காதலுக்கு கண்ணில்லை…


காலஞ்சென்ற சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டு ஒன்று “காதலுக்குக் கண்ணில்லை காதில்லை கேளாயோ,” எனும் வரியோடு ஆரம்பிக்கின்றது. ஒரு வகையில் இது உண்மையே. வாலிப வயதில் இயற்கையின் உந்துதலுக்கு வயப்பட்ட குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பாகவே ஏற்படக்கூடிய ஈர்ப்புச் சக்தி்யைக் காதல் எனக் கூறுகின்றோம். ஆனால் மிருகவியல்பான இவ்வீர்ப்புச் சக்தியை அன்பு எனக் கூறுவது தவறாகும். அன்பு திடீரென ஏற்படாது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளும் போது, அதாவது ஒருவர் மற்றவரின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டு, அக்குறைநிறைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் அக்கறையே அன்பாகும்.. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்புச்சக்தியோடு இவ்வித அன்பு சேரும்போது அங்கு உண்மையான காதல் உருவாகின்றது.

வெறும் காதல் லௌகீகமானது, எல்லைக்குட்பட்டது. அன்பு ஆன்மீகமானது. அன்பு என்பது “unconditional” அதாவது அது (நிபந்தனையற்றது) பாகுபாடு பார்க்காதது, எல்லையற்றது, எதிர்பார்ப்புகள் இல்லாதது. நல்லவர் கெட்டவர், என்னுடையது உன்னுடையது, அழகு குரூபம் என்ற பாகுபாடெல்லாம் உண்மையான அன்பிற்குக் கிடையாது. அதற்கு வயது வரம்பெல்லாம் கிடையாது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ், அன்பே உலக மகா சக்தி, அன்பே சிவம் என்பதெல்லாம் இவ்வித விதிகளுக்கு அப்பாற்பட்ட அன்பையே குறிப்பிடுகின்றன. ஆனால், இங்கு ஒரு விஷயத்தை நாம் மறுக்க முடியாது. பொதுவாக மனிதர்களுக்கிடையில் அன்பு எனும் ஒன்று இருந்தபோதும் திருமணமானவர்களுக்கிடையில் ஆன்மீக ரீதியான அன்பு என்பது உடல் சார்ந்த ஈர்ப்பு சக்தியோடு இணைந்திருக்க வேண்டும், அதாவது காதல் எனும் ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். உடலும் உள்ளமும் சேர்ந்ததே உண்மையான காதலாகும்.

பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பஹாய் உலகை வழிநடத்திய பஹாவுல்லாவின் மூத்த புதல்வரான அப்துல்-பஹா, அன்பு என்பது நான்கு விதமாக பிரிக்கப்படலாம் எனக் குறிப்பிடுகின்றார். அதாவது, கடவுள் மனிதன் மீது கொள்ளும் அன்பு, மனிதன் கடவுள் மீது கொள்ளும் அன்பு, மனிதன் மனிதன் மீது கொள்ளும் அன்பு மற்றும் கடவுள் தமது படைப்பினங்களில் வெளிப்படும் தமது சுயபிரதிபலிப்பின் மீது கொண்டுள்ள அன்பு. கடவுள் தமது படைப்பினங்களின் மீது கொள்ளும் அன்பை கருணை எனக் கூறுகின்றோம். மனின் சகமனிதன் மீது கொள்ளும் அன்பை பாசம், நேசம், காதல் என கூறுகின்றோம். தாய் தன் சேய்மீது கொள்ளும் அன்பு பாசமாகும். இது ஒரு தாய் தன் சேயின் மீது கொள்ளும் சுயநலம் கலந்த அன்பாகும். ஒரு குடும்பத்தினர் தமது பிற குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளும் அன்பும் இத்தகையதாகும். சினேகிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கொள்வது நேசமாகும். இதிலும் சுயநலம் கலந்துள்ளது. பருவமடைந்த ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு காதலாகும். காதல் உணர்வில் காம உணர்வு கலந்தே இருக்கும். இல்லையெனில் அங்கு ‘காதல்’ பிறக்க வழியில்லை. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இது இயல்பாகவே, உள்படையான ஓர் உணர்வாகும். இவ்வுணர்வு பகுத்தறிவிற்கு உட்பட்ட ஓர் உணர்வல்ல.

வெறும் காதலைப் பொருத்தமட்டில் அது பல காரணங்களின் அடிப்படையில் ஏற்படக்கூடும். ஒரு வகையான காரணத்தைத் தமிழ் சினிமாப் படங்களில் காணலாம். அதில் காதல் வயப்படும் ஆண் வாலிப முறுக்கு மிக்கவராகவும், நல்ல உயரம் மற்றும் அழகுமிக்கவராகவும் இருப்பார். பெண்ணைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அவர் உலக அழகி போன்று இருக்கவேண்டும். இல்லையென்றால் காதல் ஏற்பட வழியில்லை. குட்டையாக, கருப்பாக, சாதரமான பெண்களுக்கெல்லாம் தமிழ்ப் படங்களில் காதலுக்கு வழியில்லை போலும். வாலிப வயதைத் தாண்டியவர்களுக்குச் சினிமாப் படங்களில் வாழ்க்கை என்பதே இல்லை எனும் விதத்தில் படங்களின் ஹீரோக்களின் மீதே கவனம் மையப்படுத்தப்படுகின்றது. அதாவது, சினிமாவைப் பொருத்த மட்டில் அழகற்றவர்களுக்கு வாழ்க்கையே கிடையாதது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. “உண்மைக் காதல்” எனும் வார்த்தைகளை வேறு அவ்வப்போது நாம் இச்சூழலில் செவிமடுக்கின்றோம். அவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்னவென்பது தெரியுமா என்பது கேள்விக்குறியே. இப்படிப்பட்ட காதல் குறித்து சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டின் வரிகளை எழுதியவர் இன்னொரு வார்த்தையையும் சேர்த்து எழுதியிருக்கலாம், அதாவதுகாதலுக்குக் கண்ணில்லை, காதில்லை என்பதோடு “மூளையும்” இல்லை என்று எழுதியிருக்கலாம்.

இப்படி இந்த சினிமா காதலைத் தினசரி நமது தொலைக்காட்சியிலும், வீடியோக்களிலும் காணும் இளவயதினர் மனதில் எவ்வித எண்ணங்கள் பதிகின்றன? அவர்கள் அறியாமல் அவர்களின் மனங்கள் எவ்வித பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன என்பது பொதுவாக அறியப்படவில்லை. இவ்வேளையில் Insidious” எனும் ஆங்கில வார்த்தை ஞாபகத்திற்கு வருகிறது. சிறு குழந்தைகள் இவ்வித சினிமாக்களைப் பார்க்கும் போது அவர்களின் மனங்களில் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை கருத்துகள் எத்தகையவையாக இருக்குமெனத்  தெரியவில்லை. மனித வாழ்விற்கு அஸ்திவாரமான அக அழகு, அதாவது மனித நற்பண்புகள் பற்றி அறிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்கள் புற அழகு குறித்தே பெரும்பாலும் தெரிந்துகொள்கின்றனர். முளைத்து மூன்று இலை விடுவதற்குள் இ்ப்போதெல்லாம் காதல் செய்யவும் நமது சிறார்கள் கிளம்பிவிடுகின்றனர். பிற்காலத்தில் தங்கள் சிறு வயதில் தாங்கள் அடைந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர்களின் வாழ்கையை அமைத்துக்கொள்ளவும் முயல்கின்றனர். இதன் விளைவு என்ன? முதல் கோணல் முற்றும் கோணல்.

இந்தியாவில் விவாகரத்து எனும் வார்த்தை அபூர்வமானது ஆனால், இன்று அங்கும் 2 – 5 விழுக்காடு திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மலேசியா போன்ற நாடுகளில் 10 – 20 விழுக்காடு திருமணங்கள் முறிந்து விடுகின்றன. அமெரிக்காவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அங்குப் பாதிக்குப் பாதி திருமணங்கள் பொசுங்கிப் போய்விடுகின்றன. பல மேற்கத்திய நாடுகளில் திருமணம் செய்துகொள்வது கூட குறைந்து “companionate marriage” எனும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் முறை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒருவரை ஒருவர் பிடிக்காது போகும்போது அவரவர் வழியே போய்க்கொள்ளலாம். அமெரிக்காவில் ஒரு பழமொழி (அல்லது புதுமொழி?) உண்டு. அதாவது, “ஒரு காலத்தில் பெற்றோர்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தன. ஆனால், இன்று குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள்,” என்பது. இத்தகைய விளைவுகளினால் திருமணம் என்றாலே ஒரு விதமான பீதி (phobia) ஏற்படுகின்றது.

ஒரு காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் இல்லைதான். விவாகரத்து என்பது ஒரு கெட்ட வார்த்தையாக இருந்தது. ஆனால் அதற்காக அந்தத் திருமணங்களும் இக்கலாத்திற்குச் சரியென கொள்ளமுடியாது. காரணம், கடந்தகாலங்களில் ஆண்கள் சாம்ராஜ்யம் நடந்தது. கவன் வைத்ததே சட்டம் மற்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் (அல்லது கள்ளனானாலும் கணவன் மற்றும் புல்லனானாலும் புருஷன்?), கணவனே கண் கண்ட தெய்வம் என்றெல்லாம் போதனை வழங்கப்பட்டது. அந்தக் காலத்திற்கு இதெல்லாம் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று பெண்களும் ஆண்களுக்குச் சரி நிகர் சமமாக வாழ்கின்றனர், வேலைக்குச் செல்கின்றனர், சமூக விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த நிலைக்குத் தங்களை ஈடுபத்திக்கொள்ள முடியாத ஆண்களாலும், அதே வேளை தங்களுக்குக் கிடைத்துள்ள இப்புதிய சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படு்த்திக் கொள்ளாத பெண்களாலும் திருமணங்கள் முறிந்து போகின்றன.

இதற்கு முடிவுதான் என்ன?

பஹாய் திருமொழிகளில் ஒரு குறிப்பு உண்டு, “மனிதனை விலைமதிப்பற்ற இரத்தினங்கள் நிறைந்த ஒரு சுரங்கமாகக் கொள்வாயாக. கல்வி மட்டும் தனியே அதன் பொக்கிஷங்களை வெளிக்கொணரச் செய்து மனிதர்கள் அதன் வாயிலாக பயனடையச் செய்ய முடியும்,” என்பது ஏறக்குறைய அதன் கருத்து. இ்ங்குக் கல்வி என்பது தெய்வீகப்ண்புகள் பற்றிய ஆன்மீகக் கல்வியைக் குறிக்கின்றது. சிறு வயதிலேயே இத்தகைய கல்வியை வழங்குவதன் மூலம் நமது குழந்தைகள் சரியான உட்பார்வைகள் பெற்று, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இத்தகைய கல்வி சிறு வயதிலேயே வழங்கப்பட வேண்டும். வளர்ந்து வாலிப வயதை அடைந்த பிறகு இதைச் சரி செய்ய நினைப்பது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும். இன்று உலகம் முழுவதும் பஹாய்கள் தங்கள் நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய கல்வியைத் தங்களைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கு வழங்கிட முயன்று வருகின்றனர். குழந்தைகள் நற்பண்புகள் பற்றி தெரிந்துகொண்டும் தங்கள் ஆன்மீக ஆற்றல்களை அப்போதிருந்தே வளர்த்துக் கொள்ளவும் ஆரம்பிக்கின்றனர். தனிநபர் மற்றும் உலக பிரச்சினைகள் உடனே தீர்க்கப்பட முடியாதவை. சிறுக சிறுகவே இது மாற்றப்பட முடியும். ஆனால், அதற்கான முயற்சிகள் இப்பொழுதிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் மீது மீண்டும் புது தாக்குதல்கள்


ஜூலை 25

இரான் நாட்டின் சிறு பான்மை சமூகங்களில் ஆகப் பெரியதும், நீண்டகாலமாகவே ஒடுக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ள பஹாய் சமூகத்தின் மீதான தாக்குதல்களை இரான் நாட்டின் இஸ்லாமிய அரசு அதிகரித்து வருகின்றது, என அச்சமூகத்தின் பரிந்துரையாளர்கள் கூறுகின்றனர்.

சமீப காலமாக இரான் நாட்டின் பஹாய் சமய உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் இடுகாடுகள் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களின் வங்கி சேமிப்பு கணக்குகள் ஆராயப்பட்டும் வருகின்றன.

ஜூலை மாதம் 18ம் தேதியன்று, இஸ்பஃஹான் மற்றும் புருஜிர்ட் நகரங்களில் உள்ள இரண்டு பஹாய் இடுகாடுகள் சீரழிக்கப்பட்டுள்ளதாக இரான் நாட்டின் எதிர்கட்சி செய்தித்தலமான ரஹானா அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இஸ்பாஃஹான் நகரத்தில் உள்ள இடுகாட்டின் நுழைவாயிலில் அத்துமீறி தடுப்புகள் வைக்கப்பட்டன. இவ்விஷயம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது ஆனால் அவ்வதிகாரிகள் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது அரசாங்கத்தின் சார்பாக பஹாய் இடுகாடுகளை சீரழிப்பதற்கான மறைமுகமான திட்டத்தின் ஒரு பகுதி என ரஹானா பத்திரிக்கை நிருபர் கூறினார்.

மேற்கொண்டு, பிர்ஜான்ட் நகரில் உள்ள வங்கிகள் பஹாய்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆராய வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளன என எதிர்கட்சி சார்பான ஹிரானா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இ்ந்த மறைமுக ஆய்வுகள் இரான் நாட்டின் இண்டெலிஜன்ஸ் அமைச்சினால் ஆணையிடப்பட்டும் பஹாய் வணிகர்கள் மற்றும் அவர்களின் முஸ்லிம் அண்டைவீட்டினரை சென்று சந்தித்தலையும் இது உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விசாரனைகளின் வாயிலாக பெறப்படும் தகவல்களைக் கொண்டு அதிகாரிகள் என்ன செய்திட திட்டமிட்டுள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை.

28 ஜூன் அன்று, இவெல் எனும் இடத்தில் பஹாய்களுக்கு சொந்தமான 50 வீடுகள் தீயிடப்பட்டும் பின் தரைமட்டமாக்கப்பட்டும் உள்ளன. பஹாய்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் குறிவைக்கும், அதிகாரபூர்வமான அனுமதியைப் பெற்றுள்ள அடக்குமுறை திட்டங்களே இவை என பஹாய் உலக செய்தி சேவையகம் கருத்து தெரிவித்துள்ளது.

“பஹாய்கள் இந்த இடத்தில் 100 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர் மற்றும் இங்கு ஒரு காலத்தில் பெரிய பஹாய் சமூகம் ஒன்று இருந்தது,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாட்டின் பிரதிநிதியான டையேன் அலாயி கூறினார்.

“ஆனால், இரான் புரட்சிக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து, 1983ல், ஏறக்குறைய 30 குடும்பங்கள் இங்கும் அதற்கு அருகில் இருந்த கிராமங்களில் இருந்தும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அது முதற்கொண்டு அவர்கள் சட்டபூர்வமாக இதற்கு தீர்வு காண முயன்றுள்ளனர். ஆனால் எந்த முடிவும் காணப்படவில்லை. இவர்கள் கோடைக்காலங்களில் தங்கள் நிலங்களின் விளைச்சல்களை அறுவடை செய்வதற்காக மட்டுமே இங்கு வந்துசெல்கின்றனர்,” என அவர் மேலும் கூறினார்.

ஒரு காலத்தில் ஷீயா இஸ்லாத்தின் ஒரு சிறு பிரிவு என நம்பப்பட்ட பஹாய் சமயம் ஒரு தன்னிச்சையான சமயமாகும். அதை ஷீயா மதகுருக்கள் இஸ்லாத்திற்கு எதிரான மதப்பிரிவு என குற்றஞ்சாற்றியுள்ளனர். இருந்த போதும் சில இரான் நாட்டின் மறுசீரமைப்பு கொள்கையுடைய மதகுருக்கள் பஹாய்களோடு இணக்கம் காணவும் கடந்த காலங்களில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு தங்கள் வருத்தத்தையும் தெரிவிக்கவும் செய்துள்ளனர்.

எகிப்து உட்பட பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் சுன்ன இஸ்லாமிய தீவிரவாதிகளின் மத்தியில் பஹாய்கள் இத்தகைய எதிர்ப்புக்களை அனுபவித்து வருகின்றனர்.

— லோஸ் எஞ்சலிஸ் டைம்ஸ்

இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது ஏன்?


பஹாய்கள் இரான் நாட்டில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். இது கடந்த 160 வருடங்களாகவே நடந்து வருகிறது. பஹாய்கள் அமைதி விரும்பிகள். உலக மக்கள் ஆன்மீக ரீதியில் தன்மைமாற்றம் பெற வேண்டும், அவர்கள் தங்கள் படைப்பின் குறிக்கோளை உணரவேண்டும் அதன் வாயிலாக உலகில் சமயங்கள் ஒன்றுபட்டு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் எனும் நோக்கில் பஹாய்கள் பாடுபடுகின்றனர் மற்றும் மனிதகுலத்திற்கு தங்களால் இயன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் தங்கள் சமயத்தின் பிறப்பிடத்திலும் வேறு பல நாடுகளிலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது ஏன்? தற்போது இரான் நாட்டில் பல பஹாய்கள் மரண தண்டனைக்குள்ளாகி மேலும் பலர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு பலவித பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஏன்?

இக்கேள்விக்கான பதிலை பல கோணங்களிலிருந்து ஆராயலாம். முதலாவதாக சமய ரீதியில் இதைக் காண்போம்.

உலகின் பெரும்பாலான சமயங்கள் ஏதோ ஒரு வகையில் அவற்றின் ஸ்தாபகரின் மறைவுக்குப் பிறகு அதே ஸ்தாபகர் அல்லது அவதாரம் மறுபடியும் உலகில் தோன்றுவர் என போதித்துள்ளன. உதாரணமாக கிருஷ்னர் “கல்கி விஷ்ணு யாஷா” எனும் பெயரில் கலி யுகத்தின் முடிவில் அவதரித்து உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவார் என்பது ஐதீகம் மட்டுமல்ல பகவத் கீதையிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. புத்தரைப் பொருத்த மட்டில் அவர் புத்தர்களின் வரிசையில் நான்காவது புத்தர் எனவும் பிற்காலத்தில் ஐந்தாவது புத்தராக, “மைத்ரேயி அமிதபா” எனும் நாமத்தில் மறுபடியும் பூமியில் தோன்றுவார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். யூத மதத்தினர்களும் மோசஸ் குறித்து இது போன்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். கிருஸ்தவர்களும் இயேசு கிருஸ்து “இறைவனின் ஒளியில்” மறுபடியும் பூமியில் தோன்றி தமது விசுவாசிகளை இரட்சிப்பார் என எதிர்ப்பார்க்கின்றனர். இஸ்லாம் சமயத்தின் ஒரு பிரிவினரான சுன்ன வர்க்கத்தினரும் இயேசு மறுபடியும் தோன்றுவார், அதுவே கியாமத் நாள் எனவும் நம்புகின்றனர். அதே போன்று ஷீயா முஸ்லீம்கள் தங்களின் 12வது இமாம் ஆன இமாம் மெஹ்டி மறுபடியும் தோன்றுவார் என கூறுகின்றனர். இந்த நம்பிக்கையில் முதன்மையாக வீற்றிருப்பவர்களுள் தற்போதைய இரான் நாட்டு அதிபரான அஹ்மதிநிஜாட்டும் ஒருவராவார்.

ஆனால், அந்த அந்த தூதர்கள் எங்கு, எப்படி, எச்சூழ்நிலையில் தோன்றுவர் என்பன போன்ற கேள்விகளுக்கு அவற்றை போதிக்கும் திருநூல்கள் தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே, விசுவாசிகள் தாங்களே தங்கள் மனதில் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் இறைத்தூதர் இவ்வாறுதான் தோன்றுவார் அல்லது தோன்றவேண்டும் என முடிவு செய்து அதையே காலங்காலமாக நம்பி வருகின்றனர். யூதர்கள் இயேசு நாதரை மறுத்து அவர் மரணமுறுவதற்கு காரணமாக இருந்ததும் இவ்வித கற்பனையான நம்பிக்கைகளே ஆகும். இதை ஆங்கிலத்தில் ‘figments of imagination’ என கூறுவர். அவர் (இயேசு) டேவிட்டின் சிங்காதனத்தில் அமர்ந்து உலகை செங்கோல் செலுத்துவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால் அவரோ வெறும் மாட்டுத் தொட்டிலில் பிறந்தார். அவரது தந்தையோ ஒரு சாதாரன தச்சர். இதை காரணமாகக் கொண்டு அவரை கேலி செய்து பின்னாளில் அவர் சிலுவையில் அரையப்பட்டு மரணமும் அடைந்தார். ரோம் நாட்டில் அவரது விசுவாசிகள் பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பௌத்த சமயம் இந்தியாவில் உதித்த போது அது இந்திய நாட்டில் நிலைபெறாது சீன, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சியும் கண்டது. இந்திய நாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கிருஸ்துவ சமய நூலான பழைய ஏற்பாட்டிலும் ஆபிரஹாம் ஒரே கடவுள் கோட்பாட்டை போதித்த போது அவருக்கு நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆக, ஒரு புதிய சமயம் தோற்றம் காணும் போது அது மக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மற்றும் அவற்றின் விசுவாசிகள் பலவித கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்புதிய சமயத்தின் ஒளி சிறுக சிறுகவே வெளிப்படுகிறது அதனு உண்மையும் சிறிது சிறிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

கிருஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் பார்சி மதத்தினர் போன்று பஹாய்கள் “திருநூலின் மக்களாக” (People of the Book) இஸ்லாத்தில் கருதப்படுவதில்லை. மற்ற சமயங்கள் போன்று பஹாய்களும் ஒரு கடவுள், கியாமத் நாள், ஆன்மாவின் நெறிமுறை சார்ந்த தீர்ப்பளிப்பு, சாத்தானிய பன்பு போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்த போதிலும் பஹாய்கள் திருநூலின் மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு முதன்மையான காரணம், முகம்மது நபியவர்களுக்கு பிறகு வேறு இறை தூதர்கள் தோன்ற போவதில்லை எனும் ஒரு கருத்தாகும். ஒரு வகையில் இக்கருத்து உண்மைதான். முகம்மது நபியவர்கள் நபிகள் வரிசையில் இறுதியானவர். அவரே “ஹாத்திமுந் நபியீன்” நபியாவார். அதாவது அவர் ‘தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியானவர்’. இதை பஹாய்கள் மறுக்கவில்லை. ஆனால், கடவுள் அவதாரங்கள் இருவகைப் படுவர்; தீர்க்கதரிசிகள் மற்றும் அவதாரங்கள் (ரசூல்கள்). கடவுளின் முழு அவதாரங்களான ரசூல்கள் இனி தோன்றமாட்டார்கள் என எங்குமே குறிப்பிடப்படவில்லை. பார்க்கப்போனால் இஸ்லாமிய மறைகளில் வருங்காலத்தில் அத்தகைய தூதர்கள் தோன்றுவதற்கான பல குறிப்புகள் உள்ளன. இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1260ல் இத்தகைய தோற்றம் ஒன்று நடைபெறும் என்பது ஷீயா வர்க்கத்தினரின் மரபாகும். அதாவது அவர்களின் இறுதி இமாமான இமாம் முகம்மது இப்ன் அல்-ஹசான் இயேசு கிருஸ்துவோடு ஒன்றாக இவ்வுலகில் தோன்றுவார் எனவும், இஸ்லாத்தை இவ்வுலகில் மறுஸ்தாபிதம் செய்வார் என்பதும் நம்பிக்கையாகும். இதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய ஹதீஸ்களில் நிறையவே உள்ளன.

ஹி1260ல் அதாவது அதற்கு இணையான ஆங்கில வருடம் 1844ல் முகம்மது அவர்களின் திருமகளாரான பாத்திமா அம்மையாரின் வழியில் உதித்தவரான சிய்யிட் அலி முகம்மது அல்லது ‘பாப்’ அதாவது ‘வாசல்’ எனும் பெயர் கொண்டவர் தாமே அத்தகைய இறைத் தூதர் என அறிவித்தார். இரான் நாடே அல்லோலகல்லோலமாகியது. சில மதிப்பீடுகளின்படி இரான் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பாப் அவர்களின் விசுவாசிகளாயினர் என கூறுப்படுகின்றது. ஆனால், திருமறைகளில் பல நிரூபனங்கள் இருந்த போதும் அதற்கு முன் உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களுக்கும் நிகழ்ந்தது போன்று பாப் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு இறுதியில் 750 சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையானார்.

பாப் அவர்களுக்கு ஏற்பட்ட இம்முடிவுக்குக் காரணம், அவர் முன்கூறப்பட்டதுபோல் இஸ்லாம் சமயத்தை மறுஸ்தாபிதம் செய்யாமல் ஒரு புதிய சமயத்தையே தாம் தாங்கி வந்திருப்பதாக கூறியது ஒரு முக்கிய காரணமாகும். (பாப்’யி சமயத்தின் வரலாற்றை விவரிக்கும் நபில் அவர்களின் The Dawnbreakers நூலை காணவும்) புதிய சமயத்தைக் கொண்டுவந்தது ஒரு பக்கமிருக்க அவர் இஸ்லாத்தின் சமயக்காலகட்டம் முடிந்து தமது அறிவிப்பால் ஒரு புதிய சமயகாலகட்டம் ஆரம்பித்துள்ளது எனவும் கூறினார். மேலும் பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் கடவுள் அவதாரத்திற்கான முன்னோடி மட்டுமே எனவும் கூறினார். பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு 1863ல் பாப் அவர்களின் விசுவாசிகளுள் ஒருவரான பஹாவுல்லா பாப் அவர்கள் அறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட கடவுளின் அவதாரம் தாமே என அறிவித்தார். (பாப் அவர்களைப் போன்று பஹாவுல்லா கொல்லப்படாவிடினும் அவர் தேசப்பிரஷ்டத்திற்கு உள்ளாகி இரான், இராக், துருக்கி மற்றும் இறுதியில் 1868ல் ஒட்டமான் அரசின் சிறை நகரான ஆக்கா நகருக்கு கைதியாக அனுப்பப்பட்டார். இன்று பஹாய்களின் புனித ஸ்தலம் அன்று பாலஸ்தீனம் எனவும் இன்று இஸ்ரேல் எனவும் உருவெடுத்துள்ள நாட்டிலேயே உள்ளது. பாப் அவர்களின் விசுவாசிகள் பின்னாளில் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டு ‘பஹாய்கள்’ என வழங்கப்படுகின்றனர். திருக்குர்’ஆனுக்குப் பதிலாக பஹாய்கள் பாப் மற்றும் பஹாவுல்லா எழுதிய புனித எழுத்துக்களை தங்கள் புனித நூல்களாக கொண்டுள்ளனர். பஹாய் சமூக விதிமுறைகள் இஸ்லாத்தின் சமூக விதிமுறைகளுக்கு சற்று மாறுபட்டவை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.) உதாரணமாக பஹாவுல்லா ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கின்றார். இருபாலருக்கும் கல்வி வாய்ப்புக்கள் சமமாக இருக்கவேண்டும் அல்லது பெண்களுக்கு இதில் முதன்மை வழங்கப்பட வேண்டும் என கூறுகின்றார். தாய்மைப் பேறு பெண்களுக்கு உரியது. அத்தாய்களுக்கு தக்க கல்வியறிவு இல்லையெனில் அவர்கள் எவ்வாறு நல்ல தாய்மார்களாக இருக்கமுடியும்? இது போன்றே பஹாவுல்லா இக்காலத்திற்கு தேவையான பல கோட்பாடுகளை போதித்துள்ளார். ஆனால், பழமை விரும்பிகளுக்கு இவை யாவும் ஏற்பு இல்லை. இரான் நாட்டில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இதை தெளிவாகவே விளக்குகின்றது.

மேலும், பஹாவுல்லா இனி மக்களுக்கு இடையீட்டாளர்களாக மதகுருக்கள், மதத்தலைவர்கள், புரோகிதர்கள் போன்றோர் இனி தேவையில்லை என விதித்துள்ளார். கல்வியறிவு பெருகியுள்ள இக்காலத்தில் மக்கள் அனைவரும் கடவுளின் குறிக்கோளை தாங்களாகவே படித்து அறிந்துகொள்ளலாம, இடையீட்டாளர்கள் இனி தேவையில்லை. அதாவது பாதிரிகள், முல்லாக்கள் போன்றோர் தேவையில்லை.

மக்கள் சுயமாக சிந்தித்து எதையும் தேர்வு செய்ய வேண்டும் என பஹாவுல்லா போதிக்கின்றார். ஆனால், முக்கிய சமயங்களில் இது ஊக்குவிக்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் எனும் நிலை உள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளான உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் இது விளங்கும். உதாரணமாக ஐரோப்பாவின் இருள் காலத்தைக் குறிப்பிடலாம். மதகுருக்கள் வைத்ததே சட்டம். கேள்வி கேட்காமல் பின்பற்றவேண்டும்.

ஆக, இவ்விதமாக பஹாய்கள், குறிப்பாக இரான் நாட்டில் ஏன் எதிர்ப்புக்குள்ளாகின்றனர் என்பதற்கு பல காரணங்களைச் சுட்டலாம். ஆனால், இவ்வெதிர்ப்புகள் காலப்போக்கில் சூரியனைக் கண்ட பனி போல் விலகி, இயேசுநாதர் கூறியது போல், இவ்வுலகமும் கடவுளின் சுவர்க்கத்தைப் போன்று ஆகும் என்பது நிச்சயமே.