அன்பு


அன்பே கடவுள் அருளாட்சியின் இரகசியமும், சர்வ-இரக்கமிக்கவரின் வெளிப்படுகையும் ஆன்மீகப் பொழிவுகளின் ஊற்றுக்கண்ணும் ஆகும் என்பதை உறுதியாகவே நீ அறிவாயாக.

அன்பே விண்ணுலகின் கருணைமிகு ஒளியும் மனித ஆன்மாவுக்கு உயிர்ப்பூட்டும் புனித ஆவியின் நித்திய மூச்சுக்காற்றும் ஆகும்.

அன்பே கடவுள் மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் காரணமும், தெய்வீகச் சிருஷ்டிக்கிணங்க எல்லா வஸ்த்துக்களின் மெய்ம்மையினுள்ளும் இயல்பாகவே வீற்றிருக்கும் இன்றியமையா பிணைப்பும் ஆகும்.

அன்பே இம்மையிலும் மறுமையிலும் உண்மையான கழிபேருவகையை உறுதிபடுத்தும் ஒரே வழியாகும்

அன்பே இருளில் வழிகாட்டும் ஒளியும், மனிதனைக் கடவுளோடு ஐக்கியப்படுத்தும் உயிர் இணைப்பும், ஒளிபெற்ற ஆன்மா ஒவ்வொன்றின் மேம்பாட்டினை உறுதிபடுத்துவதும் ஆகும்.

அன்பே இவ்வாற்றல்மிகு, தெய்வீகமான காலவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதிபெரும் கட்டளையும், பருப்பொருளான இவ்வுலகின் வேறுபட்டத் தனிமங்களை ஒன்றிணைத்திடும் தனிச்சிறந்த சக்தியும், விண்வெளியில் கோள்களின் நகர்ச்சியை வழிநடத்தும் தனிப்பெரும் காந்தசக்தியும் ஆகும்.

அன்பே தவறாததும் எல்லையற்றதுமான ஆற்றலோடு இப்பிரபஞ்சத்தில் உள்ளடங்கியுள்ள மர்மங்களை வெளிப்படுத்துகிறது.

அன்பே மானிடம் எனும் அலங்கரிக்கப்பட்ட உடலுக்கு உயிராவியும், மாள்வுக்குரிய இவ்வுலகில் உண்மையான நாகரிகத்தை ஸ்தாபிப்போனும், மேன்மையான நோக்குடைய இனம் மற்றும் தேசம் ஒவ்வொன்றின் மீதும் அழிவே இல்லாத கீர்த்தியைப் பொழிவோனும் ஆகும்.

-அப்துல் பஹா-

தனக்குத் தானே பொய் சொல்லிக்கொள்வது


“வாய்மையே எல்லா மனித நற்பண்புகளுக்கும் அஸ்திவாரமாகும். -பஹாவுல்லா-“

பொய் சொல்வதென்பது இன்று ஒரு சாதாரண செயலாகிவிட்டது. உலகம் செயல்படுவதே பொய்களின் அடிப்படையில்தான் எனக் கூறலாமோ என்று தோன்றுகிறது.

சினிமாப் படங்களில் கற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் பல பொய்யானப் பண்புகளை மனதில் தோற்றுவிக்கின்றன. விளம்பரதாரர்கள் வியாபாரத்திற்காக பொய்களுக்கு பலவித அலங்காரங்கள் செய்வித்து அவற்றை தங்கள் பொருள்களுக்கு அனிவித்து சந்தையில் அவிழ்த்துவிட்டுள்ளனர். அரசியல் ரீதியில் சில போர்கள் கூட உண்மைக் காரணத்தை மறைத்து பொய்க் காரணங்களின் அடிப்படையில் தொடுக்கப்படுகின்றன. இப்படி உலகில் எங்கு பார்த்தாலும் பொய்யே பல நிலைகளில் பிரதானமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் விளம்பரப் பொய்களைப் பார்க்கும் சிறார்கள் மனதில் அவை ஆழப்பதிந்து தவறான பண்புகளைப் பதிக்கின்றன. சில வேளைகளில் பெற்றோர்களும் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” எனும் கூற்றுக்கு இணங்க குழந்தைகள் பொய் சொல்லக் கற்றுக்கொள்வதற்கு மூலகாரணமாக இருக்கின்றார்கள். குழந்தைப்பருவத்தில் கற்றுக்கொள்ளப்படும் பழக்கங்கள் பசுமரத்தாணி போன்று வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைத்திருக்கும்.

ஒரு நண்பரைச் சந்திக்கின்றோம், “எப்படி இருக்கின்றீர்கள்,” என வினவுகிறோம், அதற்கு அவர் “நன்றாக இருக்கின்றேன் என்பார்.” மற்ற ஒருவரை சந்திக்கின்றோம், சாப்பிட்டீர்களா என வினவுகின்றோம், அதற்கு அவர் “ஓ சாப்பிட்டாயிற்றே,” என்பார். “கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்,” என ஒருவரை அழைப்போம், அதற்கு அவர் “நீங்க முன்னுக்கு போங்க நான் பிறகு வரேன்” என்பார். “ஏன் ஒரு மாதிரியாக இருக்கின்றீர்கள்,” எனக் கேட்டால் “ஒன்றுமில்லையே, நன்றாகத்தானே இருக்கின்றேன்,” என்பார்கள். உன்னிப்பாக கவனித்தால், இவை யாவும் வழக்கமாக ஒரு பேச்சுக்காக சொல்லப்படும் பதில்களே தவிர அவற்றில் பெரும்பாலும் உண்மையிருக்காது. நன்றாக இருக்கிறேன் என்பவர் நன்றாக இருக்கமாட்டார், சாப்பிட்டாயிற்று எனக் கூறுபவர் ஒரு வேளை சாப்பிட்டிருக்கமாட்டார், போங்க வரேன் என்பவர் வரப்போவதில்லை. ஒன்றுமில்லை என்பவர் மனதில் ஆயிரம் போராட்டங்கள் நிறைந்திருக்கும்.

வேறு ஒரு விதமான பொய்யும் உள்ளது. நாம் எதை அல்லது எவற்றைப் பார்க்க நினைக்கின்றோமோ அவை அப்படியே தத்ரூபமாக நமது கண்ணுக்கத் தெரியும். உதாரணமாக வர்ணங்களை எடுத்துக்கொள்வோம். எந்த வர்ணம் நம் மனதில் பதிந்துள்ளதோ அந்த வர்ணமே பார்க்குமிடங்களிலெல்லாம் தோன்றும். அதே போன்றுதான் ஒரு மனிதரிடத்தில் நாம் பார்க்க விரும்பும் விஷயங்கள் மட்டுமே நமது கண்களுக்கு பளிச்சென்று தெரியும். அந்த மனிதரிடம் ஆயிரம் நல்ல விஷயங்கள் நிறைந்திருக்கும் ஆனால், அவர் எப்போதோ செய்த ஒரு சிறு தவறு மட்டுமே அத்தருணம் மனதிற்குத் தோன்றும். சில நேரங்களில் இல்லாத ஒன்றுகூட இருப்பதாகத் தொன்றும். சொல்லாத ஒன்று சொல்லப்பட்டதாகத் தோன்றும். முக்கியமாக கனவன் மனைவிக்கிடையே இத்தகைய “பார்வைக் குறைவுகள்” இருப்பின் அக் குடும்பத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

இப்படி நமக்கு விருப்பமானவற்றை மட்டுமே நாம் பார்க்கவும் சொல்லவும் விரும்புவதன் காரணமென்ன? ஒருவர் சாப்பிடவில்லையென்றால் அதை அவ்வாறே சொல்வதற்கென்ன அல்லது உடல்நலம் குறைவாக இருந்தால் அதை அப்படியே வெளிப்படுத்துவதில் என்ன தவறு? ஒருவரிடம் உள்ள நல்லவற்றை பார்க்காமல் அவரிடம் இருக்கும் ஒரு தவறு மட்டுமே நம் கண்களுக்குத் தெரிவதன் காரணமென்ன?

இந்த உலகம் முழுவதிலுமுள்ளோரைப் பார்க்கையில் பொய் சொல்வதற்கு மிகச் சுலமான ஒருவர் இருக்கின்றார் என்றால் அது நாம்தான். தனக்குத் தானே பொய் சொல்வது மிகவும் எளிதாகும். ஏனெனில் தனக்குத் தானே பொய் சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், அதே பொய்யைப் பிறரிடம் சொல்லும்போது சற்று கவனமாக இருப்பது அவசியப்படுகின்றது.

பொய் சொல்வதைப் பொருத்தவரை நாம் பிறரிடம் சொல்லும் பொய்யைவிட நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்யே அதிகமாகும் மற்றும் கேட்டை விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

இப்போது தனக்குத்தானே எவ்வாறு பொய் சொல்லக்கூடும் என்பதைப் பார்ப்போம். ஒரு காரியம் செய்யவேண்டியுள்ளது ஆனால், மறந்துவிட்டது; பரவாயில்லை நாளைக்கு அதைச் செய்யலாம், அதற்குள் என்னவாகிவிடப் போகின்றது என தனக்குத் தானே கூறிக்கொள்வது; குடும்ப நிலை கஷ்டமாக இருக்கும் போது பிறரிடம் அதைக் காட்டிக்கொள்ளாமல் பகட்டாக நடந்துகொள்வது; யாராவது நம்மைப்பற்றி ஒரு உண்மையைச் சொல்லும் போது உடனே எதிர்வாதம் செய்து அது உண்மையல்ல என வாதிடுவது; தினசரி நமது வாழ்வில் செய்யவேண்டிய முக்கியமானவற்றைச் செய்யாமல் ஏதாவது காரணத்தை முன்னிட்டு தள்ளிப்போட்டு ஒன்றுமே நடக்காதது போன்றிருப்பது. நமது தவறுகளை நமக்கு நாமே ஒப்புக்கொள்ளாமல் அவற்றை நியாயப்படுத்துவது என்பன போன்ற பல சூழ்நிலைகள் தனக்குத்தானே பொய்சொல்லிக்கொள்வதன் உதாரணங்களாகும்.

தனக்குத்தானே பொய்சொல்லும்போது நமக்கே தெரியாமல் பல பின்விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். “எச்சூழ்நிலையிலும் நமக்கு நாமே பொய் சொல்லிக்கொள்ளவே கூடாது. தனக்குத்தானே பொய் சொல்லிக்கொண்டும் அதை நம்பிக்கொள்ளவும் செய்பவன் தனக்குள் அல்லது தன்னைச் சுற்றிலும் அடங்கியுள்ள உண்மையை உணர்ந்துகொள்ள முடியாமல் தன்பாலும் மற்றவர்பாலும் மதிப்பிழந்து போகும் நிலையை அடைவான். மதிப்பிழந்தவன் அன்பு செலுத்தும் ஆற்றலை இழந்துவிடுவான்; உணர்வெழுச்சிக்கு அடிமையாகி பண்படாத இன்பங்களில் ஆழ்ந்துவிடுவான்; மிருகத் தனமான கெட்ட பழக்கவழங்கங்களுக்கு அடிமையாவான். இவை யாவும் ஒருவன் தனக்குதானேயும் பிறரிடமும் வழக்கமாக பொய் சொல்லும் பழக்கத்திற்கு ஆளாவதன் பின்விளைவுகளாகும். தனக்குத் தானே பொய் சொல்லுபவன் வெகு விரைவின் மனம் புண்பட்டுப்போவான். இப்படி மனம் புண்படுவது அவ்வாறு புண்படுவோர் மனதுக்கு இதமாக இருக்கும். சிலர் இல்லாத ஒன்றை கற்பனையாக உருவகப்படுத்திக்கொண்டு யாருமே ஒன்றும் செய்யாதபோதும் தன்னை யாரோ கேவலப்படுத்திவிட்டதாக தனக்குத் தானே ஒன்றை உருவாக்கிக்கொண்டு, பொய்சொல்லியும் அப்பொய்யை வெகு கவர்ச்சியாக்கி, மடுவை மலையாக்கிவிடுவார். அது அவருக்கும் தெரியும், ஆனால் அவர் தாமே அதனால் புண்பட்டும் அப்புண்படுதலில் ஆழ்ந்தும் அதனால் களிப்புணர்வடைந்தும், இறுதியில் உண்மையான பழியுணர்வையும் அடைவார்.”

இதிலிருந்து, “பொய்” எனும் வார்த்தைக்கு நமக்குத் தெரிந்ததைவிட பல அர்த்தங்கள் உண்டென்பதை நாம் கண்டுகொள்ளவேண்டும். நமக்குத் தெரியாத அர்த்தங்கள் தெரிந்தவற்றைவிட மிகவும் ஆபத்தானவையாக இருக்கலாம். ஆகவே எச்சூழ்நிலையிலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திட வேண்டும். அதற்காக, எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. தேவைப்படும் போது உண்மையும் இல்லாமல், நிச்சயமாகப் பொய்யும் பேசாமல், நிலைமையைச் சமாளிக்கும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

மறுபிறவியா ஒரே பிறவியா?


மறுபிறவி நம்பிக்கைக் குறித்துப் வழங்கப்படும் பின்வரும் கருத்துக்கள் சிந்தனையை தூண்டும் நோக்கங் கொண்ட மேலோட்டமான சில எண்ணங்களே. மிகவும் ஆழமான மற்றும் விசாலமான இ்வ்விஷயத்தை பின்வரும் சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே விளக்கிட முடியாது. ஒருமுறை பஹாவுல்லாவின் திருமகனாராகிய அப்துல் பஹாவிடம் மறுபிறவி பற்றி வினவப்பட்டது. அதற்கான அவருடைய பதிலின் சில பகுதிகளின் சுருக்கம் பின்வருமாறு:

வழங்கப்படும் விளக்கம் மெய்ம்மையை விளக்கிடவன்றி மற்றவர்களின் நம்பிக்கைகளைக் குறைகூறவே ஏளனம் செய்திடவோ அல்ல; உண்மையை விளக்கவுரை செய்திடுவதே நோக்கம். மற்றவர்களின் நம்பிக்கைகளை நாம் எதிர்க்கவில்லை மற்றும் குறைகூறலை நாம் அங்கீகரிக்கவும் இல்லை.

மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டோர் இருவிதமாக இருக்கின்றனர்: ஒரு விதத்தினர் விண்ணுலகின் ஆன்மீகத் தண்டனை மற்றும் வெகுமதிகளில் நம்பிக்கையற்றவர்கள். அவர்கள் மனிதன் மீண்டும் மீண்டும் இவ்வுலகிலேயே பிறந்து தன் வெகுமதிகளையும் தண்டனைகளையும் பெற்றுக்கொள்கின்றான் எனவும் சுவர்க்கமும் நரகமும் இவ்வுலகிலேயே உள்ளன எனவும் கூறுகின்றனர். விண்ணுலகத்தைப் பற்றி இவர்கள் எதுவும் கூறவில்லை. இவர்களுக்குள் இரு பிரிவினர் இருக்கின்றனர். ஒரு பிரிவினர் சில வேளைகளில் மனிதன் இவ்வுலகில் ஒரு மிருகமாகப் பிறந்து பல துன்பங்களை அனுபவித்து மிருக உலகிலிருந்து விடுபட்டு மனித உலகில் மீண்டும் பிறக்கின்றான் எனக் கூறுகின்றனர். இது கூடுவிட்டுக் கூடு பாய்தல் எனக் கூறப்படுகிறது. மற்ற பிரிவினர் மனிதன் இவ்வுலகிலேயே மீண்டும் மீண்டும் பிறந்தும் அதன் வாயிலாக முற்பிறவியில் செய்தவற்றிற்கான தண்டனை மற்றும் வெகுமதியைப் பெறுகின்றான். இது மறுபிறவி அல்லது புனர்ஜென்மம் எனக் கூறப்படுகிறது. இவ்விரு குழுக்களுமே இவ்வுலகம் தவிர வேறு உலகங்கள் பற்றி எதுவுமே கூறவில்லை.

இரண்டாது பிரிவினர் பரலோகம் என ஒன்று உள்ளதென வலியுறுத்துகின்றனர் மற்றும் மறுபிறப்பின் வாயிலாக மனிதன் முழுநிறைவை நோக்கி முன்னேறுகிறான் எனவும் கூறுகின்றனர். மனிதன் லௌகீகம் மற்றும் சக்தியுடையவன் என இவர்கள் நம்புகின்றனர். அதாவது மனிதன் முதல் வட்டத்தில் லௌகீகமானவனாக இருந்து பிறகு மீண்டும் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்பி ஒரு தூய்மையான கண்ணாடியைப் போன்று ஆகிடும் வரை மேம்பாடும் மெருகும் அடைகின்றான்; மற்றும் சக்தி என்பது அதாவது ஆன்மா என்பது, இதனூடே அனைத்து முழுநிறைவுகளுடனும் வெளிப்படுகிறது என இவர்கள் கூறுகின்றனர்.

இப்போது மறுபிறவியென்பது ஏன் சாத்தியப்படாது என்பதைப் பார்ப்போம். வெளித்தோற்றம் என்பது உள்மெய்ம்மையின் வெளிப்படுத்தலே ஆகும். இவ்வுலகம் ஆன்மீக உலகின் வெளிப்படுத்தலாகும். லௌகீக உலகம் ஆன்மீக உலகோடு ஒத்திசைவானது. மேலும் உலகில் ஒரே உருவம் கொண்ட இரு பொருள்கள் எங்குமே கிடையாது. (உதாரணமாக, ஒரே மாதிரியான கட்டைவிரல் கைரேகைக் கொண்ட இருவர் உலகில் எங்குமே கிடையாது). தனித்துவம் எனும் தன்மை உலகம் முழுவதுமே வியாபித்துள்ளது. ஆகவே, உலகில் ஒத்த உருவம் கொண்ட இருவரை காண்பது இயலாததாகும். எல்லா பொருள்களிலும் தனித்துவத்தை நம்மால் காண முடிகிறது. தனிச்சிறப்பும் கடவுளின் ஒருமைத்தன்மையும் எல்லா பொருள்களிலும் உள்ளடங்கியுள்ளது ஆகவே, ஒரே உருவின் மீள்தோற்றம் என்பது முற்றிலும் இயலாததாகும்.

அதாவது, ஒரே மனிதன் இறந்தபின் மீண்டும் முற்பிறவியின் அதே மெய்ம்மையோடு மறுபடியும் பிறப்பது இயலாதது என அப்துல் பஹா இங்கு எடுத்துக்கூறுகிறார். ஒரு முறை மனிதன் இறந்துவிட்டால் அவன் உடல் மண்ணுக்குள் சென்று உரமாகி மற்ற உயிரனங்களுக்கு உணவாகிவிடுகின்றது. பிறகு மறுபடியும் இதே மனிதன் பிறப்பது எவ்வாறு? அல்லது அதே மனிதன் மிருகமாகப் பிறக்கின்றான் என வைத்துக்கொண்டாலும் மிருகம் மிருகந்தான் அது மனிதனாக முடியாது. இருள் என்பது என்னதான் முயன்றாலும் ஒளியாகவே முடியாது. பாறை என்னதான் முயன்றாலும் அது மென்மைபெற முடியாது. ஆகவே மனிதன் மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குச் செல்லும்போது அவன் மனித நிலையில் பெற்றிருந்த அனைத்துப் பண்புகளையும் இழந்துவிடுகின்றான். அதன் பின் அவன் மனிதனாக மறுபடியும் பிறக்கும் போது அவன் குழந்தை நிலையிலிருந்து எல்லா மனிதப் பண்புகளையும் மீண்டும் பெறவேண்டும்.

மறுபிறவி குறித்த கருத்து அது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு மாறாக மேலும் பல கேள்விகளுக்கே இடமளிப்பதாக உள்ளது. உதாரனமாக, ஒரு பிறவியில் அடைந்த அனுபவங்கள் குறித்த ஞாபகம் எதுவுமே இல்லாமல் அதற்கடுத்த பிறவியில் ஒரு மனிதன் முற்பிறவியின் அனுபவங்களை அடித்தலமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் எவ்வாறு மேம்பாடு அடைவது? அதே போன்று, ஒரு பிறவியில் நல்ல மேம்பாடு கண்ட ஒரு மனிதன் தன் அடுத்த பிறவியில் அந்த நிலையிலிருந்து வழுக்கி விழ மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? இப்படி மாறி மாறி ஒவ்வொரு ஜென்மமாக எடுத்தும் அவன் முன்னேறவே இல்லையெனில் என்னவாவது?

“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது,” என்பது அவ்வையாரின் கூற்றாகும். பிறவிகளிலேயே மானிடப் பிறவி அதி உயர்ந்த பிறவியாகும். படைப்புப் பொருள்கள் அனைத்தையும் அதனதன் சாயலில் படைத்த கடவுள் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் என்பது பெரும்பாலான சமயங்களின் நம்பிக்கையாகும். இதன் காரணமாகவே மானிடப் பிறவி மிக அரிதான பிறவியாகின்றது மற்றும் மனிதனென்பவன் தெய்வமாகலாம் எனவும் கூறப்படுகிறது. ஒரு மனிதன் வாழ்க்கையை ஒழுங்காக வாழாமல் இருந்தாலும், அவன் எடுத்திருக்கும் பிறவி அரிதான பிறவியாகும். அவன் மனிதப்பிறவிக்கான ஆற்றல்களையும் பண்புகளையும் பிறக்கும் போதே பெற்றுள்ளான். அப்படி அவன் பாவங்கள் புரிந்தும் அதன் பயனாக அவன் அடுத்த பிறவியில் மிருகமாக பிறக்கின்றான் என வைத்துக்கொள்வோம். ஓர் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தாலன்றி ஒரு மனிதன் மோட்சத்தை அடையமுடியாது. ஆனால், மிருகங்களுக்கு பகுத்தறிவும் கிடையாது தேர்வு செய்யும் ஆற்றலும் கிடையாது. அவற்றுக்கு நல்லது கெட்டதும் தெரியாது, துன்பம் மற்றும் இன்பத்தின் கருத்தாக்கங்களை அதனால் புரிந்துகொள்ள இயலாது. ஆன்மீக ரீதியில் அவற்றுக்கு முன்னேற்றமோ பின்னேற்றமோ கிடையாது. மனித ஜென்மத்தின் மூலமாகவே அவன் நற்செயல்கள் புரிய முடியும் ஆன்மீக ரீதியில் முன்னேர முடியும். ஆகவே மனித ஜென்மம் மூலமின்றி மனிதன் ஆன்மீக ரீதியில் முன்னேற முடியாது. அதுவும் இந்த வாய்ப்பு அவனுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுகிறது.

அல்லது ஒரு மனிதன் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தன் பாவங்களிலிருந்து மோட்சம் பெற்று சுவர்க்கம் செல்வான் என்பது தர்க்க ரீதியில் எவ்விதத்தில்தான் சாத்தியப்படக்கூடும்? பூரணத்துவம் அல்லது முழுநிறைவு என்பது கடவுளுக்கே உரியது, மனிதனுக்கு அது கிடையாது. மனிதன் முடிவே இல்லாத முடிவு வரை முன்னேறிக்கொண்டே இருப்பான் ஆனால், முழு பூரணத்துவத்தை அவன் எட்டுவது சாத்தியப்படாது.

மறுபிறவி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வருடா வருடம் இறந்தோருக்காக பூஜைகள் செய்வது எதற்காக? அவர்களில் யார் மோட்சம் அடைந்துவிட்டனர் அல்லது யார் மறுபிறவி எய்தியுள்ளனர் என்பதை இத்தகைய பூஜைகள் செய்வோர் அறிவார்களா? இறந்தோருக்கான பூஜைக்கும் மறுபிறவி நம்பிக்கைக்கும் சம்பந்தம்தான் என்ன?

மறுபிறவி என்பது சிருஷ்டியின் ஓர் அம்சம் என்பதற்கு மாறாக அது விளங்கிக்கொள்ள முடியாத ஒரு விஷயத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு விளக்கம் என்பதே பொருத்தமாகும். வேதங்களிலிருந்து விளைந்தவை உபநிஷதங்களாகும். இந்த உபநிஷத உரைக்காரர்களிடமிருந்தே முதன் முதலில் மறுபிறவி குறித்த கருத்து தோன்றியதாக கருதப்படுகிறது. அதாவது இவ்வுலகில் நமது கர்மங்களின் அடிப்படையில்தான் நாம் இறந்தவுடன் நமது ஆன்மா மோட்சகதி அடைகிறது அல்லது மீண்டும் மனிதப் பிறவி எடுக்கின்றது.

கீதோபதேசமான பகவத் கீதையில் மறுபிறவி குறித்த கூற்றுகள் பலவுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

ஸ்ரீ கிருஷ்னர் மனிதனின் இறப்புக்குப் பின் அவனுடைய ஆன்மா புது உடல் பெறுகிறது எனப் பின்வரும் செய்யுளில் கூறுகிறார்.

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥
நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

எவ்வாறு ஒரு மனிதன் தன் உடைகள் நைந்துவிட்டால் அவற்றைக் கழற்றி எறிந்துவிட்டு புதிய உடைகள் பெறுகின்றானோ அதே போன்று உடல் நைந்துவிட்டால் புதிய வேறொன்றை மனிதன் பெறுகிறான் என்பது இதன் பொருளாகும்.

இங்கு புதியது என்பது பௌதீகமான ஒரு புதிய உடல் என குறிப்பிடப்படவில்லை. இவ்வுலக வாழ்விற்கு மனிதனுக்குப் பௌதீகமான ஓர் உடல் தேவைப்படுகிறது. அதாவது இங்கு மனிதன் மற்றும் உடல் என இரு விஷயங்கள் உள்ளன. மனிதன் நிரந்தரமானவன் ஆனால் அவன் உடல் நிரந்தரமற்றது அதற்கென ஒரு மெய்ம்மை கிடையாது. ஒரு மனிதனின் தனித்துவம் அழிவதில்லை. அவன் உடலே அழிகின்றது.

नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥१६॥
இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

அதாவது இல்லாத ஒன்றுக்கு உருவம் கிடையாது; அதே போன்று மெய்ம்மை உடையது என்றுமே இல்லாமல் போகாது. ஆகவே ஒரு தனித்தன்மை அல்லது மெய்ம்மையோடு பிறக்கும் ஒரு மனிதன் இறந்தபின் மீண்டும் அதே மெய்ம்மையோடு பிறப்பது முற்றிலும் இயலாததாகும். இறந்த பின்னும் அவனுடைய மெய்ம்மை வெவ்வேறு நிலைகளில் தொடந்து மேம்பாடு அடையுமே ஒழிய அதன் மெய்ம்மை மாறி வேறு ஒரு மெய்ம்மையில் அது மறுபடியும் பூமியில் பிறக்காது செயல்படவும் செய்யாது.

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥
ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

இங்கு ஸ்ரீ கிருஷ்னர் உடல் சார்ந்த ஒரு தொடர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதாவது குழந்தைப் பருவம், இளமைப் பருவம் மற்றும் முதுமைப் பருவம் வாய்ப்பது போல் முதுமையைத் தொடர்ந்து மனிதனுக்கு வேறோர் உடல் வாய்க்கின்றது. ஆனால், இங்கும் மனிதன் மீண்டும் அதே மனிதப்பறவி பெறுவான் என கூறப்படவில்லை.

இதே தொனியிலான பல கூற்றுகளை நாம் ஆங்காங்கே கீதோபதேசத்தில் காணலாம். ஆனால், புது உடல் கிடைக்கும் எனக் கூறும் அதே நேரத்தில் இறப்பிற்கு பின் ஆன்மாவுக்கு மீண்டும் உலக வாழ்க்கை அமையும் என அவர் எங்குமே வெளிப்படையாகக் கூறவில்லை.

ஒருவன் தன் கர்மபலன்களின் விளைவாக மிருகப்பிறவியை அடைகின்றான் எனும் கருத்தின் கருத்தாக்கம் அவன் மனிதனாக இருந்தபோதும் அவனுடைய குணங்கள் ஒரு மிருகத்தின் குணங்களாக இருக்கின்றன ஆகவே அவன் நிலை அத்தகைய ஒரு மிருகத்தின் நிலையே என்பதாகவும் கருதப்படலாம். மாறாக, ஒரு மனிதன் உண்மையிலேயே ஒரு மிருகமாக பிறக்கின்றான் என்பது சரியாகாது.

படைப்பனைத்தும் ஒரே சீராக ஒரே திசையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது. எல்லாமே முன்னோக்கியே செல்கின்றன. எதுவுமே பின்னோக்கிச் செல்வதில்லை. அதே போன்றதுதான் மனிதப் பிறப்பும். கடவுளின் தெய்வீக உலகிலிருந்து உதிக்கும் மனிதன் தாயின் கர்ப்பத்தில் உருபெற்று, இவ்வுலகில் பிறந்து வளர்ந்து முதுமையடைந்து இறக்கின்றான். ஆனால் அவன் இறப்பு ஒரு பிறப்பேயன்றி வேறில்லை. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் பிறக்கும் மனிதன் இவ்வுலகிலிருந்து அவ்வுலகமான ஆன்மீக உலகிற்குள் பிரவேசிக்கின்றான். அங்கு ஆரம்பமில்லா ஆரம்பத்திலிருந்து முடிவில்லா முடிவுவரை அவன் பற்பல உலகங்களினூடே தொடர்ந்து வளர்ச்சியடைந்து ஆன்மீக ரீதியில் மேம்பாடு கண்டு கடவுளின் அன்மையை நெருங்கிக்கொண்டிருப்பான்.

नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्॥१२॥
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

உலக வாழ்வில் நமது நோக்கமே கடவுளை அறிந்து அவர் வழியில் செயல்படுவதே ஆகும். இதன்வாயிலாகத்தான் மனிதன் ஆன்மீக ரீதியில் முன்னேற முடியும். இதைத்தான் பின்வரும் செய்யுளும் எடுத்துரைக்கின்றது.

मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥
பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார்.

ஹைஃபா நகரின் பஹாய் பூங்கா


இஸ்ரேல் நாட்டில் உள்ள பஹாய் புனிதஸ்தலங்களுள் இரண்டு மிகவும் முக்கியமானவையாகும். பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களான பாப், பஹாவுல்லா இருவரும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இரு இடங்களும் பஹாய்களால் புனிதஸ்தலங்கள் என கொண்டாடப்படுகின்றன. உலகம் முழுவதிலிமுள்ள பஹாய்கள் இவ்விடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிடவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.பஹாவுல்லா அவர்கள் 1892ல் தமது விண்ணேற்றத்திற்குப் பிறகு ஆக்கோ நகரில் பாஹ்ஜி எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். பாப் அவர்கள் 1850ம் ஆண்டு அரசாங்கத்தால் மரண தண்டனைக்கு உட்படு்த்தப்பட்டு 750 இராணுவ வீரர்களின் துப்பாக்கி இரவைகளுக்கு இரையாக்கப்பட்டார். இவரின் நல்லுடல் அவருடைய மரணத்திற்குப் பின் அவர் கொல்லப்பட்ட நகரமான தாப்ரீஸ் நகருக்கு வெளியே இருந்த ஒரு மதகில் வீசியெரியப்பட்டது. அதன் நோக்கம் பாப் அவர்களின் உடல் மிருகங்களுக்கு இரையாக வேண்டும் என்பதே ஆகும். ஷீயா மதப்பிரிவினரிடையே கடவுளின் அவதாரங்கள் குறித்து ஒரு நம்பிக்கை உள்ளது. அதாவது, கடவுளின் அவதாரங்களின் உடலை மிருகங்கள் தீண்டமாட்டா என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பாப் அவர்கள் கடவுளின் அவதாரம் என ஏற்க மறுத்த அரசாங்கம் அவரை ஏமாற்றுக்காரர் என நிரூபிப்பதற்காக அம் மதகில் அவருடைய உடலைக் கிடத்தி மிருகங்களுக்கு இரையாக்க நினைத்தனர். ஆனால், பாப் அவர்களின் மரணத்திற்குப் பின் நல்லிரவில் அவருடைய நம்பிக்கையாளர்கள் சிலர் அவருடைய உடலை மீட்டு ஒரு பட்டு நெசவாலையில் ஒளித்து வைத்தனர். இவ்விதமாக அவருடைய உடல் சுமார் 60 வருட காலங்கள் இங்கும் அங்குமாக ஒளித்து வைக்கப்பட்டு இறுதியில் அப்துல் பஹா அவர்களின் வழிகாட்டலில் ஹைஃபா நகருக்கு கொண்டுவரப்பட்டு அங்கு கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய புனித உடலைத் தாங்குவதற்காக பர்மாவில் உள்ள பஹாய் நம்பிக்கையாளர்கள் சுமார் ஒரு டன் எடையுடைய பளிங்குக் கல்லினால் ஆன ஒரு கற்சவப்பெட்டியை செய்து ஹைஃபா நகருக்கு அனுப்பி வைத்தனர். பாப் அவர்களின் உடல் இதில் வைக்கப்பட்டு பின் கார்மல் மலை சதுக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு மாடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்புனித மாடத்தைச் சுற்றிலும் இன்று மனதை மயக்கும் பூங்காக்களும் படித்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன மற்றுமற் யூனெஸ்கோவினால் (UNESCO) உலக மரபுச்செல்வஸ்தலங்களின் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாப் அவர்களின் நல்லடக்கத் திருமாடத்தையும் அதைச் சுற்றிலுமுள்ள கண்ணக் கவரும் பூங்காக்களையும் படித்தளங்களையும் கீழ்க்காணப்படும் இணைப்பின் வழி காணலாம்.

ஹைஃபா நகரின் பஹாய் பூங்கா

உடல்நலம் – தேங்காய்


உடல்நலம்

தேவைப்படும்போது மருத்துவ உதவியை நாடாது இருந்திடாதீர்கள், ஆனால், உடல்நலம் தேறியவுடன் அதைத் தவிர்க்கவேண்டும்… முடிந்தவரை, மருந்துவகைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து நோயை உணவின் மூலமாக தீர்த்திட முயலுங்கள்; உங்களுக்குத் தேவைப்படுவது ஒரே ஒரு மூலிகையில் இருந்திடக் கண்டால், பல்கூறான மருந்துவகைகளை நாடாதீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்போது மருந்துவகைளை நாடாதீர்கள், ஆனால் தேவைப்படும் போது மட்டுமே அவற்றைப் பயன்படு்த்துங்கள்.

-பஹாவுல்லா-

மேற்கண்ட குறிப்பின் வாயிலாக உடல்நலக் குறைவை உணவுவகைகளின் வாயிலாகவே தீர்த்திட முயலவேண்டும் என்பது பஹாவுல்லாவின் அறிவுரையாகும். இவ்வகையில் இன்றைய நவீன உலகில் இயற்கை மருத்துவமுறை பல காலமாக குறைந்துவந்தும் இன்று மீள்ச்சி கண்டும் உள்ளது. இவ்வகையில் நமது தினசரி உணவுவகைகள் பலவற்றின் உள்ளார்ந்த நன்மைகளை அவ்வப்போது காண்போம்.

தேங்காயின் நன்மைகள்

முதலாவதாக, தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பல காலமாக பயன்படு்த்தப்பட்டு வந்திருந்தாலும் கடந்த பல பத்தாண்டுகளாக தேங்காய் எண்ணெயில் கொலெஸ்ட்ரோல் (cholesterol) அதிகம் ஆகவே அதனை பயன்படுத்துவது, முக்கியமாக, இருதய நோய்க்கு வழிவகுக்கும் எனும் தவறான கருத்து பரப்பப்பட்டு வந்துள்ளது. இத்தவறான கருத்தின் பரப்பலில் மார்ஜரின் தாயாரிப்பாளர்களின் பங்கை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால், தேய்காய் எண்ணெய்க்கு சாற்றப்பட்ட அபாயங்கள் உண்மையில் மார்ஜரின் வகைகளுக்கே பொருந்தும் என்பது விரைவில் அம்பலமானது. அதுமட்டுமல்ல, நல்ல உடல்நலத்திற்கான தேங்காய் எண்ணெயின் நன்மைகள் குறித்த விவரங்கள் பிரமிக்க வைப்பதாகவே இருக்கின்றது.

தேங்காய்

தேன்னைமரம் “கோக்கோஸ் நூசிஃபெரா (Cocos Nucifera)” எனும் அறிவியல் பெயர் கொண்டதாகும். அது ஆரம்ப காலங்களில் கோக்கோ என அழைக்கப்பட்டது. ஸ்பேய்ன் மொழியில் கோக்கோ என்றால் குரங்கு முகம் என்பதாகும். அதாவது தென்னைக்கு இயல்பாகவே கண்களும் வாயும் இருப்பதே இதற்கு காரணமாகும். பல பசிஃபிக் தீவுகளில் வாழும் மக்களுக்கு தேங்காய் இன்றியமையாத உணவாக இருக்கின்றது. ‘உயிர்மரம்’ என அழைக்கப்பட்டும் அளவிற்கு தேங்காய் இவர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் இருக்கின்றது.

தேங்காயின் நன்மைகள் குறித்த பின்வரும் தகவல்களைப் பார்ப்போம்:

இயற்கை மருத்துவ ரீதியில் தேங்காய் பல நோய்களுக்கு நிவாரணமாக பயன்படுகின்றது. அவற்றுள் வாய்ப்புண், ஆஸ்த்துமா, வழுக்கைத்தலை, இருமல், வெட்டுப்புண், சூட்டுப்புண், சலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, காதுவலி, காய்ச்சல், மாதவிடாய் பிரச்சனை, மூத்திரக்கல், தோல்வியாதி, தொண்டைப்புண், வீக்கம், பல்வலி, காசநோய், டைஃபாய்ட், வாயிற்றுவலி என கணக்கிலடங்கா பல நோய்களுக்கு தேங்காய் நிவாரணமாக இருக்கின்றது. அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு இடம் போதாது.

அடுத்து தேங்காய் எண்ணெயின் பயனைப் பார்ப்போம். தேங்காய்க்குப் பல வியப்பளிக்கும் பயன்பாடுகள் இருந்தபோதும் அதன் உண்மையானப் பயன் தேங்காய் எண்ணெயிலேயே உள்ளது. ஒருகாலத்தில் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லதல்ல என தவறாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புச்சத்துவகை தனிச்சிறப்புவாய்ந்ததும் பிற கொழுப்புவகைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டதும் ஆகும் மற்றும் அதற்கு உடல்நலத்தை வழங்கக்கூடிய பல தனித்தன்மைகளும் உள்ளன. இன்று சிறிது சிறிதாக தேங்காய் எண்ணெயின் இன்றியமையா நன்மைகள் வெளிப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, அல்ஸைமர்ஸ் (alzheimers) எனப்படும் வியாதி. இது பெரும்பாலும் வயதானவர்களை தாக்கும். இந்த நோய்கண்டவர்கள் தினமும் நான்கு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து, தேங்காய் எண்ணெயின் பயன்பாடு இருதய நோயைக் குறைக்கும் ஒரு வழியாகவும் இருக்கின்றது. அதை உட்கொள்வது உடலின் (metabolism)த்தை அதிகரித்து உடல் பருமன் குறைந்திட உதவுகிறது.

தேங்காய் எண்ணெயின் பிற பயன்களில் சில:

உடலின் நோய்த்தடுப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.
தேங்காய் எண்ணெயை தலையில் நன்கு தேய்த்துவிட்டால் தலைவலி குறையும்.
தேமலை அகற்ற உதவுகிறது.
கிருமிநாசினியாக செயல்படுகிறது.

தேங்காயின் நன்மைகளை மேலும் நன்கு அறிந்து அதைப் பயமில்லாமல் பயன்படுத்துவோமாக.

பாத்திரங்களை கழுவுவது எப்படி


குடும்பப்பெண்களின் ஒரு முக்கிய பணி சமையல் செய்வது மற்றும் திரண்டுவிட்ட பாத்திரங்களை சுத்தமாக கழுவுவது. பின்வரும் குறும்படம் பாத்திரங்களை எப்படி நன்கு கழுவுவது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதில் கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது.

பாத்திரங்களை இப்படித்தான் கழுவவேண்டும்

நீங்கள் எந்த விதம்?


உலகில் பலவிதமான மனிதர்கள் இருக்கின்றனர். செயல்பாட்டை பொருத்தவரை இவர்களை 6 விதமாக பிரிக்கலாம்.

நீங்கள் இதில் எந்த விதம்?

 

பலூன் – இவர் வெறும் காற்று நிரைந்தும் கோபம் கொண்டால் அல்லது ஏதாவது புரியாவிட்டால் உடனே வெடிப்பவர்

 

பூனைக்குட்டி – இவரை சதா வாஞ்சையுடன் பாராட்டிக்கொண்டிருந்தால் செயல்படுவார்

 

தள்ளுவண்டி – இவரை யாராவது தள்ளிக்கொண்டிருந்தால் செயல்படுவார்

 

கனோ (சிறுதோணி) – இவரை யாரவது இயக்கிக்கொண்டிருக்கவேண்டும் இல்லாவிட்டால் செயல்படமாட்டார்.

 

மின்விளக்கு – இவர் திடீரென செயல்படுவார் பிறகு திடீரென காணாமல் போய்விடுவார்

 

விண்மீன் – இவர் யார் பார்க்கின்றார்களோ இல்லையோ தன்பாட்டுக்கு செயல்பட்டுக்கொண்டிருப்பார்.