நன்றி: பஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள்
பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழவும், அவற்றுள் அடங்கியுள்ள மகத்தான் ஒழுக்கமுறைகளின் வரிசையைப் பின்பற்றவும் முயலும் போது, நாம் அழுத்த உணர்விற்கு ஆளாகிடக்கூடும். ஆகவே, நாம் கவனம் செலுத்தக்கூடிய பண்புகளின் நெடுக்கத்தை மட்டுப்படுத்துவது உதவியாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, பஹாவுல்லா குறிப்பாக விரும்பிய நான்கு நற்பண்புகள் உள்ளன.
பஹாவுல்லா பல முறை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
மக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய, நான் காண விரும்பும் நான்கு நற்பண்புகள் உள்ளன: முதலாவது, உற்சாகமும் தைரியமும்; இரண்டாவது, புன்னை பூத்த முகமும், பிரகாசமான வதனமும்; மூன்றாவது, அவர்கள் பிறர் கண்களின் மூலமல்லாது, தங்களின் சொந்தக் கண் கொண்டு பார்ப்பது; நான்காவது, ஆரம்பிக்கப்பட்ட ஒரு பணியை, முடிவிற்குக் கொண்டுவரும் திறன்..1
நாம் பேண வேண்டிய நற்பண்புகள் பல உள்ளன, இருப்பினும், இந்த நான்கு நற்பண்புகளையும் பஹாவுல்லா ஏன் தனிப்படுத்தியுள்ளார்? பின்வருபவை அது குறித்த என் கருத்துகள்:
1. “…உற்சாகமும் தைரியமும்…”
கடவுளை நம்புகிறேன் எனக் கூறுதல் மட்டும் போதாது: நமது கடவுள் நம்பிக்கையை நாம் செயல்களின் மூலம் வெளிப்படுத்திட வேண்டும். அதே வேளை, வெறுமனே செயல்பட்டால் மட்டும் போதாது; செய்வனவற்றை உற்சாகத்துடன் செய்திட வேண்டும். எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில் வாழ்கிறோம் என்பதை நாம் உணர்ந்திருந்தோமானால், ‘அதிவுயரிய அமைதியின்’ நிர்மாணத்தில் நமது பங்கு குறித்து நாம் மிகவும் உற்சாகமாக இருப்போம். இந்த முயற்சியில் நமக்கு முழு மனவலிமை அவசியமாகும். பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கு தேவையானவற்றை நாம் செய்திட வேண்டும். இத்தகைய உற்சாகத்தை கடவுள் சமயத்திருக்கரம் ரஹ்மத்துல்லா முகாஜர் போன்ற பஹாய்களிடம் நாம் கண்டோம். இவர் பஹாவுல்லாவின் செய்தியை பேரார்வத்துடன் பரப்புவதில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். இதே தைரியத்தை நமது சமயத்தின் உயிர்த்தியாகிகளான மோனா மஹ்முத்நிஸாட் போன்றோரிடமும் கண்டோம். இவர் சமயத்தைத் துறப்பதற்குப் பதிலாக இறப்பதற்கே முடிவெடுத்தார். எங்கெல்லாம் பஹாய்கள் பகிஷ்கரிக்கப்படுகின்றனரோ அங்கெல்லாம் போதனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு நமக்கு இதே தைரியம் தேவைப்படுகின்றது. நம்மில் பலர் எப்பொழுது பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டோம் என்பதை நினைவில் வைத்திருப்போம். ஒரு புதிய அவதாரம் தோன்றி, உலகைத் தன்மைமாற்றுவதற்காகப் புதிய போதனகளை நமக்காகக் கொண்டுவந்துள்ளார் என்பதில் பெரும் உற்சாகமடைந்திருப்போம். இச்செய்தியை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் பேரார்வத்துடன் செயல்பட்டிருப்போம். அவ்வித பேரார்வத்துடன் செயல்படும்போது, நாம் பெரும் துணிச்சலைக் கொண்டிருந்திருப்போம்.
2. “…புன்னகை பூத்த முகமும் பிரகாசமான வதனமும்…”
மக்கள் பிரகாசமான முகத்துடன் இருக்கவேண்டுமென பஹாவுல்லா விரும்பியதை வைத்து, மகிழ்ச்சியுடன் வாழ்வது முக்கியமாகும் என்பது தெளிவாகின்றது. ஓர் ஆன்மீக வாழ்க்கை வாழ்வது உணர்ச்சியின்றி வாழ்வது என அர்த்தமல்ல. இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமல்ல என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டுமென பஹாவுல்லா கூறும்போது நாம் கவலை அடையக் கூடாது. ஓர் ஆன்மீகப் பாதைக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வது ஒரு விதமான தீவிரத்தன்மையைக் கோருகின்றது. அதற்காக நாம் சன்னியாசிகளைப் போன்று, ஒரு மாசில்லா வாழ்க்கை வாழ்வேண்டும் என்பதில் முற்றாக மூழ்கி, அவ்விதம் வாழாதோரைப் பற்றி தப்பெண்ணம் கொள்வது என்பது அர்த்தமல்ல. அதே சமயம் துறவர வாழ்க்கையை மேற்கொண்டு நம்மை வருத்திக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமல்ல. நாம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், அம்மகிழ்ச்சியை—சூரியன் தனது வெப்பத்தையும் ஒளியையும் பகிர்ந்துகொள்வது போன்று– நாமும் பிறருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரகாசம் எனும் பண்புடன் நகைச்சுவையும் தொடர்புள்ளதாகும், ஏனெனில் அது மக்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. பஹாவுல்லா, அப்துல்-பஹா இருவருமே பெரும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.
3. “…பிறர் கண்களின் மூலமல்லாது தங்களின் சொந்தக் கண்களைக் கொண்டு போர்ப்போர்…”
சொந்தக் கண்களைக் கொண்டு பார்ப்பதென்பது, மெய்ம்மையை நாமே சுயமாக ஆராயவேண்டும், வெறும் மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதென்பதல்ல. உண்மையை ஆராய்ந்திடும்போது நாம் நீதியோடு அவ்வாறு செய்திட வேண்டும், பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:
அதன் உதவியோடு நீங்கள் உங்கள் சொந்தக் கண்களைக் கொண்டு பார்த்திட முடியும், பிறர் கண்களின் மூலமல்ல; உங்களின் சொந்த அறிவைக் கொண்டு அறிந்திட முடியும், பிறர் அறிவின் மூலமாக அல்ல.2
இது எதைக் குறிக்கின்றது என்பதை அப்துல் பஹா விளக்குகின்றார்:
[…] எந்த மனிதனுமே தனது மூதாதையரையோ, முன்னோர்களையோ கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. மாறாக, ஒவ்வொருவரும் தனது சொந்தக் கண்களைக் கொண்டே பார்க்க வேண்டும், சொந்த செவிகளைக் கொண்டு செவிமடுக்க வேண்டும், உண்மையை சுயமாக ஆராய்ந்திட வேண்டும், அதன் மூலமாக உண்மையைப் பின்பற்றக்கூடும், மற்றும் அதற்கு மாறாக, முன்னோர்களைக் கண்மூடித்தனமாகக் கேள்வியின்றி பின்பற்றவும், அவர்களின் சாயலில் நடந்துகொள்ளவும் வேண்டியதில்லை.3
இதன் மூலமாக, கலாச்சாரத்தினுள் எதிர்மறையான நடைமுறைகள் வேர்விட்டு, நிரந்தர வழக்கங்களாகிடுவதை இது தடுக்கின்றது. நாம் சுயமாக சிந்திக்க முடிவதால், நாம் நம்மைச் சுற்றியுள்ளோரின் தாக்கங்களுக்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை அல்லது நமது முன்னோர்களின் தவறுகளை மீண்டு செய்ய வேண்டியதில்லை.
4. “…ஆரம்பிக்கப்பட்ட பணியை முடிப்பதற்கான திறன்.”
ஒரு பணியை ஆரம்பித்தபின் அதை முடிவிற்குக் கொண்டு வருவது முக்கியமாகும், அது பணியங்களிலானாலும் சரி, வீட்டிலானாலும் சரி. அதற்கு உறுதி, மீழ்திறன், அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. இலக்குகளை அடைவதற்கும், ஒரு மேலான நோக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கும் நாம் ஆரம்பித்த ஒன்றை முடிப்பதற்கான திறன் தேவைப்படுகின்றது. விஷயங்களை நாம் முடிக்காவிடில் – நமது வாழ்க்கைகள் தட்டைநிலையை அடைகின்றன. ஏனெனில், குறைந்த முயற்சியே தேவைப்படுவனவற்றையே நாம் தேர்வு செய்வோம் அல்லது நாம் தினசரி செய்பவற்றை மட்டுமே செய்துகொண்டிருப்போம். குறிப்பாக, நாம் பிறரிடம் வாக்களித்துள்ள விஷயங்களை செய்து முடிப்பது மிகுவம் முக்கியமாகும்; ஏனெனில், இது மக்களிடையே நம்பகத்தை மேம்படுத்துவத்தோடு, ஒற்றுமையையும் பேணுகின்றது.
இந்த நான்கு பண்புகளும் ஆக்ககரமானவை என்பது மனதில் பதியத்தக்கதாக இருக்கின்றது. பஹாய் சமயம் செயல்படுதலையே மையமாகக் கொண்டுள்ளது என்பதை இது கான்பிக்கின்றது. இருப்பினும், நமக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மை, விட்டுக்கொடுத்தல், பணிவு ஆகியவை தேவை என்பது உண்மைதான். ஆனால், இவை யாவும், உலகத்தை மேம்படுத்தும் நோக்கோடு உலகோடு செயல்படுவதை இயன்றதாக்கும் நற்பண்புகளோடு இணைக்கப்பட வேண்டும். இப்பண்புகளை நாம் பார்க்கையில், ஒரு துடிப்பான ஆற்றல் மிக்க மனிதர் ஒருவர் குறித்த உருவகமே நம் கண்முன் தெரிகின்றது. இம்மனிதன் நேர்மறை மனப்பான்மையைக் கொண்டும், எதையும் செயல்படுத்துவதில் அச்சங்கொள்வதில்லை. அத்தகையோர் தங்களின் சுகமான சூழ்நிலைகளை விடுத்து சாதனைகள் புரிகின்றனர். ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் போது, அத்திட்டம் முடியும்வரை அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு தொழிலல்ல: இது அவர்களின் வேட்கை.
அதே நேரம், இந்த நேர்மறையான பண்புகளுக்கு எதிராக பின்வரும் எதிர்மறையான பண்புகள் குறித்து பஹாவுல்லா கவலை கொண்டிருந்ததாக அபுல்-காசிம் ஃபையிஸி கூறுகின்றார்:
- தாங்கள் அறிவாளிகள் எனவும் அது குறித்து பெருமை கொள்பவர்கள்
- ஒரு விலைமதிப்பற்ற சேவையை செய்து அல்லது ஒரு பயனுள்ள மாற்றத்தைக் கொண்டுவந்து, ஆனால் தங்களின் சாதனையில் பெருமை கொள்பவர்கள்
- தங்களின் பரம்பரையைப் பற்றி பெருமை கொள்பவர்கள்
- தங்களின் உடலழகு மற்றும் ஈர்ப்புத்தன்மை குறித்து பெருமைகொள்பவர்கள்
- தங்களை தனவான்கள் எனக் கருதி அதில் பெருமையும் கொள்பவர்கள். 4
இந்த ஐந்து வரிகளிலும் மைய வார்த்தையாக இருப்பது கர்வம். மேலே விவரிக்கப்பட்ட, மகிழ்ச்சியான, அர்ப்பணமிக்க, ஆக்ககரமான வாழ்க்கையை வாழும் மனிதர் மற்றவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்கள் பணிவுமிக்கவர்கள் மற்றும் தங்களின் சாதனைகளைப் பற்றி விழுப்புணர்வற்றவர்கள். ஆகவே, இத்தகைய வாழ்க்கையை வாழ முயலும் நாம், உற்சாகமாகவும், தைரியமாகவும், பிராசமாகவும், சுதந்திரமாகவும், அர்ப்பணவுணர்வுடனும் இருந்திட நோக்கங்கொண்டிருக்க வேண்டும். நாம் மேம்பாடு காண்கிறோம் என்பதைக் கண்டுகொள்ளும்போது, நமது சாதனைகளில் பெருமைப்படுவதெனும் பொறிக்குள் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. பிறருக்கு உதவேண்டுமெனும் நமது நோக்கம் மேன்மேலும் கூர்மையடையும் போது, பெருமைப்படுவதற்கு நமக்கு நேரம் கிடைக்காது.