டெஸ்மன்ட டுட்டு மற்றும் யோஸே ராமொஸ்-ஹோர்த்தா பஹாய் கல்வியாளர்களை விடுவிக்கவேண்டும் என தாங்களும் குரல் கொடுக்கின்றனர்


(Desmond Tutu and Jose Ramos-Horta join calls for release of Baha’i educators)

26 செப்டம்பர் 2011

நியூ யார்க் — “இரான் நாட்டில் பஹாய் கல்வியாளர்கள் பலர் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்படும் அதே வேளை, இரண்டு நோபல் பரிசாளர்கள் , அந் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை “ஐரோப்பாவின் இருள்காலத்தோடு” அல்லது “ஸ்பேய்ன் நாட்டின் வன்மத விசாரனைகளோடு” ஒப்பிட்டு அதனை வன்மையாக கண்டித்து பேசியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க கேப் டவுனின் ‘ஏங்லிக்கன் ஆர்ச்பிஷப் எமரிட்டஸ்’ திரு டெஸ்மன்ட் டுட்டு, மற்றும் கிழக்கு தீமோர் நாட்டின் அதிபரான திரு யோஸே ராமோஸ்-ஹோர்த்தாவின் கருத்துக்கள், ‘ஹஃப்பிங்டன் போஸ்ட்டில்’ பிரசுரிக்கப்பட்ட கலைக்கழகத்தினருக்கான ஒரு கடிதத்தில் “அறிவுக்கெதிரான இரான் நாட்டின் யுத்தம்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ளன.”

அக்கடிதத்தில், தங்களின் கல்விசார்ந்த நடவடிக்கைகளுக்காக நீதிமன்ற விசாரனைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பஹாய்களின் மீதான குற்றச்சாட்டுகளை இரத்து செய்து அவர்களை நிபந்தனைகளின்றி விடுதலை செய்யுமாறு அவ்விருவரும் கோரியுள்ளனர்.

“கடந்த சில நூற்றாண்டுகளில் தகவல்கள் கிடைப்பதின் அதிகரிப்பு, துரிதமான கருத்துப் பரிமாற்றம், மற்றும் உலகின் பெரும் பகுதிகளில் கிடைக்கும் அனைத்துலக கல்வி வசதிகள் போன்றவை தவிர்த்து ஆக்கக்கூறுகள் வேறு எவற்றினாலும் மனிதகுலத்தின் துரித மேம்பாடு தூண்டப்படவில்லை,” என அவர்கள் எழுதியுள்ளனர்.

“ஆகவே, இருபதாம் நூற்றாண்டின் சர்வாதிகாரிகளும் கொடுங்கோலர்களும் தங்கள் மக்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி அல்லது தகவல்களை தடை செய்திடுவதன் மூலம் அவர்களை கீழ்ப்படுத்திட முயல்வது சற்று திடுக்கிட செய்வதாகவே இருக்கின்றது.”

“நீண்டகாலத்தை பொருத்த வரை இது பயனற்றது மட்டுமல்லாமல், அவர்கள் வாழும் இக்காலத்தின் நிலை அவர்களை பீதியுறவும், அவர்களிடையே உள்ள புதிய சிந்தனையாளர்களை கண்டு அச்சம் கொள்ளவும் செய்துள்ளது என்பதுபோல் தோன்றுகின்றது.”

“எவ்வித அரசியல் நோக்கங்களும் அற்ற, சமயங்கள் எல்லாவற்றின் ஒருமைத்தன்மையை உணர்ந்த, இரான் நாட்டின் பஹாய் சமயத்தின் உறுப்பினர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை தடை செய்வதே இத்தகைய பீதியுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாக இருக்கின்றது,” என அக்கடிதம் மேலும் குறிப்பிடுகின்றது.

மூல கட்டுரை

இதயம் – அன்பின் மையம்


மனிதன் பிறக்கும் போது இயல்பாக பல ஆற்றல்களை உள்ளடக்கியே பிறக்கின்றான். பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐம்புலன்கள் வெளி ஆற்றல்களாகும் மற்றும் பகுத்தறிவு என ஒட்டுமொத்தமாக அழைக்கப்படும் உள் ஆற்றல்கள் ஐந்து உள்ளன. அவையாவன, கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளுதல், ஞாபகம் மற்றும் பொதுப்புலன் எனப்படுவது. இது தவிர மனிதனும் வேறு பல ஆற்றல்களும் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளன.

பஹாய் திருவாக்குகளில் பின்வரும் வாசகம் ஒன்றை காணலாம்:

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்புப் பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”

இதன் காரணமாகவே மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து கொள்ளும் இயல்திறத்தோடு பிறக்கின்றான். மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள ஆற்றல்களிலேயே தன் படைப்பாளரை அறிந்துகொள்ளும் ஆற்றலே மகத்தான முக்கியத்துவம் கொண்டதாகும். ஒரு குழந்தை பிறக்கும் போது எவ்வாறு குறிப்பிட்ட சில இயல்திறன்களோடு பிறக்கின்றதோ, அவ்வாறே அது சில ஆன்மீக ஆற்றல்களுடனும் பிறக்கின்றது. குழந்தைக்கு பால்குடிக்க யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை. பால்குடிப்பது இயல்பான ஒன்று. குழந்தை பிறந்தவுடன் அது இயல்பாகவே பால் குடிக்கும். அதே போன்று கடவுளை, தன்னை படைத்தவரை, அறிந்துகொள்ளும் திறனை மனிதன் இயல்திறமாக பெற்றுள்ளான். ஆனால் பால்குடிக்கும் திறன் போன்று இத்திறன் தானாக வெளிப்படுவதில்லை. அது தக்க கல்வி மூலம் மேம்படுத்தப்பட, பயிற்றுவிக்கப்பட வேண்டும், மற்றும் அது மனிதனின் சுயவிருப்ப ஆற்றலையும் பொருத்த ஒன்றாகும். மனிதன் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவன் தன்னை படைத்தவரை கண்டுகொள்ளவும் வழிபடவும் முடியும். இது கடவுள் வகுத்துள்ள ஒரு மர்மமான விதி.

கடவுளை அறிந்துகொள்ளும் இயல்திறத்தோடு மனிதனுக்கு அன்பு செலுத்தும் இயல்திறமும் உள்ளது. பால்குடிக்கும் ஆற்றல்போன்று இந்த அன்பு செலுத்தும் ஆற்றலை அவனுக்கு யாரும் கற்றுத் தர வேண்டியதில்லை. இந்த ஆற்றல் எங்கும் எப்போதும் எதற்கும் எதன்மீது வேண்டுமானாலும் வெளிப்படும், அதற்கு கட்டுப்பாடு கிடையாது. நல்லதோ கெட்டதோ அது எதை வேண்டுமானாலும் விரும்பும். மண்ணாசை, பெண்ணாசை, பொண்ணாசை ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். அதே போன்று கடவுள் மீது பக்தி கொள்ளவும் முடியும். இது கடவுள் மீது கொள்ளும் ஆசையாகும்.

மனித இதயமே அன்புணர்வின் மையம் என பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன. அதே வேளை தன்னைப் படைத்தவரை அறிந்து அன்புகொள்ளவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதும் பஹாய் போதனையாகும். பஹாவுல்லாவின் பின்வரும் பிரார்த்தனையின் வாயிலாக இதை அறிந்துகொள்ளலாம்:

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர்.

அதாவது மனித படைப்பின் நோக்கமே மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து அவர் மீது அன்பு செலுத்த வேண்டும், மற்றும் அவர் வழியில் நடக்கவேண்டும் என்பதாகும். ஆனால், இந்த நோக்கம் நிறைவேறுவதும் மனிதனின் சுயவிருப்ப ஆற்றலை பொருத்த ஒன்றாகும். மனிதன் தானாக விரும்பி இதில் ஈடுபடவேண்டும். இம்முயற்சிக்கு முறையான ஆன்மீக கல்வி பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், அன்பு செலுத்தவே படைக்கப்பட்டுள்ள மனித இதயம் கடவுளின்பால் திசை திருப்பப்படாவிட்டால் அது வேறு விஷயங்களிலும் திசை திரும்பும் மற்றும் அவற்றின் மீது ஆழ்ந்த பற்றும் கொள்ளும். அன்பு செலுத்தும் ஆற்றல் ஒரு கொடி போன்றது. அதற்கு முறையாக ஒரு கொம்பை ஊண்றி வைத்தால் அது அந்த கொம்பின் மீது படரும். அவ்வாறு செய்யாவிடில் அருகில் எது இருக்கின்றதோ அதன் மீதே அக்கொடி படர்ந்துவிடும். இங்கு பொருளாசை, மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை, அதிகார ஆசை ஆகியவற்றை குறிப்பிடலாம். கடவுள் பக்தியற்ற இதயம் வேறு எதை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும். இத்தகைய ஆசைகள் குறித்து பஹாய் திருவாக்குகளில் பின்வருமாறு காணலாம்:

கருத்தின்மை மற்றும் உணர்வெழுச்சியின் மைந்தர்களே!

உங்கள் இதயங்களில் என்னைத் தவிர வேறு ஒருவர் மீதான அன்பை ஆலயிக்க செய்துள்ளீர்கள், அதனால் என் இல்லத்தில் என் எதிரி நுழைந்திட அனுமதித்து என் நண்பனை வெளியேற்றியுள்ளீர்கள்.

அதாவது நாம் கடவுள் மீது அன்பு செலுத்திட தவறினால் அந்த அன்பு வேறு பக்கம் திரும்பிவிடும். அவை தீய ஆசைகளாகவும் இருக்கலாம். கடவுள் பக்தி அல்லது கடவும் பயம் உள்ள உள்ளம் இத்தகைய ஆசைகளில் பற்று வைக்காது.

கடவுள் மீது நாம் அன்பு செலுத்துவது எப்படி? கடவுளின் படைப்பினங்களின் மீது செலுத்தப்படும் அன்பே கடவுள் மீது நாம் காட்டக்கூடிய அன்பாகும். பிறருக்காக நாம் செய்யும் சேவைகள், நமது நற்செயல்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் அமைந்தால் அதுவே கடவுளின் மீது நாம் கொள்ளும் அன்பின் வெளிப்பாடாகும். இதனால்தான் உலகெங்கிலும் உள்ள பஹாய்கள், தாங்கள் வாழும் இடங்களிலெல்லாம் பலவிதமான சேவைகளில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக, குழந்தைகளுக்கு கல்வி, ஆன்மீக கல்வி, வழங்கும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். சிறு வயதிலேயே குழந்தைகள் தங்கள் பிறவியின் நோக்கத்தை புரிந்துகொண்டால் அவர்கள் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்களுக்கும் உலகுக்கும் பயன்தரும் வாழ்க்கையை வாழலாம். இந்த உலகமும் அதன் வாயிலாக சிறுக சிறுக சீர்திருத்தம் பெறும்.

ஒற்றுமை எனும் திருக்கோயில் – மானிக்ஜியின் கேள்விகளும் பஹாவுல்லாவின் பதில்களும்


பஹாய்களுக்கு தெரிந்தவரை யூத, கிருஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்கள் தவிர்த்து வேறு சமயங்கள் எதை பற்றியும் பஹாவுல்லா தன்னிச்சையாகவும் விரிவாகவும் கருத்துரைத்ததில்லை. பார்ஸி சமயத்தவரான மானிக்ஜி என்பார் பஹாவுல்லாவிடம் ஹிந்து மற்றும் பார்ஸி (Zoroastrianism) சமயங்கள் பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு பஹாவுல்லா சில நிருபங்கள் மூலமாக பதிலளித்துள்ளார். அப்பதில்கள் அடங்கிய நிருபங்கள் மானிக்ஜியின் செயலாளராக பணியாற்றிய மிர்ஸா அபுல் பாஸில் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அந் நிருபங்களில், சமய ஒப்பீடு, ஹிந்து சமயம் மற்றும் பிற சமயங்கள் பற்றி பஹாவுல்லாவின் கருத்துரைகள் உள்ளன, ஆனால் அதில் பஹாவுல்லாவின் பதில்கள் வெளிப்படையாக இல்லாமல் பெரும்பாலும் உள்ளர்த்தம் கொண்டவையாக மிகவும் கவனமாக படிக்கப்படவேண்டிய நிலையிலும் உள்ளன. மேலும், அவருடைய பதில்கள் உலக சமயங்களின் ஒருமைத்தன்மை குறித்த புரிந்துகொள்ளலை வழங்கிடவே பெரும்பாலும் முற்படுகின்றன. இந்த கேள்விகளும் பதில்களும் உள்ள நிருபங்கள் இன்று ‘ஒற்றுமை எனும் திருக்கோயில்’ (Tabernacle of Unity) எனும் நூலின் ஒரு பகுதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்த நூலிலிருந்து ஹிந்து சமயம் குறித்து மானிக்ஜி கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இங்கு தனியே வழங்கப்படுகின்றன.

விண்ணகத் திருநூல்கள் குறித்த உங்களது கேள்வி தொடர்பாக:
அனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார். அவர் வியாதியை அறிகின்றார்; தனது தவறா விவேகத்தினைக் கொண்டு பரிகாரம் வழங்குகின்றார். ஒவ்வொரு காலமும் அதற்குச் சொந்தமான பிரச்சினையையும், ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பிரத்தியேக அவாவையும் கொண்டுள்ளது. இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது. நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளில் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப் படுத்துங்கள்.

இப்பதிலிலிருந்து உலக சமயங்களுக்கிடைய நிலவும் வேறுபாடுகளுக்கான காரணங்களை நாம் நன்கு யூகிக்கமுடிகிறது. ஒவ்வொன்றும் காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்ப உலகில் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் ஒருவித சூழ்நிலைக்கு மிகவும் ஏற்புடையாதாக இருக்கும் ஒரு சமயம் பிற்காலத்தில் உருவாகும் வேறுவிதமான சூழ்நிலைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. அது அச்சமயத்தின் குறையல்ல. அது தோன்றியது ஒருவித சூழ்நிலைக்கு ஆனால், உருவாகியிருப்பதோ வேறுவிதமான சூழ்நிலை.

மானிக்ஜி சாஹிப் ஏற்கனவே கேட்டிருந்த பல கேள்விகளுக்கு பஹாவுல்லா பதிலளித்திருந்தார். ஆனால் அப்பதில்களால் மானிக்ஜி திருப்தியடையவில்லை. அது குறித்து பஹாவுல்லா:

மதிப்புமிகு அறிஞர் சாஹிப் – அவர் மீது இறைவனின் கிருபை தவழட்டுமாக- அவர் கேட்டிருந்த கேள்விகள் தொடர்பாக நீங்கள் எழுதியிருந்தது குறித்து, அவர் எழுதியனுப்பியதை வைத்துப் பார்க்கையில்,அவரது மன நிலையும், சூழ்நிலையும் தெள்ளத்தெளிவாகவே புலனாகின்றன. இப்பொழுது அவரது கேள்விகள் சம்பந்தமாக, அக் கேள்விகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவ்வாறான பதில்,விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில்புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும். அவ்வாறிருந்தும், தெய்வீக உதவியெனும் விண்ணுலகிலிருந்து அற்புதத் தெளிவுடன் துல்லியமாக அவரது நற்பெயரின்பேரில் மறுமொழிகள் வழங்கப்பட்டன. ஆயினும், அவ்விஷயத்தை அவர் மிக அணுக்கமாகக் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், அவர் முறையாக அம்மறுமொழிகளை கவனித்திருப்பின், எந்தவொரு கருத்தும் மறுமொழியளிக்கப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை என்பதை அவர் உடனே ஒப்புக் கொண்டு, “இது மிகத் தெளிவானதும்,ஆணித்தரமானதுமான வெளியிடுகையேயன்றி வேறில்லை,” என வியந்து கூறியிருப்பார்.

இங்கு பஹாவுல்லா ஒரு கடவுளின் அவதாரம் எனும் முறையில் பெரும் விவேகத்துடன் “அவ்வாறான பதில், விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும்“, என கூறியுள்ளார். இது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய வார்த்தைகளாகும். பூர்வீகத்தில் ஹிந்து சமயம் எனும் ஒரு தனி சமயம் கிடையாது. பின்னாளில் வெள்ளையர் ஆட்சியின் போது சிந்து நதிக்கு அப்பால் வாழ்வோர் அனைவரையும் இந்துக்கள் என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். அங்கு வழக்கில் இருந்த வைதீகத்தை அடிப்படையாக கொண்ட சமயங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஹிந்து சமயம் என அழைக்கப்பட்டன. பஹாவுல்லாவின் சமயம் உலக சமயங்கள் தங்களுக்கிடையிலான ஒற்றுமையை புரிந்துகொண்டு ஒன்றுபட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. ஹிந்து சமயம் குறித்த பஹாவுல்லாவின் பதில்கள் ஒரு சாரருக்கு ஏற்றதாக இருக்கும் அதே வேளை பிறருக்கு அது ஏற்றதாக அமையாமல் போகலாம். ஏற்கனவே இருக்கும் பிரிவுகளுக்கிடையே மேலும் ஒரு புதிய விளக்கத்தையும், பிரிவினையையும் உருவாக்குவதை பஹாவுல்லா தவிர்த்து மக்களின் கவனம் நாம் வாழும் காலத்தின் தேவைகளின்பால் இருப்பதே முக்கியம் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றார் என்றே பொருள்படுகிறது.

மானிக்ஜியின் கேள்விகளுள் ஒன்று பின்வரும் வினாவை உள்ளடக்கியுள்ளது:

… சில இந்து தீர்க்கதரிசிகள் பிரகடனப்படுத்தியுள்ளதாவது: ”யாமே இறைவன். எம்பால் விசுவாசம் காண்பித்திடுவதை படைப்பு முழுமைக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடையே பிளவும், பிரிவும் தோன்றும் போதெல்லாம், அதனை அணைப்பதற்காக யாம் முன்னெழுந்திடுவோம்.” தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் “ஆதியில் தோன்றியவரும் யாமே,” என அறிவித்தள்ளனர், எனும் வரிகளை குறிப்பிட்டு இக்கூற்றுகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடுமா மற்றும் எந்த தீர்க்கதரிசி அல்லது அவதாரத்தை ஏற்றுக்கொள்வது என மானிக்ஜி வினவுகிறார்.

முதலாவதாக, தீர்க்கதரிசிகள் எனும் வார்த்தை ஆங்கிலத்தில் ‘ப்ரொஃபெட்’ (Prophet) எனும் வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். சமய ஸ்தாபகர்கள் இரண்டு நிலையில் வெளிப்படுகின்றனர். ஒன்று தீர்க்கதரிசிகள்(Prophets) எனும் நிலை மற்றது கடவுளின் அவதாரங்கள்(Manifestations of God) எனும் நிலை. கடவுளின் அவதாரங்கள் அல்லது வெளிப்பாட்டாளர்கள் எனும் நிலையில் இவர்கள் கடவுளின் நிலையிலேயே பேசுகின்றார்கள், அதாவது கடவுள் மானிடத்திற்கு கூற நினைப்பதை தமது அவதாரங்கள் மூலமாக தெரியப்படுத்துகின்றார். பகவத் கீதையில் ஒவ்வொரு செய்யுளின் ஆரம்பத்திலும் ‘ஸ்ரீகிருஷ்ன உவாச’ என்றில்லாமல் ‘ஸ்ரீபகவான் உவாச’ எனும் வார்த்தைகள் உள்ளன. அதாவது கிருஷ்னர் கடவுளின் நிலையிலிருந்து பேசுகிறார் என்பது இதன் விளக்கமாகும். ஆகவே, பகவத் கீதையில் வரும் பின்வரும் வரிகள் இவ்விளக்கத்தின்படியே பார்க்கப்படவேண்டும்:

ஸ்ரீ பகவான் திருவாய்மொழிகின்றார்:
இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.

இதற்கு மறுமொழியாக அர்ஜுனன் பின்வருமாறு வினவுகின்றான்:

அர்ஜுனன் கூறுவது:
உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீரே இதை ஆதியில் கூறினீரென்று நான் தெரிந்துகொள்வதெப்படி? .

இதன் பொருள் காலங்காலமாக கடவுள் தமது திருவிருப்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தியே வந்துள்ளார். அவர் முதலில் விவஸ்வானுக்கும் பிறகு மனுவிற்கும் அதன் பிறகு இக்ஷ்வாகுவிற்கும் நிகழ்காலத்தில் கிருஷ்னர் மூலமாக அர்ஜுனனுக்கு உபதேசிக்கின்றார்.

“…எல்லா திருத்தூதர்களும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்து, மீண்டும் அவரிடமே திரும்பிச் சென்றுள்ளவர்கள்.” .

மேலும் கீதோபதேசத்தில் இதே பொருள் குறித்த பின்வரும் வரிகள் காணக்கிடக்கின்றன:

பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் ஒரு (புனித)ஆன்மாவைப் படைக்கின்றேன்.
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் சம்பவிக்கின்றேன்”. .

கடவுள் தமது அவதாரங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார். அவ்வாறு வந்தவர்களே ராமர், கிருஷ்னர், புத்தர், மோசஸ், இயேசு, முகம்மத் போன்றோர். இவர்கள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் தங்கள் மெய்ம்மையில் இவர்கள் அனைவரும் கடவுளின் பிரதிபிம்பங்களே ஆவார்கள்.

“…இந்த வகையில் பார்க்குமிடத்து அவர்கள் அனைவரும் ஒரே நபர் ஆவர். ஏனெனில், தங்களது சொந்தவிருப்பத்தின் பேரில் அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசினார்களில்லை, ஒரு செய்தியைக்கூட கொண்டு வந்தார்களில்லை அல்லது ஒரு சமயத்தைக் கூட வெளியிட்டார்களில்லை. இல்லை. அவர்கள் மொழிந்துள்ளவை அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்தவையாகும்.”

மானெக்ஜியின் கேள்வி ஒன்று கடந்தகால தீர்க்கதரிசிகளுள் யாரை தேர்வு செய்வது என்பதாகும். இதற்கு பஹவுல்லா:

“அவரது திருத்தூதர்கள் எவரையுமே யாம் வேறுபடுத்திப்பார்த்ததில்லை.” “தீர்க்கதரிசிகள் அனைவருமே இறைவனது திரு ஆலயங்களே என்பது உங்களுக்குத் தெளிவானதும் ஆதாரப் பூர்வமானதும் ஆகும். நீங்கள் உய்த்துணரும் கண்களைக் கொண்டு கூர்ந்து கவனிப்பீராயின், அவர்கள் அனைவருமே அதே கூடாரத்தினில் வசிப்பதையும், அதே வானத்தில் பறப்பதையும், அதே அரியாசனத்தின் மீது அமர்ந்திருப்பதையும், அதே சொற்பொழிவை ஆற்றிடுவதையும், அதே சமயத்தினைப் பிரகடனப் படுத்திடுவதையும் காண்பீர்.”

என கூறுகின்றார். (உலகில் இதுவரை 127,000 திருத்தூதர்கள் தோன்றி மறைந்துள்ளனர் எனும் ஒரு நம்பிக்கை இஸ்லாம் சமயத்தில் உள்ளது.)

சாஹிப் அவர்களின் மற்றுமொரு கேள்வி சமய கோட்பாடுகள் மற்றும் சட்டதுறை குறித்த்தாகும். ஹிந்து சமயத்தில் சட்டத்துறை யல்லாது கோட்பாடுகளே யாவற்றையும் வழிநடத்துகின்றன. சட்டங்கள் அனைத்தும், நீர் அருந்துவது தொடர்பான சட்டங்கள் கூட அல்லது திருமணத்தில் கொடுத்தல், எடுத்தல் போன்ற சட்டங்கள் கூட, மானிட வாழ்வில் மற்ற அம்சங்களைப் போலவே, இக் கோட்பாடுகளின் ஓர் அங்கமாகவே கருதப்படுகின்றன. இதில் எது சிறந்தது என்பது சாஹிபின் கேள்வியாகும்.

இதற்கு பஹாவுல்லாவின் பதில்:

சமயக் கோட்பாடுகள் பல்வேறு நிலைகளையும்,ஸ்தானங்களையும் கொண்டவை. எல்லாக் கோட்பாடுகளுடைய ஆணிவேரும், எல்லா அடித்தளங்களின் அஸ்திவாரமும் இறைவனை அறிந்து கொள்ளுதலாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது, இனியும் அவ்வாறே அது நிலைத்திருக்கும். இன்றைய நாள்கள் உண்மையில் எல்லா கருணைமிக்கவரை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளலின் வசந்த காலமாகும். அவர்தம் சமயமெனும் களஞ்சியத்திலிருந்தும், அவர்தம் வெளிப்படுத்துதலிருந்தும் எதுவெல்லாம் வெளிவருகின்றதோ அதன்பால், உண்மையில் அனைவரும் விசுவாசங் காண்பிக்க வேண்டும் என்பது அடித்தள கோட்பாடாகும். மேலும்:

“நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.”

என அவர் அறிவுறுத்துகின்றார்.

மாமிசம் அருந்துவது குறித்தது சாஹிபின் அடுத்த கேள்வி. அதாவது ஹிந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை மற்றும் முஸ்லீம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை. இதற்கு பஹாவுல்லா பின்வருமாறு பதிலளிக்கின்றார்:

“அனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார்,” எனும் வாசகமே அவரது கேள்விக்கான பதிலாக இருக்கின்றது. அவர் மேலும் கூறுவதாவது: “நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அதிக அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.” மேலும், ஏற்கணவே கூறியுள்ளது போல், “இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது.”

அதாவது அறிவியல் வளர வளர உணவு வகைகளும் மாறி வருகின்றன. சுகாதார சூழ்நிலைகள் பெருகிவிட்டன; மனிதர்களுக்கு ஏற்ற உணவு வகைகளை அறிவியல் ரீதியில் நாம் கண்டறிந்துகொள்ளலாம்.

ஹிந்துக்களின் அஹிம்சை கோட்பாடு குறித்த மற்றொரு கேள்விக்கு:

எவருடனும் சச்சரவு கொ ள்வது அனுமதிக்கப்படவுமில்லை, ஓர் ஆன்மாவைத் துன்புபறுத்துவதோ, கொடுமைப்படுத்துவதோ இறைவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. எல்லா வேளைகளிலும், ஒவ்வொரு காலத்திலும் இந்த உயரிய வார்த்தைக ள் அதி உயரிய எழுதுகோலிலிருந்து பெருக்கெடுத்துள்ளன- அவர் ஆசீர்வதிக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்படுவாராக: “மனிதரின் குழந்தைகளே! இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கமானது, மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர்.”

ஒருவர் பிறப்பால் மட்டுமே ஹிந்துவாகவும் ஸோராஸ்திரியராகவும் (யூதராகவும்) இருக்கமுடியும் மாறாக, ஒருவர் சுயவிருப்பதால் அச்சமயங்களில் சேர முடியாது எனும் நம்பிக்கை, மற்றும் வன்மதமாற்றம் குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகிறார்:

மனிதர்களின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள் ஆவர். சகோதரத்துவத்திற்கான முன்தேவைகள் பல்வகையானவை. அவற்றில் ஒன்று, தனக்காக எதை ஒருவர் விரும்புகின்றாரோ, அதனையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். எனவே, உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான பரிசைப் பெறும் ஒருவர் அல்லது விண்ணுலகத் திவ்விய உணவைச் சுவைத்திடும் ஒருவர், தனது நண்பர்களிடம் அதனைத் தெரிவித்து அதி அன்புடனும், இரக்கத்துடனும் அவர்களையும் அதன்பால் அழைத்திட வேண்டும் என்பது அவருக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

மற்றும்,

அவர்கள் அதற்குச் சாதகமாக செவிசாய்ப்பின், அவரது குறிக்கோள் அடையப்பட்டுவிட்டது; அவ்வாறில்லையெனில், அவர்களுடன் எதிர்வாதம் செய்யாமலும் அல்லது அவர்களுக்குக் கிஞ்சிற்றும் சோகமிழைக்கவல்ல எந்தவொரு வார்த்தையையும் கூறாமலும், அவர்களை அவர்களுடைய வழியிலேயே விட்டுச் சென்றிட வேண்டும்.”

மேலும் படித்திட:
Tabernacle of Unity
Baha’i Publishing Trust of Malaysia

வசிஷ்ட-யோகமும் காலக்கணக்கு குறித்த பஹாவுல்லாவின் விளக்கவுரையும்


‘ஜுக் நூல்’ என்பது ‘வசிஷ்ட யோகம்’ எனும் நூலாகும். இந் நூல் முகாலயர் ஆட்சியின் போது மொழிபெயர்கப்பட்டு பாரசீக நாட்டில் பல நூற்றாண்டுகாலமாக பிரபலமாக, குறிப்பாக இந்திய-பாரசீக விஷய ஆர்வலர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பஹாவுல்லாவின் நிருபம் ஒன்றில் ஆதாமுக்கு முற்பட்ட வரலாற்று குறிப்புகள் ஏதும் இல்லாதது பற்றி அவர் கருத்துரைக்கின்றார். இங்கு அவர் ஜுக்-பஸிஷ்ட் (ஜுக் நூல்) எனும் வசிஷ்டயோக நூலைச் சுட்டுகின்றார். இந்த நூல் ஹிந்து மறைபொருளியல் குறித்த படைப்பாகும்.

வசிஷ்டர் வாழ்ந்த காலத்தில் நாட்டை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிய இராமர் நாட்டில் தாம் கண்ட காட்சிகளினால் (புத்தரைப் போன்றே தாமும்)  மனம் குழம்பியிருந்தார். அது கண்ட இராமரின் பிதாவான  தசரதர் வசிஷ்ட முனிவரை அழைத்து தமது கவலையை தெரிவித்தார். வசிஷ்டரோ இராமர் இப்போது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தயாராக இருக்கின்றார் எனவும் இதில் அவர் உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் கூறுகிறார். இதன் தொடர்பில் இராமர் கேட்ட கேள்விகளும் அதற்கான வசிஷ்டரின் பதில்களுமே வசிஷ்ட-யோகம் என வழங்கப்படுகின்றன.

இந்த நூல் நிஸாமுட்-டின் பானிப்பதி என்பவரால் 16ம் நூற்றாண்டின் இறுதியில் மொழிபெயர்க்கப்பட்டது. சாஃபாவிட் காலத்து இரானிய தத்துவ-மறைஞானியான மீர் பிஃன்டிரிஸ்கி (கிபி.1641) என்பார் பானிப்பதி மொழிபெயர்த்த வசிஷ்ட யோகத்தின் சில பகுதிகளை விரிவுரைத்துள்ளார்.  இந்த வஸிஷ்ட யோகத்தின் அத்தியாயங்களுள் ஒன்றான புஸுந்தாவின் (ஒரு முதிய முனிவர்) கதையில், ஹிந்து பஞ்சாங்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள பூவுலக வரலாற்றில் வரும் தொடரான சகாப்தங்களை புஸுந்தா நினைவுகூறுகிறார். இப்பகுதியில், பஹாவுல்லா இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ சமயங்கள் போதிக்கும் உலகத்தின் வயது குறித்த 6,000 அல்லது 12,000 வருடங்களைவிட ஹிந்து சமயத்தின் வேத, புராண, இதிகாசங்கள் குறிப்பிடும் கோடிக்கணக்கான வருடங்களையே தேர்வு செய்கிறார். உண்மையில் இதே நிருபத்தில் பஹாவுல்லா ஹிந்துக்களில் பலர் நம்பும் “சிருஷ்டி என்றென்றுமே இருந்துவந்துள்ளது” எனும் கூற்றை முன்வைக்கின்றார். ஓர் அன்பர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பஹாவுல்லா இந்த நூலில் வரும் பூவுலக வரலாற்றை சுட்டி பின்வருமாறு பதிலளிக்கின்றார்:

வரலாற்று குழப்பங்கள்

இப்பொழுது, “மனித இனத்தின் தந்தையாகிய ஆதாமிற்கு1 முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும், அவர்கள் காலத்தில் வாழ்ந்த அரசர்களையும் பற்றிய பதிவேடுகள் எதுவுமே காணப்படவில்லையே, அது எப்படி?” என்னும் உங்களின் கேள்வி சம்பந்தமாக: அவர்கள் சம்பந்தமான எவ்விதக் குறியீடுகளும் இல்லாதிருப்பது அவர்கள் இல்லாதிருந்தனர் என்பதற்கு ஆதாரமாகாது என்பதை நீங்கள் அறிவீராக. அவர்களைக் குறிக்கும் பதிவேடுகள் எவையும் இப்பொழுது கிடைக்காததற்குக் காரணம், அக்காலம் நெடுங்காலத்திற்கு முந்தியதாய் இருந்ததுதான்; அதோடு, அவர்களின் காலத்திற்குப் பின் உலகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களும் அதற்கு மற்றொரு காரணமாகும்.

எழுத்துமுறை குழப்பங்கள்

மேலும், மனிதரிடையே இப்பொழுது வழக்கிலிருந்து வரும் எழுத்து வகைகளும் முறைகளும் ஆதாமுக்கு முன்பாக இருந்த தலைமுறையினருக்குத் தெரியாதிருந்தது. மனிதர்கள் முற்றிலும் எழுத்தறிவே இல்லாதிருந்த ஒரு காலமும் இருந்தது; அக்காலத்தில், இப்பொழுது அவர்கள் உபயோகித்து வரும் முறையை விட முழுமையாக வேறுபட்ட முறையை மேற்கொண்டிருந்தனர். இதனைப் பொருத்தமுற விவரிப்பதற்கு விரிவான விளக்கம் தேவைப் படும். ஆதாமின் காலமுதல் இன்றுவரை தோன்றியுள்ள மாற்றங்களை எண்ணிப் பாருங்கள்.

மொழி குழப்பங்கள்

இப்பொழுது உலக மக்களால் பேசப்படும் பல்வேறான, பரவலாகத் தெரிந்துள்ள மொழிகள், இப்பொழுது அவர்களிடையே நடைமுறையிலுள்ள விதிகளையும் சம்பிரதாயங்களையும் போலவே, தொடக்கத்தில் தெரியாதிருந்தன. அக்காலத்திய மக்கள், இப்பொழுதுள்ள மக்களுக்குத் தெரிந்திராத ஒரு மொழி பேசினர். மொழி வேறுபாடுகள் பிற்காலத்தில்தான் ஏற்பட்டன; அது பேபல்2 எனப்படும் இடத்தில் நிகழ்ந்தது. அது “மொழிகளில் குழப்பம் தோன்றிய இடம்“ என பொருள்படுவதால் அதற்கு பேபல் என்ற பெயர் கொடுக்கப் பட்டது. அதற்குப்பின், அப்பொழுது இருந்த மொழிகளில் சிரியாக்3 மொழி பிரபலமடைந்தது. முந்தைய திருமறைகள் அம்மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன. பிறகு, ஆப்ரஹாம், ஆண்டவனின் நண்பர்4, தோன்றி, தெய்வீக வெளிப்பாட்டின் ஒளியினை உலகின்மீது விழச்செய்தார். அவர் ஜோர்டான் நதியைக் கடக்கும் பொழுது உபயோகித்த மொழி ஹிப்ரு5 மொழியாகும் (இப்ரானீ); அதன் பொருள், “கடக்கும் மொழி”. அதன் பிறகு, இறைவனின் நூல்களும் திருமறைகளும் அந்த மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன; ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே அரபு மொழி வெளிப்பாட்டு மொழியாக ஆகியது …. ஆகவே, ஆதாமின் காலம் முதல் இன்றுவரை, மொழி, பேச்சு, எழுத்து ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எத்துணை எண்ணற்றதும் பரவலானதுமாய் இருந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள். இன்னும் எந்தளவு அதிகமானதாய் இருந்திருக்க வேண்டும் அவருக்கு முன்பாக ஏற்பட்டிருந்த மாற்றங்கள்!

கடந்தகால அவதாரங்கள்

யாம் இவ்வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் நோக்கம், ஒரே உண்மைக் கடவுளாகிய அவர், தமது அதிவுயரிய, அனைத்திற்கும் மேம்பட்ட ஸ்தானத்தில், எப்பொழுதுமே தன்னைத் தவிர மற்றனைவரின் புகழ்ச்சிக்கும், புரிந்துகொள்ளலுக்கும் மேலான மிகச் சிறந்த நிலையிலேயே இருந்துவந்திருக்கின்றார், தொடர்ந்தும் எக்காலத்தும் அவ்வாறே இருந்தும் வருவார் என்பதைச் சுட்டிக் காட்டுவதே. அவரது படைப்பு எக்காலத்தும் இருந்து வந்தே உள்ளது; அவரது தெய்வீக மகிமையின் அவதாரங்களும் அவரது நித்திய புனிதத் தன்மை என்னும் பகலூற்றுகளானோரும், நினைவுக்கெட்டாத காலம் முதல், மனித இனத்தை ஒரே உண்மைக் கடவுளின்பால் அழைத்திடுமாறு பொறுப்பு வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களுள் சிலரின் பெயர்கள் மறக்கப்பட்டும், அவர்களின் வாழ்க்கையைக் குறிக்கும் பதிவேடுகள் இழக்கப்பட்டுமிருப்பற்கு உலகத்தில் ஏற்பட்டு வந்துள்ள கொந்தளிப்புகளும் மாற்றங்களுமே காரணங்களாகும்.

பிரளயங்கள்

சரித்திரக் குறிப்புகளும் மற்றப் பொருள்களும் உள்பட, உலகத்தில் உள்ளவற்றை எல்லாம் அழித்திட்ட ஒரு பிரளயத்தைப் பற்றிச் சில நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது; அன்றியும், பல நிகழ்வுகளின் அடையாளங்களைத் துடைத்தழித்திட்டப் பல பிரளயங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும், இப்பொழுதிருக்கும் சரித்திர வரலாறுகளில் வேறுபாடுகள் காணப் படுகின்றன; உலகின் பல்வேறான இனங்கள் ஒவ்வொன்றும் அக்காலக் கட்டத்தையும் அதன் சரித்திரத்தையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன. சில, எட்டாயிரம் ஆண்டுகளிலிருந்து அவற்றின் வரலாற்றினை விவரிக்கின்றன; மற்றவை, பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் செல்கின்றன. “ஜூக்“ நூலைப் படித்திருப்பவர் யாராயினும் அதற்கும் பற்பல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாறுகளுக்கும் இடையே எந்தளவு வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் தெரிந்திடும். நீங்கள், இம் முரண்பாடான கதைகளையும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் புறக்கணித்து, இவ்வதி மேன்மைமிகு வெளிப்பாட்டின்பால் உங்கள் பார்வையைத் திருப்பிட இறைவன் அருள் புரிவாராக.

அதாவது, பஹாவுல்லா வசிஷ்ட யோகத்தில் காணப்படும் காலக் கணக்கை தாமும் ஆதரிக்கின்றார் எனவே இதிலிருந்து புலப்படுகின்றது.

குறிப்புகள்:

1 – ஆதாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் முதல் பகுதியில் ஜனனம் (Genesis) வரும் ஒரு அவதார புருஷராவார். இவரே முதல் மனிதர் எனும் நம்பிக்கை பரவலாக இருந்தபோதிலும் பஹாய் திருவாக்குகள் இவரை ஓர் அவதார புருஷர் எனவே விவரிக்கின்றன.

2 – பேபல் (Babel) – ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரு மொழி மட்டுமே பேசி வந்தனர் எனவும் பிற்காலத்தில் பேபல் எனும் இடத்தில் (இராக் நாட்டில் இருந்த ஓர் இடம்) மொழிகள் பலவாறாக பிரிந்தன எனவும் கூறப்படுகிறது. இவ்விஷயத்தை பஹாய் திருவாக்குகளும் ஆதரிப்பனவாக இருக்கின்றன.

3 – சிரியாக் (Syriac) – ஹிப்ரூ மற்றும் அரமேய்க் மொழிகள் தோன்றுவதற்கு முன் பேசப்பட்டு வந்த ஒரு மொழி

4 – ஆப்ரஹாம் (ஆண்டவரின் நண்பர்) – இவர் பழைய ஏற்பாட்டில் வரும் அவதார புருஷர் மற்றும் விவிலியத்தில் வரும் எல்லா அவதார புருஷர்களுக்கும் இவரே தோற்றுவாய் என குறிக்கப்படுகிறது.

5 – ஹிப்ரூ மொழி – தற்போது இஸ்ரேல் நாட்டின் தேசிய மொழி.

கம்போடியா – ஒரு கண்ணோட்டம்


கம்போடிய பஹாய் இளைஞர்கள்

கம்போடியாவில் பஹாய் சமயம் அறிமுகமாகி அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும். அதன் வளர்ச்சி இடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த பஹாய்களில் பலர் பட்டினி, நோய் மற்றும் கொல்லப்பட்டும் இறந்து போயினர். சுமார் 15 வருட காலமாக மீண்டும் ஒரு பஹாய் சமூகம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய 10,000 உறுப்பினர்கள் கொண்ட இச்சமூகம் கிபி 2000 க்குப் பிறகே சீரான மறுவளர்ச்சி கண்டது. அந்த நாட்டில் பஹாய் போதனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்கூடு. இது எதனால் என்பதை ஆராயும்போது அந்த நாட்டு மக்கள் கெமேர் ரூஜ் அரசாங்கத்தின் கீழ் அனுபவித்த கொடுமைகளே இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது தெளிவாகும்.

கெமேர் ரூஜ் ஆட்சியில் குழந்தைகளும் வதைக்கப்பட்டனர்

சுமார் 1.3 கோடி மக்களைக் கொண்ட கம்போடியா ஏறக்குறைய 30 ஆண்டுகள் போராலும், வன்முறைகளாலும் சீரழிக்கப்பட்ட, 20ம் நூற்றாண்டில் எங்குமே நடைபெறாத அட்டூழியங்களை அனுபவித்த நாடாகும். 20 லட்சம் மக்களுக்கு மேல் பசியாலும், கொடுமைகளாலும், கொல்லப்பட்டும் மடிந்தனர். இக் கொடுமைகளுக்கு மூலகாரணமாக விளங்கியது “கெமேர் ரூஜ்” எனப்படும் ஓர் இயக்கமாகும். கம்யூனிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் நாட்டைக் கைப்பற்றி மறுசீரமைப்பு எனும் பெயரில் முதலில் கல்வி கற்றோரையும், பிரபலமானவர்களையும் கொன்றனர். அறிவுடையோரும் ஆற்றல் பெற்றோரும் அரசாங்கத்தின் எதிரிகளாக காணப்பட்டனர். எல்லாவித நூல்களும் பிரசுரங்களும் தடை செய்யப்பட்டு பிறகு அழிக்கவும் பட்டன. ஒரு முழு தலைமுறையினர் கல்வியற்றும், போர், பட்டினி, நோய் போன்றவையல்லாது வேறெதனையும் அறியாதே வளர்ந்தனர். கல்விமுறை கிட்டத்தட்ட அறவே இல்லாமலேயே போய், கோடிக்கணக்கில் மக்கள் எழுத்தறிவின்றி வாழ்ந்தனர். தற்போதுள்ள அரசாங்கம் கல்விமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் இன்றும் கல்வி பெறுவதில் சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர்.

துவொல் ஸ்லேங் அருங்காட்சியகம். இங்குதான் பெரும்பாலான சித்திரவதைகள் நடைபெற்றன

கம்போடியா பெரும் குழப்பங்களைச் சந்தித்தது என்பது பொதுவாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந் நாட்டு மக்கள் அக்காலத்தில் குறிப்பாக என்ன நிலைக்கு ஆளாகினார்கள் என்பது பலருக்குத் தெரியாது. மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக படையெடுத்த போதுதான் கம்போடியவில் என்ன நடந்தது என்பது நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் கடல் மார்க்கமாகவும், நில வழியாகவும் லட்சக் கணக்கில் அகதிகளாக சென்றனர். இப்படி நில வழியாகஓடுபவர்களை தடுப்பதற்காவும் எதிரிகளை தடுத்து நிறுத்துவதற்காகவும் கம்போடியாவின் பல பாகங்களில் கெமேர் ரூஜ்ஜின் நில கன்னி வெடிகள் இன்றளவும் புதைந்த வன்னம் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும் என அவற்றை தோன்றி எடுக்க உதவி செய்யும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.

கொலை வயல்கள் – இங்குதான் கொலைசெய்யப்பட்டோர் புதைக்கப்பட்டனர்

கொலை வயல்கள் – இங்குதான் கொலைசெய்யப்பட்டோர் புதைக்கப்பட்டனர்இந்த நிலவெடிகள் பதிக்கப்பட்டு 30 வருடங்களானாலும் அவை இன்றும் பல உயிர்களை பலி வாங்கியும் பலர் கால்கள் ஊனமுற்று போகவும் காரணமாக இருக்கின்றனர். கம்போடியாவுக்கு சுற்றுப்பயனிகளாக செல்வோர் பொய்க்கால்கள் பொருத்தியும் அல்லது கால்களை இழந்து குச்சிகளை ஊனிக்கொண்டு கையேந்தி பிச்சையெடுக்கும் பலரைக் காணலாம். பத்தம்பாங் நகரில் அரசியல் சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியோடு நிலவெடிகளுக்கு பலியாவோருக்கு மருத்துவ உதவி வழங்குவற்கெனவே ஒரு மருத்துவசாலை இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

அங்கோர் வாட் கோவில்

ஹிட்லரின் அரஜகத்தையும் மிஞ்சும் வகையில் கெமேர் ரூஜின் அரசியல் கைதிகள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம் ஒன்று ப்னொம் பென்ஞ் நகரில் உள்ளது. மாவ் சீ தொங் சாலைக்கு அருகில் “தொல் சிலேங் மியூசியம்” என ஓரிடம் உள்ளது. ஒரு காலத்தில் உயர்நிலைப் பள்ளியாக இயங்கிய அக்கட்டிடம் கெமேர் ரூஜ் படைகளால் அது ஒரு சிறைச் சாலையாக மாற்றப்பட்டு அரசியல் கைதிகள் பலர் இங்கு அடைக்கப்பட்டனர் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.

இறந்தோரின் எலும்புகள்

இந்த கெமேர் ரூஜ் அராஜகத்தின் மேலும் ஒரு அடையாளமாக “கில்லிங் ஃபீல்ட்ஸ்” எனப்படும் கொலைவயல்கள் உள்ளன. கெமேர் ரூஜினரின் கைகளில் உயிரிழந்தோர், புதைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட குழிகளுக்கு இப் பெயர் வைக்கப்பட்டது. கம்போடிய தலைநகருக்கு அருகில் செங் எய்க் எனப்படும் இடத்தில் இத்தகைய குழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. கம்போடியா முழுவதும் ஆங்காங்கே உள்ள இக் குழிகளில் கிடந்த மனித எலும்புக்கூடுகள் இன்று அவ்விடங்களிலேயே மக்களின் பார்வைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பெரியவர்கள் மட்டும் இன்றி குழந்தைகளும் இந்த தொல் சிலேங் சிறையில் உயிரழந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பங்கள் பிரிக்கப்பட்டு மறுகல்வி எனும் பெயரில் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.

கம்போடியா, கொம்போங் தோம்’இல் உள்ள கல்கி கோவில்

இன்றைய நிலையில் நாடு சற்று மோசமான நிலையில் இருந்தாலும், அதன் கடந்த கால வரலாறு மகோன்னதம் மிக்கதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேல் “துன்லே சாப்”எனப்படும் பெரும் ஏரியின் கரையோரங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மாபெரும் நகரமே இந்த அங்கோர் வாட் ஆகும். “அங்கோர்” என்றால் நகரம் மற்றும் “வாட்” என்பதன் அர்த்தம் விஹாரம் அல்லது கோவில் என்பதாகும். அதாவது கோவில் நகரம் என இதனை கூரலாம். அதன் உச்சநிலையில் அங்கோர் நகரம் சுமார் 10லட்சம் மக்களைக் கொண்டிருந்த ஒரு பெரும் நாகரிகமாக விளங்கியது. ஐரோப்பா கண்டம் நாகரிகத்தின் விடிவெள்ளியைக் கூட எட்டிப் பிடிக்காத நிலையில் கம்போடிய நாட்டில் 10 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் நகராக, சிறந்த நீர்ப்பாய்ச்சலும், சாலை போக்குவரத்து வசதிகளும் நிறைந்த ஒரு நகராக அங்கோர் விளங்கியது. இதன் மன்னர்களில் தலையாய மன்னனாக 7வது ஜெயவர்மன் எனும் ஒரு மன்னன்

கல்கியின் உருவச்சிலை. இப்போது பிரான்ஸ் நாட்டில் இருக்கின்றது.

விளங்கினான். இவன் காலத்தில் அங்கோர் புகழின் உச்சத்தில் இருந்தது. தற்போதைய கெமேர் மொழிக்கான அஸ்திவாரத்தை அமைத்தவன் இந்த அரசனே. இந்த அங்கோர் நகரத்தில் கோவில்கலிலேயே தலைசிறந்ததும் மிகப் பெரியதுமாக அங்கோர் வாட் கோவிலே விளங்கியது. தற்போது அங்கோர் கோவில் ஒரு புத்த கோவிலாக மாறியிருந்தாலும் அது ஒரு விஷ்ணு ஆலயமாகவே ஆரம்பத்தில் கட்டப்பட்டது. அங்கோர் வாட்டில் இன்றும் இந்து தெய்வங்களின் வடிவங்கள் அதன் சுவற்றில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அங்கோர் வாட்டிற்கு அருகில் உள்ள அங்கோர் தோம்மில் சிவலிங்க சிலைகள் இன்றும் உள்ளன. இந்த அங்கோர் தோம் நான்கு முகங்களான சிலைகளைக் கொண்ட கோவிலைக் கொண்டது. இந்த நான்கு முக சிலைகள் பிரம்மாவின் உருவங்கள் என ஒரு காலத்தில் எண்ணப்பட்டதுண்டு ஆனால் அவை 7வது ஜெயவர்மனின் உருவங்களே என இப்போது அடையாளங் காணப்பட்டுள்ளது. கம்போடியா முழுவதும் நூற்றுக்கணக்கில் இவை போன்ற பல கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கம்போங் தோம் அருகில் உள்ள சம்போர் பிரேய் கொக் எனும் இடத்தில் அங்கோரைவிட பழமை வாய்ந்த பல பாழடைந்த கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் அங்கு கல்கி விஷ்ணு யாஷாவிற்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதுதான். விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகிய கல்கியின் இந்த உருவச் சிலை இன்று பிரான்ஸ் நாட்டில் உள்ளது. ஆனால் கோவில் சிதைந்த நிலையிலிருந்து சீரமைப்பு பெற்று வருகிறது.

சுருங்கக் கூறப்போனால் ஒரு பெரும் நாகரிகத்தைக் கொண்டிருந்த நாடாக கம்போடியா ஒரு காலத்தில் விளங்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மக்கள் மிகச் சிறந்த கலைஞர்களாக, சிற்பிகளாக இருந்துள்ளனர். தென்கிழக்காசிய கலாச்சாரம், கலைகள் கம்போடியாவிலிருந்தே உதித்தவை என்பதிலும் சந்தேகமில்லை.