
அமைதி வாரம்: அமைதியை ஸ்தாபிப்பதில் உலகளாவிய ஆளுகையின் பங்கு
11 நவம்பர் 2020
BIC ஜெனீவா – கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த ஜெனீவா அமைதி வாரத்தில் பஹாய் சர்வதேச சமூகத்தின் ஜெனீவா அலுவலகம் (BIC) உலகம் முழுவதும் அமைதி-நிர்மாணிப்பு முயற்சிகள் பற்றிய விவாதங்களில் பங்களிக்க பொது சமூக நடவடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஐ.நா. முகமைகளுடன் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளோடு இணைந்து கொண்டது.

“அமைதி இன்று மானிடத்தின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும்,” என்கிறார் ஜெனீவா அலுவலகத்தின் பிரதிநிதியான சிமின் ஃபஹண்டெய். “எதிரே ஒரு நீண்ட பாதை உள்ளது என்றாலும், இன்னும் அதிக கூட்டு முதிர்ச்சியை நோக்கி மானிடத்தை நகர்த்தும் ஆக்கபூர்வமான சக்திகள் உள்ளன. வெவ்வேறு நடவடிக்கையாளர்களை ஒன்றுதிரட்டுவதன் மூலம், குறிப்பாக சமாதானத்திற்கான பல சவால்கள் COVID-19 தொற்றுநோயினால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில், சமாதான வாரம் கருத்துப் பரிமாற்றத்திற்காக ஒரு முக்கியமான அனைத்துலக மன்றத்தை வழங்குகிறது,.”

ஜெனீவா அலுவலகத்தின் பங்களிப்புகள், BIC’யின் சமீபத்திய அறிக்கையான “ஒரு பொருத்தமா நிர்வாக”த்தின் அடிப்படையில் உலகளாவிய ஒத்துழைப்பு முறைமைகளை பலப்படுத்துவதற்கான முக்கிய தேவையின் மீது கவனம் செலுத்தியது. கடந்த வாரம் அலுவலகம் நடத்திய ஒரு கருத்தரங்கில், ஆளுகை, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பஹாய் சமூகத்தின் மூன்று உறுப்பினர்கள் BIC அறிக்கையின் தாக்கங்கள், “உலகளாவிய குடிமை நன்னெறி”க்கான அதன் அழைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தனர்.
சர்வதேச சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவர் ஆர்தர் லியான் டேல், BIC அறிக்கை சுற்றுச்சூழல் தொடர்பான சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்தவேண்டியதன் அவசியத்தின்பால் எவ்வாறு கவனத்தை ஈர்க்கிறது என்று கூறுகிறார். “தற்போதைய உலகளாவிய சுற்றுச்சூழல் ஆட்சி முறை பெரும்பான்மையாக தன்னார்வமானது. தேசிய அல்லது பொருளாதார சுயநலத்தால் உந்தப்படும் சிலரின் எதிர்மாறான செயல்களால் சில அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் ஆற்றலற்றவையாக ஆக்கப்படுகின்றன.
“சுற்றுச்சூழல் நெருக்கடியானது, மனித இனத்தின் எந்தவொரு பிரிவின் நலன்களும் பிரிக்க முடியாத வகையில் ஒட்டுமொத்த நலன்களுடன் பிணைந்திருப்பதை நாம் காணும் போது, நமது உலகளாவிய பரஸ்பர தொடர்பை ஒப்புக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது.”

உலகளாவிய ஆளுகை மன்றத்தின் நிர்வாக இயக்குனரான அகஸ்டோ லோபெஸ்-கிளாரோஸ், அறிக்கை “நெருக்கடியானது, குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கு அடிக்கடி திறக்கக்கூடிய சாத்தியங்களைப் பற்றி பேசுகிறது என்றார்.
“என்னைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று … உலகில் இன்று செலவின முன்னுரிமைகள் பற்றி நடைபெறும் மறுசிந்தனையாகும். அரசின் வளங்களை நாம் ஒதுக்கீடு செய்த விதம், பல விளைவுத் திறமின்மைகள், தவறான முன்னுரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்பதைத் திடீரென்று அரசாங்கங்கள் உணர்ந்துள்ளன என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, இராணுவ அடிப்படையில் பாதுகாப்பைப் பற்றி சிந்திப்பதைவிட, சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் பாதுகாப்பை மறுவரையறை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி கேள்விப்படுகிறோம், மற்றும் 1945ல் ஐ.நா உருவாக்கப்பட்டதில் இருந்து நாம் இதே இராணுவ அடிப்படையில்தான் பாதுகாப்பைப் பற்றி சிந்தித்து வந்துள்ளோம்.”

நெதர்லாந்த், ஹேக்கில் உள்ள ஒரு சர்வதேச வழக்கறிஞரான மயா கிராஃப், மனித திறனாற்றல் பற்றிய கருத்தை முன்னிலைப்படுத்தி, BIC அறிக்கையின் கூற்று: “உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதற்கான நமது திறனைப் பொறுத்த வரை, மனிதகுலத்திற்கு மிகவும் சாதகமான தொலைநோக்கை இது கொண்டுள்ளது. … நாம் கூட்டாக, அடிப்படையாக, பின்னர் இறுதியில், நமது பொதுமைத்தன்மையை ஏற்றுக் கொண்டால், … நமது அத்தியாவசிய ஒற்றுமைக்கு இந்த தெளிவான அங்கீகாரம் இருந்தால், புதிய சாத்தியங்கள் உருவாகும்.” அமைதி வாரத்தின் மீது நடைபெற்ற கலந்துரையாடல்களைப் பிரதிபலிக்கும், திருமதி ஃபஹான்டே கூறுகிறார்: “சமாதானத்தை நிறுவவேண்டிய அவசியம் பற்றிய அறிவு போதாது. BIC அறிக்கை கூறுவது போல், சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரத்தின் இயந்திரமானது பெருகிய முறையில் ஒத்துழைப்பு மற்றும் ஐக்கியத்தை நோக்கி செலுத்தப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்பதை ஒருவருக்கொருவர் பார்க்க வேண்டும். இதுவே இந்த காலகட்டத்தின், இந்த தருணத்தின் தவிர்க்க முடியாத தேவையாகும்.”