
நெருக்கடி காலங்களின் போது ஆசிரியர்களின் தனிச்சிறப்பான பங்கு வெளிப்படுகின்றது
8 அக்டோபர் 2021
பாங்குவி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு – உலகின் சில பாகங்களில் தொற்றுநோயின் போது, சில கல்வியாளர்கள் முறையான கல்வியைத் தொடர்வதை குறைவான இணைய வசதிகள் தடுத்திடவில்லை. இத்தகைய இடங்களில் உள்ள பஹாய் உத்வேக சமூகப் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கல்வியல் தேவைகளை ஈடு செய்திட தற்போதைய சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் ஆக்ககர வழிகளைக் காண்கின்றனர்.

“பிள்ளைகளுக்கு ஓர் உயர்தர கல்வியை வழங்கவும், கல்வியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்குப் பங்களித்திட ஆயத்தமாக்கவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய உள்ளூர் மக்களின் ஆவல்களிலிருந்து இப்பள்ளிகள் தோன்றியுள்ளன,” என்கிறார் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் சமூகப் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும், Fondation Nahid et Hushang Ahdieh எனப்படும் ஓர் அறவாரியத்தின் ஜூடிகேய்ல் மொக்கோலே. அவை சமூகத்தின் வாழ்வோடு அணுக்கமாக இணைக்கப்பட்டும், இப்போதைய சூழ்நிலைகளின் வழி மக்களுக்கு உதவுவதற்கான முக்கிய ஸ்தாபனங்களாக இருந்து வருகின்றன.
அந்த பஹாய் உத்வேக அமைப்பின் இயக்குனரான கிலிமென்ட் ஃபெய்ஸூரே, “சமூகம் அப்பள்ளி அவர்களுக்குச் சொந்தமானது என உணர்கின்றனர். போதிப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான திறனாற்றலை வளர்ப்பதற்கு எங்கள் அமைப்பு உதவுகின்றது, ஆனால் பள்ளியின் நிர்வாகம், பொருள்வளம், மற்றும் கல்வியல் திட்டங்களுக்கு சமூகத்தினரே உடைமையாளர்கள் ஆவர். இந்த சீர்குலைவு மிக்க காலத்திலும் அவர்கள் இக்கடமையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் இல்லங்களிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் எழுதுதல், படித்தல், கணித நடவடிக்கைகள், மற்றும் ஆன்மீக கருப்பொருள்களில் மாணவர்களுக்கு உதவக்கூடிய ஒருவர் ஒவ்வொரு சிறிய குடும்பக் குழுமங்களுக்கும் இருப்பதை உறுதிசெய்திட கூடுதல் தொண்டாசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.
பாங்குயி, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஒரு சமூகப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கின்றனர். “பன்முகப்படுத்தப்பட்ட பள்ளிகள் குறித்த அணுகுமுறை எதிர்ப்பாராத வாய்ப்புகளை உருவாக்குகின்றது,” என்கிறார் திரு மொக்கோலே. Mokolé. “கல்வியல் கோட்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்து அவர்களின் புரிதலை அதிகரித்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்கியுள்ளது. இது மிகவும் மதிப்புவாய்ந்த ஒன்றாகும் ஏனெனில் ஓர் இல்லமே பிள்ளைகளின் கல்விக்கான ஒரு பிரதான நிகழ்விடமாகும்.”

உள்ளூர் சமூகங்கள் தங்கள் பிள்ளைகளில் கல்வியில் முதன்மையாளர்களாக இருக்கலாம் என்பது இப்பள்ளிகளின் அடித்தலமாகவுள்ள பஹாய் கோட்பாடாகும். இத்தகைய உடைமை உணர்வோடு, தங்களின் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளை தொற்றுநோயின் போது கல்வியல் திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு சமூகங்கள் முடிவெடுத்தன. இந்தோனேசியாவின் தனிப்பட்ட பாடங்கள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்த போது, நாட்டில் உள்ள சமூகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டுப்பாட வேலைகளைக் கொடுத்தல் மற்றும் எடுத்தல் பணிகளை செய்துவருகின்றனர்.
மற்றவிடங்களில், இந்த பொருளாதார சிரமங்களின் போது சமூகப் பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏதுவாக, ஆசிரியர்களுக்கு உதவுவதற்கு குடும்பங்கள் தங்களின் பொருள்வளங்களை ஒன்றுதிரட்டியுள்ளன உதாரணத்திற்கு, மலாவி நாட்டில், பெற்றோர் தங்கள் நிலங்களில் விளையும் பொருள்களை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளில் ஈடுபட்டிருந்த போது, சில பெற்றோர்கள் அந்த ஆசிரியர்களின் நிலங்களில் வேலை செய்தனர்.
“தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களாக இருக்கக்கூடிய தனிநபர்களை பெற்றோரே தேர்ந்தெடுத்துள்ளபடியால், ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கிடையில் நம்பகம் இருந்து வந்துள்ளது,” என்கிறார் மலாவி பாம்பினோ அறவாரியம் சார்ந்த சமூகப்பள்ளிகளின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அன்ட்ரூ ன்ஹலேன். “அதனால்தான் தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் ஆசிரயர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்திட விரும்புகின்றனர்.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கால்ச்சினி’யில் இத்தகைய பள்ளிகளின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள உறவுகள் வகுப்பறை நடவடிக்கைகளுக்கும் அப்பால் நீட்டிக்கப்படுகின்றன. கிராமத்தில் ஓர் உணவு விநியோகத்திற்காக ஓர் அமைப்பு தொண்டர்களைத் தேடும் போது, அதற்கு சமூகப் பள்ளியின் ஆசிரியர்கள் உதவுமாறு கிராமவாசிகள் கேட்டுக்கொண்டனர், ஏனெனில் அந்த உணவு விநியோகத்தை அவர்களால் பாரபட்சமின்றி மேற்கொள்ள முடியும் என்றனர்.
நாட்டின் மற்றொரு மண்டலத்தில், மணிப்பூரின் லங்காத்தெல்’லில் உள்ள ஒரு சமூகப்பள்ளியில் பணிபுரியும் மாச்சாஸனா கோயிஜாம் கூறுகிறார்:
“சிறுவர்களுக்கு கல்வியளிப்பதே நாம் செய்யக்கூடிய சேவைகளுள் மிகவும் உயர்ந்த ஒரு சேவையென பஹாய் போதனைகள் கூறுகின்றன. நன்நடத்தைகளை உருவாக்கிக்கொள்ளவும், உலகிற்கு ஓர் ஒளியாகத் திகழவும், தங்களின் பிள்ளைகளை அறிவியல்களிலும், ஆன்மீக விஷயங்களிலும் அறிவூட்டுவதற்கு ஆசிரியர்கள் செய்திடும் தியாகங்களை–குறிப்பாக இப்பொழுது–பெற்றோர் உணர்கின்றனர்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1435/