
8 அக்டோபர் 2021
பரோ, சாட், 31 ஜனவரி 2021, (BWNS) – சாட் என்ற குவெரா மண்டலத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30 பாரம்பரிய தலைவர்கள் பரோ கிராமத்தில் கூடி தங்கள் மக்களின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர். பாரம்பரிய தலைவர்களுடன் இணைந்து பஹாய் சமூகத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட இதுபோன்ற ஒரு டஜன் மாநாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

“பல தலைவர்கள், பஹாய்களின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள், அவை வெவ்வேறு கிராமப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத் தங்கள் கிராமங்களில் உள்ள மக்களை ஒன்றிணைக்கின்றன” என்று பஹாய் ஆன்மீக சபை உறுப்பினரான பிரைம் டோம்பாரே விளக்குகிறார்.
முன்னேற்றம் குறித்த விவாதங்களுக்கு ஆன்மீகக் கொள்கைகள் எவ்வாறு அவசியம் என்பதற்கு மாநாடு ஒரு எடுத்துக்காட்டு. பங்கேற்ற தலைவர்களில் ஒருவர் இவ்வாறு கூறினார்: “ஒற்றுமை, மத நல்லிணக்கம், அன்பு, சமுதாயத்திற்கான சேவை-இந்த கருப்பொருள்களை எங்கள் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான தொடக்க புள்ளியாக பார்க்கும் எண்ணமானது உண்மையில் நாம் முன்பு பார்க்க முடியாத விஷயங்களைக் காண அனுமதிக்கிறது.”

மற்றொரு பங்கேற்பாளர் மாநாட்டின் முக்கியத்துவத்தை விவரித்தார்: “எங்கள் கலாச்சார பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட எங்கள் சமூகங்களை நாங்கள் எப்போதும் வழிநடத்தி வந்திருந்தாலும், இந்த தனித்துவமான கூட்டம் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஆதரிப்பதில் எங்களது பங்கை மிக ஆழமாக பிரதிபலிக்கவும், எங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி பிரதிபலிக்கவும் அனுமதிக்கிறது. இந்த வகையான இடங்கள் எங்கள் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்கான முன்னணியில் இருக்க உதவும். ”
மாநாட்டின் ஆலோசனைகள் பல சமூக சிக்கல்களை ஆராய்வதற்குத் தலைவர்களை அனுமதித்தன, அதே சமயம் சாட் பஹாய்களின் சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளின் அனுபவத்திலிருந்து சிறிது பயன் பெற்றன.

சிறார்கள் மற்றும் இளைஞர்களின் தார்மீக கல்வி அவர்கள் ஆராய்ந்த கருப்பொருளில் ஒன்றாகும். கூட்டத்தில், திரு. டோம்பாரே பஹாய் கல்வித் திட்டங்களின் சேவைக்கான திறன்களை உருவாக்கும் அம்சங்களை வலியுறுத்தினார்: “இந்த செயல்முறையின் மூலம், இளைஞர்கள் தங்கள் சமூகங்களின் தேவைகளைப் பற்றி ஒன்றாகப் பிரதிபலிக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள், அவர்கள் தங்கள் வட்டாரத்தில் சேவை செய்வதில் மற்றவர்களுடன் இணைகிறார்கள் , அவர்கள் புதிய சாத்தியங்களைக் காண்கிறார்கள். நீண்டகால செழுமைக்குப் பங்களிப்பதற்காக அவர்கள் தங்கள் சமூகங்களிலேயே நீண்ட காலம் தங்க விரும்புகிறார்கள். ”
மாநாட்டின் முதல்வர்களில் ஒருவர், இந்த கல்வி செயல்முறை, குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டார்: “தலைமுறைகளுக்கு இடையிலான பதட்டங்கள் மற்றும் கிராமப்புற வெளியேற்றம் போன்ற நாம் அனுபவிக்கும் பல பாதிப்புகளை நிவர்த்தி செய்ய இது உதவும். முதல்வர்களாக, எங்கள் மரபுகளையும் மத போதனைகளையும் கற்பிப்பதற்காக இளைஞர்களை ஒன்றுதிரட்டுவது வழக்கம். தற்போதைய காலத்திற்குத் தேவையானதை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கும் அதே வேளை, உலகத்தை அதிக வெளிப்படையுடன் தழுவிக்கொள்ளவும் இந்த வழக்கத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்கிறோம்.”

கலாச்சாரத்தின் பரிணாமம் என்பது தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றொரு கருப்பொருளாகும். சமூக விவகாரங்களில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதற்குத் தடைகளாக செயல்படக்கூடிய சில வழக்கமான நடைமுறைகளை ஆழமாக ஆராய்வதன் அவசியத்தை விவாதங்கள் எடுத்துரைத்தன.
மக்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு உகந்த அணுகுமுறைகள் முதல்வர்களுக்கு மிகுந்த ஆர்வமுள்ள மற்றொரு பகுதியாகும். “எங்கள் கிராமங்களில், விளைச்சல் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே நிலத்தில் அடிக்கடி பதற்றம் நிலவுகிறது” என்று முதல்வர் ஒருவர் கூறினார்.
“இந்த கூட்டத்தில் நாம் காணும் ஆலோசனை, சகிப்புத்தன்மை, பிரார்த்தனை போன்றவற்றின் சூழ்நிலையின் மூலம் மட்டுமே இதை தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் பக்தி வாழ்க்கையை வளர்ப்பதற்கான யோசனை மிகவும் ஊக்கமளிக்கிறது. இது இதயங்களை ஈர்ப்பதுடன் அதிக நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு பாதையை வழங்க முடியும். ”
கூட்டத்தின் முடிவில், தலைவர்கள் இதே கருப்பொருள்களை சமூக உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆராய அந்தந்த வட்டாரங்களில் தங்களது சொந்தக் கூட்டங்களை நடத்த முடிவெடுத்தனர்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1484/