முன்னாள் யாரான் உறுப்பினர் சிறைவாசம் முடிவுற்றது, துன்புறுத்தல் தொடர்கிறது


20 டிசம்ர் 2018

பஹாய் அனைத்துலக சமூகம் ஜெனேவா — தமது சமயத்தைப் பின்பற்றிவரும் ஒரே காரணத்திற்காக சிறைப்படுத்தப்பட்ட முன்னாள் யாரான் தலைமைத்துவத்தின் கடைசி உறுப்பினர் 10-வருட அநியாய சிறைவாசத்திற்குப் பிறகு இன்று விடுவிக்கப்பட்டார். இருப்பினும், இரான் நாட்டு பஹாய்கள் அனுதினமும் பரவலான துன்புறுத்தலைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.

Afif Naeimi (center) stands with loved ones in Tehran earlier today after completing his unjust 10-year prison sentence.
இன்று, அஃபிஃப் நயீமி (நடுவில்) தமது 10 வருட நியாயமற்ற சிறைத் தண்டனையின் முடிவிற்குப் பிறகு தமது குடும்பத்தினருடன் நிற்கின்றார்.

கடந்த 14 மே 2008’இல் அஃபிஃப் நயீமி, 56, கைது செய்யப்பட்டு, வேறு சில தப்பான கூற்றுகளோடு வேவு பார்த்தல், இரான் நாட்டிற்கு எதிரான துர்பிரச்சாரம், மற்றும் ஒரு சட்டவிரோத நிர்வாக ஸ்தாபனத்தை நிறுவினார் என குற்றஞ்சாட்டப் பட்டார். திரு நயீமி’யும் பிற ஆறு முன்னாள் யாரான் உறுப்பினர்களும்—சமய சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீகத் தேவைகளைக் கவனித்திடும் பணியைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அமைப்பு–எவ்வித சட்டரீதியான செயல்முறையும் இன்றி ஒரு போலி விசாரனைக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு அக்குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினர். அதிகாரிகள், திரு நயீமி’க்கும் பிற முன்னாள் யாரான் உறுப்பினர்களுக்கும் 10 வருட சிறைத் தண்டனை விதித்தனர்.

சிறையிலிருந்த போது திரு நயீமி கடுமையான உடல்நலக் குறைவுகளுக்கு ஆளாகியும், அதற்கு அவர் போதுமான மருத்துவ வசதியும் பெறவில்லை. தெஹரானைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு நயீமி, மருத்துவத்திற்காக மருத்துவமனையிலிருந்த அந்த சில நாள்களை அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 வருட தண்டனைக் காலத்துடன் சேர்க்க முடியாது என அதிகாரிகள் மிகவும் கொடூரமான முறையில் தீர்மானித்தனர்.

“திரு நயீமி விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இருப்பினும், ஒட்டு மொத்த இரான் நாட்டு பஹாய்கள் சூழ்நிலையின் ஒரு மேம்பாடாக இது காணப்பட முடியாது. தங்களின் சமய நம்பிக்கைக்காக பன்மடங்கான பஹாய்கள் இன்னமும் சிறைவாசம் அனுபவித்தும், ஆயிரக்கணக்கில் வேறு பலர், உயர்கல்வி மறுக்கப்படுதல், கடைகள் மூடப்படுதல், மற்றும் தொல்லைக்குட்படுத்தல் உட்பட பல தீவிர துன்புறுத்தல்களையும் எதிர்நோக்குகின்றனர்,” என்றார் பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான திருமதி டையேன் அலா’யி.

Afif Naeimi and his wife in Tehran earlier today
அஃபிஃப் நயீமி தெஹரானில் தமது மனைவியுடன் இன்று

மீண்டும் மீண்டும் கைது செய்தல், தன்னிச்சையான நீதிமன்ற தீர்ப்புகள், மற்றும் கடைகள் மூடப்படுதல் உட்பட–இரான் அரசாங்கம் பஹாய் சமூகத்தை பரவலான முறையிலும், முறைமையோடும் துன்புறுத்துவதை ஐக்கிய நாட்டு பொதுச் சபை, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐக்கிய அமெரிக்க மாநில பிரதிநிதிகள் சபை, மற்றும் ஆஸ்திரேலியா, சூவீடன் ஆகிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கண்டனம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேலும், அதிகரித்திடும் வகையில் இரான் நாட்டிற்கு உள்ளும் புறமும் உள்ள பல இரானியர்கள் இந்தத் துன்புறுத்தல்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வந்துள்ளனர். சென்ற மாதம் கூட, இரானிய முஸ்லிம் அறிஞர்கள் குழுமம் ஒன்று, “பஹாய் பிரஜைகள் உரிமைகளின் முறைமையான மற்றும் ஆழ்ந்தநிலையிலான அத்துமீரல்களை கண்டித்தும், அதை மனிதாபிமானமற்ற, சமய மற்றும் தார்மீக கடமைகளுக்கு எதிரானது” எனவும் வர்ணித்துள்ளனர்.

இரான் நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பஹாய் துன்புறுத்தல்களின் நீண்டகால வரலாறு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பஹாய் துன்புறுத்தல் குறித்த இரான் இணையத்தளத்தின் ஆவணக்காப்பகங்கள், 1979’இல் இரான் புரட்சியிலிருந்து 200’க்கும் மேற்பட்ட கொலைகள் அல்லது மரண தண்டனைகளை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான அதிகாரபூர்வ ஆவணங்கள், அறிக்கைகள், சான்றுகள், படங்கள், மற்றும் காணொளிகளைத் தொகுத்து, அயராத துன்புறுத்தல்களுக்கான மறுக்கமுடியாத நிரூபணங்களை வெளிப்படுத்தி வந்துள்ளன. “பஹாய் கேள்வியின் மறு ஆய்வு: இரான் நாட்டில் துன்புறுத்தல் மற்றும் மீட்சித்திறம்” குறித்த அக்டோபர் 2016 அறிக்கை இரான் அரசாங்கம் பஹாய்கள் முறைமையோடு துன்புறுத்தப் படுவதை வர்ணிக்கின்றது.

[மூலாதாரம்: https://news.bahai.org/story/1302/%5D