கடவுளையே சோதிப்பதா!


பஹாவுல்லா இராக் நாட்டில் வாசம் செய்திருந்த போது, பஹாவு்லலா கடவுளின் அவதாரம் என நம்பாத மதகுருக்கள் அவரை சோதிப்பதற்காக ஒருவரை அவரிடம் அனுப்பினர். அப்போது என்ன நடந்தது என பஹாவுல்லா தமது வார்த்தைகளிலேயே விவரிக்கின்றார்:

baghdad-coffeehouse
இது அக்காலத்தில் இராக் நாட்டில் வழக்கிலிருந்த ஒரு  காஃப்பி ஹௌஸ்’ (காப்பிக் கடை). மக்களை சந்திப்பதற்காக பஹாவுல்லா இது போன்ற இடங்களுக்கு செல்வதுண்டு

“இதற்கு முன் தோன்றியிராதவை இவ்வெளிப்பாட்டினில் தோன்றியுள்ளன. வெளிப்படுத்தப் -பட்டுள்ளவற்றைக் கண்ணுற்ற சமய நம்பிக்கை-யற்றோரைப் பொறுத்த வரையில், அவர்கள் முணுமுணுத்து இவ்வாறு கூறுகின்றனர்: “இவர், மெய்யாகவே, இறைவனுக்கெதிராக ஒரு பொய்யை உருவாக்கியுள்ள ஒரு மந்திரவாதி.” உண்மையாகவே, அவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள். பண்டைய காலத்தின் எழுதுகோலே, ஈராக்கில் நிகழ்ந்தவற்றை நாடுகளுக்கு எடுத்துரைப்பீராக. அந்நாட்டின் மதகுருமார் கூட்டத்தினர் தங்களைப் பிரதிநிதிக்க அனுப்பிய தூதரைப் பற்றி அவருக்குத் தெரிவிப்பீராக. அவர், எமது முன்னிலையை அடைந்ததும் சில அறிவியல் ஞானங்களைக் குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்டார்; இயறக்கையாய்க் கொண்டுள்ள அறிவின் திறத்தினைக் கொண்டு யாம் அவருக்குப் பதிலளித்தோம். இறைவன், மெய்யாகவே, கண்ணுக்குப் புலப்படாதவற்றை அறிந்தவர். அவர், “நீங்கள் கொண்டுள்ள அறிவுடன் எவருமே ஒப்பிடப்படார் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். இருப்பினும், மக்கள் உங்களுக்கு அளித்திடும் உயரிய ஸ்தானத்தை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு அது போதுமானதல்ல. நீங்கள் உண்மை உரைப்பவராயின், உலக மக்களனைவரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களே உண்டுபண்ண சக்தியற்று இருக்கும் ஒன்றினை நிரூபித்துக் காட்டுங்கள்” என அவர் கூறினார். உங்களின் பேரொளிமயமான, அன்புமிகு பிரபுவானவரின் முன்னிலை என்னும் அரசவையினில் இவ்வாறுதான் இம்மாற்றவியலாத கட்டளை விதிக்கப் பட்டுள்ளது. “பாரும்! நீர் காண்பது என்ன?” அவர் வாயடைத்துப் போய்விட்டார். மீண்டும் சுயநினைவு வந்ததும், அவர் கூறினார்: “நான் பேரொளிமயமான, போற்றுதலனைத்திற்குமுரிய இறைவனை உண்மையாக நம்புகின்றேன்.” “மக்களிடம் சென்று இவ்வாறு கூறும்: ‘ நீங்கள் விரும்பியது எதுவாயினும், கேளுங்கள். தான் விரும்பியதைச் செய்திடும் ஆற்றலுடையவர் அவர். கடந்த காலத்தவையோ, எதிர்காலத்தவையோ, அவை எவையுமே அவரது விருப்பத்தைச் செயலற்றுப் போகச் செய்ய இயலா. ‘கூறுவீராக: ‘மதகுருமார் கூட்டத்தினரே! நீங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுங்கள்; அதனை உங்களுக்கு வெளிப்படுத்துமாறு கருணைமிக்கக் கடவுளான உங்கள் பிரபுவைக் கேளுங்கள். அவர், தனது மாட்சிமையின் சக்தியைக் கொண்டு உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்திடுவாராயின், அவரில் நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரை நிராகரிப்போரில் சேர்ந்திடாதீர்.’ “அவர், “புரிந்துணர்வு என்னும் அதிகாலைப் புலர்ந்து விட்டது; கருணைமயமானவரின் சான்று பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது.” எனக் கூறினார். பேரொளிமயமான, நன்கு நேசிக்கப்படுபவரான இறைவனின் கட்டளைக்கிணங்க அவர் எழுந்து, தன்னை அனுப்பியவர்களிடம் திரும்பிச் சென்றார் நாள்கள் பல கடந்தன; அவர் எம்பால் திரும்பி வரவே இல்லை. இறுதியில், வேறொரு தூதர் எம்மிடம் வந்து, ஆரம்பத்தில் அவர்கள் கொண்டிருந்த நோக்கத்தைக் கைவிட்டுவிட்டனரெனக் கூறினார். உண்மையிலேயே அவர்கள் வெறுக்கத்தக்க மனிதர்கள். ஈராக்கில் நடந்தது இதுவே; நான் வெளியிடுவதற்கு நானே சாட்சி. இச்சம்பவம் வெளியிடங்களில் எல்லாம் பரவலாகத் தெரியவந்தது, இருந்தும், அதன் அர்த்தத்தினைப் புரிந்திட்டோர் எவரையுமே காணவில்லை. யாம் அவ்வாறுதான் விதித்திருந்தோம். இதனை நீங்கள் அறிந்திடக் கூடுமாக. எமது மெய்ம்மை சாட்சியாக! கடந்த காலங்களில், எவரெல்லாம் எம்மை இறைவனின் அடையாளங்களைக் காண்பிக்குமாறு கேட்டனரோ, அவர்கள், யாம் அவற்றை வெளிப்படுத்தியதுதான் தாமதம், அக்கணமே இறைவனின் மெய்ம்மையையே மறுத்து விட்டுள்ளனர். இருப்பினும், மனிதர்கள், பெரும்பாலும், கவனமற்றே இருந்திட்டனர். எவரது கண்கள் புரியுந் திறனெனும் தீபத்தினால் ஒளிர்விக்கப்பட்டுள்ளனவோ, அவர்கள், கருணைமயமானவரின் இனிய நறுமணத்தினை அறிந்து உண்மையை ஏற்றுக்கொள்வர்., உண்மையில் இவர்களே தூய உள்ளம் படைத்தோர்.”

பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து சில பொறுக்குமணிகள் – பகுதி 67)

செல்வம் தேடுதல்


இன்று மனிதன் லௌகீக செல்வங்களை சேர்ப்பதிலேயே தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிடுகின்றான். போதுமான பணம் சேர்ந்திடும் போது, அவனுக்கு வயதாகி விடுகின்றது. இறக்கும் போது அவன் சேர்த்தவற்றை அவன் தன்னுடன் எடுத்துச் செல்லவும் முடியவில்ல. இது குறித்து பஹாவுல்லா:

Money

“…எமது வருகையின் போது அதன் ஆளுநர்களும், மூத்தோர்களும் சிறுவர்களும் ஒன்றுகூடி பொழுதுபோக்குக்கான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.” இறைவன் எமக்குக் கற்பித்த உண்மைகளை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளவோ, எமது வியத்தகு, விவேகமிக்க, திருமொழிகளை ஏற்கவோ முதிர்ச்சியடைந்திட்டோர் எவரையுமே யாம் காணவில்லை.” அவர்களுக்காகவும், எதற்காக அவர்கள் படைக்கப்பட்டனரோ அதன்பால் அவர்களின் முழுமையான அக்கறை இன்மைக்காகவும், அவர்களின் பழிச் செயல்களுக்காகவும் எமது உள்ளம் வேதனையுற்றுக் கண்ணீர் வடித்தது.

இதனைத்தான் யாம் அம்மாநகரில் கண்டோம்; அது அவர்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்பதற்காகவே அதனை யாம் எமது திருநூலில் குறித்து வைக்க முடிவுசெய்தோம். கூறுவீராக: நீங்கள் இவ்வாழ்வையும் அதனையொட்டிய ஆடம்பரங்களையும் தேடுபவர்களாயின் உங்களின் தாய்மார்களின் கர்ப்பங்களில் இருக்கும் பொழுதே அவற்றைத் தேடியிருக்க வேண்டும். இதனை நீங்கள் உணரக்கூடுமாயின், அப்பொழுதுதான் நீங்கள் அவற்றை நோக்கி வந்துகொண்டிருந்தீர்கள். மாறாக, நீங்கள் பிறந்து, முதிர்ச்சியடைந்த காலத்திலிருந்து, தொடர்ந்து இவ்வுலகிலிருந்து பின்னிட்டுச் சென்றவாறு புழுதியினை நெருங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் காலமோ முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது; உங்களின் வாய்ப்போ இழப்புக்காளாகும் கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் பொழுது எதனால் நீங்கள் உலகத்தின் செல்வங்களைக் குவிப்பதிலேயே அத்தகையப் பேராசைக் காட்டுகின்றீர்? கவனமற்றோரே, உங்களின் ஆழ்ந்த உறக்கத்தை உதறித்தள்ளமாட்டீரா?

இறைவனின் பொருட்டு, இவ்வூழியன் உங்களுக்கு வழங்கிடும் அறிவுரையின்பால் செவிசாயுங்கள்.”

 

இங்கு பஹாவுல்லா கூறுவது என்னவென்றால் மனிதப் பிறவிக்கு ஒரு நோக்கம் உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே நமக்கு இவ்வுலக வாழ்க்கையை கடவுள் வழங்கியுள்ளார். ஆனால் மனிதனோ தன் பிறவியின் நோக்கத்தை அறிந்துகொள்ளாமல் தன் வாழ்நாளின்பெரும் பகுதியை பணம் சேர்ப்பதிலும் லௌகீக செல்வங்களைத் திரட்டுவதிலும் செலவிடுகின்றான். இதைத்தான் மேலே பஹாவுல்லா குறிப்பிடுகின்றார்.
ஒரு செயலை ஆரம்பிப்பதற்கும் முன் அதற்கான ஆயத்தங்களை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டுமல்லவா.  அதை விடுத்து, அச்செயலை ஆரம்பித்த பிறகு அதற்கான ஆயத்தங்களைச் செய்வது விவேகமல்ல. செல்வம் தேட வேண்டும், ஆனால் அது வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றிகொள்வதற்காக அன்றி அதுவே வாழ்க்கையின் நோக்கமாகிவிட கூடாது.

வாழ்க்கையின் நோக்கம்


பஹாய்கள் அனுதினமும் கூற வேண்டிய கட்டாயப் பிரார்த்தனைகளுள் ஒன்றில் பின்வரும் வாசகம் உள்ளது: உம்மை அறிந்து வழிபடுவதற்கனவே என்னைப் படைத்திருக்கின்றீர்… இதை வேறு விதமாக, ‘அறிந்து அன்புசெலுத்துவதற்கென…என்றும் பஹாய் திருவாக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மனிதப் பிறவியின் நோக்கம் இந்த சில வார்த்தைகளில் அடங்கியுள்ளது. மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து அன்பு செலுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளான். ஆனால், எளிமையாகத் தோன்றும் இச்சில வார்த்தைகளில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்கள் எண்ணிலடங்காதவை.

இங்கு மனிதனுக்கு இரண்டு இயல்பான திறனாற்றல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நாம் பார்க்கின்றோம். ஒன்று, ‘அறிதல்’ மற்றது ‘அன்புசெலுத்தல்’. இவை கடவுளிடமிருந்த நமக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய ஆற்றல்கள்; மனிதனை மனிதனாக்கும் ஆற்றல்கள்.

cute-children-kneeling-and-praying-free-cliparts-vectors

இங்கு ஒரு சிக்கல் யாதெனில், கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் என்பதாகும். நமது சிருஷ்டிகர்த்தா சாராம்சத்தில் அறியப்பட முடியாதவர், அவரை அவரது பண்புகளினால் மட்டுமே நாம் அறிந்துகொள்ள இயலும். அப்பண்புகளில் ஒன்றுதான் ‘அறிதல்’ ஆனால் அறிதலுக்கு அஸ்திவாரமாக இருப்பது கற்றல். கற்றல் இல்லையெனில் அறிதலும் இல்லை. இதன் காரணமாகவே, பஹாவுல்லா தமது விசுவாசிகளை அனுதினமும் தம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள திருவாக்குகளை காலையிலும் மாலையில் படிக்குமாறு ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செய்யாதவன் தமது திருவொப்பந்தத்திற்கு விசுவாசமாக இ்லலாதவன் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது ஒரு மனிதனின் ‘அறிதலுக்கு’ மூலாதாரமாக இருப்பது கடவுளின் திருவாக்கே. அதிலிருந்துதான் ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், அவன் எதற்காக படைக்கப்பட்டுள்ளான் என்பதையும் அறிந்துகொள்ள இயலும்.

அடுத்தது, அன்பு செலுத்துவது. எல்லா சமயத்தவர்களும் கடவுள் மீதான தங்களின் அன்பை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திவருகின்றனர். கடவுள் மீது நாம் அன்புசெலுத்தினாலும் அன்புசெலுத்தாவிட்டாலும் அவருக்கு ஆகப்போவது எதுவுமில்லை. ஆனால், அவர் மீது நாம் அன்பு செலுத்தினால் மட்டுமே அவரது அன்பு நம்மை வந்தடைய முடியும், நாம் படைக்கப்பட்டதன் பயனை நாம் பெற முடியும். ஆனால் அவரிடம் நாம் எவ்வாறு அன்புகொள்வது? உணர்வினால் அன்புகொள்வதா, அல்லது செயல்களினால் அன்பை வெளிப்படுத்துவதா?

கடவுள் மீது அன்பு செலுத்துவதென்பது அவரது சிருஷ்டியின் மீது அன்பு செலுத்துவதாகும். முக்கியமாக, நாம் நமது சக மனிதர்களின் மீது அன்பு செலுத்துவதன் மூலமாக மட்டுமே கடவுள் மீதான நமது அன்பை வெளிப்படுத்த முடியும்.

மனிதர்கள் மீது எவ்வாறு அன்பு செலுத்துவது? முதலாவதாக, மனிதப் பிறவியின் நோக்கத்தை மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்–கடவுள் நம்மை எதற்காக படைத்துள்ளார், நம்மிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கின்றார்? மனிதர்கள், தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லவே படைக்கப்பட்டுள்ளனர் என பஹாவுல்லா கூறுகின்றார். இந்த நாகரிகத்தை உருவாக்குவதற்கு மனிதர்களுக்கு திறனாற்றல் தேவை. இன்று உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் இதற்கு ஆவன செய்வது வருகின்றனர், முக்கியமாக குழந்தைகள் கல்வி, இளைய இளைஞர் ஆன்மீக சக்தியளிப்பு திட்டங்கள், முதியோருக்கான சக்தியளிப்பு பயிற்சிகள், வழிபாட்டுக் கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம் திறனாற்றல் உருவாக்கத்தை மேற்கொண்டு வருவதன் மூலம் கடவுளின் மீதான தங்களின் அன்பை மனித சேவையின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

helping-hand

தனிமனிதர்கள் எனும் முறையில் நாம் நமது வாழ்க்கையில் தினசரி கடைப்பிடிக்கவேண்டிய சில விஷயங்களும் உள்ளன. ஒவ்வொரு காலையும் மாலையும் கடவுளின் திருவாக்குகளைப் படித்தல், நாளுக்கு ஒரு முறையாவது பிரார்த்தனை செய்தல், அனுதினமும், பிறருடனான நமது தொடர்பில் அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், போன்று நற்பண்புகளைக் கடைப்பிடித்தல், பிறருக்கு நன்மை செய்தல்க–டவுள் நம்மிடம் விரும்புவது இவற்றையே, நமது செல்வத்தையோ பொருளையோ அவர் கேட்கவில்லை. ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது, கடவுள் மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றின் அர்த்தமும் இதுவே.