திடீரெனவும், எதிர்ப்பாராமலும், நடந்த அவரது மறைவு நகரம் முழுவதும் காட்டுத் தீயைப் போல் பரவி, உலகின் வெவ்வேறு பாகங்களுக்கு உடனடியாகத் தந்தி மூலம் அனுப்பப்பட்டு, கிழக்கிலும், மேற்கிலுமுள்ள பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் சமூகத்தை சோகத்தால் ஸ்தம்பித்திடச் செய்தது. தூரங்களிலிருந்தும் அருகிலிருந்தும், உயர்ந்தோரிடமிருந்தும் தாழ்ந்தோரிடமிருந்தும் தந்திகள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், துக்கவயப்பட்டிருந்த, அடக்க முடியாத சோகத்திலாழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு, பாராட்டுகள், பக்தி, கடுந்துயரம், அனுதாபம் ஆகியவை குறித்த செய்திகள் வந்து குவிந்த வன்னமிருந்தன.
அக்காலனிகளுக்கான பிரிட்டிஷ் மாநில செயலாளர், திரு வின்ஸ்டன் சர்ச்சில், பாலஸ்தீன உயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சமுவேலுக்கு உடனடியாகத் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பி, “மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசு சார்பாக அவர்களின் அனுதாபத்தையும், இரங்கலையும்,” பஹாய் சமூகத்திற்குத் தெரிவிக்கும்படி ஆணையிட்டார். எகிப்து நாட்டின் இளங்கோமகன் எல்லன்பி, பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு ஒரு தந்தியை அனுப்பி, “மறைந்த சர் அப்துல்-பஹா எஃபென்டியின் உறவினர் மற்றும் பஹாய் சமூகத்திற்கும் அவர்களின் பெருமதிப்பிற்குறிய தலைவரின் இழப்பு குறித்த (தமது) ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாக்தாத்திலுள்ள மந்திரிகள் அவை, “பரிசுத்தரான அப்துல்-பஹாவின் குடும்பத்தினருக்கு அவர்களின் இழப்பு குறித்து தங்களின் அனுதாபத்தைத்” தெரிவிக்குமாறு பிரதம மந்திரியான சையித் அப்துர்-ரஹ்மானுக்கு ஆணையிட்டனர். எகிப்திய அதிரடிப்படையின் படைத்தலைவரான, ஜெனரல் கொன்கிரீவ், பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு செய்தியனுப்பி, “மறைந்த சர் அப்பாஸ் பஹாயின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான, ஜெனரல் சர் ஆர்த்தர் மோனி, தமது துக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பிற்காகத் தமது அனுதாபத்தையும் எழுதியனுப்பினார். ஒரு பிரபலமான பேராசிரியரும், கல்விமானுமான ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் கல்விசார் வாழ்வின் தனிச்சிறப்புமிக்க நபர்களுள் ஒருவர் தமது சார்பாகவும், தமது மனைவி சார்பாகவும் பின்வருமாறு எழுதினார்: “தமது சிந்தனைகளை மறுமையின் மீது செலுத்தி, இம்மையில் ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு முயன்ற ஒருவர், (மூடு)திரைக்கு அப்பால் கடந்து பூரண வாழ்வை அடைவதானது, விசேஷ அற்புதமிக்கதாகவும், பரிசுத்தம்மிக்கதாகவும் இருந்திட வேண்டும்.”
வெவ்வேறு மொழிகளிலும், பல்வேறு நாடுகளிலும் உள்ள, லன்டன் “டைம்ஸ்”, “மோர்னிங் போஸ்ட்”, “டேய்லி மேய்ல்”, “நியூ யார்க் வர்ல்ட்”, “லெ டெம்ப்ஸ்”, “டைம்ஸ் ஆஃப் இந்தியா”, மற்றும் அது போன்ற பலவிதமான நாளிதழ்கள், மனித சகோதரத்துவம், அமைதி, ஆகியவை குறித்து அத்தகைய குறிப்பிடத்தக்கதும், அழிவில்லா சேவைகளையும் வழங்கிய ஒருவருக்கு அவற்றின் புகழுரையை பதிவு செய்தன.
உயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சாமுவேல், “அவரது (அப்துல்-பஹாவின்) சமயத்திற்கான எனது மரியாதை, அவர்மீதான எனது மதிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திடுவதற்கு,” இறுதிச் சடங்குகளில் தாமே நேரில் கலந்துகொள்ளும் ஆவலை வெளிப்படுத்திய ஒரு செய்தியை உடனடியாக அனுப்பினார். செவ்வாய் கிழமை காலையில் நடைபெற்ற இறுதிச் சடங்கைப் பொறுத்த வரை—அது போன்று ஓர் இறுதிச் சடங்கை பாலஸ்தீன நாடு அதுவரை கண்டதில்லை—அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு வகுப்பையும், சமயத்தையும், இனத்தையும் சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். பின்னாளில் உயர் ஆணையரால் நேரடியாக குறிப்பிடப்பட்டவாறு, “ஒரு பெருங்கூட்டம், அவரது மரணத்திற்காக மட்டுமின்றி, அவரது வாழ்க்கையைக் கொண்டாடவும் ஒன்றுகூடியிருந்தனர்,” அவ்வேளை ஜெருசலத்தின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், தாமும் அந்த இறுதிச் சடங்கு குறித்து விவரித்திருந்தார்: “அந்த (இறுதிச்) சடங்கின் மிகுந்த எளிமை உருவாக்கிய அதைவிட ஒற்றுமையான ஓர் இரங்கலையும், மரியாதையும் நான் அறிந்ததே இல்லை.”
அப்துல்-பஹாவின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி அவரது அன்பர்களின் தோள்களில் அதன் இறுதி ஸ்தலத்திக்கு ஏந்திச் செல்லப்பட்டதுசவப்பெட்டிக்கு முன்பாகச் சென்ற பரிவாரத்தை மாநகர காவலர் படையினர் முன்நடத்திச் சென்று, அதற்கு மரியாதை அணியினராகச் செயல்பட்டனர். அதற்குப் பின்னால், பதாகைகளை ஏந்தியவாறு இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ சமூகங்களின் சாரணர்களும், தொடர்ந்து திருக்குரான் வாசகங்களை ஓதியவாறு சென்ற இஸ்லாமிய திருக்குரான் ஒதுனர்கள், முஃப்டியின் தலைமையில் முஸ்லீம் சமூகத்தினரும், லத்தீன், கிரேக்க மற்று ஆங்கிலிக்க கிருஸ்துவ மதகுருமார்கள் நடந்து வந்தனர். அப்துல்-பஹாவின் குடும்பத்தினர், பிரிட்டிஷ் உயர் ஆணையாளரான சர் ஹேர்பர்ட் சாமுவேல், ஜெருசல நகரின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், புனீஷியாவின் ஆளுனரான சர் ஸ்டூவர்ட் சைம்ஸ், அரசாங்க அதிகாரிகள், ஹைஃபாவில் வாசம் செய்யும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், பாலஸ்தீனத்தின் பிரமுகர்கள், முஸ்லீம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள், டிரூஸ்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், துர்க்கியர்கள், அராபியர்கள், குர்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சவப்பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்றனர். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அழுதுகொண்டும், புலம்பியவாறும் நடந்து சென்ற பன்மடங்கானோருக்கிடையில், நீண்டு சென்ற துக்கவசப்பட்டோர் கூட்டம், கார்மல் மலைச் சரிவின் மீது மெதுவாக நடந்து சென்றது.
நினைவாலயத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகே, அப்புனிதப் பேழை ஒரு சாதாரன மேஜையின் மீது வைக்கப்பட்டது. அப்பரந்த கூட்டத்தினரின் முன்னிலையில், ஹைஃபா முஃப்தியையும் உள்ளடக்கிய முஸ்லீம், யூத மற்றும் கிருஸ்தவ சமயங்களின் பிரதிநிதிகள் தங்களின் பல இறுதிச் சடங்கு குறித்த உரைகளை நிகழ்த்தினர். அவை முடிந்தவுடன், உயர் ஆணையர் பேழையின் அருகே சென்று, நினைவாலயத்தை நோக்கியபடி குனிந்த தலையுடன், தமது இறுதி மரியாதையையும், பிரியாவிடையையும் செலுத்தினார். பிற அரசாங்க அதிகாரிகளும் அவரது உதாரனத்தையே பின்பற்றினர். அதன் பின், சவப்பெட்டி நினைவாலயத்தின் அறை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாப் பெருமானாரின் உடல் அடங்கியிருந்த நிலவறைக்கு அடுத்த நிலவறைக்குள் துக்கத்துடனும், பக்தியுடனும் அதன் இறுதி நல்லடக்க ஸ்தலத்திற்குள் இறக்கப்ப்ட்டது.
அவரது விண்ணேற்றத்திற்கு அடுத்த வாரத்தின் போது, ஹைஃபா நகரின் ஏழைகளுள் ஐம்பதிலிருந்து, நூறு பேருக்கு தினமும் உணவளிக்கப்பட்டது; அதே நேரம், ஏழாவது நாளன்று அவரது நினைவாக அவர்களுள் சுமார் நூறு பேருக்கு சோளம் விநியோகிக்கப்பட்டது. நாற்பதாவது நாளன்று, அவரது நினைவாக நினைவில் நிற்கும் ஒரு நினைவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்கு ஹைஃபா, அக்காநகர், மற்றும் பாலஸ்தீனத்தையும், சிரியாவையும் சுற்றியுள்ள இடங்களிலிருந்து, அதிகாரிகளையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய பல்வேறு சமயங்களையும் இனங்களையும் சார்ந்த சுமார் அறுநூறு பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அன்று நூறுக்கும் அதிகமான ஏழைகளுக்கும் உணவளிக்கப்பட்டது.
கூடியிருந்த வருகையாளர்களுள் ஒருவரான புனீஷியாவின் ஆளுனர், பின்வரும் வார்த்தைகளால் அப்துல்-பஹாவின் நினைவாக அவருக்கு இறுதிப் புகழாரம் சூட்டினார்: “அவரது பெருமதிப்பிற்குறிய உருவம் நமது வீதிகளில் நடந்து செல்வது, அவரது பணிவும், கிருபையும் மிக்க பழக்கவழக்கம், அவரது கருணை, சிறு குழந்தைகள், மற்றும் மலர்களுக்கான அவரது அன்பு, ஏழைகளுக்கும், துன்பத்திலாழ்ந்துள்ளோருக்குமான அவரது பரோபகாரம் ஆகியவை குறித்த அப்துல்-பஹா பற்றிய ஒரு தெளிவான காட்சியை நம்மில் பெரும்பாலோர் பெற்றுள்ளோம். அவர் மிகுந்த மென்மையும், எளிமையும் மிக்கவராக இருந்ததானது, அவர் ஒரு மாபெரும் போதகர் என்பதையும், அவரது எழுத்துகளும் உரையாடல்களும் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதலாகவும் உற்சாகமூட்டுபவையாகவும் இருந்தன என்பதையும் அவரது முன்னிலையில் ஒருவர் மறந்துவிடக்கூடும்.