
புதிய அரசியலமைப்பு: சிலி நாட்டில் உரையாடல்கள் புதிய பாதைக்கு வழிவகுக்கின்றன
8 அக்டோபர் 2021
ஸான்தியாகோ, சிலி – இவ்வாரம் ஒரு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான வாக்களிப்புக்கு முன்னர், ஒரு நியாயமான சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான உரையாடல்கள் நாடு முழுவதும் அதிக கவனத்தைக் கோரியுள்ளன. கடந்த வருடம் முழுவதும், சிலி நாட்டு பஹாய்கள், தங்களின் சகநாட்டவர்களுடன் சேர்ந்து ஒரு லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் செழுமையான சமுதாயத்திற்கான அடித்தலங்களை ஆராய்வதற்கு, அடித்தட்டிலிருந்து தேசியநிலை வரை எல்லா மட்டங்களிலும் இந்த உரையாடல்களுக்கு பங்களித்து வந்துள்ளனர்.

“இது சிலி நாட்டுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நேரம்” என்று நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் ஃபெலிப்பெ டுஹார்ட் கூறுகிறார். “நம் நாட்டை ஒழுங்கமைப்பதற்கான கொள்கைகளைப் பற்றி கூட்டாக சிந்திக்க நம் அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.”
சமூக முன்னேற்றம் குறித்த தேசிய சொல்லாடலில் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பஹாய் சமூகம் மிக அண்மையில், நாடு முழுவதும் கலந்துரையாடல் தளங்களை உருவாக்குவதற்கு ஒரு பொது சமூக அமைப்பான அஹோரா நோஸ் டோகா பார்ட்டிசிப்பார்’உடன் (Ahora nos toca participar) (இப்போது பங்கேற்பதற்கான எங்கள் முறை) உடனுழைத்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான கூட்டங்கள் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வுக்கு வழிவகுத்தன. பெண்கள் மற்றும் பழங்குடி மக்களின் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்காக சிலி நாட்டு பஹாய்கள் அரசியலமைப்புச் செயல்முறைகளுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கூட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில், சான்தியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் இயக்குனர் வெரோனிகா ஓரே, சில அனுமானங்களை எவ்வாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்: “நாம் காணும் வரலாற்று முக்கியத்துவமான தருணம், தொற்றுநோயின் தாக்கம், ஒரு கூட்டு மனசாட்சியின் விழிப்புணர்வு, ஆகியன சமுதாயத்திற்கான ஒரு புதிய கட்டமைப்பைத் தேட நம் நாட்டை உந்துவிக்கிறது.”
“சீர்திருத்தங்களுக்கு அப்பால், ஓர் ஆழமான மாற்றம் தேவை” என்று திருமதி ஓரே தொடர்ந்தார். … பொருளாதார வளர்ச்சியின் முன்னோக்கின் மூலம் மட்டுமே நாம் அபிவிருத்தியைப் பார்க்கவில்லை, ஆனால் நீதி மற்றும் நமது அத்தியாவசிய ஒற்றுமை போன்ற ஆன்மீகக் கருத்தாக்கங்களையும் நாம் கருத்தில்கொள்கிறோம். கல்வியல் கொள்கைகளைப் பற்றி, அரசியலமைப்பு மாற்றங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் உன்னதத்தையும் கவனத்தில் கொண்டு, மனித இயல்பு பற்றிய நமது அனுமானங்களையும் மறுபரிசீலனை செய்வோம்.”

சிலி நாட்டு பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் லூயிஸ் சாண்டோவல் கூறுகிறார், “சிலி சமுதாயத்தில் மாற்றத்திற்கான அபிலாஷைகள் வெளிப்பட்டுள்ளன–செல்வம் மற்றும் வறுமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம், இயற்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம். அவை அனைத்தும் ஒரு பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன: இந்த அனைத்து துறைகளிலும் உள்ள சவால்களை லௌகீக வளர்ச்சியை வாழ்க்கை மற்றும் உறவுகளின் மையத்தில் வைக்கும் சமுதாயத்தின் ஒரு மாதிரியில் காணலாம். இது போதாது; இதைத் தாண்டி வாழ்க்கையின் ஆன்மீக பரிமாணத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும்.”
நீதிக்கான கோரிக்கையே இந்த உரையாடல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும் என திரு டுஹார்ட் விளக்குகிறார். “இந்த கொள்கை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திசையில் சமூக மாற்றத்திற்கான ஒரு செயல்முறையை வழிநடத்தும். நீதி பற்றிய பஹாய் கருத்தாக்கம் இதை ஒரு ஐக்கியப்பட்ட சமூகத்தின் ஒரு தூணாக முன்வைக்கின்றது.. நீதி எல்லா மக்களையும் கடவுளுக்கு முன்பாக ஒன்றென முன்வைக்கிறது, மற்றும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நீதி போன்ற ஆன்மீகக் கொள்கைகள் ஒரு சமூகத்திற்கான தூண்களை வழங்குகின்றன, அங்கு நாம் ஒவ்வொருவரும், நம்முடைய திறனாற்றல்களுடன், நாம் மேம்பாடு கண்டு நமது பங்கையும் ஆற்றிடலாம்.”

வழிபாட்டு இல்லத்தின் மூலம் அதிக ஒற்றுமையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வாறு நனவாகின்றன என்பதை திருமதி ஓரே விளக்குகிறார்: “திறந்து வைக்கப்பட்ட நான்கு ஆண்டுகளில், கோயில் அனைத்து தரப்பு மற்றும் பின்னணியிலிருந்தும் சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக, குறிப்பாக வழிபாட்டு இல்லம் ஒரு காந்த மையமாக செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சிறப்புக் கூட்டங்களுல் அழைக்கப்பட்ட வருகையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர், மேலும் வழிபாடுகளில் பங்கேற்ற பின்னர், தேசிய அக்கறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த விவாதங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள சிந்தனைமிக்க தொடர்புகளின் மூலம் நாம் ஒன்றாக ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது தெளிவாகிறது. ”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1463/