மருத்துவர் ஒருவருக்கு பஹாவு்ல்லா எழுதிய நிருபம் –
மொழிபெயர்ப்பு: திரு சுப்பையா பீரங்கன்
உடல் நிவாரணம் எனும் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.
பஹாவுல்லாவால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து ஆரோக்கிய வாழ்விற்கு சில விதிகள்.
கடவுளே! அனைத்தையும் அறிந்தவரே! மருத்துவர்கள் இல்லாதபட்சத்தில், விவேகமானவர்களைத் திருப்திபடுத்துபவனவற்றை அந்த ஆதியானவரின் நா அறிவிக்கின்றது.
மக்களே! பசித்தால் மட்டுமே உண்ணுங்கள். உறங்கச் சென்ற பிறகு (உறக்கத்திலிருந்து எழுந்து) நீர் அருந்தாதீர்கள்.
வயிறு காலியாக இருக்கையில் உடற்பயிற்சி செய்வது நல்லது; அது தசையை வலுப்படுத்தும். வயிறு நிரம்பியிருக்கையில் அது மிகவும் ஆபத்தானது.
தேவை ஏற்படும்போது மருத்துவ ஆலோசனையை நிராகரிக்காதீர். ஆனால், உடல் ஆரோக்கியமானபின் அதனை நிறுத்திடலாம்.
செரிமானம் முழுமையடையாமல், புதிதாக உணவு உட்கொள்ளக்கூடாது.
முழுமையாக மெல்லாமல் உங்கள் உணவை விழுங்கக்கூடாது.
உணவு கட்டுப்பாட்டின்வழி முதலில் நோயைக் குணப்படுத்துங்கள். மருந்தைத் தவிர்த்திடுங்கள். முடியுமானால் ஒரே தனி மூலிகையைக் கொண்டு நோயைக் குணப்படுத்திடுங்கள். கலப்பு மருந்தை(compound medicine) உபயோகித்திடாதீர்கள்.
முற்றிலும் மாறுபட்ட தன்மையிலான உணவு பரிமாறப்படுமானால், அவற்றை ஒன்றாய்க் கலந்திட வேண்டாம், ஒன்றில் மட்டுமே மனநிறைவுகொள்ளுங்கள்.
திட உணவினை உட்கொள்வதற்குமுன் முதலில் திரவ உணவினை உண்ணுங்கள். நீங்கள் ஏற்கனவே உண்ட உணவு செரிமானமாவதற்குமுன் புதிய உணவை உண்டிடுவது ஆபத்தானதாகும்.
நீங்கள் உணவு உண்டபின் கொஞ்சம் நடப்பதால் உணவு படிவுறும்.
மெல்வதற்குக் கடினமானவை விவேகிகளால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறுதான் அதிவிழுமிய எழுதுகோல் உங்களுக்கு ஆணையிடுகின்றது.
காலையில் மிதமான உணவு உடலுக்கு ஒளி போன்றதாகும்.
எல்லா தீயப் பழக்கங்களையும் தவிர்த்திடுங்கள்: அவை உலகில் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்துகின்றன.
நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்திடுங்கள்.
இதுவே இவ்வுரையின் நிறைவு.