கல்விக்கெதிரான தாக்குதல்


சமய நம்பிக்கையைக் காரணமாகக் கொண்டு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி மறுக்கப்படுவதுண்டா?

கிட்டத்தட்ட இருநூறு நாடுகளில் ஏறத்தாழ என்பது இலட்சம் நம்பிக்கையாளர்களைக் கொண்ட பஹாய் சமயம் உலகப் பெரும் சமயங்களின் வரிசையில் அதுவும் ஒன்றாக இருக்கின்றது.

ஆனால், ஈரான் நாட்டிலோ, மனிதகுலம் முழுவதன் ஆன்மீக ஒற்றுமையை வலியுறுத்தும் பஹாய் சமயத்தின் விசுவாசிகள் பல நூற்றாண்டுகளாகவே கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். இக்கொடுமைகள் சமயம் மற்றும் சமூக ரீதியானவையாகும்; குறிப்பாக ஆண் பெண் சமத்துவம் பற்றிய கோட்பாடு தீவிர பழமைவாத மத ஆட்சியாளர்களுக்குப் பெரும் மிரட்டலாக விளங்குகிறது.

சாம்ரா அக்தர்கவாரி மேற்கொண்டு கூறுகிறார்.

ஒருவரின் சமய நம்பிக்கைக்காக பல்கலைக்கழகம் நுழைய தடைவிதிக்கப்படுவதை கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா?

ஆனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பெற தடைவிதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டிலோ இது சாதாரணமாக நடக்கும் ஒரு செயலாகும். இவ்வாறாகவே BIHE எனப்படும் பஹாய் உயர்கல்வி நிலையம் உருவானது. இளங்கலை முதல் முதுகலை வரை இப் பஹாய் கல்வி நிலையம் பட்டப்படிப்பு வழங்கிவருகிறது. இப்பட்டங்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

இந்தக் கல்விநிலையம் பல வருடங்களாகவே தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளபோதும் ஈரான் நாட்டின் பஹாய் சமூகம் அத்தாக்குதல்களின் பாதிப்பிற்கு ஆளாகமல் தன்னைப் பாதுகாத்தே வந்துள்ளது.

“ஓர் எளிய முறை காணப்படவேண்டும்,” என BIHE-ல் பயின்று பட்டம் பெற்று அதே கல்விநிலையத்தில் ஒரு போதகராக பணியாற்றும் ஸீனூஸ் அக்தர்கவாரி கூறுகிறார்.

பல முறை தாக்குதல்களுக்கு உட்பட்ட பிறகு, மேற்கொண்டு தாக்குதல்களிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அக்கல்விநிலையம் இணையத்திற்கு நிலைமாறியது, இருந்தும் இணைய வசதியின்மை மற்றும் அகப்பக்கங்கள் மூடப்படுவது போன்ற பிரச்சனைகள் தொடரவே செய்கின்றன.

எது எவ்வாறு இருந்தபோதும், பஹாய்கள் எல்லா வேளைகளிலும் தங்கள் பாதையில் தடங்கல்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டே வந்துள்ளனர், மற்றும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்குப் புதிய அகப்பக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன.

பேசாமல் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவதுதானே?

சிறுவயது முதற்கொண்டே சேவை மற்றும் அர்ப்பன உணர்வுகள் பஹாய்களுக்கு ஊட்டப்படுவதே அவர்கள் இத்தகைய தொல்லைகளைத் தாங்கிக்கொண்டு தங்கள் தாய்நாட்டிலேயே இருப்பதற்கான காரணமாகும்.

கல்வி குறித்த பஹாய்களின் கருத்தை ஸீனுஸ் கூறுகிறார்: “மக்கள் தங்கள் சிந்தனையாற்றலை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் வாழ்வுமுறையை மேம்படுத்திக்கொள்ளவும், உலக சீர்திருத்தத்திற்கு உதவுவதுமே கல்வியின் குறிக்கோளாகும். அதோடு தங்கள் நாடான ஈரானின் சீர்திருத்தத்திற்கு உதவுவதும் குறிக்கோளாகும்.”

தங்கள் தாய்நாட்டில் எத்தகைய வேலை வாய்ப்புக்கும் வழியே இல்லையென அறிந்துள்ளபோதும் அவர்கள் தங்கள் கல்வியை மேம்படுத்திக்கொள்வதற்கான முக்கிய காரணம் இதுவே ஆகும். வருங்காலச் சந்ததியினருக்கு உதவ வேண்டும் எனும் கருத்து மிகவும் வலுவாக இரு்ககின்றது மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான ஒரே வழி கல்வியே ஆகும்.

அநீதிகள் நிறைந்திருந்த போதும் பஹாய் சமூகம் ஏன் இன்னமும் நாட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கின்றனர் என கேட்கப்பட்ட போது:

“மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவதற்கு யாராவது இருக்கவேண்டும், எல்லாரும் வெளியேறிவிட்டால் வருங்கால சந்ததியினருக்காகப் பாடுபடுவதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். நாம் அனைவரும் ஈரானியர்கள், நாட்டைவிட்டு நாங்கள் ஏன் வெளியேறவேண்டும்?” என பதிலளிக்கப்பட்டது.

நீங்கள் உங்கள் பங்கிற்கு ஈரான் நாட்டின் பஹாய்களுக்கு உதவ விரும்பினீர்களானால் கீழே வழங்கப்பட்டிருக்கும் அகப்பக்க இணைப்பிற்கு செல்லவும்:

கல்விக்கெதிரான போர்

தொடர்புடைய பிற இணைப்புக்கள்:

உடல்நலம் – இலவங்கப் பட்டை


பொதுவாக இலவகங்கத்தின் (cinnamon) பயன் அதை உணவு வகைகளில் சேர்த்து உணவின் சுவையை அதிகரிப்பதற்கே என பலர் நினைக்கலாம். ஆனால், இலவங்கத்திற்கு இதைவிட முக்கியமான மருத்துவப் பயன்கள் உள்ளன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

இலவங்கத்தில் பலவிதங்கள் உண்டு. குறிப்பாக ஸ்ரீ லங்காவில் பயரிடப்படும் லவங்க மரத்திலிருந்து எடுக்கப்படும் உள்பட்டை வெகு மணமானதாகும் மற்றும் இலவங்கம் சீனா,வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. வாங்கும் போது எந்த வகை இலவங்கம் உங்களுக்கு நல்லது என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

மருத்துவப் பயன்கள்:

அஜீரனம், வாயு, வயிறு உப்பிசம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு லவங்கப்பட்டை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சமீப காலமாக நவீன மருத்துவ ஆய்வுகள் அவற்றின் பார்வையை லவங்கத்தின் மீது செலுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து ஆர்வத்தைத் தூண்டும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லவங்கப்பட்டைக்கு ஒரளவிற்கு (anti-inflammatory) இயல்பு உள்ளது. வேறோர் ஆய்வில் லவங்கப்பட்டையின் வாசத்தை நுகர்வது ஞாபகச்சக்தியை அதிகரிக்கின்றது என்பதை சில மாணவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், இத்தகைய ஆய்வுகளுக்கும் அப்பால் இலவங்கத்துக்கு வேறு முக்கியமான தன்மைகள், அதாவது குழுக்கோஸ் மற்றும் கொழுப்புச் சத்தைக் குறைக்கும் தன்மைகள் உள்ளது தெரியவந்துள்ளது.

சர்க்கரை வியாதி

உலக மக்களுள் பலர் இன்று சர்க்கரை வியாதியினால் அவதிப்படுகின்றனர், அதாவது இதை இன்சுலின் மறுப்பு நிலை எனக் கூறுவர். ஆனால், இலவங்கப்பட்டைத் தூளை ஓர் அரைக் தேக்கரண்டியளவு உட்கொண்டாலும் இன்சுலின் உணர்வுத்திறன் அதிகரிப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு உருவாவது தெரியவந்துள்ளது. மேலும், இலவங்கப்பட்டையை உட்கொள்வது ஜீரணத்தையும் மெட்டாபோலிசத்தையும் அதிகரிக்கின்றது மற்றும் இருதய நோயை ஒரளவுக்கு கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவரக்கூடியது. ஆராய்ச்சிகள் முழுமைபெறாவிட்டாலும், இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகள் இலவங்கத்தின் நற்பயன்களை ஓரளவிற்கு வெளிப்படுத்தியுள்ளன. முக்கியமாக இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்தும் அதே வேளை இரத்த அலுத்தம், மற்றும் LDL கொளுப்பு வகைகளையும் இலவங்கம் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆய்வுக்குறிப்புகள் காட்டுகின்றன.

மேற்கொண்டு இலவங்கத்தின் நன்மைகளுள் சில:

  • ஒரு தேக்கரண்டி அளவே லகவங்கப்பட்டைத் தூளில் 28மி.கி. கால்சியம், 1மி.கி. இரும்புச் சத்து, விட்டமின் C, விட்டமின் K, மங்கனம் ஆகியவை உள்ளன.
  • இரத்த குளுக்கோஸை முறைப்படுத்தி டைப் 2 சர்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது.
  • யீஸ்ட் (yeast) தொற்றைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.
  • லூக்கேமியா மற்றும் லிம்ஃபோமா (leukemia & lymphoma) புற்றணுக்களின் பரவலை குறைக்கும் ஆற்றல் பெற்றது.
  • இரத்த உரைவை தடுக்கும் சக்தி பெற்றது
  • தினசரி காலையில் அரைத் தேக்கரண்டி லவங்கப்பட்டைத் தூளை ஒரு மேஜைக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவாத நோய் ஒரே வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைத்து ஒரு மாதத்தில் நோய் கண்டவர்கள் வலியின்றி நடக்கவும் முடிந்துள்ளது.
  • உணவில் சேர்க்கப்படும்போது அது கிருமிநாசினியாக செயல்பட்டு உணவு கெட்டுப்போகாமல் தடுக்கின்றது.
  • சில பழச்சாறு வகைகளில் கலக்கப்படும்போது அது E.coli கிருமிகளை உருவாக்கத்தைத் தடுக்கின்றது.
  • உணவில் பூஞ்சனம் (பூசனம்) ஏற்படாமல் தடுக்கின்றது.

உடல்நலம் – கறிவேப்பிலை


கறிவேப்பிலையின் பயன்கள்

தென்னிந்திய சமையல்முறைகளில் கறிவேப்பிலையென்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும். ஆனால், பொதுவாகவே சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கிவைத்துவிட்டே உணவை உண்போம். இனி அவ்வாறு செய்ய வேண்டாம். ஏன்?

கறிவேப்பிலைக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அது ஜீரணத்திற்கான என்ஸைம்களைத் (enzymes) தூண்டிச் சுரக்கவைக்கின்றது மற்றும் இதனால் உணவு விரைவாக ஜீரணமாகின்றது. உணவு உண்டபின் ஒரு டம்ளர் மோரில் சிறிது பெருங்காயமும் கறிவேப்பிலை இலைகள் சிலவும் கலந்து குடிப்பது ஜீரணத்திற்கு நல்லதாகும்.

– வாந்தி மற்றும் அஜீரணத்திற்கு நல்ல நிவாரணியாகும். கறிவேப்பிலைச் சாற்றில், சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சர்க்கரையும் கலந்து குடிக்கவும்.

– உடல் பருமன் குறைய தினசரி கறிவேப்பிலை இலைகள் சிலவற்றை மென்று சாப்பிடவும்.

– கறிவேப்பிலை கண்பார்வையைத் தெளிவாக்கும், ஆகவே உணவு உண்ணும்போது கறிவேப்பிலையைத் தூக்கியெறிந்துவிட வேண்டாம். கறிவேப்பிலை கண்களில் காட்டராக்டை (cataract) தடுக்கின்றது.

– முடியின் வளர்ச்சிக்கும் நிறத்திற்கும் கறிவேப்பிலை நல்லதாகும். அதை அப்படிய சாப்பிடுவது சிரமமாக இருந்தால் இப்போது கடைகளில் விற்கப்படும் கறிவேப்பிலைத் தூளை வாங்கி தோசை அல்லது சாதத்துடன் உண்ணலாம். கறிவேப்பிலையை நீங்கள் வீட்டிலேயே தூள் செய்து உண்ணலாம், அது முடியில் நறை விழுவதைத் தடுக்கும்.

– அல்லது நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயில் கறிவேப்பிலை இலைகளைக் கலந்து அடுப்பில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை தலையில் தேய்ப்பது முடியை நலமாக வைத்திருக்க உதவும்.

கறிவேப்பிலை குறித்த உடல்நல குறிப்புகளுள் இவை சில மட்டுமே. கறிவேப்பிலையை இப்போதிருந்தே உணவில் கலந்து சாப்பிடுங்கள்.

– கறிவேப்பிலை மரம் வீட்டருகே இல்லாதவர்கள் கடையில் வாங்கும் கறிவேப்பிலை இலைகளை உருவி ஈரமில்லாமல் ஒரு பிலாஸ்டிப் டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப்பெட்டியின் உறையறைக்குள் வைத்து அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இலைகள் நீண்ட நாள்களுக்கு வாசம் போகாமல் இருக்கும்.

பதினேழு வயதினிலே


(மோனா சிறைசெய்யப்பட்ட போது அவருக்குப் பதினாறு வயது. தூக்கிலடப்பட்ட போது அவருக்கு பதினேழு வயது.)

வீடியோ

“பதினேழு வயதினிலே” எனும்போது இயக்குனர் பாதிராஜாவின், நடிகை ஸ்ரீதேவி நடித்த பதினாறு வயதினிலே 1977 திரைப்படமே ஞாபகத்திற்கு வரும். ஓர் இளம்பெண் எவ்வாறு பருவத்தின் கோளாரினால் காதல் வயப்படுகிறாள் மற்றும் அதனால் பெரும் சோதனைகளையும் சந்திக்கின்றாள் என்பதே கதை. அந்த இளம் பெண்ணின் உலகமே அவள் வாழ்ந்த கிராமந்தான். அவள் உட்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையில் அவளுக்குத் தெரிந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்தாள். இறுதியில், அவள் சந்தித்த சோதனைகளின் வாயிலாகத் தான் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்தப் பதினாறு வயதையும் தாண்டிய மனமுதிர்ச்சியோடு தன் வாழ்க்கைக்கு ஏற்ற முடிவைத் தேர்ந்தெடுக்கின்றாள்.  இது “பதினேழு வயதினிலே” திரைக்கதை. ஆனால், 1982ல் வேறொரு பதினேழு வயதினிலே கதை நடந்தது. அக்கதையின் முடிவும் சோகம் நிறைந்தது ஆனால், நிறைவான ஒரு வாழ்க்கையை உள்ளடக்கியது.


மோனா மஹ்முட்நிஸாட்

அந்தப் பெண்ணுக்கும் பதினாறு வயது, அவளும் காதல் வயப்பட்டிருந்தாள், இறுதியில் அவளுடைய வாழ்க்கைப் பாடத்தின் அடிப்படையில் தன் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஆனால், இந்தப் பெண் கொண்ட காதல் இறைவன் மீது கொண்ட தெய்வீகமான காதலாகும். இந்தக் காதலின் பயனாக அவள் தன் உயிரைத் துச்சமாக மதித்துத் தன் காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தாள். அவள் பெயர் மோனா மஹ்முட்நிஸாட். இன்று உலகம் முழுவதும் இந்தப் பெண்ணின் பெயரால் பல அறநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்மீகப் பார்வைப் பெற்றுள்ளனர். மோனா தான் வாழ்க்கையின் பயனாக “இரான் நாட்டின் தேவதை” எனும் பெயரையும் அடைந்தாள்.

இரான் நாட்டின் ஷிராஸ் நகரில் பத்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்…

கைது செய்யப்பட்ட பெண்களுள் தனது பதினாறாவது வயதை அடைந்திருந்த மோனாவும் இருந்தாள். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனும் பேரார்வம் ததும்பும் குழந்தை முகம். அவளை எதற்காக கைதுசெய்திருந்தார்கள்? அவள் செய்த தவறுதான் என்ன? திருடினாளா? கொலை செய்தாளா? இல்லையில்லை, அதைவிட மிகவும் ‘மோசமான’ ஒரு காரியத்தைச் செய்துவிட்டிருந்தாள். ஆம், ‘செய்யக்கூடாத’ ஒரு காரியத்தை அவள் செய்துவிட்டாள். அவள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டாள். குழந்தைகளுக்குக் கடவுள் அன்பையும் ஒழுக்கத்தையும் போதித்துவிட்டாள். உலகில் இதைவிட மோசமான ஒரு குற்றத்தை யாருமே செய்ததில்லை. கொலை கொள்ளை போன்ற சாதாரண குற்றங்களைச் செய்திருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகளுக்கு நன்னெறி பாடம் நடத்துவதா? அது ஒரு மாபெரும் குற்றம் அல்லவா.

சிறுவயதில் தாய்ப்பாலுடன் கடவுள்மீது அன்பையும் சேர்த்து அவளின் தாயார் ஊட்டியிருந்தார். மோனாவுக்கு வயதாக ஆக, இந்த அன்பு சற்றும் குறையாமல் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. அவள் தன் குடும்பத்தாரின் மீது மட்டும் அவள் பாசம் கொள்ளவில்லை. உலகையே நேசித்தாள். தன் வழியில் குறுக்கிட்டோர் அனைவர் மீதும் அன்பு செலுத்தினாள். நன்கு பழக்கமானோரைத் திடீரெனக் கண்டால் கண்களில் நீர் வழிய அவர்களை ஓடிச்சென்று கட்டிக்கொள்வாள்.  பள்ளியில் அவள் அருகே இருந்தாலே போதும் என நினைக்கும் ஒரு சிநேகிதிகள் கூட்டம் அவளை எந்நேரமும் சுற்றியிருக்கும். இத்தகைய நற்பண்புகளால் “ஷிராஸ் நகரத்தின் தேவதை” எனும் பெயரும் அவள் பெற்றிருந்தாள். கல்விகேள்விகளில் தனிச்சிறப்பு, கலைத்திறன்கள், இனிமை நிறைந்த குரல்வளம் ஆகியவற்றை அவள் இயல்பாகவே பெற்றிருந்தாள். வயதுக்கு மீறிய விவேகமும் கடவுள் பக்தியும் அவளிடம் பரிபூரணமாகக் குடிகொண்டிருந்தன. மானிடத்திற்கு சேவை செய்யவேண்டும் எனும் அவளின் அவாவிற்கு எல்லையே இல்லை.

மோனா உலகையே நேசித்தாலும், எல்லோரையும் விட அவள் அதிகம் நேசித்த ஒருவர் இவ்வுலகில் இருந்தார். அது அவளுடைய தந்தை. தந்தை, மகள் இருவருக்குமிடையில் இருந்த உறவு ஒரு மிகவும் விசேஷமான உறவு. தன் தந்தையின் கண்களை ஆழ்ந்து உற்று நோக்கி காதுகளால் கேட்க முடியாத, வார்த்தைகளுக்கு இடமில்லாத ஓர் உரையாடலில் மோனா ஈடுபடுவாள். மோனாவின் தந்தையும் மக்களின் சேவையில் சற்றும் சளைத்தவர் அல்ல. பலவிதமான சேவைகளில் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தவராவார். ஒரு காலத்தில் தமது பிறந்தகத்தை விடுத்து வேறொரு நாட்டிற்குச் சேவைச் செய்திட சென்றார். அங்குதான் அவரின் இரு பெண்களும் பிறந்தனர். அரசியல் நிலைமை சரியில்லாத நிலையில் அவர் தமது குடும்பத்தினரோடு மீண்டும் தமது தாயகத்திற்குத் திரும்பினார்.

மோனாவின் கடவுள் பக்தி அவள் குடும்பத்தினரின் சமய நம்பிக்கையின் பலனாக ஏற்பட்டதாகும். அவர்கள் தங்களின் தேசத்தின் அதிகாரபூர்வச் சமயத்தைச் சார்திருக்கவில்லை. கடவுள் அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாகவும், கோடிசூர்யப் பிரகாசராய் உலகில் தோன்றிய கடவுளின் அவதாரமான பஹாவுல்லாவின் நிழலை அவர்கள் சரனடைந்திருந்தனர். பாரம்பரியத்தைச் சாராத நம்பிக்கைகள் எப்போதுமே பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் பரவாயில்லை, மாறாக, அத்தகைய சிறுபான்மை நம்பிக்கையினர் தங்களுக்கென சொந்த நம்பிக்கைகளைப் பெற்றிருக்கும் உரிமையை இழந்து பெரும்பான்மைச் சமூகத்தினரின் நம்பிக்கையினை அவர்களும் பற்றிக்கொள்ளவேண்டுமென நெருக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தவறினால் கொடுங்கோண்மைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது சமயங்களின் வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விஷயமாகும்.

இரான் நாட்டின் சிறுபான்மை பஹாய் சமூகத்தினர் தங்கள் சமயத்தின் தோற்றத்திலிருந்து இத்தகைய கொடுங்கோண்மைகளுக்கு ஆளாகியே வந்துள்ளனர். இருபதிலிருந்து முப்பதாயிரம் விசுவாசிகள் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்காகத் தங்களின் உயிரைக் கடவுளின் பாதங்களில் மனமுவந்து அர்ப்பணித்துள்ளனர். மோனாவின் குடும்பத்தினரும் இதற்கு விதிவிலக்கல்ல.

பஹாய்களின் புனிதஸ்தலங்களுள் ஒன்றான பாப் அவர்களின் இல்லம் 1980களின் ஆரம்பத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சிறுபான்மையினரான பஹாய்களைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்திடும் சமயவாத அரசாங்கத்தின் முயற்சிகளுள் இதுவும் ஒன்றாக இருந்தது. நல்ல வேளையாக மோனாவின் குடும்பத்தினர் அதற்கு முன்பாகவே அத்தலத்திற்கு விஜயம் செய்து தங்கள் புனிதயாத்திரையை நிறைவு செய்திருந்தனர். ஒரு நாள் தன் தந்தையாரோடு பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளைக் காணச் சென்றிருந்த மோனா, தன் இல்லம் திரும்பியதும் தன் தாயை விளித்து, “அம்மா, நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமா,” எனக் கேட்டாள். அதற்கு மோனாவின் தாயார், “இதென்ன திடீர் ஆசை,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா இன்று பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளிடையே நடந்து வந்துள்ளேன். என் காலனிகளில் அந்த இல்லத்தின் புனித மண் பதிந்துள்ளது. அதனால்தான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமாவென கேட்டேன்,” என்றாள். பிறகு கண்களின் நீர் வழிய தன் அறைக்குள் சென்று அன்றைய அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினாள்.

பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிகரித்த போது, தனக்கும் தன் தந்தைக்கும் கடவுளின் விதி என்னவாக இருக்கும் என்பது குறித்து மோனாவுக்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றின. ஒருநாள் தானும் தன் தந்தையும் தங்களின் நம்பிக்கைக்காக கொல்லப்படப்போகின்றார்கள் என ஒரு கனவு கண்டாள். அதன் பிறகு மோனாவிடமிருந்த நற்பண்புகளோடு வேறொரு நற்பண்பும் சேர்ந்துகொண்டது, அது ‘பயமின்மையாகும்’.

இரான் நாட்டின் பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுங்கோண்மைகள் சிறிது சிறிதாக அந்நாட்டு பாடசாலைகளையும் சென்றடைந்தது. குழந்தைகள்கூட தங்கள் நம்பிக்கைக்காக துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு முறை சமய நம்பிக்கைக் குறித்து மோனாவின் வகுப்பினர் கட்டுரை எழுதிட பணிக்கப்பட்டனர். சமய நம்பிக்கைச் சுதந்திரம் பறிக்கப்படுவதை மனதில் வைத்து மோனா ஒரு கட்டுரை எழுதினாள்.

“உலகிலுள்ள ஒளிமிகு வார்த்தைகளுள் “சுதந்திரம்” எனும் வார்த்தையே பேரொளி மிக்க வார்த்தையாகும். மனிதன் என்றும், இன்றும், இனி என்றென்றும் சுதந்திரத்தையே விரும்புவான்.  ஆனால், அவனிடமிருந்து சுதந்திரம் பறிக்கப்படுவது ஏன்? மனிதனின் பிறப்பிலிருந்து அவனுக்குச் சுதந்திரம் இல்லாமல் போவது ஏன்? ஆரம்பத்திலிருந்தே வலிமைமிக்க ஆனால் அநீதியான மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக பலவிதமான அடக்குமுறைகளையும் கொடுங்கோண்மைகளையும்  பயன்படுத்திவந்துள்ளனர்…”

“இச்சமூகத்திற்கான எங்கள் குறிக்கோள்களை வெளிப்படுத்திடவும்; நான் யார் என்பதையும் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், என் சமய நம்பிக்கையை பிறருக்கு தெரிவிப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரமளிக்க ஏன் மறுக்கின்றீர்கள்; என் கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு எழுதவோ வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அதுபற்றி பேசுவதற்கோ எனக்கு சுதந்திரம் கொடுப்பீர்களா? ஆம், தன்னிச்சையென்பது ஒரு தெய்வீகக் கொடையாகும், அது எங்களுக்கம் உரியாதாகும், ஆனால் அதை எமக்கு மறுக்கின்றீர்கள். ஒரு தனிநபர் பஹாய் எனும் முறையில் என்னை சுதந்திரமாகப் பேச விடுவீர்களா? ஒரு புதிய வெளிப்பாடு தோன்றியுள்ளது, ஒரு பிரகாசமிகு புதிய நட்சத்திரம் உதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஏன் மறுக்கின்றீர்கள். உங்கள் கண்களை மறைக்கும் தடித்தத் திரைகளை அகற்றுவீர்களா?”

“ஒரு வேளை எனக்கு சுதந்திரம் இருக்கவே கூடாது என நீங்கள் நினைக்கின்றீர்கள் போலும். கடவுள் மனிதனுக்கு இந்தச் சுதந்திரத்தை வழங்கியுள்ளார். அவர்தம் சேவகராகிய நீங்கள் அதை என்னிடமிருந்து பறிக்க முடியாது. கடவுள் எனக்கு பேச்சு சுதந்திரத்தை வழங்கியுள்ளார். ஆகவே, “புனிதராகிய பஹாவுல்லாவே மெய்யராவார்”. கடவுள் எனக்குப் சொல் சுதந்திரம் வழங்கியுள்ளார். ஆகவே, “கடவுள் வெளிப்படுத்தியுள்ள அந்த ஒருவர் பஹாவுல்லாவே ஆவார்! அவரே பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் அவரது திருநூலே நூல்களுக்கெல்லாம் தாய் நூலும் ஆகும்.”

வெளிப்படையான இக்கட்டுரையின் விளைவாக மோனா அதுவரை பள்ளியில் பெற்றிருந்த சிறிதளவு பேச்சு சுதந்திரத்தையும் இழந்தாள்.

சாதாரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நமது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது தெரியாது. அனுமானிக்கலாம் ஆனால், நிச்சயமாக எதையும் கூற முடியாது. மோனாவுக்கோ தன் எதிர்காலம் என்னவாகும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. அவள் கண்ட ஒரு கணவின் வாயிலாக தன் எதிர்காலம் என்னவாகும் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. இரான் நாட்டின் பஹாய்கள் பலரைக் கொள்ளைக்கொண்ட கொடுங்கோண்மைகள் ஒரு நாள் மோனாவின் இல்லத்திற்கும் வந்துக் கதவைத் தட்டின……

தொடர்ந்து கதையை வீடியோவில் காணவும்…

தொடர்பு கொண்ட பிற பதிவுகள்

பாப் அவர்கள்
பஹாவுல்லா
வெண்பட்டாடை (தாஹிரியின் மரணம்)
பாஹிய்யா காஃனும்
ஸைனாப்