அடக்கமா தகனமா?


இறந்தவர்களை ஏன் தகனம் செய்வது நல்லதல்ல என்பது குறித்து அப்துல்-பஹா அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளித்துள்ளார். அவை கீழ வழங்ப்பட்டுள்ளன.

இறந்தவரை அடக்கம் செய்வதன் விவேகம்
=========================
மார்ஸியே கேய்லின் ‘ Summon up Remembrance (George Ronald, Oxford, 1987), pp. 174-176, (f.n. 106),’ உலக நீதி மன்றத்தின் ஆய்வுத் துறையின் சார்பாக மொழிபெயர்க்கப்பட்டது, மார்ச் 1987
=========================

அவரே கடவுள்

இறைவனின் பணிப்பெண்ணாகிய, குமாரி பார்னி, இறந்தோரைப் பூமியில் அடக்கம் செய்வதன் விவேகம் குறித்து ஒரு கேள்வியெழுப்பியுள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அறிவியலாளர்கள்கூட, இவ்விஷயம் குறித்து நீண்ட மற்றும் பரந்த ஆய்வுக்கும் வாதங்களுக்கும் பிறகு பகுத்தறிவின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, உடலைத் தகனம் செய்வதன் நன்மைகளை முழுமையாக ஸ்தாபித்துள்ளனர் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, பூமியில் நல்லடக்கம் செய்யவேண்டும் எனப் புனித சமயம் கூறுவதிலுள்ள விவேகம் யாது?

நீங்கள் அறிந்துள்ளதுபோல், ஒரு விரிவான விளக்கம் அளிப்பதற்கு இச்சேவகனுக்கு நேரம் போதாது, ஆகவே, இதற்கு ஒரு சுருக்கமான விளக்கமே அளிக்கப்பட முடியும். சர்வலோக இயல்நிகழ்வுகளைப் பொறுத்த வரையில், சரியான செய்முறைகளை அல்லது ஒரு பூரண முறையைக் கண்டுபிடிப்பதற்கு மனித அறிவாற்றல் எத்துணைக் காலத்திற்கும் எத்துணைக் கடுமையாக முயற்சித்தாலும், அது தெய்வீக படைப்பு போன்ற ஒன்றையும் வாழ்வெனும் சங்கிலித்தொடரினுள் அதன் இடமாற்றங்கள், பயணங்கள் ஆகியவற்றின் முறையையும் கண்டுபிடிக்கவே முடியாது. தனிமங்களின் இடமாற்றங்கள், அவற்றின் உள்ளடக்கங்கள், அவற்றின் ஒன்றுகூடல்கள், பரப்பல்கள் மற்றும் அவற்றின் ஆக்கக்கூறுகளும் உள்ளடக்கப் பொருள்களும் ஒரு வலிமையானதும் பிழையற்றதுமான சங்கிலித்தொடரின் வழி முன்செல்கின்றன. பயன்விளைவுமிக்க சர்வலோகச் சட்டங்களைக் கண்ணுற்று அவை எந்த அளவிற்கு உறுதியாகவும் பாதுகாப்புடனும் வலிமையோடும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள்.

பௌதீக உடலின் கூட்டுச் சேர்க்கை, உருவாக்கம், வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எவ்வாறு படிப்படியாக ஏற்பட்டுள்ளனவோ அதே போன்று அதன் சிதைவும் சிதறலும் படிப்படியாக இருந்திட வேண்டும். சிதைவு துரிதப்படுத்தப்படுமானால், அஃது இடமாற்றத் தொடரில் ஒன்று மற்றதன் மீது படிந்து(overlap), ஒரு தளர்வை ஏற்படுத்திவிடும். இத்தொடர்ச்சியின்மை படைப்புப் பொருள்களின் தொடரினுள் உள்ள சர்வலோக உறவைப் பாதிப்படையச் செய்திடும்.

உதாரணத்திற்குத் தனிமங்களால் ஆன இம்மனித உடல் கனிமம், தாவரம் மற்றும் மிருக உலகங்களிலிருந்து உருவாகியுள்ளது. மடிந்த பிறகு அது நுண்ம உயிரினங்களாக முற்றாக மாற்றம் காண்கின்றது. தெய்வீகமுறை, இயற்கையின் உந்தாற்றல் ஆகியவற்றின்படி இந்நுண்ணிய உயிரினங்கள் பிரபஞ்சத்தின் வாழ்க்கையின் மீது தாக்கம் செலுத்துவதோடு வேறு பல வடிவங்களாகவும் மாறும்.

இப்போது, இப்பூதவுடலை நீங்கள் தீக்கு இறையாக்குவீர்களேயாயின், அஃது உடனடியாகக் கனிம இராஜ்யத்திற்கு மாற்றம் காண்பதோடு எல்லாப் படைப்புப் பொருள்களின் சங்கிலித் தொடரான அதன் இயற்கைப் பயணத்திலிருந்து தடுக்கப்படும்.

தனிமங்களால் ஆன இவ்வுடல், அதன் மரணத்தைத் தொடர்ந்து, அதன் கலப்புருவான வாழ்விலிருந்து விடுபட்ட பின்பும், அது வெவ்வேறு கூறுகளாகவும் நுண்ணுயிர்களாகவும் தன்மைமாற்றமடைகின்றன. இப்போது மனித உருவிலான அதன் கூட்டுச்சேர்க்கை வாழ்வை அஃது இழந்துவிட்ட போதும், மிருகநிலையிலான வாழ்வு அதில் இன்னமும் இருக்கின்றது, அது முற்றிலும் உயிரற்ற ஒன்றும் அல்ல. மாறாக, அது தீயிடப்படுமானால், அது சாம்பலாகவும் கனிமங்களாகவும் மாறிவிடுகின்றது. ஒரு முறை அது கனிமமாக மாறிவிட்டால், அது மாற்ற இயலாத நிலையில், முதலில் தாவர நிலைக்குப் பயணித்துப் பிறகு மிருக உலகிற்கு உயர்கின்றது. இதைத்தான் நாம் படிப்படியாகச் செல்வதற்குப் பதிலாக வேறு ஒரு நிலைக்குத் தாண்டிச் செல்வதாகக் கூறுகின்றோம்.
சுருக்கமாகக் கூறின், சகல உயிரணங்களின் சேர்க்கை மற்றும் சிதைவு, ஒன்றுகூடல் மற்றும் பரப்பல் மற்றும் பயணம் இயற்கையான முறையிலும் தெய்வீக விதியின்படியும் கடவுளின் அதிபெரும் சட்டத்திற்கிணங்கவும் முன்செல்ல வேண்டும். அதன் மூலமாகப் படைப்புப் பொருள்களின் உள்ளார்ந்த மெய்ம்மையிலிருந்து வெளிப்படும் இன்றியமையா உறவுகளை எவ்வித சேதமோ பாதிப்போ வந்தடையாது. இதனால்தான், இறைவனின் சட்டப்படி இறந்தோரைப் புதைக்கும்படி நாம் ஆணையிடப்பட்டுள்ளோம்.

பண்டையகாலப் பாரசீக மக்கள் மண்ணில் புதைப்பது அனுமதிக்கப்படவில்லை எனவும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இயற்கை கோரும் செல்வழிகள், பயணங்கள் ஆகியவற்றைத் தடை செய்கின்றதெனவும் அவர்கள் நம்பினர். இதன் காரணமாக மலைகளின் மீது விண்ணைப் பார்த்தவண்ணம் ‘அமைதிக் கோபுரங்களை’ எழுப்பி, அவற்றினுள் இருக்கும் தரையின்மீது இறந்தவரைக் கிடத்தினர். ஆனால், படைப்பின் ஒரு முக்கியத் தேவையான மண்ணில் புதைக்கப்படுவது இயல்பான பயணங்கள், செல்வழிகள் ஆகியவற்றைத் தடுக்கவில்லை என்பதை உற்றுநோக்கத் தவறிவிட்டனர். மண்ணடக்கம் என்பது இயல்நிகழ்வுகள் சீராகத் தொடர அனுமதிப்பதற்கும் அப்பால், வேறு பல நன்மைகளையும் வழங்குகின்றது.

சுருக்கமாகக் கூறின், இவற்றுக்கும் அப்பால், மனித ஆன்மா உடலுடனான அதன் தொடர்பைத் துண்டித்துக்கொண்ட போதும் நண்பர்களும் அன்பர்களும் எஞ்சியிருப்பவை மீது வெகு தீவிரமான பற்று வைத்துள்ளனர். அஃது உடனடியாக அழிக்கப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது. உதாரணமாக, ஒரு நிழலுருவான படம், அதுவும் இறுதியில் அழியக்கூடிய ஒன்றுதான். ஆயினும் படமாக இருக்கும் இறந்த ஒருவரின் முகம் அழிந்து சிதறுவதை அவர்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களால் முடிந்தவரை, சிறு களிமண், ஒரு மரம் அல்லது கல்லாக இருப்பினும் அவரிடமிருந்து (இறந்தவர்) எஞ்சியிருப்பனவற்றை அவர்கள் பாதுகாக்கின்றனர். ஆகவே, அவரது பௌதீக உடலை அவர்கள் அதற்கும் அதிகமாக எவ்வளவு நேசிக்கக்கூடும்! ஒரு நண்பர், தகப்பனார், தாயார், சகோதரர், குழந்தை ஆகியோரின் நேசமிகு உடல் அழிந்துபோவதை அவர்களின் இதயம் எவ்வாறு தங்கிக்கொள்ள இயலும் – இது அன்பு குறித்த ஓர் அவசரத்தேவையாகும்.

அதனால்தான் பண்டைய எகிப்தியர்கள், சலடப்பதனீட்டின் மூலம் உடல் நிலையாக அழிவுறாமல் இருந்திடும் என்பதற்காக உடலைப் பதனம் செய்தனர். இறந்தோர் எவ்வளவு காலத்திற்கு நிலைபெற்றிருக்கின்றாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் தங்கள் கடவுள்களின் கருணையைப் பெறுவர் என நம்பினர். ஆனால், இந்தியாவின் இந்துக்களோ எவ்வித தயக்கமுன் இன்றி உடலைத் தகனம் செய்கின்றனர். அஃது அவர்களின் உள்ளங்களுக்கு ஆறுதலும் அளிக்கின்றது. இருந்தபோதும், இத்தகைய கவனமின்மை தற்செயலான ஒன்றாகும்: அது சமய நம்பிக்கைகளிலிருந்து உதித்ததல்ல, அஃது இயற்கையான ஒன்றுமல்ல. அவர்கள் உடல் எவ்வளவு விரைவாக அழிவுறுகின்றதோ அஃது அவ்வளவு விரைவாக தெய்வீகக் கருணையைச் சென்றடையும் என நினைத்தனர். இது பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கைக்கு எதிர்மாறான ஒன்றாகும். மேலும் இந்துக்கள், உடல் எத்துணை விரைவாக சிதைவுறுகின்றதோ அத்துணை விரைவாக மன்னிப்பைப் பெற்றிடும். இறந்தவர் நிலையாக ஆசீர்வதிக்கப்படுவார் எனவும் வலியுறுத்தினர். இந்த நம்பிக்கையே உடல் தகனத்தை அவர்களுக்கு ஏற்புடையதாக்கியது.
உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியதாகுக. ஒரு வரி எழுதக்கூட எனக்கு நேரம் இல்லாதபோதும், குமாரி பார்னியின் மீதுள்ள அன்பினால், இவ்வரிகள் பதிக்கப்பட்டுள்ளன.

(கையொப்பம்) ‘அய்ன்-‘அய்ன்

=====================

அவரே கடவுள்!

மற்றொரு விஷயமும் உள்ளது, அது பின்வருமாறு: பிளேக், காலரா போன்ற தொற்று நோய்களின்போது, சுண்ணாம்பு அல்லது பிற இரசாயனங்களோடு உடல்கள் தகனம் செய்யப்படுவது அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பதாகும். இவ்வித சூழல்களில் சுகாதாரமும் பாதுகாப்பும் முக்கியமாகின்றன; ஏனெனில், தெளிவுமிகு தெய்வீகத் திருவாசகங்களின்படி, மருத்துவச் சட்டங்களே இங்கு முதன்மை வகிக்கின்றன. ‘தடைசெய்யப்பட்டவற்றை அத்தியாவசியங்கள் சட்டபூர்வமாக்குகின்றன’ என்பது ஒரு முக்கிய விதியாகும்.

உங்கள் மீது சர்வ-மகிமையாளரின் மகிமை பொழியப்படுவதாக!

(கையொப்பம்) ‘அய்ன்-‘அய்ன்

(அப்துல்-பஹா, இறந்தோரைப் புதைப்பதன் விவேகம்)

814. படிப்படியாக உருவான மனித உடல், அதே போன்று படிப்படியாகவே சிதைவுற வேண்டும். மெய்யான, இயல்பான முறை மற்றும் தெய்வீகச் சட்டத்திற்கு ஏற்ப இஃது உள்ளது. இறப்புக்குப் பிறகு உடல் தீயிலிடப்படுவதே சிறப்பென்றால், அது படைக்கப்படும்போதே தன் இறப்புக்குப் பிறகு தன்னியல்பாகத் தீப்பிடித்தும், பொசுங்கியும் சாம்பலாகவும் மாறிடும் வகையில் ஏற்பாடாகியிருக்கும். தெய்வீகக் கட்டளையின்படி உருவாக்கப்பட்ட திவ்யமுறை கூறுவது யாதெனில், இறப்புக்குப் பிறகு இவ்வுடல் ஒரு நிலையிலிருந்து அதற்கு முன்னிருந்த நிலைக்கும் மாறுபட்ட வேறொரு நிலைக்கு இடமாற்றம் செய்யப்படவேண்டும். அதன் மூலமாக, இவ்வுலகில் வியாபித்திருக்கும் உறவுகளுக்கு ஏற்ப, அது பிற தனிமங்களுடன் படிப்படியாகச் சேர்ந்தும் கலந்தும், அதன் மூலமாக ஒவ்வொரு நிலையாக மாறி தாவர இராஜ்யத்தைச் சென்றடைந்து, அங்குத் தாவரங்களாகவும் மலர்களாகவும் மாறி, பிறகு அதிவுயர்ந்த சுவர்க்கத்தின் மரங்களாக மேம்பாடு அடைந்து, நறுமணத்தையும் வர்ணஜால அழகையும் பெறுகின்றது.

இத்தகைய நிலைமாற்றங்கள் அடைவதை தகனம் விரைந்து தடுக்கின்றது, தனிமங்கள் வெகு விரைவாகச் சிதைவுறுவதனால் இப்பல்வேறு கட்டங்களுக்குத் தன்மைமாற்றம் பெறுவது தடைசெய்யப்படுன்றது. 447
(பஹாய் இலக்கியங்கள், திரட்டுகள், பக். 446

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: