தீன் ஷாவே காரணம் என ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். ஆகவே, அந்த அரசனை அவர்கள் பழிவாங்க நினைத்தனர். பஹாவுல்லாவுக்கு அது தெரிய வந்த போது அவர் அக் கொடிய செயலை கைவிடுமாறு அவர்களுக்குக் கூறினார். ஆனால் அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதன் பின்விளைவாக நடந்த அசம்பாவிதங்களும் நமக்குத் தெரியும். ஆயிரக்கணக்கில் பாப்’இக்கள் மடிய நேர்ந்தது. பாப்’இ சமயத்தின் பெயருக்குப் பெரும் களங்கமும் ஏற்பட்டது. பஹாவுல்லாவே அச்செயலுக்குப் பொறுப்பாளி என குற்றஞ்சாற்றப்பட்டு சிய்யாச் சால் எனும் கருங்குழிக்குள் நான்கு மாதம் அடைக்கவும் பட்டார். அதோடு மட்டுமா நின்றது, அவர் பாரசீகத்தின் மண்ணைவிட்டு இனி என்றுமே திரும்பமுடியாத ஒரு தேசப்பிரஷ்டத்திற்கும் உள்ளானார்.
அடுத்து பாக்தாத் நகருக்கு அவர் சென்று சேர்ந்த போது, அதுவரை யாரும் அறியா வண்ணம் ஒரு அராபியன் போலவும், ஒரு வியாபாரியைப் போலவும், பெண்களின் உடையில் மறைந்தும் வாழ்ந்து வந்த பஹாவுல்லாவின் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா யாஹ்யா பஹாவுல்லாவை வந்தடைந்தான். அவனால் பஹாவுல்லாவுக்கு ஏற்பட்ட தொல்லைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவன் பாப்’இக்கள் சமூகத்தில் ஏற்படுத்திய குழப்பங்களினால் பஹாவுல்லா இரண்டு வருட காலங்கள் சுலைமானிய்யா காடுகளில் அஞ்ஞாத வாசம் புரிந்தார். பிறகு அப்து’ல்-பஹாவின் வேண்டுகோளுக்கு இணங்கள் அவர் பாக்தாத் திரும்பிய போது பாப்’இ சமூகம் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் போய்விட்டிருந்து. அதன் பிறகு பஹாவுல்லாவின் முயற்சியினால் பாப்’இ சமயம் மறுமலர்வு கண்டது. இந்த மிர்சா யாஹ்யாவை பாரசீகம் திரும்பிச் செல்லும்படியும், அங்கு பாப் அவர்களின் சமயத்தைப் போதிக்கும்படியும் பஹாவுல்லா உபதேசித்திருந்தார். ஆனால் அவன் கேட்கவில்லை, மாறாக சமயத்தினுள் பெரும் குழப்பங்கள் விளையக் காரணமாக இருந்தான்.
அத்தோடு நின்றார்களா. இஸ்தான்புல்லில் பஹாவுல்லாவுக்கு மறுபடியும் ஒரு நாடுகடத்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அவர் அதற்குத் தலைவணங்க முடியாது என கூறிவிட்டார். என்ன குற்றம் செய்தோம் எதற்காக இந்த தண்டனை என அவர் அதிகாரிகளைக் கேள்வி கேட்டார். உயிர்த்தியாகம் செய்யவும் அவர் தயாராக இருந்தார். அப்படி ஏதாவது நேருமானால் சமயத்திற்குப் பெரும் பிரகடனம் வந்து சேரும் எனவும் அவர் கூறினார். ஆனால் நடந்தது என்ன? மிர்சா யாஹ்யாவும் அவனுடைய சகாக்களும் பஹாவுல்லாவிடம் சென்று ஊளையிட்டனர். எங்கள் குடும்பங்கள் என்னவாவது, அதிகாரிகள் எல்லாரையும் கொடுமைப்படுத்துவார்களே என்றெல்லாம் அழுது முரண்டுபிடித்தனர். அதன் பயனாக பஹாவுல்லா தேசப்பிரஷ்ட ஆணைக்கு மறுபடியும் தலைவணங்கினார். பல முறை பஹாவுல்லா, மிர்சா யாஹ்யாவை பாரசீகம் திரும்பிச் சென்ற பாப்’இ சமயத்தை போதி என அறிவுரை வழங்கினார். ஆனால், மிர்சா யாஹ்யா அவ்விதம் செய்ய மறுத்துவிட்டான். மறுத்ததோடு அல்லாமல் அவனது செயல்களால் சமயத்திற்குப் பெரும் தீங்கும் விளைந்தது. அவனது நடத்தையால் சமயத்தின் நல்ல பெயருக்கு பங்கம் விளைந்தது. ஏட்ரியாநோப்பிலில் மிர்சா யாஹ்யா பல பிரச்சினைகளை உருவாக்கினான். அதில் ஒன்று அவன் பஹாவுல்லாவுக்கு எதிராக தானும் ஓர் இறைத்தூதன் எனப் பிரகடனப்படுத்தினான். அதன் விளைவாக ‘அதிபெரும் பிரிவு’ என பஹாவுல்லாவால் வருணிக்கப்பட்ட பிரிவு பஹாவல்லாவுக்கும், மிர்சா யாஹ்யாவுக்கும் இடையே ஏற்பட்டது. ஏட்ரியாநோப்பிலில் பல அரசியல் பிரமுகர்கள் வசித்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் சமயத்தின் நற்பெயருக்கு இந்த நிகழ்ச்சியினால் பெரும் களங்கம் நேர்ந்தது. இறுதியில் அந்த மிர்சா யாஹ்யாவின் செயல்களால் பஹாவுல்லா மறுபடியும் ஒரு தேசப்பிரஷ்டத்திகுள்ளானார். இம்முறை அவர் ஆக்கா சிறைச்சாலை செல்ல நேரிட்டது. ஆனால், அதே வேளை மிர்சா யாஹ்யா தான் விரித்த வலையில் தானே வீழ்ந்தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் சைப்ரஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கேயே அவன் கடைசி வரை விளைவுகளற்ற வாழ்க்கை வாழ்ந்து இறந்தும் போனான்.
இதே போன்ற ஒரு நிகழ்ச்சி ஆக்கா நகரிலும் நடந்தது. சமய எதிரிகள் ஏற்படுத்திய பல தொல்லைகளினால் மாதக் கணக்கில் பிரயாணம் செய்தும் தங்கள் பிரபுவான பஹாவுல்லாவைக் காண வருவோர் அவரைக் காண இயலாது திரும்பிச் செல்லும் ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் பொறுமையிழந்த சில பஹாய்கள் அந்தச் சமய எதிரிகளைக் கொல்ல முடிவெடுத்தனர். இதையறிந்த பஹாவுல்லா அவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என ஆணையிட்டார். ஆனால் பல காலம் அனுபவித்த கொடுமைகளினால் ஆத்திரமடைந்திருந்த அந்த பஹாய்கள் அவருடைய சொற்களுக்குக் கீழ்ப்படிய மறுத்து குறிப்பிட்ட அந்தச் சமய எதிரிகளைக் கொன்று சமயத்திற்கு அதனால் பெரும் களங்கத்தை ஏற்படுத்தினர். அதன் விளைவாக பஹாவுல்லா கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு மூன்று நாட்கள் அங்கேயே தடுத்து வைக்கவும் பட்டார். அதன் பயனாகத்தான் பஹாவுல்லா பின்வரும் வேதனைமிக்க வார்த்தைகளை வெளியிட்டார்:
எமது சிறைவாசமோ யான் அனுபவிக்கும் கொடுமைகளோ, அல்லது எமது கொடுமைக்காரர்களின் கைகளினால் எமக்கு நேர்ந்துள்ளவற்றாலும் எமக்குத் தீங்கு நேரவில்லை. எமக்குத் தீங்கிழைக்கக்கூடியவை, எமது நாமத்தைத் தாங்கியிருந்த போதிலும், எமது உள்ளத்தையும், எழுதுகோலையும் புலம்பச் செய்யக்கூடியவற்றை இழைப்பவர்களின் நடத்தையே ஆகும்.
-ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்-
அப்து’ல்-பஹாவின்வாழ்க்கையைக் கண்ணுறும் போதும் இதே போன்ற பல நிகழ்ச்சிகளே நிறைந்துள்ளன. இம்முறை அவருடைய ஒன்றுவிட்ட தம்பியே அச்செயல்களுக்குப் பெரும் காரணமாக விளங்கினான். பஹாவுல்லாவுக்குப் பிறகு அப்து’ல்-பஹாவே தலைமையேற்க வேண்டும் என்பதை பஹாவுல்லாவின் உயிலும் சாசனத்திலுமிருந்து அனைவரும் அறிந்திருந்தனர். மாஸ்டர் அவர்களின் ஒன்றுவிட்ட தம்பியும் அதை ஒப்புக்கொண்டான். ஆனால், உலகம் முழுவதுமுள்ள இலட்சக்கணக்கான நம்பிக்கையாளர்களின் மரியாதைக்குரிய ஒரு பதவியில் தான் இல்லையே எனும் எண்ணம் அவனை வாட்டி வதைத்தது. பொறாமை உணர்ச்சி கொழுந்துவிட்ட எரிந்தது. மிர்சா முகம்மது அலி எனப்படும் அந்த ஒன்று விட்ட தம்பி அதுமுதல் கீழறுப்பு வேலைகளில் இறங்கினான். அப்து’ல்-பஹாவைப் பற்றி அரசாங்கத்திடம் பல அவதூறுகளைக் கிளப்பினான். இதன் விளைவாக அப்து’ல்-பஹா கைது செய்யப்பட்டு ஆப்பிரிக்க நாடு ஏதோ ஒன்றுக்கு தேசப்பிரஷ்டம் செய்யப்படப்போவதாகவும் வதந்திகள் நிலவின. ஆனால் இறைவன் அருளால் அந்த நிலை மாறி மாஸ்டர் அவர்களைக் கவிழ்க்க ஏற்பட்ட சதி ஒட்டமான் அரசாங்கமே கவிழும் நிலை ஏற்பட்டதன் வாயிலாக தவிர்க்கப்பட்டது.
அப்துல் பஹாவின் இந்தத் தம்பி தான் இறக்கும் வரை இதே போன்ற பல சதி வேலைகளில் ஈடுபட்டான். இறுதியில் அவனுடைய நாச வேலைகள் எதுவுமே பலனளிக்காமல், இறந்தும் போனான். அவன் பஹாய் சடங்குகள் எதுவும் இல்லாமல் இஸ்லாமிய சடங்குகளுடனேயே இறுதியில் அடக்கம் செய்யப்பட்டான்.
பாதுகாவலர் காலத்திலாவது இவ்வித எதிர்ப்புகள் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அனுபவித்த கொடுமைகள் அவரை பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கின. பஹாவுல்லா தமது உயிலும் சாசனத்தில் அப்து’ல்-பஹாவுக்குப் பிறகு சமயத்தை அவருடைய ஒன்றுவிட்ட தம்பியாகிய மிர்சா முகமது அலியே வழிநடத்தவேண்டுமென விதித்துள்ளார். ஆனால், அந்த ஸ்தானம் ஒரு சில விதிமுறைகளுடன் இணைந்து வருவதை நாம் காணலாம். அதில் ஒன்று ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பது. மிர்சா முகமது அலி இந்த விதிமுறையைப் பின்பற்றுவதில் தவறிவிட்டான். மாஸ்டர் அவர்களை எதிர்த்ததன் வாயிலாக அவன் இந்த ஸ்தானத்தை இழந்துவிட்டான். ஆனால், மாஸ்டர் அவர்கள் மறைந்த போது மிர்சா முகமது அலி பாலஸ்தீன தினசரிகளிலெல்லாம், தானே அப்துல் பஹாவின் வாரிசென பிரசுரம் செய்யப்பட ஏற்பாடு செய்தான். அதுவும் அப்துல் பஹா தமக்குப் பிறகு பாதுகாவலர் ஷோகி எஃபெண்டியை நியமித்துள்ளார் என்பதைத் தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்தான். அதோடு, பஹாவுல்லாவின் சொத்துக்களில் தமக்கும் பங்குண்டு எனவும் அவன் இஸ்லாமிய சட்டத்தைக் குறிப்பிட்டு நீதி மன்றத்தில் முறையிட்டான். இவ்வித செய்கைகள் சமயத்தின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தின. அன்றை ஆட்சியாளர்களாகிய பிரிட்டிஷார் முன்னிலையில் பெரும் தலைகுனிவிற்கும் இது வழிவகுத்தது.
இவ்விதமான போக்குகள் பாதுகாவலரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன. ஒப்பந்தத்தை மீறுதல் எனும் இந்த வியாதி அப்துல் பஹாவின் குடும்பத்தினரிடையிலும் காட்டுத் தீபோல் பரவி இறுதியில் பாதுகாவலரைத் தவிர வேறு எவருமே சமயத்தில் இல்லாது போயினர். அவர்கள் அனைவரும் மாஸ்டர் அவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல், பாதுகாவலர் எனும் முறையில் ஷோகி எஃபெண்டிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத் தவறியதால் இந்த நிலை ஏற்பட்டது. மற்றும் இவர்கள் அனைவரும் பழைய ஒப்பந்த மீறிகளோடு சேர்ந்துகொண்டு பாதுகாவலரை மிகவும் வன்மையாக எதிர்த்து வந்தனர். பாஹ்ஜி மாளிகையைப் பழைய ஒப்பந்த மீறிகள் ஆக்கிரமித்துக்கொண்டு 60 ஆண்டுகாலங்கள் அந்த இடத்தை பெரிதும் கலங்கப்படுத்தி வந்தனர். மாஸ்டர் அவர்களோ, பாதுகாவலரோ புனித நினைவாலயத்திற்கு வரும்போதெல்லாம் இவர்கள் அவர்களை நோக்கி அவமானப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்தும், கொச்சையாகத் திட்டியும் வந்தனர். பாஹ்ஜி மாளிகையைச் சுற்றிலும் அதனை ஒட்டினாற்போல் குதிரைக் கொட்டில்கள் போன்ற வீடுகளைக் கட்டி அம் மாளிகையை பெரிதும் அசிங்கப்படுத்தியும் இருந்தனர். ஆனால் மாஸ்டர் அவர்களும் சரி பாதுகாவலரும் சரி இவர்களுடைய அட்டூழியங்களை வெளிப்படுத்தாமலேயே இருந்தனர். அதைப் பற்றி அப்துல் பஹாவிடம் கேட்டபோது, சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் உறவினர்களே இப்படி கேவலமாக நடந்துகொள்கின்றனர் என நான் எவ்வாறு மக்களுக்கு அறிவிப்பது, அல்லது மக்கள்தான் நம் சமயத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கூறுவார்.
நமது சமயத்தின் ஸ்தாபகர்களோடு அனுக்கமாக உறவு பூண்டவர்கள் தவிர்த்து பிற நம்பிக்கையாளர்களும் சமயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தீங்கு விளைவித்தவர்கள் கூட்டத்தில் அடங்குவர். உதாரணமாக, பஹாவுல்லாவின் செயலாளராக பணியாற்றிய மிர்ஸா அகா ஜானை எடுத்துக்கொள்வோம். இவர் பாவவுல்லாவிடம் தாம் புரிந்த தமது 40 ஆண்டுகால சேவையை தாமே நாசப்படுத்திக்கொண்டார். பஹாவுல்லா மறைவதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே இவர் சமயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார். அன்பர்கள் பஹாவுல்லாவுக்கு வழங்கிய காணிக்கைகளை இவர் கையாட ஆரம்பித்தார். அவ்விதமாக அவர் நிறைய சொத்துக்களை சேர்த்தார். ஆனால், பஹாவுல்லாவின் காலத்திலேயே இவருடைய செய்கைகள் அம்பலப்பட்டுவிட்டன.
பஹாய் சமயத்திற்காக ஈரானில் சேவை செய்தவர்களில் ஜமால்-இ-புருஜிர்டி என்பவரும் உள்ளார். இவர் ஈரானில் சமய விஸ்தரிப்புக்கு பெரும் பங்காற்றியவராரவார். ஆனால் இவருடைய பரந்த சேவை இவருக்கு பெரும் தலைக் கனத்தை விளைவித்துவிட்டது. ஒரு சமயம் இவர் பஹாவுல்லாவிடம் சென்று கித்தாப்-இ-அக்தாஸின் சட்டதிட்டங்களிலிருந்து தமக்கு விதிவிலக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். அதற்கு பஹாவுல்லாவும் அப்படியே ஆகட்டும் என அனுமதியளித்தார். ஆனால், பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு இவர் அப்துல் பஹாவை எதிர்த்தார். தம்மைவிட அப்து’ல்-பஹாவுக்கு குறைவான அனுபவமே உள்ளது எனவும், தாமே தலைமைத்துவ பொறுப்புக்கு ஏற்றவர் எனவும் பிதற்ற ஆரம்பித்தார். அப்து’ல்-பஹா உலகின் மற்ற இடங்களை நிர்வகித்துக்கொள்ளட்டும் எனவும், தாம் ஈரான் நாட்டின் பஹாய்களை வழிநடத்துவதாகவும் அப்து’ல்-பஹாவிடம் கூறினார். மிகந்த வன்மையுடன் இவர் மாஸ்டர் அவர்களை எதிர்த்தார்.
இதன் விளைவாக இவர் ஒப்பந்தத்தை மீறியவராக பிரகடணப்படுத்தப்பட்டார். அது வரை இவருக்கு பெரும் மதிப்பளித்து வந்த ஈரானிய பஹாய்கள் அதுமுதற்கொண்டு அவரை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
இதே வரிசையில் சமயத்தை அமெரிக்காவில் பிரகடனப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இப்ராஹிம் ஃகைருல்லாவையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர் அமெரிக்காவில் பெரும் சேவையாற்றியவர். ஐக்கிய அமெரிக்காவை சமயத்திற்காக திறந்துவைத்தவர் என இவர் பெயரே வருங்காலத்தில் நிலைத்திருக்கும். ஆனால் அந்த நற்பணிகளை எல்லாம் நாசப்படுத்தும் வகையில் இவர் கர்வம் பிடித்தவராக, ஜமால்-இ-புருஜிர்டியைப் போல், அப்துல் பஹா வேண்டுமானால் கிழக்கை நிர்வகிக்கட்டும், மேற்கை நிர்வகிக்க தாமே சிறந்தவர் என அப்து’ல்-பஹாவிடமே கூறிவிட்டார். அதன் பயனாக இவரும் ஒப்பந்த மீறியானார்.
இப்படி பல பெயர்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சமயத்திற்குச் சிறந்த பனியாற்றிய போதும், சமயத்தின் ஆன்மீகப் போதனைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்காததன் காரணத்தினால் இவர்கள் தங்களை நரகத் தீயில் தள்ளிக்கொண்டது மட்டுமின்றி சமயத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பாதகம் விளைவித்தனர்.
சமயத்தின் வளர்ச்சியை ஒப்பந்தத்தை மீறுதல் போன்ற நிகழ்ச்சிகள் மட்டும் பாதிப்பதில்லை. சாதாரன பஹாய்களாகிய நமது நடவடிக்கைகளும் சமயத்தின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்பது தெளிவு. உதாரணமாக பிப்ரவரி 23, 1924 என திகதியிடப்பட்ட கடிதத்தில் ஒரே ஒரு விஷயம் மட்டுமே சமயத்திற்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தரும் என பாதுகாவலர் கூறுகின்றார். அதாவது எந்தளவுக்கு பஹாய்கள் தங்களுடைய அகவாழ்விலும் பிரத்தியேக நடத்தையிலும் பஹாவுல்லாவால் பிரகடனப்படுத்தப்பட்ட நித்திய கோட்பாடுகளை பிரதிபலிக்கின்றனரோ அந்த அளவிற்கே சமயத்தின் வெற்றியை நாம் நிச்சயித்துக்கொள்ள முடியும் என பாதுகாலவர் கூறுகின்றார். அதாவது போதனைகள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பஹாவுல்லா நமக்கு கூறியுள்ளவற்றை நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்ய தவறும்போது மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் பின்விளைவாகின்றன. சமயத்தின் வளர்ச்சி தடைப்படுகின்றது.
ஒரு சமூகத்தில் ஏற்படக்கூடிய வளர்ச்சியை ஒரே ஒரு பஹாய் தாம் அறியாமையினால் செய்யக்கூடிய அல்லது செய்யாமல் இருக்கும் காரியத்தினால் முற்றிலுமாக சிதைத்துவிடக்கூடிய அபாயமும் உள்ளது. இவ்வுலகில் ஒரு புதிய நாகரிகத்தை ஸ்தாபிக்க வந்தவர் பஹாவுல்லா. மனிதர்கள் இறைவனின் நற்பண்புகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அந்த ஆற்றல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மனமுதிர்ச்சியை மனிதன் அடைந்துள்ளான். இந்த ஆற்றல்கள் பஹாவுல்லாவின் போதனைகளின் வாயிலாக வெளிப்படும் போது இவ்வுலகம் ஒரு புதிய நாகரிகத்தை அடையும். அதே வேளை பஹாவுல்லாவின் மற்றொரு போதனையும் உண்டு: “சொற்களல்லாது செயல்களையே உங்கள் அனிகலன்களாக கொள்ளுங்கள்,” எனும் போதனைதான் அது. பஹாய் போதனைகளை வாயளவில் மட்டும் உயர்த்திவிட்டு செயல்களில் அவற்றைக் காட்டாத போது என்ன நடக்கும்? அப்து’ல்-பஹா கூறுவதைப் பார்ப்போம்:
ஆனால், ஒவ்வொன்றிற்கும், இறைவன் ஓர் அடையாளத்தையும், ஓர் அறிகுறியையும் படைத்துள்ளார், அவை குறித்த அறிவைப் பெறுவதற்கான முன்மாதிரி நயங்களையும் சோதனைகளையும் அவர் ஸ்தாபித்துள்ளார். ஆன்மீக அறிவு பெற்றவர்கள் அக மற்றும் புற பூரணத்துவங்கள் இரண்டினாலும் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அவர்கள் நன்னடத்தை, ஒளிபெற்ற இயல்பு, தூய குறிக்கோள், அதோடு பகுத்தறிவாற்றல், பிரகாசமும் அறியும்தன்மையும், உள்ளுணர்வு, கவனமும் முன்னறிவும், கட்டுப்பாடு, பயபக்தி, மற்றும் இறைவன்பாலான உளமார்ந்த பயம் ஆகியவற்றை அடைந்திருக்கவேண்டும். ஏற்றப்படாத ஒரு மெழுகுவர்த்தி, என்னதான் பருமனாகவும் உயரமாகவும் இருந்த போதிலும், கனிகொடுக்காத ஈச்சமரம் அல்லது காய்ந்த விறகுக் குவியல் ஆகியவற்றைப் பார்க்கிலும் சிறந்ததல்ல.
மலர்வதனம் கொண்டோர் முகம்கோணலாம் அல்லது சரசமும் ஆடலாம்,
செந்நிறம் கொண்ட கொடுங்கோளர் சினப்படலாம் வசியமும் செய்யலாம்;
ஆனால் கோரத் தோற்றமுடையோர் நானிக் கோனுவதை யார் இரசிப்பார்,
கண்ணே குருடாம் அதில் நோவும் கண்டால் அஃது இருமடங்கு துயரமென்பார்.
-அப்து’ல்-பஹா, தெய்வீக நாகரிகத்தின் மர்மம்-
பஹாவுல்லாவை ஏற்றுக்கொள்வதும், அவருடைய ஆனைகளுக்குக் கீழ்படிவதும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவையாகும். பஹாவுல்லாவின் மேல் அன்பு இருந்தால் மட்டும் போதுமானதல்ல. அவருடைய ஆனைகளை சரிவர கடைப்பிடிக்கவும் வேண்டும். சமயத்துக்குத் துரோகமிழைத்த பலர் பஹாவுல்லாவின்மேல் பெரும் அன்பு வைத்திருந்தவர்கள்தாம். ஆனால், அவர்கள் தங்களுடைய கீழான அகங்கார உணர்வுகளுக்கு அடிமையானதன் விளைவாக தாங்கள் அதுவரை அடைந்திருந்த உயர்ந்த ஸ்தானத்திலிருந்து நரகத்தீயில் விழுந்தனர்.
முதலாவது மறைமொழியானது, “தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக…” என கூறுகின்றது. மற்றொரு மறைமொழியில், “உங்கள் உள்ளங்கள் தன்னலம், வெளிவேஷம் எனும் தூசியிலிருந்து தூய்மைப்படுத்தப்படவும், கீர்த்தி எனும் சபையில் சலுகைகள் காணவும் நீங்கள் முயலுவீர்களாக; ஏனெனில், வெகு விரைவில் மனிதகுலத்தை எடைபோடுபவர்கள், வழிபாட்டுக்குறியவரான அவரது தெய்வீக முன்னிலையில், முழுமையான நற்பண்பையும், அப்பழுக்கில்லாத தூய்மையும் கூடிய செயல்களையும் தவிர வேறெதனையும் ஏற்கமாட்டார்கள், ” என குறிப்பிடுகின்றது. அப்துல் பஹாவின் அறிவுரை ஒன்றில், இம் மறைமொழிகள் செவிமடுக்கப்பட வெளியிடப்படவில்லை, ஆனால் செயல்படுத்தப்படவே வெளியிடப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
இது தவிர, பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள விதிமுறைகளும் சட்டங்களும் ஒளிவிளக்குகள் என வர்ணிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறப்பு. அவ்வாறு செய்யாத போது, நாம் நமக்கு மட்டும் தீங்கிழைத்துக்கொள்வதில்லை, மாறாக நாம் வணங்கிப் போற்றும் நமது சமயத்திற்கே தீங்கிழைத்தவர்களாவோம்.
இங்கு நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஒன்றும் உள்ளது. நமது ஒத்துழைப்பின்றி சமயம் தன்னிச்சையாக வளரும் என்பது உண்மைதான்; ஆனால் அதற்காகப் பாடுபடுவது நாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் ஓர் உதவியே அன்றி சமயத்திற்கோ, வேறு எவருக்காகவோ செய்து கொள்ளும் ஓர் உதவியாகப் பார்க்கப்படக்கூடாது. பஹாவுல்லாவின் பின்வரும் வாசகத்தைப் பார்ப்போம்:
அவரைத் தவிர மற்ற அனைத்துமே அவரது திரு வாசலில் ஏழ்மையிலும் வறிய நிலையிலும் நிற்கின்றன, அவரது சக்தியின் மகத்துவத்திற்கு முன்னால் அனைவருமே சக்தியற்றுக் கிடக்கின்றனர், அவரது இராஜ்ஜியத்தில் அனைவருமே அடிமைகளைத் தவிர வேறில்லை, அனைத்து படைப்பினங்களையும் துறக்கின்ற அளவுக்கு அவர் போதிய செல்வம் படைத்தவராவார்.
பஹாவுல்லா, பொறுக்குமணிகள் பக்கம் 93
வழிபாட்டுக்குறியவருக்கும் வழிபடுவோருக்கும் இடையில், படைப்பினத்திற்கும் படைப்பாளருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேவகம் எனும் பந்தம் மனிதர்களின் மீது அவரது கருனையின் அடையாளமாகக் கருதப்படவேண்டுமே ஒழிய, அது அவர்களுக்கு உரிய புண்ணியத்திற்கான அறிகுறியாகக் கருதக்கூடாது. ஒவ்வொரு உண்மையான, பகுத்தறியும் நம்பிக்கையாளரும் இதற்கு சாட்சியமளிப்பார்.
-பஹாவுல்லா, பொறுக்குமணிகள் பக்கம் 193 -194-
ஆகவே, சமய வளர்ச்சியென்பது வேறு யாருக்கோ நாம் செய்யும் ஓர் உதவியல்ல. அது நமக்கு நாமே செய்து கொள்ளும் ஓர் உதவியாகும். அதே போன்று, சமயத்தின் தேவைகள் காலப்போக்கில் மாறும்போதும் நம்மை நாமே மாற்றிக்கொள்வதும் அடிப்படையில் நாம் நமக்கு நாமே செய்துகொள்ளும் ஓர் உதவியே ஆகும். நமது சேவை இறைவனுக்குத் தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளை நமது சேவை இறைவனுக்கே சொந்தம் என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். சேவையென்பது நமக்கு ஒரு விசேஷ ஆசீர்வாதமாகும். அஃது இறைவனின் கருணையாகும். சேவை செய்வதன் வாயிலாகவே சமயம் வளரவும் செய்யும். மனிதனின் படைப்பு குறித்த ஒரு விஷயமும் உண்டு; அது மனிதன் கொடுப்பதற்கென்றே படைக்கப்பட்டுள்ளான் எனும் விஷயமாகும். கனி கொடுக்காத மரம் ஒரு பழமரமாகாது, நீர் கொடுக்காத ஓர் ஊற்று நீரூற்றாகாது, மழை கொடுக்காத மேகம் மேகமுமல்ல, அதே போல் தன் நேரத்தை, பொருளை, சக்தியை சேவைக்கு வழங்காத ஒரு மனிதன் மனிதனும் அல்ல.
கடந்தகால இறைத்தூதர்கள் இக்காலத்திற்காகவே தங்கள் வெளிப்பாடுகளைக் கொணர்ந்தனர் எனவும், ஒரு நிமிடமாவது சமயத்திற்குச் சேவை செய்திட வேண்டும் என அவர்கள் ஆவல் கொண்டும் உள்ளதாக சமயப் புனித வாசகங்கள் நமக்கு அறிவிக்கின்றன. நாம் வாழும் இந்த நாளுக்காகவே மனிதன் இறைவனால் படைக்கப்பட்டுள்ளான். மகத்தான நாளில் வாழ்கின்றோம் அதற்குத் தகுந்த மகத்தான காரியங்களையும் புறிந்து சமயம் தழைத்தோங்கச் செய்திடுவோமாக.
பஹாவுல்லாவின் நேசர் மற்றும் நேசிக்கப்படுபவருக்கான நிருபம்
(தற்காலிக அதிகாரபூர்வமற்ற மொழிபெயர்ப்பு)
வஸந்த காலத்தின் உதயத்தின் போது, இறைவனின் பூங்காவிலுள்ள ஆன்மீக ரோஜா மர்ம அர்த்தங்கள் கொண்டு மலர்ந்தது. ஆனால், லௌகீக இராப்பாடிகளோ கவனமின்மையில் ஆழ்ந்திருந்திருந்தன.
ரோஜா கூறியது: “இராப்பாடிகளே! யாமே உங்கள் நேசத்திற்குறியவர். முழுநிறை வர்ணம், நறுமணம், மற்றும் பசுமையும், புதுமையும் கொண்ட அழகுடன் யான் தோன்றியுள்ளேன். வாருங்கள், உங்கள் நண்பனோடு வீற்றிருங்கள். பறந்து சென்றுவிடாதீர்கள்.“
மேலோட்டமான இராப்பாடிகளோ: “நாங்கள் மதினாவின் பூர்வகுடிகள், நாங்கள் அராபிய ரோஜாவின் நண்பர்களாக இருந்தோம். நீ வேறு இடத்திலிருந்து வந்துள்ளாய், மற்றும் ஈராக் நாட்டின் தோட்டம் ஒன்றில் உனது முகத்திரையை நீ வீசியெறிந்து விட்டாய்,”
ரோஜா: “ஆக, இவ்வளவு காலமாக, சர்வ-இரக்கமிக்கவரின் அழகிலிருந்து நீ தூரமாகவே இருந்துள்ளாய் என்பது இப்போது தெளிவாகியுள்ளது; மற்றும் நீ என்னை என்றுமே கண்டுணரவே இல்லை. ஐயமின்றி, ஆந்தைகளைப் போல், நீங்கள் சுவர்களையும், விட்டங்களையும், கூறைகளையும் மட்டுமே கண்டிருக்கின்றீர்கள். நீங்கள் என்னை எப்போதுமே அறிந்திருந்தால், உங்கள் நண்பனை விட்டு இப்போது பறந்தோடியிருக்க மாட்டீர்கள்.
இராப்பாடிகளே! யாம் மதினாவையோ, மக்காவையோ சார்ந்தவர் அல்ல, அல்லது ஈராக்கையோ, சிரியாவையோ சார்ந்தவரும் அல்ல. மாறாக, பார்வையிடுவதற்காக காலத்திற்குக் காலம் நான் எல்லா நாடுகளினூடும் பிராயணம் செய்வேன். ஒரு சமயம் நான் எகிப்பதில் தோன்றினேன், வேறு சமயம் பெத்லெஹமில் தோன்றினேன். ஒரு காலத்தில் நான் அரேபியாவில் இருந்தேன், மற்றொரு நேரம் நான் ஈராக்கில் பூத்திருந்தேன், பிறகு ஷிராஸில் மலர்ந்திருந்தேன். இப்போது, அடிர்னேயில் நான் மீண்டும் தோன்றியுள்ளேன்.
என்மீதான உங்கள் அன்புக்கு நீங்கள் பெயர் பெற்றிருந்தீர்கள், ஆனால், நீங்கள் இப்போது என்னை புறக்கணிக்கின்றீர்கள். நீங்கள் இராப்பாடிகளாக பாவனை செய்யும், காக்கைகள் எனவே தோன்றுகிறது. மாயத்தோற்றம் மற்றும் கண்மூடித்தனமாகக் கீழ்படிதல் எனும் தேசத்தில் நீங்கள் அலைந்துகொண்டிருக்கின்றீர்கள், மற்றும் நீங்கள் தெய்வீக ஒருமையெனும் புனிதத் தோட்டத்தை இழந்தவர்கள் ஆவீர்.
ஒரு முறை இராப்பாடியிடம்: ‘உங்களைவிட காக்கைகளே அழகாகப் பாடக்கூடியவை‘ எனக் கூறிய அந்த ஆந்தையைப் போன்றவர்களே நீங்கள்.
அதற்கு அந்த இராப்பாடி: ‘ஆந்தையே, எவ்வாறு நீ நியாயமில்லாமல் இருந்தும், உண்மையின்பால் உன் கண்களை மூடிக்கொண்டும் இருக்கின்றாய்? ஒவ்வொரு கூற்றும், இறுதியில் நிரூபிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்குமூலமும் தக்க ஆதாரங்கள் கொண்டு மெய்ப்பிக்கப்பட வேண்டும். நான் இங்குதான் இருக்கின்றேன், மற்றும் காக்கையும் இங்குதான் உள்ளது. ஆகவே, அதுவும் பாடட்டும், பிறகு நானும் பாடுகின்றேன்‘ என மறுமொழி பகன்றது.
ஆனால் அதற்கு ஆந்தை: ‘நான் உனது சவாலை ஏற்றுக்கொள்ள முடியாது, மற்றும் உன் ஆதாரங்களை நான் ஏற்கமறுக்கின்றேன். ஏனெனில், ஒருமுறை ஒரு தோட்டத்தில் இருந்து மகிழ்ச்சியளிக்கும் கீதம் ஒன்று ஒலிப்பதைக் கேட்டேன். பிறகு, அதைப் பாடியவர் யார் எனக் வினவினேன். அதற்கு அவர்கள் அஃது ஒரு காக்கையின் குரல் என்றனர். அந்தக் காக்கை தோட்டத்தை விட்டு வெளியே வருவதைக்கூட நான் கண்டேன். ஆகவே, அந்தப் பதில் உண்மையென்றே நான் உணர்ந்தேன்,‘ என பதிலிறுத்தது.
பாவம் அதற்கு அந்த இராப்பாடி: ‘ஆந்தையே, அது காக்கையின் குரல் அல்ல. அஃது என்னுடைய குரலே. நீ செவிமடுத்த அதே போன்ற கீதத்தை, ஏன் அதைவிட சிறந்த ஒன்றை, தனிச்சிறப்புமிக்க ஒன்றை இப்போதே பாடுகின்றேன்,‘ எனக் கூறியது.
“அதற்கு ஆந்தை: ‘நான் கூறியவற்றிலிருந்து நான் சிறிதும் மாறப்போவதில்லை. உன் கோரிக்கையை நான் நிராகரிக்கின்றேன். என்னுடைய மூதாதையர்களும், தோழர்களும் அவ்வாறே கூறுகின்றனர். காக்கை தன்னுடைய வாதத்தை நிரூபிக்க சாட்சிப்பத்திரங்களை அப்போது வைத்திருந்தது. எப்போதும் நீ தான் அங்கு இருந்தாய் என்றால், அதனுடைய பெயர் ஏன் பிரபலமடைந்தது?‘
அதற்கு இராப்பாடி: ‘நீ முற்றிலும் நியாயமின்றி இருக்கின்றார். வெறுப்புமிகு வேட்டைக்காரன் என்னைக் கண்ணிவைத்துப் பிடித்திருந்தான். அவன் கொடுங்கோன்மை எனும் வாளை என் முதுகில் பிடித்திருந்தான். அதன் காரணமாகத்தான் காக்கை பிரபலமடைந்திருந்தது. முழுமையாக வெளிப்படுத்தப்படுவதற்குப் பதிலாக நான் மறைக்கப்பட்டிருந்தேன். முழுநிறைவுடன் பாடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நான் மௌனமாக இருந்தேன். செவிபடைத்த எவரொருவருமே சர்வ-இரக்கமுடையவரின் பாடலுக்கும், காக்கை கரைவதற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணரமுடியுமே. உண்மையை உனக்குப் புகட்டும் வண்ணம், இப்போது என் குரலையும், கீதத்தையும் கேள்,‘ எனக் கூறியது.
“இராப்பாடிகளான நீங்கள் அனைவரும் அந்த ஆந்தையைப் போன்றவர்களே. ஒரு சிறிய மாயத்தோற்றத்தை ஒரு நூறாயிரம் நிச்சயத்தன்மைகளாகவும், அல்லது செவியுற நேர்ந்த ஓர் அசையெழுத்தை பிரபஞ்சமளவுக்கும் பெரிதாக்கிவிடாதீர்கள். நண்பரின் ஆலோசனையைக் கேளுங்கள், அந்நியனின் கண்களைக் கொண்டு உங்கள் அன்புக்குகந்தவரைப் பார்க்காதீர்கள். என்னை எனது இருக்கையையோ, ஓய்வுத்தலங்களையோ கொண்டல்லாமல் என் வாயிலாகவே உணரமுயலுங்கள்.
அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் திடீரென, இறைவனின் அடையாளத்தை ஏந்திய ஒளிபெற்ற இராப்பாடி ஒன்று, தெய்வீக பாடல் ஒன்றை பாடிக்கொண்டு அந்தப் புனிதப் பூங்காவிலிருந்து தோன்றியது. அஃது அந்த ரோஜாவை சுற்றிச் சுற்றி வந்தும், பிறகு: “நீங்கள் இராப்பாடிகளின் உருவமைப்பு கொண்டிருந்தாலும், நீங்கள் நீண்டகாலமாக காக்கைகளுடனேயே இருந்துள்ளீர்கள், மற்றும் அவற்றின் வழிகளையே நீங்களும் பின்பற்றுகிறீர்கள். உங்களுக்கு இந்தப் பூங்காவில் இடமில்லை. பறந்து போய்விடுங்கள்! இந்த ஆன்மீக ரோஜா தெய்வீகக் கூட்டின் இராப்பாடிகளே வலம் வரக்கூடிய மையமாகும்” எனக் கூறியது.
பிறகு, மனித இராப்பாடிகளே, நண்ரை அறிந்துகொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். தெய்வீகத் தோட்டத்தின் ரோஜாவை அதன் எதிரிகளிடமிருந்து காத்திடுங்கள். உண்மையின் நண்பர்களே! நீங்கள் சேவை எனும் ஆயுதம் தரித்தும், சச்சரவுகளைத் தூண்டிவிடுவோர்களின் சதிகளிலிருந்தும், பாசாங்குகளிலிருந்தும் உலக மக்களை பாதுகாத்திடுங்கள். மக்களிடையே நீங்கள் மரியாதை எனும் அலங்கரிப்புடனும், பனிவுடனும், இறைவனின் மற்ற எல்லா பண்புகளுடனும் தோன்றிட வேண்டும். புனிதத்தன்மையெனும் அங்கிக்கரை சைத்தான் அதன் வெளிப்பாடுகளிலின் அவதூறுகளிலிருந்து தூய்மையாகவும், மாசுபடாமலும் இருக்கட்டும். மற்றும் பொய்யர்களின் பொய்கள் உலக மக்களுக்குத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தோன்றட்டுமாக. ஒரு வேளை, கடவுள் தடுப்பதாக, முறைகேடான ஒரு செயலை நீங்கள் செய்துவிட்டீர்களானால், நீங்கள் அனைவரும் அதி புனித உறைவிடத்திற்குக் கண்டிப்பாகத் திரும்பிச் செல்லுங்கள். மற்றும் இதே செயல்களே உங்களைப் பழியிலிருந்து விடுவிக்கக்கூடியவையாக இருக்கும். இதுவே உறுதியான உண்மை.
உலகங்களின் ஆண்டவராகிய, இறைவன் புகழப்படுவதாக.
பஹாவுல்லாவின் அதிசிறப்பு வாய்ந்த நிருபங்களில் இதுவே இறுதியானதாகும். அவர் நம்மைவிட்டு பிரிவதற்கு முன்பு இறுதியாக எழுதியதும்; அதற்கு முன்பாக பாப் அவர்கள், “எல்லா துன்பங்களும் அத்துன்பத்தின் நிழல்களே”, என எழுதத் தூண்டிய சம்பவம் நடந்தேறியும் இருந்தது. பஹாவுல்லா நமக்காக வெளிப்படுத்திய நூறு நூல்களில் இதுவே இறுதி நூலாகும்.
இந்நூல் இஸ்பாஃஹான் நகரைச் சார்ந்த, ‘ஓனாயின் மைந்தன்’ என வழங்கப்பட்ட ஒரு மதகுருவிற்கு எழுதப்பட்டதாகும். இவருடைய தந்தை “ஒளிவீசும் இரட்டைத் தீபங்களான” உயிர்த்தியாகிகளுள் அரசர், உயிர்த்தியாகிகளுள் அன்புக்குகந்தவர் ஆகிய இருவருடைய மரணத்திற்கும் வழிவகுத்த வார்த்தகளை உச்சரித்தவராவார். இந்த இருவரும் இஸ்ஃபாஹான் நகரின் அருகே இரு மணல் சவக்குழிகளில் புதைக்கப்பட்டனர். (பல வருடங்களுக்குப் பிறகு கீத் ரேன்ஸம் கெஹ்லர் எனப்படும் அமெரிக்க பஹாய் அந்த இருவருக்கும் மலர்கள் வைத்தும், அங்கு மண்டியிட்டு கண்ணீர் வடிக்கவும் செய்தார்; பிறகு சில நாட்களில் அவரே நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். நண்பர்கள் அவரை அதே மணல் புதைகுழிகளுக்குக் கொண்டு சென்று அந்த இருவருக்கும் அருகிலேயே புதைத்தனர்.)
ஆஃகா நஜஃபீ எனப்படும் இந்த மதகுரு மன்னிக்கமுடியாத அந்தப் பெரும் பாவத்தைப் புரிந்தவராவார்; அவர் (பஹாவுல்லாவின்) திருவொப்பந்தத்தை மீறியும், புனித ஆவியைப் பழிக்கவும் செய்தவராவார்; அதாவது, அவர் விளக்கை வெறுக்கவில்லை, அறியாமையினால், ஒரு தனி மனிதர் எனும் முறையில் இறை அவதாரத்தை அவர் வெறுக்கவில்ல, ஆனால் அவர் ஒளியையே வெறுத்தவராவார்; இறை அவதாரம் பிரதிபலிக்கும் நிறைவான இறைவனின் குணங்களை அவர் வெறுத்தார்; தீபத்தில் பிரகாசிக்கும் ஒளியையே அவர் வெறுத்தார் – ‘ஒளியின்பாலான இவ்வித வெறுப்புக்கு நிவாரணமே கிடயாது…’
ஆகவே, இந்த மதகுரு பாவிகளிலேயே நம்பிக்கைக்கே வழியில்லாத ஒரு பாவியாவார். அவருடைய தீய நோக்கங்கள், பல வழிகளில் வெளிப்பாடு கண்டன. அவற்றுள், இஸ்ஃபாஹானில், தியாகமரணமுற்ற மிர்ஸா அஷ்ரஃப்பின் (பஹாவுல்லாவின் பொறுக்கு மணிகள் நூலில் நாம் படித்த ஸஞ்சான் நகரில் தலை வெட்டுண்ட அந்த சிய்யிட் அஷ்ரஃப் அல்லர்) உடலை இவர் தமது சீடர்களுடன் சேர்ந்து காலால் உதைக்கவும், துவைக்கவும் செய்தார்.
இருந்தபோதிலும், பஹாவுல்லா இந்நிருபத்தை ஆகா நஜபீஃ ஒப்புவிக்க வேண்டிய ஒரு மன்னிப்பு பிரார்த்தனையின் வாயிலாகவே துவங்குகிறார். தம்மை அழிக்க முனைந்த தமது துரோககுணம் கொண்ட ஒன்றுவிட்ட தம்பியாகிய மிர்ஸா யாஹ்யாவுக்கு தமது அதி புனித நூலில் மன்னிப்பு வழங்கிட முன்வந்தது போலவே இந்த ஒப்பந்தமீறிக்கும் மன்னிப்பு வழங்க பஹாவுல்லா முன்வருகிறார். இது தாம் விரும்பியதைச் செய்பவரும், அவரது செயல்களுக்கு காரணம் ஏதும் கேட்க முடியாதவருமான இறைவனின் திருவிருப்பத்தின் தன்னிச்சையான இயக்கம் எனும் கோட்பாடாகிய, ‘படா’ எனப்படுவதன் வெளிப்பாடாகும். இது, எல்லாமே முன்விதித்தபடியே இயந்திர முறையில் இயங்குகிறது என நம்பும், அதாவது இவ்வளவு பாவங்கள் இவ்வளவு தண்டனையை பெற்றுத்தருகின்றன, இவ்வளவு நன்மைகள் இவ்வளவு பிரதிபலன்களைப் பெற்றுத் தருகின்றன என நம்பும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எந்த அளவுக்கு தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றது. இவர்களைப் பொருத்த வரையில் கடவுள் என்பவர், இரயில் வண்டிபோல் இயந்திரமென இயங்கும், வெறும் சக்தியே ஆவார். ஆனால், இவர்கள் தாங்களும் அதே போன்று வெறும் சக்திகளே என அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். (பாரசீக பாயானில் பாப் அவர்கள் இந்த ‘படா’ கோட்பாட்டை உருவாக்குகிறார்).
உமது மன்னிப்பு எனும் உயிர்நீர்களை உமது அன்புக்கருணையெனும் கைகளிலிருந்து பெறுவதற்கு வெட்கப்பட்டு, உமது ஆதரவு எனும் வாயிலின் முன் இறந்தவனென கிடக்கும் இவனை, நீர் காண்கின்றீர்.
உம்மை முன்மொழிந்திட ஒவ்வொரு மதபீடத்தையும் ஒதுக்கிவைக்குமாறு நீர் விதித்துள்ளீர்… ஆனால், நானோ உமது திருவொப்பந்தத்தின் மீறலை அறிவிப்பதற்காக அவற்றின் மீது ஏறியுள்ளேன்…
ஆண்டவரே, என் ஆண்டவரே! மீண்டும், ஆண்டவரே என் ஆண்டவரே! மீண்டும் ஒரு முறை, ஆண்டவரே, என் ஆண்டவரே!
பிரார்த்தனை செய்யும்படி இந்த நிருபம் முழுவதும் அந்த மதகுரு பலமுறை அறிவுறுத்தப்படுகிறார்; பஹாவுல்லாவின் புத்திரர்களில் ஒருவரைப் போலவே இவரும் அழைக்கப்படுகிறார்; முன்னெழுந்து சமயத்திற்குச் சேவை செய்திடுமாறு; நம்பிக்கை பெறுமாறு, சேவை செய்திடுமாறு, நம்பிக்கை வைக்குமாறு கூறப்படுகிறார்; பஹாவுல்லாவின் முன்னிலையை அடையுமாறு (பஹாவுல்லாவை அவர் அதுவரை பார்த்ததே கிடையாது); ‘தான் எனும் சேற்றிலிருந்து’ மனிதர்களைக் காப்பாற்றுமாறு; அவர் அழைக்கப்படுகிறார்; அதன் வாயிலாக, உமக்கு முன்னால் இராஜ்யத்தின் கதவுகள் அகலத் திறந்திட… அதிபெரும் சமுத்திரத்தை தேடுமாறு… அவர் அறிவுறுத்தப்படுகிறார். ஓ ஷேய்க்! உமது கண் அதன் வாயிலாக களிப்படைந்திட… விண்ணுலகக் குயிலின் கீதங்களை நீர் செவியுறுமாறு யாம் உமக்கு ஆற்றலளித்துள்ளோம்… என கூறுகின்றார்.
டாக்டர் அலி-குலி ஃகான் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல, பஹாவுல்லா ஆஃகா நஜாஃபியைப் பல்வேறு தலைப்புக்களால் அழைப்பதானது இக்கடிதம் அவரை மட்டும் குறிக்காமல் பரந்த அளவிலான ஒரு தரப்பினரையே குறிவைக்கின்றது எனலாம். இது ‘மனுக்குலத்திற்குச் சமயத்தை வழங்குதலாகும்’; மனிதனின் பல குணவியல்புகள் தனிப்படுத்தப்பட்டும், அவை விமர்சிக்கவும் படுகின்றன. இத்தலைப்புக்களுள், ‘ஓ ஷேய்க்’; ‘சிறப்புறும் சமயகுருவே’; ‘வழிதவறியோனே’! ‘இறைவனிடமிருந்து அப்பால் திரும்பியோனே!’ ஆகியவையும் உள்ளடங்கும். பல தருணங்களில், வேறு பலவும் குறிப்புடன் உபயோகிக்கப்படுகின்றன: ‘பஹாவின் மக்களே’; ‘ ஓ ஹாடீ’, போன்றவை உதாரணங்களாகும். மனிதனின் பல குணவியல்புகள் தனிப்படுத்தப்பட்டும், அவை விமர்சிக்கவும் படுகின்றன. இங்கு ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் தங்களுடைய ஆண்டவரிடமிருந்து அவர்களைப் பிரிக்கும் – ‘லைசிடாஸின் குருட்டு வாய்களான’, தீய மதகுருக்கள் மட்டுமல்ல, ஆனால், அதி புனித நூலின் ‘பஹாவின் உலமாக்களை’ நினைவுகூறும், தேசங்களுக்கு கண்கள் போன்ற நல்ல மதகுருக்களையும் நாம் காணலாம். இங்கு அரசன், பண்டிதன், சாதாரண நம்பிக்கையாளன், தெய்வீகமானன், பாவி ஆகியோரையும் நாம் காணலாம்.
ஆகவே, இக்கடிதம் ஒரு தனிமனிதனுக்கு வரையப்பட்ட ஒரு நிருபத்திற்கும் மேலான ஒன்றை உள்ளடக்கிய நிருபமாகும். இது சமயத்தைப் பற்றிய ஒரு பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த அளிப்புமுறையாகும். பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி நமக்குக் கூறுவது போல், இப்படைப்பில், ‘பஹாவுல்லா தமது எழுத்துக்களுள் சிறப்புப் பண்புகளுடையவையும், புகழ்வாய்ந்தவையுமானவற்றை’ மேற்கோளிடுகின்றார் மற்றும் தமது சமயத்தின் வாய்மை குறித்த நிரூபணங்களை எடுத்துக்காட்டுகின்றார்.’
பெரும்பாலான நூல்கள் அவற்றின் எழுத்தாளரின் அருகாமைக்கு நமக்கு வழிகாட்டுகின்றன. ஆனால், பஹாவுல்லாவின் படைப்புக்களை நாம் படிக்கும் போது, அவர் நமது புலப்பாட்டுக்கும் அப்பால் நழுவியே செல்கின்றார். ‘பஹாவுல்லாவின் சமயகாலகட்டம்’ எனும் நூலில் பாதுகாவலர் நமக்குக் கூறியுள்ளது போல், ‘அனுகுவதற்கும் அப்பால் அவர் மகிமைமிகுந்து’ நிற்கின்றார்.
கீத் என்பவர், ‘எல்லா சிகரங்களின் உச்சியிலும் ஓய்வுள்ளது’ என கூறுகின்றார். நான் இந்த நூலை மூன்று முறை படித்துள்ளேன் மற்றும் நீண்ட காலங்கள் அதை ஆய்வு செய்தும் உள்ளேன்; ஆனால், எனக்கென்னவோ எல்லா சிகரங்களின் உச்சிக்கும் உயரே மேலும் ஒரு சிகரத்தின் உச்சி உள்ளதாகவே தென்படுகின்றது.
கிட்டத்தட்ட முடியாததென உணர்ந்நிருந்தாலும், இதை ஒரே மூச்சில் படித்து முடித்திடவே விரும்புவீர்கள். அது துரிதமாகவே வரும், மற்றும் பாதுகாவலரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, அப்பழுக்கில்லாமல் உள்ளது. இதை மேலும் மேலும் அள்ளிப்பருகிடவே விரும்புவீர்கள். நிதானித்து இதைப் பற்றியோ அதைப்பற்றியோ சிந்திக்கத் தோன்றாது. நீங்கள் துரிதமாகப் படித்தும், மீண்டும் கவனிக்கவேண்டும் என நினைக்கும் பகுதிகளை நீங்கள் குறிக்கும் போது, பின்வரும் வாக்கியங்கள் போன்றவற்றை நீங்கள் காணக்கூடும்:
என்னை நேசிப்பவனுக்கே நான் உரிமையாவேன்.
… மற்றவர்கள், சில வேளைகளில் பசியெனும் தெய்வீக உணவைக்கொண்டு தங்களுக்கு உணவூட்டிக்கொண்டனர்.
முழுமையாக இல்லாவிட்டாலும், பெரும்பாலுமாக, பயன்படுத்தப்படுகையில், பயத்தை போக்கவல்ல ஓர் அறிவு இறைவனின் அறிவெனும் பொக்கிஷங்களில் மறைக்கப்பட்டு கிடக்கின்றது.
(இறைவனின் அவதாரத்தை) கண்டுகொண்ட பிறகே மனிதனின் செயல்கள் ஏற்கத்தக்கவைகளாகின்றன.
எமது வெளிப்பாட்டை ஒப்புக்கொண்டு, எமது அறிவெனும் சமுத்திரத்திலிருந்து பருகி, எமது அன்பெனும் காற்றுமண்டலத்தில் வானளாவப் பறப்பவன் உண்மையாகவே அறிவு பெற்றவன் ஆவான்…
நீதியுடைய ஓர் அரசன் மற்ற எவரைக்காட்டிலும் இறைவனிடம் அதிகமான அனுக்கத்தை அனுபவிப்பவனாவான்.
உறுதியாகவே, தூய தங்கத்திலான நகரங்களை அடைந்தாலும் அவற்றைக் கருதாதமலும், பெரும் அழகும், மிகுந்த வனப்பும் வாய்ந்த பெண்களைச் சந்தித்த போதிலும் அவர்களிடமிருந்து அப்பால் திரும்பும் இவர்களே, மனிதர்கள் ஆவர்.
இந்நூல் வருங்காலத்தில் நுண்ணிய ஆய்வை மேற்கொள்ள தூண்டும் வரலாற்று விஷயங்களை வழங்குகிறது. உதாரணமாக, மாஸ்டர் அவர்களின் திருமணத்தைப் பற்றியும்; நியாவரானில் பஹாவுல்லாவின் கைது பற்றியும், எம்மாதிரி சங்கிலிகள் கொண்டு அவர் பிணைக்கப்பட்டார் என்பது பற்றியும்; கான்ஸ்டான்டிநோப்பிலில் உள்ள பாரசீக அதிகாரிகள் அவருக்கு எதிராக மேற்கொண்ட சதிகளைப் பற்றியும், அங்கு ஹாஜி-ஷேய்க்-முகம்மது-அலி தற்கொலை செய்து கொண்டது பற்றியும்; மிர்ஸா யாஹ்யா பாரசீகத்தை விட்டு தம்மைப் போல் நாடுகடத்தப்பட வில்லை என்பது பற்றியும்; மிர்ஸா யாஹ்யா பாக்தாத்திலேயே பாப் அவர்களின் எழுத்துக்களை கைவிட்டு விட்டது பற்றியும்; ஹாடி டௌலத் அபாடி பாயானின் பிரதிகள் யாவற்றையும் அழிக்க முனைந்தது பற்றியும்; அஸாலிகள்(மிர்ஸா யாஹ்யாவைப் பின்பற்றியவர்கள்) சிய்யிட்- ஜவாட்-இ-கர்பிலாயி அவர்களைத் தங்களில் ஒருவர் என உரிமை கொண்டாடி, மிர்ஸா யாஹ்யாவின் படத்திற்குக் கீழ் அவரது படத்தை ஒட்டி வைத்தது பற்றியும்; பஹாவுல்லா பாயான் திருநூலைப் படித்ததே இல்லை என்பது பற்றியும்; 1863ல் (இத்தேதி ‘இறைவன் கடந்து செல்கிறார்‘ நூலில் கொடுக்கப்பட்டுள்ளது) கமால் பாஷா எனும் துருக்கிய அதிகாரியிடம், அவருடைய அரசாங்கம் உலக மொழி மற்றும் எழுத்து குறித்து திட்டமிட ஒரு கூட்டத்தை கூட்ட ஆலோசனை வழங்கியது பற்றியும் (இதன் தொடர்பில், ‘வொலாபூக்‘ எனும் செயற்கை மொழி 1879ல் கொன்ஸ்டன்ஸ், பேடனைச் சார்ந்த ஜொஹான் மார்ட்டின் ஷ்லேயரால் புணையப்பட்டது; 1887ல் டாக்டர் லுடோவிச் லாஸாரஸ் ஸாமென்ஹொஃப்பினால் முதன் முதலில் எஸ்பராண்டோ மொழி எழுத்துபூர்வமாக விவாதிக்கவும் பட்டது.)
அது நமக்கு ஒரு நன்நெறிமுறையை வழங்குகிறது. அதன் உதாரணங்கள் பின்வருமாறு:
இறைவனின் பாதையில் உன்னை யாரேனும் திட்டினாலோ, உன்னைத் தொல்லைகள் அனுகினாலோ, பொறுமையுடன் இருந்து, செவிமடுப்பவரும், பார்த்துக்கொண்டிருப்பவருமாகிய அவரில் உனது நம்பிக்கையை வைப்பாயாக. உண்மையாகவே, அவரே, பார்த்தும், உணர்ந்தும், தமது அரசாட்சியின் வாயிலாக தாம் விரும்பியதைச் செய்தும் வருபவர்.
கோடை வெய்யிலைக்காட்டிலும் விவேகம் எனும் வாள் கடுவெப்பமுடையதாகும்… அவரது அருளால் உனக்கு வழங்கப்பட்டவைகளை ஏழைகளுக்குக் கொடுக்க மறுத்துவிடாதே. உறுதியாகவே, கண்டிப்பாக, அவர் நீ பெற்றிருப்பதை விட இருமடங்கு அதிகமாக அளிப்பார்.
வேறொருவர் இழைத்த பாவத்தைப் பற்றி நீ அறியவரும்போது, அதை மறைத்திடுவாயாக அதனால் உன் பாவத்தை இறைவன் மறைத்திடக்கூடும்.
துன்பங்களின் போது நன்றியுடையவனாக இருப்பாயாக… உனது தீர்ப்பில் நியாத்துடனும், உனது பேச்சில் எச்சரிக்கையுடனும் இருப்பாயாக… துயரமுற்றோருக்கு ஒரு புகலிடமாகவும், ஒடுக்கப்பட்டவனுக்கு உருதுணையாகவும், அவனைக் காப்பவனாகவும்… அறிமுகமற்றவருக்கு ஓர் இருப்பிடமாகவும்… இருப்பாயாக…
இறைவன் மீதான பயம் தொடர்ந்தாற் போல் வலியுறுத்தப்படுகிறது:
இறைவனின் சேவகர்களும், சேவகிகளும் தூய்மையுடன் இருந்தும், இறைபயம் உடையவர்களாக இருந்திடுமாறும் யாம் அவர்களுக்கு கட்டளையிடுகின்றோம்… இறைபயம் என்றுமே… பாதுகாப்பான அரணாக.. இருந்துள்ளது… அவர்களுடைய (பஹாய்கள்) இதயங்கள் இறைபயம் எனும் ஒளியினைக்கொண்டு ஒளிபெறச் செய்யப்படுகின்றன…
திருக்குரான் நூலில் இதே போன்று இறைபயம் எவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் போற்றப்படுகிறது என்பதை அந்நூலின் மாணவர்கள் ஞாபகத்திற்குக் கொண்டுவருவர்:
‘தம்மிடம் பயம் கொள்வோரை இறைவன் நேசிக்கின்றார்,‘ மற்றும் ‘எவர் இறைவனிடம் பயம் கொள்கின்றாரோ அவருடைய பாவச்செயல்களை அவர் அழித்துவிடுகிறார்…
இவ்விதமான பல கட்டளைகளுக்கிடையே பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘அரசர்களுடைய நிலைக்கான மதிப்பு தெய்வீகமாக விதிக்கப்பட்டதாகும்…‘ மற்றும் ‘சீசருக்கு வழங்கவேண்டியதை‘ எனும் வார்த்தைகளுக்கு கிருஸ்துவ உலகத்தில் வழக்கில் இருந்து வரும் அர்த்தத்திற்கு மிகவும் மாறுபட்ட வகையில் பொருளுரைக்கின்றார். ‘சீசர்(ஒரு மிகவும் பிரபலமான ரோமானிய பேரரசன்) என்பது இறைவன் எனும் கருத்துக்கு எதிர்கோடி கருத்தாக பொருளுரைக்கின்றனர். தற்போது நிலவும் இக்கருத்து அரசபதவி குறித்த பஹாய் போதனைகளுக்கு மாறுபட்டதாகும்.
இப்படைப்பில், பன்முறை எழுப்பட்டுள்ள ஒரு கேள்விக்குப் பஹாவுல்லா பதிலுரைக்கின்றார்: எதற்காக ஒரு புதிய சமயம்? அவர், முஸ்லிம்களை குறிப்பிட்டு, அப்படி அவர்களுக்கு பழமையே போதுமானதாக இருப்பின், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்குப் பதிலாக அவர்கள் ஏன் திருக்குரானை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அப்படி அவருடைய குற்றம் ஒரு புதிய சமயத்தை தருவித்ததாக இருக்குமாயின், தமக்கு முன்பாக அதே குற்றத்தை முகம்மது அவர்களும் புரிந்துள்ளார், மற்றும் அதற்கும் முன்பாக மோஸசும் புரிந்துள்ளார். அவர் மேலும் கூறுவது:
அப்படி, இறைவனின் வார்த்தையை உயர்த்தியதும், அவரது சமயத்தை வெளிப்படுத்தியதுமே எனது குற்றமாக இருப்பின், பாவம் புரிந்தவர்களில் யானே பெரும் பாவியாவேன்! மண்ணுலகு மற்றும் விண்ணுலகங்களின் அரசாட்சிகளுக்காகக்கூட இவ்விதமான ஒரு ‘பாவகாரியத்தை‘ பண்டமாற்று செய்ய மாட்டேன்.
(இன்றைய அனைத்துலக ரீதியான ஈனநிலையை மறந்து இதே கேள்வியைப் பொதுமக்கள் கேட்பது விந்தையிலும் விந்தை; நாட்டில் பிராயணம் செய்யும் போது காணப்படக்கூடிய இரும்பு வாசல்களுக்குப் பின்னால் கற்கட்டிடங்களில் குழுமியும் தனிமையில் வாடியும் நிற்கும் இதயங்கள், தங்களைப்போலவே உள்ள மற்ற மனிதர்களை அடிமைகளாகப் பயன்படுத்தும் மனிதர்கள்; காலைவேளைகளில் பெரிய நகரங்களின் சாலையோர நடைபாதைகளையும், அதன் சாக்கடைகளில் கிடக்கும் குப்பைகளையும் பார்த்தாலே போதும். மருத்துவர்களின் நோய்க்குறிப்பேட்டையோ, தினசரிகளையோ பார்க்க வேண்டியதில்லை, நெறிமுறைகளின் சீர்கேடு நன்றாகவே தெரியும். (பலர் கூறிக்கொள்வது போல, நீங்களும் “நல்ல மக்களில்‘ ஒருவராக இருப்பின், அளவுக்கதிகமாக மதுவருந்தாத ஒருவராக இருப்பின், எவருக்கும் தீங்கு விளைவிக்காத ஒருவராக இருப்பின், ஆதலால், கீழ்ப்படிவதற்கு கடவுள் என ஒன்று தேவையில்லாமல் இருப்பின் – அல்லது தாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட விளைவுகளற்ற இஷ்டதெய்வம் ஒன்றையே தேவையாக கொண்டும், தாங்கள் விரும்பும் போது மட்டும் அதன் விதிமுறைகள் சிலவற்றை பின்பற்றியும், வாரம் ஒரு முறை, கேட்கின்றார்களோ இல்லையோ, அதன் செயற்கையான முழக்கங்கள் – அவர்களை ஒருபோதும் முட்டாளாக்கியதும் இல்லை எனும்போது, நீங்கள் பயனற்றவர், சமூகத்தில் நீங்கள் ஒரு பயன்விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை; சாலையோரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் மனித உடல்களே உங்கள் மதுக்கிண்ணங்கள், தினசரிகளில் நீங்கள் படிக்கக்கூடிய மரணங்களே நீங்கள் பறைசாற்றும் உங்களுடைய நல்லெண்ணங்கள், மற்றும் பயனற்ற பல ஆண்களும் பெண்களும் அனுபவிக்கும் தேவையற்ற சித்திரவதைகளே உங்கள் பாலியல் செயற்கைப்பண்பாடும் ஆகும்.)
மேற்கு நாடுகளில் உள்ள பஹாய்கள் பாப் அவர்களைப் பற்றி இப்போது படிப்படியாக மேலும் அதிகமாக தெரிந்துகொண்டு வருகின்றனர்; “உதயத்தை வென்றவர்கள்”, “பஹாவுல்லாவின் சமயகாலகட்டம்”, மற்றும் இங்கு கற்கப்படும் விஷயம், ஆகியவற்றின் வாயிலாக அவர்கள் அவரோடும், பஹாவுல்லாவுக்கான பாப் அவர்களின் அன்புடனும், அவரது வாழ்க்கையோடும் அனுக்கமாகியுள்ளனர். அவர் உச்சரித்தவைகளுள், தமது நம்பிக்கையாளர்களுக்கு அவர் விடுத்த குறிப்பிடத்தக்க வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதாவது, அவருக்குப் பின் ஒரு வேஷதாரியே தோன்றினாலும், அவர்கள் அம்மனிதனை எதிர்க்கவோ, அவனுக்கு துக்கம் ஏற்படுத்தவோ செய்யக்கூடாது. சிறிது காலத்திற்குள், சுமார் இருபத்தைந்து பேர்கள், இவர்களில் பெரும்பாலோர் பின்னாட்களில் பஹாவுல்லாவிடம் மன்னிப்பை வேண்டினர், இறைவன் வெளிப்படுத்தவிருப்பவர் தாங்களே என பிரகடணப்படுத்தினர். உண்மையான அவதாரத்தின் பாதுகாப்பை விரும்பியே பாப் அவர்கள் இவ்வாறு கூறினார். அவரே அவருடைய உண்மையான நிரூபணமாகும்:‘… ஒருவர் அவர் மூலமாக அல்லாது வேறு எவர் மூலமாகத்தான் அவரை அறிந்துகொள்வது? பாப் அவர்களின் மனத்தளர்வெனும் மூச்சு இங்கு வெளிப்படுகிறது, மற்றும் அவர் மொழிந்த சுந்தர வார்த்தைகளாக, ‘உறுதியாகவே, இறைவன் வெளிப்படுத்தவிருப்பவராகிய அவருடைய விரலில் உள்ள ஒரு மோதிரமே நான்…‘ என்பவை உள்ளன. பாப் அவர்களின் முன்தோன்றலை யோவான் அவர்களின் முன்தோன்றலோடு பஹாவுல்லா தொடர்புபடுத்துகிறார், மற்றும் யோவான் அவர்களின் தோழர்களும் அதே போன்றே ஆவியாகியவரை (இயேசுவை) கண்டுகொள்வதிலிருந்து தடுக்கப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.
பண்ணிரண்டாவது இமாமின் மறுவருகையானவரின் (பாப்) அன்மைக்கு மட்டும் நாம் கொண்டுவரப்படவில்லை, மாறாக, எல்லா இமாம்களின் அன்மைக்கும் நாம் கொண்டுவரப்பட்டுள்ளோம். ஏனெனில், பாதுகாவலர் அவர்களும் இமாம் போன்றவராதலால், நமது சமயத்தின் பாதுகாவலர் ஸ்தாபனத்தின் அன்மைக்கு நாம் கொண்டுவரப்பட்டதன் வாயிலாக எல்லா இமாம்களின் அன்மைக்கும் நாம் கொண்டுவரப்பட்டுள்ளோம். ‘ஃகாயிம்‘ அவர்களின் ‘பனியின் வெண்மை‘ மிக்க கரங்கள் எனும் குறிப்பு திருக்குரானில் உள்ள மோசஸ் அவர்களின் சின்னத்தைக் குறிப்பிடுகின்றது. ‘வரி‘ என்பது, உண்ணா நோன்பு மற்றும் புனித யாத்திரை போன்ற சமயம் சார்ந்த கடமையாகிய சமயவரியைக் குறிப்பிடுகின்றது. ‘“யாமே வழியாவோம்… யாமே ‘வரியும்‘ ஆவோம், மற்றும் யாமே உண்ணா நோன்பாவோம், புனித யாத்திரையும் ஆவோம், மற்றும் புனித மாதமும் ஆவோம், புனித நகரமும் ஆவோம்… ” என இமாம் ஜாஃப்பார்-இ-சாதிக் கூறுகிறார். இமாம்களின் ஸ்தாபனம் குறித்து திரு இ.ஜி. பிரௌன் அவர்களின் சுருக்கவுரை மிகவும் இன்றியமையாததாக உள்ளது: ‘இமாமிய கண்ணோட்டத்தின்படி… உதவி-ஆட்சிக்காவலர் ஸ்தாபனம் என்பது (இமாம்கள், பாதுகாவலர் ஸ்தாபனம் போன்றவை) முற்றிலும் ஆன்மீகமயமான ஒரு விஷயமாகும்; முற்றிலும் இறைவனால் வழங்கப்படுகிறது, முதலில் அவருடைய அவதாரத்தின் வாயிலாகவும், பிறகு அவதாரத்தைத் தொடர்ந்து வருவோராலும் இது வழங்கப்படுகிறது… இறைத்தூதரின் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட வாரிசாக ஷியாக்களின் இமாம் உள்ளார். இவர் எல்லா நிறைவுகளையும், ஆன்மீக வெகுமதிகளையும் பெற்றவர், எல்லா மெய்யன்பர்களாலும் கீழ்ப்படியப்பட வேண்டியவர், இவரது தீர்மானம் இறுதியும், முடிவானதுமாகும், இவரது விவேகம் மனித சக்திக்கு மீறியதாகும், இவரது வார்த்தைகள் அதிகாரப்பூர்வமானவை.
இந்த நூலில், காட்சிகள் விரைவாகக் கடந்து செல்கின்றன. முதலில் இருட்டு நிலவறை, பிறகு கனவு, மற்றும் வாக்குறுதி ஆகியவை:
உறுதியாகவே, உம்மாலும் உமது எழுத்தாணியினாலும் உம்மை யாம் வெற்றி பெறச் செய்வோம்… உமக்கு உதவும் மனிதர்களாகிய — பூமியின் பொக்கிஷங்களை இறைவன் விரைவில் எழச்செய்வார்…
பள்ளிவாசலில் ஹாஜி ஷேய்க் முகம்மது-அலியின் பரபரப்பான தற்கொலையைக் காண்கின்றோம். பிறகு, இறைவனுக்கு மகிழ்வூட்டும் வெண்மையைக் கொண்ட, கடல்கரையோரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரமும் உண்டு… உணர்வு வேறுபாடு அடைகிறது, விருவிருப்பு மாறுபாடு காண்கிறது. ஆன்மீக நிலையென இந்தத் துரிதக் கேள்விகளையும், பதில்களையும் இசை வடிவாக நீங்கள் செவிமடுக்கலாம்.
நேரம் கணிந்துவிட்டதா? இல்லை, அதனினும் மேலாக; அது கடந்தே சென்றுவிட்டது… மனிதர்கள் வீழ்த்தப்பட்டிருப்பதை நீர் காண்கின்றீரா? ஆம், எமது ஆண்டவரின் மீது ஆணையாக… நீர் பார்வையிழந்தவராவீர்… சுவர்க்கம் மர்ம மலர்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது… நரகம் கொழுந்துவிட்டு எரியச் செய்யப்பட்டுள்ளது.
மதபீடங்களின் முனகல்களின் சிந்தனையைத் தூண்டும் வரிகள்:
உனது ஆண்டவரின் அடையாளங்களின் பகலூற்றாகிய, “த” எனும் நிலத்தில்(தெஹரான்) யாம் நடந்துகொண்டிருந்தோம் — அவ்வேளை, மதபீடங்களின் புலம்பல்களையும், இறைவன்பாலான அவற்றின் இறைஞ்சல்களையும் — அவர் புனிதமும், மகிமையும் பெறுபவராக இருப்பாராக — யாம் செவிமடுத்தோம். அவை ஓலமிட்டு… அந்தோ, அந்தோ!… உம்மால் நாங்கள் படைக்கப்பட்டும், வெளிப்படுத்தப்படாமலும் இருந்திருக்கக்கூடுமானால்!
பஹாவுல்லா அவர்களால் இதற்கு முன் குறிப்பிடப்பட்ட, குரானிய வாசகம் நமது ஞாபகத்துக்கு வருகின்றது: ‘இறைவா, எங்களுக்கும் குரல் அளிப்பவரே…‘ பிறகு, ‘பெண்-அரவத்திற்கான‘ பூமியையே அதிரவைக்கும் முன்னிலையணிவிப்பு:
பெண்-அரவமே, நடுநிலையோடு நியாயம் காண்பாயாக! எக்குற்றத்திற்காக இறைவனின் திருத்தூதரின் குழந்தைகளை நீ தீண்டினாய்…?
இது, முகம்மது அவர்களின் வழித்தோன்றல்களாகிய, ‘இரட்டை ஒளிவிடும் தீபங்களின்‘ (இஸ்ஃபாஹான் நகரில் பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்கள் இருவர்) தியாகமரணத்தைக் குறிக்கின்றது; இதற்கு கருத்துக்கள் கூற நாம் மைக்கலேஞ்சலோ அல்லது மில்டனைத்தான் (மேற்கத்திய கவிஞர்கள்) நாடவேண்டும்.
ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் நிலையில் இருப்பவர்கள், எந்த நூலை தங்களுடைய நூலகங்களுக்காக தேர்ந்தெடுப்பது என கேட்பார்கள். இந்த நூலை என் நூலகத்தில் நான் சேர்த்ததற்கான காரணம்: அதன் வாசகங்களின் சௌந்தர்யம், மொழிபெயர்ப்பு மற்றும் வாசகவடிவமைப்பு; அதன் சுருக்கம்; புலமைக் கண்ணோட்டத்தில் அதன் செழுமை — ஆய்வுக்கு அஃது அளிக்கக்கூடிய விஷயங்கள்; அதன் விசாலத்தன்மை — ஏனெனில், இது ஒரு தன்னிச்சையான படைப்பாற்றல்மிக்க காரியமாகவும், தனது சொந்த வடிவ ஐக்கியத்தைக் கொண்டும், அதற்கென தனிப்பட்ட உணர்வைக்கொண்டும் இருந்தபோதிலும் — இது கிட்டத்தட்ட ஒரு பாமாலையாகவும், பஹாவுல்லா அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.
ஆம், இது அவரது முன்னிலையை அடைய நமக்கு உதவுகிறத; ‘உலகம் ஒதுக்கித் தள்ளிய மற்றும் தேசங்கள் கைவிடவும் செய்த அவரிடம் நம்மைக் கொண்டு சேர்க்கின்றது…‘
ஆஃகா நஜப்ஃபீ எங்கே இப்போது? தனது பிரமாண்டமான வட்டத் தலைப்பாகயுடனும், தனது சுருண்ட காலனியுடனும் அவர் இப்போது எங்கே போய்விட்டார்? பஹாவுல்லா இவரது தோழரை அழைத்தது போல், இவர், மலை உச்சியில் காணப்படும் இறுதிச் சொட்டு ஒளி‘ ஆவார் அவர் தனது வெறுப்பையெல்லாம் எங்குதான் கொண்டு சென்றுள்ளார்? எப்படியான போதிலும், இது பஹாவுல்லாவிடமிருந்து நமக்குக் கிடைத்த இறுதியான லௌகீக பரிசாகிய இந்த நூலின் விசேஷ காலமாகும்; அவருடைய எதிரிகள் அவருக்கு விஷமளித்தனர், ஆனால், அவர் அதை தமது அன்பர்களுக்கு அமுதமாக மாற்றிவிட்டார்.
ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீ பகவான் உவாச யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத| அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)
(எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன்)
துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் (दुष्ट निग्रह सिष्ट परिपालन) செய்திட நவயுக அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் தோன்றவேண்டும். இது புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படும் வாக்குறுதி. ஸ்ரீ கிருஷ்ணர் தமது பேருபதேசமாகிய பகவத் கீதையிலும் இதே வாக்குறுதியை வழங்குகிறார்.
கல்கி அவதாரம் குறித்த வாதங்கள் நெடுங்காலமாகவே நடந்துவந்துள்ளன. ஆனால், இத்தோன்றல் குறிப்பாக எப்போது, எப்படி, மற்றும் எங்கு நடக்கும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் பத்தோன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரத்தின் தோற்றம் குறித்து பரவலான எதிர்ப்பார்ப்பு இருந்துள்ளது என்பதை பழைய நாளேடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரியும். சில ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளனர். இவ்விதம் கூறியவர்களுள் வட இந்தியாவின் ராஜநாராயன் ஷட்ஸாஸ்திரி என்பவரும் அடங்குவார். அதே சமயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரம் தோன்றப்போகிறது எனும் தீர்க்கதரிசனத்தையும் பல ஞானிகள் வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் பக்த சூரதாஸர்.
ஓர் அவதாரத்தின் தோற்றம் குறித்து இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற சமயத்தினரும் எதிர்ப்பார்ப்பு கொண்டிருந்தனர். பத்தோன்பதாம் நூற்றண்டில் ஏற்பட்ட அறிவியல் விழிப்புணர்வு மற்றும் தொழில்துறை மேம்பாடுகள் மக்கள் மனதில் பல குழப்பங்களுக்குக் காரணமாயிற்று. தத்தம் சமயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சமய விசுவாசிகள் உலகில் ஏற்பட்ட இவ்விதமான மாற்றங்களுக்கான காரணங்களை அவரவர் சமயங்களில் காண முற்பட்டனர். இவ்விசாரனையிலிருந்து சமய அவதாரங்களின் மீள்தோற்றம் பற்றிய கருத்து மறு உயிர்ப்பு பெற்றது. அவரவர் சமயங்களை ஸ்தாபித்த அவதாரங்கள் மீண்டும் தோன்றப்போகிறார்கள் என்னும் நம்பிக்கை வலுவடைந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த ‘மீள்தோற்ற’ நம்பிக்கைக்கு அடிப்படையில்லாமல் இல்லை. கீதையில் கிருஷ்ணர் தாம் உலகில் தர்மத்தை நிலைப்படுத்திட மீண்டும் மீண்டும் சம்பவிப்பேன் என்னும் அதே தீர்க்கதரிசனத்தை எல்லா சமயங்களிலும் அதனதன் ஸ்தாபகர்கள் வாக்களித்துச் சென்றுள்ளனர்.
இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களில் ‘மீள்தோற்றம்’ குறித்த தீர்க்கதரிசனங்கள் பல உள்ளன. இஸ்லாமிய உலகின் சுன்ன பிரிவினரிடையே இயேசு நாதர் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவார் என்னும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதே போன்று ஷீயா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12-வது இமாமாகிய இமாம் மெஹ்டி 60-ஆம் வருடம், அதாவது ஹிஜ்ரி 1260ல் (கி.பி.1844), பூமியில் மீண்டும் அவதரிப்பார் என்னும் தீர்க்கதரிசனம் உள்ளது. அதே போன்று பல கிருஸ்தவ பிரிவினர்களிடையே விவிலிய குறிப்புகளின்படி கி.பி.1844-இல் இயேசு நாதர் மறுபடியும் இப்பூமியில் தோன்றி விசுவாசிகளை ஒன்றுதிரட்டுவதுடன் சுவர்க்கத்தில் உள்ளது போன்று பூமியிலும் கடவுளின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் என்னும் நம்பிக்கை உள்ளது. கிருஸ்துவ பிரிவுகளில் ஒரு பிரிவினரான “Seventh Day Adventists” ஒரு படி மேலே சென்று இயேசு நாதரின் மறுவருகை 21 மார்ச் 1843லிருந்து 21 மார்ச் 1844க்குள் நடைபெறவேண்டுமென அறுதியிட்டுக் கூறினர். இது போக, யூத மதத்தினரிடையிலும் ‘மீட்பாளர்’ அதாவது ‘messiah’ மறுபடியும் தோன்றுவார் என்னும் நம்பிக்கையும், புத்த சமயத்தில் புத்தர் மீண்டும் ‘மைத்திரேயி அமிதபா’ எனும் பெயரில் தோன்றுவார் என்னும் நம்பிக்கையும் பார்ஸி மதத்தினரிடையேயும் தங்கள் அவதாரமான ஸாராதுஸ்ட்ரா, ‘ஷா பாஹ்ரம்’ என்னும் பெயரில் பூமியில் தோன்றுவார் என்னும் தீர்க்கதரிசனமும் உள்ளது. இது போக நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் என கணக்கிலடங்காதோர் அப்போது கூறினர், மற்றும் இப்போதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் நடக்கும் அதே வேளை உலக நிலவரம் முதலாம் உலக யுத்தம் பிறகு இரண்டாம் உலக யுத்தம் என மிகவும் மோசமான போர்களைத் தாண்டி வந்துள்ளது. ஆயுதப் போர்கள் நின்றுபோனாலும் இன்று உலகை வேறு விதமான சமூக மற்றும் ஆன்மீக ரீதியான போர்கள் உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று உலக நிலவரத்தை காணும் எவருமே உலகிற்கு ஒரு வழிகாட்டி இப்போது தேவையில்லை, தற்போது இருக்கும் முறைகளே போதுமானவை எனக் கூறிடமுடியாது. முன் எப்போதையும் விட இப்போதுதான் ஒரு வழிகாட்டியின் தேவை இன்றியமையாததாக இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.
சமயங்களின் படிப்படியான தோற்றம்
ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீ பகவான் உவாச இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானகமவ்யயம்| விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே’ப்ரவீத்|| (4-1)
(அழிவுறாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு போதித்தேன், விவஸ்வான் மனுவுக்கு போதித்தான், மனு இக்ஷ்வாகுவிற்கு போதித்தான்)
சமயங்கள் எப்போதுமே தன்னிச்சையாக தோன்றுவதில்லை. அவை ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் செயல்முறையின் (process) தனிக் கூறுகளாகும். அவை காலம், இடம், சமூக சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்தே வெளிப்படுகின்றன. அதாவது, அவை கடவுள் மானிடத்திற்காக வகுத்திருக்கும் திட்டத்தின் படிப்படியான வெளிப்பாடுகள் எனக் கூறலாம். புராணங்களின் கூற்றின்படி விஷ்ணு காலத்திற்குக் காலம் பல அவதாரங்களை எடுத்து வந்துள்ளார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அவற்றுள் கல்கி அவதாரம் தவிர்த்து முக்கியமானவை ஒன்பது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, கிருஷ்ண, புத்தர் ஆகிய அவதாரங்கள் என வரிசைப்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் எட்டாவது அவதாரம் கிருஷ்ணரின் சகோதரரான பலராமர் எனவும் ஒன்பதாவதாக கிருஷ்ணர் எனவும் வரிசைப்படுத்துகின்றனர். இந்த வரிசையை காணும்போது இதில் ஒரு பரிணாம வளர்ச்சி, ஒரு படிப்படியான வளர்ச்சி இருப்பதை நம்மால் காணமுடிகிறது. நீரில் மட்டுமே வாழும் மீன், பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, நிலத்தில் மட்டும் வாழும் வராகம், பாதி மனிதனும் பாதி மிருகமுமான நரசிம்மர், மனிதர் ஆனால் முழுமையான உருவத்தில் இல்லாத வாமனர், மிகவும் ஆக்ரோஷமான பரசுராமர், முழுமையான நற்குணங்கள் நிறைந்த இராமர் என ஒரு விதமான படிப்படியான வளர்ச்சியை, ஒரு செயல்முறையை நம்மால் காண முடிகிறது. அதே போன்று கடந்த 6000 வருடங்களாக ஆதாம் (Adam) முதல் உலகில் தோன்றியுள்ள கடவுளின் அவதாரங்களும் சுமார் 1000 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் தோன்றி மக்களை ஒரு நிலையிலிருந்து வேறோர் உயர்ந்த நிலைக்கு, கடவுள் மனிதனுக்காக எண்ணியிருக்கும் இலக்கிற்கு, தங்களின் போதனைகளின் மூலமாக உயர்த்தியிருக்கின்றனர். சமய வரலாறுகளைச் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் இது புலப்படும். சமயங்களை, அவற்றின் ஆன்மீக போதனைகள் தவிர்த்து சமூகவியல் ரீதியாக ஆராயும் போது தனிமனிதன், குடும்பம், சமூகம், சமுதாயம் என சமய போதனைகள் காலத்திற்கு காலம் உயர்ந்துகொண்டே செல்வதை நம்மால் காணமுடிகிறது. இக்கால அவதாரமான பஹாவுல்லா உலக ஒற்றுமை, சமயங்களுக்கிடையே ஒற்றுமை, உலகப் பொது அரசு, உலகப் பொது மொழி என உலக ரீதியிலான போதனைகளை வழங்கிச் சென்றுள்ளார்.
(இவ்வாறு கலியுகத்தில் மக்கள் அதர்மவாதிகளான பின் தர்மத்தை உறுதிபடுத்திட பகவான் அவதரிப்பார்)
பூமியில் எப்போதெல்லாம் தர்மம் தாழ்வுற்று அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் ஓர் ஆன்மாவை பூமிக்கு அனுப்புகின்றார் என கீதையில் கிருஷ்ணர் வாக்களித்துள்ளார். ஆனால், அதற்காக பூமியில் உண்மையிலேயே தர்மம் அழிந்துவிட்டதென பொருள்படாது. இதன் கருத்தாக்கம் என்னவென்றால், மனிதன் ஒரு நிலையிலிருந்து வேறோர் நிலைக்கு, ஆன்மீக ரீதியிலும், சமூக ரீதியிலும், மேம்பாடு அடைந்தும், அவன் அதற்கப்பால் செல்வதற்கு நடப்பிலுள்ள சமய போதனைகளுக்கு வலுவில்லாததால் மேற்கொண்டு ஒரு புதிய வழிகாட்டி தேவைப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். ஒரு வழிகாட்டி இல்லாத நிலையில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதற்கிணங்க மனிதர்களின் வாழ்க்கை அமைந்துவிடும். இன்று உலகில் நடக்கும் கோரங்கள் இதற்கு நல்ல உதாரனமாகும்.
ஒவ்வொரு சமய நம்பிக்கையிலும் அதன் ஸ்தாபகர் மறுபடியும் பூமியில் அவதரிப்பார் எனும் தீர்க்கதரிசனம் இருக்கின்றது மற்றும் அவர்கள் கல்கி, மைத்ரேயி அமிதபா, ஷா பாஹ்ரம், யூதர்களின் மெஸ்ஸாய்யா, கடவுளின் ஒளியில் இயேசு நாதர், இமாம் மெஹ்டி எனும் நாமங்களில் இவர்கள் அனைவரும் மீண்டும் அவதரிக்கப்போவதாக அவரவர்களின் சமய திருவாக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டோம். இங்கு ஒரு கேள்வி மனதில் உதிக்கக்கூடும். இவர்கள் அணைவரும் உலகில் அவரவரின் விசுவாசிகளின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப தனித்தனியாகத் தோன்றப்போகிறார்களா அல்லது கடவுள் ஒருவரே எனும் அடிப்படையில் இவர்கள் அணைவரும் ஒரே ரூபத்தில் உலகில் தோன்றப்போகிறார்களா?
ஒரு காலத்தில் பூகோள ரீதியிலும், இன ரீதியிலும், மொழி ரீதியிலும், பலவாறாகப் பிரிந்துகிடந்த மனுக்குலம் இன்று அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போன்றவற்றால் வேறு வழியின்றி மிகவும் அணுக்கப்பட்டுக்கிடக்கின்றது. மக்கள் கூட்டங்கள் பெரும்பாலும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் பெரும் பெரும் எண்ணிக்கையில் தங்கள் நாடுகளை விட்டு பொருளும் பாதுகாப்பும் தேடி வெவ்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். ஆகவே வெவ்வேறு சமய விசுவாசிகளின் அவதாரங்கள் தனித்தனியே வந்து இவர்களுக்கு காட்சி தரப்போகிறார்களா என்பதைக் கற்பனை செய்வது கூட இயலாது. உலகில் பிரிவினைக்கான காரணங்கள் வெகுவாக இருக்கின்றன அதில் சமய ரீதியில் மேலும் பிரிவினைகள் தேவையில்லை. ஆகவே, இந்த அவதாரங்கள் யாவரும் குறிப்பிடுவது ஒருவரையே என்பது தெளிவு.
இப்போது இந்த அவதாரம் தோன்றப்போவது எப்போது என்பதை முதலில் காண முற்படுவோம். அவதாரம் தோன்றும் காலத்தை ஓரளவிற்கு நம்மால் கணித்திட முடியும். இதற்கான ஆதாரங்களை எல்லா சமயங்களின் புனித நூல்களிலும் காணலாம். உதாரணமாக ஹிஜ்ரி 1260 மற்றும் கி.பி.1844 வருடங்களை குறிப்பிடலாம். இரண்டும் ஒரே வருடத்தைதான் குறிப்பிடுகின்றன.
மக நட்சத்திரத்திலிருந்து பூர்வஷாடாவுக்கு எப்பொழுது சப்தரிஷிகள் செல்கிறார்களோ அப்பொழுது நந்த அரசர்களின் காலத்திலிருந்து கலி தன் முழு வலுவை அடையும்
நந்த அரசர்களின் காலத்தில் கலியுகம் தனது உச்சியினை, அல்லது தனது மத்திய நிலையை அடைந்து தொடர்ந்து மேலும் வலிமை பெறும் என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நந்தர்கள் கி.மு. சுமார் 600களிலிருந்து 300கள் வரை இன்றயை வட இந்தியாவில் ஆட்சி புரிந்தனர். இது கலியுகத்தில் சுமார் 2400 வருடங்கள் சென்ற பின் நடந்ததாகும்.
கிருஷ்ணரின் இறப்பிலிருந்து புத்தரின் தோற்றம் வரை ஏறத்தாழ 2400 ஆண்டுகள் ஆகின்றன. அதே போன்று புத்தரின் தோற்றத்திலிருந்து 2400 ஆண்டுகள் 19ம் நூற்றாண்டில் முடிகின்றன. எவ்வகையில் பார்த்தாலும் இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் குறிப்பிடுவது ஒருவரையே என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.
அவதாரங்களின் இரண்டு நிலைகள்
பகவத் கீதை ஸ்ரீ பகவான் உவாச அஜோ’பி சன்னவ்ய்யாத்மா பூதானாமீஷ்வரோ’பி சன்| ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாம்யாத்மமாய்யா|| (4-6)
(பிறப்பும் இறப்பும் இல்லாமல், உயிரினங்களுக்கெல்லாம் ஈஷ்வரனே எனினும், எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.)
கடவுளின் அவதாரங்கள் மனித பிறப்பு எடுக்கும்போது அவர்கள் மனிதநிலையில் ஒருபுறமும் தெய்வீக நிலையில் மறுபுறமுமாக செயல்படுகின்றனர். மனிதநிலையில் அவர்கள் பிறக்கின்றனர், பூமியில் எல்லா மனிதர்களைப்போலவே வாழ்கின்றனர் பிறகு காலம் கனிந்தவுடன் மனிதர்களைப்போலவே மரணமெய்துகின்றனர். கீதையில் பகவான் அல்லது கடவுளின் நிலையில் கிருஷ்ணர் அர்ஜுனனோடு உரையாடுகிறார் என்பதால் கிருஷ்ணர் சம்பந்தமான அத்தியாயங்கள் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என ஆரம்பிக்கின்றன. இது குறித்து கடவுள் அவதாரமான பஹாவுல்லா: “எனது உறவை நான் ஆழ்ந்து சிந்திக்கையில் படைப்பினங்கள் யாவற்றிடமும் ‘மெய்யாகவே யாமே கடவுள்’ என இயம்பிட நான் உந்தப்படுகிறேன்; எனது சொந்த நிலைதனை நான் கருத்தில் கொள்ளும்போது, அந்தோ நான் என்னை மண்ணிலும் கீழானவனாகக் காண்கிறேன்!” என கூறுகின்றார்.
(கிருத, திரேதா, துவாபர, மற்றும் கலி என்பன சதுர்யுகங்களாகும். 12,000 திவ்ய வருடங்களை இதில் கவனமாக நிரூபிக்கவும். நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று ஆயிரம் வருடங்கள் இவற்றிற்கு.)
கிருஷ்ணாவதாரமும் கல்கி அவதாரமும் கலியுகத்தோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணர் மறைந்த அடுத்த கணமே கலி பிறந்தது, அதன் முடிவில் கல்கி அவதாரம் உண்டாக வேண்டும் என்பது புரானங்களின் கூற்று. ஸ்ரீ கிருஷ்ணர் கி.மு.3102ல்[1] விண்ணேற்றம் அடைந்தார் என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அவர் விண்ணேற்றம் அடைந்த அடுத்த கணமே கலி பிறந்தது என புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவர் மீண்டும் கல்கியாக அவதரித்து சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார் என்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுகங்கள் எனும்போது, நான்கு யுகங்கள், அதாவது சத்திய, துவாபர, திரேதா மற்றும் கலி என நான்கு யுகங்களும் அவற்றின் சந்தி மற்றும் சந்தியாம்ச காலங்கள் சேர்ந்து 12,000 மானிட வருடங்கள் ஒரு சதுர்யுகமாகின்றன. ஆனால் கலியுகத்திற்கு 4.32,000 ஆண்டுகள் என்பது பரவலான நம்பிக்கையாகவும் இத்தகைய நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு கணிப்பு எவ்வாறு ஏற்பட்டிருக்கவும் கூடும் என்பதை காண்போம். சுலோகங்களில் எண்கள் எழுதப்படும்போது அவை ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என எழுதப்படாமல் அவை நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று என எதிர்வரிசையில் எழுதப்படுவது மரபாகும். அதே வேளை யுகங்களை வரிசையாக எழுதும்போது சத்ய, த்வாபர, த்ரேதா மற்றும் கலி என நேர்வரிசையாகவே எழுதப்படும். இரண்டையும் ஒன்று சேர்த்து எழுதும்போது சத்ய, த்ரேதா, த்வாபர மற்றும் கலியுகங்களுக்கு நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஓர் ஆயிரம் வருடங்கள் என ஸ்லோகங்களில் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக சத்திய யுகத்திற்கு 4000 வருடங்கள் மற்றும் கலியுகத்திற்கு 1000 வருடங்கள் எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ‘அங்கானாம் வாமதோ கதி’ (இங்கு ‘வாம’ என்பதற்கு ‘எதிரான’ என்பது பொருளாகும்) என்னும் விதியை கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட தவறு என பல பண்டிதர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கலியுகத்திற்கு 1200 வருடங்கள் வருவதைக் கண்டு காலக்கணிப்பு சரிவராததால் திவ்ய (சூரிய) வருடங்களைத் தைவ்ய (தெய்வ) வருடங்கள் என வியாக்கியானம் செய்து அதை 1200×360=4,32,000 மானிட வருடங்கள் என கணித்துள்ளனர். (360 திவ்ய, அதாவது மானிட வருடங்கள் 1 தேவ வருடம் என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே மனுஸ்மிருதியில் 4000 வருடங்கள் கழித்து கிருதயுகம் என அத்தியாயம் 1 – 68 ல் குறிப்பிடப்பட்டுள்ளது) யுகங்களின் கால வரையறை பின்வருமாறு திவ்ய (சூரிய) வருடங்களாக இருக்கவேண்டும.
யுகம்
சந்தி
காலம்
சந்தியாம்சம்
மொத்தம்
சத்திய
100
1000
100
1,200
திரேதா
200
2000
200
2,400
துவாபர
300
3000
300
3,600
கலி
400
4000
400
4,800
சதுர்யுகம்
12,000
கலியுகத்தில் நடக்கவிருக்கும் சில சம்பவங்கள் மற்றும் நடப்பு உலக நிலை
(இவ்விதமாக தொடர்ச்சியாக இந்த யோகத்தை இராஜரிஜிகள் உணர்ந்திருந்தனர். ஆனால், காலம் செல்ல செல்ல இந்த யோகம் நலிவடைந்தது.)
பல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகளும் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:
• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள். • ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள். • அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள் • சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானிகள் எனப் போற்றப்படுவர் • அகதிகளாகப் பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள் • தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவர் • தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள் • எவரையுமே நம்ப முடியாமல் போகும் • மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள் • பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதைத் தாண்டமாட்டர்கள் • பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள் • இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள் • மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா. • வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள் • பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள் • கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள் • செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணக்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் • ஆட்சித் தலைவர்கள் மக்களைக் காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களைப் பறித்துக்கொள்வார்கள் • நீர் கிடைக்காமல் போகும் • விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்
மேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்களே ஆகும். பல புராணங்களில் கலியுகத்தில் மனிதர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலை குறித்த பன்மடங்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாது. புராணங்கள் குறிப்பிடாதவையாக, கடந்த சில நூற்றாண்டுகளாகப் புராணங்கள் கூட எதிர்ப்பார்க்காத அளவு, உலகில் நாசங்கள் பெருகியும் நடந்தும் உள்ளன. உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களும் அதன் விளைவாக உலகில் ஏற்பட்ட நாசங்களைக் குறிப்பிடலாம். அரசர்களின் இராஜ்யங்கள் கவிழ்ந்து உலகில் மக்களாட்சி முறை ஏற்பட்டு, அதுவும் சில வேளைகளில் கவிழ்ந்து கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதிக்கம், சர்வாதிகார ஆட்சிமுறைகள், சமயச்சர்வாதிகார ஆட்சிமுறைகள் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். மேலும் ஐரோப்பாவில் பிளேக் நோயினாலும் பிற நோய்களினாலும் இயற்கைப் பேரிடர்களாலும் மக்கள் கோடிக்கணக்கில் அழிவுற்றதையும் இங்குக் குறிப்பிடலாம். முதலாம் உலக யுத்தம் முடிந்த சில வருடங்களில் இன்ஃபுலுவென்ஸா நோயினால் சுமார் 10கோடி மக்கள் மாண்டனர். இன்று மத்திய கிழக்கில் சிறிய பொறியினால் கூட பெரும் போர்த்தீ வெடிக்கும் அபாயத்தையும் இங்கு குறிப்பிடலாம். கலியுகத்தின் லக்ஷனம் இவ்வாறாகவே இருக்கின்றது.
(சந்திரனும் சூரியனும் அதே போன்று குருவும் ஒரே ராசியில் ஒன்றுகூடும் போது அது கிருத யுகம் ஆகும்.)
கலியுகம் எப்போது முடிந்தது அல்லது முடிந்திருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். கிருஷ்ணர் மறைந்தவுடன் கலியுகம் தோற்றம் கண்டது எனவும் கலியுகத்திற்கு பொதுவாக 4,32,000 வருடங்கள் தவறான கணக்கு எனவும், அதற்கு 4800 வருடங்களே எனவும் குறிப்பிட்டுள்ளோம். கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டுமானால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா? எல்லா வகையிலும் கலியுகத்திற்கு 4800 வருடங்களே என்பது தர்க்க ரீதியில் ஏற்புமிக்க ஒன்றாக இருக்கின்றது. அப்படி ஏற்றுக்கொண்டோமானால், கலியுகம் (4800-3102) கி.பி.1698லேயே முடிவுக்கு வந்திருக்கவேண்டும் எனப் பொருள்படுகின்றது. 1200 வருடங்களான சத்திய யுகம் நடப்பிற்கு வந்திருக்கவும் வேண்டும் மற்றும் சத்திய யுகத்தில் இதுவரை 300 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டிருக்கவும் வேண்டும். பகவத் கீதையில் கிருஷ்ணர் மனிதர்களிடையே தர்மம் நலிவுறும்போது யுகத்திற்கு யுகம் தோன்றுவேன் என கூறியுள்ளார். கலியுகத்தின் முடிவும் சத்திய யுகத்தின் ஆரம்பமும் கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் கல்கி எப்போது தோன்றுவார் என்பது குறிப்பாக எழுதப்படவில்லை. யுகங்களின் ஆரம்பம் அல்லது முடிவோடு அவதாரங்களின் தோற்றத்தைச் சம்பந்தப்படுத்த முடியாது என்னும் ஒரு வாதமும் உள்ளது. உதாரணமாக இராமர் சுமார் கி.மு.5000ல் தோன்றியதாக பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், அதே பஞ்சாங்க கணிப்புப்படி துவாபர யுகம் ஆரம்பித்ததோ கி.மு. (3102+3600) 6702-இல். அதாவது துவாபர யுகம் ஆரம்பித்து சுமார் 1700 ஆண்டுகளுக்கு பிறகே இராமர் அவதரித்துள்ளார்.
(சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தாராக விளங்கும் விஷ்ணுயாசர் என்பவரின் இல்லத்தில் கல்வி தோன்றுவார். யுகசந்தியில் கெட்டகுணங்கள் மேவிய காலத்தில் ஜகத்பதியான கல்கி விஷ்ணுயாசர் எனும் நாமத்தோடு ஜனனம் காண்பார்.)
புரானங்கள் கிருஷ்ணர் கல்கி விஷ்ணுயாஷாவாக கலியுகத்தின் முடிவில் மறுபடியும் அவதரிப்பார் என கூறுகின்றன. ஆனால், குறிப்பாக இது எப்போது நடக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை. 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கலியுகத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பது பரவலாக விவாதிக்கப்பட்டது. சிலர் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறினர். இவர்களுள் ஒருவர் பண்டிதர் ராஜநாராயன் ஷட்சாஸ்திரி என்பவர். இவர் தமது ‘சேதாவனி’ எனும் பத்திரிக்கையின் 1924-ஆம் பிரதியில் பக்தியோகத்தின் சாதனையால் கல்கி அவதாரம் எங்கோ தோன்றிவிட்டது என தமக்குத் தெரியவந்துள்ளது என எழுதியுள்ளார். கலியுகத்திற்கு 4,32,000 வருடங்கள் கொடுத்திருப்பது தவறு, அதற்கு உண்மையில் 4800 திவ்ய வருடங்களே என இவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நூல் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் 8 முறை பிரசுரிக்கப்பட்டும் உள்ளது. கிருஷ்ணர் மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகாவில் ஆட்சி செலுத்தினார். ஆனால் அவருடைய மறுவருகை இதே போன்று அதே இடங்களிலும் நடக்கப்போவதில்லை. அவர் தாம் மறுபடியும் தோன்றுவேன் எனப் பொதுவாக கூறினாலும் உலகில் எங்கே தோன்றுவார் என்பதைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் அவர் இந்தியாவிற்கு வெளியிலும் தோன்றலாம் என்பதற்கு புராணங்களிலும் பிற மூலாதாரங்களிலும் பல அடிப்படைகளைக் காணலாம்.
(மகா யோகபலம் பொருந்திய தேவாபியும் மருவும் கலாபக்கிராமத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் கலியுகத்தின் இறுதியில் வெளிவந்து ஆயிரம் வருடங்கள் கொண்ட சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார்கள்.)
(விஷ்வரூப தரிசனத்தின்போது: ஆதித்யர்களையும்; வசுக்களையும்; அஸ்வினிகள் இருவரையும்; மருத்துக்களையும்; இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களையும் பாரதா, பார்.)
ஸ்ரீமத் பாகவதத்தில் கலியுகம் முடிந்தவுடன் சத்திய யுகத்தைச் சந்திரவம்சத்தை சார்ந்த ராஜா தேவாபியும், இக்ஷ்வாகு வம்சத்தை சார்ந்த ராஜா மருவும் தங்களின் யோக பலத்தினால் பகவானின் ஆணையால் வெளிவந்து 1000 வருடங்களான சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார்கள் என விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. தேவாபி சந்திரவம்சத்தினர், ராஜா மரு சூரிய வமசத்தினர். இவர்கள் இருவரும் கடவுளின் அவதாரங்களேயன்றி வேறு யாரும் இலர். கல்கி மற்றும் மரு என்பதெல்லாம் பெயர்களே அன்றி அவை வெவ்வேறு மனிதர்களைக் குறிப்பிடுவன அல்ல. இதே போன்று எல்லா சமயங்களிலும் மூல அவதாரத்தோடு முன்னோடி அவதாரம் ஒருவர் தோன்றுவது வழக்கமாகும். உதாரணமாக கிருஸ்துவ சமயத்தில் முதலில் யோவான் (John the Baptist) தோன்றினார் பிறகு இயேசு நாதர் தோன்றினார். இஸ்ரேலின் சரித்திரத்திலும் சரி உலக சரித்திரத்திலும் சரி இதே போன்று இரு தெய்வ அவதாரங்கள் தோன்றுவார்கள் என்பது யூதர்களின் சமயவழக்குகளில் உள்ள ஒரு நம்பிக்கையாகும். கிருஷ்ணர் காலத்திலும் அவருக்கு துணையாக பலராமர் இருந்தார் மற்றும் அவரும் விஷ்ணுவின் ஓர் அவதாரம் எனக் கருதப்படுகிறார். மோஸஸ் காலத்திலும் அவருக்கு துணையாக ‘எர்ரன்’ என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசி இருந்தார். இக்காலத்தில் பஹாய் வரலாற்றிலும் ‘பாப்’ என்பவர் பஹாவுல்லவிற்கு முன்னோடியாக, ஒரு தனி அவதாரமாகத் தோன்றினார். இவ்விரட்டை அவதாரங்கள் குறித்து பைபிலின் புதிய ஏற்பாட்டின் நான்கு கோஸ்ப்பல்களிலும் ‘ஒரே மஞ்சத்தில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘இரு பெண்கள் (மா)வரைப்பார்கள் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘வயலில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ என எழுதப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அவதாரங்கள் தோன்றுவார்கள் அதில் ஒருவர் சில காலங்களுக்கே இருப்பார் மற்றவர் தொடர்ந்திருப்பார் என்பதாகும். (பாப் அவர்கள் 1850-இல் மரண தண்டனைக்கு ஆளாகி 750 துப்பாக்கிகளால் சுடப்பட்டு இறந்தார், மற்றும் பாப் அவர்களால் வாக்களிக்கப்பட்ட பேரவதாராம் தாமே என பஹாவுல்லா 1863-இல் அறிவித்தார்)
கல்கி அவதாரம் நடக்கக்கூடிய நேரம்
கடவுள் அவதாரங்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நேரடியான வார்த்தைகளால் விவரிப்பதில்லை. உதாரனமாக தமது மறுவருகை தர்மம் நலிவுற்று அதர்மம் ஓங்கும் போது நடக்கும் என கிருஷ்ணர் பொதுவாகக் கூறுகிறார். அது எப்போது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. (இயேசு நாதரின் மறுவருகை குறித்தும் இதே ரீதியில்தான் தீர்க்கதரிசனம் வழங்கப்பட்டுள்ளது. இருளில் திருடனைப்போல் வருவேன் என அவர் கூறியுள்ளார்.) கிருஷ்ணரின் மறுவருகை குறிப்பாக எப்போது நடக்கும் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? முதலாவதாக நடப்பு உலகச் சூழ்நிலையை வைத்து ஏறக்குறைய எப்போது நடக்கும் அல்லது நடக்க வேண்டும் என்பதை நாம் யூகிக்கலாம். இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை என எவருமே கூறிட முடியாது. உலக நிலை அத்தகைய படுமோசமான நிலையில் இருக்கின்றது. அடுத்து நடப்பில் உள்ள காலம் குறித்த கணிதக் கணக்குகளில் அவதாரம் உதிக்க வேண்டிய குறிப்பான நேரம் எங்காவது மறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய முயலலாம். கடவுளின் அவதாரத்தை கண்டுகொள்ளும் திறனை கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே வழங்கியுள்ளார் என பஹாவுல்லா தமது திருவாசகங்களில் கூறியுள்ளார்.
“உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து மதித்துணர முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும். அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்?”
மனம் பரிசுத்தமாக இருந்தால் நாம் கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளலாம்.
உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
கடந்த மூன்று நூற்றாண்டுகளும் உலக வரலாற்றிலேயே ஒப்பிலா நூற்றாண்டுகளாகும். மனிதனின் சீரான வாழ்வு முற்றிலும் தலைகீழாக மாறிய காலகட்டம் இது; புராணங்களில் கூறப்பட்டுள்ள கலியுக சம்பவங்கள் அப்படியே நடந்தேறிய காலம் இது. அது போக அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றமும் அதன் விளைவான கணக்கிலடங்கா கண்டுபிடிப்புகள்; உலக அரசியலில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள், ஓர் உலகளாவிய அமைப்பான ஐ.நா. நிறுவப்பட்டது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். சமய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் வியப்பளிப்பனவாக இருக்கின்றன. மனுஸ்மிருதியில் மனு விதித்திருந்த வர்ணாசிரம விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறைந்துகொண்டே வருகிறது. பிராமனர்கள் யார், க்ஷத்திரியர்கள் யார், வைசியர்கள் யார் மற்றும் க்ஷூத்திரர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியாத நிலை வளர்ந்துவருகிறது. விவேகானந்தர் சத்திய யுகத்தில் ‘பிராமனர்கள்’ மட்டுமே இருப்பார்கள் என கூறியுள்ளார். இங்கு பிராம்மனர்கள் என்பது ‘கடவுள் வழியில் நடப்பவர்கள்’ எனப் பொருள்படும்.
இத்தகைய மாற்றங்களுக்கான காரணம் என்ன?
உலகில் மக்களின் வாழ்க்கை முறையில் கடந்த சில நூற்றாண்டுகள் வரை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆனால், பத்தொன்பதாம் நூற்றண்டு முதல் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் தலையை கிறுகிறுக்க வைப்பதாக உள்ளது. தட்டையாய் படிந்த நிலையில் இருந்த உலக வாழ்வுமுறை அதுமுதற்கொண்டு திடீரென செங்குத்தாக உயர்ந்து சென்றது; இன்று வரை அவ்வாறே உயர்ந்து கொண்டும் செல்கிறது. புதிய சகாப்தம் ஏதும் ஆரம்பித்துள்ளதா? இதற்கு தூண்டுகோலாக இருந்தது என்ன?
பின்னுரை
கிருஷ்ணர் மறைந்த வருடம் கி.மு.3102[1] என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாகும். கலியுகத்திற்கு 4800 திவ்ய வருடங்களே என்பதை ஏற்றுக்கொண்டோமானால் கலியுகம் கி.பி.1698லேயே முடிவடைந்திருக்க வேண்டும். அவ்வாறு அது கி.பி. 1698ல் முடிவடைந்தருந்தால் நாம் அது முதற்கொண்டு சத்திய யுகத்தில் வாழ்கின்றோமா? ஆனால் அது அவ்வாறல்ல. பஹாய் சமயத்தவர்களைப் பொறுத்த வரை சத்திய யுகம் பிறந்தது கி.பி.1844இல். (இதன் முழு விவரங்களைக் காண https://prsamy.wordpress.com/2016/10/29/1844-எல்லா-சமயங்களுக்கும்-மை/ செல்லவும். இறை அவதாரங்கள் உலகில் தோன்றும் காலங்களில் உலகில் அவதாரங்களின் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் போன்று பலர் தோன்றுவர். இவர்கள் ஆன்மீக ரீதியில் அவதாரங்களின் தோற்றத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்; அது குறித்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உரைப்பார்கள். அவர்களின் கூற்றுகளை இப்போது காண்போம்:
சந்த் சூரதாஸ் (15வது நூற்றாண்டு)
வடநாட்டைச் சார்ந்த சந்த் சூரதாஸர் குறிப்பிட்ட காலம்: சூரதாஸர் பிறப்பிலேயே கண்பார்வையற்றவராக இருந்தார். 6 வயதிலேயே தமது பெற்றோரை பிரிந்து வாழ்ந்தார். சிறந்த கிருஷ்ண பக்தரான இவர் தமது ‘ஸூர்ஸாகர்’ எனும் தொகுப்பிற்கு சுமார் 1,00,000 பாடல்கள் இயற்றியதாக கூறப்படுகிறது ஆனால், அவற்றில் சுமார் 8000 பாடல்களே எஞ்சியுள்ளன. இவர் விக்ரம சம்வத் 1900-க்கு மேல் உலகில் ஒரு பெரும் மாற்றம் உண்டாகும் என கூறியுள்ளார். வி.ச. 1900க்குச் சமமான ஆங்கில வருடம் கி.பி. 1844 ஆகும்.
வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கர் (கி.பி.1823 – 1873)
திருவருட்பா
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே
என தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். ஆம், கடவுள் தாமே உலகில் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார், அதற்கான நேரமும் இதுதான் என்பது வள்ளலாரின் வாக்கு. மேலும் கலியுகத்திற்குச் சுமார் 5000 வருடங்களே உள்ளன எனவும் இவர் கூறியுள்ளார்.
இயேசுநாதரின் மறுவருகை குறித்து விவிலியத்தின் தானியேல்
இயேசுவின் மறுவருகை குறித்து அவருடைய சிஷ்யர்கள் வினவியபோது இயேசுபிரான் அவர்களை பழைய ஏற்பாட்டின் தானியேலின் நூலைப் பார்க்கும்படி கூறினார்.
தானியேல் 8:13 பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.
தானியேல் 8:14 அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான். தானியேல் 8:24 அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
அதாவது, புனிதஸ்தலமான ஜெருசலம் எப்போது பரிசுத்தப்படுத்தப்படும் என ஒரு தேவகணம் கேட்க அதற்கு தானியேலின் பதிலே மேல்காணப்படுவது. ஜெருசலத்தை மறுநிர்மாணம் செய்திட அர்டிஷர் என்னும் பெயர் கொண்ட பாரசீக மன்னன் கி.பி.457-இல் உத்தரவிட்டான். இந்தத் தேதியிலிருந்து 1844 வரை சரியாக 2300 ஆண்டுகளாகும். மேலே இராப்பகல் என குறிப்பிடப்படும் ஓர் இராப்பகல் என்பது மனிதர்களின் ஒரு வருடத்தைக் குறிக்கும். தானியேலின் தீர்க்கதரிசனம் சரியாக முற்றுப்பெற்றது.
வில்லியம் மில்லர்
இந்த வரிசையில் அடுத்து முக்கியமானவராக உள்ளவர் கிருஸ்தவ சமயத்தில் வில்லியம் மில்லர் (கி.பி.1782 – 1849). இவர் இயேசு நாதர் வெகு விரைவில் அவதரிக்க போகிறார் என ஐக்கிய அமெரிக்காவில் போதித்தார். இவரது கணிப்புப்படி இயேசு நாதரின் மறுவருகை 1844-இல் கண்டிப்பாக நடக்கும் என இவர் உறுதியாக நம்பினார்.
ஷேய்க் அஹ்மட்-இ-அஹ்ஸாயி (1753 – 1826)
அடுத்து மத்திய கிழக்கில் ‘மறுவருகை’ குறித்து போதித்தவர்களில் ஷேய்க் அஹ்மட் உள்ளார். இவர் அரேபியாவின் வடகிழக்கில் பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்தவராவார். இவர் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுவோர் எவ்வாறு அதன் ஐக்கியத்தை நாசம் செய்து, அது தன் ஆற்றலை இழக்குமாறு செய்து, அதன் நோக்கங்களை பிறழ்வுறச் செய்தும் அதன் புனித நாமத்தைத் தாழ்த்திடுகின்றனர் என்பதைக் கண்டார். ஷீயா வர்க்கத்தினரிடையே காணப்பட்ட ஊழல்களையும் போராட்டங்களையும் கண்டு அவரின் ஆன்மா வேதனையடைந்தது… பாரசீக வளைகுடாவின் தெற்கு திசையில் உள்ள பாஹ்ரேய்ன் தீவில் வாழ்ந்த தமது குடும்பத்தினரை பிரிந்து… ஒரு புதிய அவதாரம் ஒன்றின் வருகையை முன்னறிவிக்கும் இஸ்லாமிய சாஸ்திரங்களில் அடங்கியுள்ள மர்மங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் மனதில் இஸ்லாம் சமயத்தில் எத்தகைய தீவிரம் நிறைந்த மறுசீரமைப்பும் இவ்வழிதவறிய மக்களுக்கு புத்துயிரளிக்கப் போவதில்லை என்னும் உறுதியான நம்பிக்கை மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. இஸ்லாமின் திருமறைகளில் பதிக்கப்பட்டிருக்கும் மற்றும் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் புதியதும் ஒரு தன்னிச்சையானதுமான ஒரு கடவுளின் வெளிப்பாட்டினைத் தவிர வேறெதுவுமே நலிவுறும் அச்சமயத்தின் நற்பேற்றை மறுவுயிர்ப்பித்து அதன் தூய்மையைப் புதுப்பிக்கவும் முடியாது… என அவர் அறிந்தார். இவர் இந்த ரீதியிலேயே மக்களுக்குப் போதித்தார். இவரது மறைவிற்குப் பிறகு இவருடைய பெயரால் ‘ஷேய்க்கிகள்’ என்னும் சமயப்பிரிவினர் உருவாயினர். ஷேய்க் அஹ்மட் தமது வாழ்நாளிலேயே சைய்யிட் காஸிம் என்பவரைத் தமது வாரிசாக நியமித்தார்.
ஸையிட் காஸிம் (1793 – 1843)
ஷேய்க் அஹ்மட்டின் வாரிசாகவும் விரைவில் தோன்றக்கூடிய புதிய கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளும் பொறுப்பும் ஸையிட் காஸிமுக்கு வழங்கப்பட்டது. இவர் தமது சீடர்கள் புதிய அவதாரத்தை எவ்வாறு கண்டுகொள்வது என்பது குறித்து 1843-இல் தமது மறைவு வரை போதித்து வந்தார். தாம் மறைந்தவுடன் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடிக் கண்டுகொள்ளும்படி தமது மாணவர்களைப் பணித்தார்.
முல்லா ஹுஸேய்ன-இ-புஷ்ரூயி (1813 – 1849)
ஸையிட் காஸிமின் தலைமை மாணாக்கராக இருந்த முல்லா ஹுஸேய்ன் ஸையிட் காஸிமின் மறைவுக்குப் பின்னர் ஸையிட் காஸிமின் சீடர்களையெல்லாம் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடிக் கண்டுகொள்ளுமாறு பணித்தார். தமது பங்கிற்குத் தாமும் நாற்பது நாள் பிரார்த்தனையும் நோன்புமாக இருந்து பின் தமது ஊராகிய புஷீருக்கும் பின்னர் ஷிராஸ் நகருக்கும் பயணமானார். தம்மை ஏதோ ஒரு சக்தி ஷிராஸ் நகரை நோக்கி இழுத்து சென்றதாக அவர் கூறியுள்ளார். கி.பி.1844-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி முன்மாலை நேரம் அவர் ஷிராஸ் நகரின் தலைவாசலைச் சென்றடைந்தார். அப்போது அங்கே தமக்காகவே காத்திருப்பதுபோல் தோன்றிய ஓர் இளைஞரை அவர் கண்டார். அந்த இளைஞர் முல்லா ஹுஸேய்னைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று நலம் விசாரித்து அவர் ஷிராஸ் வந்த நோக்கத்தையும் வினவினார். பிறகு முல்லா ஹுஸேய்ன் தேடி வந்த அவதாரம் தாமே எனப் பிரகடனப்படுத்தினார். அப்போது பொழுது மங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அந்த இளைஞரே பஹாய் சமத்தின் முன்னோடி அவதாரமாக விளங்கிய அலி முகம்மட் எனும் இயற்பெயருடைய ‘பாப்’ பெருமானார் ஆவார்.
பாப் (கி.மு.1819 – 1850) பெருமானாரின் தோற்றத்தால் பாரசீக நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக அந்த நாட்டை ஆண்டுவந்த ஷா மன்னன் பாப் அவர்களைக் கைது செய்யும் ஆணையை பிறப்பித்து 1850-இல் அவருக்கு மரண தண்டனையும் விதித்து, தலா 250 வீரர்கள் கொண்ட 3 பிரிவான படைவீரர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் தோன்றவிருக்கும் ஒரு மாபெரும் அவதாரத்திற்கான முன்னோடியே என அறிவித்தார்.
பாப் அவர்களைத் தொடர்ந்து கி.பி. 1863-இல் பஹாவுல்லா (கி.பி. 1817 – 1892) டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள ரித்வான் பூங்காவில் பாப் அவர்களால் அறிவிக்கப்பட்ட அவதாரம் தாமே என பிரகடனப்படுத்தினார். பஹாவுல்லா தமது உயிலும் சாசனத்தில் தமக்கு பிறகு பஹாய் உலகின் தலைமத்துவத்திற்கு தமது மூத்த மகனாகிய அப்துல் பஹாவை (கி.பி. 1844 – 1921) நியமித்தார்.
அப்துல் பஹா பஹாய் உலகின் தலைமத்துவத்தை சுமார் 30 ஆண்டுகாலம் தாங்கிய பிறகு 1921-இல் காலமானார். இவர் பஹாய் சமயத்தின் உதாரன புருஷர், கடவுளின் மர்மம், கடவுளின் ஒப்பந்தத்தின் மையம் எனப் பல நாமங்கள் பெற்றவராவார். இவர் முதலாம் உலக யுத்தத்தின்போது பாலஸ்தீனத்தில் ஆற்றிய உணவு நிவாரண சேவைகளுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு ‘சர்’ (Sir) பட்டம் வழங்கியது. இவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து தமது தந்தையாரின் செய்தியைப் பிரகடனப்படுத்தினார். அப்துல் பஹா தமது உயிலும் சாசனத்தில் தமக்குப் பிறகு பஹாய் உலகின் பாதுகாவலராகத் தமது மூத்தப் பேரராகிய ஷோகி எஃபெண்டியை (கி.பி.1898 – 1957)நியமித்தார்.
ஷோகி எஃபெண்டி பஹாய் உலகின் பாதுகாவலராக சுமார் 35 வருட காலம் சேவையாற்றிய பிறகு 1957-இல் மறணமடைந்தார். அதன் பிறகு பஹாய் உலகம் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உலக அமைப்பின் கீழ் இன்று செயல்படுகிறது.
இத்தகவல்களை வழங்குவதன் காரணம் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து 21-ஆம் நூற்றாண்டு வரை உலகில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய விழிப்புணர்வை காட்டுவதற்காகவே. இதை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகக் கீழேயுள்ள படங்களை பார்க்கவும்.
உலகில் கடந்த சில நூற்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள புரட்சிகளின் வளர்ச்சிஉலகில் கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி
மேலே காணப்படும் கிராஃப்களை கூர்ந்து கவனித்தால் அறிவியல் வளர்ச்சியும் சரி புரட்சிளும் சரி ஒரே சீராக வளரவில்லை, மாறாக, வெளிப்படையான காரணங்கள் ஏதும் இன்றி அவை கடந்த சில நூற்றாண்டுகளிலேயே திடீரென துரித வளர்ச்சி கண்டுள்ளன. அமைதியாகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏதும் இல்லாமல் இருந்த உலகத்தின் மேம்பாடு திடீரென கடந்த சில நூற்றாண்டுகளில் ஏன் இவ்விதமான திடீர் வளர்ச்சி கண்டது? செடி கொடிகள் வளர்ச்சி காண வேண்டுமானால் அவற்றிற்கு நீர் அவசியம். மழையே இல்லாமல் இருந்த ஒரு நிலப்பகுதியில் திடீரென மழை பெய்தால் அங்கு அதற்குமுன் காணப்படாத புல் பூண்டுவகைகளில் திடீர் வளர்ச்சி காணப்படுவது இயல்பே. அதே போன்றதுதான் உலக மேம்பாடு. ஏதோ ஒரு நிகழ்வு அதன் திடீர் மேம்பாட்டிற்குத் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். வேறு ஒரு உதாரணத்தை இப்போது காணலாம். கல்வியோ வாழ்க்கை அனுபவமோ இல்லாமல் வளர்ந்த ஒரு மனிதனுக்கு கல்வி வழங்கப்பட்டு அவனுடைய அறிவாற்றல் தூண்டப்பெற்றால் அவனுடயை வாழ்வில் திடீர் மாற்றத்தை, ஒரு மேம்பாட்டை நாம் காண முடியும். இதே ரீதியில் மானிடத்தின் வாழ்விலும் ஏதோ ஒறு புதிய உணர்வு ஊட்டப்பட்டது போன்று மேற்கண்ட படங்களில் நாம் ஒரு திடீர் வளர்ச்சியை காணுகின்றோம்.
இவ்விதமான உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கமுடியும். உலக வரலாற்றில் சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான வளர்ச்சியை காணும்போது அதன் பின்னனியில் ஒரு சமயவெளிப்பாட்டின் தோற்றம் இருப்பதை உணரலாம். உதாரணமாகச் சிந்து வெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்வோம். அது ஏறக்குறைய கி.மு. 3500-இல் தீவிரம் அடைய ஆரம்பித்தும் பின்னர் சுமார் 2000 வருடங்கள் நிலைத்திருந்த பரவலான ஒரு நாகரிகமாகும். கிருஷ்ணரின் வெளிப்பாடு நடந்தது கி.மு. 3228 – 3102ற்குள். இவ்வெளிப்பாட்டையும் சிந்துவெளி நாகரிகத்தையும் தொடர்புபடுத்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. சிந்துவெளி நாகரிகத்திற்குத் தூண்டுகோலாகவும் மூலாதாரமாகவும் இருந்தது கிருஷ்ணர் மூலமான கடவுளின் திருவெளிப்பாடே ஆகும். அடுத்து இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியை காணலாம். நாகரிகமற்ற அரபு மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு மாபெரும் இஸ்லாமிய நாகரிகத்தை, அறிவியல், கணிதசாஸ்திரம் மற்றும் பிற விஷயங்களில் ஒரு மாபெரும் வளர்ச்சியை உருவாக்கியது இஸ்லாமிய திருவெளிப்பாடே ஆகும். இதே போன்று இயேசு நாதர், புத்தர் ஆகியோரின் வருகையால் உலகில் ஏற்பட்ட மேம்பாடுகளை நாம் கணக்கிட முடியும்.
கி.மு. 1844-ஆம் வருடம் பல மூலாதாரங்களின் வாயிலாக ஒரு முக்கியமான வருடம் என்பதை நாம் உணரலாம். பஹாய் திருவெளிப்பாடு அவ்வருடத்திலேயே துவங்கியது. பஹாவுல்லாவின் எழுத்துகள் சுமார் 100 நூல்களாகத் தொகுக்கப்படலாம். தமது வெளிப்பாடு குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறியுள்ளார்:
அதி சிறந்த இப்புதிய உலக அமைப்பின் இயக்கத்தின் நடுக்கமுறச் செய்திடும் பாதிப்பினால் உலகின் சமநிலையே சீர்கேடடைந்துள்ளது. இணையற்ற, அற்புதமிக்க இவ்வமைப்பு முறையின் செயற்பாட்டினால், மனித இனத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை பெரும் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு முறையை மானிடக் கண்கள் இதுவரைகண்டதே கிடையாது.
பஹாவுல்லாவின் போதனைகளுள் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய்ந்து உணர வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள மேலோட்டமான விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. பஹாய்கள் வன்மதமாற்ற நடவடிக்கைகளில் (proselytize) ஈடுபடுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கை என்பது உள்ளத்திலிருந்து தானாக மலர வேண்டும். அதை வெளியில் இருந்து உருவாக்க முடியாது. இன்று உலகத்தில் நூற்றுக்கணக்கில் நான்தான் கல்கி, நான்தான் இயேசு, நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் எனப் பலர் கூறிக்கொள்கின்றனர். இவர்களுக்கிடையே பாரசீக நாட்டில் தோன்றிய பஹாவுல்லா என்பவர் தாம்தான் என்றென்றும் வாக்களிக்கப்பட்டு வந்துள்ள இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம் எனத் தம்மை 1863-இல் பிரகடனப்படுத்திக்கொண்டார். வைரம் என்பது கற்களுக்கிடையில் கிடக்கும்போது அதுவும் கல்லைப் போன்றுதான் தோற்றமளிக்கும், தவறாகக் கருதப்படவும் கூடும். வைரம் எது கல் எது என்பதை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவது தனிநபர் கடமை, அதை மற்றவர்களின் வார்த்தைகளை வைத்து தீர்மானிக்க முடியாது தீர்மானிக்கவும் கூடாது, மாறாக, சுதந்திரமான சுய ஆய்வின் மூலமே அதைக் கண்டறிய வேண்டும். அதற்கான ஆற்றல்களைக் கடவுள் மனிதர்களுக்கு இயல்பாகவே வழங்கியுள்ளார். தூய சிந்தனை மிக்க தியானத்தின் மூலமாகவும் பிரார்த்தனையின் வாயிலாகவும் கல்கி அவதாரம் குறித்த உண்மையை உணர்ந்திட கடவுள் நமக்கு நிச்சயமாகவே அருள் புரிவார்.
கடவுள் அருள் மானிடத்தின் மீது என்றென்றும் பொழியப்படுவதாக.
[1] According to KD Abhyankar, the starting point of Kaliyuga is an extremely rare planetary alignment, which is depicted in the Mohenjo-Daro seals[citation needed]. Going by this alignment the year 3102 BCE is slightly off. The actual date for this alignment is February 7 of 3104 BCE. There is also sufficient proof to believe that Vrdhha Garga knew of precession at least by 500 BCE. Garga had calculated the rate of precession to within 30% of what the modern scholars estimate. (https://en.wikipedia.org/wiki/Kali_Yuga)
உலகத்தில் சமயங்கள் என பார்க்கும் போது முக்கியமானவையாக ஏழு சமயங்கள் உண்டு. அதாவது:
* ஹிந்து
* பார்ஸி
* பௌத்த
* யூத
* கிருஸ்துவ
* இஸ்லாமிய
* பஹாய்
சமயங்கள். இவை தவிர மனிதன் வாழ்ந்த காலம் முழுவதும் சமயங்கள் தோன்றி மறைந்த வண்ணமாகவே இருந்த வந்துள்ளன. இது வரை 27,000 அவதாரங்கள் தோன்றியுள்ளனர் என கூறப்படுகின்றது.
முதலாவதாக, சமயங்கள் என கூறும் போது அவற்றுக்கும் சமய அடிப்படையிலான இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். சமயங்கள் கீழ்காணும் அம்சங்களை பெற்றிருக்கவேண்டும்:
* அவதாரம்
* புனித நூல்
* நம்பிக்கையாளர்கள்
அவதாரம் – ஆங்கிலத்தில் தீர்க்கதரிசி எனவும் கூறப்படும் இவர்கள் சாதாரன மனிதர்களும் அல்ல, அதே சமயம் கடவுளுக்குச் சமமானவர்களும் அல்ல. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இவர்களுடைய அறிவு பள்ளி சென்று கற்றுக்கொண்ட அறிவு அல்ல.
சமய அடிப்படையிலான இயக்கங்கள் இத்தகைய கூறுகளை பெற்றிருப்பதில்லை. அவை குறிப்பிட்ட சமயம் ஏதாவது ஒன்றின் நிழலில் அல்லது சமூக இயக்கங்களாக அமைக்கப்படுகின்றன.
சமயங்கள் தோன்ற காரணமென்ன?
இதற்கு பல விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், இறைவன் மனிதனுக்காக காலத்துக்கு காலம் வழங்கும் வழிகாட்டலே சமயமாகும். நிச்சயமாகவே சமயம் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒன்றல்ல. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் சமயங்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம். இன்று பெரும்பாலும் சமயம் அல்லது மதம் என உச்சரித்தாலே நெற்றியை சுருக்கிப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. சமயத்தின் பெயரால் இன்று நடக்கும் அராஜகங்களே இதற்கு காரணமெனலாம். மனிதனின் கல்விக்காக தோன்றும் சமயங்களே இன்று அவனுடைய பேரழிவிற்கும் ஒரளவு காரணமாகியுள்ளன. ஏன்? இதற்கு பதிலை காண்பதற்கு பதிலாக, சமயங்கள் சம்பந்தமான வேறு சில விஷயங்களை முதலில் ஆராய்ந்து பார்ப்போம்.
வரலாறு என கூறும்போது போர்களும் சம்பவங்களும் நமக்கு ஞாபக்த்துக்கு வரும். ஆனால், மனிதனின் கொந்தளிப்பான வலராற்றினூடே முக்கியமான ஒரு விஷயம், மனுக்குலத்தின் ஆன்மீக பரினாம வளர்ச்சி அந்த வரலாற்றினுள் மறைந்து கிடக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த வளர்ச்சிக்குக் காரணமாக விளங்குவது, இன்றைய உலகில் பல கொந்தளிப்புகளுக்குக் காரணமாக விளங்கும் சமயங்கள்தான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மனிதனில் உண்மையான வளர்ச்சி சமயங்களின் மூலமாகவே ஏற்பட்டு வந்துள்ளது. வரலாற்றை சற்று ஆழமாக ஆய்வு செய்தால் இந்த உண்மை கண்டிப்பாக புலப்படும். விஞ்ஞான, தொழில்நுட்ப வளச்சிகளுக்குக் காரணம் சமயமே காரணமாக இருந்துள்ளது.
சமயங்கள் திடீரெனவோ, காரணமில்லாமலோ தோன்றுவதில்லை. அவை ஒவ்வொன்றும் மனிதனின் கல்விக்காவே தோன்றுகின்றன. சம்பந்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கேற்ப அவற்றின் போதனைகளும் இருக்கும். அதே வேளை எந்த சமயமுமே எல்லா காலங்களுக்கும் போதுமான போதனைகளை கொண்டுவருவதில்லை. இதற்கு உதாரணமாக, ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் ஒரு குழந்தை தாயின் முழு நேர கண்கானிப்பில் இருக்கின்றது, இருக்கவும் வேண்டும். சிறிது வளர்ச்சியடைந்த பின்னர் தாயைத் தவிர மற்றவர்களோடு பழக ஆரம்பிக்கின்றது. அதன் உலகம் விரிவடைகின்றது. பின்னர் பள்ளிப் பருவம் வரும் போது பள்ளிக்குச் செல்கின்றது. பள்ளிப் படிப்பும் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை, பல்கலைக் கழகம் என படிப்படியாக உயர்ந்து கொண்டே போகின்றது. அறிவாற்றல் பெருகப் பெருக மனிதனுக்கு அந்த அந்த பருவத்திற்கு ஏற்ற கல்வி தேவைப்படுகின்றது. சமயங்களும் அப்படித்தான் செயல்படுகின்றன. காலத்திற்குக் காலம் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனுக்கு சமய போதனைகள் அளிக்கப்படுகின்றன. படிப்படியாக மனிதனுக்கு கல்வியளிக்கவே சமயங்கள் தோன்றி வந்துள்ளன. மனுக்குலத்திற்கு தேவையான போதனைகளை சமயம் ஒரேயடியாக கொடுப்பதில்லை, கொடுக்கவும் முடியாது. இதன் காரணமாகவே சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு ரூபங்களில் தோன்றியுள்ளது.
“ சில அன்பர்கள், கடவுள் ஏன் இத்தனை மதங்களைப் படைக்க வேண்டும், ஒரு மதத்தை மட்டும் எல்லார் மத்தியிலும் வெளிப்படுத்தியிருந்தால் என்ன?” என வினவுவதுண்டு. இதற்கு பதில் மேற்குறிப்பிட்ட விளக்கமே. அப்படியே கடவுள் ஒரே மதத்தை எல்லார் மத்தியிலும் வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அதை எந்த மொழியில் வெளிப்படுத்துவது, மற்றும் கலாச்சாரம், பிரதேசம் ஆகிய வேற்றுமைகளையும் அது கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அப்படியே அது பலவித மொழி, கலாச்சாரம், இனம் மற்றும் நாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் அந்த ஒரே மதத்தினை பின்பற்றி, ஆனால் வெவ்வேறு நாடுகளில் வாழும் மனிதர்கள் ஏதேச்சையாக சந்திக்கும் போது மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்டிருக்கும் அவர்கள் தாங்கள் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் என எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? உட்கருத்து ஒன்றாக இருந்தாலும், மொழி வேறு, கலாச்சார முறைகள் வேறாக அல்லவா இருக்கும். அந்த வேறுபாடுகளைத் தாண்டி சிறிது சிரமப்பட்டால் சமயங்களுக்கிடையில் உள்ள அடிப்படையான ஒற்றுமையை புரிந்துகொள்ளலாம்.
கடந்த காலங்களில் மனிதர்கள் இன்று வாழ்வதைப் போல் வாழவில்லை. இன்று இருப்பதைப் போல் அன்று விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகள் அறவே கிடையாது. மொழியால் அவர்கள் வேறுபட்டிருந்தனர், கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தனர், முக்கியமாக ஒரு பிரதேசத்தில் வசிப்பவர்கள் வேறொரு பிரதேசத்தில் தங்களைப் போன்றே வேறு மனிதர்கள் வாழ்கின்றார்கள் என அறியாமலேயே வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக இறைவனின் அவதாரங்கள் வெவ்வேறு நிலைகளில் தோன்றினர். இதன் காரணமாக பல மதங்களும் உலகில் தோன்றின.
இப்போது மேற்குறிப்பிட்ட கேள்வியைப் பற்றி மறுபடியும் சிந்தித்துப் பார்ப்போம். கடவுள் ஏன் ஒரே மதத்தை எல்லார் மத்தியிலும் வெளிப்படுத்தக்கூடாது, எனும் கேள்வி. பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லா, பின்வருமாறு கூறியுள்ளார்:
அவர்கள் (இறைவனின் அவதாரங்கள்) அனைவரும் ஒரே ஆலயத்தில் வீற்றிருப்பதையும், ஒரே சுவர்க்கத்தில் உயரப்பறப்பதையும், ஒரே அரியாசனத்தில் அமர்ந்திருப்பதையும், ஒன்றையே உச்சரிப்பதையும், ஒரே சமயத்தை பிரகடனம் செய்வதையும் காண்பீர்கள்.
மேற்குறிப்பிட்ட வாசகத்திலிருந்து கடவுள் தமது அவதாரங்கள் மூலமாக உண்மையில் ஒரே சமயத்தைத்தான் பிரகடனப்படுத்தி வந்திருக்கின்றார் என நாம் அறிகின்றோம். அது அந்தந்த காலத்திற்கும், மக்களுக்கும் ஏற்றவாறு வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்றோ நிலைமை வேறு. மக்கள் சரித்திர காலங்களில் வாழ்ந்தது போல் இன்று பிரிந்து வாழவில்லை. உலகமே சுருங்கிப் போய் நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லவோ, தொடர்புகொள்ளவோ முடியும். பிரிந்து கிடந்த உலகம் இன்று ஒன்றாக இருக்கின்றது. மனிதர்களின் மனங்கள் அவ்வாறு இல்லை. பிரிவினைகளால் அவை வேறுபட்டு கிடக்கின்றன.
சமயங்களுக்கிடையில் உண்மையில் வேறுபாடுகள் கிடையாது. ஒரே விஷயம் பல்வேறு காலங்களில், பல்வேறு ரூபங்களில், பல்வேறு மொழிகளில், பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தோன்றியதால் ஒவ்வொன்றும் வேறு வேறாக தோற்றமளிக்கின்றன. காலையில் தோன்றும் சூரியனானாலும், மதியம் தோன்றும் சூரியனானாலும், மாலையில் மறையும் சூரியனானாலும், ஒளியின் தீவிரமே வேறுபாட்டுக்குக் காரதணமே ஒழிய சூரியன் ஒரே சூரியன்தான். சமயமும் அந்த சூரியனைப் போன்றது. காலத்துக்குக் காலம் அதன் ஒளி கூடவும் குறையவும் செய்யும்…
உலகம் முழுவதும் உள்ள பஹாய் சமூகங்களில் இன்று நடைபெறும் நடவடிக்கைகளில் மைய நடவடிக்கைகளாக பயிற்சி வட்டங்கள், வழிபாட்டுக் கூட்டங்கள், இளைய இளைஞர் ஒன்றுகூடல்கள் மற்றும் குழந்தைகள் வகுப்புகள் உள்ளன. இந்த நான்கும் அடிப்படை நடவடிக்கைகளாக விளங்குகின்றன. இந்த நடவடிக்கைளுக்கான அடிப்படை நோக்கம் என்ன?
பெரும்பாலான பஹாய்கள் சமய வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் என நினைக்கின்றனர். ஆனால், பஹாய்களின் அனைத்துலக ஆலோசகரான டாக்டர் முஹாஜர் அவர்கள் (இப்போது உலக நீதிமன்ற உறுப்பினர்) இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் சமுதாயத்திற்கு சேவை செய்வதும் “எழுத்தில் வடிக்கபட்டவற்றை மெய்ப்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதாகும்,” என வலியுறுத்தினார். அதாவது, உலக சீர்திருத்தத்திற்கு சேவை செய்வது.
நம்மில் பலர் ரூஹி பயிற்சியாளர்களாக இருக்கின்றோம். நம்மில் எத்தனை பேர் நாம் செயல்படுத்தும் இந்த மையநடவடிக்கைகளை, தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகம், ஒரு புதிய மனித இனத்தை உருவாக்குவது, சமுதாய சீர்திருத்தத்திற்கான வழி என காண்கிறோம்? பெரும்பாலும் மைய நடவடிக்கைகள் பஹாய் சமயத்தைப் போதனை செய்வது மற்றும் பஹாய் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது என்பதே நம்மில் பலரின் கருத்தாகும். ஆனால், நமது மைய நடவடிக்கைகளின் நோக்கமே சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான நமது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்வதாகும். அதன் மூலமாக இந்த நடவடிக்கைகள் சமூகங்கங்களை உருவாக்குதலன்றி வெறும் சமய போதனை மட்டுமே சார்ந்தவையன்று.
டாக்டர் முஹாஜர் அவர்கள் 1 – 7 வரையிலான ரூறி பயிற்சி நூல்களை சமுதாயத்தின் கண்களைக் கொண்டு பார்க்குமாறு கூறுகிறார். அவ்வாறு செய்து அந்தப் பயிற்சி நூல்களில் பதிந்துள்ள கருத்துக்கள் வெறும் சமய விரிவாக்கம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு என்றில்லாமல் அவை எவ்வாறு சமுதாய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்பது குறித்து ஆழச்சிந்திக்கச் சொல்கிறார். உதாரணமாக, ரூஹி முதல் நூலின் முதல் வாசகக்குறிப்பு தூய்மையான நற்செயல்களின் மூலம் உலக சீர்திருத்தம் ஏற்படக்கூடுதல் பற்றி விவரிக்கின்றது. அப்துல்-பஹாவின் போதனையான “உங்கள் பாதையில் குறுக்கிடும் அனைவருக்கும் உங்கள் உள்ளங்கள் அன்பெனும் தீயினைக் கொண்டு எரியட்டும்” என்பது சகல தப்பெண்ணங்களையும் அகற்றக்கூடும் என்பது பற்றி சிந்தித்திருப்பீர்களா? நாம் மேலும் மேலும் வாய்மையோடு வாழ முயல்வது நமது ஆன்மீக வளர்ச்சி மட்டுமின்றி மேலும் நல்ல சமுதாயம் ஒன்று உருபெறுவதே நோக்கம் என்பது குறித்து நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்கின்றோமா? ஆதலால், நமது மைய நடவடிக்கைகளில் பங்கெடுப்போர்களுள் சமுதாய தன்மைமாற்றம் மற்றும் சுயதன்மைமாற்றத்திற்கான ஓர் அகக்காட்சி வழங்கப்படுவது அவசியம் என்பது தெளிவு.
சரி இப்போது யாராவது நீங்கள் எதற்காக இந்த ரூஹி பயிற்சிக்கு என்னை அழைக்கிறீர்கள் என கேட்டால், அதன் வாயிலாக என்னை பஹாய் ஆக்கிடுவது உங்கள் நோக்கமா என கேட்டால், அதற்கு நாம் வெகு தைரியாமாக ‘இல்லை’ எனக் கூறி இந்த மைய நடவடிக்கைகளின் நோக்கம் சமுதாயத்தின் தன்மைமாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் உதவுவதே நோக்கம் என கூறிடலாம்.