பஹாய் ஆன்மீகச் சபைகளுக்கான ஒர் அறிமுகம்


பஹாய் ஆன்மீகச் சபைகளுக்கான ஒர் அறிமுகம் – மார்ஸியே கேய்ல்

ஒரு நூலாகப்பட்டது அறிமுகமில்லாத நண்பர்களுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமென அடிக்கடி மேற்கோளிடப்படும் அன்பர் ஒருவர் கருத்துரைத்துள்ளார். குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் “அறிமுகமில்லாத” எனும் வார்தைகளே எனக்கு மிகவும் பிடித்தமான வார்த்தைகள். எதனாலோ தெரியவில்லை, நம்மைச் சந்தித்து நம்மோடு உரையாடும் நமது நண்பர்கள் நம் உள்ளத்தில் இருப்பதை தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் ஏதும் கூறும் முன்பே நாம் முந்திக்கொண்டு விடுகின்றோம். அதன் விளைவாக நாம் உண்மையில் (சிந்தித்து) கூற வேண்டியதற்கு நாமே இடையூறாகிவிடுகிறோம்.

மிகவும் பொருத்தமான வாசகர் என்பவராக இருப்பவர் நமக்கு அறிமுகமில்லாத வாசகராகவே இருப்பார், ஏனெனில், வேறு யாராவது எழுதியதைத் தேர்ந்தெடுக்காமல் நீங்கள் எழுத்தில் வடித்தவற்றுடன் ஓரிரண்டு மணி நேரம் அவர் செலவிடுகின்றார். நீங்கள் எழுதியதே அந்த நேரத்தில் அவருக்கு ஏற்றதாக இருக்கின்றது.

சரி, இப்போது இந்தக் கட்டுரையைப் பொறுத்த மட்டிலும், என் நண்பர்கள் பலர் அதை நிச்சயம் படிப்பர். என் நண்பர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய நண்பர்களும்தான். இதில் பெரும்பான்மை வாசகர்களாக பஹாய்களே இருப்பார்கள், அல்லது பஹாய் சமயத்துடன் நெருக்கமாக உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

ஒரு வேளை உங்களுக்கு குழந்தைகள் இருக்கலாம், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து சிந்திக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள விரும்பலாம். அல்லது, நீங்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றத்தின் அங்கத்தினராகவோ, அல்லது ஏதோ ஒரு செயற்குழுவின் உறுப்பினராகவோ, அல்லது, ஏதோ ஒரு வழியில் எதை எதையோ பிறருடன் கலந்தாலோசிக்க வேண்டிய நிலையில் உள்ளவராகவோ இருக்கலாம். அப்படியாயின், பஹாய்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் கலந்தாலோசனைக்கான முறைகள் உங்களுக்கு நிச்சயம் பயன் தருவனவாக இருக்கும். குழுவாக சிந்திப்பது குறித்து நிச்சயமாக உங்கள் நூல் நிலையத்தில் உங்களுக்குத் தேவையான நூல்கள் கிடைக்கலாம். ஆனால் பஹாய்களாகிய நாம் அவற்றைவிட நன்மை பயக்கக் கூடிய ஒன்றை அளிக்கும் நிலையில் இருக்கின்றோம். ஏனெனில், நாம் ஈடுபட்டிருப்பது மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்: குறிப்பிடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும், அனைவருக்கும் பொதுவான, “தொடர்பு மையம்,” ஒன்று நம்மிடம் உள்ளது. இந்த பொதுவான “தொடர்பு மையம் நமக்கு இருப்பதால்தான், முன் பின் தெரியாத, ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட மக்களாகிய நாம் ஒன்றுகூடியும், ஒன்றாக சிந்தித்தும் செயலாற்றவும் முடிகிறது.

தாங்கள் இட்டதே சட்டம் என இயங்கும் குடும்பத் தலைவிகள், குடும்பத் தலைவர்கள், மேல் மட்டங்களில் தன்னிச்சையாக செயல்படுவோர் — யாவரும் நீர்த்தேக்கத்தைப் போன்றவர்கள். புதிய வாழ்வு முறையாகப்பட்டது, எல்லோரும் ஒன்றாக வாழ்ந்தும், வாழ்க்கைகளைப் பகிர்ந்துகொண்டும், நம்முடைய பிரகாசங்களைப் பிறருடைய பிரகாசங்களோடு ஒன்றுகலந்து, பல்வேறு நிலையில் இருக்கின்ற உண்மையை ஒன்றாகக் குவித்துக் கொண்டும் இருக்கின்றோம். நாமெல்லோருமே இதில் பங்காளிகள். ஒரு புதிய உலகை உருவாக்கும் செயலில் நாம் ஈடுபட்டுள்ளோம். “அன்பு கலந்த கலந்தாலோசனையே” நாம் இதில் பயன்படுத்தும் முறை ஆகும்.

இது ஒரு வேளை எனது மென்மை உணர்வில் பிறந்த ஆவலாக இருக்கக்கூடும், ஆனாலும், எங்கோ ஓரிடத்தில் ஓர் அறிமுகமில்லாத அன்பர் இக்கட்டுரையை நிச்சயமாக வாசிக்க விருப்பப்படலாம் எனவே நான் நினைக்க விரும்புகிறேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு, நான் அங்கம் வகித்திருந்த செயற்குழு ஒன்றில் என்னைத் தங்களது தலைவராக, தவறாக, நியமித்திருந்த சக அங்கத்தினர்களை, கூட்டங்களுக்குக் கையில் ஒரு மணியைக் கொண்டு வருவதன் மூலம் திடுக்கிட வைத்தேன். அது உலோகத்தால் ஆன மேஜைமணி. அதை இயக்குவதன் மூலம் அதை ஒலிக்கச் செய்யலாம். அது ஒலிக்கும் போது, அடுத்த அங்கத்தினர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என, பெரும்பாலும் மூத்த வயதினராக இருந்த எனது மதிப்பிற்குரிய சக செயற்குழு அங்கத்தினர்களுக்கு விளக்கம் அளித்தேன். என் கருத்துப்படி, உரையாடல்களை ஒருங்கிணைத்து, எல்லா அங்கத்தினர்களும் தாங்கள் கூற வேண்டியதைச் சுதந்திரத்துடன் கூறுவதை முறைப்படுத்துவதே ஒரு செயற்குழுத் தலைவரின் கடமை ஆகும், என விளக்கமளித்தேன். ஆனாலும், பாரசீகத்தின் பல ஆயிர வருட சரித்திரத்தில் எவருமே ஒரு மணியை அடித்து ஒருவரது பேச்சை நிறுத்தியது கிடையாது. ஆக, அந்த கிழக்கு-மேற்கு செயற்குழுவின் அங்கத்தினர்கள் இப்போது அந்த விஷயத்தை முற்றாக மறந்தும் மன்னித்தும் இருப்பார்கள் என்பதே என் அவா.
ஒரு செயற்குழு அல்லது சபைத் தலைவரின் முதல் பொறுப்பு எல்லோருடைய அபிப்ராயங்களையும் சேகரிப்பதே ஆகும் என்பது என் கருத்து. இதை அவர் மறக்காது செய்வாரேயானால், சபையில் கூறப்பட வேண்டியவைகளை ஒருவரே, முக்கியமாக ஒன்பது பேர் அடங்கிய நமது சபைகளில், கூறிக்கொண்டிருக்க மாட்டார். ஒரிருவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு சபையின் தலைவரின் செயல்முறைகள் குறைபாடுகள் நிறைந்தே இருக்கின்றன. புதிய சபைகளின் அங்கத்தினராகியவர்கள், எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஒருவரை ஒருவரும், தங்கள் சபைத் தலைவரையும், கட்டுப்படுத்தலாம். ஏனெனில், சபையின் ஒன்பது அங்கத்தினர்களும் தங்கள் அபிப்ராயங்களைத் தெளிவாக்கும் வரையில், அந்த கலந்தாலோசனை ஆன்மீக வழிகாட்டுதலைப் பிரதிநிதிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட முடியாது.

தனது எட்டு சக அங்கத்தினர்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்த முயலுவதே ஒரு சபைத் தலைவரின் முதல் பொறுப்பாக இருக்கின்றது. இதைச் செய்து முடிப்பதற்கும், அந்தக் கூட்ட விவகாரங்களை நன்கு முடித்துக் கொள்வதற்கும் அந்த தலைவருக்கு நேர ஒதுக்கீடும் மற்றும் ஒருவர் பின் ஒருவராகப் பேச வாய்ப்பு அளிப்பதற்குத் தேவையான மன உணர்வும் வேண்டும். அத்தலைவர், தான் கூற வேண்டியவைகளை இறுதியில் கூறுவதே சாலச் சிறந்ததாகவும் இருக்கின்றது. தலைவர் எனும் முறையில் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சபையில் தாமே பேசிக்கொண்டிருப்பது அவருக்கு முறையாகாது. எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த தலைவர், சபையில் தாம் பேசுவற்கு அனுமதி கேட்ட பிறகே தமது கருத்தைக் கூறுவார். ஒரு தலைவரின் பிற கடமைகளாக, வெளியுலகிற்கு அச்சபையின் பேச்சாளராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுவது; பண்டிகைகளில் தலைமைத்துவ பொறுப்பேற்பது; சபையின் விருந்தினர்களை உபசரிப்பது, வேறு சில வேளைகளில் பஹாய்த் திருமண விழாக்களில் ஆஜராகுவது எனக் கூறிக்கொண்டே போகலாம். யாரோ ஒருவர் கூறியது போல, சபைத் தலைவர் என்பவர் அச்சபைக்கு ‘முகப்பாக’ விளங்குபவர் ஆவார்.

தகவல்தொடர்பு காரியதரிசிக்குத்தான் மிகவும் கடினமான கடமை உள்ளது. ஒரு பெரிய பஹாய் சமூகத்தில் அவரது தொலைபேசி எல்லா நேரங்களிலும் அடித்த வண்ணமாகவே இருக்கும். எல்லோருமே, எல்லாவற்றுக்கும் அவரையே கூப்பிடுவர், எல்லாவற்றிற்கும் அவரையே குறையும் கூறுவர். ஒரு காரியதரிசியைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் போது, அவருக்கு மதியூகம் இருக்கிறதா? அவர் கடிதங்கள் எழுதக்கூடியவரா? அவருக்குச் சீரான மனப்பான்மை இருக்கின்றதா? போன்ற கேள்விகளை ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலாம். ஒரு தலைவர் தமது உடை மடிப்புக் களையாமல் செயலாற்றிச் செல்வார். ஆனால் செயலாளரோ நாள் முழுதும் உழைக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சபையின் அதிதூதர் எனும் நிலையில் அவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் பிராணத்தியாகி என்பது நிச்சயமே!

குறிப்புகள் எடுக்கும் செயலாளரைப் பொருத்த வரையில், சபையின் இயக்கத்திற்கு அவர் உயிர்க்கூறாக விளங்குபவர். ஏனெனில், சட்ட ரீதியான மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் எழக்கூடிய பிரச்சினைகள், இந்தக் குறிப்புகள் எடுக்கும் செயலாளர் எழுதிவைத்துள்ள கூட்டக் குறிப்புகளையே வலம் வரும். கூட்டக் குறிப்புகள் படிக்கப்படும் போது தூங்கி விழுவது பெரும் தவறாகும்; உங்கள் சபையின் சரித்திரத்தை அவை தாங்கியுள்ளன–ஆகவே, உங்கள் சபை செயல்படுத்தும் அனைத்து விஷயங்கள் பற்றியக் குறிப்புகளையும் உள்ளது உள்ளவாறு இந்தக் கூட்டக்குறிப்புகள் உள்ளடக்கியுள்ளனவா என்பதை நீங்கள் நிச்சயித்துக்கொள்ள வேண்டும். இப்போது பொருளாருக்கு வருவோம். சபையின் பிற அங்கத்தினர்களையும் பார்க்கையில், பஹாய் சமூகங்கள்பால் இவரே அதிக அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது வேடிக்கைக்காகக் கூறப்படவில்லை. பஹாய் நிதியைப் பொருத்த வரையில் ஆன்மீக ரீதியில் நாம் முதிர்ச்சியடையாத பருவத்தினராகவே இருக்கின்றோம், ஏனெனில் பணம் கிடைப்பதற்கு அரிதான ஒரு லௌகீகம் நிறைந்த உலகத்தில் பிறந்தும், அப்படி பணம் கிடைத்துவிட்டால் அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியவர்களாகவும் நாம் இருக்கின்றோம். பஹாய் நிதி குறித்த போதனைகள், நாம் நமது மூடிய கைகளைத் திறந்து, இலகுநிலையில் வழங்கிட வேண்டும் என அறிவிக்கின்றன. “தன்னிடம் உள்ள யாவற்றையும் தொடர்ச்சியாக அளித்தும், கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலத்திலிருந்து தொடர்ச்சியாக நிறைவு செய்யப்படும் ஒரு சுனை அல்லது ஊற்றைப்போல் நாம் இருக்கவும் வேண்டும்.” நிதியைப் பொருத்த வரையில் குழந்தைகளாக உள்ள நமக்கு அன்பு தேவைப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பொருளாளர், எவ்வளவு சிறிய நன்கொடையாயினும் அதற்கு நன்றி செலுத்த தவறவே மாட்டார்.

கலந்தாலோசனையின் போது ஒரு மனிதர் கொடுக்கும் நிதியைப் பொருத்து அந்த மனிதரது கருத்துக்களை அந்தப் பொருளாளர் அளவிட மாட்டார். பத்தொன்பதாம் நாள் பண்டிகையின்போது அவர் அன்பர்களை நிதிக்காகக் குடைந்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் அவர் அன்பர்களைத் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கி, தமது பிரச்சினைகளை விளக்கி, அவர்கள் அளிக்கும் நிதியாகப்பட்டது சமயத்தை எவ்வாறு முன்னேற்றம் காணச் செய்கின்றது, மற்றும், நிதிகள் இல்லாத நிலையில் சமயக் காரியங்கள் எவ்வாறு நிலைகுத்திப் போகும் என்பதை விளக்குகின்றார். எப்போதாவது, தமது கவனத்தை ஈர்த்துள்ள, நிதி சம்பந்தமான தியாகம் நிறைந்த ஒரு நிகழ்வை, எவரது பெயரையும் குறிப்பிடாமல், சபையில் கூறுவார். தம்மைத் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு மெய்யன்பர்களின் குரலாக ஒவ்வொரு ஆன்மீக சபையின் அங்கத்தினரும் இருக்கின்றார். இதற்காக வாக்காளர்கள் தாம் தேர்ந்தெடுத்துள்ள அந்த அங்கத்தினரை நெருக்கி தமக்காகப் பரிந்து பேச வற்புறுத்தலாம் என ஆகாது–அப்படி விவகாரமான வழிகளில் அல்ல. வேறுபட்ட வாக்காளர்கள் வெவ்வேறானவர்களை இயல்பாகவே தேர்வு செய்கின்றனர். ஒரு சமூகத்தின், இன்ன இயல்போ, அல்லது வேறொரு இயல்போ, அதன் வாக்குச்சீட்டில்தான் பதிக்கப்படுகின்றது என இவ்விஷயம் குறித்து மேலும் விவரமாகக் கூறலாம்.

இங்கு நாம் சுதாகரித்துக் கொண்டு ஒரு வாக்காளராக விளங்குபவரைச் சிறிது ஆராய வேண்டும். அவர் தமது கையில் ஒரு வலிமை மிக்க ஆயுதத்தை வைத்திருக்கின்றார். ஒரு வருட காலத்திற்கான அவரது சமூகத்தின் தலைவிதி அவரது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஹாய் சமூக வாழ்வில் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது–ஒருவரோடு நாம் ஒரு செயற்குழுவில் பங்காற்றியிருந்தால் ஒழிய அவரைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க முடியாது; இதன் காரணமாக, ஒரு சமூகத்தின் எல்லா அங்கத்தினர்களையும் செயற்குழுக்களில் இடம் பெறச்செய்வது நன்மை பயக்கும் என்றே நான் நினைக்கின்றேன்! ஒருவரோடு ஒரு மேஜையில் உட்கார்ந்து தேநீர் அருந்தும் போதோ அல்லது ஒருவர் மேடையில் பிரசங்கம் செய்யும் போதோ அவர் மிகவும் நயமானவராகவே காணப்படுவார்; ஆனால் ஒரு செயற்குழுவில் சேவை செய்வதில் படும் உண்மையான துன்பத்திற்குப் பிறகே அவரது ஆற்றல்கள் பகிரங்கப்படுகின்றன. ஆன்மீக சபை அங்கத்தினர்கள் போலவே செயற்குழு அங்கத்தினர்களும் பஹாய் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அச்செயற்குழுவின் அங்கத்தினர்கள் வற்புறுத்துவதன் மூலம் தங்களை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்–மற்றும் வருங்காலங்களில் ஆன்மீக சபையில் அங்கத்துவம் பெறக்கூடிய வாய்ப்பிருந்தால் இதன் வழி நல்ல அனுபவமும் பெறலாம்.

வாக்களிப்பதற்குத் தேவையான மனமுதிர்ச்சியை அடைவதற்கு நெடுங்காலம் பிடிக்கலாம். ஆன்மீக சபையில் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பது தெரியாத வரையில் அவரை அச்சபைக்குத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒருவர் பெரும் துன்பத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரைக் களிப்படையச் செய்யவேண்டும் என்பதாலோ, அல்லது ஒருவருடைய கொள்ளுப்பாட்டி ஆரம்கால நம்பிக்கையாளர் என்பதாலோ, அல்லது அந்த ஒருவருடைய பெயரைத்தான் நன்றாக எழுத வரும் என்பதாலோ அவருக்கு வாக்களிக்கக்கூடாது. வாக்களிக்கும் போது நமக்காக ஒரு வருட காலம் சேவை செய்யக்கூடிய ஒரு சபையைத் தேர்ந்தெடுக்கிறோம். அந்த ஒரு வருட காலத்தின் விதி நாம் வாக்குச் சீட்டில் எழுதக்கூடிய பெயர்களின் கைகளில்தான் இருக்கின்றது.

ஒரு புதிய வாக்காளர், வாக்களிக்க அமரும் போது, பெரும்பாலும் லௌகீக விஷயங்களைச் சார்ந்தே வாக்களிப்பார். ஆனால் பண்பட்ட ஒரு நம்பிக்கையாளர், உடல் ஊனமுற்றோர் நிலையத்தில் வசிக்கும் அங்கஹீனர் ஒருவரைக் குறித்து, பிரார்த்தனைக்கும் தியானத்திற்கும் பிறகு பாதுகாவலர் வரையறுத்திருக்கும் பண்புகளான: “கேள்விக்கிடமில்லாத விசுவாசம்… தன்னலமில்லாத பக்தி… நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனம்… அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ஆற்றலும் முதிர்ந்த அனுபவமும்,” ஆகிய பண்புகள் அவருக்கு இருப்பதாக உணர்வாரேயானால் அவருக்குக்கூட அவர் வாக்களிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பார். நம் நாட்டில் தோல்வியில் முடியும் திட்டங்களுக்கெல்லாம் பல வேளைகளில் தேர்வு செய்யப்பட்ட ஸ்தாபனங்களையே குறை கூறுவதை நாம் காணுகின்றோம்; மனக்குறை உடையோருக்கெனவே இந்த ஸ்தாபனங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன; இந்த அங்கத்தினர்கள் ஒரு சிலர் மட்டும் வெளியேற்றப்பட்டு வேறு சிலர் அச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடுமானால், அங்கு உடனடியாக சுவர்க்கலோகமே தோன்றிவிடும் என நம்மிடம் கூறப்படுகிறது. ஆனால், பஹாய் நிர்வாக முறையில் “அவர்கள்” மற்றும் “நாம்” என்பது கிடையாது. செயல்படும் ஒரு சமூகம் அதன் சபையெனவும், அந்தச் சபையே அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு எனவும் நாம் கூறலாம்.

ஒரு சில வேளைகளில் பின்வரும் கருத்துரைகளைச் செவிமடுக்கலாம்: நமது சபை கூடாதிருப்பதன் காரணம், அதற்குச் செய்வதற்கு அதிக காரியங்கள் இல்லை. இதற்கான பதில்: சபை அதிகமாக ஒன்றுகூடினால் செய்வதற்கு அதிக வேலைகளும் இருக்கும் என்பதாகும். ஒரு சமூகத்தில் ஆற்றப்பட வேண்டிய வேலைகள் எங்கிருந்துதான் வரும் என பஹாய்கள் எதிர்ப்பார்க்கின்றனர்? என் நினைவாற்றல் சரியாக இருக்குமானால், தெஹரானின் உள்ளூர் ஆன்மீக சபை ஒவ்வோர் இரவும் கூடுகின்றது. ஒரு நல்ல சமூகம் அதன் உள்ளூர் ஆன்மீக சபைக்கு நிறைய வேலைகளைக் கொடுத்து அதற்கு ஓய்வே இல்லாமல் செய்யும்; ஒரு நல்ல சபை அதன் சமூகத்தினரைத் தொல்லைப்படுத்தி, அவர்களை முன்னோக்கிச் செல்ல தூண்டிக் கொண்டே இருக்கும். இவை இரண்டும் சேர்ந்த ஒரு செயற்பாடு சுழலும் ஒரு சக்கரத்தைப் போன்றது.
ஒரு வேளை, ஒரு பஹாய் சபையின் கடமைகள் குறித்து உங்களுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், பஹாய் நிர்வாக முறை,
உண்மையான பஹாய் கலந்தாலோசனை என்பது நினைவில் நிற்கக்கூடிய ஒன்று. (கலந்தாலோசனையின் போது) வருங்காலத்திற்குத் தேவைப்படும் நுட்பங்களைத் தேடித் துளாவிக்கொண்டிருக்கும் நேரங்களில், ஒன்றிணைந்த இணக்கத்தை அனுபவிக்கும் போது–கணநேரத்திற்கு, ஆன்மீக ஒளியின் ஒட்டுமொத்தமான பிரதிபிம்பங்களாக (அதன் அங்கத்தினர்கள்) மாறிடும் போது–இந்த உலகம் வாழ்வதற்கு ஓர் அழகான இடமாகின்றது. செயற்குழுவின் அங்கத்தினர்கள் ஒருவரைப் போலவே மற்றவரும் சிந்தித்து ஓர் இணக்கத்திற்கு வருவது அனுபவமற்ற ஒருவருக்கு இன்பமாகின்றது. ஆனால் ஓர் அனுபவசாலிக்கோ, வேறுபாடுகளின் செயற்பாட்டின் மூலமும்–எதிர்மாறானவை ஒன்றினைந்திடுவதன் மூலமும்–(கூட்டத்தின்) உலைச்சல் சமப்படுத்தப்பட்டும், சமநிலைபடுத்தப்பட்டும், அதைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் இணக்கத்தின் உண்மையான பேரின்பம் உண்டாகிறது.

ஒரு சமூகம் எந்த அளவிற்கு உண்மையான பஹாய் வாழ்க்கை முறையை கடைபிடிக்கின்றதோ, அந்த அளவிற்கு அதுவும் அதன் ஆன்மீக சபையின் அங்கத்துவமும் வேறுபாடுகள் கொண்டிருப்பதைக் காணலாம். இளைஞர்கள் அவர்களின் வயது கோளாறுடனும், முதியோர்கள் அவர்களது வயதிற்கேற்ற பிரச்சினைகளுடனும் இருப்பர். சிறகடித்துத் திரியும் இளம் பெண்களும், நீதிபதிகளும், குப்பைக் கூட்டுவோரும்; தமது 12 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட வணிகரின் கருத்தைக் கவனத்துடன் ஆராயும் பகுத்தவறிவாளரும், அதில் இருப்பர். ஒருவர் மற்றவரின் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு, ஒரு பிரச்சினையினை மற்றவர் காண முடியாத வேறு ஒரு கோணத்தில் ஒவ்வொருவரும் கண்டு, தனித் தனியாகத் தங்கள் சமூகத்தின் பண்புக்கூறுகளில் ஒன்றை ஒவ்வொருவரும் பிரதிநிதித்து, அதனால் தங்களுக்கே உரிய விசேஷ கருத்துக்களை வெளியிட வேண்டியக் கடமையைக் கொண்டும் இருப்பர். ஒரு மனிதன் தக்க வயதை அடைந்துவிட்டார் என்பது கிடையாது. ஒன்று இளம் வயதினராகவோ, அதிக முதியவராகவோ அல்லது தேவைக்கதிகமான நடுத்தர வயதினராகவோ இருப்பார்; ஒரு நாட் பொழுதின் வேலை அலுப்புடனோ அல்லது அதிக ஓய்வு எடுத்ததின் பயனாக சோம்பல் பட்டோ, குடும்பச் சுமையால் வளைமுதுகுடனோ, அல்லது துக்கம் அனுபவிக்காததால் தயவற்றவராகவோ, அறிவு ஆழம் அற்றவராகவோ அல்லது சில்லறைகளின் மதிப்பறியாத பெரும் செல்வந்தராகவோ; புனித விதிகளை மீறுமளவிற்குத் துணிவு கொண்டவராகவோ, அல்லது மனதில் ஒரு தேவையற்ற எண்ணம் உதித்ததற்கா மன்னிப்பு கேட்பவராகவோ, காதல் வயப்பட்டவராகவோ, அதன் வயப்படாதவராகவோ, அல்லது ஆபத்தான பருவம் எனக் கூறப்படும் ஒரு தெளிவற்ற 50 வருடக் காலத்தை உள்ளடக்கிய வயது கொண்டவராகவோ அவர்கள் இருப்பர். மனித சுபாவத்தின் இந்த அனைத்து குணங்களும் ஒரு சபைக்குள் ஒன்று திரண்டும், ஒன்று மற்றதை ஈடும் செய்கின்றன.

உங்கள் சக சபை அங்கத்தினராக யார் வரப்போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியப் போவதில்லை. நீங்கள் ஒரு வாரமே ஆன மெய்யன்பராக இருந்த போதிலும், சமயப் போதனைகளுக்கு ஏற்ப ஒவ்வோர் அங்கத்தினரும் தங்கள் அபிப்ராயங்களைத் தொடுத்தால், உங்கள் கருத்தாகப்பட்டது மற்ற எவருடைய கருத்துக்கும் இணையானதே.

நண்பர் ஒருவர் ஒரு பிரச்சினைக்கு உட்பட்டிருந்தார். அவர் அப்பிரச்சினையை ஏன் சபைக்கு எடுத்துச் செல்லவில்லை என வினவப்பட்டபோது, “நான் சபையின் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் அதைப்பற்றி பிரஸ்தாபித்துவிட்டேன்” எனக் கூறினார். சபையின் அங்கத்தினரான வேறொருவர், ஒரு பிரச்சினை குறித்து வினவப்பட்டபோது, சபை கூறப்போவது இன்ன இன்னதாகவே இருக்கும் எனக் கூறினார். நான் இந்த இரண்டு சூழ்நிலைகளையும் இங்கு குறிப்பிடுவதன் காரணம் இவை இரண்டுமே பொதுவாக நிலவும் மனப்பான்மைகளைப் பிரதிநிதிப்பவையே. முதலாமவர், அவர் ஒன்பது பேர்களையும், ஆனால் தனித்தனியே, சந்தித்திருந்தாலும், அவர்கள் தனித்தனியே சமூகத்தின் அங்கத்தினர்களே என்றும் ஒரு சபையின் முடிவை அவர்களால் எடுக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டாமவர், தம்மைத் தவிர்த்து பிற எட்டு பேர்களின் சார்பாக இவரே யோசித்து விட்டார்.

கீத் ரேன்சம்-கெல்லர், மிகவும் எளிமையான ஆனால் மறக்க முடியாத வகையில் பஹாய் கலந்தாலோசனையை விளக்குவார். அவர், அது ஒரு சூப் செய்வதைப் போன்றது என்பார். ஒருவர் உப்பிடுவார், மற்றவர் இறைச்சி, வேறொருவர் காய்கறிகள், இத்யாதி இத்யாதி. இறுதியில் உங்களுக்கு கிடைப்பது, உப்போ, இறைச்சியோ, காய்கறிகளோ தனித் தனியே அல்ல, ஆனால் எல்லாவற்றின் கலப்பால் உண்டாகியுள்ள புதிதான வேறொன்று.

வெற்றிகரமான பஹாய்க் கலந்தாலோசனையில், ஒவ்வோர் அங்கத்தினரும் சபையின் முடிவில் திருப்தி கொள்வார், அல்லது குறைந்த பட்சம் கலந்தாலோசனை நடத்தப்பட்ட விதத்திலாவது மனநிறைவு கொள்வார். உலகாச்சார ரீதியில் பார்த்தோமென்றால், அது பெரும்பான்மையினரைக் கவர செயலாற்றி, அவர்களை உங்கள் கட்சிக்கு வென்று, பிறகு உங்கள் வாக்கைச் செலுத்துவது: பிறகு தோற்றவர்களைப் பார்த்து மரியாதையாக எள்ளி நகையாடி, வீட்டிற்குச் சென்று உங்கள் மனைவியிடம் நீங்கள் எப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் என தம்பட்டம் அடித்துக் கொள்வது. ஆனால், இது பஹாய் கலந்தாலோசனை அல்ல.எல்லா 9 சபை அங்கத்தினர்களும் ஒரே கட்சியினராகையால், தனி அங்கத்தினர் என்பவர் சேருவதற்கு எந்த கட்சியும் கிடையாது: அனைவருமே சமயத்தின் அதி பெரும் நன்மையைத்தான் விரும்புகின்றனர். ஒரு சபை அங்கத்தினர் தான் நினைப்பதைப் பலவந்தமாகத் திணிப்பதற்காகச் சபையின் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. அவர், மற்ற எட்டு பேர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த பிறகு தனது கருத்து எவ்வாறு இருக்கும் என்பதை அறியவே கூட்டத்திற்கு செல்கிறார். அவர் ஒரு பிரச்சினையைத் தன் கோணத்தில் இருந்து மட்டுமே காண்பதால், அவர், பஹாய் நிர்வாகக் கோட்பாடுகளுக்கு ஒத்த ஒரு முடிவை அடைவதற்கு அதே பிரச்சினையின் வேறு எட்டுக் கோணங்களைத் தான் அதே பிரச்சினையை நோக்கும் அதே கோணத்தோடு ஒன்று சேர்த்திட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார். ஒரு மிகவும் சிறந்த முடிவென்பது எல்லா ஒன்பது கருத்துக்களையும் ஒன்றாக உள்ளடக்கியதாகவே இருக்கும். இந்த ரீதியில், ஒரு ஆன்மீக சபையானது, அமைப்பில் ஒரு பஹாய்த் தொழுகை இல்லத்திற்குச் சமமாகும். எந்தவொரு அங்கத்தினரும் கூட்டத்தை விட்டு அகலும்போது, அவர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவோ, தன் கருத்துக்களைக் கூறமுடியாமல் போனதாகோ, சிறுமைப் படுத்தப் பட்டதாகவோ அல்லது கண்டுகொள்ளப்படாமல் போனதாகவோ நினைக்காமலிருப்பதை மற்ற அங்கத்தினர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே வேளையில், ஒர் அங்கத்தினர் தான் சிறுபான்மையினனாக இருக்கின்றோம் எனவும், சபை தவறுகள் செய்கின்றதெனவும் நினைக்கலாம். இது பரவாயில்லை.எல்லாக் காலங்களிலும் பெரும்பான்மை முடிவுகளையே நமது சமயப் போதனைகள் வேண்டுகின்றன. அப்படி தவறுகள் ஏதும் நடந்துவிட்டால், ஒற்றுமை குலையாத வரை இத்தவறுகள் நிவர்த்தி செய்யப்படலாம் எனவும் அவை உறுதியளிக்கின்றன. சிறிது அறிவாளியான ஓர் அங்கத்தினர் சில வேளைகளில் தமது அறிவின் காரணமாக கூட்டத்தில் தாம் சிறுபான்மையினராக இருக்கக் காணலாம். இது போன்ற நிலைகளில் அவர் பொறுமையையும் அன்பையும் கடைபிடித்தே வரவேண்டும். ஏனெனில் அவர் சொல்வது சரியென காலம் நிரூபிக்கும், அதே வேளை பிற அங்கத்தினர்களும் அவரது கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும் அவர் வெளிப்படுத்த முயலும் உண்மையின் குறிப்பிட்ட அம்சத்தை மதிக்கவும் செய்வர். ஒரு புதிய அங்கத்தினர் இது போன்ற நேரங்களில் கண்டன அடிப்படையில் ராஜிநாமா செய்வதே இயல்பாக இருக்கக் காணலாம்.இப்படி ராஜிநாமா செய்வது, அவரைத் தேர்வு செய்தோரை ஒதுக்கச் செய்வதோடு அவரது நடத்தையின்பால் தீய விளைவுகளையும் உண்டாக்கும். தனது ராஜிநாமாவிற்குப் பிறகு என்ன செய்வதென அவருக்குத் தெரியாது. நடப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதே வேளை சூழ்நிலையைச் சரி செய்வதற்கு உதவக்கூடிய நல்ல வாய்ப்பையும் அவர் தவறவிட்டுவிட்டதோடு, சமூகத்தில் அவரது கருத்துக்கள் கொண்டிருந்து அழுத்தமும் அவரது செயலால் குறையத் தொடங்கிவிட்டது. அதனால் அவர் கூறும் கருத்துக்களைச் செவிமடுப்போர் குறைவாகவே உள்ளனர். பஹாய் வழியாகப்பட்டது, ஈட்டி முனையை நேருக்கு நேர் சந்திப்பதும், துன்பத்தைக் கண்டு மறைந்திடாமல் அதை தேடிச் செல்லவும் வேண்டும் என்பதே ஆகும். அதே வேளை ஒருவர் நல்ல நம்பிக்கையாளராக இருப்பதோடு சகல நிர்வாகம் சார்ந்த கடமைகளிலிருந்தும் தம்மை விலக்கிக் கொள்ளலாம். ஆனால் இதன் பின் விளைவு அவருடைய நற்குணங்களும் அவரது ஆற்றல்களும் பாதிப்படைகின்றன.ஒரு முழுமையான இணக்கநயப் பண்பு இல்லாமல் சபைக் கலந்தாலோசனை நடைபெற முடியாது. இதன் காரணமாகவே பஹாவுல்லா இந்த இணக்கநயம் பற்றி வெகுவாகவே குறிப்பிட்டுள்ளார். குறுக்கிடுவது, உரக்கப் பேசுவது, முகத்தை சுழிப்பது போன்ற–நாம் வெளி உலகில் காணக் கூடியவை–உண்மையை விஞ்ஞான ஆய்வு ரீதியில் ஆராய்ந்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்திற்குத் தேவையில்லை. தமது கடமையாகச் சபைத் தலைவர், பல முறைகள் பேசுவதற்கு–தேவைப்பட்டால் நல்லதொரு முடிவேற்படும் வரையில்–உங்குளுக்கு வாய்ப்பளிக்கிறார்–ஆகவே நீங்கள் இடையூறு செய்யத் தேவையில்லை. பஹாய்க் கோட்பாடுகளுக்கு இணங்க ஒரு முடிவிற்கு வருவதற்காக நீங்கள் கூறுவதை உன்னிப்பாகச் செவிமடுக்க வேண்டும் எனும் கடமையை உங்கள் சக அங்கத்தினர்கள் நிறைவேற்றினார்கள் என்றால்–நீங்கள் உங்கள் குரலை உயர்த்த வேண்டிய அவசியமில்லை.

பஹாய் கலந்தாலோசனையைச் சுலபமான ஒன்றாகச் செய்யக் கூடிய இரகசியம் ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அப்துல் பஹா அவர்களின் நினைவாலயத்தில் நாம் ஓதக் கூடிய அவரது நேர்வு நிருபத்தில் இது காணக் கிடைக்கிறது. நான் குறிப்பிடும் அந்த வார்த்தைகளாவன: “உமது அன்பர்களின் பாதையில் என்னைத் தூசாக்குவீராக…” இந்தக் குறிக்கோளை அடையும் ஒரே நோக்கம் கொண்டுள்ள ஒன்பது பேர் குறைந்த அளவு நிர்வாகச் சிரமங்களையே எதிர்நோக்குவர். இவையெல்லாம் என்ன கூறுகின்றன என்றால், சபை அங்கத்தினர்கள் ஒருவர் ஒருவர் மேல் அன்பு செலுத்த வேண்டும். அப்படி அவர்கள் செய்யாது போனால், அவர்கள் தங்கள் சமூகங்களைப் பாழ்படுத்திடுவார்கள், அவை அதனால் புதிய அங்கத்தினர்களை ஈர்க்கவோ அல்லது பழைய அங்கத்தினர்களைத் தக்க வைத்துக் கொள்ளவோ இயலாமல் போய்விடும்.
ஆரம்பக் காலங்களில் ஒரு பஹாய் ஆக்கா நகரம் சென்று அப்துல் பஹாவின் முகாரவிந்தத்தைக் கண்ணுற்றார். அவர், ” நான் உங்கள் முகத்தை அப்படியே அமெரிக்காவில் உள்ள அன்பர்களிடம் என்னுடன் கூட எடுத்துச் செல்ல முடியுமானால்..” எனக் கூறினார். அதற்கு மாஸ்டர் அவர்கள், என் அன்பே என் முகம். அதை அவர்களிடம் எடுத்துச் செல்லவும். அவர்கள் ஒருவர்கொருவர் கொள்ளும் அன்பில் என்னைக் காணலாம், எனக் கூறினார்.

சோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும்


சோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும்
டாக்டர் பீட்டர் கான் அவர்கள் வில்மட் பஹாய் கோவிலில் ஆற்றிய உரையின் மொழியாக்கம்

(இச்சொற்பொழிவு, அமெரிக்க பஹாய்களைக் குறித்து ஆற்றப்பட்டிருந்தாலும், இதில் அடங்கியுள்ள விஷயங்கள் யாவும் அனைத்து பஹாய்களுக்கும் பொருந்தும் என்பதை வாசகர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்.)

அன்பார்ந்த நண்பர்களே,
அமெரிக்க பஹாய் சமூகத்தின் மையமாக விளங்கும் இவ்விடத்தில் மீண்டும் ஒன்று கூடியிருப்பதில் ஏற்பட்டிருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை என் சார்பாகவும் என் மனைவியின் சார்பாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மிச்சிகன் மாகாணத்தில் நாங்கள் 12 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றோம். அவை, நாங்கள் சமயத்தைப் பற்றியும் பஹாய் சமூகத்தைப் பற்றியும் கற்றுணர்ந்த உருவாக்கம் மிக்கவையும் களிப்பு மிகுந்தவையுமான12 வருடங்கள்.

இந்த நிகழ்வின் போது நாங்கள் அமெரிக்கா திரும்பியிருக்கும் இவ்வேளையில், அந்த வருடங்களின் நினைவுகளும், அவ்வேளையில் எங்களுக்கு அறிமுகப்பட்டிருந்த அமெரிக்க பஹாய்களின் ஊக்கமும் அர்ப்பண உணர்வும் அற்புதங்களும் எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளன. இன்றிரவு நான் உங்களில் ஒருவன் என்ற நிலையிலேயே உங்கள் முன் உரை நிகழ்த்துகின்றேன். உலக நீதி மன்றத்தின் சார்பாக நான் இங்கு உரை நிகழ்த்தவில்லை. நிகழ்காலத்தில் அந்த மேன்மை மிக்க சபையின் அங்கத்தினராகும் வாய்ப்பு பெற்ற ஒருவர் என்ற முறையிலேயே, ஒரு தனி பஹாய் என்ற முறையிலேயே, சொற்பொழிவாற்றுகின்றேன். ஆக, இங்கு உங்களுக்கு முன் நான் சமர்ப்பிக்கவிருக்கும் எண்ணங்கள் என்னுடைய சொந்த எண்ணங்களே ஆகும்.

பாதுகாவலர் ஷோகி எ*பெண்டி அவர்கள், பாதுகாவலர் என்ற முறையில் தமது பணிக்காலத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து முக்கியத்துவம் கொடுத்து வந்த ஒரு விஷயத்தின்பால் என்னுடைய மற்றும் உங்களுடைய கவனத்தைத் திருப்ப விழைகின்றேன். பார்க்கப் போனால், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குத் தாம் அனுப்பிய ஜனவரி 21, 1922 எனத் திகதியிடப்பட்ட முதன் முதற் கடிதத்தில் பாதுகாவலர் இவ்விஷயம் குறித்துக் கவனத்தை ஈர்த்தும், அடுத்தடுத்து வந்த கடிதங்களில் அதைப் பற்றி மறுபடியும் மறுபடியும் குறிப்பிடவும் செய்துள்ளார். அவ்விஷயம் யாது?

பாதுகாலர் அவர்கள், அமெரிக்க நம்பிக்கையாளர்கள், வரப்போகும் காலங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என 73 வருடங்களுக்கு முன்பு கூறினார். அவர்கள், உடல் சித்திரவதைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த மனச்சோதனைகளை எதிர்நோக்குவர், எனக் கூறினார். அவை அமெரிக்க பஹாய்களைத் தூய்மை பெறச் செய்யவும் அவர்களை மேலும் அறிவுடையோர் ஆக்கவும் சம்பவிக்கக் கூடியவை எனக் கூறினார். சில வருடங்களுக்குப் பிறகு அவர் அதே விஷயத்தைப் பற்றி மறுபடியும் குறிப்பிட்டார். “மேற்கு நாடுகளைச் சார்ந்த தமது அன்பிற்கினியவர்களை நிச்சயமாக தாக்கக் கூடிய கடுமையான சிந்தனா சோதனைகளைப் பற்றி, இவ்வுலகத்தில் தமது பணிக்காலத்தின் இறுதி சில வருடங்களில் நமது அன்பிற்குகந்த மாஸ்டர் அவர்கள் நமக்குக் குறிப்புடன் விடுத்த எச்சரிக்கைகளைத்தான் நாம் எத்துணை விரைவில் மறந்துவிடுகிறோம்,” எனக் கூறினார். “அவர்களின் உயர்வுமிக்க பணிகளுக்காக அவர்களை மாசகற்றி தூய்மைப்படுத்தி தயார் செய்யக்கூடிய சோதனைகள் அவை.”

தவிர்க்க இயலாத சிந்தனா சோதனைகள்

அமெரிக்க பஹாய்களைத் தயார்படுத்தக்கூடிய, இனி வரவிருக்கும் தவிர்க்க இயலாத சிந்தனை சார்ந்த சோதனைகள் என பாதுகாவலரால்  வர்ணிக்கப்படும் இவ்விஷயம், அவரது எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் தோன்றியும், உலக நீதி மன்றத்தால், அதன் மே 19, 1994 என திகதியிடப்பட்ட நீண்ட கடிதத்தில், “அவர்களைத் தூய்மைப்படுத்த தாம் அனுப்ப வாக்குறுதியளித்திருக்கும் அப்துல் பஹாவின் அந்தச் சிந்தனா சோதனைகளில் அவர்கள் மறுபடியும் மறுபடியும் வெற்றிபெற அமெரிக்க பஹாய்களுக்குத் தெய்வீக வலிமை அருளப்படுவதாக,” என அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் பிரார்த்தனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாவலர் எழுதியவற்றில் பல பகுதிகள் இந்த சிந்தனை சார்ந்த சோதனைகளைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, அமெரிக்க பஹாய்களுக்குப் பாதுகாவலரால் எழுதப்பட்டு பிரசுரமான கடைசி செய்தி ஒன்றில், வருங்காலங்களில் எதிர்ப்பார்க்கக் கூடியவற்றை அவர் முன்குறிப்பிட்டுள்ளார். அவர், வருங்காலங்களில் பஹாய் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய வெளிச்சோதனைகள் சிந்தனை ரீதியில் அமைந்திருக்குமே அன்றி உடலை வருத்துவனவாக இருக்காது எனக் கூறியுள்ளார். நமது சமயத்தை வெளியிலிருந்தே அழித்திட குறிவைக்கக்கூடிய பலம் வாய்ந்த வைதீக மத ஆச்சாரங்களை ஆதரிக்கும் மதத்தலைவர்களான எதிரிகளின் தாக்குதலுக்கு அது ஆளாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 1957 எனத் திகதியிடப்பட்ட அந்த இறுதிச் செய்தியில், மேலும், அமெரிக்க பஹாய்களுக்குச் சிந்தனா சோதனைகள் சமயத்திற்கு உள்ளளிருந்தே வரும் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சமுதாயத்திற்குள் இயங்கும் பல சக்திகளை அவர் வரிசைப்படுத்தி, அந்தச் சக்திகளின் தாக்கத்தினால் சமயத்தின் நிர்வாக மையங்கள் உள்ளிருந்தே கடுமையான ஆன்மீகச் சவால்களுக்கு உட்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டு, “உள்ளிருந்தே அதற்குக் குழிபறித்திட முயலும் துரோகச் சக்திகளை,” எதிர்த்திடும் முயற்சிக்கு ஏதுவாக பஹாய் சமூகத்தைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நண்பர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வசனங்கள் அமெரிக்க பஹாய் சமூகத்தின் சீதனங்களாக உள்ளவற்றின் ஒரு பகுதி எனக் கொள்ளப்படவேண்டும். சவால்கள் மிக்க காலங்கள், சிரமங்கள் மிக்க காலங்கள், சோதனைகள் மிக்க காலங்கள் மற்றும் அவற்றோடு சேர்ந்து பெரும் வெற்றிகள் நிறைந்த காலங்கள் ஆகியவற்றை முன்குறிப்பிடும் வசனங்கள் இவை.

நான் ஏற்கனவே வாசித்த ஒரு வசனம் குறிப்பிடுவது போல், இச்சோதனைகள், அன்பர்களை “மேலும் அதிக ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யவும்,” “மேலும் அதிக காந்தியுடன் ஒளிரவும்,” “பாப், பஹாவுல்லா, மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் வாசகங்களில் வழிவகுக்கப்பட்டிருக்கும் தமது மகிமை நிறைந்த எதிர்காலத்தை அடைந்திட அமெரிக்க பஹாய் சமூகத்திற்கு உதவவும்,” நோக்கம் கொண்டுள்ளன” என பாதுகாவலர் வருணிக்கின்றார்.

இங்கு நான் குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவெனில், நாம் அத்தகைய சிந்தனா சோதனைகள் மிகுந்த காலத்தில் வாழ்கின்றோம் என நானும் காலப்போக்கில் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் வரப்போவது  வரக்கூடிய காலங்களில்தான்  என்றில்லாமல், அவை இப்போதே தோன்றிவிட்டன.

சிந்தனா சோதனைகளின் இயல்பு

நான் இதை ஏன் சொல்கிறேன்? சிந்தனா சோதனைகளின் இயல்புதான் நான் இதைச் சொல்வதற்குக் காரணமாக உள்ளது. உடல் சார்ந்த சோதனைகளைப் பற்றி நாம் அனுபவப்பட்டும் அறிந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு குழுமியுள்ள கூட்டத்தினரிடையே உள்ள நமது சமயத்தின் தொட்டிலாகிய இரானைச் சேர்ந்த பல அன்பர்கள் இவ்வித உடல் வதை சார்ந்த சோதனைகள் குறித்த அனுபவம் நன்கு பெற்றுள்ளர். 150 வருடங்களாகப் பால்ய சமயமான இது பல நாடுகளில் உடல் பொருள் சார்ந்த சோதனைகளைச் சந்தித்துள்ளது — சித்திரவதைகள், சிறையிலிடுதல், தியாகமரணம், குடும்பங்களும் இல்லங்களும் சிதரிப்போகுதல் ஆகியவை. ஆனால் நாம் சிந்தனா சோதனைகளில் இன்னும் அனுபவப்படவில்லை.

உலக நீதி மன்றம், ஜனவரி 1986 எனத் திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தில், இறைவனின் சமயம் அறியப்படாத நிலையிலிருந்து வெளிப்படுகின்றது எனும் உண்மையைக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, அதன் பரிணாமம் குறித்துப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ள ஏழு படிகளின் முதல் படியை விட்டு இரண்டாவது படியான, சித்திரவதை அல்லது ஒடுக்கப்படும் கட்டத்திற்கு அது வந்துவிட்டது. சிந்தனா சோதனைகளைப் பற்றி, ஒரே உலகளாவிய பஹாய் சமூகமாக மேலும் மேலும் அதிகமாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு கட்டத்தை நாம் அடைந்தும் அடைந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு, இந்த இரவில் நாம் இங்கு கூடியிருக்கும் இந்த வேளையில், எனது உணர்வாகவும் எனக்குத் தோன்றுவதாகவும் உள்ளது நாம் இந்தச் சிந்தனா சோதனைகளைத் தற்போது அனுபவித்து வருகிறோம் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் என நான் குறிப்பிடும் அதற்கு அர்த்தம் என்ன? அவையாவன, நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் அரித்தும் தகர்த்தும் பஹாய் சமூகத்தில் ஒழுங்கீனத்தை உருவாக்கவும் கூடிய சோதனைகள் ஆகியவை. சிந்தனா சோதனைகளின் ஓர் இயல்புக்கூறாக பஹாய் அல்லாத சமுதாயத்தில் நிலவக்கூடிய வாழ்க்கை முறைகள் மற்றும் மதிப்பீடுகளால் பார்வை மங்கியும், அவ்விதம் பார்வை மங்கிப்போவதனால் இந்தச் சிந்தனா சோதனைகளை நாம் கடக்க முடியாமல் போவதும் ஆகும்.

இவ்விதச் சோதனைகளின் அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டும், ஏனோ தானோ என்றிருந்தும், காலம் தாழ்ந்து இச்சோதனைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளக்கூடிய ஓர் ஆபத்தான நிலையிலும் நாம் இருக்கின்றோம். இது, போர் வீரன் ஒருவன் கத்தி கேடயங்களுடன் போருடை தரித்து போருக்காக அதிக நேரம் காத்துக் கொண்டிருக்க, ஆனால் போரோ அவனைச் சுற்றிலும் நெடு நேரமாக நடந்து, அவன் அங்கு நின்று கொண்டிருக்கும் போதே ஒரு முடிவிற்கும் வந்தவிட்ட ஓர் ஆபத்தான நிலையை அடையக்கூடிய நிலையில் நாமும் இருக்கின்றோம். அமெரிக்க சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையில் — நானும் என் மனைவியும் பல வகைகளில் நாங்களும் அமெரிக்கர்கள் என்றே எங்களை எண்ணிக் கொள்கின்றோம் — இச் சொற்பொழிவின் ஒலிப்பதிவு ஆஸ்திரேலியா போகாமல் இருந்தால் சரி! — இன்றைய சூழ்நிலையில் சிந்தனா சோதனைகளுக்கு மூன்று கூறுகள் உள்ளன என்பது என் எண்ணம். நான் அவற்றை குறிப்பிட்டும் பிறகு அவை ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாக உரையாற்றவும் விரும்புகிறேன்.

முதலாவதாக: லௌகீகங்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய காட்டாயத்தினால் நாம் சோதனகளுக்கு உட்படுத்தப் படுகிறோம் என்பது என் எண்ணம். இது நம் ஒவ்வொருவருடைய சோதனையும் ஆகும். இரண்டாவதாக: அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள ஒரு சுற்றுச்சூழலில் மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான நமது ஈடுபாட்டில் நாம் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். மூன்றாவதாக: சமூக நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு மாற்று மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையால் நாம் சோதிக்கப்படுகின்றோம்.

இந்த மகோன்னத நாட்டில் வாழும் நாம், இந்த விருவிருப்பு மிக்க சமூகத்தில் வாழும் நாம், இந்த மூன்று நிலைகளிலேயே சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பது என் எண்ணம். இச்சோதனைகளில் நாம் வெற்றி அடையப்போகின்றோமா அல்லவா? பஹாய் சமூகம் இதில் தேர்ச்சி பெறும். அமெரிக்க சமூகம் பெரும் அற்புதமிக்க விஷயங்களைக் கடந்து செல்ல விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர்களாகிய நாம், சோதனைகளுக்கு உட்பட்டவர்கள்.

ஓர் ஆன்மீக மெய்யுணர்வை ஏற்படுத்திக்கொள்ளல்

இவற்றில் முதலாவதாக உள்ளதை நான் முதலில் தொட்டுப் பேச விரும்புகிறேன். மனித வாழ்வின் லௌகீக கூறுகளில் அதிகரித்த அளவில் ஆழ்ந்தும், பார்க்கப்போனால் மூழ்கிப் போயும் உள்ள ஒரு சுற்றுச் சூழலில் ஒர் ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதானது அளிக்கும் சவாலே இப்போது நம்மை தாக்கக் கூடிய முதல் சிந்தனா சோதனையாக உள்ளது. பாதுகாவலரின் எழுத்துக்களும், சமீப காலங்களில் உலக நீதி மன்றத்தின் செய்திகளும், நண்பர்கள் தங்கள் வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்ளும்படியும், அதன் லௌகீக நிலையை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட, சர்வ -முக்கியத்துவம் வாய்ந்த, இன்றியமையாத ஆன்மீக நிலையிலான வாழ்வை உள்ளடக்கிய ஒர் உலக கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்ளும்படியும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றன.

இதைச் செய்யும்படி நாம் அழுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். நமது போதனைகளில் பஹாவுல்லாவின் மெய்யன்பர்கள் என்ற முறையில் நமது கடமையாக நமது வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்வது இருக்கின்றது என நமக்குக் கூறப்பட்டுள்ளது. நாம் இதை நிறைவேற்றுவோமானால், அதன்மூலம் நாம் நமது வலிமைகளையும் ஆற்றல்களையும் அதிகப்படுத்திக்கொள்வதோடு, அதன் மூலமாக மட்டுமே இன்பமும் நிறைவேற்றமும் காணமுடியும் எனும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்து.

இது நடைபெறாமல் போனால் — இச் சோதனையில் நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறப் போகின்றோம் என யாருமே கூறிட முடியாது — சமயமாகப்பட்டது வெறும்  கோட்பாடாகவும், சடங்குச் சம்பிரதாயங்களாகவும் உயிரற்ற அநுஷ்டானங்களாகவும்  தரம் குறைந்துவிடும். உலக நிகழ்வுகளும் உலக சரித்திரம் செல்லும் திசையையும் குறித்த லௌகீக வியாக்கியானங்கள்பால் நாமும் தவிர்க்க முடியாமல் ஈர்க்கவும் படுவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கலக்கங்கள்பாலும், பதட்டங்கள்பாலும், ஈடுபாடுகள்பாலும், தயக்கங்கள்பாலும் மற்றும் சந்தேகங்கள்பாலும் நாமும் ஆழ்ந்து போய், மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சி குறித்த நமது உலகளாவிய கண்ணோட்டமும் மறைந்து போகும். இத்தகைய ஆன்மீக செயற்பாட்டை நாம் ஆரம்பிக்காமலும் ஆக்கத்துடன் பின்தொடராமலும் இருந்தால் நமது சமூக வாழ்வானது சடங்குச் சம்பிரதாய முறைகளாகி சீரழிந்துவிடும்.

இது ஏன் நமக்குச் சிரமமாக இருக்கின்றது? இதன் காரணம், ஒரு சமூகத்தில் எத்துனை பஹாய்கள்தான் இருந்தபோதிலும், பஹாவுல்லாவை அறிந்திராதவர்களுடன் ஒப்பிடுகையில் அங்கு நமது எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. நமது வாழ்வின் அதிக பட்சமான நேரங்களை பஹாவுல்லாவை அறியாதவர்களுடனேயே கழிக்கின்றோம். அவர்களில் பலர் சிறந்தவர்களாகவும் தெளிவான மற்றும் உயர்ந்த கோட்பாடுகள் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர், மற்றவர்கள அதற்கு எதிரிடையாக இருக்கின்றனர். அடிப்படையில் லௌகீக ரீதியில் அமைந்துள்ள சக்திகள், தாக்கங்கள், சார்புகள், ஆலோசனைகள், மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றுக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். நாம் அறியாமலேயே இது நமது உலக கண்ணோட்டத்திற்கான மாதிரி ஆகின்றது.

பல தசாப்தங்களாகவும், நூற்றாண்டுகளாகவும், வாழ்க்கையை ஆன்மீக மயப்படுத்துவதற்கு உலக வாழ்க்கையை துறக்க வேண்டும் எனும் எண்ணம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. பொருட் செல்வங்களைத் துறந்திட வேண்டும் எனவும், நமது ஆன்மீக மேம்பாட்டிற்குச் சன்னியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும்  எனவும் நம்பப்பட்டு வந்துள்ளது. பஹாவுல்லா ஹுக்குக்குல்லா சட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த தவறான நம்பிக்கை அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

ஹுக்குக்குல்லா சட்டத்தின் மூலம் பஹாவுல்லா நமக்கு வழங்கியுள்ள தயவு மற்றும் சலுகைகளின் மூலம், நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தில் செலவு போக மிஞ்சியவற்றில் 19 விழுக்காடு இறைவனுக்குச் சொந்தம் எனவும், மீதமுள்ள 81 சதவிகிதம் நமக்குச் சொந்தம் என்பது பஹாவுல்லாவின் அடிப்படைக் கூற்று. மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக அதை அர்ப்பண உணர்வோடு நாம் கொடுக்க விரும்பலாம். அப்படி செய்ய விரும்பாமலும் இருக்கலாம். அது நம்முடைய பிரச்சினை. அதில் ஒரு பகுதி இறைவனுக்குச் சொந்தம். மனசாட்சி குறித்த ஒரு விஷயமாக ஹுக்குக் செலுத்த நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். ஹுக்குக்குல்லாவிற்கு நாம் காணிக்கை செலுத்துகிறோம் எனக் கூறுவது கிடையாது. தேசிய, உள்ளூர் மற்றும் அனைத்துலக நிதிகளுக்கு நாம் நிதி வழங்குகிறோம், ஆனால் ஹுக்குக்குல்லாவிற்கு நாம் பணம் கட்டவேண்டுமே அன்றி காணிக்கை கொடுப்பதென்பது கிடையாது.

ஹுக்குக்குல்லா குறித்த விவேகம்

ஒருவர் ஆன்மீக மயப்படுவதற்குச் சகல பொருட் சுகங்களை, நாட்டங்களை மற்றும் நன்மைகளை முழுக்கத் துறக்க வேண்டும் எனும் கோட்பாடு, ஹுக்குக்குல்லா சட்டம் அளிக்கும் அகப்பார்வை மற்றும் விவேகத்தினால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. நான் இங்கு கண்டுணர்ந்த வகையில், ஆன்மீகவியல் பற்றியும், அதை நாம் எப்படி அடைவது என்பது பற்றியும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் இதுவே நமது சவால். நம் ஒவ்வொருவருக்கும் இது ஒரு சவால் — ஆன்மீக ரீதியிலான ஒரு மேம்பாட்டை நாம் எப்படிப் பெறுவது என்பது பற்றியது.

ஆன்மீக மேம்பாடு குறித்த செயற்பாடு மூன்று கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் கருத்து. முதலாவதாக: இறைவனின் அவதாரம் நமக்கு வழங்கியுள்ள குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை இவ்வுலகில் அனுசரிக்கும் போது அவை மர்மான, ஆனால் இன்றியமையாத ஆன்ம சக்திகளை ஈர்க்கின்றன.

நமது சமயத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை நாம் அனுசரிக்கும் போது, மர்மமான, புரிந்துகொள்ள முடியாத வகையில்  ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை நாம் ஈர்க்கின்றோம். இது நமது புரிந்துகொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிக்கலான சிரமமான விஷயம். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பாப் அவர்கள் மற்றும் பஹாவுல்லாவின் வருகைக்கு முன்பான சமயக் காலக்கட்டத்தில் காந்தச்  சக்தியைப் பற்றி விஞ்ஞானிகள் முறையான ஆய்வு மேற்கொண்டார்கள். இதனால், மனிதகுலம் காந்தம் பற்றியும், காந்தச் சக்தி குறித்த கோட்பாடு பற்றியும், காந்தத்தின் இயல்புப் பற்றியும் ஒரளவு அறிந்து கொள்ளமுடிந்தது. சிறிய அமைப்புமுறைகளோடு கூடிய, ஒரே திசையை நோக்கித் திரும்பியுள்ள அணுக்களால் அமைக்கப்பட்ட “டைப்போல்கள்” எனப்படுபவை காந்தவிசை இயல்பைத் தோற்றுவிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இதனோடு தொடர்புடையதே, வெகுதூரத்திலிருந்தே இயங்கக்கூடிய கண்ணுக்குப் புலப்படாத ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த காந்தச் சக்தி.

இதன் பயனாக, நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஆன்மீக மேம்பாடு தொட்ட செயற்பாட்டை அடிக்கோலி்டும் அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு, பஹாவுல்லா, அப்துல் பஹா மற்றும் பாதுகாவலரால் இந்தக் காந்தத்தின் உவமானத்தின் உதவியோடு சித்தரிக்கப்படுவதைக் காணலாம். காந்தத்தின் உவமை, இறைவனின் விதிகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும் சில விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படாத ஒரு வலிமை வாய்ந்த சக்தியை ஈர்க்கக்கூடியவை என்பதை நமது சமயத்தின் நடுநாயகர்கள் மிகவும் விருவிருப்புடன் எடுத்துக்காட்ட உதவியுள்ளன.

சில உதாரணங்களை நான் உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன். ஓரிடத்தில், “தயவு மிக்கவரின் உறுதிப்பாடுகளைப் பற்றுறுதி எனும் காந்தமே ஈர்க்கின்றது.” அப்துல் பஹா கூறுவது, “இறைவனை நினைவு கூறுவதென்பது உறுத்திப்பாட்டையும் உதவியையும் காந்தத்தைப் போல் ஈர்க்கக்கூடியது.” மறுபடியும், “ஒற்றுமையும் நல்லிணக்கமுமே இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்,” என மேலும் கூறப்படுகின்றது. “மனிதகுலத்தைச் சரியான பாதையில் வழிகாட்டுவதே இறைவனின் உதவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்.”

ஈர்க்கக்கூடிய காந்தக்கல்

“என்றும் இல்லாத வகையில், இன்று, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே விண்ணுலகிலிருந்து ஆசீர்வாதங்களை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்,” என பாதுகாவலர் கூறுகின்றார். வேறோர் இடத்தில், “சமயத்தைப் பரவச்செய்வது எனும் மகிமை பொருந்திய காரியத்தின்பாலும், பாஹாய் வாழ்வு வாழ்வது என்பதின்பாலும் கொள்ளக்கூடிய அர்ப்பண உணர்வு புனித ஆவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல்லை உருவாக்குகின்றது. இவ்வாறாகவே மேலும் பல வாசகங்கள் உள்ளன…

ஆகவே, என் அபிப்ராயத்தில் ஆன்மீக மேம்பாட்டைக் குறிக்கக்கூடிய அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காந்தக்கல் குறித்த கோட்பாடாகும் — லௌகீக ரீதியில் அணுக்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறை காந்தச் சக்தியை ஈர்ப்பது போல் பக்தி மனப்பான்மையுடனும் அர்ப்பண உணர்வுடனும் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட ஒரு சில காரியங்கள் ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை ஈர்க்கக்கூடியவை, எனும் கோட்பாடு. இந்தக் காந்தக்கல் குறிந்த கோட்பாடு பஹாய் வாசகங்களினூடே ஒருங்கே உருகியோடிடக் காணலாம். உதாரணமாக, தமது வெளிப்பாட்டினைக் குறிப்பிட்டு, அதைக் “காந்தம்” அல்லது “காந்தக்கல்” என பஹாவுல்லா வர்ணிக்கக் காணலாம்.

தமது வெளிப்பாடு, “உலகின் அனைத்து தேசங்களுக்கும் இனங்களுக்கும் காந்தக் கல்லாக,” விளங்கும் என அவர் கூறியுள்ளார். வேறோர் இடத்தில், பஹாவுல்லா இறைவனின் வெளிப்பாட்டாளர் என்பதை பின்வரும் வார்த்தைகள் மூலம் அப்துல் பஹா குறிப்பிடுகின்றார்: “படைப்புலகின் துருவத்தில் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களை ஈர்க்கும் ‘காந்தக் கல்லை’ இறைவன் வெளிப்படுத்தியுள்ளார்.”

வலிமை வாய்ந்த ஆன்மீகச் சக்திகளைக், குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈர்ப்பதாகிய இதுவே ஆன்மீக மயப்படுத்தும் செயற்பாட்டினை அடிக்கோலிடும் முதல் கோட்பாடு என்பது என் நம்பிக்கை.

ஆன்மீக மேம்பாடு அடைவற்கான செயற்பாட்டில், நான் காணும் இரண்டாவது நிலை கோட்பாடாக இருப்பது, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” என்பதாகும். முதலாவதில், நாம் பிரார்த்தனை, நோன்பு, போதித்தல், ஒற்றுமையைக் கடைபிடித்தல், ஆன்மீகக் கூட்டங்கள் நடத்துதல் போன்றவற்றைக் கடைபிடித்தால் ஆன்மீகச் சக்திகளையும் வலிமைகளையும் ஈர்க்கலாம் என்பதாகும்.

இரண்டாவது கோட்பாடாகிய “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” என்பது பின்வரும் உதாரணத்தின் மூலம் சித்தரிக்கப்படுகிறது.

நமது புனித வாசகங்களின் மூலம், நாம் பிரார்த்தனை செய்தால் ஆன்மீகச் சக்திகளை ஈர்க்கலாம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. நான் சிறிதளவுப் பிரார்த்தனை செய்து அதன்மூலம் அதே அளவு ஆன்மீக சக்திகளை ஈர்க்கின்றேன் என வைத்துக்கொள்வோம். இது எனது முயற்சிகளை மறுபலப்படுத்தும். இது என்னைப் பலவந்தனாக்கும். அதனால் நான் மேலும் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இந்த உதாரணம் ஓர் எளிமையான மாதிரி என்றாலும், என்னுடைய நோக்கத்திற்கு அது போதுமானதே ஆகும். ஆக, நான் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இது  மேலும் அதிக அளவிலான ஆன்மீக வலிமைகளை ஈர்க்கும். நான் அதற்கும் மேலும் அதிகமாகப் பிரார்த்திப்பேன், அது அதற்கும் மேலும் அதிகமாக ஆன்மீக வலிமைகளை என்பால் ஈர்க்கும். நான் மேலும் பிரார்த்தனை செய்வேன், அதன்மூலம் என் வலிமைகள் குவிந்து கொண்டே போகும்.

இரண்டாவது கோட்பாடு குறித்து, “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” எனும் அடிப்படையிலேயே நான் பேசப்போகிறேன். நாம் சிறிதளவுடன் ஆரம்பிக்கின்றோம். அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்க்கின்றது, உங்களைப் பலவந்தனாக்குகின்றது. நீங்கள் மேலும் அதிகமாகச் செயலாற்றுகின்றீர்கள், அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்த்துக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையிலேயே, ஆன்மீகக் குணங்களைப் பின்பற்றவும், பக்தியை அடிப்படையாகக் கொண்ட — போதித்தல், காணிக்கை வழங்குதல், சமயக் காரியங்களில் ஈடுபடல் போன்ற செயல்களில் — அவை நமது முயற்சிகளைப் பலப்படுத்தும், நாம் மேலும் மேலும் அதிகமாகச் செய்திட ஊக்கம் தரும் — எனும் நம்பிக்கையில் ஈடுபடக் கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.

கோவில் எழுப்பப்பட்டுவிட்டது

இந்த விளக்கத்துடனேயே–இந்த “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” எனும் கோட்பாட்டுடனேயே — இந்த ஒரே வழியிலேயே, 1912-இல் இதே இடத்தில் அப்துல் பஹா உச்சரித்ததாகக் கூறப்படும்,  நமது புனித வாசகங்களில் தோன்றும் வினோதமானதும் மர்மமானதுமான ஒரு கூற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அன்று நடந்த நிகழ்ச்சியில், நாம் இங்கு கூடியிருக்கும் இந்த மகோன்னதமான கட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியபோது, அவர் வினோதமான ஒன்றைக் கூறினார். அடிக்கல் நாட்டி முடிந்த பிறகு, அங்கு கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து, “கோவில் எழுப்பப்பட்டுவிட்டது” எனக் கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“கோவில் எழுப்பப்பட்டுவிட்டது.” 1912-இல் இப்போது நாம் காணும் இந்த கட்டிடம் எதுவும் இங்கு இல்லை. அப்போது ஒரு குறிப்பிட்ட கல்லையே இங்கு மண்ணில் பதித்தனர். அதன் பிறகு, “கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது,” என அப்துல் பஹா கூறினார். இவ்வித ஒரு கூற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? என்னுடைய நம்பிக்கை, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் இந்தக் கோட்பாட்டின் வெளிப்பாடே அது என்பதாகும். அப்போது அப்துல் பஹா விளக்கியது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், மற்ற அனைத்தும் சரியாகிவிடும்,” என்பதே ஆகும்.

“ஆரம்பியுங்கள், முதல் அடி எடுத்து வையுங்கள், நீங்கள் ஆத்யாத்மீகச் சக்திகளை ஈர்க்கக்கூடும். அது உங்களது முயற்சிகளை மறுபலப்படுத்தும். நீங்கள் மேலும் அதிகமாகக் காரியங்கள் ஆற்றக்கூடும், மேலும் அதிகச் சக்திகளை ஈர்க்கக்கூடும், பிறகு கோவிலும் தோற்றம் பெறும், 1912-இல் நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிகளால் அது கட்டி முடிக்கப்பட்டுள்ளது,” என1912-இல் அவர் கூறினார். இதன் அடிப்படையிலேயே, ஆன்மீக மயப்படுதலின் செயற்பாட்டிற்கு இன்றியமையாத இந்த “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் கோட்பாட்டை நான் காண்கின்றேன்.

நான் ஏற்கனவே கூறியது போல், ஆன்மீக மயப்படுதலுக்கான செயற்பாட்டை ஒட்டி மூன்று கோட்பாடுகள் இயங்குகின்றன. அதாவது, முதலாவதாக காந்தம் போல் இயங்கி ஆன்மீகச் சக்திகளை ஈர்ப்பது. அடுத்தது, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் கோட்பாட்டிற்கிணங்க செயற்பட்டு மேலும் அதிகமான சக்திகளை ஈர்த்தும், அதன்மூலம் அச் சக்திகள் அத் தருணந் தொட்டு மேலும் அதிகமாகக் குவியத் தொடங்குவதும் ஆகும். இவ்விரண்டு கோட்பாடுகள் மட்டுமே வாழ்க்கையில் இருந்திருந்தால் அது எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும். ஆனால், இவ்விரண்டுக் கோட்பாடுகளோடு சேர்ந்து மூன்றாவதாகவும் ஒரு கோட்பாடு உள்ளது என மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்த மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியதாக உள்ளது.

சோதனை தவிர்க்க முடியாத ஒன்று. சோதனை நாடகப் பாணியை உட்படுத்துவது. நமது தனி மற்றும் கூட்டு வாழ்க்கையில் அது வெற்றிக்கும் தோல்விக்குமான தோற்றுவாய் ஆகும். ஆனால் நாம் முயற்சிகள் எடுத்திடும் போது, ஆன்மீகச் சக்திகளை ஈர்த்திடும் போது, நமது சக்திகளை மேம்படுத்திக்கொள்ளும் போது, நாம் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறோம்.

நாம் மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். சோதனைகள் ஆன்மீக மேம்பாட்டுடன் இணைந்தே வருவன என நாம் அறிவிக்கப்ப்டடுள்ளோம். இரண்டுக் கோட்பாடுகள் அல்ல ஆனால் மூன்று உள்ளன. மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியது.

துன்பங்கள், குழப்பங்கள், இழிநிலை, ஆகியவற்றின் போது அவற்றிற்குத் தேவையான மனவலிமை, சக்திகள் மற்றும் உறுதி, இருக்கின்றதா, அல்லது அவற்றால் ஏற்படக் கூடியச் சிரமங்களிலிருந்தும், எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளிலினால் ஆயாசப்பட்டு ஒதுங்கியும் போகின்றோமா என்பது குறித்தே நாம் சோதிக்கப்படுகிறோம்.

அதை விவரிக்கும் போது, சோதனைகளை உட்படுத்தும் இந்தச் செயற்பாடு மிகவும் அவசியமான ஒன்றெனவும், ஆக ஆன்மீக சக்திகள் தூண்டப்படவும், நாம் வளரவும், மேம்பாடடையவும், மேலும் சோதனைகள் இறைவனின் வெகுமதிகள் எனவும் பாதுகாவலர் அவர்கள் கூறுகின்றார். அதே வேளையில், சோதனைகள் தாமாகவே கடக்கப்படுவதில்லை என்பது குறித்தும் நாம் உஷாராக இருக்க வேண்டும். நாம் சோதிக்கப்படும் போது, நாம் மெய்யன்பர்கள் என்ற நிலை அந்த சோதனைகளை நாம் வெற்றிகொள்வோம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நமது சமயச் சரித்திரத்திலிருந்து பலர் சோதனைகளை வெற்றி கொண்டுள்ளனர் வேறு பலர் அவற்றில் தோல்வியுற்றும் உள்ளனர் என்பதை நாம் அடுத்தடுத்துக் காண்கின்றோம். அதே சமயம் இறைவனின் சமயம் அதன் ஒளிமிக்க இலக்கை நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

“சிந்தனா சோதனைகள்” என்பதே இன்றிரவு நான் பேசவிருப்பதின் கருப்பொருள். முதலாவது சிந்தான சோதனை என்பது லௌகீகங்கள் மிகுந்த சூழ்நிலையில் ஆன்மீக மேம்பாடடைய முயற்சி செய்வது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இதைச் செய்வதற்கு முன்பாக நம்மைத் தாக்கக் கூடிய  அபாயங்களை நாம் ஆராய வேண்டும்.

பக்தியோடு செய்யக்கூடியக் காரியங்கள், மற்றும் நமது சமயத்தின் அதி உயரிய நெறிமுறைகள் மற்றும் நீதிமுறைகள் குறித்த செயல்களில் மிகுந்த உறுதியுடன் ஈடுபட நம்மை அர்ப்பணிக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், நம்மைச் சுற்றிலும் உள்ள அமெரிக்க சமூகத்தால் முன்மாதிரிகள் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷயங்கள், பஹாய்கள் எனும் முறையில் நாம் ஏற்றுக் கொண்டுள்ளவற்றிற்குப் பல வகைககளில் முற்றிலும் எதிர்மாறானவை.

சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் நாம் இங்கு கூடியிருக்கவில்லை. இறைவனை நோக்கிய   நமது பாதையைக் கண்டுகொள்ள, மனிதகுலம் அனைத்தும் பெரும் குழப்பங்கள், சோதனைகள், சிரமங்கள் மற்றும் துன்பங்களால் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில் நாம் முன் நோக்கிச் செல்லத் தேவைப்படும் நமது பாதையை அறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே நாம் கூடியுள்ளோம். அதை, பஹாவுல்லாவின் பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் எனும் முழுமையான அறிவுடனேயே செய்யப்போகின்றோம் — பஹாவுல்லாவின் பாதையானது நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தினின்றும் பல வழிகளில் மிகத் தெளிவாக மாறுபட்ட ஒன்றாக உள்ளது.

ஒரே உதாரணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்: பஹாய்களின் நெறி தவறா வாழ்விற்குரிய இன்றியமையாத, ‘கற்புடைமை’ குறித்த நமது கோட்பாடாகப்பட்டது, உடலுறவு என்பது, ஒரு திருமணமான ஆண் பெண் இருபாலருக்கிடையில் மட்டுமே நிகழ அனுமதிக்கின்றது. இதுவே நமது முன்மாதிரி. நாம் வாழும் இந்தச் சமூகத்தின் முன்மாதிரி அல்ல அது. ஒரு சில இடங்களில் இதை “ஓரினக் காதல் எதிர்ப்பு” என வர்ணிப்பர். இது பல வகைகளாகவும் வர்ணிக்கப்படுகின்றது. எது எப்படியாகிலும் இதுவே நமது முன்மாதிரியாக உள்ளது. இதைத்தான் நமது சமயம் நமக்கு அறிவுறுத்துகின்றது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் அதற்குத் தக வாழ்கின்றதோ இல்லையோ, பஹாவுல்லாவின் விதிகளைப் பின்பற்றிச் செல்லக்கூடிய ஒரு பாதையில் நடப்பதற்கு நாம் நம்மை உட்படுத்திக் கொண்டுள்ளோம்.

குறிப்பிட்ட சில கோட்பாடுகளின் வாயிலாக நம்மைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து நாம் வேறுபட்டவர்களாக இருக்கின்றோம். உதாரணமாக, கடமை எனும் கோட்பாட்டில் நாம் வேறுபட்டவர்கள். இந்த “கடமை” எனும் வார்த்தை, மக்கள் நடுவில் மிகவும் பிரபலம் குறைந்துள்ள ஒரு வார்த்தை. ஆனாலும் நாம் கடமை மிகுந்த மக்கள். செய்யவேண்டும் எனும் இச்சை கொண்டிராத காரியங்களையும் நாம் கடமையுணர்வால் ஆற்றுகின்றோம். நாம் சிரமமான செயல்களில், ஆயாசமிக்கச் செயல்களில், கவனம் செலுத்த முடியாத செயல்களில் ஈடுபடும் மக்களாவோம். ஏன்? உயிர்த்தியாகத்தை இச்சித்து அல்ல, ஆனால் ஒரு கடமை உணர்வுடனேயே இவற்றைச் செய்கின்றோம்.

பஹாய்களாகிய நாம் கடமை உணர்வு மிக்க மக்கள். நாம் கட்டுப்பாடுள்ள மனிதர்கள். நாம் பொறுப்பு மிக்க மனிதர்கள். நாம் நேர்மை மற்றும் நம்பத்தகுந்தமை போன்ற குணங்களை மதித்து வணங்கும்  மக்களாவோம். லௌகீகமான ஒரு சுற்றுச் சூழ்நிலையில் ஆன்மீகப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

யாவற்றுக்கும் மேலாக, நமக்குத் துணிவு தேவைப்படுகின்றது — விடாமுயற்சி கொண்டவர்களாக, நம்மை ஆன்மீக மயப்படுத்திக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பவர்களாக, வேறு சிந்தனைகள் இல்லாமல், நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களின் சக்திகள் மற்றும் செல்வாக்கில் கவனம் இன்றி வித்தியாசமானவர்களாக இருக்கத் தேவைப்படும் துணிவு மற்றும் மன இசைவு நமக்குத் தேவைப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் இந்த இரண்டாவது சோதனை நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பது என் எண்ணம். இது  மனிதகுலத்தின் வருங்காலம் மற்றும் மாறிக்கொண்டு வரும் ஒர் உலகம் குறித்த விசார சிந்தனை உள்ள, கடமையுணர்வு மிக்க மனிதர்களாக நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்காக நமக்கு ஏற்படும் சோதனைகள். இறைவனின் சமயம் இவ்விதமான கடமையுணர்வு மிக்க மனிதர்களை மேலும் மேலும் வேண்டுகின்றது.

அமெரிக்காவின் வருங்காலம்

தமது விண்ணேற்றத்திற்கு அருகாமயை்ல் பாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு வாசகப் பகுதியில், அமெரிக்காவின் வருங்காலம் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் வருங்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய ஒன்றைப் பற்றி அங்கு அவர் குறிப்பிட்டுள்ளது சமீப காலங்களில் என் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அவர், அமெரிக்க பஹாய்கள் வருங்காலத்தில் ஒரு சவாலை எதிர்நோக்குவர் என கூறினார். அது எத்தகைய சவால்? “பற்றுறுதிக்கான அரண்” எனும் நூலில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், அமெரிக்க அன்பர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்களைப் பற்றிப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்று, “வருங்காலத்தில் அவர்களது ஆன்மீக மனோசக்திகளை அக்கறையின்மையும் ஊக்கமின்மையும் நிலைகுத்திடச் செய்துவிடும்” என்பதாகும்.

இன்று நாம் அந்தச் சோதனையை எதிர்நோக்குகின்றோம் — அதாவது, அக்கறையின்மையையும் ஊக்கமின்மையையும் வெற்றி கொள்ள வேண்டியதற்கான ஒரு சோதனை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள், அதிகரித்த அளவில் உலகினை மாற்றிடுவதற்கு ஆர்வமும், கொள்கைகளும், உணர்வெழுச்சியும் இன்றி உள்ளது நமக்குச் சோதனையாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் தனதுத் தூரநோக்கை இழந்து விட்டது. அது வீரர்களும் வீராங்கனைகளும் இன்றி இருக்கின்றது. அவர்கள் மதிப்பிழந்துள்ளனர். அவர்களுடைய இரகசியங்கள் எழுத்து பூர்வமாக அம்பலமாகிவிட்டன. அவர்கள் பயங்கொள்ளிகள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. வீர நாயகர்கள் கிடையா. வீர நாயகிகள் கிடையா. தூர நோக்கும் கிடையாது.

வேறெவரும் தன் மீது அக்கறை கொள்ளாத நிலையில் தன் மீது தானே முழு அக்கறை கொண்டு அன்றாடங் காய்ச்சி என்ற நிலையில் காலம் போய்க்கொண்டுள்ளது. வாழ வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும். வெளியே இருப்பது இரக்கமற்ற கொடூரமான உலகம்.

ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது

நாம் வெளியே காண்பது பஹாய் முறை அல்லவே! நாம் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் கண்டுண்டு உள்ளவர்களாயிற்றே! நாம் வைரியச் செயல்கள் புரிந்திட ஆணையிடப் பட்டுள்ளோம். நாம் தியாகங்கள் புரிந்திட ஆணையிடப்பட்டுள்ளோம். நாம் சித்தாந்தக் கொள்கைகளும் பொதுநல உணர்வும் கொண்டிட ஆனையிடப்பட்டுள்ளோம். நாம் ஒரு புதிய சமுதாயத்தை, ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கும் மக்கள். இன்னும் பிறந்திடாத பல தலைமுறையினரைப் பற்றி அன்புக் கொண்டும் அக்கறைக் கொண்டும் உள்ள மக்கள் நாம். வரக்கூடிய தசாப்தங்களில், நூற்றாண்டுகளில் தோன்றிடக்கூடிய அத்தலைமுறையினருக்கு இதை விட நல்ல வாழ்வு அமைந்திட, அமைதியும், ஒற்றுமையும், இணக்கமும், அவர்களது முழு இயற்சக்திகளும் மேம்பாடு கண்டிடுவதற்கான வாய்ப்பும் பெற்றிட, நமது வாழ்க்கையை நாம் அர்ப்பணிக்கக் காத்திருக்கின்றோம்.

இச் சித்தாந்தத்தின்பாலே நாம் பஹாய்கள் என்ற முறையில் ஆணையிடப்பட்டுள்ளோம். சமுதாயத்தின் இந்த அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மையை அகற்றி ஒரு புதிய உலகத்தை ஸ்தாபிப்பதில் அர்ப்பண உணர்வுடன் செயல்படுபவர்களெனும் தனிச் சிறப்புடன் நாம் திகழ வேண்டும்.

இது எதைக் குறிக்கின்றது? இதை நாம் எப்படி அடைவது? இது எப்படி ஏற்படப் போகின்றது? நம்பிக்கையாளர்கள் என்ற முறையில், நமக்கு, மனிதகுலத்தின் விமோசனத்தில் சமயத்தின் பங்கு பற்றி ஓர் ஆழமான புரிந்து கொள்ளல் தேவைப்படுகிறது என்பது என் அபிப்ராயம்.

பலவிதமான மதங்கள் நிறைந்து கிடக்கின்ற உலகத்தில் நாம் மேலும் ஒரு புதிய சமயத்தைப் பரப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கவில்லை. மனிதகுலத்தின் பலசமய சமூகத்தினரிடையே நாம் பலத்தைப் பிரயோகித்துப் பிரவேசித்திட முயற்சிக்கவில்லை. உலகம் முழுவதும் பரவியுள்ள சமயம் எனும் பெயருடன் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் இடம் பிடித்திட்டதோடு நாம் மனத்திருப்தி கொள்ளவில்லை. தேசியச் சபைகள், உள்ளூர் சபைகள், மதிப்புமிக்க நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை கண்ணுக்குக் குளிர்ச்சியாக வரிசைப்படுத்துவதில் மட்டும் நாம் திருப்தியடையவில்லை. நமது சமயம் “எல்லாக் காலங்களிலும் வாக்களிக்கப்பட்டவரது” சமயம். ஏட்டில் உள்ள, ஆயிரம் ஆயிரம் வருடங்களான சரித்திரக் காலம் முழுதும் காணப்படும், சிரமங்கள் மற்றும் குழப்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு தோன்றியுள்ள, உலகத்தை இரட்சிக்க வந்தவரது சமயமே நமது சமயம்.

மனித நாகரிக வரலாற்றில் ஒரு திருப்பு முனையில், பஹாய்கள் என்ற முறையில், பெரும் சிரமத்துடனும் துன்பத்துடனும் இப்போது ஒரே ஐக்கியப்படுத்தப்பட்ட பொருளாக அச்சில் வார்க்கப்படும் மனிதகுலத்தின் சரீரத்தில் புத்துணர்வை ஊட்டிவிடக்கூடியக் கருவிகளாக, நாம் நிற்கின்றோம்.

தற்போதைய உலக நீதி மன்ற அங்கக்தினர் எனும் எனது நிலையில், எவ்வித விதிகளின் கட்டுப்பாடும் இன்றி, பாதுகாவலரின் எழுத்துக்களில் தோன்றும் ஒரு குறிப்பைப் பற்றிச் சில நேரங்களில் நான் சிந்தித்தது உண்டு. இப்படியும் அல்லது அப்படியும் இருக்கலாம் எனும் சந்தேக மொழி இன்றி திண்மையாகத் தோன்றும் வாசகம் அது.

அந்த வாக்கியத்தில், பாதுகாவலர், நான் அங்கத்தினராக இருக்கும் அந்த உலக நீதி மன்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். “இந்த மன்றமாகப் பட்டது, தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று,” எனக் கூறுகின்றார். அப்பகுதியை நான் படிக்கும்போது, “மனிதகுலத்தின் வருங்காலத்தைப் பற்றி இது எதைக் குறிக்கின்றது?” என நான் என்னையே கேட்டுக் கொண்டேன். உலக நீதி மன்றத்தின் இருக்கையின் வாரியக் கூடத்தில் அமர்ந்தவாறு, மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எனது சக அங்கத்தினர்களைப் பார்க்கும் போது, நாங்கள் ஒன்பது பேரும் இந்த நீதி மன்றம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வேன். இந்த அதிவுயர்ந்தச் சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் திருவுருவின் அகத் தோற்றமாக விளங்கும் வலுக்குறைந்தச் சக்தியற்ற மனிதர்களே நாங்கள் என்பதை உணர்வேன்.

வரப்போகும் மாபெரும் மாற்றங்கள்

ஆனால் பல வருடங்களாக நான் ஓரளவுக்குப் பரீட்சயப்பட்டுள்ள, இந்த ஸ்தாபனம், இந்த உலக நீதி மன்றம், பாதுகாவலரின் நிச்சயமான, ஆணித்தரமான, சந்தேகத்திற்கு இடமற்ற வார்த்தைகளில் “தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று.” என நான் எனக்கே கூறிக் கொள்வேன். மனிதகுலம் எதிர்நோக்கக்கூடிய, வரப் போகும் மாபெரும் மாற்றங்களைக் குறிக்கும் ஒரு பகுதியாக இந்தப் பகுதியை நான் உங்களுக்கு அளிக்கின்றேன்.

எப்போது வருவார்கள் — எந்தத் தசாப்தத்தில், எந்த நூற்றாண்டில் — என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவ்ரகள் கண்டிப்பாக வருவார்கள் என்பது நமக்குத் தெரியும் — நாமெல்லோரும் அங்கத்தினர்களாக இருக்கும்  இந்த சமயம் இந்த உலகத்தில் மனிதகுலத்தின் சரித்திரத்தில் புரட்சிகரமான நிலையில் ஒரு பெரும் தன்மை மாற்றச் சக்தியாக செயல்படப் போகின்றது.

மனித அறிவிற்கு அப்பாற்பட்ட நோக்கங்களான, நாம் நம்பிக்கை கொண்டுள்ள, பஹாவுல்லாவுக்கும் அவரது வெளிப்பாட்டிற்கும் ஜீவனளிக்கும் அந்த இறைவனின் சக்தியின் மூலமே தோன்றிட்ட நோக்கங்களான சமயத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றின் பரிமாணம் குறித்த ஒரு அகக்காட்சியை நாம் நமது மனதில் மறு உருவகப்படுத்த முடியுமானால் — நாம் அதைச் செய்யக் கூடுமானால் — நாம் அந்த அகக்காட்சியை மறு உருவகப்படுத்தக் கூடும் — இந்த தலைமுறையிலும், இன்னும் பிறந்திடாத வரக்கூடிய எண்ணிக்கையற்றத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மனிதர்களும் ஆவோம் நாம்.

இறுதியாக, நான் இன்றிரவு உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பிய அந்த மூன்றாவது சிந்தனா சோதனையைத் தொட்டுப் பேசவிருக்கிறேன். உலகின் பல பாகங்களில் பஹாய் சகோதரர்கள் அனுபவிக்கும் ஒரு சவாலும் சோதனையும் ஆகும் அது. நான் இங்கு அமெரிக்க பஹாய்கள் என்ற முறையிலேயே எனது கருத்துக்களை உங்களுக்கு வெளியிடுகின்றேன், ஆனால் நான் சமீபத்தில் விஜயம் செய்திருந்த மற்ற பல நாடுகளிலும் இதே விதமான குறிப்புகளைத்தான் நான் வெளியிட்டுள்ளேன்.

என் கவலையெல்லாம் — மேற்கு நாடுகளையும், உலகின் பிற பகுதிகளைச் சார்ந்த நாடுகளையும் தாக்கும் ஆபத்தானதும் நெருக்கடியானதுமென நான் கருதும் — சமூக அமைப்புகள் மற்றும் ஸ்தாபனங்கள் பற்றி சில மனப்பான்மைகளை உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நாடுகளைச் சார்ந்த நம்பிக்கையாளர்கள் தொட்ட சிந்தனா சோதனையே.

முதலாவதாக, மக்கள் தங்களது அரசாங்கம் மற்றும் அரசியலாட்சி முறை குறித்து சந்தேக மனப்பான்மையும் நம்பிக்கையின்மையும் கொண்டுள்ளனர். தங்களது அரசியல் தலைவர்கள் ஊழல் மிக்கவர்கள் என்பதையும் அவர்களது சமூக அமைப்பின் அரசியல் முறை அவர்களைத் திக்கு முக்காடச் செய்தும், அவர்களது சுதந்திரத்தை வெகுவாகக் குறைத்தும், பல வழிகளில் அவர்களது துன்பங்களுக்குக் காரணமாக அது விளங்குவதையும், கொடுமையான அனுபவங்களினூடே இவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இன்றைய மக்கள் தாங்கள் ஒரே சமூகத்தினர் எனும் உணர்வைக் கொண்டிருக்கவில்லை. நேர்மையானவர்களாகவும், உயர் பண்புகளை உடையவர்களாகவும்,  நன்னடத்தையுடையவர்களாகவும் தோன்றுபவர்களை நம்பக்கூடாது என்பதைக் கசப்பான அனுபவங்கள் மூலம் கண்டு கொண்டுள்ளனர், ஏனெனில் அத்தகையத் தோற்றம் தந்தவர்கள் பிறகு அதற்கு நேர்மாறாக விளங்கியதே இதற்கு காரணம் ஆகும். ஆகவே, இவர்கள் மாற்ற இயலா தன்னிச்சைத் தன்மையை வளர்த்தும், கட்டுப்பாடற்ற தனி மனித சுதந்திரத்தைப் பூஜிப்பவர்களாகவும் ஆகிவிட்டனர்.

சமூகத்தின் மனப்பான்மைகள்

நமது சமூகத்திலுள்ள மக்கள் தங்களை ஆள்பவர்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் ஒரு சக்தியற்ற நிலையில் இருப்பதையே அதிகரித்த அளவில் உணர்ந்து வருகின்றனர். தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப் படாதவர்களாகவும், நடப்பு ஆட்சி முறையை மாற்ற முடியாத நிலையில் இருப்பவர்களாகவும், அதன் கொடுமையான எதிர்மாறான விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பின்விளைவுகளையும் அனுபவிக்க வேண்டியத் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளவர்களாகவும் தங்களைக் காண்கின்றனர். ஆகவே, அவர்கள் நடப்பு ஆட்சி முறைக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; அவர்கள் பயங்கரவாதிகளாகின்றனர்; அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; ஆட்சி முறையைக் கவிழ்க்க முயல்கின்றனர்; அதன் அழிவை நாடுகின்றனர்; தற்போது இருப்பதை விட வேறெதுவுமே நல்லதாகத்தான் இருக்க வேண்டும் என, ஒரு விதத்தில் உண்மையாகவே உள்ளதை, கூறுகின்றனர்

இவையே நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் அதிகரித்து வரும் மனப்பான்மைகள். பஹாவுல்லா அரசர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் அனுப்பிய தமது நிருபங்களில் இவற்றைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். “நெருக்கடியான மாற்றங்கள் நிகழும் காலம்” என பாதுகாவலரால் அழைக்கப்பட்ட இக்காலத்தின் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி அவர் விரிவாகவே விவரித்துள்ளார். அது இப்போது நம்மைச் சமீபித்துவிட்டது. நம் சமூகத்தில் உள்ள மக்கள் அதற்கான மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி அவர்களை நாம் கேட்டால் அதற்கு அவர்கள் நிறையவே நியாயங்கள் கூறுவர். நம்பிக்கையாளர்களாகிய நாம் எதிர்நோக்கக் கூடிய பெரும் சிந்தனா சோதனை, நமக்கே தெரியாமலும், அறியாமலும், கண்கூடாகவே தேய்ந்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் அத்தகைய மனப்பான்மைகளைப் பஹாய் நிர்வாக முறையினுள் புகுத்தி விடக் கூடியதே ஆகும்.

இது நமக்கான சோதனை. ஏனென்றால், நமக்குத் தெரியாத நிலையிலும் கூட அவற்றை நம்மோடு நாம் கொண்டு வந்தோமேயானால், பஹாவுல்லாவால் விதிக்கப்பட்டுள்ள நிர்வாக முறையை அது தகர்த்தும் சேதப்படுத்தியும் விடும்.

பாதுகாவலர் இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். “நமது தற்போதைய தலைமுறையினர், பெரும்பாலும் நிர்வாக அமைப்புகளோடு ஒப்பிடப்பட்டுள்ள ஊழல்களினால், எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும்  எதிர்ப்பு அளிப்பதாகவே தோன்றுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் சமயமும் இடித்துரைக்கப்படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் அரசாங்கமும் இடித்துரைக்கப் படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் திருமணமும் கூட இடித்துரைக்கப்படுகிறது.”

பஹாய்களாகிய நாம் நடப்பில் உள்ள இத்தகையச் சிந்தனைகளினால் பாதை தவறி விடக்கூடாது. அவை அவ்வாறாக இருந்திருக்குமாயின், இறை அவதாரங்கள் தங்களுக்குப் பின் தமது பணியினைத் தொடர வேறு ஒருவரை நியமித்திருக்க மாட்டார்கள். அந்த ஸ்தாபனங்களை ஊழல்கள் ஊடுருவியது உண்மையாகவே இருந்திருந்தாலும், அத்தகைய சீர்கேடுகள் அந்த அந்த ஸ்தாபனங்களின் அமைப்பினால் ஏற்படவில்லை, மாறாக, அவற்றுக்கு உள்ள அதிகாரம் மற்றும் தொடர்ந்து அவை செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து அவற்றை மேற்கொண்டு வழிநடத்தும் வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் அவை சீர்குலைந்து போயின. பாதுகாவலர் கூறுவது: “பஹாவுல்லா எல்லா ஸ்தாபனங்களையும் சமயத்தில் இருந்து நீக்கிவிட வில்லை, மாறாக கடந்தக் கால ஸ்தாபனங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கிய சீர்கேடுகளைத் துடைத்தொழிக்கக்கூடிய பாதுகாப்புக் கவசங்களை அளித்துள்ளார்.” என்பதாகும். அத்தகையக் கவசங்கள் யாவை என்பதைக் கண்டு கொள்வதும் கற்பதும் மிகவும் ஆர்வமளிக்கக்கூடியதாகவும், அவற்றை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது.

பற்றின்மையின் சவால்

வேறு வார்த்தைகளில் கூறப்போனால், நம்மைப் பற்றறுத்து, இக்காலத்தில் ஸ்தாபனங்கள்பால் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே நமக்களிக்கப்பட்டுள்ள சவாலாகும். பார்க்கப் போனால் இந்த அவநம்பிக்கையாகப்பட்டது, வழக்கில் இருப்பதோடு, துரிதமாக வளர்ந்தும் வருகின்றது. அதோடு, தங்களது நிர்வாக ஸ்தாபனங்கள்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரிதமாக வளர்ந்து வரும் அந்த நம்பிக்கையின்மை மற்றும் ஆதரவின்மை ஆகியவற்றிலிருந்தும் பஹாய்கள் தங்களை விடுவித்துக் கொண்டு, தங்களது பஹாய் ஸ்தாபனங்களோடு தங்களுக்கு உள்ள உறவை பாதிக்கக் கூடிய அளவிற்கு அத்தகைய மனப்பான்மைகளை வளரவிடவும் கூடாது.

அவை இரண்டும் ஒன்றல்ல. அவை முற்றாக மாறுபட்டவை. நமது ஸ்தாபனங்கள் இறைவனால் உருவாக்கப்பட்டவை, அவரது அவதாரத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றுக்குப் பண்புக்கூறுகள் உள்ளன. சீரழிக்கக்கூடிய மனப்பான்மைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றிலிருந்து தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள அதற்கு உதவக்கூடிய, அதனோடு இணைந்து வந்துள்ள ஒரு வழிமுறை அதற்கு உண்டு. உலக வழிகளிலிருந்து அது முற்றாக மாறுபட்டு உள்ளது. நமது பஹாய் நிர்வாக முறைக்குள் கறைபடிந்த உலக முறைகளைப் புகுத்துவோமேயானால், அதிகபட்சம் அதைத் தற்காலிகமாக ஸ்தம்பிக்கச் செய்வோம். அவ்வளவுதான். ஆனால், நம்முடைய சுய ஆன்மீக வளச்சியினைப் பொறுத்தமட்டில், அதை ஈடுசெய்ய முடியாத அளவிற்குக் கெடுத்துக் கொள்வோம்.

நாம் புதிய மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் ஒப்பந்தத்தின்பால் ஓர் ஆழமான புரிந்துகொள்ளலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். “நான் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என விண்ணப்ப அட்டையில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. பலவித விருதுகளைத் தாங்கிய மக்கள் பலர் நம்மைச் சுற்றி உள்ளனர். அவர்கள் யாராயினும் நான் அவர்களை ஏற்றுக் கொள்கிறேன். நல்லது, அவ்வளவுதான். அப்படியா? இல்லை! அது போதாது நண்பர்களே!

நமது சமூகத்தில் அடங்கியுள்ள பல ஆபத்தான சக்திகளினால் நாம் அடித்துச் செல்லப்படுவோம். விஷம் போல் சமூகத்தை ஊடுருவக்கூடிய சக்திகள் உள்ளன. நாம் நம்மை இப்போது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமது அத்தகைய பாதுகாப்புக் கவசம், ஒப்பந்தத்தில் ஓர் ஆழ்நிலை புரிந்துகொள்ளலை உருவாக்கிக் கொள்வதே ஆகும்.

பாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு மிக மிகக் கடினமான, சவால் மிக்க  வாசகப் பகுதியை உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன். நான் உச்சரிக்கவே பயப்படும் சில விஷயங்களை பாதுகாவலர் அதில் குறிப்பிடுகிறார். நான் அவற்றைப் படிப்பதன் காரணம் அவை பாதுகாவலரால் எழுதப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பாக உள்ளேன். நான் அவற்றைப் படிப்பதற்காக நீங்கள் என்னைக் குற்றம் கூற முடியாது. பாதுகாவலரே எழுதியுள்ளார். உங்கள் முன் நின்று, நான் இப்போது வாசிக்கப் போகும் வாசகங்களில் அடங்கியுள்ள அதே விஷயங்களை எனது சொந்த வார்த்தைகளாக உச்சரிப்பதற்கு எனக்குத் தைரியம் கிடையாது. பாதுகாவலர் கூறுவதாவது: பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகிய இருவரின் ஒப்பந்தங்களைப் பற்றிய அறிவும் மெச்சுதலும் பெறுவதில் அன்பர்கள் ஆழ்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரணும், சமயத்தின் புற எதிரிகளின் சோதனையையும் தாக்குதல்களையும் அவர் தாங்கிக் கொள்ள உதவுவதும் இதுவே.” இதுவரை நான் வாசித்தது சிறிது சுலபமாகவே இருக்கின்றது. நானே அதைத் தைரியமாகக் கூறியிருப்பேன். சரி, இப்போது மிகக் கடினமான பகுதிக்கு வருவோம்.

“சமயத்தின் புற எதிரிகளின், மற்றும், அதனினும் மிகவும் ஆபத்தான, விஷமிகளான, அரைமனதுடனான, ஒப்பந்தத்தின்பால் உண்மையான பற்றுதல் இல்லாமல் அதனால் சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதே சமயம் இறைவனின் சமயம் முழுமையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஆன்மீக அஸ்திவாரத்திற்குச் சமயத்திற்கு உள்ளிருந்தவாறே குழிபறிப்போரின், சோதனையையும் தாக்குதல்களையும் தாங்கிக் கொள்ள உதவுவக்கூடிய ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரண் இதுவே.”

ஒப்பந்தம்: அது நமது கவசம்

இப்போது தெரிகிறதா, நான் இவ்விஷயங்களை உச்சரிப்பதற்கு ஏன் இவ்வளவு பயந்தேன் என்று? இவை யாவும் பாதுகாவலரின் வார்த்தைகள். ஒப்பந்தத்தில் ஆழ்படுவதன் மூலமாக மட்டுமே, புற எதிரிகளை மட்டும் அல்ல, ஆனால் அவர் குறிப்பிடும், அதிக அபாயகரமான தாக்குதல்களான, விஷமத்தனமாகத் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடிய, சமயத்தின்பால் ஓர் உண்மையான பற்றுதல் இல்லாமல், சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதன் ஆன்மீக அஸ்திவாரத்திற்குக் குழிபறிக்கும், சமயத்திற்குள் இருக்கும் அரைமனம் கொண்டோரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியும்.

நண்பர்களே, ஒருவரைக் குறித்து நீதி வழங்கிட நமக்கு உரிமை கிடையாது. தனி நபர்கள் என்ற முறையில் நாம் நீதிபதிகளாக இருக்க முடியாது. இதோ இவர் இருக்கின்றாரே, இவர்தான் அந்த அரைமனம் கொண்ட, பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளை மட்டும் கொண்டு, ஆன்மீகமானதைக் குழிபறிப்பவருமான  நம்பிக்கையாளர்களில் ஒருவர், என நாம் கூறிட முடியாது. அத்தகைய ஒரு சொல்லை உச்சரிப்பதற்கு எனக்கு உரிமை கிடையாது. இந்த அறையிலோ அல்லது இந்த நாட்டிலோ உள்ள ஒருவரைப் பற்றியோ அல்லது நீங்கள் என்னைப் பற்றி அவ்வாறு கூறிடவோ உரிமை கிடையாது.

மனிதர்களைத் தரம் பிரிப்பதற்கோ அல்லது அவர்களது குற்றம் குறித்து நியாயம் வழங்கிடவோ நாம் இங்கு கூடவில்லை. ஆனால் பாதுகாவலர் கூறுவது என்னவென்றால், நமது பஹாய் சமூகம் அத்தகைய மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதே ஆகும்! நாம் தரம் பிரித்திருக்கும் அத்தகைய மனிதர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இங்கு குழுமியிருக்கவில்லை. நாம் இங்கு கூடியிருப்பதன் காரணம் என்னவெனில், நாம் நம்மை ஆன்மீக ரீதியில், ஆரோக்கியப்படுத்திக் கொண்டும், பலப்படுத்திக் கொண்டும், அதன் மூலம் நாம் குறிப்பிட்ட அந்த மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்கள் எங்கே இருப்பினும், அவர்களைப் பற்றி நியாயம் வழங்காதும், ஆனால் அவர்களுடைய அபாயகரமான, விஷமமான தாக்கங்கள்பால் பாதுகாப்புடன் இருப்பதற்காகவே.

ஆக, நமது வேலை குறைக் கண்டுபிடித்து அதைக் களைவது அல்ல. மனிதர்களைத் தரம் பிரித்து இவர் நல்லவர், அவர் கெட்டவர் எனும் குறிப்புச் சீட்டுகளை அவர்கள் மேல் ஒட்டி விடுவதற்காவும் அல்ல. நமது வேலை, ஆன்மீக ரீதியில் உறுதியடைந்தும், ஆரோக்யமடைந்தும், நமது ஸ்தாபனங்கள் பால் உண்டாகியுள்ள இந்த எதிர்படையான மனப்பான்மைகளைச் சமாளிக்கவும், ஒப்பந்தத்தில் நம்மை ஆழ்படுத்திக் கொண்டும் — பாதுகாவலர் கூறியுள்ளதை உள்ளது உள்ளபடி கடைபிடிப்பதுமே ஆகும்.

இச்சோதனைகளைச் சந்தித்திடும் வேளை, நமது சமூக அமைப்புக்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு புதிய மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளும் அதே வேளை, எதையும் யோசிக்காமல் விமர்சனம் செய்வது குறித்து ஒரு மறு ஆய்வும்  நாம் செய்ய வேண்டும். ஆங்காங்கே இந்த விமர்சனங்கள் நடக்கின்றன. நமது பஹாய் புனித வாசகங்களும், இவ்வித விமர்சனமானது, பஹாய் கலந்தாலோசனை மற்றும் சமூகச் செயற்பாடுகள் சார்ந்த அம்சங்களுக்கு உகந்த ஒன்றாகும் என கூறுகின்றன மற்றும் அது குறித்து யாரும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதே வேளை நமது புனித வாசகங்களில், பாதுகாவலர் குறிப்பிட்ட அந்த “குரூரமான மற்றும் எதிர்படையான” விமர்சனங்களின் மிகவும் அபாயகரமான பண்புக்கூறுகள் பற்றியக் குறிப்புகளும் உள்ளன.

“ஒரு  சரீரம்(தீஷீபீஹ்) என்ற முறையில் ஒரு (பஹாய்) ஸ்தாபனம் குறித்த எதிர்படையான விமர்சனங்களும் விவாதங்களும், திண்ணமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.” பெரும்பாலான மக்கள் இதில் அடங்கியுள்ள வித்தியாசத்தைக் கண்டு கொள்ளும் அளவிற்குப் புத்திசாலிகள் என்றே நான் நினைக்கின்றேன். அதே சமயம் நாம் விதித்துள்ள ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்காமல் எப்படி தவிர்த்துச் செல்வது என்பதிலும் அவர்கள் சாமர்த்தியசாலிகளே. ஏனென்றால், இது வெறும் ஓர் உரையில் அடங்கியுள்ள வார்த்தைகள் குறித்த கேள்வி அல்ல ஆனால் தகுந்த மனப்பான்மை குறித்தக் கேள்வி ஆகும்.

எதிர்படையான விமர்சனங்களிலிருந்து விடுபடுதல்

தனது காரியங்கள் மற்றும் நடத்தைக் குறித்து மேம்பாடும் கூர்மையும் அடையத் தேவையில்லை என பாசாங்கு செய்யாத, ஆனால் பாதுகாவலர் கூறுவது போல், ஆன்மீகச் சபையின் அதிகாரத்தைக் குழிபறிக்கும் விளைவினைக் கொண்டிராத எதிர்மாறான விமர்சனங்களிலிருந்து விடுபட்டிருக்கும், உருபெரும், மேம்பாடு காணும் ஒரு பஹாய் சமூகத்தையே நாம் காண விரும்புகிறோம்

நமது பஹாய் சமூகங்கத்தில் ஒரு சில இடங்களில் நடக்கும், விரயம் மிகுந்த, அழிவை ஏற்படுத்தும், எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடக்கூடியச் செயலாக, வரக்கூடிய “பேராபத்து” பற்றிய யூகவாதங்களே உள்ளன. எவ்விதம் நமது நகரங்களின் பலமாடிக் கட்டிடங்கள் அப்படியே பொசுங்கிப் போகப் போகின்றன, மற்றும், இந்த அமெரிக்க நாட்டின் கரையோரங்களில் எப்படி எதிரி நீர்மூழ்கிகள் சூழ்ந்து நிற்கப் போகின்றன எனும் மிகவும் பிரமிப்பு ஏற்படுத்தும் விஷயங்களை நீங்கள் முன்பு பல வேளைகளில் செவிமடுத்திருப்பீர்கள். இந்தப் “பேராபத்து” எவ்விதமாக நிகழப் போகின்றது என்பது நமக்குத் தெரியாது என பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி — ஒரு வாசகப் பகுதியில் — இவ்விதமான பகுதிகள் பல உள்ளன — கூறியுள்ளார். இப்போது இங்கு நிகழ்வதும் அந்தப் “பேராபத்துதானே!” இப்போது நிகழ்வதே பேராபத்து என பாதுகாவலர் கூறும் ஒரு பகுதி உள்ளது, நானும் அதை இப்போது உங்களுக்கு வாசித்துக் காட்டப் போகின்றேன். இறுதியில் அந்தப் பகுதியை நாம் கண்டுபிடித்து விட்டோம். சரி. பாதுகாவலர் சார்பாக எழுதப்பட்ட, டிசம்பர் 18, 1949 என திகதியிடப்பட்ட, ஜூலை 1950 அமெரிக்க பஹாய் செய்தியில் பிரசுரிக்கப்பட்ட கடிதம் அது. அதில் பாதுகாவலர் என்ன கூறுகிறார்? அதில் அவர் இந்த “பேராபத்தை” வரையறுக்கின்றார்.

அவர் கூறுவது: “குரூரமான விமர்சனம் நிச்சயமாக ஒரு “பேராபத்தே” ஆகும், ஆனால், பஹாவுல்லாவின் அமைப்பு முறையில் (அதாவது நிர்வாக அமைப்பு முறை) நம்பிக்கையின்மையும் அவருக்குக் கீழ்படியாதிருப்பதிலும் — அவர் அதை தடுத்துள்ளார் — அதன் (குரூரமான விமர்சனத்தின்) ஆணி வேர் அமைந்து உள்ளது. வாக்களிப்புச் (பஹாய் தேர்தல்) சம்பந்தமான, தேர்ந்தெடுப்பதில், சபையின் முடிவுகளுக்குக் கீழ்படிவது, போன்றவற்றில் பஹாய் விதிமுறைகளைப் பஹாய்கள் கடைபிடிப்பார்களேயானால், பிறரை விமர்சித்துக் கொண்டிருப்பதில் வீணாக்கப்படும் சக்திகள் கூட்டுறவுச் செயல்களின்பால் திருப்பி விடப்படலாம்.”

ஆக, சமூக அமைப்புகளின்பால் ஒரு புதிய மனப்பான்மையை உண்டாக்கிக் கொள்ளப்பட வேண்டியதின் ஒரு கூறாக திருவொப்பந்தத்தில் ஆழ்படுதல் உள்ளது. இரண்டாவதாக, விமர்சனங்கள் செய்வது குறித்து மாற்று சிந்தனை செய்ய வேண்டி உள்ளது, ஏனென்றால், தகுந்த முறைகளில் விமர்சனம் செய்வது பஹாய் கலந்தாலோசிப்பின் ஒரு கட்டுமானக் கூறாக உள்ளது. மூன்றாவது கூறும், இறுதியானதுமான, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது மிகவும் புரட்சிகரமான ஒன்று. அது, பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களைச் சமயத்திற்குள் கொண்டுவரத் தேவைப் படும் வரைமுறைகளை வரையறுக்குமாறு பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டது தொட்ட ஒரு வாக்குமூலம். அவர் நான்கு வரையறைகளை முன்வைத்தார்: அந்த நான்கில் மூன்று வெளிப்படையானவை, ஆனால் நான்காவது மிகவும் அசாதாரணமானது. இந்த நான்கு வரையறைகளும் இன்றி சமயத்திற்குப் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்த்திடவே முடியாது என அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

பஹாவுல்லாவின்பாலும் அவரது சமயத்தின்பாலும், அதன் ஸ்தாபனங்களின்பாலும், மற்றும் நம்பிக்கையாளர்கள் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும், அந்த  உண்மையான அன்பில் விளையும் அந்த உற்சாகமின்றி.” முதல் மூன்றும் தெளிவாக உள்ள வரையறைகள் ஆகும் ஆனால் நான்காவது அப்படி இல்லை.

பஹாவுல்லாவின்பால் நம்பிக்கையாளர்கள் உண்மையான அன்பு வைத்திருப்பார்கள் என்பது இயற்கையான எதிர்பார்ப்பு. அவரது சமயத்தையும் அவ்வாறே நேசிப்பார்கள் எனவும் எதிர்ப்பார்ப்போம். அதுபோன்றே, அன்பர்கள் ஒருவர்பால் ஒருவர் இயற்கையிலேயே அன்பு கொள்வார்கள், எனவும் எதிர்பார்ப்போம்.

ஆனால், பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சமயத்தின்பால் ஈர்த்திட சமய நிர்வாக ஸ்தாபனங்கள்பால் ஓர் அன்புணர்வை, உண்மையான அன்புணர்வை நாம் உருவாக்கிக் கொள்வதைப் பாதுகாவலர் அந்த நான்கு வரைமுறைகளில் ஒன்றாக வரையறுத்துள்ளார். இது பஹாய்த் திருவெளிப்பாட்டின் ஒரு திடுக்கிட வைக்கும் புதுமை. சரி, நாம் இப்போது இந்த ‘இல்லினோய்’ மாகாணத்தில் இருக்கின்றோம். இங்கு உங்களிடம் வந்து, “நான் இல்லினோய் மாகாணத்தின் சட்டமன்றத்தை நேசிக்கின்றேன்” எனக் கூறப் போகும் ஒருவரை எங்கு தேடுவது. அல்லது “நான் பிரதிநிதிகள் சபையை நேசிக்கின்றேன்,” அல்லது செனட் சபையை நேசிப்பதாக கூறும் ஒருவரை நாம் எங்கு தேடுவது. ஒருவேளை, “நான் சுப்ரீம் கோர்ட்டை நேசிக்கின்றேன்” எனக் கூறும் ஒருவரை, குறிப்பாக தனக்குச் சாதகமாகக் கிடைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அப்படி கூறும் ஒருவரை நாம் காணலாம். “நான் மந்திரிசபையை நேசிக்கின்றேன், நான் நகரசபையை நேசிக்கிறேன், நமது உள்ளூர் நிர்வாகசபையை நேசிக்கிறேன்,” எனக் கூறக் கூடியவரை எங்கு தேடுவது. இது அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளின் சிந்தனைகளுக்கு அன்னியமானது. இது இயற்கைக்கு விரோதமானது. இது புரட்சிகரமானது.

குறைந்த அளவு அரசாங்கமே நல்லது என்பது தற்போது பரவலாக இருக்கும் எண்ணம். அரசாட்சி மிகும்போது, இந்த ஏமாற்றுக்கார அரசியல்வாதிகளை எப்படி வெளியாக்குவது எனும் எண்ணம் தோன்றும். ஆனால் இங்கு இதற்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு திசையில் நமது சிந்தனை செல்கிறது.

நாம் நடப்பு உணர்வுகளிலிருந்து சிறிது அப்பாற்பட்டோ, அல்லது அதற்கும் சிறிது அப்பாற்பட்டோ இருக்கவில்லை. நாம் அதிலிருந்து நேர் எதிரான ஒரு சிந்தனையைக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் நமது சமயம் அவ்வாறு கூறுகின்றது. நமது ஸ்தாபனங்கள்பால் நாம் உண்மையான அன்புணர்வைக் கொண்டிருக்க வில்லையென்றால் நாம் பெரும் பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களை ஈர்க்கமுடியாது என நமது சமயம் கூறுகின்றது. நான் என்னுடைய உரையை முடிக்கும் தருவாயில் இருக்கின்றேன். ஆனால் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. நன்றாக இயங்குகின்றன எனத் தோன்றும் நமது சமய ஸ்தாபனங்களை நேசிப்பது மிகவும் சுலபம். மிகவும் சிறப்பாக இயங்குகின்ற ஸ்தாபனங்களை நேசிப்பது சுலபம். ஒரு சமூகத்தில் இருந்துகொண்டு, அங்கு நன்றாக இயங்கி வரும், அற்புதமான காரியங்களை இயற்றி வரும் ஒரு சபையின்பால் நிச்சயமாக அன்பு உண்டாகும். நானும் அத்தகைய சபைகளை நேசிக்கத்தான் செய்கின்றேன்.

மேம்பாடு பொறுத்த வரை குறைபாட்டுடன் இயங்கியும், தவறுகள் செய்தும், தனது சமூகத்தினரின் ஒற்றுமையில் பிரச்சினைகளை எதிர்நோக்கியும், தனது செயல்களில் குறைகள் நிறைந்தும், அதன் பிரதம செயலாக்கங்களில் பிரச்சினைகள் இருந்தும், சமூகத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளை உங்களுக்குத் தெரிவிக்காமலும் இருக்கும் ஒரு சபையை நேசிப்பது எப்படி? இதுதான் நமது சவால். கபடமில்லாமல் அதை எப்படி செய்வது?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நேசிக்கிறார்களோ அப்படித்தான் இத்தகைய சபைகளையும் நாம் நேசிக்க வேண்டும். ஒரு குழந்தை தடுமாறியும், மோசமாக நடந்து கொண்டும், நோய்வாய்ப் பட்டும், அல்லது பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வது எனத் தெரியாமலும் இருந்தால், அதன் பெற்றோர் அதனை நேசிக்கவே செய்கின்றனர். ஏனெனில், அப்பெற்றோர் அக்குழந்தை இயல்பாகவே மேம்பாட்டிற்கான இயற்திறனைப் பெற்று இருப்பதை உணர்ந்துள்ளனர். அன்புடனும் அரவணைப்புடனும், அக்குழந்தை மேம்பாடடைந்து தனது இயற்திறன்களின் நிறைவேற்றத்தைக் காணும். எதிர்படையான விமர்சனங்களாலும், அன்பில்லாமலும் அக்குழந்தையின் வளர்ச்சி குன்றிப்போகும்; அதன் மேம்பாடு நிறைவேற்றம் அடையாது போகும்.

இப்படியாகவே நமது சமய ஸ்தாபனங்களை நேசிக்கும்படி நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். செயற்கையாகவோ, கபடமாகவோ அல்ல, ஆனால் மகிமை மிக்க, அற்புதமான எதிர்காலத்தைக் கொண்டுள்ள பஹாவுல்லாவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்தாபனங்கள் எனும் முறையிலேயே இவற்றை நாம் நேசிக்க வேண்டும். நமது அன்பினாலும், நமது அரவணைப்பாலும், தோள்கொடுப்பதன் மூலமாகவும், நமது தயவுணர்ச்சியின் மூலமாகவும், புரிந்துகொள்ளல் மூலமாகவும், அவை வளரும். அவை பரிணாமம் பெறும். இத்தகைய அன்பினையே நாம் கோருகின்றோம். தாழ்ந்து கொண்டும் மறைந்துகொண்டும் உள்ள தங்களது ஸ்தாபனங்கள்பால் நம்மைச் சூழ்ந்துள்ள (பஹாய் அல்லாத) சமூகத்தின் மக்களின் விமர்சிக்கும் போக்கு, சந்தேகம், ஒழுங்கின்மை, மற்றும் ஊழல் மனப்பான்மைகளி்லிருந்து அடியோடு மாறுபட்ட அன்பினையே நாம் வேண்டுகின்றோம்.

மூன்றாண்டுத் திட்டத்தின் மூன்று குறிக்கோள்கள்

இப்போது முடியும் தருவாயிலிருக்கும் மூன்றாண்டுத் திட்டம், மூன்று மையக் குறிக்கோள்களை வலம் வருகின்றது. அவையாவன, தனி நம்பிக்கையாளர்களின் பற்றுறுதியின் உயிரூட்டத்தை மேம்படுத்துவது, சமயத்தின் மனித வளங்களைப் பெரிதும் அதிகரிப்பது, மற்றும் உள்ளூர் மற்றும் தேசிய ஸ்தாபனங்கள் முறையாக இயங்குவதைப் போஷிப்பதும் ஆகும். பஹாய்கள் எனும் முறையில் நமது பங்கிற்கு இந்த மூன்றாண்டுத் திட்டத்தின் நிறைவேற்றத்தை நான் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று சிந்தனா சோதனைகளை வெற்றிகொள்ள முயற்சிப்பதன் மூலமாகவே காணமுடியும் எனும் அடிப்படையில்தான் உங்கள் கவனத்தை நான் கோரியுள்ளேன்.

நான் எனது உரையை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டேன். இந்த அமெரிக்க பஹாய் சமூகம் பெரும் ஆற்றல்களைப் பெற்றுள்ள ஒரு சமூகம் என்பது பரவலாக அறியப்பட்டதே. அப்துல் பஹா தமது திருப்பாதங்களை இங்கு பதித்து இந்தப் பூமியைப் புனிதப் படுத்தியுள்ளார். அவர் தமது அன்பையும் ஆதரவையும் இந்நாட்டிற்குப் பொழிந்துள்ளார். பாதுகாவலர் தமது முக்கியமான செய்திகளையெல்லாம் இந்த நாட்டின் மெய்யன்பர்களுக்கே எழுதியுள்ளார். அமெரிக்க பஹாய்கள் தெய்வீகத் திட்டத்தின் நிருபங்களை அமலாக்கம் செய்யக்கூடியவர்களில் தலையாய நிலையில் உள்ளவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நீதி மன்றமும், அமெரிக்க பஹாய் சமூகத்தையும் அதன் ஸ்தாபனங்களையும் அப்துல் பஹாவும் பாதுகாவலரும் தங்களுடைய அன்பைப் பொழிந்த வண்ணத்திற்குச் சிறிதும் குறையாது நேசிக்கின்றனர் என்பதை இங்கு நான் அறுதியிட விரும்புகிறேன். உங்கள் அனுமதியோடு, நாங்கள் அதிக நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அமெரிக்க பஹாய்கள்பாலும் இச்சமூகம் ஆற்றக் கூடிய பெரும் பங்கின்பால் பெருமையுடனும் எங்கள் முகங்களைத் திருப்பியுள்ளோம் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்க பஹாய்கள் குறித்த வருங்கால மகிமை மற்றும் இறுதி இலக்கு பற்றி சமயத் திருவாசகங்களில் வாக்களிக்கப்பட்டுள்ளவை யாவும் முற்றாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படும் என்பதில் என் மனதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இச் சமூகத்தைப் பற்றி அப்துல் பஹா கூறியது யாவும் மெய்ப்பிக்கப்படும். அது நடக்கும். அது தவிர்க்கப்பட முடியாதது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஐயப்பாடு உண்டு. அதாவது, இதில் நீங்களும் நானும் எங்கிருப்போம்? இம்மாபெரும் காட்டுமானத்தில் நாமும் நமது பங்கினை ஆற்றுவோமா? இந்த வெற்றிகளில் நமக்கும் பங்கிருக்குமா? நாம் இப்போது உட்படுத்தப் பட்டுள்ள இந்த அபாயமிக்க, சவால்கள்மிக்கதுமான சிந்தனா சோதனைகளை நாம் வெற்றிகொள்வோமா? வெற்றி அலைகளின் மீது வலம் வருவது நமது விதியா அல்லது தோல்வி அலைகளால் கரைக்கு அடித்துத் தள்ளப்படும் சருகுகள் நாம் எனும் கதியா? பஹாய்ச் சரித்திரத்தில் காணப்படும், தாங்கள் சந்தித்த சோதனைகளை வெல்ல முடியாமல் வீழ்ந்துபட்டவர்களின் பட்டியலில் நாமும் சேர்க்கப்படுவோமா? நண்பர்களே, முடிவு நம் கைகளில்தான் உள்ளது. முடிவு நம் கைகளில்தான் உள்ளது.

நபில்-இ-அக்பர்


மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள்

நபில்-இ-அக்பர்

நாஜாப் என்ற நகரத்தில், ஷேய்க் முர்தாடா எனும் புகழ் பெற்ற முஜ்டாஹிட்டின் சீடராக, ஈடிணையற்ற மனிதர் ஒருவர் வாழ்ந்தார்.

பிற்காலத்தில் நபில்-இ-அக்பர் எனும் சிறப்புப் பெயரை இறைத்தூதரிடமிருந்து பெறப்போகும் இவரது இயற்பெயர் அகா-முஹம்மத்-இ-காஃயினி என்பதாகும்.

இந்த மாபெரும் மனிதர் அந்த முஜ்தாஹிட்டின் மாணவர்கள் கூட்டத்திலேயே தலைச்சிறந்த அங்கத்தினராக விளங்கினார். அந்த மாணவர்களிலிருந்து நபில் மட்டுமே விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முஜ்தாஹிட் எனும் பட்டம் அளிக்கப்பெற்றார் — ஏனெனில் காலஞ் சென்ற அந்த ஷேய்க் முர்தாடா இந்த முஜ்ாடஹிட் எனும் பட்டத்தை எவருக்குமே கொடுக்க மறுத்து வந்தார்.

இவர் இறையியல் மட்டுமல்லாது, மனித இயல், புத்தொளிபெற்றோர் (இல்லுமினாட்டி) தத்துவங்கள், ஷேய்க்கீ பள்ளியின் இறையியல் வாதிகளின் போதனைகள் போன்ற மற்ற பல அறிவியல் பிரிவுகளாகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.

இவர் தமக்குத் தாமே தாம் ஒரு சர்வலோக மனிதர் என்பதற்கு நிறைவான ஆதாரமாக விளங்கினார்.

இவரது கண்கள் இறைவழிகாட்டுதல் எனும் ஒளிதனிற்கு திறந்திட்டபோது, சுவர்க்கத்தின் நறுமணங்களை இவர் சுவாசித்திட்டபோது, இவர் இறைவனது தீச்சுடர் ஒன்றென ஆனார்.

அவருள்ளே அவரது இதயம் துள்ளிக்குதித்தது; பேரானந்தத்தின் போதையிலும் அன்பின் போதையிலும், ஆழ்கடலின் பேருருவென உரக்கக் கர்ஜித்தார்.

புகழ்மாலைகள் இவர் மேல் மழையெனப் பெய்திட, தமது புதிய பட்டத்தை முஜ்தாகிட்டிடமிருந்து பெற்றார். பிறகு நாஜாஃப்பை விட்டு இவர் பாக்தாத் வந்தார்; அங்குதான் இவர் பஹாவுல்லாவைச் சந்திக்கும் பெரும் பாக்கியமும் பெற்றார்.

புனித மாவிருக்ஷத்தின் மீது (தேவதரு) பெருந்தனல்விட்டெரிந்தப் பேரொளியை இங்குதான் இவர் கண்டார். அதன் பிறகு இவர், இரவுபகலென ஒரு நிலையில் இல்லாத மனநிலையை அடைந்தார்.

ஒரு நாள், ஆண்களுக்கான பிரத்தியேக வெளிமாடத்தின் தரையில் பஹாவுல்லாவின் இல்லத்தில், அவரது சந்நிதியில் மதிப்பிற்குரிய நபில் முழந்தாழிட்டவாறு இருந்தார்.

அத்தருணம் கர்பிலாவின் முஜ்டாஹிட்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் உடந்தையாளராகிய ஹாஜி மிர்ஸா-அமு, பஃக்ரு’த்-தௌலே ஆகியவரான சைனுல்-அபிடின் காஃனுடன் உள்ளே வந்தார். பணிவுடனும் மரியாதையுடனும் நபில் அங்கு முழந்தாழிட்டு வீற்றிருந்த காட்சி ஹாஜியைத் திகைப்படையச் செய்தது.

ஐயா, இவ்விடத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என அவர் முணுமுணுத்தார். அதற்கு நபில் அவர்கள், “நீங்கள் இங்கு வந்துள்ள அதே காரணத்தை முன்னிட்டுத்தான் நானும் வந்துள்ளேன்,” எனப் பதிலளித்தார்.

அவ்விரு விருந்தினர்களும் தங்களது திகைப்பிலிருந்து மீளவே இயலவில்லை. ஏனெனில், இந்த உத்தமர் முஜ்தாஹிட்களிலேயே நனிசிறந்தவர் எனும் புகழ்பெற்ற ஷேய்க் முர்த்தாடா அவர்களின் பிரத்தியேக சீடராவார் என எங்கும் பரவலாகத் தெரிந்திருந்தது.

பின்னாளில், நபில்-இ-அக்பர் பாரசீகத்திற்குக் — குறிப்பாக அங்கு குஃராசான் நகருக்குச் — சென்றார். ஆரம்பத்தில், காஃ’யின் நகரத்தின் அமீரான – மீர் அலாம் காஃன் – அவருக்குச் சகல மரியாதைகளையும் செய்து, அவரது நட்பையும் பெரிதாக மதித்தார்.

அமீர் அளித்த விசேஷ மரியாதையாகப்பட்டது, அவர் நபிலின் வசமாகிவிட்டார் என மக்களின் மனதில் ஒர் எண்ணத்தை ஏற்படுத்தியது, மேலும் மெய்யாகவே இவர் அந்தப் பண்டிதரின் சொல்வன்மை, அறிவு மற்றும் புத்தி சாதுரியம் ஆகியவற்றின்பால் வசியமாகியிருந்தார்.

இதிலிருந்து நபிலுக்கு மற்றவர்கள் செலுத்திய மரியாதைகள்தாம் எத்தகையவை என்பதை நாம் தீர்மானிக்கலாம், ஏனெனில், “மனிதர்கள் தங்களது மன்னர்களின் நம்பிக்கையையே பின்பற்றுவர்.”

இவ்வாறே நபில் புகழோடும், உயர் இடங்களின் தயையைப் பெற்றவருமாக சில காலங்கள் கழித்தார். ஆனால், இறைவன்பால் இவர் கொண்ட அன்பாகப்பட்டது எல்லா ஒளிவுமறைவுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அது அவரது இதயத்திலிருந்து வெடித்துக் கிளம்பி, அனல் கொண்டு அதன் மூடுதிரைகளை எரித்துவிட்டது.
நான் கொண்ட காதலை மறைத்திட
ஓராயிரம் வகைகளில் முயற்சித்தேன்
ஆனால், பற்றி எரிகின்ற அந்தச் சிதையில்
நான் தீப் பற்றிக் கொள்ளாதிருப்பது எப்படி

இவர் அந்தக் கா’யின் வட்டாரத்திற்கு ஒளியைக் கொண்டு வந்தார்; மற்றும் பெருவாரியான மக்களை மதம் மாற்றிடவும் செய்தார். இப்புதிய நாமத்தால் இவர் புகழ் பெற்ற போது, அழுக்காறும் விரோதமும் கொண்ட மத குருக்கள், அதனால் உந்தப்பட்டு, இவர்மேல் குற்றஞ் சாற்றி, நாசிரி’த்தீன் ஷா குரோதத்துடன் எழும் வகையில் தங்களது அவதூறுகளைத் தெஹரானுக்கு அனுப்பினர்.

ஷாவின்பால் பயங்கொண்டிருந்த அமீர், நபில் அவர்களைத் தன் வலிமைகள் அனைத்தையும் பிரயோகித்து எதிர்த்தார். அந்த நகரம் முழுமையும் கொந்தளிப்பில் ஆழ்ந்தது, அதன் மக்கள் அனைவரும் குரோதத்திற்கு அடிமையாகி, இவர் மேல் பாய்ந்தனர்.

அந்தப் பரவசமுற்ற இறைநேசர் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை, மாறாக, அவர்கள் அனைவரையும் எதிர்கொண்டார். ஆனால், இறுதியில், அவர்கள் தன்னை வெளியேற்றினர் – இவர்கள் யாவரும் காணத் தவறிய ஒன்றைக் கண்டுவிட்ட அந்த மனிதரை வெளியேற்றினர் – பிறகு இவர் தெஹரானை நோக்கிச் சென்றார். அங்கு இவர் நாடோடியாகவும் இருப்பிடமற்றவராகவும் இருந்தார்.

இங்கும் அவரது எதிரிகள் அவரை மீண்டும் தாக்கினர். காவலர்களால் இவர் பின்தொடரப்பட்டார் – சிப்பாய்கள் இவரை வீதி வீதியாகவும், முடுக்குகள் தோறும் விசாரித்து  எல்லா இடங்களிலும் தேடி, அவரைப் பிடித்து வதை செய்திட வேட்டையாடினர்.

ஒளிந்துகொண்டு, கொடுமைக்குட்பட்டோர் விடும் பெருமூச்சைப் போல் இவர் அவர்களைக் கடந்து மலைகளை ஏகுவார், அல்லது, தவறிழைக்கப்பட்டோர் விடும் கண்ணீரைப் போல், இவர் பள்ளத்தாக்குகளுக்குள் சென்று மறைந்திடுவார்.

தமது பதவியைக் குறிக்கும் தலைப்பாகையை இவர் தொடர்ந்து அணிய இயலவில்லை – தம்மை அவர்கள் அடையாளம் கண்டிடாது விட்டு விடுவார்கள் என ஒரு சாதாரண மனிதனின் தலைப்பாகையை அணிந்து மாறுவேடம் பூண்டார்.

தனிமையில், இவர் தமது ஆற்றல்கள் அனைத்தையும் உபயோகித்துச் சமயத்தைப் பரப்புவதும் அதன் ஆதாரங்களை முன்வைப்பதுமாக இருந்தார், பல ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காவும் இவர் திகழ்ந்தார். எல்லா நேரங்களிலும் இவர் அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டார், எல்லா வேளைகளிலும் விழிப்போடும் தற்காப்புடனும் இருந்தார்.

அரசாங்கம் இவரைத் தேடுவதைக் கைவிடவே இல்லை, அல்லது மக்களும் இவர் விஷயத்தைப் பற்றி ஆராய்வதை நிறுத்தவில்லை.

பிறகு இவர் புக்காஃராவிற்கும் இஷ்காபாத்திற்கும், அப்பிராந்தியங்களுக்கான வழிநெடுகவும் சமயத்தைத் தொடர்ச்சியாக போதித்தவாறும்  சென்றார்.

ஒரு மெழுவர்த்தியைப் போல், இவர் தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்; ஆனாலும் தமது சோதனைகளுக்குப் புறம்பாக இவர் தமது உற்சாகத்தில் தளரவில்லை, மாறாக அவரது பேரானந்தமும் ஆவலும் நாட்பட நாட்பட அதிகரிக்கவே செய்தன.

இவர் சொல்வன்மை பெற்றவர்; இவர் திறன்வாய்ந்த மருத்துவர்; எல்லா நோய்களுக்கும் ஔஷதமாகவும், எல்லாக் காயங்களுக்கும் ஒரு நிவாரணியாகவும் திகழ்ந்தார்.

இல்லுமினாட்டிகளை (புத்தொளி பெற்றோர்) அவர்களது சொந்தத் தத்துவக் கோட்பாடுகளைக் கொண்டே கற்பிப்பார், யோகிகளுக்குத் தெய்வீக வருகையைப் பற்றி, “அருட்கிளர்ச்சி” மற்றும் “தெய்வீகத் தோற்றங்களைக்” கொண்டு நிரூபிப்பார்.

ஷேய்க்கீ தலைவர்களைத் தங்களது காலஞ் சென்ற ஸ்தாபகர்களான ஷேய்க் அஹமது மற்றும் செய்யித் காசீமின் சொற்களைக் கொண்டே நம்ப வைப்பார், மற்றும் இஸ்லாமிய பண்டிதர்களைத் திருமறையின் வாசகங்களைக் கொண்டும், மனிதர்களை நேர்வழி நடத்திய இமாம் பெருமானார்களிடம் இருந்து வந்த போதனைகளைக் கொண்டும் மதமாற்றம் செய்திடுவார்.

இவ்வாறாகவே இவர் நோயுற்றோருக்கு ஓர் அற்புத மருந்தாகவும், ஏழைகளுக்கு ஒரு செல்வக் கொடையாகவும் ஆனார்.

இவர் புக்காஃராவில் வறிய நிலைக்கும் பல தொல்லைகளுக்கும் ஆளானார், இறுதியாகத் தாயகத்தை விட்டு வெகு தூரத்தில் இவர் உயிர்த் துறந்து, இல்லாமை என்பதே இல்லாத இராஜ்ஜியத்திற்கு விரைந்தார்.

நபில்-இ-அக்பர் சமயத்தின் உண்மைகளுக்கு ஆதாரமளித்திடும் ஓர் அற்புதக் காவியத்தின் ஆசிரியர் ஆவார், ஆனால் அந்தக் காவியம் தற்போது அன்பர்களின் கைகளில் இல்லை.

அது தேடி எடுக்கப்பட்டு, கற்றோருக்கு ஓர் அறிவுரையாகத் திகழும் என்பதே என் அவா.

இந்த விரைந்தோடிடும் உலகில் இவர் எண்ணிலடங்கா இன்னல்களுக்கு ஆளானார் என்பதே மெய் — ஆயினும், பலம் வாய்ந்த அந்த மத குரு பரம்பரைகள், முர்தாடா, மிர்சா ஹபீபுல்லா, ஆயாத்துல்லா-இ-குராசானி, முல்லா அசாடுல்லா-இ-மசாந்தாரானி – இவர்கள் யாவரும் ஒரு தடையமுமின்றி மறைந்து போய்விடுவார்கள்.

இவர்கள் எந்தப் புகழையோ, தடயத்தையோ, பலன்களையோ விட்டுச் செல்லப் போவதில்லை. இவர்களிடமிருந்து ஒரு சொல் கூட உலக சந்ததியினருக்குப் போய்ச் சேரப் போவதில்லை; எந்த மனிதனும் இவர்களைப் பற்றி விவரிக்கப் போவதும் இல்லை.

ஆனால், தாம் இந்தப் புனித சயமத்தில் உறுதியாக நின்றதன் காரணமாகத் தாம் ஆன்மாக்களை வழிநடத்தி இந்த சமயத்திற்குச் சேவையாற்றி அதன் புகழைப் பரப்பியதன் காரணமாக, நபில் என்ற அந்த விண்மீன், நிலையான ஒளியின் தொடுவானத்தில் இருந்து என்றென்றும் ஜொலிக்கும்.

இறைவனின் சமயத்திற்கு வெளியே சம்பாதிக்கப்படும் எந்தப் பெருமையும் இறுதியில் தாழ்மையாகிடவே செய்யும் என்பது திண்ணம் – இறைவனின் பாதையில் சந்தித்திடாத சுகமும் செழிப்பும் இறுதியில் சுமையும் சோகமுமே ஆகும் – அத்தகைய செல்வங்களெல்லாம் வறுமையே அன்றி வேறெதுவுமில்லை.

வழிகாட்டும் ஓர் அறிகுறியான இவர், இறை அச்சத்திற்கு ஓர் அடையாளமாகத் திகழ்ந்தார். இந்தச் சமயத்திற்காகத் தன் உயிரைப் பணையம் வைத்தார், இறுதியில் தமது மரணத்தில் இவர் வெற்றியே அடைந்தார்.

இந்த உலகையும் அதன் சன்மானங்களையும் இவர் கடந்து சென்றார் – பதவி மற்றும் செல்வத்தின்பால் இவர் தமது கண்களை மூடிக் கொண்டார் – இத்தகைய பிடிப்புகள் பிணைப்புகள் எல்லாவற்றிலுமிருந்து இவர் தம்மை விடுவித்துக் கொண்டு, சகல உலகளாவிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்தார்

விசாலமாகக் கற்றவரும், ஒரே நேரத்தில் ஒரு முஜ்தாஹிட்டாகவும், ஞானியாகவும், யோகியாகவும், உள்ளுணர்வு சார்ந்த உட்பார்வை எனும் வரப்பிரசாதம் பெற்றவருமான இவர், வெற்றிகள் பல கண்ட வித்தகரும், இணையற்ற சொற்பொழிவாளரும் ஆவார். இவர் அதிஉயர்ந்ததொரு விஸ்வ சிந்தை படைத்தவர்.

இறுதியில், இவர் ஒரு தெய்வீகக் கொடையைப் பெற்றமைக்காக இறைவன் போற்றப்படுவாராக. எல்லாம் வல்ல இறைவனின் மேன்மை அவரைச் சாருமாக.

இவர் நல்லடக்கமாகியிருக்கும் ஸ்தலத்தின் மீது இறைவன் அப்ஹா இராஜ்ஜியத்தின் பிரகாசங்களைப் பொழிந்திடுவாராக. மீண்டும் ஒன்றிணைதல் எனும் சுவர்க்கத்தினுள் இறைவன் அவரை வரவேற்று, ஒளிச் சமுத்திரத்தில் மூழ்கச் செய்து, நேர்மையாளர்களின் இராஜ்ஜியத்தில் அவரை என்றென்றும் காத்தருள்வாராக.

இறைவனின் ரோஜா மலர்கள்


இறைவனின் அன்பெனும் பூங்காவிலுள்ள ரோஜா மலர்களே. அவரது அறிவின் ஒன்றுகூடலில் ஒளிவீசும் தீபங்களே. இறைவனின் மெல்லிய சுவாசக்காற்றுகள் உங்களை மோதிச் செல்லட்டுமாக, இறைவனின் ஜோதி உங்கள் உள்ளங்களின் தொடுவானத்தை பிரகாசிக்கச் செய்யட்டுமாக.

நீங்கள் அறிவெனும் ஆழக் கடலின் அலைகளாவீர், பற்றுறுதி எனும் புல்வெளியில் கூடி இருக்கும் படைகளும் ஆவீர், நீங்கள் இறைவனின் கருணை எனும் வானத்தில் உரைந்திடும் வின்மீன்கள் ஆவீர், முடிவான அழிவு நிலையிலுள்ள மக்களை ஓடச்செய்திடும் கற்களும் ஆவீர், நீங்கள் வாழ்வெனும் தோட்டங்களின்மேல் வீற்றிருக்கும் இறை கருணை எனும் மேகங்கள் ஆவீர், நீங்கள் படைக்கப்பட்ட யாவற்றின் சாரங்களின்பால் பொழியப்படும் இறை ஒருமைத்தன்மையின் அளவில்லா ஆதரவும் ஆவீர்.

திறந்திருக்கும் இவ்வுலகமெனும் ஏட்டில், நீங்கள் அவரது தனித்தன்மையின் வரிகள் ஆவீர் – நீங்கள் உயர்ந்த அரண்மனை கோபுரங்களின் மேல் தேவனின் கொடிகளும் ஆவீர். அவரது இரகசிய தோட்டத்தில் நீங்கள் பூக்களும் நருமணம் வீசும் செடிகளும் ஆவீர், ஆவியின் ரோஜாத் தோட்டத்தில் நீங்கள் சோக கீதங்கள் பாடிடும் இராப்பாடிகளும் ஆவீர்.

அறிவெனும் வானத்திற்குள் உயரப் பறந்திடும் பறவைகள் நீங்களே, இறைவனின் மணிக் கட்டின்மீது அமர்ந்திருக்கும் இராஜாளிகளும் நீங்களே. ஆகவே நீங்கள் ஏன் உற்சாகம் குன்றி இருக்கின்றீர்கள், ஏன் மௌனம், மனச்சுமையும் சோகமும் ஏன்?

நீங்கள் மின்னலைப் போன்று பளிச்சிட வேண்டும், பெருங் கடலைப் போன்று பேரிரைச்சல் செய்திட வேண்டும். ஒரு மெழுகுவர்த்தியைப் போன்று நீங்கள் ஒளி பாய்ச்சிட வேண்டும், இறைவனின் இளந்தென்றலைப் போல் நீங்கள் உலகெங்கும் வீசிடல் வேண்டும்.

தெய்வீக வனங்களில் இருந்து வீசிடும் இனிய சுவாசக்காற்றுகளைப் போலவும், தேவரின் பூங்காக்களிலிருந்து வீசிடும் கஸ்தூரி கமழும் மாருதங்களைப் போலவும், நீங்கள் அறிவுடையோருக்கான காற்றில் நறுமணம் கமழ்ந்திடச் செய்ய வேண்டும், மேலும் மெய்மை சூரியன் பொழிந்திடும் பிரகாசங்களைப் போல் நீங்கள் மனிதகுலத்தின் இதயங்களை பிரகாசிக்கச் செய்திடல் வேண்டும்.

ஏனெனில் நீங்கள்தாம் உயிர் தாங்கிவரும் மாருதங்கள், நீங்கள்தாம் மீட்கப்பட்டோரின் பூங்காவிலிருந்து வீசிடும் மல்லிகையின் வாசங்கள். ஆகவே இறந்தோர்க்கு உயிர் கொடுங்கள், உறங்கிட்டோரை விழித்திடச்செய்யுங்கள்.

உலக இருளில் பிரகாசிக்கும் சுடர்களாக இருப்பீராக – நரகமெனும் பாலையில் உயிர்கொடுக்கும் நீருற்றுகளாக இருப்பீராக, ஆண்டவராகிய தேவரிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களாக இருப்பீராக.

இதுவே சேவை செய்ய வேண்டிய நேரம், இதுவே தீயைப்போல் உற்சாகமாய் இருந்திட வேண்டிய நேரம். இந்த வாய்ப்பின் மதிப்பை, எல்லையற்ற கொடையாக இருக்கும் இந்த பொருத்தமானநேரத்தின் மதிப்பை, உங்கள் கரங்களை விட்டு அது நழுவிச் செல்லும்முன் நீங்கள் அறிவீர்களாக.

நமது இந்த ஒரு சில நாட்கள், நமது மறைந்தோடிடும் வாழ்க்கை, விரைவில் கடந்துவிடும், பிறகு நாமும், வெருங்கையுடன், இனி பேச முடியாதவர்களுக்கென தோண்டப்பட்டிருக்கும் புதைகுழிக்குள் சென்றுவிடுவோம் – ஆகவேதான் நாம் வெளிப்படுத்தப்பட்ட அழகரோடு நம் இதயங்களை பிணைத்தும், என்றும் துவண்டிடாத உயிர்க்கொடியை பற்றிக் கொள்ளவும் வேண்டும்.

சேவைக்காக நாம் நம்மை தயார் செய்துகொண்டும், அன்பின் தீயை தீண்டிவிட்டும், அதன் அனலில் எரிந்திடவும் வேண்டும். இந்த பரந்த உலகின் இதயத்தையே தீமுட்டிடும் வரை நாம் நமது நாவுகளை தளர்த்திவிட வேண்டும், பிறகு வழிகாட்டுதல் எனும் பிரகாசமான கதிர்களைக் கொண்டு இருட்படைகளை மறைந்திடச் செய்யவேண்டும். அதன் பிறகு, தியாகம் எனும் களத்தில், நம் உயிர்களை, அவருக்காக நீத்திடவேண்டும்.

ஆகவே இறைவனை அறிதல் எனும் பொக்கிஷத்தின் மணிகளை எல்லா மக்களின்மீதும் தூவிடுவோம், பிறகு தீர்க்கமான வாள் எனும் நாவினைக் கொண்டும், குறிதவறா கனைகளெனும் அறிவைக் கொண்டும், அகங்காரம் மற்றும் உணர்வெழுச்சி ஆகிய படைகளை வென்று, உயிர்த் தியாக சதலத்திற்கு, தேவருக்காக உயிர் விடும் இடத்திற்கு நாம் விரைவோமாக.

அதன் பிறகு, பறக்கும் கொடிகளோடும், முரசுகளின் கொட்டு முழக்கத்தோடும், சர்வ-மகிமை மிக்கவரின் இராஜ்ஜியத்திற்கு விரைந்து, விண்படைகளோடு ஒன்று சேருவோமாக.

பெருஞ் செயல்கள் புரிவோர் நலன்தனை அடைவார்களாக.

(அப்துல் பஹாவின் புனிதவாசகங்களின் தேர்ந்தெடுப்புகள், பக்கம் 266-267)

இத் தெளிவுமிகு செய்யுட்கள்


இந்நாளில் விண்ணுலகத்தில் ஒரு மாபெரும் விழா நடைபெறுகின்றது; ஏனெனில் புனித நூல்களில் வாக்களிக்கப்பட்டவை யாவும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பரமானந்தம் அடைய வேண்டிய நாள். தூரமெனும் நெருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும், பேருவகையுடனும், களிப்புடனும் அவரது அருகாமையெனும் அரணுக்கு விரைந்திட வேண்டியது ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாகும். -பஹாவுல்லா

பின்வரும் நிருபம் பஹாவுல்லாவின் எழுத்துக்களான, பஹாவுல்லாவின் நிருபங்கள், மற்றும், ஒநாயின் மைந்தனுக்கான திருமுகம் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றது. இரண்டிலும், இந்த நிருபம் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபம் என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக, மூன்று முறை பல்வேறு சூழ்நிலைகளில் இந்நிருபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிருபத்தின் முக்கியத்துவம் அதன் இறுதிப் பத்தியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது.

இத் தெளிவு மிகு செய்யுட்கள்

பிற விஷயங்களுக்கிடையே, இத்தெளிவு மிகு செய்யுட்கள், மறுமொழியாக, குறிப்பிட்ட சில நபர்களுக்கு, தெய்வீக அறிவெனும் இராஜ்ஜியத்திலிருந்து கீழே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன:

‘எமது வதனமெனும் பிரகாசங்களின்பால் தனது முகத்தை திருப்பியுள்ளவரே! உலகவாசிகளை வீன் ஆசைகள் சூழ்ந்து, உறுதிப்பாடெனும் தொடுவானத்தையும், அதன் பிரகாசத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் அதன் ஒளிகளையும் நோக்கித் திரும்புவதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டிருக்கின்றன. தனித்தியங்க வல்லவரான அவரை அனுகுவதிலிருந்து வீன் கற்பனைகள் அவர்களை தடுத்துள்ளன. புறிந்து கொள்ளாமல், தங்கள் சபலங்கள் தூண்டிய வண்ணம் அவர்கள் மொழிகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இவ்வாறு கூறியவர்கள் ஆவர்: ‘செய்யுட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனவா?’. கூறுங்கள்: ‘ஆம், விண்ணுலகங்களின் பிரபுவான அவரது பெயரால்!” “நேரம் சம்பவித்து விட்டதா?” “அல்ல, அதனினும் மேலாக; தெளிவான அடையாளங்களை வெளிப்படுத்தும் அவரது பெயரால், அது கடந்து சென்றுவிட்டது! மெய்யாகவே, தவிர்க்கவியலாதது வந்துவிட்டது, ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் உண்மையானவரான, அவர் தோன்றிவிட்டார். ‘திருவெளி’ வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மனிதகுலம் கடுந்துன்பமும் பீதியும் கொண்டுவிட்டது. பூகம்பங்களும் வெடித்துவிட்டன, சர்வ உந்துதல் அளிக்கும், வலிமையின் பிரபுவான இறைவன்பால் உள்ள பயத்தால் இனங்கள் யாவும் புலம்பவும் செய்கின்றன.” கூறுங்கள்: “ஸ்தம்பிக்கவைக்கும் தாரை ஒளி உரக்க எழுப்பப்பட்டுவிட்டது, ஏகமானவரான, கட்டுப்படுத்தப்படாதவரான இறைவனுடையது இந்நாள்.” திடீர்ப் பேரழிவு கடந்து சென்றுவிட்டதா?” கூறுங்கள்: “ஆம், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவின் பெயரால்!” “மறு உயிர்த்தெழல் வந்துவிட்டதா?” “அல்ல, அதற்கும் மேலாக; தனித்தியங்குபவரான அவர் தமது அடையாளங்கள் எனும் இராஜ்ஜியத்துடன் தோனறிவிட்டார்.”மனிதர்கள் தாழ்வுற்றுக் கிடப்பதை காண்கின்றீரா?” “ஆம், மேன்மைபடுத்தப்பட்டவரான, அதி உயர்ந்தவரான எனது பிரபுவின் பெயரால்.” “அடிமரங்கள் வேருடன் பிடுங்கியெறியப்பட்டுவிட்டனவா?” “ஆம், அதனினும் மேலாக; நற்பண்புகளின் பிரபுவானவர் பெயரால், மலைகளே தூசிப்படலங்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டன.” அவர்கள் கூறுவதாவது: “சுவர்க்கம் எங்கே, நரகம் எங்கே?” கூறுங்கள்” “இறைவனோடு பங்காளியாக இனைந்து சந்தேகங்கொள்பவனே, ஒன்று எம்முடன் மறுபடியும் இனைதலாகும்; மற்றது உனது சுயநிலையே ஆகும்.” அவர்கள் கூறுவதாவது: “துலாபாரத்தை காண்கின்றோமில்லை.” கூறுங்கள்: நிச்சயமாகவே, கருணைத் தேவரான என் பிரபுவின் பெயரால்! உட்பார்வை பெற்றுள்ளோர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காண இயலாது.” “விண்மீன்கள் வீழ்ந்துவிட்டனவா?” கூறுங்கள்: ஆம், தனித்தியங்க வல்லவரான அவர் மர்ம பூமியில் (ஆட்ரியாநோப்பில்) வாசம் செய்திட்ட போதே.” பகுத்தறியும் தன்மை பெற்றுள்ளவர்களே, கவனங் கொள்ளுங்கள்! யாம் எமது வல்லமையெனும் கரத்தை மாட்சிமை மற்றும் வலிமை எனும் நெஞ்சிலிருந்து அகற்றியபோதே எல்லா அடையாளங்களும் தோன்றிவிட்டன. மெய்யாகவே, வாக்களிக்கப்பட்ட நேரம் தோன்றிய கனமே கூவுபவர் கூவிட, சைனாயின் மகிமைகளை கண்டுணர்ந்தோர் படைப்பின் பிரபுவான உன் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாட்சிமையின் முன்னிலையில் தாமதிப்பு எனும் வனாந்திரத்தில் மூர்ச்சையாகிவிட்டனர். ‘தாரை’ வினவுவதாவது: “ஊது குழல் ஒலிக்கப்பட்டுவிட்டதா?” கூறுங்கள்: “ஆம், வெளிப்பாட்டின் அரசரின் பெயரால்!, சர்வ-தயாளமுடையவரெனும் அவரது நாமமெனும் சிம்மாசனத்தில், அமர்ந்தவுடன்.” பிரகாசங்கள் யாவற்றுக்கும் தோற்றுவாயானவரான உன் பிரபுவின் கருணையின் உதய ஒளியினால் இருள் விரட்டப்பட்டுவிட்டது. சர்வ-தயாளமுடையவரின் தென்றல் வீசிட, அவர்களின் உடல் எனும் கல்லறையினுள் ஆன்மாக்கள் புத்துணர்வுபெறச் செய்யப்பட்னர். இவ்விதமாகவே, வலிமைமிக்கவரும் கொடையாளியுமாகிய இறைவனால் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வழிதவறியோர் கூறியுள்ளனர்: “விண்ணுலகங்கள் எப்போது பிளக்கப்பட்டன?” கூறுங்கள்: “வழிதவறுதல் மற்றும் தவறுகள் எனும் புதைகுழிகளில் நீங்கள் உரங்கிக்கொண்டிருந்த போது.” தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு, வலதுபுறமும் இடதுபுறமும் பார்ப்பவன் கவனமற்றவர்களில் ஒருவனாக உள்ளான். கூறுங்கள்: “நீ கண்ணிழந்தவனாக ஆகிவிட்டாய். ஓடி ஒளிந்திட உனக்குப் புகலிடம் கிடையாது.” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ான்: “மனிதர்கள் ஒன்று திரட்டப்பட்டுள்ளனரா?”. கூறுங்கள்: “ஆம், என் தேவரின் வாயிலாக! நீங்கள் உங்கள் வீண் ஆசைகள் எனும் தொட்டிலில் சாய்ந்திருந்தபோதே.” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: “உண்மையான சமயத்தின் சக்தியின் மூலமாக திருநூல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா?” கூறுங்கள்: “உண்மையான சமயம் தானே திகைப்படைந்துள்ளது. புறிந்துகொள்ளும் உள்ளம் கொண்ட மனிதர்களே, அச்சங்கொள்ளுங்கள்!” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: “குருடனாக நானும் மற்றவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளேனா?”. கூறுங்கள்: “ஆம், மேகங்களின் மீது அமர்ந்து வருபவரின் பெயரால்!” சுவர்க்கம் மர்ம ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும், நரகம் பக்தியற்றோரின் தீயினால் எரிந்திடச் செய்யப்பட்டும் உள்ளது. கூறுங்கள்: “வெளிப்பாடெனும் தொடுவானத்திலிருந்து ஒளி உதயமாகிவிட்டது, திருவொப்பந்த நாளின் பிரபுவின் வருகையினால் உலகம் ழுவதுமே ஒளிபெறச் செய்யப்பட்டுவிட்டது!” நம்பிக்கையற்றோர் அழிந்துவிட்டனர். அதே வேளையில், உறுதியெனும் ஒளியினால் வழிகாட்டப்பட்டு, மெய்யுறுதியெனும் பகலூற்றின்பால் திரும்பியவன், செழிப்படைந்தான். எம்மீது உன் பார்வையை குத்திடச் செய்துள்ளோனே, உனக்காக அனுப்பப்பட்டுள்ள — மனிதர்களின் ஆன்மாக்களை வானோங்கச் செய்யும் ஒரு நிருபமான இந்த நிருபத்திற்காக நீ ஆசீர்வதிக்கப்பட்டுள்ளாய். அதை மனனம் செய்து ஒப்புவிப்பாயாக. என் உயிரின் மீது ஆணை! உன் பிரபுவின் தயைக்கு அது ஒரு நுழைவாயிலாகும். மாலை வேளைகளிலும் காலை வேளைகளிலும் அதை வாசிப்பவன் நலமடைவானாக. அறிவெனும் மலை நொறுக்கப்பட்டும், மனிதர்களின் கால்களை வழுக்கிட செய்திடும் இந்த சமயத்தின் புகழை நீர் பாடியதை யாம், மெய்யாகவே, செவிமடுக்கின்றோம். உன்மீதும், சர்வ-வல்லவரும், சர்வ-கொடையாளியுமானவர்பால் திரும்பியுள்ள எவர்மீதும், எமது மகிமை சாரட்டுமாக. இந்நிருபம் முடிவுற்றது, ஆனால் அதன் பொருள் வற்றாமல் உள்ளது. பொறுமை கொள், ஏனெனில் உன் தேவர் பொறுமையானவர்.
பஹாவுல்லா, பஹாவுல்லாவின் நிருபங்கள், ப. 117-119

கடவுளின் வார்த்தைகள்


இறைவனின் வார்த்தையும் அதன் ஆற்றல்கள் அனைத்தும் எல்லாம்-அறிந்தவரும் சர்வ-விவேகியுமான அவரால் முன்விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்குட்பட்டே மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டுமென எம்மால் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை மறைத்திடும் திரையாக வேறெதுவுமின்றி அதனையே யாம் விதித்துள்ளோம். எமது நோக்கங்களை எய்திடக்கூடிய ஆற்றல் இவ்வாறாகவே உள்ளது. அவ்வார்த்தை தன்னுள்ளடங்கியுள்ள சக்திகளையெல்லாம் திடீரென வெளிப்படச்செய்திட அனுமதிக்கப்படுமேயானால், எம்மனிதனாலும் அவ்வித ஆற்றல்மிகு வெளிப்பாட்டின் பலுவைச் சுமந்திட முடியாது. மாறாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள அனைத்தும் அதன் முன்னிலையிலிருந்து வெருண்டோடிப் போகும்.

மனிதர்களின் இறைநம்பிக்கையின் உள்ளுரம் எல்லா நாடுகளிலும் மறைந்துகொண்டிருக்கின்றது; அவரது முழுமையான குணமளிக்கும் மருந்தைத் தவிர வெறெதுவுமே அதனை மறுபடியும் உயிர் பெறச் செய்யமுடியாது. இறைநம்பிக்கையின்மையின் அரிக்குந்தன்மை மனுக்குலத்தின் உயிர்நாடியை அரித்துக்கொண்டிருக்கின்றது; அவரது ஆற்றல்மிகு வெளிப்பாடெனும் அமுதத்தைத் தவிர வெறெதுதான் அதனைத் தூய்மைப்படுத்தியும் மீட்டுயிர்ப்பெறவும் செய்யமுடியும்? ஓ ஹாக்கிம், பருப்பொருளின் நுட்பமானதும் பகுக்கமுடியாததுமான ஏதாவது ஒரு பகுதியின் மூலக்கூற்று தனிமங்களில் அவற்றைத் தங்கமாக உருத்திரிபு செய்யவல்ல ஒரு பூரணமான தன்மைமாற்றத்தை உண்டாக்கிடுவது மனித சக்திக்கு உட்பட்டதா? திகைக்க வைப்பதும் சிறமமானதுமாக இரு தோன்றினாலும், இதனினும் பெரிய காரியமாக பேய்த்தனமான வலிமையை தெய்வீக வளமாக மாற்றஞ்செய்வதற்கு யாம் ஆற்றல் பெற்றுள்ளோம். இவ்வித தன்மைமாற்றத்தை உண்டாக்கக்கூடிய சக்தி அமுத சக்தியினையும் மிஞ்சிய ஒன்றாகும். இறைவனின் வார்த்தை ஒன்றே, தனியே, இவ்வித உயர்ந்த மற்றும் எட்டும்வரையிலான விளைவுகளை உண்டாக்கக்கூடிய மாற்றத்திற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது எனும் தனித்தன்மையைக் கோரிட முடியும்.

உண்மையான வெற்றிக்கு வழிகாட்டுபவர் வந்துவிட்டார். இறைவனின் நேர்மைத் தன்மையின் சாட்சியாக! ஒரே ஒரு வார்த்தையின் சக்தியின் மூலம் உலகத்தையே மாற்றியமைக்க அவர் முழுமையான ஆற்றல் பெற்றுள்ளார். விவேகத்தைக் கையாழுமாறு எல்லா மனிதர்களுக்கும் ஆணையிட்டு, தாம் மட்டும் பொறுமை மற்றும் கீழ்படிகை எனும் கயிற்றைப் பற்றிக்கொண்டுள்ளார்.

ஆன்மீகச் சபைகளை நிறுவுவீர்களாக; இவ்வுலகில் ஒற்றமை மற்றும் உடன்பாடு ஆகியவற்றிற்கான அடித்தலத்தை அமைப்பீர்களாக; உலகத்தின் மீதிருந்து சச்சரவு மற்றும் போர் ஆகியவற்றின் கட்டமைப்பை அழித்திடுவீராக; இணக்கம் மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் ஆலயத்தை அமைப்பீராக; மனுக்குல ஒறுமைத்தன்மை நிலையின் ஒளியைத் தூண்டிவிடுவீராக; உங்கள் கண்களைத் திறந்திடுவீராக; மருமை உலகைக் கண்ணுற்று உற்று நோக்குவீராக! அமைதி, கடைத்தேற்றம், நேர்மை மற்றும் மறுஇணக்கம் ஆகியவற்றின் இராஜ்ஜியம் அருவ உலகில் அமைக்கப்பட்டுள்ளது, இறைவனின் வார்த்தையின் ஆற்றல் மூலமாக அது சிறுகச் சிறுகவே வெளிப்பட்டும் தோற்றம் காணவும் செய்யும்!

நீங்கள் நட்புறவு கொண்டுள்ளோரின் வட்டத்தை அதிகரித்திட முயற்சி செய்தும், நன்மைகள் புறிந்திட வேண்டுமெனும் ஒரே நோக்கும், அனைத்துலக அமைதி கோட்பாட்டின் செயலாக்கத்திற்காக பாடுபட்டும், மனுக்குலம் ஐக்கியப்படுதலை காண்பதன்றி வேறு ஆசைகள் எதனையும் மனதிற் பேணாத, நன்மைகள் மட்டுமே புரிந்திட வேண்டுமெனும் ஒரே எண்ணங்கொண்டுள்ள பரந்தமனப்பான்மைக் கொண்ட ஆன்மாக்களோடு மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டும். தெய்வீக இராஜ்ஜியம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டிடவேண்டி, இவ்விதமான மக்கள் கூட்டை நீங்கள் நாடிட வேண்டும். அவர்களது நோக்கங்கள் மிக நேர்த்தியானவையாக இருந்தபோதிலும், இவ்வுலக சக்திகள் அனைத்தும் அனைத்துலக அமைதியை ஸ்தாபித்திடவோ அல்லது மனுக்குல ஒறுமைத்தன்மையை மேம்பாடடையச் செய்திடவோ சக்தியற்றிருக்கின்றன என்பதை அவர்கள் உணரவில்லை. இறைவனின் வார்த்தையின் சக்திக்கும் புனித ஆவியின் மூச்சுக் காற்றுக்கும் குறைந்து வேறு எதுவுமே இதில் வெற்றி பெற்றிட முடியாது.

அலியே! எல்லா உலகங்களுக்கும் ஆண்டவராகியவரின் கொடை, உமக்கு அருளப்பட்டுள்ளது, தொடர்ந்து அருளப்பட்டும் வருகின்றது. அவரது வலிமையையும் ஆற்றலையும் கொண்டு கவசம் பூண்டு, அவரது சமயத்துக்கு உதவிடவும் அவரது புனித நாமத்தை மிகைப்படுத்திடவும் முன்னெழுந்திடுவீராக. மானிடக்கல்வியின்பால் அறியாமையும் வாசிப்பதிலும் எழுதுவதிலும் உமது இயலாமையும் உமது உள்ளத்தை வருத்தமுறச் செய்திட அனுமதியாதீர். அவரது பன்முகமான அருள்பாலிப்புகளின் கதவுகள் அந்த ஒரே உண்மை இறைவனின் ஆற்றலின் வலிமையான பிடிக்குள் அடங்கியுள்ளன. அவருக்குச் சேவைச் செய்யும் அனைவர்பாலும் அவர் அவற்றைத் திறந்துவிட்டுள்ளார், தொடர்ந்து திறந்துவிடவும் செய்வார். தெய்வீக நறுமனமெனும் இத்தென்றல், உமது உள்ளமெனும் பசும்புல்வெளியிலிருந்து அதன் விளைவுகள் வெளிப்படுமளவுக்கு தொடர்ந்து உலகம் முழுமையின் மீதும், எல்லாக் காலங்களிலும், தொடர்ந்து வீசிட வேண்டுமென யான் உறுதியாக எதிர்பார்க்கின்றேன்.

அவரது வார்த்தைகளை அறிந்துகொள்வதென்பதும் விண்ணுலகப் பறவைகளின் உச்சரிப்புக்களை ப் புரிந்துகொள்வதென்பதும் மனிதக் கல்விக்கு எவ்வகையிலும் உட்பட்டவையல்ல. அவை, உள்ளத் தூய்மை, ஆன்மநெறி, மற்றும் ஆவியின் தன்னிச்சையையுமே முற்றாக சார்ந்துள்ளன. இன்று, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கல்வி முன்மாதிரிகளைச் சார்ந்த ஒரு வார்த்தையைக் கூட அறிந்திராமல், அறிவின் மிக உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்துள்ளோர்களாலேயே இது உதாரணப்படுத்தப்பட்டுள்ளது; மற்றும் அவர்களது உள்ளங்களெனும் தோட்டம், தெய்வீக அருட்பொழிவுகளின் மூலமாக, விவேகமெனும் ரோஜாக்களாலும் பூவரசம்பூக்களெனும் அறிவினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.