கடவுள் அவதாரங்களின் வாழ்வில் ஒரு காலகட்டத்தை அவர்கள் அஞ்ஞாதவாசமாக கழிப்பது உண்டு. உதாரணமாக இயேசு நாதர் பிறந்ததிலிருந்து சுமார் 15 வயது வரை எகிப்து நாட்டில் கழித்தார் என கூறப்படுகிறது. இதற்கு சரியான சரித்திரபூர்வமான சான்றுகள் இல்லையெனினும் அவரைப் பற்றிய வரலாறு அக்காலகட்டத்தில் எதுவும் இல்லை, உண்மையில், அவரது 30 வயது வரைகூட சரியான வரலாறு ஏதும் கிடையாது. கிருஷ்னர் தமது 12வது வயது வரை தமது பெற்றோரைப் பிரிந்து கோகுலத்தில் நந்தகோபர் யசோதை தம்பதியினரின் இல்லத்தில் வளர்ந்தார் என புராண இதிகாசங்கள் கூறுகின்றன. இராமரும் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தார், இராமாயணமும் பிறந்தது. இதே போன்று ஒவ்வொரு கடவுள் அவதாரத்தின் வாழ்விலும் ஒரு பகுதி அஞ்ஞாதவாசமாக கழிவது உண்டு. நவயுக அவதாரமான பஹாவுல்லாவின் வாழ்க்கையிலும் இத்தகைய காலகட்டம் ஒன்று உள்ளது.
பஹாவுல்லா 1852’இல் இரான் நாட்டிலிருந்து பாக்தாத் நகரத்திற்கு நாடுகடத்தப்பட்டார். மூன்று மாதகாலம் கடும் பனியிலும் காடு மேடு வனாந்தரங்களை கடந்தும் பாக்தாத் நகரை வந்தடைந்தார். அந்தப் பிரயானத்தின் போது அவரோடு அவருடைய குடும்பத்தினரும் பல விசுவாசிகளும் பயணம் செய்தனர். அவர்களுள் அவருடைய ஒன்றுவிட்ட தம்பி ஒருவரும் இருந்தார். இந்த ஒன்றுவிட்ட தம்பியால் பஹாவுல்லாவிற்கு பலவிதமான பிரச்சினைகள் உண்டாயின. அவற்றை இங்கு விவரிப்பதற்கு இடம் போதாது. இருப்பினும், இவர் ஏற்படுத்திய குழப்பங்களால் பாக்தாத் நகரில் இருந்த பாப்’யிக்களுட்கிடையே பல பிரச்சினைகள் உண்டாயின. மிர்ஸா யாஹ்யா எனும் பெயர் கொண்ட இந்த ஒன்றுவிட்ட தம்பி தமது சொந்த அண்ணனாகிய பஹாவுல்லாவின் மீது கொண்ட பொறாமையால் விசுவாசிகளிடையே பலவிதமான பிரச்சினைகள் உருவாவதற்கு காரணமாக இருந்தார். தாமே பாப்’யி (பஹாய் சமூகம் என ஒன்று இன்னமும் உருவாகவில்லை) சமயத்தின் தலைவர் என இவர் கூறிவந்தார். இதனால் மிகவும் விசனம் அடைந்த பஹாவுல்லா, நம்பிக்கையாளர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக 1854’ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் பாக்தாத் நகரத்தை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது யாருக்குமே தெரியாது. தமது பிரிவினால் விசுவாசிகள் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படும், அதனால் உண்மை எது பொய் எது என்பது அதுவாகவே புலப்பட வேண்டும் என பஹாவுல்லா தீர்மானித்து, பாப்’யிகள் சமூகத்தை விட்டகன்றார். பஹாவுல்லாவின் சொற்களில்:
“எமது விலகிச்செல்லலின் ஒரே நோக்கமே விசுவாசிகளிடையே முரண்பாட்டிற்கான பொருளாகாமல், எமது சகாக்களிடையே குழப்பத்திற்கான தோற்றுவாய் ஆகாமல், எந்த ஒரு ஆன்மாவையும் புண்படுத்தாமல், அல்லது எந்த உள்ளத்தையும் துன்பத்திற்கு ஆளாக்கமால் இருப்பதற்குமே ஆகும்.”
“வனாந்திரம் சென்று, அங்கு பிரிக்கப்பட்ட நிலையிலும், தனிமையிலும் இரண்டு வருடங்களை எவ்வித இடையூறுமற்ற தனிமையைக் கழித்தோம். எமது கண்களில் துன்பக் கண்ணீர் மழையெனப் பொழிந்தது, இரத்தம் கொட்டும் எமது இதயத்தில் மரணவேதனை என்னும் சமுத்திரம் ஆர்ப்பரித்தது. உயிர்வாழ்வதற்குரிய உணவு கிடைக்காது யாம் இருந்த இரவுகள் பலவாகும். பல நாள்கள் எமது உடல் ஓய்வு காணாது போயிற்று…..”
தமது அஞ்ஞாத வாசத்தின்போது பஹாவுல்லா தம்மோடு ஒரு முஸுல்மானாகிய அபுல்-ஃகாஸிம்-இ-ஹமாடானி எனும் பெயர் கொண்ட ஒருவரை மட்டும் தம்மோடு அழைத்துக்கொண்டு ஒரே ஓர் எளிய மாற்றுடையை எடுத்துக் கொண்டு சுலைமானிய்யா சென்றார். இந்த அபுல்-காஃஸிமுக்கு பஹாவுல்லா சிறிது பணம் கொடுத்து வணிகத்தில் ஈடுபடுமாறு கூறினார். அபுல் காஃஸிம் அவ்வப்போது பஹாவுல்லாவுக்கு உணவும் பொருள்களும் கொண்டு வருவார். பஹாவுல்லாவும் மலையிலிருந்து கீழே சுலைமானிய்யா பட்டனத்திற்கு உணவு பொருட்கள் வாங்குவதற்காக வருவார். சார்-காலு என்னும் இடத்திலிருந்து சுலைமானிய்யா மூன்று நாள்கள் நடக்கும் தூரத்தில் இருந்தது. சுமார் 6000 பேர் வசித்த இந்த ஊர், அப்போது பார்ப்பதற்கு சகிக்காத குடியிருப்புகளுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
ஆரம்பத்தில் அவர் சார்-காலுவில் வாழ்ந்தும் பின்னர் சில நேரம் விவசாயிகள் பயன்படுத்தும் கற்களால் ஆன ஓர் அடைக்கலத்திலும் குடியிருந்தார். பெரும்பாலும் பாலும் சாதமுமே அவரது உணவாக இருந்தது. அவர் எப்படி தமது நேரத்தை கழித்தார் என்பது தெரியவில்லை, ஆனால் எழுதுவதிலும் ஒதுவதிலும் பிரதிபலித்தலிலும் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிகிறது.
இந்த சுலைமானிய்யா பகுதியில் பஹாவுல்லா வாழ்ந்த காலத்தில் தம்மை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு முஹம்மத்-இ-இரானி” என்னும் நாமம் பூண்டு சுலைமானிய்யா மலைகளின் மீது துறவியைப்போல், மிகவும் எளிய ஆடையனிந்து ஒரு குகையில் வாழ்ந்து வந்தார். அந்த காலத்தில் உணவு யாசிப்பதற்காக தர்வீஷ்கள் எனப்படும் இஸ்லாமிய துறவிகள் பயன்படுத்திய அதே போன்ற திருவோட்டை பஹாவுல்லாவும் பயன்படுத்தினார். அந்தப் பாத்திரம் இன்று பஹாய் உலக மையத்தின் தொள்பொருள் காப்பகத்தில் உள்ளது.
சுலைமானிய்யா ஒரு ரம்மியாமான ஆனால் சிறிய பட்டனம். இது பாக்தாத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர்களுக்கும் அப்பால் உள்ளது. இப்பகுதியில் வசிப்போர் குருதியர் (Kurd) என அழைக்கப்படுவர். இவர்கள் தங்களுடைய சொந்த மொழியைப் பெற்றும், இஸ்லாம் சமயத்தின் சுன்ன பிரிவைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

சுலைமானிய்யா பகுதியில் பஹாவுல்லா வாழ்ந்திருந்த காலத்தில் அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த வழியே வந்த வழிப்போக்கர்களும், விவசாயப் பணியாளர்களும், உலகப் பற்றற்ற ஒரு துறவியாக அவரைக் கண்டு, அந்த இடத்திற்கு அருகிலிருந்து நகரங்களில் உள்ளோரிடம் அவரைப் பற்றி கூறியிருக்கக்கூடும்.

விரைவில், சூஃபி (இஸ்லாமிய சமயத்தின் ஒரு பிரிவினர்) சமயத்தவர்களின் தலைவரான ஷேய்க் இஸ்மாயில் அவரைப் பற்றி அறிந்து அவரைச் சந்தித்தார்.
பஹாவுல்லாவின் கையெழுத்துப் பிரதி ஒன்று ஓர் உள்ளூர் சூஃபி மதகுருவான ஷேய்க் இஸ்மாயில் கைக்கு கிடைத்த போது பஹாவுல்லா, அவரது தோற்றத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு மேன்மையான மனிதர் என்பதை, உள்ளூர் மக்கள் உணர ஆரம்பித்தனர்.
பஹாவுல்லாவின் மகளான பாஹிய்யா காஃனும் நினைவுகூர்கின்றார்: ஒரு நாள் சிறுவன் ஒருவன் மோசமான கையெழுத்துக்காக வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டு வீதியில் அழுதுகொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த துறவி ஒருவர் (பஹாவுல்லா), அச்சிறுவனின் அழுகைக்கான கரணத்தை வினவினார். காரணம் கேட்டு, “அழ வேண்டாம், நான் உனக்கு அதையே அழகான கையெழுத்தில் எழுத்திதருகிறேன், நன்றாக எழுதவும் உனக்குக் கற்றுத்தருகிறேன்,” என்றார்.

எழுத்தறிவு குறைவாக இருந்த காலத்தில், பஹாவுல்லாவின் கையெழுத்தின் அழகு அவர் ஓர் உயர்வான கல்வியைப் பெற்றவர் என்பதைக் குறித்துக்காட்டியது. ஷேய்க் இஸ்மாயிலும் அவரது சீடர்களும் பஹாவுல்லாவைப் பற்றி அறிய ஆரம்பித்தனர். அவர்களுடனான ஒரு சந்திப்பில் பஹாவுல்லா அவர்களுக்காக 2000 வரிகள் கொண்ட ஒரு கவிதையை எழுதியருளினார்.
விரைவில் பஹாவுல்லாவின் பெருமை பாக்தாத் வரை பரவி, அவர் சுலைமானிய்யாவில்தான் இருக்கின்றார் என்பது தெரிய வந்தது. பஹாவுல்லாவின் சகோதரரான மிர்ஸா மூஸா, தமது மாமனாரை விளித்து, சுலைமானிய்யா சென்று பஹாவுல்லாவை அழைத்து வருமாறு கோரினார். அவரும் மற்றொருவருமாக சுலைமானிய்யா சென்றனர். பாப்’யி சமூகத்தை கட்டிக்காக்க முடியாமல் போன மிர்ஸா யாஹ்யாவும், என்ன செய்வது எனத் தெரியாமல் பஹாவுல்லாவை திரும்பி வருமாறு வேண்டியழைத்தார்.
இவர்கள் சுலைமானிய்யாவில் பஹாவுல்லாவைக் கண்டுபிடிப்பதற்கு சுமார் இரண்டு மாதங்களாயிற்று. பஹாவுல்லா பாக்தாத் திரும்ப சம்மதிப்பதற்கும் சில காலம் பிடித்தது. பஹாவுல்லா சுலைமானிய்யாவில் சரியாக இரண்டு சந்திர வருடங்கள் தங்கியிருந்தார்.
பாஹிய்யா காஃனும் கூறக் கேட்டது (Chosen Highway)
என் அம்மா தமது கணவருக்காக சில விலைமதிப்பற்ற பாரசீக பொருட்களிலிருந்து (திர்மிஹ் – சிவப்பு துணி) ஒரு கோட் தயாரித்திருந்தார், அவருடைய திருமண சீதனங்களிலிருந்து எஞ்சியவற்றை இந்த நோக்கத்திற்காக அவர் பத்திரமாக வைத்திருந்தார். இப்போது பஹாவுல்லா அந்த கோட்’டை அணிவதற்கு அது தயாராக இருந்தது.
கடைசியாக! இறுதியில்! என் அம்மா, என் சகோதரர் மற்றும் நானும் மூச்சுவிடாமல் எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு காலடி ஓசை கேட்டது. மாறுவேடத்தில் இருந்த எங்கள் அன்புக்குரியவரின் திருவுருவை நாங்கள் கண்டோம்!
விவரிக்க முடியாத மகிழ்ச்சியோடு நாங்கள் அவரை ஓடி அணைத்துக்கொண்டோம்.
அமைதியும் மென்மையும் மிக்க என் அன்புத் தாயும், என் சகோதரனும் தந்தையின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொள்வதையும் இப்போது என்னால் மனக்கண்ணில் காண முடிகிறது, மீண்டும் ஒருபோதும் அவரை எங்கள் பார்வையில் இருந்து வெளியேற விடமுடியாது என்பது போல. கட்டிப்பிடித்துக்கொண்ட அந்த அழகான பையன் (என் சகோதரன்) என் தந்தை அனிந்திருந்த மாறுவேட ஆடைக்குள் மறைந்தே விட்டான். இந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியவில்லை; மனதைத் தொட்டு மகிழ்ச்சியூட்டியது.
அந்த இரண்டு வருடங்கள் வனாந்தரத்தில் தங்கியிருந்த சம்பவங்கள் பல, அவை எங்களுக்குக் கூறப்பட்டன; அக்கதைகளை அடிக்கடி கேட்ட போதும் நாங்கள் ஒருபோதும் சோர்வடையவில்லை:
விவரிப்பதற்கு உணவு எளிதானது – கரடுமுரடான ரொட்டி, ஒரு சிறிய பாலாடை வழக்கமான உணவாக இருந்தது; சில நேரங்களில், ஆனால் மிகவும் அரிதாக, ஒரு கப் பால்; இதில் சிறிது சாதமும் சிறிது சர்க்கரையும் சேர்க்கப்படும். ஒன்றாக வேகவைக்கும்போது, இந்த மிகச்சிறிய ரேஷன்கள் ஒரு வகையான சிறந்த அரிசிப் புட்டு விருந்தாக அமைந்தன. (பஹாவுல்லா இவ்வுணவை தமது கைகளாலேயே சமைத்தார் என்பது தெளிவு. இரான் நாட்டிலிருந்து பாக்தாத் வந்து சேர்ந்த சில காலத்திற்குப் பிறகு அவரது மனைவியான ஆஸிய்யா காஃனும் நோயுற்ற போதும் பஹாவுல்லா தமது மனைவிக்காகத் தாமே உணவு சமைத்துக் கொடுத்துள்ளார். பிற்காலத்தில் பயணம் ஒன்றின் போது பேரீச்சம் பழங்களை எப்படி வெண்ணெயுடன் சேர்ந்து சமைப்பது என்பதையும் சகாக்களுக்குச் சொல்லிக்கொடுத்துள்ளார்.)
பாக்தாத் திரும்பிய பஹாவுல்லா, அங்கு பாப்’யி சமூகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டார். மிர்ஸா யாஹ்யா கையாலாகாதவர் என்பதை சமூகம் கண்டுகொண்டது. பஹாவுல்லா பாப்’யி சமூகத்தைத் திருத்தியமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டார்.
இவ்விதமாக கடவுளின் அவதாரம் தமது இரண்டு வருடகால அஞ்ஞாதவாசத்தை முடித்தார்.