
நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட அமைதிக்கான முன்தேவைகள் இன்று எதிரொலிக்கின்றன
1 June 2020
த ஹேக், நெதர்லாந்து – முதலாம் உலக யுத்தம், அழிவுகர நச்சுக்காய்ச்சல் தொற்று ஆகியவற்றின் பின்னணியில், அப்துல்-பஹாவினால் எழுதப்பட்ட ஒரு செய்தியை த ஹேக்’கிலுள்ள நீடித்த அமைதிக்கான மைய அமைப்பிற்கு வழங்கிட இரண்டு பஹாய்கள் மே 1920’இல் புனிதநிலத்தில் இருந்து புறப்பட்டனர். த ஹேக்கிற்கான முதல் நிருபம் என குறிப்பிடப்பட்ட இந்த செய்தி மிகவும் ஆழ்ந்த சமுதாய தன்மைமாற்றத்திற்குத் தேவையான கோட்பாடுகளை ஆராய்கிறது.

நெதர்லாந்து பஹாய் சமூகத்தின் வெளிவிவகார அலுவலகத்தின் ஷெரீன் டேவிட்-ஃபராக், “இந்த நிருபம் இன்றளவும் நமக்கு பொருந்துவதாக இருக்கின்றது என்கிறார். பெண் ஆண் சமத்துவம், சமயம் அறிவியல் ஆகியவற்றுக்கிடையிலான இணக்கம், கல்வியை ஊக்குவித்தல், எல்லாவித தப்பெண்ணங்களையும் அகற்றுதல் ஆகியன உட்பட, ஓர் அமைதியான உலகிற்குத் தேவைப்படும் அம்சங்களை ஒவ்வொன்றாகக் காண்பதற்கு இந்நிருபம் நமக்கு உதவுகின்றது. இதே கோட்பாடுகள், சமுதாய நீதியை நோக்கிய அவற்றின் முயற்சிகளில் எண்ணற்ற இயக்கங்கள், அமைப்புகள், மற்றும் மக்களை ஊக்குவித்து வருகின்றன. இந்த முனைவுகள் அனைத்திலும் அமைதியை நோக்கிய ஒரே பாதையில் நாம் அனைவரும் சகாக்களே என்பதை நாம் உணர வேண்டும்.
சென்ற வியாழக்கிழமை நெதர்லாந்து பஹாய்களும் அமைதிக்கான நெதர்லாந்து சமயங்களும் இணைந்து, அந்த நிருபம் அதன் இலக்கை அடைந்த 100’வது ஆண்டைக் குறிக்கும் ஓர் இணையதள மாநாட்டை ஏற்பாடு செய்தன. ஆரம்பத்தில், அந்த நிகழ்வு த ஹேக்’கின் அமைதி மாளிகையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் கொரோனா நச்சுயிரியின் பரவலினால் இணையதளத்திற்கு மாற்றப்பட்டது.

பங்கேற்பாளர்கள், த ஹேக்’கிற்கான முதல் நிருபத்திலிருந்து சில கருப்பொருள்களை தற்போதைய சூழ்நிலைகளின் பின்னணியில் ஆய்வு செய்தனர்.
“(இறை)நம்பிக்கையே அ ச்சமெனும் இருளை அகற்றக்கூடிய ஒளியாகும் என அப்துல்-பஹா நமக்குக் கூறுகின்றார்… சமயம் சார்ந்த மக்களாக எல்லாரும் குறிக்கோளுடன் ஒன்றுகூடி, நமது பொது கோட்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அவசியமாகும்,” என அனைத்துலக அமைதிக்கான சமயங்கள் அமைப்பின் பொதுச் செயலாளரான அஸ்ஸா கராம் கூறினார்.
மனிதகுலத்தின் ஒற்றுமை என்ற கருப்பொருளைப் பற்றி பேசிய நெதர்லாந்தின் அமைதிக்கான மதங்களின் துணைத் தலைவர் பிரிட் பக்கர் கூறினார்: “இந்த குறிப்பிடத்தக்க காலங்களில்தான் நாம் வேதனையுடன், ஆனால் அதே நேரத்தில் அழகான முறையில், நமது தொடர்புடைமையால் எதிர்கொள்ளப் படுகிறோம்.”
ஹேக்கில் உள்ள யூத ரப்பியான அவிரஹாம் சூட்டெண்டார்ப், மக்கள் இந்த காலகட்டத்தை “பரஸ்பர நம்பிக்கையிலிருந்து நாம் பெரும் அபாயத்தை பெரும் வாக்குறுதியாக மாற்றி எவருமே விடுபட்டுப் போகாத ஒரு புதிய கருணையார்ந்த உலகமுறையை உருவாக்கிட எல்லைகளைத் தாண்டி உண்மையிலேயே ஒத்துழைப்பதற்கான ஞானத்தையும் தைரியத்தையும் நாம் கண்டறிந்த ஒரு முக்கிய தருணமாக ஒரு நாள் திரும்பிப் பார்க்கக்கூடும் என்ற தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வையும், நிருபத்தில் வழங்கப்பட்ட அமைதிக்கான தொலைநோக்கையும் பிரதிபலிப்பதில் நெதர்லாந்தின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் மார்கா மார்டென்ஸ் கூறுகிறார்:
“அப்துல்-பஹா’வால் தெளிவுபடுத்தப்பட்ட கொள்கைகளே இந்த நோய்களுக்கான தீர்வாகும். நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு சமூகமாகவும் அவற்றிற்காக செயல்படும் விருப்பத் தேர்வு நம் அனைவருக்கும் உள்ளது. நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு மருத்துவரின் ஆலோசனையை நோக்கி திரும்புவது அவசியம் என்பது போலவே, இந்த கொள்கைகள் எனும் ஆன்மீக மருந்து சமூகத்தின் அடித்தலங்களுக்குச் சென்று ஓர் அழகான மாற்றத்தை உருவாக்கிட உதவும். ”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1431/