புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த மனிதன்


புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த மனிதன்

http://www.perfectz.net/2014/10/the-man-who-spit-in-buddhas-face.html

புத்தர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதன் அங்கே வந்து புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தான்.

buddha

புத்தர் அதைத் துடைத்துவிட்டு, “அடுத்தது என்ன” என்று அம்மனிதனைக் கேட்டார். அந்த மனிதன் குழப்பமடைந்தான். ஒருவர் முகத்தில் எச்சிலைத் துப்பினால், “அடுத்து என்ன (செய்யப்போகின்றாய்)” என அம்மனிதர் கேட்பார் என அம்மனிதன் எதிர்ப்பார்க்கவே இல்லை. இம்மாதிரி ஓர் அனுபவத்தை அம்மனிதன் பெற்றதில்லை. அவன் பலரை இவ்வாறு அவமதித்துள்ளான், அவர்களும் ஆத்திரம் அடைந்து, எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். அல்லது, கோழைகளாகவோ, பலவீனமானவர்களாகவோ இருந்தவர்கள், புன்னகைத்தும், அம்மனிதனைக்கு ஏதாவது கையூட்டல் வழங்கி அவரைச் சாந்தப்படுத்திடவும் முயலுவர். ஆனால், புத்தரோ அவ்விருவரைப் போன்றும் இல்லாது, ஆத்திரமடையவோ, புண்படவோ, கோழைத்தனமாகவோ நடந்துகொள்ளவில்லை. ஆனால், சர்வ சாதாரணமாக “அடுத்து என்ன” என்று கேட்கின்றார். அவரிடமிருந்து எவ்வித எதிர்ச்செயலும் இல்லை.

ஆனால், புத்தரின் சீடர்கள் ஆத்திரமடைந்தனர். புத்தரின் நெருங்கிய சீடரான ஆனந்தர், “இது அத்துமீறிய செயல். இதை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இம்மனிதன் தண்டிக்கப்பட வேண்டும், இல்லையெனில், எல்லாருமே இவ்விதமாக நடந்துகொள்வர்!” என்றார்

அதற்கு புத்தர், “நீர் சற்று பேசாமல் இரும். இம்மனிதன் என்னைப் புண்படுத்தவில்லை. அவன் புதியவன், அந்நியன். அவன் மக்களிடமிருந்து என்னைப் பற்றி ஏதாவது செவிமடுத்திருக்க வேண்டும், அல்லது இம்மனிதன் ஒரு நாஸ்திகனாகவோ, மக்களை அவர்களின் பாதையிலிருந்து வழிதவறச்செய்யவோ, ஒரு புரட்சியாளனாகவோ, குழப்பவாதியாகவோ இருக்கலாம். அவன் என்னப் பற்றிய ஒரு கருத்தையோ ஓர் எண்ணத்தையோ உருவாக்கிக்கொண்டிருக்கலாம். அவன் என் முகத்தில் எச்சிலை உமிழவில்லை, அவன் என்னப் பற்றி கொண்டிருந்த தன் கருத்தின் மீதே எச்சிலை உமிழ்ந்துள்ளான். ஏனெனில், அவனுக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லை, ஆகவே அவன் என் முகத்தின் மீது எவ்வாறு எச்சிலை உமிழ்ந்திருக்க முடியும்.

“இதைப் பற்றி நீர் ஆழச் சித்திப்பீரானால், அம்மனிதன் தன் உள்ளத்தின் மீதே எச்சிலை உமிழ்ந்துள்ளான். எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை, மற்றும் இந்த மனிதன் கூறுவதற்கு வேறு ஏதாவது இருக்கக்கூடும், ஏனெனில் ஒன்றைக் கூறுவதற்கு இது ஒரு வழியாகும். எச்சிலை உமிழ்வதும் ஒரு விஷயத்தைத் தெரிவிப்பற்கான ஒரு வழியாகும். ஆழ்ந்த அன்பு, கடுங்கோபம், வெறுப்பு, பிரார்த்தனை ஆகியவற்றின்றபோது மொழி செயலற்றதாகிவிடும். அவ்வேளை எதையாவது செயலில் செய்தாக வேண்டும். கோபப்படும்போது, கடுங்கோபத்துடன் இருக்கும் போது, ஒருவரை அடித்துவிடுகின்றோம், அவர் மீது எச்சிலை உமிழ்கின்றோம், அதன் மூலமாக ஒரு விஷயத்தைத் தெரிவிக்கின்றோம். அவனை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவன் ஏதோ ஒன்றைச் சொல்ல விரும்புகின்றான், அதனால்தான் “அடுத்து என்ன” என்று வினவுகின்றேன்.

அந்த மனிதன் மேலும் குழப்பமடைந்தான்! புத்தர் தமது சீடரான ஆனந்தரிடம், “நான் உம்மால்தான் புண்ப்பட்டுள்ளேன், ஏனெனில் உமக்கு என்னைத் தெரியும், நீர் என்னோடு பல வருடங்கள் வாழ்ந்துள்ளீர், இருந்தும் நீர் ஏன் கோபம்கொள்கின்றீர்,” எனக் கூறினார்.

புரியாமலும், குழப்பத்துடனும் அம்மனிதன் இல்லம் திரும்பினான். அன்றிரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. ஒரு புத்தரை ஒரு முறை பார்த்தவுடன், முன்பு தூங்கியது போன்று தூங்கவே முடியாது, சிரமமாகிவிடும். அம்மனிதனுக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தினால் அவன் மீண்டும் மீண்டும் அவஸ்தைக்குள்ளானான். என்ன நடந்தது என அவனால் தனக்குத் தானே விளக்கம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. அவன் உடல் முழுவதும் நடுங்கியது, வியர்வை அவன் போர்வையை நனைத்தது. அத்தகைய ஒரு மனிதனை அவன் தன் வாழ்க்கையில் கண்டதே இல்லை; அவன் மனதை, அவன் (வாழ்க்கை)மாதிரியை, அவன் கடந்தகாலம் முழுவதையும் புத்தர் முற்றாகச் சிதைத்துவிட்டிருந்தார்,

அடுத்த நாள் அம்மனிதன் மீண்டும் புத்தரிடம் சென்றான். புத்தரின் கால்களில் நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்தான். “அடுத்து என்ன?” என புத்தர் மீண்டும் கேட்டார். “வார்த்தைகளால் சொல்ல முடியாததைச் சொல்வதற்கு இதுவும் ஒரு வழியாகும். நீர் வந்து என் பாதங்களைத் தொட்டபொழுது, சாதாரணமாகச் சொல்ல முடியாத ஒன்றை நீர் என்னிடம் சொல்கின்றீர்; அதற்கு வார்த்தைகள் போதாதவை; அது வார்த்தைகளுக்குள் அடங்காது.” “ஆனந்தா, இம்மனிதன் இங்கு மீண்டும் வந்துள்ளான், அவன் ஏதோ ஒன்றச் சொல்கின்றான். இம்மனிதன் ஆழ்ந்த உணர்வுகள் உடையவன்,” என்றார்.

அம்மனிதன் புத்தரைப் பார்த்து, “நான் நேற்று நடந்துகொண்ட விதத்திற்கு என்னை மன்னியுங்கள்,” என்றான்.

“மன்னிப்பா?” என்றார் புத்தர். நீர் நேற்று எச்சிலை உமிழ்ந்த அதே அம்மனிதன் நானில்லை. கங்கையின் நீர் வழிந்து கொண்டே இருக்கின்றது. அகவே, அது அதே கங்கையல்ல. ஒவ்வொரு மனிதனும் ஓர் ஆறைப் போன்றவன். நீர் நேற்று எச்சிலை உமிழ்ந்த அதே மனிதன் இன்று இங்கு இல்லை. நான் உருவத்தில்தான் அம்மனிதனைப் போன்று இருக்கின்றேன், ஆனால் நான் அதே மனிதனல்ல; இந்த இருபத்து நான்கு மணிகளில் நிறையவே நடந்துள்ளது! ஆறு நிறையவே வழிந்தோடியுள்ளது. ஆகவே, நான் உன்னை மன்னிக்க முடியாது ஏனெனில், உன்மேல் எனக்கு எந்த மனவறுத்தமும் கிடையாது.

“நீயும் ஒரு புதிய மனிதன். நேற்று இங்கு வந்த மனிதன் நீரல்ல; அந்த மனிதன் ஆத்திரத்துடன் இருந்தான், எச்சிலை உமிழ்ந்தான், ஆனால் நீரோ என் கால்களில் விழுந்து வணங்குகின்றீர், என் கால்களைத் தொடுகின்றீர். ஆகவே, நீர் அதே மனிதனாக எவ்வாறு இருக்க முடியும்? நீர் அதே மனிதனல்ல, ஆகவே அந்த நிகழ்ச்சியை நாம் மறந்துவிடுவோம்.அந்த இரண்டு மனிதர்களும், எச்சிலை உமிழ்ந்தவரும், உமிழப்பட்டவரும் இனி கிடையாது. நெருங்கி வா. நாம் வேறு எதைப் பற்றியாவது பேசுவோம்.

உலகம் முழுவதும் முதன் முறையாக பஹாய்கள் “இரட்டைப் பிறந்தநாள்களைக்” கொண்டாடவிருக்கின்றனர்


http://www.huffingtonpost.com/shastri-purushotma/bahais-celebrate-twin-holy-days_b_8282546.html

The Bahai House of Worship Samoa, Upolu, British Samoa, South Pacific, Pacific
தென் பசிபிக் நாடான, சமோவா நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லம்

வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (13 மற்றும் 14 நவம்பர்) முதன் முறையாக, உலகளாவிய நிலையில், பஹாய் சமூகம் அதன் சமயத்தின் இரண்டு ஸ்தாபகர்களின் பிறந்தநாள்கள் குறித்த இரட்டைப் பிறந்தநாள்களைக் கொண்டாடவிருக்கின்றது.

இதற்கு முன் மேலைநாடுகளில் இப்பிறந்தநாள்கள் கிரேகோரிய நாள்காட்டியின்படி கொண்டாடப்பட்டு வந்தன; இந்த நாள்காட்டி, சௌர நாள்காட்டி (solar calendar) எனும் முறையில் அவர்களின் பிறந்தநாள்களை பல வாரங்கள் இடைவெளியில் உள்ளடக்கியிருந்தது. இவ்வருடம், பஹாய் சமூகத்திற்கான மேலும் ஒரு புதிய நாள்காட்டிமுறையின் அமலாக்கத்தோடு, இப்புனித நாள்கள் அந்த நாள்காட்டியின் அடங்கியுள்ள ஓர் சந்திர அம்சத்தின் அடிப்படையில் அனுசரிக்கப்படும், ஆகவே அவை ஒன்றன்பின் ஒன்றான இரண்டு தொடர்ந்துவரும் நாள்களில் அமைந்திருக்கும். கொண்டாட்டங்கள் இரண்டு அடுத்தடுத்த நாள்களில் வருவதானது ஒரு தனிச்சிறப்பை குறிக்கினறது, ஏனெனில் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் சமயப்பணிகள், பல வழிகள் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டுள்ளன.

ShrineBabNight
ஹைஃபா இஸ்ரேலில் உள்ள பாப் பெருமானாரின் நினைவாலயம்

பாப் பெருமானார், பஹாவுல்லா இருவரும் முறையே 196 மற்றும் 198 வருடங்களுக்கு முன் பிறந்தனர்; சமய வரலாற்றுத் துறையில் அவர்களின் வாழ்க்கை தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. பஹாவுல்லாவின் வாழ்க்கை குறித்து பிரேசில் நாட்டுப் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட புகழுரையில், பிரேசில் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான லூயி குஷிகென், பஹாவுல்லாவின் எழுத்துகளை “ஒரு தனிமனிதரின் எழுத்தாணியினால் எழுதப்பட்ட அதி மகத்தான சமயப் படைப்பு,” என வர்ணித்துள்ளார். தமது சமயப்பணியின் பிரகடனத்திலிருந்து 1850-இல் பாரசீக அரசாங்கத்தினால் அவர் மரண தன்டனைக்கு உட்படுத்தப்படும் வரையிலான ஆறு வருட காலத்தில், பாப் பெருமானார் சுமார் ஐந்து லட்சம் வாக்கியங்களை எழுதினார் என அனுமானிக்கப்பட்டுள்ளது; அதே வேளை, தமது சமயப்பணிக் காலத்தில் பஹாவுல்லாவின் எழுத்துகள் சுமார் 100 தொகுப்களாகும். அரபு மற்றும் பாரசீக மொழிகளிலான இவ்வுரைப்பகுதிகளின் ஒரு சிறு பகுதியே இதுவரை பிரசுரிக்கப்பட்டும், அதனினும் சிறிய அளவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளது.

இ்வவார இறுதியின் கொண்டாட்டங்களுக்கு உதவியாக, இந்த இரட்டைப் பிறந்த நாள்களின் தனிச்சிறப்பு குறித்த, இதுவரை பிரசுரிக்கப்படாத பல உரைப்பகுதிகள், ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பஹாய் சமூகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள.

உலகம் முழுவதுமுள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் பல மில்லியன் பஹாய்கள் இத்திருநாள்களைக் கொண்டாடும் அதே வேளை, தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறையில் வாடும் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட பஹாய்கள் இக்கொண்டாடங்களைத் தங்களின் சிறையிலேயே அமைதியாகக் கொண்டாட வேண்டிவரும். இரான் நாட்டு பஹாய் சமூகத்தின் தலைமைத்துவக் குழுவின் ஏழு உறுப்பினர்களை இது உள்ளடக்கும். நீண்ட காலமாக இரான் நாட்டின் ‘மனச்சாட்சிக் கைதிகளான’ இவர்கள், தங்களின் இருபது ஆண்டுச் சிறைவாசத்தின் எட்டாவது ஆண்டை கடந்த மே மாதம் ஆரம்பித்தனர். 1979-இல் இரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சியிலிருந்து பஹாய்கள் துன்புறுத்தப்படுவது தீவிரமடைந்துள்ளது, ஆனால் கண்மூடித்தனமான விடாப்பிடியான வெறித்தனத்தின் முன்னால், ஆக்கபூர்வமான மீள்திறன், இப்பொழுது இரான் நாட்டின் ஜனத்தொகையினரின் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் இரானிய ஆய்வுத் துறையின் நிர்வாகி பேராசிரியர் அப்பாஸ் மிலானி பின்வருமாறு விவரிக்கின்றார்:

பஹாய் சமயத்தைப் பற்றி இரானிய மக்களின் மனதில் விஷத்தைக் கலக்கும் ஆட்சியாளர்களின் தீவிர முயற்சிகளைப் பார்க்கிலும், அவர்கள் ஊடகங்களை முழுமையாகக் கட்டுப்படுத்திவந்த போதிலும், மில்லியன் கணக்கிலான இரானியர்கள், பன்மடங்கான அறிஞர்கள் ஆகியோரிடையிலும், சில ஷீயா மதத்தலைவர்களிடையிலும்கூட, பஹாய்கள் இவ்விதமாக நடத்தப்படுவது நமது கடந்தகாலத்தின் வெட்கக்கேடான ஒரு பகுதி எனும் ஒரு புதிய விழிப்புணர்வு அலைமோதிவருகின்றது. பிற இரானியக் குடிகள் போன்று பஹாய்களும் தங்களின் சமயத்தைக் கடைப்பிடிக்கும் மறுக்கமுடியாத உரிமையைப் பெற்றுள்ளனர் மற்றும் இரான் நாட்டின் குடிகள் எனும் முறையில், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எல்லா பிரஜைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் மேலும் பல (இரானியர்கள்) நம்புகின்றனர்.

இவ்வார இறுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பல நாடுகளிலும், பிராந்தியங்களிலும் வாழும் பஹாய்கள் இரட்டைப் பிறந்த நாள்களை கொண்டாடுகையில், இயல்பாகவே அவர்கள் பஹாவுல்லாவும், பாப் பெருமானாரும் பிறந்த நகரங்கள் குறித்துத் தங்கள் உள்ளங்களில் நினைத்துப் பார்ப்பர். குறிப்பாக, தெஹரான் மற்றும் ஷிராஸ் நகரங்கள். இரானிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்காக இன்றி, உலகத்தின் எல்லா பகுதிகளிலுமிருந்து பல நூராயிரம் பஹாய்கள் பஹாய்கள் இந்நகரங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு, தங்கள் மரியாதையைச் செலுத்தி, இப்புனித நாள்களைக் கொண்டாடுவர் என்பதில் சிறிந்தும் சந்தேகமில்லை. பாப் பெருமானார் வாழ்ந்திருந்த புனித இல்லம், 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு உடனடியாக அழிக்கப்பட்டது; இரானிய அதிகாரிகள் வட இரானில் பஹாவுல்லாவின் குழந்தைப் பருவத்துடன் சம்பந்தப்பட்ட வீடுகளை வேண்டுமென்றே அழித்துவிட்டிருந்தனர். பல பிரச்சினைகளில் அனைத்துலக ரீதியில் ஏற்புடைய தரமுறைகளுக்கு இணங்க செயல்படுவதில் இரான் அரசாங்கத்தின் இயலாமை குறித்து உலகம் அதிகமான கவனம் செலுத்தி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கங்கள், பத்திரிக்கையாளர்கள், உயர்கல்வியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோரின் குரல்களும், சில வேளைகளில் உலகம் முழுவதும் கட்டிடங்களின் செங்கற்கள் கூட, நடப்பிலிருக்கும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தங்களின் குரல்களை உயர்த்தி வருகின்றனர் என்பது பஹாய் சமூகத்தினர்க்கு ஆறுதலளிக்கும் ஒன்றாக இருக்கின்றது.

ChileTemple
கட்டுமானத்திலுள்ள தென் அமெரிக்காவின் சில்லி நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லம்

மேலும், பஹாவுல்லா மற்றும் பாப் பெருமானாரின் பிறப்பு குறித்த இருநூறாவது நினைவாண்டுகள் நெருங்கிவரும் அதே வேளை, ஓவ்வொரு கண்டத்திலும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லங்கள் உட்பட, சில்லி, கம்போடியா, கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, இந்தியா (புது டில்லியில் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லம் உட்பட, பீஹார் ஷாரிஃப்), பாப்புவா நியூ கினி, வானுவாத்து ஆகிய நாடுகளிலும் இடங்களிலும் மனதைக் கவரும் புதிய வழிபாட்டு இல்லங்களை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரான் நாட்டின் ஆயத்துல்லாக்கள், தாங்கள் அழித்திட முயன்று வரும் ‘இத்தவறான மார்க்கம்’ எவ்வாறு உலகம் முழுவதும் சீராக வளர்ந்து வருகின்றது என்பது குறித்த குழப்பமடையவே செய்வர்.

உடல்நலம் – வயிற்றுக் கோளாறுகளைத் தவிர்த்திட…


தமது “மருத்துவருக்கான நிருபத்தில்” (https://goo.gl/gyBjMb) பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

  • மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள்.
  • ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள்.
  • வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்…

இந்த அறிவுரைகளின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் காண்போம்:

AlimentaryCanal01_eவயிற்றுக்கோளாறுகளால் அவதியுறாத மனிதர்கள் கிடையாது என நாம் அறுதியிட்டுக் கூறலாம். எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு நேரத்தில் வயிற்று வலி, நெஞ்செரிவு, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படுகினறனர். இவற்றுக்குக் காரணமென்ன?

எந்நேரத்திலும், வயிற்றிலும் சரி குடல் சார்ந்த உணவுப்பாதையில் பலவிதமான கிருமிகள் வாசம் செய்கின்றன. இவை நல்ல கிருமிகள் எனவும் கெட்டகிருமிகள் எனவும் பிரிக்கப்படுகின்றன. கெட்ட கிருமிகளின் வகையில் e-coli என அழைக்கப்படும் கிருமிகள் உள்ளன. இத்தகைய கிருமிகள் ஒரு குறிப்பி்டட அளவு ஜீரணத்திற்கு அவசியமே. இக்கிருமியும் பல வகைப்படும். வயிற்றில் இவற்றன் அளவு தேவைக்கு மேல் அதிகரித்திடும் போது, வயிற்றுப்போக்கு, இரத்த சோகை, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படலாம். இக்கிருமிகள் குடலில் அதிகரிக்கும் போது அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பிறகு பார்க்கலாம். இந்த இ-கோலி கிருமி, பெரும்பாலும் மலத்தின் (faeces) மூலமாகப் பரவுகின்றது. சில இடங்களில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத இடங்களில் வீட்டிலேயே குழிகள் வெட்டப்பட்டு கழிவுநீர் தேக்கப்படுகின்றது. குழி நிறையும் போது கழிவுநீர் அகற்றப்படுகின்றது. அதே வேளை நீர்ப்பாசனம் இ்ல்லாத இடங்களில் கிணறுகள் வெட்டப்படுகின்றன. அத்தகைய கிணறுகள் கழிவுநீர்க் குழிகளிலிருந்து குறைந்தபட்சம் 30 அடி தூரத்திலாவது அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத போது இ-கோலி கிருமிகள் கிணற்று நீரில் கலக்கப்படும் ஆபத்து உள்ளது. அத்தகைய நீரை கொதிக்க வைக்காமல் பயன்படுத்துவது ஆபத்தானது. சிலருக்கு அது பழகியிருக்கும், ஆனால் பழக்கமில்லதோர் வயிற்றுப்போக்கை எதிர்நோக்க நேரிடும். மிகவும் வினோதமாக, சிறு குடலில் ஏற்படும் கிருமிகளின் அதிகரிப்பு, உடல் பருமனை அதிகரிக்கின்றது எனவும் கூறப்படுகின்றது.

நம்மில் பலர் உணவு உண்பதை அவசியமாகவின்றி, அதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பசிக்காவிட்டாலும் அவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படியே உணவு அருந்தினாலும், வயிற்றில் சிறிதும் இடைவெளியின்றி அருந்துவோரும் இருக்கின்றனர். இதன் விளைவு என்ன? நெஞ்செரிப்பு, வயிற்று உப்பிசம், வாயுப் பிரச்சினை, மலம் மிகவும் மென்மையாக வெளிவருதல், தூக்கமின்மை போன்றவற்றை உடனடி பிரச்சினைகளாகவும், உடல் பருமன் அதிகரித்தல், இருதய நோய் ஆகியவற்றை காலப்போக்கில் ஏற்படும் பிரச்சினைகளாகவும் குறிப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணுவதற்குப் பதிலாக பசியெடுக்கும் போதெல்லாம் சிறிதளவு உணவை, ஒரு நாளுக்கு நான்கு அல்லது ஐந்துமுறை உண்ணுவது சிறந்ததாகும்.

சரி, பசியெடுத்து உணவு அருந்துவதனால் என்ன நன்மை? பசியெடுக்கும் போது, வயிறு உணவை ஏற்பதற்குத் தன்னை தயார் செய்து கொள்வது முதன்மையான ஓர் அம்சமாகும். உடல் முழுவதுமே இந்தச் செயல்முறைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கின்றது. வயிற்றில் ஜீரணத்திற்கான திரவங்கள் சுரக்கின்றன. உணவு நன்கு அரைக்கப்பட்டு உமிழ்நீர் கலந்து விழுங்கப்படும் போது ஆகாரம் சீராக ஜீரணிக்கப்படுகின்றது. உமிழ் நீரில் ‘டாயலின்’ (ptyalin) போன்ற என்ஸைம் அல்லது ‘நொதி’ உள்ளது. இது மாவுச் சத்தையும், கொழுப்புச் சத்தையும் கரைத்திட உதவுகின்றது. ஆகவே, உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுவது முக்கியமாகும்.

இதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயம் யாதெனில், நன்கு பசியெடுத்துச் சாப்பிடும் போது, தேவைக்கும் அதிகமாக உண்ணும் ஆபத்து உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். முக்கால் வயிறு உணவு உண்ணும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உண்ணும்போது, செரிமானத்திற்கான திரவங்கள் நன்கு உணவில் கலந்து ஜீரணம் சுமுகமாக நடைபெறுகின்றது. உணவு வயிற்றில் புளித்துப் போவது தவிர்க்கப்படுகின்றது, வாயு தொல்லையும் இல்லை.

பலவகை உணவு வகைகளை ஒரே நேரத்தில் உண்பதும் சரியல்ல. இது ஜீரண சுரப்பிகளை அழுத்தத்திற்குள்ளாக்குகின்றது. ஒரே வித உணவு உண்ணும் போது சுரப்பிகளிலிருந்து பலவித என்ஸைம்கள் சுரப்பது தவிர்க்கப்படுகின்றது. இறைச்சி வகைகளையும் தாவர வகைகளையும் ஒன்றாக உண்பதற்குப் பதிலாக, மாமிசத்தை மாவு அல்லது கார்போஹைடிரேட் வகையோடு அல்லது தாவர உணவை கார்போஹைடிரேட் வகையோடு உண்ணுவது நலம் பயக்கும்.

அடுத்து, உணவு உண்டபின் சுமார் அரை மணிநேரத்திற்கு நீர் அருந்தாமல் இருக்க வேண்டும். இது ஜீரண திரவங்கள் நீர்த்திடுவதைத் தவிர்க்கின்றது. இதன் தொடர்பில், நீர்மமான உணவு வகைகள் முதலில் உட்டொள்ளப்பட்ட பிறகே திண்ம உணவு வகைகள் உட்கொள்ளப்பட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் உணவு உண்பதற்கு முன்பே சாப்பிடுவது நன்று. இது அப்பழங்கள் வயிற்றில் நொதித்திடுவது அல்லது புளித்திடுவதையும் அதன் பயனான வாயு பிரச்சினையை தவிர்க்கின்றது. உறங்கச் சென்ற பின் நீர் அருந்துவதும் நல்லதல்ல. விழித்திருக்கும் போது இல்லாத பல செயல்முறைகள் தூங்கும் போது செயல்பாட்டிலுள்ளன. தூங்கச் சென்றபின் நீர் அருந்துவது இச்செயல்முறைகளைக் கெடுக்கின்றது.

ஆகவே, ஆரோக்கியமான முறையில் உணவை உட்கொண்டு உடல் நலத்தைப் பேணுவோமாக.

(அடுத்த கட்டுரையில் இ-கோலி கிருமிகளை எவ்வாறு அளவோடு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதைப் பார்ப்போம்)