நன்றி: திரு ஆ.அந்தோணிசாமி
(புவியூரை புகழூர் சென்றடைந்த ஒருவர்
மேலுலகிலிருந்து பேசினால்…….)
விண்ணுலகை அறியீரோ!
எனது இறுதி ஊர்வலம்…
மண்ணுலகிலோ எனது பிரிவு- உடலைச் சுற்றி என் உறவுகள்
விண்ணுலகிலோ என் வரவு- கண நேர இருளுக்குப் பின்
வாசலொன்று என் முன் விரிவாய்த் தெரிந்தது-
ஆண்டுகள் பலவாய் மறைந்து விட்ட
அன்பர்களும், நண்பர்களும் புடைசூழ
விரிவான வாசலில் விரித்த கரமாய் நின்றனர்
எங்கு நோக்கினும் ஆனந்த கண்ணீர்
சோதனையும், வேதனையும்,
இன்னலும், இடர்பாடும், துயர்பாடும்
மண்ணுலகம் வழங்கும் காயங்கள்
விண்ணுலகின் உச்சத்திலோ, அவை யாவும் மாயங்கள்
இறுதியில் என் நிரத்தர இல்லத்தில் என் பிரவேசம்.
பயணம் முடிந்த ஆனந்தம்- அந்த இல்லத்தில் என்றும் சுகந்தம்
ஆணடவரின் கனிவான புன்னகையின் பார்வை தெரிகிறது-இனி
அதுவே எனக்கு நித்திய போர்வை
வாழ்வில் முதன் முதலாக அக் கிருபைதனை உளமார உணர்ந்தேன்.
நான் மண்ணுலகில் இனி இல்லை- அங்கே
அனைவரின் புலம்பல் தெரிகிறது
கண்ணீரைத் துடையுங்கள்-
எனது வானுலக இல்லத்திலிருந்து
உங்கள் மேல்தான் இனி என் பார்வை
உங்கள் முகத்தின் மீது தவழ்ந்திடும்
ஒரு மென்மையான குளிர்காற்று-
மெல்லிய மழைத்தூரல்-இவை யாவும்
நாம் மீண்டும் ஒன்றிணைவோம்
என்பதற்கு நான் அனுப்பும் அடையாளம் -அறியீரோ!
காலஅளவில் கண நேரமே மண்ணுலக வாழ்வு அப்போது
அது முடிந்து எனக்கு விண்ணுலக இல்லமே இப்போது