( இதனுடன் தொர்புடைய பிற கட்டுரைகள்: ஸ்ரீ கிருஷ்ணர் – https://goo.gl/krv8qo ; 1844 – மையக்குறி ஆண்டு https://goo.gl/7lN3Du; To read in english: https://kprsamy.wordpress.com/2017/12/15/1844-in-hindu-prophecies/)
19ம் நூற்றாண்டின் ‘அவதார எதிர்பார்ப்பு’
ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)
(எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன்)
துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் (दुष्ट निग्रह सिष्ट परिपालन) செய்திட நவயுக அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் தோன்றவேண்டும். இது புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படும் வாக்குறுதி. ஸ்ரீ கிருஷ்ணர் தமது பேருபதேசமாகிய பகவத் கீதையிலும் இதே வாக்குறுதியை வழங்குகிறார்.
கல்கி அவதாரம் குறித்த வாதங்கள் நெடுங்காலமாகவே நடந்துவந்துள்ளன. ஆனால், இத்தோன்றல் குறிப்பாக எப்போது, எப்படி, மற்றும் எங்கு நடக்கும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் பத்தோன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரத்தின் தோற்றம் குறித்து பரவலான எதிர்ப்பார்ப்பு இருந்துள்ளது என்பதை பழைய நாளேடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரியும். சில ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளனர். இவ்விதம் கூறியவர்களுள் வட இந்தியாவின் ராஜநாராயன் ஷட்ஸாஸ்திரி என்பவரும் அடங்குவார். அதே சமயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரம் தோன்றப்போகிறது எனும் தீர்க்கதரிசனத்தையும் பல ஞானிகள் வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் பக்த சூரதாஸர்.
ஓர் அவதாரத்தின் தோற்றம் குறித்து இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற சமயத்தினரும் எதிர்ப்பார்ப்பு கொண்டிருந்தனர். பத்தோன்பதாம் நூற்றண்டில் ஏற்பட்ட அறிவியல் விழிப்புணர்வு மற்றும் தொழில்துறை மேம்பாடுகள் மக்கள் மனதில் பல குழப்பங்களுக்குக் காரணமாயிற்று. தத்தம் சமயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சமய விசுவாசிகள் உலகில் ஏற்பட்ட இவ்விதமான மாற்றங்களுக்கான காரணங்களை அவரவர் சமயங்களில் காண முற்பட்டனர். இவ்விசாரனையிலிருந்து சமய அவதாரங்களின் மீள்தோற்றம் பற்றிய கருத்து மறு உயிர்ப்பு பெற்றது. அவரவர் சமயங்களை ஸ்தாபித்த அவதாரங்கள் மீண்டும் தோன்றப்போகிறார்கள் என்னும் நம்பிக்கை வலுவடைந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த ‘மீள்தோற்ற’ நம்பிக்கைக்கு அடிப்படையில்லாமல் இல்லை. கீதையில் கிருஷ்ணர் தாம் உலகில் தர்மத்தை நிலைப்படுத்திட மீண்டும் மீண்டும் சம்பவிப்பேன் என்னும் அதே தீர்க்கதரிசனத்தை எல்லா சமயங்களிலும் அதனதன் ஸ்தாபகர்கள் வாக்களித்துச் சென்றுள்ளனர்.
இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களில் ‘மீள்தோற்றம்’ குறித்த தீர்க்கதரிசனங்கள் பல உள்ளன. இஸ்லாமிய உலகின் சுன்ன பிரிவினரிடையே இயேசு நாதர் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவார் என்னும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதே போன்று ஷீயா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12-வது இமாமாகிய இமாம் மெஹ்டி 60-ஆம் வருடம், அதாவது ஹிஜ்ரி 1260ல் (கி.பி.1844), பூமியில் மீண்டும் அவதரிப்பார் என்னும் தீர்க்கதரிசனம் உள்ளது. அதே போன்று பல கிருஸ்தவ பிரிவினர்களிடையே விவிலிய குறிப்புகளின்படி கி.பி.1844-இல் இயேசு நாதர் மறுபடியும் இப்பூமியில் தோன்றி விசுவாசிகளை ஒன்றுதிரட்டுவதுடன் சுவர்க்கத்தில் உள்ளது போன்று பூமியிலும் கடவுளின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் என்னும் நம்பிக்கை உள்ளது. கிருஸ்துவ பிரிவுகளில் ஒரு பிரிவினரான “Seventh Day Adventists” ஒரு படி மேலே சென்று இயேசு நாதரின் மறுவருகை 21 மார்ச் 1843லிருந்து 21 மார்ச் 1844க்குள் நடைபெறவேண்டுமென அறுதியிட்டுக் கூறினர். இது போக, யூத மதத்தினரிடையிலும் ‘மீட்பாளர்’ அதாவது ‘messiah’ மறுபடியும் தோன்றுவார் என்னும் நம்பிக்கையும், புத்த சமயத்தில் புத்தர் மீண்டும் ‘மைத்திரேயி அமிதபா’ எனும் பெயரில் தோன்றுவார் என்னும் நம்பிக்கையும் பார்ஸி மதத்தினரிடையேயும் தங்கள் அவதாரமான ஸாராதுஸ்ட்ரா, ‘ஷா பாஹ்ரம்’ என்னும் பெயரில் பூமியில் தோன்றுவார் என்னும் தீர்க்கதரிசனமும் உள்ளது. இது போக நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் என கணக்கிலடங்காதோர் அப்போது கூறினர், மற்றும் இப்போதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் நடக்கும் அதே வேளை உலக நிலவரம் முதலாம் உலக யுத்தம் பிறகு இரண்டாம் உலக யுத்தம் என மிகவும் மோசமான போர்களைத் தாண்டி வந்துள்ளது. ஆயுதப் போர்கள் நின்றுபோனாலும் இன்று உலகை வேறு விதமான சமூக மற்றும் ஆன்மீக ரீதியான போர்கள் உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று உலக நிலவரத்தை காணும் எவருமே உலகிற்கு ஒரு வழிகாட்டி இப்போது தேவையில்லை, தற்போது இருக்கும் முறைகளே போதுமானவை எனக் கூறிடமுடியாது. முன் எப்போதையும் விட இப்போதுதான் ஒரு வழிகாட்டியின் தேவை இன்றியமையாததாக இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.
சமயங்களின் படிப்படியான தோற்றம்
ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானகமவ்யயம்|
விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே’ப்ரவீத்|| (4-1)
(அழிவுறாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு போதித்தேன், விவஸ்வான் மனுவுக்கு போதித்தான், மனு இக்ஷ்வாகுவிற்கு போதித்தான்)
சமயங்கள் எப்போதுமே தன்னிச்சையாக தோன்றுவதில்லை. அவை ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் செயல்முறையின் (process) தனிக் கூறுகளாகும். அவை காலம், இடம், சமூக சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்தே வெளிப்படுகின்றன. அதாவது, அவை கடவுள் மானிடத்திற்காக வகுத்திருக்கும் திட்டத்தின் படிப்படியான வெளிப்பாடுகள் எனக் கூறலாம். புராணங்களின் கூற்றின்படி விஷ்ணு காலத்திற்குக் காலம் பல அவதாரங்களை எடுத்து வந்துள்ளார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அவற்றுள் கல்கி அவதாரம் தவிர்த்து முக்கியமானவை ஒன்பது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, கிருஷ்ண, புத்தர் ஆகிய அவதாரங்கள் என வரிசைப்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் எட்டாவது அவதாரம் கிருஷ்ணரின் சகோதரரான பலராமர் எனவும் ஒன்பதாவதாக கிருஷ்ணர் எனவும் வரிசைப்படுத்துகின்றனர். இந்த வரிசையை காணும்போது இதில் ஒரு பரிணாம வளர்ச்சி, ஒரு படிப்படியான வளர்ச்சி இருப்பதை நம்மால் காணமுடிகிறது. நீரில் மட்டுமே வாழும் மீன், பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, நிலத்தில் மட்டும் வாழும் வராகம், பாதி மனிதனும் பாதி மிருகமுமான நரசிம்மர், மனிதர் ஆனால் முழுமையான உருவத்தில் இல்லாத வாமனர், மிகவும் ஆக்ரோஷமான பரசுராமர், முழுமையான நற்குணங்கள் நிறைந்த இராமர் என ஒரு விதமான படிப்படியான வளர்ச்சியை, ஒரு செயல்முறையை நம்மால் காண முடிகிறது. அதே போன்று கடந்த 6000 வருடங்களாக ஆதாம் (Adam) முதல் உலகில் தோன்றியுள்ள கடவுளின் அவதாரங்களும் சுமார் 1000 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் தோன்றி மக்களை ஒரு நிலையிலிருந்து வேறோர் உயர்ந்த நிலைக்கு, கடவுள் மனிதனுக்காக எண்ணியிருக்கும் இலக்கிற்கு, தங்களின் போதனைகளின் மூலமாக உயர்த்தியிருக்கின்றனர். சமய வரலாறுகளைச் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் இது புலப்படும். சமயங்களை, அவற்றின் ஆன்மீக போதனைகள் தவிர்த்து சமூகவியல் ரீதியாக ஆராயும் போது தனிமனிதன், குடும்பம், சமூகம், சமுதாயம் என சமய போதனைகள் காலத்திற்கு காலம் உயர்ந்துகொண்டே செல்வதை நம்மால் காணமுடிகிறது. இக்கால அவதாரமான பஹாவுல்லா உலக ஒற்றுமை, சமயங்களுக்கிடையே ஒற்றுமை, உலகப் பொது அரசு, உலகப் பொது மொழி என உலக ரீதியிலான போதனைகளை வழங்கிச் சென்றுள்ளார்.
கல்கி தோன்றக்கூடிய உலகச் சூழ்நிலை
பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)
பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்|
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே|| (4-8)
(எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன்)
ஸ்ரீமத் பாகவதம்
இத்தம் கலௌ கதப்ராயே ஜனே து கரதர்மினீ|
தர்மத்ராணாய ஸத்வேன பகவானவதரிஷ்யதி|| ((12-2-16)
(இவ்வாறு கலியுகத்தில் மக்கள் அதர்மவாதிகளான பின் தர்மத்தை உறுதிபடுத்திட பகவான் அவதரிப்பார்)
பூமியில் எப்போதெல்லாம் தர்மம் தாழ்வுற்று அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் ஓர் ஆன்மாவை பூமிக்கு அனுப்புகின்றார் என கீதையில் கிருஷ்ணர் வாக்களித்துள்ளார். ஆனால், அதற்காக பூமியில் உண்மையிலேயே தர்மம் அழிந்துவிட்டதென பொருள்படாது. இதன் கருத்தாக்கம் என்னவென்றால், மனிதன் ஒரு நிலையிலிருந்து வேறோர் நிலைக்கு, ஆன்மீக ரீதியிலும், சமூக ரீதியிலும், மேம்பாடு அடைந்தும், அவன் அதற்கப்பால் செல்வதற்கு நடப்பிலுள்ள சமய போதனைகளுக்கு வலுவில்லாததால் மேற்கொண்டு ஒரு புதிய வழிகாட்டி தேவைப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். ஒரு வழிகாட்டி இல்லாத நிலையில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதற்கிணங்க மனிதர்களின் வாழ்க்கை அமைந்துவிடும். இன்று உலகில் நடக்கும் கோரங்கள் இதற்கு நல்ல உதாரனமாகும்.
ஒவ்வொரு சமய நம்பிக்கையிலும் அதன் ஸ்தாபகர் மறுபடியும் பூமியில் அவதரிப்பார் எனும் தீர்க்கதரிசனம் இருக்கின்றது மற்றும் அவர்கள் கல்கி, மைத்ரேயி அமிதபா, ஷா பாஹ்ரம், யூதர்களின் மெஸ்ஸாய்யா, கடவுளின் ஒளியில் இயேசு நாதர், இமாம் மெஹ்டி எனும் நாமங்களில் இவர்கள் அனைவரும் மீண்டும் அவதரிக்கப்போவதாக அவரவர்களின் சமய திருவாக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டோம். இங்கு ஒரு கேள்வி மனதில் உதிக்கக்கூடும். இவர்கள் அணைவரும் உலகில் அவரவரின் விசுவாசிகளின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப தனித்தனியாகத் தோன்றப்போகிறார்களா அல்லது கடவுள் ஒருவரே எனும் அடிப்படையில் இவர்கள் அணைவரும் ஒரே ரூபத்தில் உலகில் தோன்றப்போகிறார்களா?
ஒரு காலத்தில் பூகோள ரீதியிலும், இன ரீதியிலும், மொழி ரீதியிலும், பலவாறாகப் பிரிந்துகிடந்த மனுக்குலம் இன்று அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போன்றவற்றால் வேறு வழியின்றி மிகவும் அணுக்கப்பட்டுக்கிடக்கின்றது. மக்கள் கூட்டங்கள் பெரும்பாலும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் பெரும் பெரும் எண்ணிக்கையில் தங்கள் நாடுகளை விட்டு பொருளும் பாதுகாப்பும் தேடி வெவ்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். ஆகவே வெவ்வேறு சமய விசுவாசிகளின் அவதாரங்கள் தனித்தனியே வந்து இவர்களுக்கு காட்சி தரப்போகிறார்களா என்பதைக் கற்பனை செய்வது கூட இயலாது. உலகில் பிரிவினைக்கான காரணங்கள் வெகுவாக இருக்கின்றன அதில் சமய ரீதியில் மேலும் பிரிவினைகள் தேவையில்லை. ஆகவே, இந்த அவதாரங்கள் யாவரும் குறிப்பிடுவது ஒருவரையே என்பது தெளிவு.
இப்போது இந்த அவதாரம் தோன்றப்போவது எப்போது என்பதை முதலில் காண முற்படுவோம். அவதாரம் தோன்றும் காலத்தை ஓரளவிற்கு நம்மால் கணித்திட முடியும். இதற்கான ஆதாரங்களை எல்லா சமயங்களின் புனித நூல்களிலும் காணலாம். உதாரணமாக ஹிஜ்ரி 1260 மற்றும் கி.பி.1844 வருடங்களை குறிப்பிடலாம். இரண்டும் ஒரே வருடத்தைதான் குறிப்பிடுகின்றன.
புத்தர் நந்த அரசர்கள் ஆட்சியின் போது அவதரிப்பார்
விஷ்ணு புராணம்
यदा महाम्यो यास्यन्ति पूर्वाषाढा महर्षयः|
तदा नन्दात्प्रब्र्त्येष कलि: वृद्धि गमिष्यति||
யதா மஹாம்யோ யாஸ்யந்த்தி பூர்வஷாடா மஹர்ஷய:|
ததா நந்தாத்ப்ரப்ர்த்யேஷ கலிர்வ்ர்த்தி கமிஷ்யந்தி||
மக நட்சத்திரத்திலிருந்து பூர்வஷாடாவுக்கு எப்பொழுது சப்தரிஷிகள் செல்கிறார்களோ அப்பொழுது நந்த அரசர்களின் காலத்திலிருந்து கலி தன் முழு வலுவை அடையும்
நந்த அரசர்களின் காலத்தில் கலியுகம் தனது உச்சியினை, அல்லது தனது மத்திய நிலையை அடைந்து தொடர்ந்து மேலும் வலிமை பெறும் என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நந்தர்கள் கி.மு. சுமார் 600களிலிருந்து 300கள் வரை இன்றயை வட இந்தியாவில் ஆட்சி புரிந்தனர். இது கலியுகத்தில் சுமார் 2400 வருடங்கள் சென்ற பின் நடந்ததாகும்.
கிருஷ்ணரின் இறப்பிலிருந்து புத்தரின் தோற்றம் வரை ஏறத்தாழ 2400 ஆண்டுகள் ஆகின்றன. அதே போன்று புத்தரின் தோற்றத்திலிருந்து 2400 ஆண்டுகள் 19ம் நூற்றாண்டில் முடிகின்றன. எவ்வகையில் பார்த்தாலும் இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் குறிப்பிடுவது ஒருவரையே என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.
அவதாரங்களின் இரண்டு நிலைகள்
பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
அஜோ’பி சன்னவ்ய்யாத்மா பூதானாமீஷ்வரோ’பி சன்|
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாம்யாத்மமாய்யா|| (4-6)
(பிறப்பும் இறப்பும் இல்லாமல், உயிரினங்களுக்கெல்லாம் ஈஷ்வரனே எனினும், எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.)
கடவுளின் அவதாரங்கள் மனித பிறப்பு எடுக்கும்போது அவர்கள் மனிதநிலையில் ஒருபுறமும் தெய்வீக நிலையில் மறுபுறமுமாக செயல்படுகின்றனர். மனிதநிலையில் அவர்கள் பிறக்கின்றனர், பூமியில் எல்லா மனிதர்களைப்போலவே வாழ்கின்றனர் பிறகு காலம் கனிந்தவுடன் மனிதர்களைப்போலவே மரணமெய்துகின்றனர். கீதையில் பகவான் அல்லது கடவுளின் நிலையில் கிருஷ்ணர் அர்ஜுனனோடு உரையாடுகிறார் என்பதால் கிருஷ்ணர் சம்பந்தமான அத்தியாயங்கள் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என ஆரம்பிக்கின்றன. இது குறித்து கடவுள் அவதாரமான பஹாவுல்லா: “எனது உறவை நான் ஆழ்ந்து சிந்திக்கையில் படைப்பினங்கள் யாவற்றிடமும் ‘மெய்யாகவே யாமே கடவுள்’ என இயம்பிட நான் உந்தப்படுகிறேன்; எனது சொந்த நிலைதனை நான் கருத்தில் கொள்ளும்போது, அந்தோ நான் என்னை மண்ணிலும் கீழானவனாகக் காண்கிறேன்!” என கூறுகின்றார்.
யுகங்கள்
ஸ்ரீமத் பாகவதம்
க்ருத த்ரேதா த்வாபரம் ச கலிஷ்சேதி சதுர்யுகம்|
திவ்யை த்வாதஷபி வர்ஷை: ஸாவதானம் நிரூபிதம்॥ (3-11-18)
சத்வாரி த்ரீணி த்வை கைகம் க்ருதாதிஷு யதாக்ரமம்|
ஸம்க்யா தானி ஸஹஸ்ரானி த்விகுணானி ஷதானிச॥(3-11-19) ॥
(கிருத, திரேதா, துவாபர, மற்றும் கலி என்பன சதுர்யுகங்களாகும். 12,000 திவ்ய வருடங்களை இதில் கவனமாக நிரூபிக்கவும். நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று ஆயிரம் வருடங்கள் இவற்றிற்கு.)
கிருஷ்ணாவதாரமும் கல்கி அவதாரமும் கலியுகத்தோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணர் மறைந்த அடுத்த கணமே கலி பிறந்தது, அதன் முடிவில் கல்கி அவதாரம் உண்டாக வேண்டும் என்பது புரானங்களின் கூற்று. ஸ்ரீ கிருஷ்ணர் கி.மு.3102ல்[1] விண்ணேற்றம் அடைந்தார் என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அவர் விண்ணேற்றம் அடைந்த அடுத்த கணமே கலி பிறந்தது என புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவர் மீண்டும் கல்கியாக அவதரித்து சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார் என்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுகங்கள் எனும்போது, நான்கு யுகங்கள், அதாவது சத்திய, துவாபர, திரேதா மற்றும் கலி என நான்கு யுகங்களும் அவற்றின் சந்தி மற்றும் சந்தியாம்ச காலங்கள் சேர்ந்து 12,000 மானிட வருடங்கள் ஒரு சதுர்யுகமாகின்றன. ஆனால் கலியுகத்திற்கு 4.32,000 ஆண்டுகள் என்பது பரவலான நம்பிக்கையாகவும் இத்தகைய நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு கணிப்பு எவ்வாறு ஏற்பட்டிருக்கவும் கூடும் என்பதை காண்போம். சுலோகங்களில் எண்கள் எழுதப்படும்போது அவை ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என எழுதப்படாமல் அவை நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று என எதிர்வரிசையில் எழுதப்படுவது மரபாகும். அதே வேளை யுகங்களை வரிசையாக எழுதும்போது சத்ய, த்வாபர, த்ரேதா மற்றும் கலி என நேர்வரிசையாகவே எழுதப்படும். இரண்டையும் ஒன்று சேர்த்து எழுதும்போது சத்ய, த்ரேதா, த்வாபர மற்றும் கலியுகங்களுக்கு நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஓர் ஆயிரம் வருடங்கள் என ஸ்லோகங்களில் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக சத்திய யுகத்திற்கு 4000 வருடங்கள் மற்றும் கலியுகத்திற்கு 1000 வருடங்கள் எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ‘அங்கானாம் வாமதோ கதி’ (இங்கு ‘வாம’ என்பதற்கு ‘எதிரான’ என்பது பொருளாகும்) என்னும் விதியை கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட தவறு என பல பண்டிதர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கலியுகத்திற்கு 1200 வருடங்கள் வருவதைக் கண்டு காலக்கணிப்பு சரிவராததால் திவ்ய (சூரிய) வருடங்களைத் தைவ்ய (தெய்வ) வருடங்கள் என வியாக்கியானம் செய்து அதை 1200×360=4,32,000 மானிட வருடங்கள் என கணித்துள்ளனர். (360 திவ்ய, அதாவது மானிட வருடங்கள் 1 தேவ வருடம் என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே மனுஸ்மிருதியில் 4000 வருடங்கள் கழித்து கிருதயுகம் என அத்தியாயம் 1 – 68 ல் குறிப்பிடப்பட்டுள்ளது) யுகங்களின் கால வரையறை பின்வருமாறு திவ்ய (சூரிய) வருடங்களாக இருக்கவேண்டும.
யுகம் | சந்தி | காலம் | சந்தியாம்சம் | மொத்தம் |
---|---|---|---|---|
சத்திய | 100 | 1000 | 100 | 1,200 |
திரேதா | 200 | 2000 | 200 | 2,400 |
துவாபர | 300 | 3000 | 300 | 3,600 |
கலி | 400 | 4000 | 400 | 4,800 |
சதுர்யுகம் | 12,000 |
கலியுகத்தில் நடக்கவிருக்கும் சில சம்பவங்கள் மற்றும் நடப்பு உலக நிலை
ஸ்ரீமத் பகவத் கீதை
ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:|
ச காலேனேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப||(4 – 2)
(இவ்விதமாக தொடர்ச்சியாக இந்த யோகத்தை இராஜரிஜிகள் உணர்ந்திருந்தனர். ஆனால், காலம் செல்ல செல்ல இந்த யோகம் நலிவடைந்தது.)
பல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகளும் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:
• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.
• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்
• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானிகள் எனப் போற்றப்படுவர்
• அகதிகளாகப் பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்
• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவர்
• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்
• எவரையுமே நம்ப முடியாமல் போகும்
• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்
• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதைத் தாண்டமாட்டர்கள்
• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்
• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்
• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.
• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்
• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்
• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்
• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணக்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்
• ஆட்சித் தலைவர்கள் மக்களைக் காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களைப் பறித்துக்கொள்வார்கள்
• நீர் கிடைக்காமல் போகும்
• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்
மேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்களே ஆகும். பல புராணங்களில் கலியுகத்தில் மனிதர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலை குறித்த பன்மடங்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாது. புராணங்கள் குறிப்பிடாதவையாக, கடந்த சில நூற்றாண்டுகளாகப் புராணங்கள் கூட எதிர்ப்பார்க்காத அளவு, உலகில் நாசங்கள் பெருகியும் நடந்தும் உள்ளன. உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களும் அதன் விளைவாக உலகில் ஏற்பட்ட நாசங்களைக் குறிப்பிடலாம். அரசர்களின் இராஜ்யங்கள் கவிழ்ந்து உலகில் மக்களாட்சி முறை ஏற்பட்டு, அதுவும் சில வேளைகளில் கவிழ்ந்து கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதிக்கம், சர்வாதிகார ஆட்சிமுறைகள், சமயச்சர்வாதிகார ஆட்சிமுறைகள் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். மேலும் ஐரோப்பாவில் பிளேக் நோயினாலும் பிற நோய்களினாலும் இயற்கைப் பேரிடர்களாலும் மக்கள் கோடிக்கணக்கில் அழிவுற்றதையும் இங்குக் குறிப்பிடலாம். முதலாம் உலக யுத்தம் முடிந்த சில வருடங்களில் இன்ஃபுலுவென்ஸா நோயினால் சுமார் 10கோடி மக்கள் மாண்டனர். இன்று மத்திய கிழக்கில் சிறிய பொறியினால் கூட பெரும் போர்த்தீ வெடிக்கும் அபாயத்தையும் இங்கு குறிப்பிடலாம். கலியுகத்தின் லக்ஷனம் இவ்வாறாகவே இருக்கின்றது.
கலியுகத்தின் முடிவு
ஸ்ரீ விஷ்ணுபுரானம்
யதா சந்திரஸ்ச ஸூர்யஸ்ச ததா திஷ்யோ ப்ருஹஸ்பதி|
ஏக ராஸௌ ஸமேஷ்யந்திததா பவதிக்ருதம்|| (4-24-102)
(சந்திரனும் சூரியனும் அதே போன்று குருவும் ஒரே ராசியில் ஒன்றுகூடும் போது அது கிருத யுகம் ஆகும்.)
கலியுகம் எப்போது முடிந்தது அல்லது முடிந்திருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். கிருஷ்ணர் மறைந்தவுடன் கலியுகம் தோற்றம் கண்டது எனவும் கலியுகத்திற்கு பொதுவாக 4,32,000 வருடங்கள் தவறான கணக்கு எனவும், அதற்கு 4800 வருடங்களே எனவும் குறிப்பிட்டுள்ளோம். கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டுமானால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா? எல்லா வகையிலும் கலியுகத்திற்கு 4800 வருடங்களே என்பது தர்க்க ரீதியில் ஏற்புமிக்க ஒன்றாக இருக்கின்றது. அப்படி ஏற்றுக்கொண்டோமானால், கலியுகம் (4800-3102) கி.பி.1698லேயே முடிவுக்கு வந்திருக்கவேண்டும் எனப் பொருள்படுகின்றது. 1200 வருடங்களான சத்திய யுகம் நடப்பிற்கு வந்திருக்கவும் வேண்டும் மற்றும் சத்திய யுகத்தில் இதுவரை 300 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டிருக்கவும் வேண்டும். பகவத் கீதையில் கிருஷ்ணர் மனிதர்களிடையே தர்மம் நலிவுறும்போது யுகத்திற்கு யுகம் தோன்றுவேன் என கூறியுள்ளார். கலியுகத்தின் முடிவும் சத்திய யுகத்தின் ஆரம்பமும் கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் கல்கி எப்போது தோன்றுவார் என்பது குறிப்பாக எழுதப்படவில்லை. யுகங்களின் ஆரம்பம் அல்லது முடிவோடு அவதாரங்களின் தோற்றத்தைச் சம்பந்தப்படுத்த முடியாது என்னும் ஒரு வாதமும் உள்ளது. உதாரணமாக இராமர் சுமார் கி.மு.5000ல் தோன்றியதாக பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், அதே பஞ்சாங்க கணிப்புப்படி துவாபர யுகம் ஆரம்பித்ததோ கி.மு. (3102+3600) 6702-இல். அதாவது துவாபர யுகம் ஆரம்பித்து சுமார் 1700 ஆண்டுகளுக்கு பிறகே இராமர் அவதரித்துள்ளார்.
கல்கி அவதாரம் எங்கே நடக்கும்
ஸ்ரீமத் பாகதவதம்
ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:|
பவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி|| (12-2-15)
அதாசௌ யுகசந்த்யாயாம் தஸ்யுப்ராயேஷு ராஜஸு|
ஜனிதா விஷ்னுயஸஸோ நாம்நா கல்கிர்ஜகத்பதி:|| (1-3-25)
(சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தாராக விளங்கும் விஷ்ணுயாசர் என்பவரின் இல்லத்தில் கல்வி தோன்றுவார். யுகசந்தியில் கெட்டகுணங்கள் மேவிய காலத்தில் ஜகத்பதியான கல்கி விஷ்ணுயாசர் எனும் நாமத்தோடு ஜனனம் காண்பார்.)
புரானங்கள் கிருஷ்ணர் கல்கி விஷ்ணுயாஷாவாக கலியுகத்தின் முடிவில் மறுபடியும் அவதரிப்பார் என கூறுகின்றன. ஆனால், குறிப்பாக இது எப்போது நடக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை. 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கலியுகத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பது பரவலாக விவாதிக்கப்பட்டது. சிலர் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறினர். இவர்களுள் ஒருவர் பண்டிதர் ராஜநாராயன் ஷட்சாஸ்திரி என்பவர். இவர் தமது ‘சேதாவனி’ எனும் பத்திரிக்கையின் 1924-ஆம் பிரதியில் பக்தியோகத்தின் சாதனையால் கல்கி அவதாரம் எங்கோ தோன்றிவிட்டது என தமக்குத் தெரியவந்துள்ளது என எழுதியுள்ளார். கலியுகத்திற்கு 4,32,000 வருடங்கள் கொடுத்திருப்பது தவறு, அதற்கு உண்மையில் 4800 திவ்ய வருடங்களே என இவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நூல் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் 8 முறை பிரசுரிக்கப்பட்டும் உள்ளது. கிருஷ்ணர் மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகாவில் ஆட்சி செலுத்தினார். ஆனால் அவருடைய மறுவருகை இதே போன்று அதே இடங்களிலும் நடக்கப்போவதில்லை. அவர் தாம் மறுபடியும் தோன்றுவேன் எனப் பொதுவாக கூறினாலும் உலகில் எங்கே தோன்றுவார் என்பதைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் அவர் இந்தியாவிற்கு வெளியிலும் தோன்றலாம் என்பதற்கு புராணங்களிலும் பிற மூலாதாரங்களிலும் பல அடிப்படைகளைக் காணலாம்.
இரண்டு அவதாரங்கள்
ஸ்ரீமத்பாகவதம்
தேவாபி: ஷந்தனோர்ப்ராதா மருஷ்சேக்ஷ்வாகுவம்ஷஜ:|
கலாபக்ராம ஆசாதே மஹாயோகபலான்விதௌ|| (12-2-37)
தாவிஹைத்ய கலேரந்தே வாஸுதேவானுஷிக்ஷிதௌ|
வர்ணாஷ்ரமயுதம் தர்மே பூர்வவத் ப்ரதயிஷ்யத:|| (12-2-38)
(மகா யோகபலம் பொருந்திய தேவாபியும் மருவும் கலாபக்கிராமத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் கலியுகத்தின் இறுதியில் வெளிவந்து ஆயிரம் வருடங்கள் கொண்ட சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார்கள்.)
பகவத்கீதை
பஷ்யாதித்யான்வஸூன்ருத்ரானஸ்வினௌ மருதஸ்ததா|
பஹூனியத்ரிஷ்டபூர்வானி பஷ்யாஷ்சர்யாணி பாரத || (11-6)
(விஷ்வரூப தரிசனத்தின்போது: ஆதித்யர்களையும்; வசுக்களையும்; அஸ்வினிகள் இருவரையும்; மருத்துக்களையும்; இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களையும் பாரதா, பார்.)
ஸ்ரீமத் பாகவதத்தில் கலியுகம் முடிந்தவுடன் சத்திய யுகத்தைச் சந்திரவம்சத்தை சார்ந்த ராஜா தேவாபியும், இக்ஷ்வாகு வம்சத்தை சார்ந்த ராஜா மருவும் தங்களின் யோக பலத்தினால் பகவானின் ஆணையால் வெளிவந்து 1000 வருடங்களான சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார்கள் என விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. தேவாபி சந்திரவம்சத்தினர், ராஜா மரு சூரிய வமசத்தினர். இவர்கள் இருவரும் கடவுளின் அவதாரங்களேயன்றி வேறு யாரும் இலர். கல்கி மற்றும் மரு என்பதெல்லாம் பெயர்களே அன்றி அவை வெவ்வேறு மனிதர்களைக் குறிப்பிடுவன அல்ல. இதே போன்று எல்லா சமயங்களிலும் மூல அவதாரத்தோடு முன்னோடி அவதாரம் ஒருவர் தோன்றுவது வழக்கமாகும். உதாரணமாக கிருஸ்துவ சமயத்தில் முதலில் யோவான் (John the Baptist) தோன்றினார் பிறகு இயேசு நாதர் தோன்றினார். இஸ்ரேலின் சரித்திரத்திலும் சரி உலக சரித்திரத்திலும் சரி இதே போன்று இரு தெய்வ அவதாரங்கள் தோன்றுவார்கள் என்பது யூதர்களின் சமயவழக்குகளில் உள்ள ஒரு நம்பிக்கையாகும். கிருஷ்ணர் காலத்திலும் அவருக்கு துணையாக பலராமர் இருந்தார் மற்றும் அவரும் விஷ்ணுவின் ஓர் அவதாரம் எனக் கருதப்படுகிறார். மோஸஸ் காலத்திலும் அவருக்கு துணையாக ‘எர்ரன்’ என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசி இருந்தார். இக்காலத்தில் பஹாய் வரலாற்றிலும் ‘பாப்’ என்பவர் பஹாவுல்லவிற்கு முன்னோடியாக, ஒரு தனி அவதாரமாகத் தோன்றினார். இவ்விரட்டை அவதாரங்கள் குறித்து பைபிலின் புதிய ஏற்பாட்டின் நான்கு கோஸ்ப்பல்களிலும் ‘ஒரே மஞ்சத்தில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘இரு பெண்கள் (மா)வரைப்பார்கள் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘வயலில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ என எழுதப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அவதாரங்கள் தோன்றுவார்கள் அதில் ஒருவர் சில காலங்களுக்கே இருப்பார் மற்றவர் தொடர்ந்திருப்பார் என்பதாகும். (பாப் அவர்கள் 1850-இல் மரண தண்டனைக்கு ஆளாகி 750 துப்பாக்கிகளால் சுடப்பட்டு இறந்தார், மற்றும் பாப் அவர்களால் வாக்களிக்கப்பட்ட பேரவதாராம் தாமே என பஹாவுல்லா 1863-இல் அறிவித்தார்)
கல்கி அவதாரம் நடக்கக்கூடிய நேரம்
கடவுள் அவதாரங்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நேரடியான வார்த்தைகளால் விவரிப்பதில்லை. உதாரனமாக தமது மறுவருகை தர்மம் நலிவுற்று அதர்மம் ஓங்கும் போது நடக்கும் என கிருஷ்ணர் பொதுவாகக் கூறுகிறார். அது எப்போது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. (இயேசு நாதரின் மறுவருகை குறித்தும் இதே ரீதியில்தான் தீர்க்கதரிசனம் வழங்கப்பட்டுள்ளது. இருளில் திருடனைப்போல் வருவேன் என அவர் கூறியுள்ளார்.) கிருஷ்ணரின் மறுவருகை குறிப்பாக எப்போது நடக்கும் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? முதலாவதாக நடப்பு உலகச் சூழ்நிலையை வைத்து ஏறக்குறைய எப்போது நடக்கும் அல்லது நடக்க வேண்டும் என்பதை நாம் யூகிக்கலாம். இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை என எவருமே கூறிட முடியாது. உலக நிலை அத்தகைய படுமோசமான நிலையில் இருக்கின்றது. அடுத்து நடப்பில் உள்ள காலம் குறித்த கணிதக் கணக்குகளில் அவதாரம் உதிக்க வேண்டிய குறிப்பான நேரம் எங்காவது மறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய முயலலாம். கடவுளின் அவதாரத்தை கண்டுகொள்ளும் திறனை கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே வழங்கியுள்ளார் என பஹாவுல்லா தமது திருவாசகங்களில் கூறியுள்ளார்.
“உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து மதித்துணர முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும். அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்?”
மனம் பரிசுத்தமாக இருந்தால் நாம் கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளலாம்.
உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
கடந்த மூன்று நூற்றாண்டுகளும் உலக வரலாற்றிலேயே ஒப்பிலா நூற்றாண்டுகளாகும். மனிதனின் சீரான வாழ்வு முற்றிலும் தலைகீழாக மாறிய காலகட்டம் இது; புராணங்களில் கூறப்பட்டுள்ள கலியுக சம்பவங்கள் அப்படியே நடந்தேறிய காலம் இது. அது போக அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றமும் அதன் விளைவான கணக்கிலடங்கா கண்டுபிடிப்புகள்; உலக அரசியலில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள், ஓர் உலகளாவிய அமைப்பான ஐ.நா. நிறுவப்பட்டது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். சமய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் வியப்பளிப்பனவாக இருக்கின்றன. மனுஸ்மிருதியில் மனு விதித்திருந்த வர்ணாசிரம விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறைந்துகொண்டே வருகிறது. பிராமனர்கள் யார், க்ஷத்திரியர்கள் யார், வைசியர்கள் யார் மற்றும் க்ஷூத்திரர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியாத நிலை வளர்ந்துவருகிறது. விவேகானந்தர் சத்திய யுகத்தில் ‘பிராமனர்கள்’ மட்டுமே இருப்பார்கள் என கூறியுள்ளார். இங்கு பிராம்மனர்கள் என்பது ‘கடவுள் வழியில் நடப்பவர்கள்’ எனப் பொருள்படும்.
இத்தகைய மாற்றங்களுக்கான காரணம் என்ன?
உலகில் மக்களின் வாழ்க்கை முறையில் கடந்த சில நூற்றாண்டுகள் வரை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆனால், பத்தொன்பதாம் நூற்றண்டு முதல் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் தலையை கிறுகிறுக்க வைப்பதாக உள்ளது. தட்டையாய் படிந்த நிலையில் இருந்த உலக வாழ்வுமுறை அதுமுதற்கொண்டு திடீரென செங்குத்தாக உயர்ந்து சென்றது; இன்று வரை அவ்வாறே உயர்ந்து கொண்டும் செல்கிறது. புதிய சகாப்தம் ஏதும் ஆரம்பித்துள்ளதா? இதற்கு தூண்டுகோலாக இருந்தது என்ன?
பின்னுரை
கிருஷ்ணர் மறைந்த வருடம் கி.மு.3102[1] என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாகும். கலியுகத்திற்கு 4800 திவ்ய வருடங்களே என்பதை ஏற்றுக்கொண்டோமானால் கலியுகம் கி.பி.1698லேயே முடிவடைந்திருக்க வேண்டும். அவ்வாறு அது கி.பி. 1698ல் முடிவடைந்தருந்தால் நாம் அது முதற்கொண்டு சத்திய யுகத்தில் வாழ்கின்றோமா? ஆனால் அது அவ்வாறல்ல. பஹாய் சமயத்தவர்களைப் பொறுத்த வரை சத்திய யுகம் பிறந்தது கி.பி.1844இல். (இதன் முழு விவரங்களைக் காண https://prsamy.wordpress.com/2016/10/29/1844-எல்லா-சமயங்களுக்கும்-மை/ செல்லவும். இறை அவதாரங்கள் உலகில் தோன்றும் காலங்களில் உலகில் அவதாரங்களின் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் போன்று பலர் தோன்றுவர். இவர்கள் ஆன்மீக ரீதியில் அவதாரங்களின் தோற்றத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்; அது குறித்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உரைப்பார்கள். அவர்களின் கூற்றுகளை இப்போது காண்போம்:
சந்த் சூரதாஸ் (15வது நூற்றாண்டு)
வடநாட்டைச் சார்ந்த சந்த் சூரதாஸர் குறிப்பிட்ட காலம்: சூரதாஸர் பிறப்பிலேயே கண்பார்வையற்றவராக இருந்தார். 6 வயதிலேயே தமது பெற்றோரை பிரிந்து வாழ்ந்தார். சிறந்த கிருஷ்ண பக்தரான இவர் தமது ‘ஸூர்ஸாகர்’ எனும் தொகுப்பிற்கு சுமார் 1,00,000 பாடல்கள் இயற்றியதாக கூறப்படுகிறது ஆனால், அவற்றில் சுமார் 8000 பாடல்களே எஞ்சியுள்ளன. இவர் விக்ரம சம்வத் 1900-க்கு மேல் உலகில் ஒரு பெரும் மாற்றம் உண்டாகும் என கூறியுள்ளார். வி.ச. 1900க்குச் சமமான ஆங்கில வருடம் கி.பி. 1844 ஆகும்.
வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கர் (கி.பி.1823 – 1873)
திருவருட்பா
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே
என தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். ஆம், கடவுள் தாமே உலகில் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார், அதற்கான நேரமும் இதுதான் என்பது வள்ளலாரின் வாக்கு. மேலும் கலியுகத்திற்குச் சுமார் 5000 வருடங்களே உள்ளன எனவும் இவர் கூறியுள்ளார்.
இயேசுநாதரின் மறுவருகை குறித்து விவிலியத்தின் தானியேல்
இயேசுவின் மறுவருகை குறித்து அவருடைய சிஷ்யர்கள் வினவியபோது இயேசுபிரான் அவர்களை பழைய ஏற்பாட்டின் தானியேலின் நூலைப் பார்க்கும்படி கூறினார்.
தானியேல் 8:13 பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.
தானியேல் 8:14 அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான். தானியேல் 8:24 அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
அதாவது, புனிதஸ்தலமான ஜெருசலம் எப்போது பரிசுத்தப்படுத்தப்படும் என ஒரு தேவகணம் கேட்க அதற்கு தானியேலின் பதிலே மேல்காணப்படுவது. ஜெருசலத்தை மறுநிர்மாணம் செய்திட அர்டிஷர் என்னும் பெயர் கொண்ட பாரசீக மன்னன் கி.பி.457-இல் உத்தரவிட்டான். இந்தத் தேதியிலிருந்து 1844 வரை சரியாக 2300 ஆண்டுகளாகும். மேலே இராப்பகல் என குறிப்பிடப்படும் ஓர் இராப்பகல் என்பது மனிதர்களின் ஒரு வருடத்தைக் குறிக்கும். தானியேலின் தீர்க்கதரிசனம் சரியாக முற்றுப்பெற்றது.
வில்லியம் மில்லர்
இந்த வரிசையில் அடுத்து முக்கியமானவராக உள்ளவர் கிருஸ்தவ சமயத்தில் வில்லியம் மில்லர் (கி.பி.1782 – 1849). இவர் இயேசு நாதர் வெகு விரைவில் அவதரிக்க போகிறார் என ஐக்கிய அமெரிக்காவில் போதித்தார். இவரது கணிப்புப்படி இயேசு நாதரின் மறுவருகை 1844-இல் கண்டிப்பாக நடக்கும் என இவர் உறுதியாக நம்பினார்.
ஷேய்க் அஹ்மட்-இ-அஹ்ஸாயி (1753 – 1826)
அடுத்து மத்திய கிழக்கில் ‘மறுவருகை’ குறித்து போதித்தவர்களில் ஷேய்க் அஹ்மட் உள்ளார். இவர் அரேபியாவின் வடகிழக்கில் பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்தவராவார். இவர் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுவோர் எவ்வாறு அதன் ஐக்கியத்தை நாசம் செய்து, அது தன் ஆற்றலை இழக்குமாறு செய்து, அதன் நோக்கங்களை பிறழ்வுறச் செய்தும் அதன் புனித நாமத்தைத் தாழ்த்திடுகின்றனர் என்பதைக் கண்டார். ஷீயா வர்க்கத்தினரிடையே காணப்பட்ட ஊழல்களையும் போராட்டங்களையும் கண்டு அவரின் ஆன்மா வேதனையடைந்தது… பாரசீக வளைகுடாவின் தெற்கு திசையில் உள்ள பாஹ்ரேய்ன் தீவில் வாழ்ந்த தமது குடும்பத்தினரை பிரிந்து… ஒரு புதிய அவதாரம் ஒன்றின் வருகையை முன்னறிவிக்கும் இஸ்லாமிய சாஸ்திரங்களில் அடங்கியுள்ள மர்மங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் மனதில் இஸ்லாம் சமயத்தில் எத்தகைய தீவிரம் நிறைந்த மறுசீரமைப்பும் இவ்வழிதவறிய மக்களுக்கு புத்துயிரளிக்கப் போவதில்லை என்னும் உறுதியான நம்பிக்கை மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. இஸ்லாமின் திருமறைகளில் பதிக்கப்பட்டிருக்கும் மற்றும் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் புதியதும் ஒரு தன்னிச்சையானதுமான ஒரு கடவுளின் வெளிப்பாட்டினைத் தவிர வேறெதுவுமே நலிவுறும் அச்சமயத்தின் நற்பேற்றை மறுவுயிர்ப்பித்து அதன் தூய்மையைப் புதுப்பிக்கவும் முடியாது… என அவர் அறிந்தார்.
இவர் இந்த ரீதியிலேயே மக்களுக்குப் போதித்தார். இவரது மறைவிற்குப் பிறகு இவருடைய பெயரால் ‘ஷேய்க்கிகள்’ என்னும் சமயப்பிரிவினர் உருவாயினர். ஷேய்க் அஹ்மட் தமது வாழ்நாளிலேயே சைய்யிட் காஸிம் என்பவரைத் தமது வாரிசாக நியமித்தார்.
ஸையிட் காஸிம் (1793 – 1843)
ஷேய்க் அஹ்மட்டின் வாரிசாகவும் விரைவில் தோன்றக்கூடிய புதிய கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளும் பொறுப்பும் ஸையிட் காஸிமுக்கு வழங்கப்பட்டது. இவர் தமது சீடர்கள் புதிய அவதாரத்தை எவ்வாறு கண்டுகொள்வது என்பது குறித்து 1843-இல் தமது மறைவு வரை போதித்து வந்தார். தாம் மறைந்தவுடன் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடிக் கண்டுகொள்ளும்படி தமது மாணவர்களைப் பணித்தார்.
முல்லா ஹுஸேய்ன-இ-புஷ்ரூயி (1813 – 1849)
ஸையிட் காஸிமின் தலைமை மாணாக்கராக இருந்த முல்லா ஹுஸேய்ன் ஸையிட் காஸிமின் மறைவுக்குப் பின்னர் ஸையிட் காஸிமின் சீடர்களையெல்லாம் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடிக் கண்டுகொள்ளுமாறு பணித்தார். தமது பங்கிற்குத் தாமும் நாற்பது நாள் பிரார்த்தனையும் நோன்புமாக இருந்து பின் தமது ஊராகிய புஷீருக்கும் பின்னர் ஷிராஸ் நகருக்கும் பயணமானார். தம்மை ஏதோ ஒரு சக்தி ஷிராஸ் நகரை நோக்கி இழுத்து சென்றதாக அவர் கூறியுள்ளார். கி.பி.1844-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி முன்மாலை நேரம் அவர் ஷிராஸ் நகரின் தலைவாசலைச் சென்றடைந்தார். அப்போது அங்கே தமக்காகவே காத்திருப்பதுபோல் தோன்றிய ஓர் இளைஞரை அவர் கண்டார். அந்த இளைஞர் முல்லா ஹுஸேய்னைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று நலம் விசாரித்து அவர் ஷிராஸ் வந்த நோக்கத்தையும் வினவினார். பிறகு முல்லா ஹுஸேய்ன் தேடி வந்த அவதாரம் தாமே எனப் பிரகடனப்படுத்தினார். அப்போது பொழுது மங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அந்த இளைஞரே பஹாய் சமத்தின் முன்னோடி அவதாரமாக விளங்கிய அலி முகம்மட் எனும் இயற்பெயருடைய ‘பாப்’ பெருமானார் ஆவார்.
பாப் (கி.மு.1819 – 1850) பெருமானாரின் தோற்றத்தால் பாரசீக நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக அந்த நாட்டை ஆண்டுவந்த ஷா மன்னன் பாப் அவர்களைக் கைது செய்யும் ஆணையை பிறப்பித்து 1850-இல் அவருக்கு மரண தண்டனையும் விதித்து, தலா 250 வீரர்கள் கொண்ட 3 பிரிவான படைவீரர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் தோன்றவிருக்கும் ஒரு மாபெரும் அவதாரத்திற்கான முன்னோடியே என அறிவித்தார்.
பாப் அவர்களைத் தொடர்ந்து கி.பி. 1863-இல் பஹாவுல்லா (கி.பி. 1817 – 1892) டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள ரித்வான் பூங்காவில் பாப் அவர்களால் அறிவிக்கப்பட்ட அவதாரம் தாமே என பிரகடனப்படுத்தினார். பஹாவுல்லா தமது உயிலும் சாசனத்தில் தமக்கு பிறகு பஹாய் உலகின் தலைமத்துவத்திற்கு தமது மூத்த மகனாகிய அப்துல் பஹாவை (கி.பி. 1844 – 1921) நியமித்தார்.
அப்துல் பஹா பஹாய் உலகின் தலைமத்துவத்தை சுமார் 30 ஆண்டுகாலம் தாங்கிய பிறகு 1921-இல் காலமானார். இவர் பஹாய் சமயத்தின் உதாரன புருஷர், கடவுளின் மர்மம், கடவுளின் ஒப்பந்தத்தின் மையம் எனப் பல நாமங்கள் பெற்றவராவார். இவர் முதலாம் உலக யுத்தத்தின்போது பாலஸ்தீனத்தில் ஆற்றிய உணவு நிவாரண சேவைகளுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு ‘சர்’ (Sir) பட்டம் வழங்கியது. இவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து தமது தந்தையாரின் செய்தியைப் பிரகடனப்படுத்தினார். அப்துல் பஹா தமது உயிலும் சாசனத்தில் தமக்குப் பிறகு பஹாய் உலகின் பாதுகாவலராகத் தமது மூத்தப் பேரராகிய ஷோகி எஃபெண்டியை (கி.பி.1898 – 1957)நியமித்தார்.
ஷோகி எஃபெண்டி பஹாய் உலகின் பாதுகாவலராக சுமார் 35 வருட காலம் சேவையாற்றிய பிறகு 1957-இல் மறணமடைந்தார். அதன் பிறகு பஹாய் உலகம் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உலக அமைப்பின் கீழ் இன்று செயல்படுகிறது.
இத்தகவல்களை வழங்குவதன் காரணம் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து 21-ஆம் நூற்றாண்டு வரை உலகில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய விழிப்புணர்வை காட்டுவதற்காகவே. இதை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகக் கீழேயுள்ள படங்களை பார்க்கவும்.


மேலே காணப்படும் கிராஃப்களை கூர்ந்து கவனித்தால் அறிவியல் வளர்ச்சியும் சரி புரட்சிளும் சரி ஒரே சீராக வளரவில்லை, மாறாக, வெளிப்படையான காரணங்கள் ஏதும் இன்றி அவை கடந்த சில நூற்றாண்டுகளிலேயே திடீரென துரித வளர்ச்சி கண்டுள்ளன. அமைதியாகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏதும் இல்லாமல் இருந்த உலகத்தின் மேம்பாடு திடீரென கடந்த சில நூற்றாண்டுகளில் ஏன் இவ்விதமான திடீர் வளர்ச்சி கண்டது? செடி கொடிகள் வளர்ச்சி காண வேண்டுமானால் அவற்றிற்கு நீர் அவசியம். மழையே இல்லாமல் இருந்த ஒரு நிலப்பகுதியில் திடீரென மழை பெய்தால் அங்கு அதற்குமுன் காணப்படாத புல் பூண்டுவகைகளில் திடீர் வளர்ச்சி காணப்படுவது இயல்பே. அதே போன்றதுதான் உலக மேம்பாடு. ஏதோ ஒரு நிகழ்வு அதன் திடீர் மேம்பாட்டிற்குத் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். வேறு ஒரு உதாரணத்தை இப்போது காணலாம். கல்வியோ வாழ்க்கை அனுபவமோ இல்லாமல் வளர்ந்த ஒரு மனிதனுக்கு கல்வி வழங்கப்பட்டு அவனுடைய அறிவாற்றல் தூண்டப்பெற்றால் அவனுடயை வாழ்வில் திடீர் மாற்றத்தை, ஒரு மேம்பாட்டை நாம் காண முடியும். இதே ரீதியில் மானிடத்தின் வாழ்விலும் ஏதோ ஒறு புதிய உணர்வு ஊட்டப்பட்டது போன்று மேற்கண்ட படங்களில் நாம் ஒரு திடீர் வளர்ச்சியை காணுகின்றோம்.
இவ்விதமான உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கமுடியும். உலக வரலாற்றில் சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான வளர்ச்சியை காணும்போது அதன் பின்னனியில் ஒரு சமயவெளிப்பாட்டின் தோற்றம் இருப்பதை உணரலாம். உதாரணமாகச் சிந்து வெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்வோம். அது ஏறக்குறைய கி.மு. 3500-இல் தீவிரம் அடைய ஆரம்பித்தும் பின்னர் சுமார் 2000 வருடங்கள் நிலைத்திருந்த பரவலான ஒரு நாகரிகமாகும். கிருஷ்ணரின் வெளிப்பாடு நடந்தது கி.மு. 3228 – 3102ற்குள். இவ்வெளிப்பாட்டையும் சிந்துவெளி நாகரிகத்தையும் தொடர்புபடுத்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. சிந்துவெளி நாகரிகத்திற்குத் தூண்டுகோலாகவும் மூலாதாரமாகவும் இருந்தது கிருஷ்ணர் மூலமான கடவுளின் திருவெளிப்பாடே ஆகும். அடுத்து இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியை காணலாம். நாகரிகமற்ற அரபு மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு மாபெரும் இஸ்லாமிய நாகரிகத்தை, அறிவியல், கணிதசாஸ்திரம் மற்றும் பிற விஷயங்களில் ஒரு மாபெரும் வளர்ச்சியை உருவாக்கியது இஸ்லாமிய திருவெளிப்பாடே ஆகும். இதே போன்று இயேசு நாதர், புத்தர் ஆகியோரின் வருகையால் உலகில் ஏற்பட்ட மேம்பாடுகளை நாம் கணக்கிட முடியும்.
கி.மு. 1844-ஆம் வருடம் பல மூலாதாரங்களின் வாயிலாக ஒரு முக்கியமான வருடம் என்பதை நாம் உணரலாம். பஹாய் திருவெளிப்பாடு அவ்வருடத்திலேயே துவங்கியது. பஹாவுல்லாவின் எழுத்துகள் சுமார் 100 நூல்களாகத் தொகுக்கப்படலாம். தமது வெளிப்பாடு குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறியுள்ளார்:
அதி சிறந்த இப்புதிய உலக அமைப்பின் இயக்கத்தின் நடுக்கமுறச் செய்திடும் பாதிப்பினால் உலகின் சமநிலையே சீர்கேடடைந்துள்ளது. இணையற்ற, அற்புதமிக்க இவ்வமைப்பு முறையின் செயற்பாட்டினால், மனித இனத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை பெரும் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு முறையை மானிடக் கண்கள் இதுவரைகண்டதே கிடையாது.
இறுதியாக,
திருக்குரள்
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
பஹாவுல்லாவின் போதனைகளுள் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய்ந்து உணர வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள மேலோட்டமான விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. பஹாய்கள் வன்மதமாற்ற நடவடிக்கைகளில் (proselytize) ஈடுபடுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கை என்பது உள்ளத்திலிருந்து தானாக மலர வேண்டும். அதை வெளியில் இருந்து உருவாக்க முடியாது. இன்று உலகத்தில் நூற்றுக்கணக்கில் நான்தான் கல்கி, நான்தான் இயேசு, நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் எனப் பலர் கூறிக்கொள்கின்றனர். இவர்களுக்கிடையே பாரசீக நாட்டில் தோன்றிய பஹாவுல்லா என்பவர் தாம்தான் என்றென்றும் வாக்களிக்கப்பட்டு வந்துள்ள இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம் எனத் தம்மை 1863-இல் பிரகடனப்படுத்திக்கொண்டார். வைரம் என்பது கற்களுக்கிடையில் கிடக்கும்போது அதுவும் கல்லைப் போன்றுதான் தோற்றமளிக்கும், தவறாகக் கருதப்படவும் கூடும். வைரம் எது கல் எது என்பதை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவது தனிநபர் கடமை, அதை மற்றவர்களின் வார்த்தைகளை வைத்து தீர்மானிக்க முடியாது தீர்மானிக்கவும் கூடாது, மாறாக, சுதந்திரமான சுய ஆய்வின் மூலமே அதைக் கண்டறிய வேண்டும். அதற்கான ஆற்றல்களைக் கடவுள் மனிதர்களுக்கு இயல்பாகவே வழங்கியுள்ளார். தூய சிந்தனை மிக்க தியானத்தின் மூலமாகவும் பிரார்த்தனையின் வாயிலாகவும் கல்கி அவதாரம் குறித்த உண்மையை உணர்ந்திட கடவுள் நமக்கு நிச்சயமாகவே அருள் புரிவார்.
கடவுள் அருள் மானிடத்தின் மீது என்றென்றும் பொழியப்படுவதாக.
[1] According to KD Abhyankar, the starting point of Kaliyuga is an extremely rare planetary alignment, which is depicted in the Mohenjo-Daro seals[citation needed]. Going by this alignment the year 3102 BCE is slightly off. The actual date for this alignment is February 7 of 3104 BCE. There is also sufficient proof to believe that Vrdhha Garga knew of precession at least by 500 BCE. Garga had calculated the rate of precession to within 30% of what the modern scholars estimate. (https://en.wikipedia.org/wiki/Kali_Yuga)
அருமையான விளக்கம். மிகவும் தெளிவாக விளங்குகிறது. சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை.
madathuravi awarhale!”vilakkathai vilakkamaha vilanginal vilakkam vilakkamaha vilangum”mudhalil unmaiyana kalkiyai arindhu kollungal.unmaiyai pinpatri oluhum kaalamellam valithavara maatirhal.
== [பத்ம புராணத்தில் : கலியுகத்தில் மனிதர்களுக்கு விமோசனம் தருவது எது?] ==
பூலோகத்தில் ஹரியின் கதையில் விருப்பம் உண்டாவதில்லை. சிலர் அக்கதையை பொய் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். வைஷ்ணவர்களின் பாதங்களைக் கழுவிய நீரை யாரொருவன் தன் தலையில் தரிக்கின்றானோ, அவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைகிறான். ஒரு வைஷ்ணவனிடம் ஒரு கணம் அல்லது அரைகணம் கழித்தாலும் அவன் செய்த பாவங்கள் ஒழிந்துவிடும். குலத்தில் ஒருவன் வைஷ்ணவனாக இருந்தால் போதும், அந்தக்குலம் முழுவதுமே பாவங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையும். காமம்,கோபம், லோபம், மோகம், மதம்,மாச்சர்யம் இவற்றினின்று விடுபட்டவனே உண்மையான வைஷ்ணவன்.
யார் ஏகாதசி விரதம் இருக்கிறானோ, எந்நேரமும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறானோ துளசி மாலையை கழுத்தில் அணிந்திருக்கின்றானோ, யாருடைய வீட்டில் சாளக்கிராமசிலை பூஜிக்கப்படுகிறதோ அவனே உண்மையான வைஷ்ணவன். பகவான் கிருஷ்ணருக்கு சமர்பித்த பிரசாதத்தை அமிர்தமாக கருதி உண்கிறானோ மற்றும் துளசி வளர்ப்பவன், வேதசாஸ்திரங்களை மனதில் சதா காலமும் சிந்திக்கின்றானோ ராதா அஷ்டமி அன்று விரதமிருக்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன்.
இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.
ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.
ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகத்தின் பெயர் என்ன??
ஸ்ரீகிருஷ்னரின் வரலாறு எனத் தனியாக நூல் எதுவும் கிடையாது. விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், மாஹாபாரதம் போன்று புரான இதிகாசங்களிலிருந்து கிருஷ்னரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
ஸ்ரீமத் பகவத் கீதையும் கிருஷ்ணரின் சரித்திர புத்தகம் தானா??
ஸ்ரீமத் பாகவதம் என்பது ஸ்ரீமத் பாகவத் கீதையா??
இல்லை. ஸ்ரீமத் பகவத் கீதை வேறு ஸ்ரீமத் பாகவதம் வேறு. ஸ்ரீமத் பாகவதம் புராணங்களில் ஒன்று. பகவத் கீதை மஹாபாரத இதிகாசத்தில் இடம் பெறுகிறது.
ஸ்ரீமத் பகவத் கீதையும் கிருஷ்ணரின் சரித்திர புத்தகம் தானா??
சரித்திரமல்ல. போரின் போது அர்ஜுனன் மனதில் எழுந்த குழுப்பங்களைக் களைவதற்காக கிருஷ்னர் வழங்கிய பேருபதேசங்கள்.
நான் ஒரு facebook page செய்கிறேன்.
அதற்கு ஒரு Like குடுங்கா ஐயா.
Facebook Name. Lord Of Vishnu.
Thank you Sir
Thank for you a like prsamy sir.
it contains lord thirumal’s leelai too..it contains
two parts…
== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==
கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 30 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.
ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.
== கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி ==
அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1
சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே
”’நித்யமான ஆனந்தம்இஇருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.”’
கோபால தாபனீ உபநிஷத் 1.3
க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம் ”’கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்”’
கோபால தாபனீ உபநிஷத் 1..21
ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய: ”’கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்”’
ஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி: ”’கிருஷ்ணர் ஒருவரே ஆனால் அவர் எண்ணிலடங்காத ரூபங்களிலும் அவதாரங்களிலும் வெளிப்படுபவர்.”’
யத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி:
”’வேத இலக்கியங்களிலே பரம பூரண உண்மை ஒரு நபரே என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் கிருஷ்ணர்.”’
கோபால தாபனீ உபநிஷத் 1..24
யோ ப்ரஹ்மாணம் விததாதி: பூர்வம் யோ வேதாம்ஷ் ச காபயதிஸ்ம க்ருஷ்ண:
”’ஆதியில் பிரம்மனுக்கு வேத ஞானத்தை உபதேசித்ததும்.. புராதன காலத்தில் வேத ஞானத்தை அளித்ததும் கிருஷ்ணரே.”’
இதையே பத்மபுராணம் : நாம சிந்தாமணிஹ் க்ருஷ்ணஸ்
”’நாமங்களில் அனைத்தைவும் விட தலைசிறந்த மணிமகுடநாமம் கிருஷ்ணா என்பதாகும்.”’
வேதங்களில் உள்ளபடி :அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில் :
ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர: ”’தேவகியின் மைந்தனான கிரஷ்ணரே முழுமுதற்கடவுள்”’
சத்சித் ஆனந்த ரூபாய க்ருஷ்ண: ”’நித்யமான ஆனந்தமயமான உருவமுடையவர் கிருஷ்ணரே.”’
== கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும் பிற தேவிதேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை ==
பாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்கும் போது அதன் அடிமரம், கிளை,மிலாறுகளுக்கு சக்தி அளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே பக்தியால் அச்சுதனை வழிபடும் போது அவரின் பாகங்களாக விளங்கும் அனைத்து தேவர்களுக்கும் அவ்வழிபாடு திருப்திப்படுத்துகிறது.
பாகவதம் 11.5.41 முகுந்தனின் பாதகமலங்களை சரணடைந்த எவனும் எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நெறியில் முழுமையாய் ஈடுபட்ட எவனும்தேவருக்கோ முனிவருக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினருக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்வித கடன் படாதவனாகிவிடுகின்றான்.
பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே.
பாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் ”’ கிருஷ்ணர் மட்டுமே பகவான். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்”’
கிருஷ்ணருக்கு அசமேளர்த்த என்ற ஒரு நாமம் உண்டு. இதன் அர்த்தம் தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரே இல்லாதவர் என்பதாகும்.
வேதங்களில் சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் கிருஷ்ணரை மட்டுமே சேரும் என வேதஇதிஹாசஉபநிஷத் புராணங்களில் கூறுகிறது.
அதர்வணவேதம் : நாராயணோபனிஷத்தில் : ஏகோவை நாராயண ஆஸீன் ந ப்ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி ஸமௌ நேமே த்யாவாப்ருதீவி ந நக்ஷத்ராணி ந ஸூர்ய: ஸ எகாகீ ந ரமேத தஸ்ய த்யானாந்த: ஸ்தஸ்ய யத்ர சாண்டோகை: க்ரிய மாணோஷ்டகாதி ஸம்ஜ்ஞகா ஸ்துதி ஸ்தோமலு ஸ்தோமம் உச்யதே.
”’படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார்.”’
இதே விசயம் கீதை 10.8 ல் : அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
நானே எல்லாவற்றின் உற்பத்தி மூலம் எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன என்கிறார் கிருஷ்ணர்..
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
”’நாராயணனிடமிருந்தே பிரம்மன் உண்டானார் நாராயணனிடமிருந்தே ருத்ரன் என்னும் சிவன் உண்டானார்.”’
ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே
”’பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்”’
யஜூர்வேதம் கடோபனிஷத்தில்: ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம்
”’எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றானோ அதுவே விஷ்ணுவின் பரமபதம்”’
இதே விசயம் கீதை 8.21ல் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம
”’எதை அடைந்த பின் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறப்பதில்லையோ அந்த இடம் என்னுடையது எனகிறார் கிருஷ்ணர்.”’
அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில்
எதஸ்யைவ யஜநே சந்த்ரத்வஜோ கதமோஹமாத்மாநம் வேதயதி ஓங்காராதிகம் மநுமாவர்த்தயேத் ஸங்கரஹித: அப்பாநயத் தத் விஷ்ணோ பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய: திவீவ சக்ஷஷுராததம் தஸ்மாதேநம் நித்யமாவர்த்தயேத் நித்யமா வர்த்தயேதிதி.
”’இந்த கோபாலமந்திரத்தை ஜபம்செய்து சந்திரனைத்தலையில் கொண்ட சிவன் மோஹம் நீங்கப்பெற்றவனாய் பரமாத்மாவை அறிந்தான். ஆகையால் பலனில் பற்றற்றவனாய் கோபாலமந்திரத்தை ஓங்காரத்துடன் பல தடவை படிக்கக்கடவன். இதை ஜபித்த சிவனும் பரமாத்மாவை ஸாக்ஷத்கரித்து விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான். எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள். அப்பரமபதம் ஆகாயத்தில் விளங்குபவனும் உலகெல்லாம் கண்ணாயிருப்பவனுமான ஸூர்யனைப்போல் பிரகாசிக்கிறது. ஆகையால் இம்மந்திரத்தை தினந்தோறும் ஜபிக்க வேண்டும்.”’
சந்த்ரத்வஜோ (அ)கமத் விஷ்ணோ பரமம்பதமவ்யயம்
சந்திரனைத்தலையில் கொண்ட சிவனும் விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான்.
வ்ருஷபத்வஜ வந்த்யாய பார்த்தஸாரதயே நம:
ரிஷபக்கொடியோனால் (சிவன்) பூஜிக்கப்பட்டவனும் அர்ஜுனனுக்கு ஸாரதியான பெருமானுக்கு நமஸ்காரம்
மேலே கூறிய வேத விசயங்கள் பார்க்கும் போது சிவபெருமான் கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தரே ஆவார்
முக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்
புருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.
ஸாமவேதம் மஹோபனிஷத்தில் :அத புநரேவ நாராயணஸ்ஸோ(அ)ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ (அ)ஜாயத்
”’மறுபடியும் நாராயணன் மனத்தினால் ஸங்கல்பித்து முடிந்ததும் நெற்றியிலிருந்து முக்கண்ணனும் சூலபாணியுமான புருஷன் உண்டானான்.”’
சாந்தோக்யத்தில் : விரூபாக்ஷாய ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய
”’முக்கண்ணனும் ப்ரம்மாவின் முதல் புத்ரனும் ச்ரேஷ்டனுமான சிவனுக்கு”’
சாஸ்வதம் சிவம் அச்யுதம் உண்மையில் சிவம் என்பது அச்யுதனே.
ஆத்மோபநிஷத்தில் : சிவ ஏவ ஸ்வயம் ஸாக்ஷாத் அயம் ப்ரஹ்மவிதுத்தம்
பிரம்மாகிய நாராயணனை அறிந்தவரில் சிவன் சிறந்தவரே.
தத்ஸர்வம் வை ஹரேஸ்தநு: உலகனைத்தும் விஷ்ணுவின் சரீரமே ஆகும்.
ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸந:
நாராயணன் ஒருவனே ப்ரளயத்தில் இருந்தான். பிரம்மனுமில்லை சிவனுமில்லை.
ப்ரஹ்மா நாராயண: சிவஸ்ச நாராயண: நாராயண ஏவேதம் ஸர்வம்
பிரம்மனும் நாராயணனே சிவனும் நாராயணனே நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்
நிஷ்கலங்கோநிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸஷுத்தோ தேவ ஏகோ நாராயண: நத்விதீயோ(அ)ஸ்தி கஸ்சித்
ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய், சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.
தைத்திரீய நாராயணவல்லியில் : நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண பர்யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா அந்தர்பஹி: ச தத்ஸர்வம் நாராயண: ஸ்தித:
”’பரம்ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே, உயர்ந்த ஆத்மா நாராயணனே, இவ்வுலகத்தில் காண்பனவும் கேட்பனவமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.”’
ரிக்வேத புருஷசூக்தத்தில் : உதாம்ருதத்வஸ்யேஸாந: ஹ்ரீஸ்ச தே லக்ஷமீஸ்ச பத்ந்யௌ இஷ்டம் மநிஷாண
”’மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே. லக்ஷமிதேவியும் பூமிதேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள். உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தும் பெறக்கடவோம்.”’
ரிக்வேத மண்டலத்தில் 1.5.22.5: தத் விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள்.
ஸஷுபாலோபநிஷத்தில் : தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏகஏவ நாராயண: உத்பவ ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:
அனைத்தையும் தரிப்பவனும் அனைத்தையும் விதிப்பவனும் செய்பவனும் சிறந்த விகாரங்களை உடையவனும் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே. பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே
மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸஷுஹ்ருத் கதி நாராயண:
தாய், தந்தை, ஸஹோதரன் முதலான எல்லா உறவாகவும் புகலிடமாகவும் உபாயமாகவும் நண்பனாகவும் கதியாக இருப்பவன் நாராயணன் ஒருவனே
யஜுஸ் ஸம்ஹிதா 5.5 அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:
தேவதைகளுக்குள் அக்னி கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவரில்லாத மேல் நிலையில் இருப்பவன் நாராயணனே .
நாராயணோபனிஷத்தில் : விஷ்ணு மஹேஸ்ராக்யைர் நாராயணாம் ஸைஸ் ஸத்வதமோகுண ப்ரதாநை:
”’நாராயணரின் அம்சங்களாய் ஸத்வதமோகுணத்தில் வருபவர்கள் விஷ்ணு மஹேஸ்வரர்களே.”’
விஷ்ணுபுராணம்: பகவான் என்பவர்க்கு அளபரிய சக்தி, செல்வம், அழகு, புகழ், அறிவ, துறவு இவை முழுமையாக இருக்க வேண்டும். இவை பகவான் கிருஷ்ணரிடம் மட்டுமே உள்ளது. பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள் முனிவர்கள் மற்றும் பிறருக்கு பகவான் புருஷன் என்று சொல்லப்படுவது ஒப்புக்காக மட்டுமே ஆகும். ஜனார்தனான பகவான் படைத்தல் காத்தல் அழித்தலுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். பகவானே உன் முன்னால் யார் யார் முன் வந்து நிற்கின்றார்களோ அவர்கள் அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர்களே, நீரே அனைவருக்கும் ஆதி மூலம்.
பாகவதம் : பகவான் விஷ்ணு வாமன அவதாரத்தில் ஆகாயத்தை அளந்தபோது, விஷ்ணுவின் பாதங்களை பிரம்மா கழுவினார், அந்த நீரே கங்கை ஆகும். அதை சிவன் தன் தலையில் தாங்கியதாலே மங்களமானார்( சிவன் ஆனார்).
பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.
வாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம், வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: நாராயணன் முதலிய நாமங்கள் பிற தேவர்களை குறிக்காது. ஆனால் மற்ற தேவர்களின் நாமங்கள் விஷ்ணுவை மட்டுமே சேரும். நாராயணன் முதலிய நாமங்களை தவிர பிற நாமங்களை பிற தேவர்களுக்கு வழங்கினான்.
== வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான் ==
பத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு: வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான்
மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய சிவனுக்கு ஆத்மா விஷ்ணு
யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.
பத்மபுராணத்தில் : விஷ்ணுவிடம் பக்தியுடையவனே தேவன் மற்றவன் அசுரன். உதாரணம் ராவணன் சிவனின் பக்தன் மற்றும் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தர் இருவரும் அசுரர்களே ஆவார். ஆனால் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவான அசுரரின் மகன் ஆனால் அவன் விஷ்ணுவிடம் பக்தி செய்ததால் மிகச்சிறந்த பக்தன்
சிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார். பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார். வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ;மியின் பக்தன் சிவன் எனவே வில்வஇலையை தன் தலையில் தங்குகிறார்.
கருடபுராணத்தில் : பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை . அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.
வாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ந ப்ரஹ்மா ந ச சங்கர
வாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.
ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி
”’ கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’
ஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.
விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.
தவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்.
karthik ஐயா நான் ஒரு facebook page செய்கிறேன்.
அதற்கு ஒரு Like குடுங்கா ஐயா.
Facebook Name. Lord Of Vishnu.
Thank you Sir
== பத்மபுராணத்தில (பூனா ஆநந்தாஸ்ரமபதிப்பில் உத்தரகண்டம் 263ம் அத்தியாயத்தில் உள்ளபடி) ==
பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.
இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.
இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.
கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண புராணங்கள் சொர்கத்தையும் தாமஸகுண புராணங்கள் நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்.
மேலே கூறிய விசயங்கள் வேதங்களில் என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே உள்ளது சத்வ குணபுராணங்களில் மட்டுமே. ராஜஸகுண புராணங்கள் தாமஸகுண புராணங்களில் சில இடங்களில் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என கூறியுள்ளது ஆனாலும் அதில் கூறியபடி நடந்தால் அது பாவத்தையே உண்டாக்கும். இதே போல் உபநிஷத்துகளும் சத்வ குண உபநிஷத்துகள் விஷ்ணு சம்பந்தமானவை மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண உபநிஷத்துகள் பிரம்மா சம்பந்தமானவை சொர்கத்தையும் தாமஸகுண உபநிஷத்துகள் சிவன் சம்பந்தமானவை நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்
== பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜெபிப்பதற்கு எதிரான 10 குற்றங்கள் ==
1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம். 2.பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம். 3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம். 4.வேத இலக்கியங்களையும் வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம். 5.கிருஷ்ணரின் புனித நாமத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம். 6.புனித நாமத்திற்கு பௌதீகமான வியாக்யானம் கொடுப்பது குற்றம். 7.பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம். 8.வேதத்தில் கர்மகாண்ட பகுதியில் செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம். 9.நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம் 10.பௌதீக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் பகவான் நாமத்தை கவன குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.
(யஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம ருத்ராதி தேவதை: ஸமத்வேனைவ வீகேஷதஸ பாஷண்டீ பவேத் த்ருதம்) பிரம்மா,சிவபெருமான் போன்ற தேவர்களைக்கூட நாராயணருக்குச் சமமாக பார்க்க கூடாது, பார்ப்பவனை நாஸ்திகன் என்பர்.
karthik அருமையான விளக்கம். மிகவும் தெளிவாக விளங்குகிறது. சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை
மிகவும் அற்புதமான கட்டுரை இது..
பல புராணங்களில் இருந்து மேற்கோள் காட்டியிருப்பது வெகு சிறப்பு.
கண்ணனில் லாமல் கடல்வான் ஏது
கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
கண்ணனில் லாமல் கவிதையு மில்லை
கண்ணனில் லாமல் காலமு மில்லை
– ஸ்ரீ கிருஷ்ண கவசம்
ஐயா நான் ஒரு facebook page செய்கிறேன்.
அதற்கு ஒரு Like குடுங்கா.
Facebook Name. Lord Of Vishnu.
Thank you Sir
நிஜமான கல்கி அவதாரம் முஹம்மது நபிக்கு மட்டுமே பொருந்தும்
ஆதாரம் http://www.islamkalvi.com/religions/kalki.htm
இன்றைய உலக நிலையோடு ஒப்பிடுகையில் கல்கி அவதாரம் குறித்த சர்ச்சை வெறும் அகாடமிக் ஆன விஷயமே. முகம்மது நபி அவர்களே கல்கி அவதாரமாக இருந்துவிட்டு போகட்டும். அது குறித்த சர்ச்சை தேவையில்லை. இன்றைய உலகிற்கு அவசரத் தேவைகள் என்ன என்பதும் அதை வழங்கக்கூடியவர் யார் என்பதுமே முக்கியமானது. அனைத்து அவதாரங்களும், முகம்மது நபி அவர்கள் உட்பட, இறைவனின் ஒளியையே வெளிப்படுத்தினர். அவ்வகையில் அவர்கள் எல்லாருமே கல்கி எனும் விஷ்ணு யாஷாக்களே. அவர்கள் அனைவரும் காலத்திற்கு காலம் அந்தந்த காலத்திற்குத் தேவையான போதனைகளை வழங்கிச் சென்றனர். அதே போன்று இக்கால பிரச்சனைகளுக்கு பஹாவுல்லா தீர்வுகளையும் போதனைகளை வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் பஹாய்கள் அவற்றைப் பயின்று பயன்படுத்தி பல நன்மைகளைச் செய்து வருகின்றனர். பஹாவுல்லா யார் என்பதைவிட அவரது போதனைகளின் நன்மைகளையே நாம் முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு மரத்தின் மதிப்பு அது கொடுக்கக்கூடிய கனியின் அளவே. அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் உலகை ஆளுகின்றனர், மற்றும் உலகப் பிரச்சனைகளுக்கு அவர்களும் தீர்வுகள் காண முயலுகின்றனர் மக்களும் அம் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றனர். பஹாவுல்லா உலக நன்மைக்காக தமது சுகத்தை தியாகம் செய்தார், தமது அன்பு மகன் ஒருவரையும் பறிகொடுத்தார். அரசியல்வாதிகள் கூறுவதை நாம் பின்பற்றும்போது பஹாவுல்லாவின் தெய்வீக போதனைகளை சற்று ஆராய்ந்துதான் பார்க்கலாமே!
sir prsamy awarhale!neengal hindhu madhathai unmayaha pinpatrupawar endral kalkiyai arindhu pinpatr wendum.islam maarkathil nirpandham illai.thannaiye kappatra mudiyadha kadavulai pinpatri edhai sambadhikka pohirirhal?oru naal yosithirhala?neengal padaitha silai epadi ungalai padaikum?suwanamum aruhe ulladu,narahamum aruhe ulladu.”kandum kanadha kurudarhal,ketum keladha sevidarhal,unarndhum unaradhvarhal”ena quraan ungalai pondrawarhalai than kurippiduhindradu.awarhal meelave maattarhal.
கார்த்திக் (Karthik) அவர்களே! தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர் என்பதை சுருக்கமாக சொன்னால் நல்லது.
@ A.Rahman
////நிஜமான கல்கி அவதாரம் முஹம்மது நபிக்கு மட்டுமே பொருந்தும்
ஆதாரம் http://www.islamkalvi.com/religions/kalki.htm ///
இத்தகைய கருத்துக்களை தாங்கள் நம்புவது உண்மையா!! தோழரே! அறிவியல் மூலம் எத்தனை அவதாரங்களை உண்மையே என நிருபித்துள்ளார்கள்.
Quran னில் எழுதி வைக்கப்பட்டுள்ள அடுத்து வரவிருக்கும் வெளிப்பாடுகள் பற்றிய கருத்துக்கள் பொய்யா? விளக்கவும்.
dr br!quraan oru naalum poi illai.adhu adhatku mun sendra samayangalai unmai paduthihinrana.ariviyalai unmai paduthuhindrana.mudhalil quraanai read pannungal.muslimai parthu madhathai therivu seyyadhirhal.oru naalavadhu neengal suyamaha yosithu ungal madhathai etrirhala?thai thandhai hindhu enbadal neengalum hindhu.mudhalil suya puthiyai kondu yosi ungal.poiyilirundhu unmaiyai pirithu arindhal than pahutharivu vadhi.poiyai pinpatrupawanum,5arivu padaitha uyirinangalukum endha diferentum illai.
Please use the address below to type your responses in english and get them transliterated into tamil. I find it difficult to read and understand tamil written in english
http://www.google.com/inputtools/cloud/try/
நண்பரே, முதலாவதாக நான் ஹிந்து மதத்தைச் சார்ந்தவன் அல்ல. நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன். அடுத்து, தயவு செய்து prsamy.org எனும் வலைத்தலத்திற்குச் சென்று பஹாய் சமயம் பற்றியும் அதன் ஸ்தாபகரான பஹாவுல்லாவைப் பற்றியும் ஆய்வு செய்யவும். என் வலைப்பதிவு முதன்மையாக பஹாவுல்லாவின் அடிப்படை போதனையான ஒரே கடவுள், ஒரே சமயம், ஒரே மனித குடும்பம் பற்றியதாகும். யார் கல்கி என்பது பற்றியது அல்ல. பஹாவுல்லா எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட கடவுளின் அவதாரமாவார். எல்லா சமயங்களும், இஸ்லாம் உட்பட, இறைவனிடமிருந்தே தோன்றின என அவர் போதித்துள்ளார்.
islaththil kadaisi thoozar hijrikku mun 50 varudaththukku munne thonri vittar avar than muhammad/ahmed nabi,[neengal kurippitta vetha vasanangalinpadiye anraiya soolnilayum kanapattathu,krishin 10m avatharam enappaduhirathu,awar kuraisin 10m thalaimurai] enru alquran thelivahakkooruwathodu alquran than ulahaththar anaiwarukkum iruthiyana vethamenhirathu,ungal vilakkam varavetkaththakkathu aanal,aaraychihal ,oppeeduhahal neengal purindu kollum vitham ivai ungalal aarayappada vendum eanenral ippozu oru pilaiyana karuththai niroofiththullean.
இஸ்லாத்தில் கடைசி தூதர் ஹிஜ்ரிக்கு முன் 50 வருடத்துக்கு முன்னே தோன்றி வி்டடார். அவர் தான் முகம்மட்/அஹ்மெட் நபி, [நீங்கள் குறிப்பிட்ட வேத வசனங்களின்படியே அன்றைய சூழ்நிலையும் காணப்பட்டது, கிருஷின் 10ம் அவதாரம் எனப்படுகிறது, அவர் குரைஷின் 10ம் தலைமுறை] என்று அல்குரான் தெளிவாக கூறுவதோடு அல்குரான் தான் உலகத்தார் அனைவருக்கும் இருதியான வேதமென்கிறது, உங்கள் விளக்கம் வரவேற்கத்தக்கது ஆனால், ஆராய்ச்சியில், ஒப்பீடுகள் நீங்கள் புரிந்து கொள்ளும் விதம் இவை உங்களால் ஆராயப்பட வேண்டும் ஏனென்றால் இப்பொழுது ஒரு பிழையான கருத்தை நிரூபித்துள்ளேன்.
நண்பரே, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முதலாவதாக, மிகத் தாழ்மையுடன், நீங்கள் தமிழில் டைப் செய்வதற்கு http://www.google.com/transliterate/Tamil செல்லவும். நீங்கள் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து space barஐ சொடுக்கியவுடன் தமிழுக்கு வார்த்தைகள் மாறிவிடும். மற்றபடி நான் கல்கி அவதாரம் குறித்து எழுதியுள்ளதை எவரும் கண்டிப்பாக ஏற்க வேண்டும் எனும் கருத்தில் எழுதவில்லை. என் நம்பிக்கையை எழுதியுள்ளேன். அவரவர் மனதுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே இருந்துவிட்டு போகட்டும். உங்கள் கருத்தை நான் மதிக்கின்றேன், அது குறித்து வாதிட விரும்பவில்லை. சமயம் மக்களை ஒன்றுபடுத்த வேண்டுமே ஒழிய சச்சரவுக்கு வழிவகுக்கக்கூடாது, இன்று உலக மக்கள் தங்கள் சமய வேற்றுமைகளை மறந்து உலகையே உலுக்கி வரும் உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். அது முக்கியம். சமய ரீதியில் யார் சரி யார் தவறு என்பது குறித்து அதற்கு பிறகு நாம் ஆராயலாம்.
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.
இங்கே சொடுக்கவும்
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
is this all true??????
Not sure which part you are referring to. if it is quotes from Hindu scriptures then I am not an authority to declare if they are true or not. It you are referring to the claim that Baha’u’llah is the return of Shri Krishna, then the proof or conviction re that claim can only be found in your heart after some thorough investigation.
கல்கி அவதாரம் ஒருவர் அல்ல. உலகை பொய்யிலிருந்து (மாய்மாலம்) மெய்யிக்கு மாற்ற வேண்டும் என்ற குணம் கொண்ட அனைவருமே கல்கிதான்.
THE AVATHAR OF KALKI has taken place and placed in Website: Siddharulagam.org
Very good that the Kalki Avathar has indeed taken place. Now let us see what changes the Avathar is going to bring about in this rapidly disintegrating and morally decadent world.
KALKI avthar for furthar details please search the websites; http://www.siddharulagam.org, http://www.thisman.org (ever dream thisman.org) thangs you.
I hope you have read the piece on “கலியுக முடிவும் கல்கி அவதாரமும்” thoroughly. The Avatar I am talking about is supposed to bring about lasting peace and unite the various peoples of the world in this day into one family. Not only that, the modern day Avatar has the greater task of rolling up the old order and spread in its stead a new world order, including the political, economic, social and even the educational structures. The whole thing is not going to happen miraculously but little by little through hard work and organised effort by His followers. This is what the Baha’i world community is involved in, sacrificing their time and wealth and even their lives for the betterment of humankind. Kindly visit http://bahai.org for official information.
ayya vaigundar narayanar sri krishna mayan(kalki avathar)has born again in the siddhar sivanthiling pandaram(menticant)sect to bring the whole world together for wich holly.he is journeying holy his holy soul through the self residing horse(vaasi kuthirai)to once again bring together the re born souls of the pancha pandavas along with the reborn soul of thiravpathi by which the reborn soul of the kali neesan will self destroy himself to the evil period(kaliyugam)by which the truthful eguality justfulperiod(sathya sama tharma yugam) will be reestabilished. sarvam sri krishnarpanam.ithu sathyam,sathyam,sathyam.for further details search web;www.siddharulagam.org.mobil no;9942989550
kali entral saathaan or e bliss. kali ebbadi thontrinaan enbathai vilakkinaal avanai ebbadi jaikkalaam enbathai naan solluven. puranangalil nizhalaga or uvamaikalaka sollappattullathai intha yugatthil ibbaditthaan entru solla vanthaal avanai jaikka vazhi pirakkum.(கலி என்றல் சாத்தான் ஓர் எ ப்ளிஸ் . கலி எப்படி தோன்றினான் என்பதை விளக்கினால் அவனை எப்படி ஜெயிக்கலாம் என்பதை நான் சொல்லுவேன் . புராணங்களில் நிழலாக ஓர் உவமைகளாக சொல்லப்பட்டுள்ளதை இந்த யுகத்தில் இப்படித்தான் என்று சொல்ல வந்தால் அவனை சிக்க வழ i பிறக்கும்)
here everybody assumed someone come to realize this world and who will be shown the path of truth,,,,,,,, but in my point of view every one of this world want to realize the truth of humanity, which only lead this world to satya yugam…………………… Vijay the HUMAN
“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார். அவர்தாம் முஹம்மது நபி(ஸல்)
கிருஷ்ணர் – ஏசு கிருஷ்து – அல்லா – புத்தர் ஒருவரே.
நமது வேதங்களில் சொன்னதை எப்படி புரிந்து கொள்வது
நாம் வாழும் இந்த காலம் கலியுகம் ஆகும். கலியுகம் என்றால் சண்டையும் பிரச்சனைகளும் நிறைந்த ஆக இருக்கும் என்பதே இதன் அறிகுறிகள். சண்டையும் பிரச்சனையும் வரக் காரணம். மனிதனின் அடிப்படை நற்குணங்கள் இல்லாமல் போனதே காரணம். இந்த நற்குணங்கள் கருணை, ஒழுக்கம், உண்மை, தூய்மை இந்த 4 நற்குணங்களில் இருந்து விலகும் போது தவறுகள் செய்வார்கள்.
எந்த உயிரிடமும் கருணை இல்லாமல் போனால் மாமிசம் உண்பார்கள், மனதாலும் உடலாலும் ஒழுக்கம் இல்லாமல் போனால் போதை பொருட்கள் பயன்படுத்துவார்கள். உண்மை இல்லாத போது சூது விளையாடுதல் அல்லது தவறான வழியில் பொருள்(பணம்) சேகரிப்பதும் காலத்தையும் பணத்தையும் வீணடிப்பதும் ஆகும். மனதாலும் உடலாலும் தூய்மை இல்லாத போது (திருமணத்திற்கு புறம்பான) முறையற்ற உடல் உறவில் ஈடுபடுவார்கள் என 5000 வருடங்களுக்கு முன் வேத வியாசர் தொகுத்த வேத இலக்கியங்களில் உள்ளது.
சநாதன தர்மம் (இந்து மதம்), புத்தமதம், ஜைனமதம் இவற்றில் மாமிசம் உண்ணக் கூடாது என கூறுகிறது. இதனால் அதிகமாக வியாதிகள் வருகின்றன என விஞ்ஞானமும் கூறுகிறது.
சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் மேலே கூறிய 4 விதமான கட்டுபாடுகள் இல்லாத விசயங்களை அதிகமாக காட்டுகிறார்கள். பெண்களை அதிகமாக கவர்ச்சி என்ற பெயரில் கேவலப் படுத்துகிறார்கள். சினிமாவும் தொலைக்காட்சியும் பார்ப்பது பணம் மற்றும் கால விரயம். மனமும் தவறான வழியில் செல்கின்றன. உதாரணமாக நாம் பெற்றோருடன் தெருவில் நடக்கும் போது ஆணும் பொண்ணும் அந்தரங்க செயல்களை வெளியே செய்தால் எந்த அளவிற்கு மனம் சுழிப்போம். ஆனால் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் மிக மோசமாக காட்டுகிறார்கள். இதை பணம் கொடுத்து மனம், புத்தி, காலம், இவை அனைத்தும் விரயம் செய்கிறோம்.
மேலே கூறிய விசயங்கள் நம்மை பாவங்களில் இருந்து விலக்கும். அறிவுள்ள மனிதன் இதை புரிந்து கொண்டு வேத இலக்கியங்கள் கூறிய படி நடப்பான்.அறிவில் குறை உடையவர்கள் வேத இலக்கியங்களுக்கு எதிர் மறையான கேள்விகள் கேட்டு தன் மன போன போக்கில் வாழ நினைப்பவர்கள் மிருகத்திற்கு இணையானவர்கள்.
இந்த கலியுகத்தில் யாருடைய மனதில் பாவம் செய்ய எண்ணங்கள் உள்ளதோ அவர்கள் வேதங்களையும் வேத வழி வந்த இலக்கியங்களையும் ஆன்மீக குருக்களையும் நம்ப மாட்டார்கள்.
ஒரு பெற்றோர்கள் தனது குழந்தையை மருத்துவராக, பொறியாளராக, வழக்கறிஞராக அல்லது பெரிய பதவியியோ, பணக்காரனாக முயற்சி செய்யலாம். இதில் ஏதாவது ஒன்று உறுதியாக ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம். ஆனால் ஒன்று உண்டு அது ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம் என கூற முடியாது. அது தான் மரணம்.
மரணத்திற்கு பின் மனிதன் என்ன ஆவான் என ஆன்மீக நூல்கள் கூறுகிறது. ஆகலாம் ஆகாமலும் போகலாம் என்ற விசயத்திற்கே எந்த அளவிற்கு முயற்சிக்கிறோம். மரணம் உறுதியாக ஆகும் என தெரிந்த பிறகு நமது நிலை என்ன என்று அறிய பகவத் கீதை ,பாகவதம் மற்றும் ஆன்மீக இலக்கியங்களை படித்து புரிந்து அதன் படி நடக்கவும்.
மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசமே கடவுளிடம் பக்தி செய்வதும் கட்டுபாடாக வாழ்வதும் தான். ஆனால் இன்று மனிதன் மிருக நிலைக்கு சென்று கொண்டிருக்கிறான். பைபிளில் யோவான் 3.12ல் இவ்வுலக விசயங்களைப் பற்றி நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்ற நிலையில் ஆன்மீக விசயங்களைப் பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப போகிறீர்களா? என ஏசு கிருஷ்து சொல்வதாக உள்ளது. எண்ணிலடங்காத ஆன்மீக விசயங்கள் சநாதன தர்மம் (இந்து மதம் ) இதில் உள்ளது. (சநாதன தர்மமான இந்துமதம் என்று அழைக்கப்படுகிறது)
இந்த உலகை படைத்தவர் ஒருவராக தான் இருக்க முடியும். பல கடவுள் இருக்க முடியாது. இப்படி இருக்கயில் பல விதமான மதங்கள் இருப்பது குழப்பமாக இருக்கலாம் ஆனால் இவை அனைத்து ஒரு கடவுளையை மட்டுமே கூறுகிறது.
கடவுள் ஒளி வடிவில் தான் என்று (சநாதன தர்மம், பைபிள், குரான், யூதர்கள் போன்ற ஆன்மீக நூல்களில் பல இடங்களில் கடவுளுக்கு ஒளி வடிவத்தையே கூறுகிறது இதை பலரும் வணங்குகின்றனர்.) ஆனால் கடவுள் பரிபூரணமானவர் (எந்த விதமான குறையும் அற்றவர்) என்றால் உருவம் இல்லாத நிலை கடவுளுக்கு குறையாக ஆகிவிடும். ப்ரம்மன் , பரமாத்மா, பகவான் என்ற மூன்று நிலையில் கடவுள் உள்ளார் என பாகவத புராணம் கூறியுள்ளது.
கிருஷ்ணரின் உடலில் இருந்து வெளி வரும் ஒளி ப்ரம்மன்,இதை பல மதங்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் வணங்குகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிலும் உடன் இருப்பவர் பரமாத்மா (உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவர்) விஷ்ணு , முழுமையாக உள்ள முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். கடவுளை ஒலி வடிவத்தில் உச்சரிப்பது ஓம் என்ற பிரணவம். பகவான் என்றால் கிருஷ்ணர் மட்டுமே. இதை பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல வேத இலக்கியங்களில் உள்ளது. கடவுள் ஒருவரே அவர் நான் தான் என்று கிருஷ்ணர் கூறுகிறார். இதே போல் கடவுள் ஒருவரே என பைபிளிலும் குரானிலும் கூறுகிறார்.
கிருஷ்ணர், ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரையே குறிக்கும். சூரியன் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களில் அழைப்பதால் வெவ்வேறு கடவுள் என ஆகாது. அது போல் கிருஷ்ணரைப் பற்றியே அனைத்து ஆன்மீக நூல்களும் கூறுகின்றன.
யூதர்களின் ஆன்மீக நூல்(பழைய ஏற்பாடு) ஏசு வந்து அவர் கூறிய அறிவுரைகள் சேர்ந்த்தே பைபிள், அதன் பிறகு பழைய ஏற்பாடு உடன் நபிகள் கடவுளிடம் பெற்ற விசயங்களின் தொகுப்பே குரான் ஆகும். குரானில் ஏசு பரலோகத்தின் பரம பிதா அல்லாவின் இறைத்தூதர், ஈஷாநபி என்ற பெயரில் உள்ளது.
ஏசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்களைப் பற்றி மஹா பவிஷ்யத் புராணத்தில் கூறியுள்ளது. நபிகள் நாயகத்தை அதர்வண வேதத்தில் இரண்டு இடங்களில் கூறியுள்ளது. ஏசு தன்னை கடவுளின் மைந்தன் என கூறுகிறார். புத்தரை பத்ம புராணம் விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவத புராணங்களில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.
பத்ம புராணத்தில் ராமானுஜர் , மத்வாச்சாரியர், நிம்பக்கர், விஷ்ணுசாமி போன்ற ஆச்சார்யர்கள் கலியுகத்தில் தோன்றி கிருஷ்ணர் (நாராயணன்) மட்டுமே முழுமுதற் கடவுள் என நிருபிப்பார்கள் என உள்ளது.
ஆன்மீக நூல்கள் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபதத்தில் இருப்பதாகவும், பைபிள் குரானில் (ஏசு கிருஷ்து, அல்லா) பரலோகத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபுருஷர் என்றும் பிற மத நூல்களில் பரம பிதா என்றும் கூறுகிறது. கீதையில் கிருஷ்ணர் நானே எல்லா வேதங்களிலும் அறிப்பட வேண்டியவன், அனைத்திற்கும் ஆதி மூலம். விதை அளிக்கும் தந்தை, எனது மேற்பார்வையின் கீழே இயற்கை இயங்குகிறது என கூறுகிறார். இதே போல பைபிள் குரானிலும் உள்ளது.
கடவுளுக்கு உருவம் இல்லை என்பது தவறு என உணர சில உதாரணங்கள்
யுதர்கள், பைபிள், குரான் போன்ற நூல்களில் (பரலோகத்தில் உள்ள பரம பிதாவின் பெயர்) யகோவா பற்றி கூறியுள்ளது. யகோவாவிற்கும் மஹா விஷ்ணுவிற்கும் உள்ள ஒற்றுமைகள் பல உள்ளன. அவற்றில் சில பார்ப்போம். யகோவா பறவையில் வருவார் (கருடனை குறிக்கும்) எதிரியை அழிக்க நெருப்பை அனுப்புவார் (சுதர்சன சக்கரத்தை குறிக்கும்)> ஒரு கேடயத்தை எடுத்துச் செல்கிறார். குச்சி, கனமான தடி வைத்திருப்பார் (புல்லாங்குழல் , கதையை குறிக்கும்), விமோசன கிரீடம் அணிந்திருப்பார். கொழுந்து விட்டெரியும் நெருப்பாக வர்ணிக்ப்படுகிறார். கடவுளின் குரல் இடி போல இருக்கும். கடவுள் மோசஸ்ஸூக்கு தன்னுடைய பின் பிறத்தை காட்டினார் என உள்ளது. எனவே முன்புறம் காட்டப்பட வில்லை.
கடவுளுக்கு நிச்சயமாக உருவம் உண்டு. அது பௌதீகமானது அல்ல ஆன்மீகமாக ஆகும். குறையுடைய பௌதீகப் பார்வையால் கடவுளின் உருவத்தை காண உண்டாக்கப்பட்டது உருவ வழிபாடு ஆகும்.
ஆத்மாவாகிய நாம் தான்தோன்றிதனமாக வாழ ஆசைப்படும் போது கடவுளால் உண்டாக்கப்பட்டது தான் இந்த பௌதீக உலகம். ஆண்டவனால் ஆசீர்வாதிக்கப்பட்டதும் பௌதீகமாக சபிக்கப்பட்டதும் தான் இந்த 14 உலகங்கள், 84 இலட்சம் உயிரினங்கள் என ப்ரஹ்ம வைவர்த்த புராணம் , பத்ம புராணம் கூறுகிறது. நீர் வாழ்வன (ஜலஜா நவலக்ஷானி) 9 லட்சம். மரம்இ செடி(தாவரலக்ஷவிம்ஷதி) 20 லட்சம். பூச்சிகள் (க்ருமயாருத்ரலங்க்யாக) 11 லட்சம். பறவைகள்(பக்ஷினாம் தஷலக்ஷானி) 10 லட்சம். பிராணிகள் (பஸவஸ் த்ரும்ஷத்லக்ஷானி) 30 லட்சம். மனிதன் (சதர்லக்ஷானி மானுஷ்யம்) 4 லட்சங்கள் உள்ளது.
இதில் மனிதன் மாமிசம் உண்பதால் அடுத்த பிறவி சிங்கம். புலியாகவும், நிர்வாணமாக இருக்க விரும்புபவன் மரம் செடியாகவும், அதிக காமுகனாக இருப்பவன் நாய்,பன்றியாவும் பிறப்பான்.
நமது பாவம் மற்றும் புண்ணியத்திற்கு ஏற்ப 14 உலகங்களில் பிறப்போம்.நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப பூமி, புவ, சுவர்க, மஹ, ஜன, தப, சத்ய என்னும் மேலே 7 சுவர்க உலகங்களில் பிறப்போம். நாம் செய்யும் பாவத்திற்கு ஏற்ப கீழே உள்ள அதள, விதள, சுதள, மஹாதள, ரஸாதள, தஸாதள, பாதாள என்னும் 7 நரக உலகங்களில் பிறப்போம்.
14 உலகங்களுக்கு மேலே சிவபெருமானின் கைலாயம் உள்ளது. அனைத்திற்கும் மேலாக அழியாத நித்யமான ஆனந்தமயமான ஆன்மீக உலகங்கள் உண்டு. அது விஷ்ணுவின் விரிவங்கங்களுக்கு ஏற்ப எண்ணற்ற வைகுண்டங்களும் அதற்கு மேல் கிருஷ்ணின் கோலோக விருந்தாவனம் உள்ளது.இந்த ஆன்மீக உலகங்களுக்கு சென்ற பின் மீண்டும் இந்த துன்பமயமான பௌதீக உலகில் பிறக்க மாட்டோம்.
சத்ய யுகம் 1728000 வருடம், திரேதா யுகம் 1296000 வருடம், துவாபர யுகம் 864000 வருடம் , கலியுகம் 432000 வருடம் இந்த நான்கு யுகமும் கூட்டினால் 43,20,000 வருடம். இந்த 43,20,000 வருடத்தை 1000 ஆல் பெருக்கினால் வரும் வருடம் பிரம்ம தேவரின் ஒரு பகல் மட்டும். இது போல ஒரு இரவு. இவ்வாறாக பிரம்மாவிற்கு 100 வருடம் வாழ்வர். பிரம்மாவின் கணக்குப்படி நாம் நொடிப்பொழுது தோன்றி மறைபவர்கள். நமது கணக்குப்படி ஒரு பாக்டீரியா ஒரு நொடிப் பொழுதில் பிறந்து, வளர்ந்து, இனப் பெருக்கம் செய்து, சிறிது காலம் வாழ்ந்து, தேய்ந்து, மறைந்து போவது போல அனைத்து உயிரினமும் பிறந்து அழிகிறது.
கலியுகத்தில் அனைவரும் அமைதியும் ஆனந்தமும் தேடி சரியான வழி தெரியாமல் அலைகின்றனர். மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தாமல் அமைதியும் ஆனந்தமும் இல்லை. இவை கட்டுப்படுத்த கிருஷ்ணரின் நாமத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். பகவத் கீதையும் பாகவதமும் என்ன சொல்லி உள்ளதோ அதன் படி நடந்தால் கலியுக கேட்டிற்கு வேறு வைத்தியமும் மருந்தும் தேவையில்லை.
இதிலும் கலியுகத்தின் தாரக மந்திரமான
”ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ”
இந்த மந்திரம் தினமும் 108 முறை உச்சரித்து வரவும் எத்தனை 108 முறை உச்சரிக்கிறோமோ அந்த அளவிற்கு மனதில் அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும்.
மேலே சென்ன விசயங்களும் இது வரை நாம் கேட்டு வந்த விசயமும் வேறுபாடுகள் தெரிய காரணம் ஆன்மீக நூல் படிக்காமல் வெளியில் கிடைக்கும் புத்தகங்களை படித்து ஏற்பட்ட குழப்பமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
எனவே வியாசர் எழுதிய வேத இலக்கிங்களை மட்டும் படித்தால் அனைவரும் சநாதன தர்மத்தில் சொன்ன கிருஷ்ணரின் பக்தர் என உணர்வோம்.
தங்களின் பதிவின் தூணடுதலால் பஹாவுல்லா பற்றி அறிந்துகொண்டேன்.. அவர் சொல்கின்ற விசயங்கள் நல்லதாக இருக்கட்டும். அதில் சிறந்தவற்றை பின்பற்றலாம்.. ஆனால் அவர் கடவுளின் அவதாரம் என கொள்வது எந்தவகையில் பொருந்தும்?? நல்லது சொலபவர்கள் அனைவரும் கடவுளின் அவாதாரம் என்றால்.. உலகில் எத்தனை அவதாரம் இருக்கிறார்கள் என்பதனை தாங்கள் அறிவீர்களா??
நல்லதைச் சொல்பவர்கள் யாவரும் அவதாரங்கள் அல்ல என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒருவரை அவதாரமாக அடையாளங் காண நான்கு அடிப்படைகள் உண்டு. அவையாவன: (1) அவரது வாழ்க்கை, (2) அவரது திரளான விசுவாசிகள், (3) அவரது திருவெளிப்பாடு (புனித திருநூல்), (4) ஒரு புதிய யுகத்தின் தொடக்கம்.
1. அவரது வாழ்க்கை – ஓர் அரச பரம்பரையில் பிறந்தவரான பஹாவுல்லா 40 வருடகாலம் முதலில் பாரசீக அரசின் கைதியாகவும் பிறகு ஒட்டமான அரசின் கைதியாகவும் தமது வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார்.
2. அவரது திரளான விசுவாசிகள் – அவருக்கு இன்று உலகம் முழுவதும் ஒரு கோடி மக்களுக்கு மேல் விசுவாசிகள் உள்ளனர் (பிரிட்டேனியா கலைக்களஞ்சியம் உலகிலேயே அதிவேகமாக வளரும் ஒரு சமயமாக பஹாயத்தை அங்கீகரித்துள்ளது)
3. அவரது திருவெளிப்பாடு (திருநூல்) – பஹாய்களின் அதிபுனித நூலாக இருப்பது ‘கித்தாப்-இ-அக்டாஸ்’. இது தவிர அவர் கைப்பட எழுதியவற்றை தொகுத்தால் அவை 100க்கும் அதிகமான நூல்களாகும்.
4. புதிய யுகம் – பஹாவுல்லா தமது திருவெளிப்பாட்டின் ஓர் அங்கமாக தமது விசுவாசிகளுக்கு ஒரு புதிய யுகத்தின் ஆரம்பமாக புதிய நாள்காட்டி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு வருடமும் பஹாய் புத்தாண்டு மார்ச் 21ம் நாள் தொடங்குகிறது. பஹாய் வருடம் ஒன்றிற்கு 19 மாதங்கள் உள்ளன.
ayya narayanan marupadiyum intha kaliyugathil Vaikundaraka avatharithu vittar……..
12-12-2012-ல் உலகம் அழியும் என்கிறார்களே உண்மயா?
அல்லது 21-12-2012-ல் உலகம் அழியும் என்கிறார்களே!
பதினெண்சித்தர்கள் தரும் இம்மண்ணுலக வரலாற்றுக் காலக் கணக்கீட்டை காண்போம்.
சிவபெருமான் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்பதால், அவர் ‘ஞானாச் சாரியாராக’, ‘குவலய குருபீடமாக’, ‘இந்துமதத் தந்தையாக’, ‘தத்துவ நாயகமாக’, ‘அருளாட்சி நாயகமாக’,. தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம் மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார்.
ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.
சிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், ‘இந்து மத ஆண்டு’ என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது கலியன் உகம் (கலியுகம்) எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
முதல்யுகம் – ஸத்தியயுகம் – புண்ணியயுகம் – கீரன்உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்
இரண்டாம்யுகம் – இராமாயணம் நடந்தயுகம் – தீரன்உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்
மூன்றாம்யுகம் – மஹாபாரதம் நடந்தயுகம் – தூரன்உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்
நான்காம்யுகம் – கடைசியுகம்-தற்போது நடக்கும்யுகம்-கலியன்உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்
இவை தான் சதுர்யுகம். 43,20,000 ஆண்டுகள்
(இந்த 2012 இல் கலியன் உகம் 5,112 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே, 4,32,000 – 5,112 = 4,26,888 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.) இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.
ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட் படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப் பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.
கவிஞர்.ஆர்.தி.என்.பாலன் PJK / RTN.Balan PJK
(இறை தொண்டன் – செம்மொழித் தமிழாய்வாளர்)-(THEOLOGIAN-SEMOLI TAMIL RESEARCHER)
ஆலய இல்லவழிபாடு, சித்த மருத்துவம் அனைத்திற்க்கும், ஆலோசனை வழங்கப்படும்.
நவின விஞ்ஞான ஜோதிடம்/NEW MODERN HOROSCOPE
SPECIAL TEMPLE & HOME PRAYERS CONDUCTED AND ASTROLOGY & SIDDA PRACTITIONER
ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை
1. ஈஸ்வர: பரம: கிருஷ்ண: சச்சிதான்ந்த விக்ரஹ:
அனாதிர் ஆதிர் கோவிந்த: சர்வகாரண காரணம்
கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணர் முழுமுதற்கடவுள். அவரது சரீரம் நித்ய ஆனந்தமயமானது. அவர் ஆதியற்றவர். பல காரணங்களுக்கும் அவரே காரணமானவர்.
29. சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்பவ்ருக்ஷ லக்ஷாவ்ருதேஷு ஸுரபிர் அபிபாலயந்தம்
லக்ஷ்மி-ஸஹஸ்ர-சத-ஸம்ப்ரம-ஸேவ்யமானம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
நான் கோவிந்தனை வழிபடுகிறேன். அவர் ஆதிபுருஷன் முதல் புருஷனான அவர் பசுக்களை மேய்ப்பவர். இந்த இடம் ஆன்மீக விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டது. சுற்றிலும் லக்ஷக்கணக்கான கேட்டவரமளிக்கும் கல்பதருக்கள். இந்த ஆதி புருஷனுக்கு ஆயிரமாயிரம் லக்ஷ்மிகள் அல்லது கோபியர் சேவை புரிகின்றனர்.
30.வேணும் க்வனந்தம் அரவிந்த-தலாயதாக்ஷ்ம் பர்ஹாவதம் அஸிதாம்புத ஸுந்தராங்கம்
கந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். புல்லாங்குழல் இசைப்பதில் அவர் தன்னிகரற்றவர். அவரது மொட்டு விரிந்தது போன்ற மலர்க்கண்கள், தலையில் மயிற்பீலி. அவரது கொள்ளை கொள்ளும் அழகு நீல மேகங்கள் போன்றது. அவரது ஒப்பற்ற எழில் உருவம் லக்ஷ்கணக்கான கோபியரை வசீகரிக்கக்கூடியது.
31. ஆலோல-சந்த்ரக-லஸத்-வனமால்ய வம்சீ-ரத்னாங்கதம் ப்ரணய-கேலி-கலா-விலாஸம்
ஷ்யாம்ம் த்ரி-பங்க-லலிதம் நியத-ப்ரகாசம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது கழுத்தில் சந்திர உருவம் பதித்த தொங்கட்டான், பூமாலை, அவரது இரு கரங்களும் முரளியும் அணிகலன்களும் தரித்துள்ளன. அவர் எப்பொழுதும் இன்ப லீலைகளில் ஆழ்ந்திருப்பவர். அவரது சியாமசுந்தர மூன்று வளையும் தோற்றம் எப்பொழும் வெளியில் தெரிகின்றது.
32. அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருத்தி-மந்தி பஷ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி
ஆனந்த-சின்மய-ஸத்-உஜ்வல-விக்ரஹஸ்ய கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
யாருடைய உருவம் ஆனந்தம் உண்மை முழுமை நிரம்பியதோ (கண்ணைக் கூசும் பிரகாசமானது) அத்தகைய முழுமுதற்கடவுளை நான் வணங்குகிறேன். அந்த ஆன்மீக உருவத்தில் ஒவ்வொரு அவயவமும் எல்லா அவயவங்களின் வேலைத்திறனையும் கொண்டது. அத்தகைய முழுமுதற்கடவுள் என்றென்றும் பார்த்து பரிபாலித்து ஆன்மீக மற்றும் ஜட புவனங்களை இயக்கிவருகிறார்.
33.அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம் ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் ச
வேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தௌ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
வேதங்களாலும் அடையமுடியாத ஆனால் ஆத்மார்த்த பக்தியினால் மட்டுமே அடையக்கூடிய அந்த உன்னத புருஷனை புருஷோத்தமனை வணங்குகிறேன். அவர் ஈடு இணையற்றவர். அழிவற்றவர் ஆதி இல்லாதவர் முடிவற்ற வடிவம் கொண்டவா. அவரே முதலும் நிரந்தமுமான புருஷன். இப்படி அன்றும் இன்றும் என்றென்றும் இருப்பவா. இளமை ததும்பும் வாலிபன்.
34. பந்தாஸ் து கோடி-சத-வத்ஸர-ஸம்ப்ரம்யோ வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானம்
ஸோ“பி அஸ்தி யத் ப்ரபத-ஸீம்னீ அவிசிந்த்ய-தத்த்வே கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எண்ணற்ற யோகிகள் அவரது தாமரைத் திருவடியின் கால் கட்டை விரலின் ஒரு விளிம்பையே காண்கின்றனர். இவர்கள் ஆன்மீக விருப்பத்தினால் உந்தப்பட்டு மூச்சுக்கட்டுப்பாடான ப்ராணாயாமத்தை மேற்கொள்கிறார்கள். இதே கால்கட்டை விரல் விளிம்பை கண்ணோக்கும் ஞானிகள் கூட உருவற்ற பிரம்மத்தை ஆண்டாண்டு காலமாய்த் தேடிக் கொண்டேயிருக்கிறவர்கள். பலவற்றை தவிர்த்த பிறகே பரமனைக் காண்பவர்கள்.
35ஏகோ”பி அஸௌ ரசயிதும் ஜகத்-அண்ட-கோடிம் யச்-சக்திர் அஸ்தி ஜகத்-அண்ட சயா யத் அந்த:
அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
அவர் ஓர் பாகுபாடற்ற வஸ்து. ஏனென்றால் சக்திக்கும் அதனை உடையவருக்கும் இடையில் பாகுபாடில்லை. கோடானுகோடி உலகங்களைப் படைக்கும் அவர் தொழிலில் அவரது சக்தி அவரிடமிருந்து பிரிவதில்லை. எல்லா பிரபஞ்சங்களும் அவரிடத்தில் அவர் ஒவ்வொரு அணுவிலும் முழுமையாக உள்ளார். இந்த அணுக்கள் ஒரே சமயத்தில் பிரபஞ்சம் முழுவதிலம் சிதறிக்கிடக்கின்றன. இத்தகைய ஆதி கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
36. யத்-பாவ-பாவித-தியோ மனுஜாஸ் ததைவ ஸம்ப்ராப்ய ரூப-மஹிமாஸன-யான-பூஷா:
ஸுக்தர் யமேவ நிகம ப்ரதிதை: ஸ்துவந்தி கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதி புருஷனான அதே கோவிந்தனை வணங்குகிறேன். பக்தி சொரிந்த மாந்தர்கள் இந்த ஆதி புருஷனை துதிபாடுகின்றனர். வேதங்கள் வழங்கும் மந்த்ர ஸுக்தத்தை ஓதுகின்றனர். இப்படியாக அவர்கள் தகுந்த அழகு பெருமை சிங்காதனங்கள். ஊர்திகள், அணிகலன்கள் முதலானவற்றைப் பெறுகின்றனர்.
37. ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபிஸ் தாபிர் ய ஏவ நிஜ ரூபதயா கலாபி:
கோலோக ஏவ நிவஸதி அகிலாத்ம-பூதோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
கோலோகத்தில் ராதையுடன் வசிக்கும் ஆதிபுரு‘னான கோவிந்தனை நான் வணங்குகிறேன். ராதை அவரது சொந்த ஆன்மீக சாயல் கொண்டவள். பரமபுருஷன் ஆயக்கலைகள் 64 கினையும் நேயக்கற்றவர். ராதையின் தோழிகளுடன் கூடிய கூட்டத்தில் கோவிந்தன் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பவர். ராதையின் சகிகள் அவளது விரிவுகள். ஒவ்வொரு கோபியிடமும் ராதையின் நிரந்தர ஆனந்த ஆன்மீக ரஸம் பட்டு பரவியிருக்கிறது.
38.ப்ரேமாஞ்சஜன-ச்சுரிதா-பக்தி-விலோசனேன ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி
யம் ஷ்யாமசுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
கண்ணனேயான சியாமசுந்தரனை, கோவிந்தனை, ஆதிபுருஷனை வணங்குகிறேன். அவர் எண்ணமுடியாத குணாதிசயங்கள் கொண்டவர். அவரை தூய பக்தர்கள் தங்கள் இதயத்தின் இதயத்தில் வைத்து அஞ்சனம் தீட்டியது போல அன்பு தீட்டிய விழிகளால் காண்கின்றனர்
39. ராமாதி மூர்த்திஷு கலா நியமேன திஷ்டன் நானாவதாரம் அகரோத் புவனேஷு கிந்து
கிருஷ்ண: ஸ்வயம் ஸம்பவத் பரம: புமான் யோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
எந்த ஆதி புருஷன் கோவிந்தன். ராமன், நரசிம்மன், வாமனன் போன்ற அவதாரங்கள் எடுத்தவனோ அவரையே நான் வணங்குகிறேன்.
40. யஸ்ய ப்ரபா-ப்ரவதோ ஜகத்-அண்ட-கோடி- கோடீஷ்வ அசேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம்
தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அசேஷ-பூதம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
உபநிஷதங்கள் எதை பிரம்மம் என்று வர்ணிக்கின்றதோ, அதன் தோற்றுவாய் சுயம்பிரகாசமான ஆதிபுருஷன் கோவிந்தன். இந்த கோவிந்தன் வகுபடாத வரம்பற்ற எல்லையற்ற சத்யன். இவரை நான் வணங்குகிறேன்.
41. மாயா ஹி யஸ்ய ஜகத்-அண்ட-சதானி ஸூதே த்ரைகுண்ய-தத் –விஷய்ய-வேத-விதாயமானா
ஸத்வாவலம்பி-பர-ஸத்வ-விசுத்த-ஸத்வம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
அனைத்து இருப்பிற்கும் ஆதாரமான இறுதி உண்மையான மெய்பொருளான புருஷனான கோவிந்தனை வணங்குகிறேன். அவரது புறச்சக்தி சத்வ ரஜ தம குணங்களைத் தழுவியது. ஜட உலகம் பற்றிய வேத அறிவை பரப்பச்செய்வது.
42.ஆனந்த சின்மய ரஸாத்மதயா மன: ஸு ய: ப்ராணினாம் ப்ரதிபலன் ஸ்மாதாம் உபேத்ய
லீலாயிதேன புவனானி ஜயதி அஜஸ்ரம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது புகழ் ஜட உலகில் ஆட்சி செலுத்துகின்றது. அவரது திருவிளையாடல்கள் அகிலம் பரந்தவை. சச்சிதானந்த சொரூபமாய் அவரது மாட்சிமை அகிலத்தில் நிலவுகின்றது.
43. கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலேச தஸ்ய தேவி-மஹேச-ஹரி-தாமஸு தேஷு தேஷு
தே தே ப்ரபாவ-நிசயா விஹிதாஸ் ச யேன கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
தேவிதாமம் என்ற இருப்பிடம் அனைத்து உலகங்களிலும் மிகமிகத் தாழ்மையான உலகம் அதற்கு சற்றுமேலாக மஹேச தாம ம் என்ற சிவலோகம் அதற்கு மேலாக ஹரிதாமம் என்ற வைகுந்தலோகம் எல்லாவற்றுக்கும் சிகரமாய் கோலோகம் அது பகவான் கிருஷ்ணின் வசிப்பிடம் படிப்படியான உலகங்களை உரிய ஆளுநர்களுக்கு வழங்கிய ஆதிபுருஷனான கேசவனை நான் வணங்குகிறேன்.
44.ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரளய-ஸாதன-சக்திர் ஏகா சாயேவ யஸ்ய ய புவனானி பிபர்தி துர்கா
இச்சானுரூபம் அபி யஸ்ய ச சேஷ்டதே ஸா கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
சித் சக்தியின் நிழலான மாயா (புறசக்தி) மக்களால் துர்காதேவியாக வழிபடப்படுகிறாள். அவளே இந்த ஜகத்தைப் படைத்து காத்து அழிப்பவள். யாருடைய சித்தப்படி துர்காதேவி நடந்துகொள்கிறாளோ அந்த ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
45. க்ஷிரம் யதா ததி விகார-விசேஷ-யோகாத் சஞ்ஜாயதே ந ஹி தத: ப்ருதக்-அஸ்தி ஹேதோ:
ய: சம்புதாம் அபி ததா ஸமுபைதி கார்யாத் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
அமிலங்களால் பால் தயிராகத் திரிகிறது. இருப்பினும் இந்த தயிர் பாலும் அல்ல. பாலிலிருந்து தன்மையில் மாறுபட்டதுமல்ல. அதே போன்ற ஆதி ஆண்மகனாகிய கோவிந்தனை நான் வணங்குகிறேன். இந்த ஆதி புருஷனிடமிருந்து திரிபடைந்தவா சிவபெருமான். அழிக்கும் தொழிலின் அதிபதி.
46. தீபார்சிர் ஏவ ஹி தசாந்தரம் அப்யுபேத்ய தீபாயதே விவ்ருத-ஹேது-ஸமான-தர்மா
யஸ் தாத்ருக் ஏவ ஹி ச விஷ்ணுதயா விபாதி கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஒரு தீபம் மற்றொறு தீபத்தை ஏற்றினாலும் தன்னொளி குறைவதில்லை. அதேபோல தன்னை பல விதங்களில் தோன்றச் செய்யும் பிரபு கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
47. ய: காரணார்ணவ-ஜல பஜதி ஸ்ம யோக-நித்ராம் அனந்த-ஜகத்-அண்ட-ஸ-ரோம-கூப:
ஆதார-சக்திம் அவலம்ப்ய பராம் ஸ்வ-மூர்த்திம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதிபுருஷன் கோவிந்தனின் ஓர் அம்சமான அனந்தன் என்ற ஆதிசேஷன். காரணக்கடலில் ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் யோகநித்ரை புரிகிறார் கோவிந்தன். அவரது கேச நுண்துளைகளில் இந்த பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது. அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
48. யஸ்யைக-நிச்வஸித-காலம் அதாவலம்ப்ய ஜீவந்தி லோம-வில-ஜா ஜகத்-அண்ட-நாதா:
விஷ்ணர் மஹான் ஸ இஹ கலா விசேஷோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
பிரம்மனும் இதர ஜட உலக அதிகாரிகளும் மஹாவிஷ்ணுவின் முடியின் நுண் துளையிலிந்து தோன்றியவர்கள். மஹாவிஷ்ணு மூச்சை உள்ளிழுக்கும் வரையில் இவர்கள் உயிருடன் இருப்பார்கள். யாரின் அங்கத்தின் அங்கம் மஹா விஷ்ணுவோ அன்னவரை நான் வணங்குகிறேன். அவரே ஆதி புருஷரான கோவிந்தன்.
49. பாஸ்வான் யதாச்ம சகலேஷு நிஜேஷு தேஜ: ஸ்வீயம் கியத் ப்ரகதயதி அபி தத்வத் அக்ர
ப்ரஹ்மா ய ஏஷ ஜகத்-அண்ட-விதான-கர்தா கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதி புருஷரான கோவிந்தனிடமிருந்து பிரிந்தவர் அவரது அங்கமான பிரம்மா. இந்த மண்ணுலகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை அவர் கோவிந்தனிடம் இருந்தே பெறுகிறார். தன் பெயரையே கொண்டசூர்யகாந்தக் கற்கள் மேல் சூரிய ஒளிபட்டு பிரகாசிப்பதில்லையா அது போன்று இது. அத்தகைய முழுமுதற்கடவுளான கோவிந்தனை வணங்குகிறேன்.
50. யத்-பாத-பல்லவ-யுகம் வினிதாய கும்ப-த்வந்த்வே ப்ரணாம-ஸமயே ஸ கணாதிராஜ:
விக்னான் விஹந்தும் அலம் அஸ்ய ஜகத்-த்ரயஸ்ய கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
ஆதி ஆடவனான கோவிந்தனின் தாமரைத்திருவடிகளை கணேசன் தன் தந்தங்களில் தாங்குகிறார். எதற்கென்றால் மூவுலகங்களிலும் முன்னேற்றப்பாதையில் தென்படும் தடைகளை நீக்குவதற்கான சக்தியை அதிகாரத்தைப் பெறுவதற்கு அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
51. அக்னிர் மஹி ககனம் அம்பு மருத்திசஸ் ச காலஸ் ததாத்ம மனஸீதி ஜகத் த்ரயாணி
யஸ்மாத் பவந்தி விபவந்தி விசந்தி யம் ச கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
நெருப்பு மண் அண்டைவெளி தண்ணீர் காற்று திசை காலம் ஆத்மா மனது என்ற ஒன்பது மூலகங்களால் மூவுலகும் நிறைந்துள்ளது. யாரிடமிருந்து இவை தோன்றுகிறதோ யாரிடம் இவை இருக்கின்றதோ ஊழி நாசத்தின் போது யாரிடம் இவை அடைக்கலம் புகுகின்றதோ அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
52. யச்-சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸகல க்ரஹாணாம் ராஜா ஸமஸ்த-ஸுரமூர்த்திர் அசேஷுதேஜா:
யஸ்யாஜ்ஞயா ப்ரமதி ஸ்ம்ப்ருத-கால-சக்ரோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
எல்லா கிரகங்களின் அரசன் சூரியன் இதன் ஒளி அளப்பரியது. நல்லாத்ம சொரூபன் சூரியன் இவ்வுலகத்தின் கண் போன்றது. சூரியன் காலசக்ரத்தில் ஏறி புவனத்தை பவனி வரும் சூரியன். பிரபு கோவிந்தனின் ஆணைப்படி நடப்பவர் அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
53. தர்மோ”த பாப நிசயா: ஸ்ருதயஸ் தபாம்ஸி ப்ரஹ்மாதி-கீட-பதகாவதயஸ் ச ஜீவா:
யத்-த த்த-மாத்ர-விபவ-ப்ரகட-ப்ரபாவா கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
நான் ஆதி ஆடவனான கோவிந்தனை வழிபடுகிறேன். இவர் வழங்கிய அதிகாரம் எல்லா பாவங்கள் புண்ணியங்கள் வேதங்கள் தவங்கள் ஜீவன்கள். பிரம்மா முதல் அற்ப பூச்சிவரை நிறைந்துள்ளன.
54. யஸ் த்வ இந்த்ர-கோபம் அதவேந்த்ரம் அஹோ ஸ்வ-கர்மா-பந்தானுரூப-பல பாஜனம் ஆதனோதி
கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
கோவிந்தன் பக்தர்களின் கர்ம வினைகளை வேரோடு சுட்டெரித்து அழிக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு அவர் செய்கிறார். எந்தெந்த துறையில் மக்கள் இருந்தாலும் அவர்களின் முன் வினைகளில் பலனை அது இன்பமானாலும் துன்பமானாலும் அனுபவிக்கச் செய்கிறார். இந்திரகோபம் என்ற அற்ப பூச்சியானாலும் இந்திரனேயானாலும் அவரின் இந்த கட்டளையை மீற முடியாது.
55. யம் க்ரோத-காம-ஸஹஜ-ப்ரணயாதி-பீதி-வாத்ஸல்ய-மோஹ-குரு-கௌரவ-சேவ்ய-பாவை:
ஸஞ்சிந்த்ய தஸ்ய ஸ்த்ரூஷீம் தனும் ஆபுர் ஏதே கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
சினம் காமஇச்சை இயல்பான நட்பு போன்ற அன்பு பயம் பெற்றோர் வாஞ்சை. ஏமாற்றம் மரியாதை விரும்பி செய்யும் சேவைபோன்ற மனநிலைகளில் கோவிந்தனை தியானிப்பவர்கள் தங்கள் தியான நிலைக்கேற்ப தேகத்தைப் பெறுகின்றனர். அப்படிப்பட்ட கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
56. ஸ்ரிய: காந்தா: காந்த: பரம-புருஷ: கல்ப-தரவோ
த்ருமா பூமிஸ் சிந்தாமணி-கண-மயி தோயம் அம்ருதம்
கதா கானம் நாட்யம்ட கமனம் அபி வம்சீ ப்ரிய-ஸகீ
சித் ஆனந்தம் ஜ்யோதி: பரம் அபிதத் ஆஸ்வாத்யம் அபி ச
ஸ யத்ர க்ஷீராப்தி: ஸ்ரவதி ஸுரபிப்ஸ்ச ஸு மஹான்
நிமேஷார்தாக்யோ வா வ்ரஜதி ந ஹி யத்ராபி ஸமய:
பஜே ச்வேத த்வீபம் தமஹமிஹ கோலோகம் இதியம்
விதந்தஸ்தே சந்த: க்ஷதி-விரல-சாரா: கதிபயே
ஸ்வேத தீபம் எனும் அந்த தெய்வீக இருப்பிடத்தை நான் வணங்குகிறேன். அங்கே பகவானின் அன்பு பத்தினியர் லக்ஷ்மிகள். இவர்கள் கலப்படமற்ற ஆன்மீகச்சாறு. கிருஷ்ணரை தங்களின் காதலனாக எண்ணி ஏங்குபவர்கள். இங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டது தரும் கற்பக மரம் இதன் மண்ணோ சிந்தாமணி இங்கே தண்ணீர் எல்லாம் அமுதம் ஒவ்வொரு வார்த்தையும் பாட்டு ஒவ்வொரு அசைவும் அபிநயம் இங்கு புல்லாங்குழல் பிடித்த ஏவலாள். இங்கு வீசும் ஒளி பேரானந்தமானது. இங்கு உயர்ந்த ஆன்மீக இருப்புகள் எல்லாம் அனுபவிக்கத் தகுந்ததும் சுவை நிரம்பியதுமாகும். இங்கு வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் சொரிந்து தள்ளுகின்றது. இங்கு அசையாமல் காலம் ஸ்தம்பித்து நிற்கின்றது. ஆகையால் எதிர்காலம் இல்லை. அரை நொடி கூட இங்கு கழிவதில்லை. அந்த உலகம் கோலோகம் யாருக்கு என்றால் ஒரு சில தன்னையறிந்த ஆத்மாக்களுக்கே.
yes,already god has taken kalki avatar in 19th century, his name AYYA VAIKUNDA SWAMY(MAHA VISHNU),place-swamythoppu,near thirunelveli,tamilnadu,he has written in the book (akilathirattu ammanai) what is going to happen in this world,
குர்ஆன் & நபி மொழிகளின் படி, உலக இறுதிநாளின் நெருக்கத்தில், 1. மஹதி (முஹம்மத் இப்ன் அப்துல்லாஹ்) எனும் ஒருவர் உலக முஸ்லிம்கள் அனைவரையும் தீயசக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பார். 7 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி புரிவார். 2. தஜ்ஜால் (வலது கண் ஊனமானவன்) எனும் யுகம் யுகமாக, பூமியில் (ஒரு தீவில்) அடைபட்டிருக்கும் ஒரு தீயசக்தி வெளிப்படுவான். 3. ஈசா மசீஹ் (இயேசு) எனும் இறைதூதர் வானத்திலிருந்து டமாஸ்கஸ்’ பள்ளிவாசலில் உள்ள வெள்ளை மினராவுக்கருகில் இறங்குவார்கள், தஜ்ஜாலை அழிப்பார்கள்… 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி புரிவார்கள்… பின்பு மரணிப்பார்கள்…
kalki avadharam enbavar muhammed nabi enbadhu anaithu hindhukkalum arindha oru vidayam.bt awarhal adhai purakkanippadhu perum kutramahum.silaivanangihalaha maranithu edhai hindhukkal perappohirarha?neengale seydha silaiyai vananguhireerhal.ungalai than quraan ivvaru kurippiduhindradh”sevidarhal,oomaiyarhal,kurudarhal oru podhum meelave matarhal”
நபியவர்கள்தான் கல்கி அவதாரம், அதை ஹிந்துக்கள் அனைவரும் அறிவார்கள் என கூறுகிறீர். இதை எந்த அடிப்படையில் கூறுகிறீர் என்பது புரியவில்லை. கல்கி அவதாரம் தோன்றக்கூடிய காலம், இடம் போன்றவற்றிற்கான தீர்க்கதரிசனங்கள் புராணங்களில் உண்டு. நபியவர்கள் அவற்றையெல்லாம் எவ்வாறு நிறைவேற்றுகின்றார் என்பதையும் நீர் நிரூபிக்கவில்லை. பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம் என வெறுமனே கூறாமல் அதற்கான ஆதரங்கள், புராணங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் இங்கு வாசகர்களின் ஆய்வுக்கு நிரூபணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று நபியவர்கள்தான் கல்கி அவதாரம் என்பதற்கான ஆதாரங்களை நீங்களும் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஒருபுறமிருக்க ஹிந்துக்களை ‘சிலைவணங்கிகள்’ எனப் பெயரிடுட்டுள்ளீர். இது நியாயமா? நீங்கள் குறிப்பிடும் சிலை வணக்கத்திற்கும் ஹிந்துக்களின் சிலை வணக்கத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு. அவற்றை இங்கு விவரிப்பதற்கு இடம் போதாது. ‘சிலைவணங்கிகள்’ எனும் வார்த்தையைப் படிக்கும் ஹிந்துக்கள் நபியவர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் எவ்விதமான உணர்வைக்கொள்வார்கள் என்பதை நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். “அன்புகனிந்த நாவே மனித இதயங்களைக் கவரும் காந்தக்கல்” என பஹாவுல்லா கூறியுள்ளார். அன்பற்ற சொல் எதுவுமே மனிதர்களைக் கவரப்போவதில்லை. மேலும் ‘சிலைவணக்கம்’ (Idol worship) என்பது லௌகீக சிலைகளை மட்டும் குறிக்கவில்லை. அது மனிதர்களின் பிடிவாதக் கொள்கைகளையும் தாத்பரிக்கும் ஒரு வார்த்தையாகும். இவ்வித மானசீகப்-பிடிவாதக்கொள்கைச்-சிலைவணக்கத்தின் காரணமாக ஆயுதங்களை ஏந்துவது, பெண்களை அடிமைகளாக நடத்துவது, கோவில்களை இடிப்பது, மக்களைக் கொல்வது போன்றவை உலகில் நடந்து வந்துள்ளன இன்றளவும் நடந்தும் வருகின்றன. மதங்கள் மனிதர்களுள் நற்பண்புகளையும் ஆன்மீக நெறிமுறைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆனால் இன்று உலகில் இதற்கு எதிர்மாறான செயல்களையே மனிதர்கள் பெரும்பாலும் வெளிப்படுத்துகின்றனர். அது சமயங்களின் குற்றமல்ல, சமயங்களின் குறிக்கோளை தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் மனிதர்களின் குற்றமாகும். கடவுளுக்கு முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதர் எனும் வேறுபாடு கிடையாது. மழை எல்லாருக்கும் பொதுவாகப் பெய்கின்றது, சூரியன் ஒளி கொடுக்கின்றான், மனிதனுக்குத் தேவையான உணவை பூமியிலிருந்து பெறுகின்றோம், சமய வேறுபாடின்றி இறந்தவர்களை பூமி ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே, இவற்றின் உதாரணங்களைப் பின்பற்றி சமயங்களிடையே இணக்கத்தையும் மனிதர்களிடையே ஒற்றுமையையும் வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதே கடவுளுக்கு விருப்பமான செயலாகும் என்பதில் சந்தேகமில்லை. அதை விடுத்து பிற சமயத்தினரின் நம்பிக்கைகளை குறைகூறுவது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதற்குச் சமமாகும், மனிதர்களிடையே மேலும் பிரிவினையை வளர்க்கும் செயல்கள் கடவுளின் சாபத்திற்கும் பழிப்பிற்கும் வழிவகுக்கும்.
kalki ivvulahitku wandhu 1400 aanduha ahivittana.neengal ariyamaiyil moolhi ullirhal.kalki enbavar 1400 varudangaluku munnal wandha muhammed nabiyavar.”bagavath puranam kandam:12,aththiyayam:02,sloham:18-20″-(shampala naharil vishnuyash veettil awar pirappar.awarudaiya peyar kalki.awaruku 8 dheyweeha amsam irukum.awar kudhiraiyin meedhu waladhu kaiyil walendhiyawaraha waruwar,kodiyawarhalai alippar)endru ulladu.sindhi unga.shampala enbadhan porul:sandhi um amaidhi um ulla idam.,vishnuyash enbadhan porul:iraivanin adiyan.ivai anaithum muhammedh nabiyai than kurikkiradu.kalkiyin thay sumathi(amaidhi)muhammedh nabiyin thay aaminah(amaidhi)vishnuyash(iraivanin adiyan)abdhullah(iraivanin adiyan)muhammedin thandhai.shampala(santhi um amaidhi um niraindha idam)muhammed pirandhadu makkah/dharul aman(santhium amaidhi um niraindha idam.kalki madho madham 12m naal pirappar.muhammedh nabi rabi ul awwal madham 12m naal pirandhar.kalki kadaisi rishi.muhammedum kadaisi rishi.kalki vedha arivippu kidaika kuhaiyil vasippar.pin vadakku nokki idampeyarwar.pin palaya idathitke thirumbuwar.muhammedum vedha arivippu pera hira kuhaiyil irundhar.pin vadakke ulla madhinavitku idampeyarndha.pin meendum makkavan irundha idathitke thirumbinaar.ippadi adukkikkonde pohalam.”sindhikkum samudhayathitku arivuraihal ullana”
சத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்ததது,தின்னமாக அசத்தியம் அழியக்கூடியதே
(ஏக இறைவனை மறுத்து)அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுப்போரின் செயல்களை (இறைவன்)வீணானதாக்கி விட்டான்(அல்குர்ஆன்47.1)
அவர்கள் இக்குர்ஆனை சிந்திக்க வேண்டாமாஅல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா(குர்ஆன்-47.24
ஃபரா அவர்கள் முஹமது நபி (ஸல்) தான் கலி யுகத் தூதர் என்பதை தெளிவாக விவரித்துள்ளார் (பாகவத புராண மேற்கோள்களுடன்) இதற்கு தங்களின் பதில் என்ன ?
1844ல் உலக சமயங்கள் அனைத்தும் முன் அறிவித்துள்ள கடவுளின் அவதாரம் தாமே என அலி முகம்மத் எனும் பாப் அவர்கள் தம்மை உலகிற்கு அறிவித்துக்கொண்டார். அதற்கான எல்லா ஆதாரங்களும் பின்வரும் கட்டுரையில் (கலி யுகமும் கல்கி அவதாரமும்) வழங்கப்பட்டுள்ளது. தயவு செய்து அதை நன்கு ஆய்வு செய்து கருத்து தெரிவிக்கவும்.
http://wp.me/pmhdz-68
அலி முஹம்மத் பொப் என்பவர் கல்கி என்பதற்கு இருக்கும் ஆதாரங்களை விட முஹம்மத் (நபி)கல்கி என்பதற்குள்ள ஆதாரம் வலிமை கூடியது.ஏனெனில் முஹம்மத் நபியுடைய அனைத்துமே பொருந்துகிறது.”eppodellam darmam kuraindhu adarmam oanguhirado appodellam naan oru aanmavai uruperach cheyven”endra kootrukkinanga muahmmaed nabiyavarhal thondriya kaala kattathil adarmam melongi kaanappattadu.enda alavukkendral vasadiyatravarhaluku vaalaveee mudiyadu endra nilai.selva aatchiyee melaha kaanappattadu.indha soolalil than muhammed pirandar.adu mattumanri thiru prasmi awarhal kaliyuhathil nadakkum sambavathai kurithu pesi ullar.adil koorappattulla anaithum muhammed nabiyin kaalathil nadaipetradu.udaranamaha:1-ahadihalaha palar naattkku nadu selvaarhal.-(islam arimuhamana udan,unmai therinda udan makkavilirundha makkalai makka selvandarhal virattinar,awarhal ahadihalaha oru pallaththakkil 3varudam kudiyamarndhanar.pirahu madeena thirumbinar,innum silar abeesiniya ippadi naadu sendranar.)
2-panakkararhal aadikkam seluthuvaarhal,aatchi thalaivarhal makkalai kaakkamal varihalin moolam selvangalai paripparhal(andraiya kaala selvanda aatchiyalarhal palavandamaha selvangalai varihal moolam paritharhal.idanal than islam maarkathil selvathai parippadu thadai seyyappattu,vari neekkap pattu elaihaluku selvam valangum thittam{zakath}arimuham seyyap pattadu.)
ivvaru anaithitkum kaaranangalai adukkikonde pohalam.naam edai theduvadendalum sariyanadai theda vendum.muhammed nabiyavarhaladu vaalkkai mutru muludhaha kalkiyin vaalkai udan oththuppohindradu.adu mattumandri 1-kalki iraivanin velippadu.awarai hindhu mada vedam kadaisi rishi (irudhi thoodar)endru kooruhiradu.–<muhammed nabi um iraivanin velippadu.awarai um {hathamun nabi}irudhi thoodar endu quraan kurippiduhiradu.aanal ali muhammed thane thannai kalkiyaha arimuhappaduthuhirar,islathil muhammed nabikku pirahu enda thoodarum vara maattar,varavum illai.poiyana nabi maarhal thondruvaarhal.idhu marumaiyin adaiyalamahum,ippadi thondriya oruvan than ali muhammed bab,mirsa kulam ahmed pondror.adu mattumandri naan mudalilum pala aadarangalai kaati vitten.-1-vishnuyash/abdhullah(iraivanin adiyan)
2-sumath/aaminah(amaidi)
3-shampala nahar/dharul aman(sandhi um amaidi um nirainda idam)
4 kalki um muhammed nabi um 20 kulukkalai muraiyadithanar.
5-porkalathil vaanavarhalal udavi seyyappaduvar,muhammedum badhr enum porkalathil vaanavaral udavi seyyap pattar.
6-4tholarhal udaviyaha irukkum,muhammedukkum 4 tholarhal koodaveee irundharhal.(aboobakr,umar,usman,ali)
ippadi adukkikkonde pohalam.adu mattumandri muhammed nabiyavarhal kurithu hindhu madathil munnarivuppu seyyap pattulladu.
1-bagavath puranam:kaandam 3,parvaam 3 aththiyayam 3 sloham 10-27 padi
"ellam valla iraivan awarukku oru ediri irundhadahavum awar appodu kollap pattu poi vittadahavum awarai vida valimaiyana oruvar thatpodu vandirukkirar.vaanavarhalin thanmai ulla oruvarai naan anuppuven.aware iwarhalai nervalip paduthuwar.en arasane!nee pisasuhalin pradesathitku pohavendam.en anbinale unnai thooymaip paduthuven.ellam valla iraivan ennai aariya darmam enum saththiya maarkathai melongach cheyvadatkaha anuppi ullan.naan iraichiyai unnakkodiya samoohathai undu pannuven,ennai pinpatrupavarhal virutha sedanam seydavarhalaha irupparhal.(muslimgal sey um sunnath)awar thalaiyil kudumi irukkadu,awar thadi vaithirup paarhal,awar tholuhaikkaha alaippu vidupparhal,anumadikkap patta vatrai pusipparhal,pandri iraichiyai thodakkoda maattarhal.sedi kodihal moolam suththam seyya maattarhal.maaraha saththiyathitkaha por seyvadan moolam suththamadaivaarhal."
2-awar thannai petra thayidam thai paal arundha maatar.,muhammed nabi um thannai petra thayidam paal arundhavillai.
ippadi pala kooralam.mudalil ungal vedathai neengal sariyaha padi ungal.kadum vedanai ungalai vandadiya mun allahvai anjikkollungal.!palakadavul kolhaiyai vittu vidungal.ore iraivan enum kolhaiyai etru awanukku edai um inaivaikkadavarhalaha marani ungal."allah inaivaippai thavira matra paavangalai mannippavan."(quraan.)ungalai padaithavan allah than.neengal ariyada nilaiyil thayin karuvaraiyil ungalai awan padaikkiran.vanathai paarungal!adai neengal kaihalal seydu vanangum oru padaippu evvaru padaikka mudi um?oru silaiyai seyya payanpadum man engirundhu varuhindradu?anda mannai padaikka oru iraivan irukka vendum.ulaahaiye oru kaippidikkul edukka aatral ullavan allah mattumeee.ulaham innum siru kaalathil alindhuvidum.appodu ulahil muslim thohai adiharithu vidum.indru quraan naveena science ei unmaip paduthuhiradu,matra madangalai unmai paduthuhiradu.sindi ungal!!"sindhikkum samudayathitku padippinaihal undu"(quraan)"sindikka mudiyadavaru ungal ullangal poottu podap pattullada"endru allah ketkiran(quraan)aahave kalki muhammed nabi enbadai nambungal.yaravadu ennidam kurukku kelvi ketka virumbinal ennai thodarpu kollalam.indha e-mail il.{{mohammedakram942@yahoo.com}}naraha neruppai payappadungal.unmai vanda pirahum adai purakkanippawanai pol nashtavali yaar?{{saththiyam vandadu,asathiyam alindadu,asathiyam alinde theerum}}islam kurithu ungaluku thevaiyana kelvihalai 18m thihadikku mun ketkavum.
during the mentioned year 1815-1850.narayanar incarnate in the name of ayya vaikunder in Kanyakumari district . for more information read akilathirattu ammanai.
OK. Good
kandum kaanadawarhalaha kettum keladawarhalaha unarndhum unaradawarhalaha irupparhal.{maththeyu suvisesham:13:13},sevidarhal oomaiyarhal kurudarhal awrhal meelaweeeee maattarhal}allah yavatrai um arindhavan.markathai solla than mudi um.ada etkuradum etkadadum unga chois.nervaliya pinpatri oluhum ovvoru jeevanum marumaiyil nirandaramaha suvanathil irupan.
நீர் கூறுவது முற்றிலும் உண்மை. நேர் வழியில் செல்லும் ஒ்வவொரு ஆன்மாவும் மறுமையில் இறைவனின் முன்னிலையை அடைந்து நித்திய நிலை அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பஹாய்களைப் பொறுத்தமட்டில் பஹாவுல்லா இக்காலத்திற்கென இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்ட ஓர் அவதாரம், இறைத் தூதர் ஆவார். அவர் காட்டும் வழியே என் போன்ற, உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகள், இனங்கள், மொழிகள் ஆகியவற்றைச் சார்ந்த பஹாய்களுக்கு நேர் வழியாகும். பஹாவுல்லாவின் போதனைகளை ஏற்பதா இல்லையா என்பது அவரவர் விருப்பம். யார் நேர் வழியில் நடக்கின்றார் அல்லது நடக்கவில்லை என்பதற்கான நீதிபதி கடவுளே ஆவரா். மனிதர்களுக்கு அந்த உரிமை கிடையாது. குறைந்த பட்சம் பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதைத் தீர ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவதே சாலச் சிறந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கல்கி அவதாரம்!!!!!!!
(“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் ஒரு கூறியுள்ளார். அவருடைய ஆய்வுத்தகவலை இங்கு தந்துள்ளோம்)
இந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம் என்று இந்துமத அறிஞர்கள் சிலர் ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைச் சொல்லியுள்ளனர். கல்கியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பல முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துகின்றன..
பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:
“ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத”
சிஷ்ய சாகா ஸமன்விதம்..”
(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)
இதன் பொருள்:
“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்).”
இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதுதானா என்பது பற்றி இந்துப் பண்டிதர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதே என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்.. அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் வருமாறு:
உலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன. இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.
கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத், தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் “விஷ்ணு” என்றால் இறைவன்(அல்லாஹ்), “சோமாநிப்” எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி – சமாதனம் என்பதாகும். “ஆமினா” என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.
கல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும், “நம்பிக்கையாளர்” என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை “அல் அமீன்” (நம்பிக்கையாளர்) என்று மக்கள் போற்றினர்.
மிகவும் உயர்ந்த குடும்பத்தில் – உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது. மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் – ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்.
குகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது. “ஹிரா” குகையில் இருக்கும்பொதுதான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.
கல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது. இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது.
பகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.
குதிரையேற்றத்திலும், அம்பு எய்வதிலும், வாள் போரிலும் கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது. முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.
ஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார். அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.
-சசி-
சமரசம் 1-15 ஜுன் 2004
நன்றி: http://nihalvu.blogspot.com/
neengalaha ungalai maatrikkollada warai allah ungalai maatra mattan….allah podumanavan..
நீங்௧ள் ௯றிய புரண நி௧ழ்௧ள் சாத்தியமே,ஆனால் ௧லியு௧ம் இன்னும் உள்ள ஆண்டு௧ள் 2400 ஆகும்…………………………….
சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார்.
அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார்.
ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர்.
அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.
சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும். ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
யுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் கிருத யுகம் – 17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் – 92, 96, 000 வருடங்களும், துவாபர யுகம் – 8, 64, 000 வருடங்களும், கலியுகம் – 4, 32, 000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும். கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கற்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.) 60*60*60 = 216000 நொடி = 1 நாள். அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் தான் ஆகிறது.
நன்றி, கலியுகத்திற்கு 4,800 வருடங்கள் மட்டுமே என்பதற்கு நான் வழங்கியிருக்கும் வாதங்களை தயவு செய்து மறுபடியும் ஆய்வு செய்யவும்.
ஐயா நான் ஒரு facebook page செய்கிறேன்.
அதற்கு ஒரு Like குடுங்கா.
Facebook Name. Lord Of Vishnu.
Thank you Sir
பகவத் கீதை(Gita)in tamil mp3 free download
எல்லா மதங்களாலும் சொல்லப்படும் அந்த முதல் முதல் கடவுள் யார் ஆதாரத்துடன் விளக்கம் தர முடியுமா?
நண்பரே, உங்கள் கேள்விக்கான பதில் சற்று நீளமாக இருப்பதால், அதைப் பின்வரும் பதிவின் மூலமாக வழங்கியுள்ளேன்.
http://goo.gl/tqOxxh
முகம்மது நபி அவர்கள் , ஆதமின் ஆரம்ப கால தொடக்க வட்டத்தின் இறுதி தூதர் , பஹாவுல்லா புதிய தொடக்க வட்டத்தின் முதல் தூதர் .
கிருஷ்ணரின் மறு வருகை பஹாவுல்லா. ஏறக்குறைய கடந்த 200 வருடங்களாக தோன்றியோர் அனைவரும்
அவரை மக்களின் மத்தியில் நினைவு படுத்த தோன்றியவர்களே.
“ஒவ்வொரு மனிதனும், பயனற்ற வார்த்தை ஒவ்வொன்றையும் தனது இதயமெனும் ஏட்டிலிருந்து துடைத்தொழித்துவிட்டுப், பின், திறந்த, பாரபட்சமற்ற மனதுடன், அவரது திருவெளிப்பாட்டின் அடையாளங்களையும், அவரது தூதுப்பணியின் நிரூபணங்களையும், அவரது பேரொளியின் சின்னங்களையும் கூர்ந்து நோக்குவது ஏற்புடையதாகும்.” -பஹாவுல்லா
sahodarar kopinath pirakasam awarhale!!
neengal sandeham wandal thedungal…padiyungal…maaraha owworuwaridamum ketpadal unmai theliwaha kidaikkadu..neengal hinduwaha irukkireerhal….ungal kadavul kuritha kelvikku poorana badil ulahil enda arinjaralum koora mudiyada badil islamiya weda noolana quraanil undu..ungalukku naan sawal viduhireen….ungalal mudiyum endral adai read pannungal….adil theliwaha..kadavul enbawar eppadi irukka wendum endru kooruhiradu….adai oppittu parungal..insha allah theliwana badil kidaikkum….
“”(நபியே நீர்) கூறுவீராக அவன் அல்லாஹ் ஒருவன்.அவன் எவ்வித தேவையுமற்றவன்.அவன்யாரையும் பெறவுமில்லை,யாராலும் பெறப்படவும் இல்லை.மேலும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(alquraan-114:1-4)
allah ungalukku arulpuriwanaha!!
ungal manadil ewwarana kelvihal thondrudo awai anaiththitkum badil al quraanil undu….insha allah!!samoohaththai paarthu islaththai purindhu kolla wendam…maraha wedaththai padiyungal..illaiyel marumaiyil nashtamadaindhoraweer..
6-அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்கிவோர் மனிதர்களில் உள்ளனர்.அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.
7-அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும் அதை செவியுறாதவன் போலவும் தனது காதுகளிள் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான்.அவனுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக.
8-நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகள் உள்ளன.
9-அதில் அவர்கள் நிரந்திரமாக இருப்பார்கள்.அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.அவன் மிகைத்தவன்,ஞானமிக்கவன்.
10-நீங்கள் பார்க்கக்கூடிய தூண் இன்றி வானங்களை அவன் படைத்தான்.உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச்செய்தான்.வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம்.அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச்செய்தோம்.
11-இது அல்லாஹ் படைத்தது அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்.எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழி கேட்டில் உள்ளனர்.(al quraan-surah lukmaan:6-11)
Murugan is the god in this kaliyuga. Who one is having more than 1000 crore manamthan fair, who one is having kindness heart, who one is Protector for Aadhma’s. That is our Lovely bravely god ;ord muruga.
Good
கல்கி அவதாரங்கள் thonri vidathu meivazhi salai
கூறுவது விளங்கவில்லை
kalki came!!!!
with all proofs from all vedhas, he fits in all prophosies…….
place-
meivazhi salai
annavasal
trichy
Please state all the proofs and what this Kalki’s mission is and how he proposes to achieve it.
கம்மெண்ட்களை முழுவதும் நான் படிக்கவில்லை ஆனால் முகமது நபி மற்ற மதத்தை சிலை வணங்கிகள் என்று புண்படுத்தினார் என்று கூறியிருந்தாது அவரே சிலை வணக்க குடும்பத்தில் தான் பிறந்தார்.கல்கி முகமது நபியா என்று மதத்தை விட்டு யோசிப்போம்.
திருவருட்பா வள்ளலாரின் உண்மைப் பத்திரிக்கை
6-ம் திருமுறை – வசன பாகம். பக்கம்:21 (கலைஞன் பதிப்பகம்)
பிரஜோத்பத்தி வருடம், சித்திரை மாதம், 1871ல் சித்திவளாகத்தில்
திருவருட்பிரகாச வள்ளலார் தம் கைப்பட எழுதியது.
——————————————————————————————————-
சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்ஙும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருனெறி வழக்கம் இக்காலந்நொட்டு, அளவிறந்ந னெடுங்ஙாலம் வரையில் வழங்ஙும், அதன்மேன்மேலும் வழங்ஙும்.
பலவகைப்பட்ட சமய பேதங்ஙளும், சாத்திர பேதங்ஙளும், ஜாதி பேதங்ஙளும், அச்சர பேதங்ஙளும் போய், சுத்தசன்மார்க்கப் பெருனெறி ஒழுக்கம் விளங்ஙும். அது கடவுள் சம்மதம். இது 29 வருடத்திற்கு மேல், (1900 க்கு மேல்) (கலி 5000-க்கு மேல்)
இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்ஙளில் வந்நதாகச்சொல்லுகின்ற பல வகப்பட்ட ஏற்பாட்டுக்கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுள், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லா தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத்தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தாங்ஙள் தங்ஙள் அனுபவங்ஙளைக் குறித்து எதிபார்க்கின்றபடி (அவரவர்களின் தீர்க்க தரிசனங்ஙளில் பாடியுள்ளபடி**) எழுந்நருளுகின்ற தனித்தலைமைப்பெரும்பதி.
அந்நப்பதியின் அருளை நான் பெறுவேன்!! பெறுகின்றேன்!!! பெற்றேன்!!!!
என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள்!! பெறுகின்றீர்கள்!!! பெற்றீர்கள்!!!! அஞ்ஞ வேண்டாம்.
இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்ஙம்.
இதில் வள்ளலார் தனித்தலைமைப்பெரும்பதி என்று அவர்கள் சுட்டிக்காட்டும் அவதாரம் 1900 க்கு மேல் வரும் என்கிறார்கள். அத்தோடு, அவர்கள் வந்நு இருக்குமிடத்தில்
“பலவகைப்பட்ட சமய பேதங்ஙளும், சாத்திர பேதங்ஙளும், ஜாதி பேதங்ஙளும், அச்சர பேதங்ஙளும் போய், சுத்தசன்மார்க்கப் பெருனெறி ஒழுக்கம் விளங்ஙும்” .என்று அடையாளம் கூட காட்டுகிறார்கள்.
இப்ப வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை போதிப்பது தான் சாலச் சிறந்தது என்பதைக் காணும்போது பெருத்த மகிழ்ச்சியாக இருக்கிறது
நம்ம வாழும் இந்ந உலகத்திலே இப்ப
“பலவகைப்பட்ட சமயத்தை சேர்ந்நவர்கள், பலவகைப்பட்ட சாத்திரங்ஙளைப்பின்பற்றுபவர்கள், பலவகைப்பட்ட ஜாதியினர், அனைவரும் பேதமின்றி னம் வள்ளலார் சொல்லி உள்ளது போல ஒன்றாக ஒரே குடும்பமாக ஒரே ஊரில் ஒரே தெய்வத்தைப் பெற்று இன்றும் வசிக்கிறார்கள். அது எந்ந ஊர் என்று தெரியுமா ??
மேலே கி..பி. 1900 க்கு மேல் வருவார்கள் என்று வள்ளலார் உரைத்துள்ளார்கள். அப்ப அவர்கள் வந்நு 116 வருடங்ஙள் இப்போது ஆகி யிருக்க வேண்டும் அல்லவா?
மேலே சொல்லியுள்ள சுத்தசிவ சன்மார்க்கம் செயலில் உள்ள அந்ந ஊரில் அவர்களுக்கு என்றுள்ள காலண்டரில் இப்போது 116 வது வருடம் ஓடிக்கொண்டிருக்கிறது.
.
இப்ப வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை போதிப்பது தான் சாலச் சிறந்தது என்பதை யெல்லாம் சொல்றாங்ங. பரப்பராங்ங ஆனால், வள்ளலார் சுட்டிக்காட்டும் இடத்தை, ஊரைப்பார்த்து வள்ளலாரே சிபாரிசு செய்துள்ள அந்ந சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைப்பிடித்து சாகா வரத்தை பெற ஏன் ஒரு பகுதியினர் மட்டும் தான் வந்நார்கள் – வருகின்றார்கள்.
மற்றவர்கள் ஏன் பேச்சோடும் எழுதுவோதுடும் னின்று விடுகிறார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை !!!
LikeShow More ReactionsCommentShare
shree kakapusandar, Vadaluur vallalpiraan, naaratha mahapunga munivar, Lord Buddhar, Shree Akaththiar, munivar, Shree Theraiyar, Shree Eskilaas Shreemathi Cibil, Shree Aadhi Sankarar, Shree Maarkandeyar, Shree Subramanyar, Shree Thirumoolar, Shree Maakaali Amman, Shree Kabeer Das, Shree Veerabrahmam karu, shree sadakobaravarkal, Shree Tharkalai Olivulla, — All these sanits have clearly have given the identifications of the Kalki Avadhar – & easy way to identify his holiness – I can give those pages to anyone genuinely interested with open mind.
The clue is to identify his holiness with his unique actions of What Lord Krishna was doing & not by thooladheka features or any other disguises.
கல்கி அவதார புருஷர்
ஒவ்வொரு காலத்தில் வரும் அவதார புருஷர்களை சாதாரண மக்களால் அடையாளம் காண முடியாது. அதனால் தான், காணிக்கை நீதி மாணிக்க வாசகர்:
“அவனருளாலே அவன் தாள் வணங்ஙி” – என்பதற்கேற்ப, அவர்களின் அருள் பெற்றவர்களால் தான் அவர் வந்நிருக்கும்போது அவரை “இன்னார்” என்று அறிய முடியும், முன் காலத்தில் வந்ந அவதார புருஷர்களை மிகச்சிலரே அறிந்திருந்நனர் என்பதை வரலாறு கூறுகிறது. சான்றாக, நீலமேகக் கண்ணன் வந்ந போது எத்தனைபேர் அறிந்நனர்? அவரை ஒரு 5’ அடி மனிதனாக, மாடு மேய்க்கும் எடையானாகத்தானே கண்டனர். ஏன், அருச்சுனனும் விசுவரூப தரிசனை வரை ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் எனத்தெறிந்நு கொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அவரை ஒரு நல்ல குடும்ப நண்பர், நிறைய வல்லபம் பெற்றவர் என்று தானே (பாண்டவர்களும்) நினைத்தான். அப்ப, ஐவர் மட்டுமே அவரை “இன்னார்” என்று அறிந்நிருந்நனர்.
ஸ்ரீ இராமகிருஷ்ணரும், “அவதார புருஷர்களை அவர்களின் சீடர்கள்தான் (அவர் செயலைக்கொண்டு) அறிவார்கள்” என்று அருளியுள்ளார்.
இரண்டாவதாக, கல்கி அவதார புருஷர் வருகையைபற்றி நிறைய “தீர்க்க தரிசனங்ஙள்” கூறப்பெற்றுள்ளன.
ஸ்ரீ காகபுசுண்டர் பிரான், ஸ்ரீ வடலூர் வள்ளல்பிரான், சர்வாகமக்கிரந்நம், ஸ்ரீ சொராஷஸ்டர் நாயகம், ஸ்ரீ நாத மகா முனிபுங்ஙர், ஸ்ரீ புத்த பகவான் அவர்கள், டஸ் – ஜீயான் – வேதம், ஸ்ரீஅகத்திய மகா முனிவர், ஸ்ரீதேரையர், ஸ்ரீ CIBIL மாதரசியார் (Italy), ஸ்ரீ ஆதி சங்ஙரர், ஸ்ரீ மார்க்கண்டேயர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீதிருமூலர், ஸ்ரீமாகாளிஅம்மன், ஸ்ரீகபீர்தாஸ், ஸ்ரீவீரப்பிரம்மம் (ஆந்நிரம்), ஸ்ரீசடகோபரவர்கள், தற்கலை ஒலியுல்லா அவைர்கள் போன்ற பல முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் கல்கி அவதாரம் எப்ப, எப்படி, எந்ந இடத்தில் எவ்வாறு வருவார்கள் என்றும், அவர்கள் என்ன செயள்கள் செய்வார்கள் என்றும் விவரித்து கூறியுள்ளனர். அவைகள், நேரில் கண்டதைப்போலவே விவரித்துள்ளனர்.
மூன்றாவதாக, உலகினர், அவதார புருஷர்கள் மிகவும் எளிமையாக இருந்நதால், தம்மைப்போல 5’ அடி மனிதனாக மாயையினால் பார்த்து கோட்டை விடுகின்றனர். ஏனெனில், விட்ட குறை தொட்ட குறை இல்லாத காரணத்தினால். அவர்களை எட்டமுடியாமல் போய்விடுகிறது.
ஆகவே, கல்கி என்கிற அவதார புருஷர் வந்நு 1976 வரை மனித ரூபத்தில் இருந்நார் என்பது உண்மை. அவர் மகிமையை காண்டர்க்கறிய காட்சியாகக் கண்டனுபவித்த சீடர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
கல்கி அவதாரம் என்பது முஹம்மது நபியை குறிக்கின்றது
Dr.ஜாக்கிர் நாயக்:
முகம்மது நபி ஆண்டவரளின் திருத்தூதர். ஆனால் அவர்தான் கல்கி அவதாரம் என்பது தவறு. திருக்குரானில் கல்கி அவதாரத்தைப் பற்றி தீர்க்க தரிசனங்ஙள் பிரத்யட்சமாக உள்ளது. ஆனால் அதை பரந்ந மனத்துடன்/ மதவெறி இல்லாது காணில் நன்கு புரியும். கல்கியின் தூதுவர்கள்/சீடர்கள் பிற மதங்ஙளை தூஷிக்க மாட்டர்க்ள். அரசியலில் கலக்க மாட்டார்கள். பிறரைக் கட்டாயபடுத்த மாட்டார்கள். வன்முரை நிச்சயமாக இருக்காது.
கல்கி தோன்றிய இடத்தில் இன்றும் பிரத்யட்சமாக கல்கியின் செயல்கள் (முத்தி) நடந்நு கொண்டிருக்கும். அவர்கள் சீடர்கள்
அலிப்லாம் மீமைக்கண்டவர்கள். அதைபற்றி அறிவு சம்மதிக்க பேசுவார்கள். வாக்குவாதம் என்றுமே செய்ய மாட்டார்கள்.
எது எப்படியாயினும், உலகில் இன்று ஏற்பட்டுள்ள குழப்பங்கள், திரள் திரளாக மக்கள் மடிவது ஆகியவற்றிற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். யார் கல்கி என்பது இதன் அடிப்படையில் முக்கியமில்லை. “சகலத்தையும் உள்ளடக்கும் ஒரு மாபெரும் கூட்டங் கூட்ட வேண்டியதன் தவிர்க்க இயலாத தேவை உலகளவில் உணரப்படும் நேரம் வந்தே தீரும்.” “மண்ணுலகின் அரசர்களும் மன்னர்களும் அதில் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்வதோடு, அதன் ஆலோசனைகளில் கலந்துகொண்டு, மனிதரிடையே உலகின் மாபெரும் சமாதானத்திற்கு அடித்தளம் அமைக்கத் தேவையான வழிவகைகளைச் சிந்திக்க வேண்டும்.” (பஹாவுல்லா)
உலகில் எத்தனையோ பேர் தங்களை கல்கி அவதாரம் என சொல்லிக் கொண்டாலும் அவரை கல்கி அவதாரமாக ஏற்றுக்கொள்வதால் மனிதனுக்குள் எந்த ஒரு மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. கல்கி அவதார வருகையின் நோக்கம் மனிதன் இழந்துபோன ஜீவனை மறுபடியும் பெற வேண்டும் என்பதே. மனிதன் மரிப்தற்காக உண்டாக்கப்படவில்லை, அவன் நித்தியமாக வாழ்வதற்காகவே கடவுளால் உண்டாக்கப்பட்டான். 1969 ஜூ21ல் மனிதன் முதன் முதலாக சந்திரனில் பதித்த அன்று கடவுள் பூமிக்கு வந்துவிட்டார் என அறிவித்தவர் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா. இவருடைய போதனைகளை ஏற்று வாழ்ந்துவரும் நாங்கள் மனிதன் இழந்துபோன ஜீவனை மறுபடியும் பெற்றுக்கொண்டான் என தைரியமாகச் சொல்லி வருகிறோம். எனவே கல்கி அவதாரத்தின் வருகையின் நோக்கம் எங்களில்நிறைவேறிவிட்டது.அதை அதிவிரைவில் நிரூபிப்பார்
கல்கி மகா அவதாரம் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா,.
மிக்க நன்றி. தயவு செய்து ஒரு முறை bahai.org சென்று, கடவுள் ஒருவரே, சமயங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன மற்றும் மனிதகுலம் ஒரே குடும்பம் என்னும் அடிப்படையில் உலகளாவிய நிலையில் ஒரு புதிய நாகரிகத்தை ஸ்தாபிப்பதற்காக பஹாய்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றி ஆராயவும்.
இங்கே உரையாடல்களை படித்தேன். ஒரு விஷயத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கல்கி என்பவர் கிருஷ்ணர், நபி, புத்தன், ஏசுதான் என்று ஒவ்வொருவரும் சொல்லியுள்ளனர். எல்லாமே சரிதான். போகர் தன்னுடைய ஜெனன சாகரம் நூலில் (பா:324) “ஆதியில் நந்தியாகி அயன்மாலானேன் சுப்பிரமணிய ரூபமாகி இந்திர சேனாதிபதியாகி கிருஷ்ண வடிவாகி நபி ரூபமாகி இப்பராபரத்தில் போகரென வாழ்ந்திட்டேன்”. இவர்கள் எல்லோருமாக தானே எடுத்த அவதாரங்கள் ஒருவரே என்பதை போகரே உணர்த்துகிறார். குழப்பம் வேண்டாம். கல்கி என்பவர் 1965-66 ஆண்டில் ஸ்ரீ வீரபோக வசந்தராயர் என்ற பெயரோடு ஆந்திராவில் பிறந்துவிட்டார். வெளியுலகிற்கு புலப்படவில்லை. அவர் ஈசனிடம் சக்திகள் பெற்ற ஆண்டுதான் முதல் சுனாமி வந்தது. கலியுகம் முடிய இன்னும் பன்னெடுங் காலம் போகவேண்டும். அதுவரை அவ்வப்போது தர்மத்தை செப்பனிட ஓவ்வொரு அவதாரங்கள் வந்து போகும். இப்போது நடப்பது சத்திய யுகம் என்றால் அதர்மங்கள் தலைவிரித்து ஆடக்கூடாது அல்லவா?
இன்று உலகம் முழுவதும் பஹாய்கள் உலகில் ஒற்றுமைக்காகவும், அமைதிக்காவும் பாடுபடுகின்றனர். நீங்களும் அதையே செய்யுங்கள். போதும்.
மனிதன் எதையுமே தாமதமாகவே புரிந்துகொள்கிறான்.ஆகவே தான் ,கோவிட் 19 என்ற நுண்ணுயிரிகள் தீவிரமாக பாடம் கற்பித்து வருகிறது! ஒரு புதிய உலக அமைப்பு முறை அல்லது உலக பொது நல அரசு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட தங்களது பிரயத்தனங்கள் வெற்றி பெற இதயபூர்வமான வாழ்த்துக்கள்!