தென் கெரோலினாவில் பஹாய் சமயம் இரண்டாவது பெரிய சமயம்


மூலம்: http://venitism.blogspot.com/2014/07/bahai-second-largest-religion-in-south.html

மொழிபெயர்ப்பு: B. சுப்பையா

(அமெரிக்காவின்) எல்லா 50 மாநிலங்களிலும் கிருஸ்துவ சமயம் மிகப் பெரிய சமயமாக இருப்பது ஆச்சரியமேயில்லை. ஆனால், எனது சொந்த மாநிலமான தென் கெரோலினாவில் பஹாய் சமயம் இரண்டாவது பெரிய சமயமாக இருப்பது ஓர் ஆச்சரியமே! இச்செய்தி, ச்சால்ஸ்டன் போஸ்ட் மற்றும் விரைவுத்தூது, ச்சால்ஸ்டன் மாநகர் நாளிதழ் எனும் இரு உள்ளூர் நாளிதழ்கள் பஹாய்களைப் பற்றி கட்டுரை வெளியிட தூண்டியுள்ளது. ஒரு நாஸ்திகனான என்னையும் ஓர் உள்ளூரளவிலான பஹாய் கூட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது.

தென் கெரோலினாவில் ஒட்டுமொத்த யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பஹாய்கள் அதிகமாகவே இருந்தனர்; ஆயினும், அவர்கள் நாஸ்திகர்கள் மற்றும் உலோகாயத வாதிகளைக்(agnostics) காட்டிலும் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தனர்.

லூயிஸ் கிரேகரி என்பவரால் பஹாய் சமயம் தென் கெரோலினாவில் பிரபலமடைந்தது. 1874ல் பிறந்த இவர் ச்சால்ஸ்டனில் வளர்ந்தார். அமெரிக்காவில் பஹாய் சமயத்தை ஸ்தாபித்தவர்களில் இவரும் ஒருவராவார். அடிமை ஒருவரின் பேரனான இவர் 1909ல் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டார். இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்காக நாட்டின் பல பாகங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இவர் 1912ல் வெள்ளை இனத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவரை மணந்தார். அக்கால கட்டத்தில் அந்நாட்டின் பல பாகங்களில், இது போன்ற கலப்புத் திருமணம் செய்துகொள்வது ஒரு குற்றச் செயலாகவே கருதப்பட்டது. லூயிஸ் கிரெகரி பஹாய் அரும்பொருள் காட்சியகம் ச்சால்ஸ்டன் நகரின் மையத்தில் இருக்கின்றது.

அண்டை அயலார் மத்தியில் பஹாய்களும் நாஸ்திகர்களும் சாத்தான்களாகக் கருதப்பட்டதால், அவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதில்லை. பஹாய் சமயம் 1844ல் “பாப்” எனும் இளைஞர் ஒருவரால் நிறுவப்பட்டது. அரேபிய மொழியில் “பாப்” என்பதன் பொருள் “வாசல்” என்பதாகும். இவர் இஸ்லாம் சமயத்தின் இரட்சகராகத் தம்மைக் கோரிக்கொண்டார். இஸ்லாத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது போல் அமைதி மற்றும் நீதி யுகத்தில் இரண்டாவது தேவதூதர் தோன்றிடுவார் எனவும் பாப் அறிவித்தார். இஸ்லாமிய மதகுருக்களால் பாப் அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டு, 1850ல் தமது 30வது வயதில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களுள் ஒருவரான பஹாவுல்லா, 1863ல் தாம்தான் பாப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இறைத்தூதரென அறிவித்தார். பஹாவுல்லாவின் போதனைகள்தான் பஹாய் சமயத்தின் அஸ்திவாரமாகும்.

சமீபத்தில், டேவ் மற்றும் போனீ ஸ்பிங்கர் தம்பதியர் இல்லத்தில் 15 பேர் பங்கேற்ற ஒரு பஹாய் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அவர்கள் அனைவரும் உள்ளூர் தலைவர்களென என நான் எண்ணினேன். ஆனால், பஹாய் தலைவர் என்று எவருமில்லையென அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். பஹாய்கள் அவ்வப்போது தங்கள் இல்லங்களில் பஹாய் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில்தான் நான் கலந்துகொண்டேன். நாங்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்திருந்தோம். வழிபாடு தொடங்கியது, டேவ் இசைப்பதிவுக் கருவியை முடுக்கினார். அதிலிருந்து இன்னிசை ஒலித்தது. அதனைத் தொடர்ந்து “ஒற்றுமை உணர்வு பற்றிய பிரதிபலிப்பு” எனும் துண்டுபிரசுத்திலிருந்து வருகையாளர்கள் ஒவ்வொருவரும் உரக்க வாசித்தனர். மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்வதைவிட திருவாசகங்கள் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டுமென டேவ் கேட்டுக்கொண்டார். இக்கருப்பொருள் தொடர்பாகக் கருத்துக் கூற வேண்டுமாய் நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

பஹாவுல்லாவின் போதனைகள் கடவுளின் ஒற்றுமை, சமயங்களின் ஒற்றுமை மற்றும் மனிதகுல ஒற்றுமை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவை மனிதர்கள் அனைவரின் மதிப்பு மற்றும் சமத்துவத்தை மையப்படுத்தியிருந்தன. இனங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பல்வகைத்தன்மை போற்றப்பட்டன; இனவெறி, தேசியவாதம், சமூக அந்தஸ்து மற்றும் ஆண் பெண் எனும் பேதம் யாவும் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு செயற்கையான முட்டுக்கட்டைகளாகும். உண்மையில் எங்களது வழிபாட்டுக்கூட்டத்தில் வெள்ளையர் மற்றும் கருப்பர், ஆண்கள் மற்றும் பெண்கள், இளையோர் மற்றும் முதியோர், செல்வந்தர் மற்றும் வறியவர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

ஆழ்சிந்தனைக்குப் பிறகு, நாங்கள் இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பல்வகை உணவினை உண்டு மகிழ்ந்தோம். வழக்கமாகப் புதியவர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் அவர்களுள் ஒருவனாக இருப்பது எனக்கு அசௌகரியமாகவே இருக்கும். ஆனால், அன்றைய நிகழ்வு ஒரு விதிவிலக்காக இருந்தது. எல்லோருக்கும் எல்லோரையுமே பிடித்திருந்தது. என்னைத் தவிர எவருமே இன மற்றும் நிற வேற்றுமையை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை.

இரவு உணவின்போது டேவ், போனீ இன்னும் பிறரோடு நான் பஹாய் சமயம் குறித்து விவாதித்தேன். கடவுள் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை தொடர்பான கேள்விகள் கேட்பதும் கேட்கப்படுவதையும் நான் பெரிதும் விரும்பினேன். சில வேளையில் ஒருசிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசத்தொடங்கினர். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் நான் சற்று பின்வாங்கிவிடுவேன். இந்த பஹாய்களின் மனதைப் புண்படுத்தும் எதையும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. இயற்பண்புடைய தனியொருமைக் கோட்பாட்டாளர்கள், இயற்பண்புடையோர் யூதமார்க்கம் மற்றும் ஒழுங்குநெறி கலாச்சாரம் போன்ற கடவுளை நம்பாத, மனித நலனுக்கு முக்கியத்துவமளிக்கும் சமயமே எனக்குப் பிடித்தமான சமயமாகும். பஹாய் சமயம் கடவுள் நம்பிக்கையோடு மனிதநலனுக்கு முன்னுரிமையளிக்கும் ஒரு சமயமாக இருப்பதால், அஃது எனக்குப் பிடித்தமான சமயமாகத் திகழ்ந்தது.

சமயங்கள் அதிக மதிப்பளிப்பது நடத்தைக்கா அல்லது நம்பிக்கைக்கா என்பதை வைத்தே நான் சமயங்களைப் பெரும்பாலும் எடைபோடுவேன். பஹாய் சமயம் நம்பிக்கையைக் காட்டிலும் நடத்தைகளுக்கே முக்கியத்துவளிக்கின்றது என மிகத் தெளிவாக என்னிடம் தெரிவித்தார்கள். நான் ஏற்கனவே எழுதியிருந்ததுபோல் நான் கடந்த காலத்தில் விஜயம் செய்த ஒரு தேவாலயத்தின் நடைமுறைக்கு இது சற்று மாறுபட்டு இருந்தது. கடவுளுக்கு அண்மையில் அல்லது தூரத்தில் எனும் “ஆன்மீக” நிலையைப் பொருள்படச் செய்யும் சுவர்க்கம் மற்றும் நரகம் எனும் உருவக வடிவத்தில் பஹாய்கள் நம்பிக்கைகொண்டுள்ளனர். மக்கள் தங்கள் இறப்புக்குப்பின் கடவுளுக்கு நெருக்கமாக அல்லது தூரமாக இருப்பார்கள் என்பதில் நம்பிக்கையுண்டா என டேவிடம் கேட்டேன். அவரும் அவ்வாறு இருக்கலாம் என்றார். நான் சாட்சியங்களை வைத்தே ஒன்றில் நம்பிக்கைகொள்வதால், இறந்த பிறகு நான் அவரையோ அவளையோ சந்தித்தால் அவரை நம்புகிறேன் என்று கடவுளிடம் செஒல்வேன் என சொன்னேன். அதைக் கேட்ட டேவ் சிரித்துவிட்டார். அன்புதான் பஹாய் கடவுள், சினமல்ல.

ஆப்ரஹாம், கிருஷ்ணா, ஜொரோஸ்டர், மோஸஸ், புத்தர், இயேசு மற்றும் முகம்மது உட்பட தொடர்ச்சியாக தெய்வீக இறைத்தூதர்களாக கடவுள் அவதரித்துள்ளார் எனும் பஹாய்களின் நம்பிக்கை பற்றி நான் கேள்வியெழுப்பினேன். கலாச்சாரம் பரிணாமம் காண்பதால் கடவுள் வெவ்வேறு செய்திகளை அனுப்புகின்றார். அவை விளங்கிக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் சுலபமாக இருக்கின்றன. அத்துடன் ஒற்றுமை முக்கியம் என்பதோடு எல்லா சமயங்களுக்கிடையேயும் ஒற்றுமை நிலவிடும்போது உலக சமாதானம் அடையப்படும் எனும் அவர்களின் நம்பிக்கையோடும் இது பொருந்துகிறது என டேவ் நியாயப்படுத்தினார்.

தன்பாலினருக்கு இடையிலான திருமணம் (gay marriage) பற்றி நான் கேள்வி கேட்டேன். கணவன், மனைவியர்க்கிடையில் மட்டுமே உடலுறவு அனுமதிக்கப்படுகிறது என்றும் திருமணத்துக்கு முன்பும் திருமண பந்தத்திற்கு வெளியிலும் தன்பாலினத்தினரோடும் உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் கூறினர். இங்கு ஒரு நற்செய்தி என்னவென்றால் பஹாய்கள் ஒவ்வொருவரையும் மதித்து கண்ணியப்படுத்த முயல்கின்றனர். அவர்கள் தன்பாலினத்தாரைத் தாழ்ந்த சாதியனராக கருதுவதில்லை. அதே வேளையில் பஹாய் அல்லாதோர் பஹாய் சட்டங்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் எதிர்பார்ப்பதில்லை.

பஹாய்கள், கட்சி அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வேட்பாளர்களை வழிமொழிவதோ அரசியல் பதவி வகிப்பதோ அனுமதிக்கப்படவில்லை. இது கவலையளிக்கிறது ஏனெனில், சில பஹாய்களை — குறிப்பாகத் தென் கெரோலினாவில், வேட்பாளர்களாகக் காண நான் விரும்புகிறேன்.

(உங்கள் சிந்தனைக்கு: கட்சி பொறுப்பு வகிப்பதற்காகக் கிருஸ்தவர்கள் தங்களுக்குத் தாங்களே 10 ஆண்டு தற்காலிகத் தடை விதித்துக்கொள்கின்றனர். அப்படியானால் எப்படி நம் நாடு மாற்றம் காணும்.)

இது பஹாய்களுடனான முதல் சந்திப்பல்ல. 1997ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, புது டில்லியிலுள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு விஜயம் செய்தேன். உலக சமாதானத்திற்காகப் பாடுபடுவதும் இனவெறியையும் ஏழ்மையையும் துடைத்தொழிப்பதுவுமே பஹாய்கள் முன்னுரிமை வழங்குகின்றனர் என்பதை அங்குதான் முதன்முதலில், நான் தெரிந்துகொண்டேன். நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன், ஒரு சிறுதொகையை நன்கொடையாக வழங்க எண்ணினேன். அப்பொழுதுதான், வேறெந்த சமயமோ சமய சார்பற்ற இயக்கங்களிடமிருந்தோ கேள்விப்படாத ஒன்றை முதன்முறையாகக் கேள்வியுற்றேன். “உங்கள் நன்கொடையை ஏற்காததற்காக என்னை மன்னியுங்கள். நிதி வழங்குவது ஒரு பாக்கியமென நாங்கள் கருதுகின்றோம். பஹாய்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.”

அதனால்தான் பஹாய்கள் அரசியலில் ஈடுபடாமல் இருக்கின்றனரோ!

லிடியா ஸாமென்ஹோஃப்


lidya-zamenhof

 

லிடியா ஸாமென்ஹோஃப்

யூத இனத்தவரான லிடியா ஸாமென்ஹோஃப் (1904-1942) எஸ்பரான்டோ (Esperanto) துணைமொழியின் உருவாக்குனரான லுட்விக் ஸாமென்ஹோஃப்’இன் மகளாவார், தாயாரின் பெயர் கிலாரா ஸாமென்ஹோஃப். இவர் போலாந்து நாட்டின் வார்ஸோ நகரில் ஜனவரி 29, 1904ல் பிறந்தவராவார். போலாந்து நாடு அப்பொழுது ருஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் தமது தந்தை உருவாக்கிய எஸ்பரான்டோ துணை மொழியின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு திரு ஸாமென்ஹோஃப் வரையறுத்திருந்த ‘ஹோமாரானிஸ்மோ’ எனப்படும் மதச் சார்புடைய ஒருவித மனிநேயத்தின் மேம்பாட்டை ஊக்குவிப்பவராக இருந்தார்.

ஏறக்குறைய 1925ல் இவர் பஹாய் சமயத்தில் ஓர் உறுப்பினரானார். பிறகு 1937ல் பஹாய் சமயத்தையும் எஸ்பரான்டோ மொழியையும் போதிப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். அதே வருடம் டிசம்பர் மாதத்தில் அவர் போலாந்து நாடு திரும்பினார், தொடர்ந்து பஹாய் சமயத்தைப் போதித்தும் பல பஹாய் திருவாசகங்களை போலாந்து மொழிக்கு மொழிபெயர்க்கவும் செய்தார். போலாந்து நாட்டின் இன அழிப்புப் பேரிடரின் போது 1942ல் இவர் டிரெப்லிங்கா (Treblinka) மரணமுகாமில் கொலை செய்யப்பட்டார்.

லிடியா ஸாமென்ஹோஃப் தமது ஒன்பது வயதிலேயே எஸ்பரான்டோ மொழியை கற்றார். பதினான்கு வயதில் பல இலக்கியங்களைப் போலாந்து மொழிக்கு மொழிபெயர்த்தார். பல வருடங்களுக்கு இவரின் மொழிபெயர்ப்புகள் தொடர்ச்சியாகப் பிரசுரமாயின. 1925ல் தமது பல்கலைக்கழக சட்டப்படிப்பை முடித்தவுடன், எஸ்பரான்டோ மொழியின் மேம்பாட்டிற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். அதே வருடம் 1925ல் ஜெனேவாவில் நடந்த உலக காங்கிரசின்போது பஹாய் சமயத்திப்பால் அறிமுகமானார். போலாந்து நாட்டின் மனிதநேய/எஸ்பரான்டோ சங்கத்தின் இணக்க நிகழ்வின்போது அதன் செயலாளராகி, பல நிகழ்வுகளுக்குப் பேச்சாளர்களையும் உரைகளையும் ஏற்பாடு செய்தார். 1924 வியன்னா உலக காங்கிரஸிலிருந்து  அதற்குப் பிறகு  நடந்த எல்லா மாநாடுகளிலும் கலந்துகொண்டார். (அவ்வேளை அவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்ததால், 1938ல் நடந்த மாநாட்டில் மட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை.) ‘ட்ஸே’ முறையில் எஸ்பரான்டோ மொழியைக் கற்பிப்பவர் எனும் முறையில் அவர் பல்வேறு நாடுகளுக்கு ஊக்குவிப்பு விஜயங்கள் செய்தார், பல பயிற்சிகளையும் நடத்தினார்.

அனைத்துலக மாணவர் கூட்டு, ஐக்கிய அரபு எமிரேட், ட்சே பயிற்சிக்கழகம் மற்றும் பஹாய் சமூகங்களில் தமது பணிகளை அவர் ஆக்கத்துடன் ஒருங்கிணைத்தார். ‘லிட்டெராட்டுரா மொன்டோ’ பத்திரிகைக்கு பல கட்டுரைகளை, பெரும்பாலும் போலாந்து இலக்கியங்களை, எழுதியதோடு ‘போலா எஸ்பெரான்டோ’, ‘லா பிராக்டிகோ’, ‘ஹெரால்டோ டெ எஸ்பரான்டோ’, ‘என்சிக்லோபீடியோ டெ எஸ்பரான்டோ’ ஆகியவற்றுக்கும் கட்டுரைகள் எழுதினார். 1933ல் பிரசுரிக்கப்பட்ட சியென்கியெவிச் எழுதிய ‘குவோ வாடிஸ்’ நூலின் மொழிபெயர்ப்பு மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
1937ல் அவர் அமெரிக்கா சென்று அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார். அதன் பிறகு 1938 டிசம்பர் மாதத்தில் குடிநுழைவுத் துறை அவரின் விசாவை நீட்டிக்க மறுத்ததால் அவர் போலாந்து திரும்ப வேண்டியிருந்தது. அவ்வேளை அவர் ஓர் அமெரிக்கரை திருமணம் செய்துகொண்டால் அமெரிக்காவில் தங்கமுடியும் எனும் ஆலோசனை வழங்கப்பட்டது ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். தாயகமான போலாந்து திரும்பியவுடன், அவர் நாடு முழுவதும் பிரயாணம் செய்து எஸ்பரான்டோ மொழியையும் பஹாய் சமயத்தையும் போதித்தார்.

1939ல் ஜெர்மன் ஆக்கிரம ஆட்சியின் கீழ், வார்சொ நகரில் இருந்த அவருடைய வீடு வார்சொ யூத ஒதுக்கச் சேரியின் ஒரு பகுதியாகியது. அமெரிக்காவுக்குச் சென்று நாஸி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார, ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டு, தமது சொந்த நகருக்குத் திரும்பினார். ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர். அங்கும் அவர் பிறருக்குத் தம்மால் ஆன உதவிகளைச் செய்து உணவும் மருந்தும் கிடைப்பதற்கு உதவி செய்தார். போலாந்து நாட்டின் எஸ்பரான்டோவினர் பலமுறை அவருக்கு அடைக்கலம் அளிப்பதற்கு அல்லது தப்பிச் செல்வதற்கு உதவிட முன்வந்தனர் ஆனால், அவர் அவ்வுதவிகளை மறுத்துவிட்டார். பல சமயங்களில் லிடியாவிற்கு உதவியளிக்க முன்வந்த ஒரு பிரபல போலாந்து நாட்டு எஸ்பெரான்டினரான ஜோஸெஃப் ஆர்ஸென்னிக்கிடம், “ஒரு யூதரை ஒளித்துவைக்கும் எவரும் அந்த யூதர் கண்டுபிடிக்கப்படும் போது அந்த யூதரோடு சேர்ந்து அவரும் அவரின் குடும்பத்தினரும் அவர்களின் உயிரை இழக்க நேரிடும்,” என விளக்கமளித்தார். மற்றொருவருக்கு, இறுதியாக அவர் எழுதியதென நம்பப்படும் ஒரு கடிதத்தில் அவர் பின்வருமாறு விளக்கமளித்திருந்தார்: “உங்களை அபாயத்திற்குள்ளாக்கிட நினைக்காதீர்கள்; நான் சாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,ஆனால் நான் என் மக்களோடு இருக்க வேண்டியது என் கடமையாகும். எங்களின் துன்பங்களின் மூலமாக இவ்வுலகம் சீர்படுவதற்கு கடவுள் அருள்வாராக. நான் கடவுளை நம்புகிறேன். நான் ஒரு பஹாய், ஒரு பஹாய் ஆகவும் இறப்பேன். எல்லாமே அவர் கரங்களில் உள்ளது.”

இறுதியில், ஹிட்லரின் கீழ் செயல்படுத்தப்பட்ட  வார்ஸொ நகர யூத ஒழிப்புத் திட்டத்தின் கீழ் யூதர்களைக் கொல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மரணமுகாம்களில் ஒன்றான டிரெப்லிங்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு 1942 இலையுதிர்காலத்திற்குப் பிறகு கொல்லப்பட்டார்.

நினைவாஞ்சலி

லிடியாவின் நினைவாக, 1955ல் ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் ஹோலோகோஸ்ட் மியூசியத்தில் ஒரு நினைவாஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அங்கு இரண்டாவது உலகப்போரின்போது கொடுங்கோன்மைகளுக்கு உள்ளான யூதர்களை காப்பாற்றுவதற்கு எஸ்பரான்டினர் மேற்கொண்ட முயற்சிகள் நினைவுகூறப்பட்டன.