
“ஓர் அசாதாரண ஆதரவு அலை”: பஹாய்கள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு ஓர் ஒருமித்த அழைப்பு
BIC ஜெனெவா, 18 பிப்ரவரி 2021, (BWNS) – ஈரானிய விவசாய கிராமமான இவெல்’லில் பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அநியாயமாக பறிமுதல் செய்யப்படுவது குறித்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பெருகிவரும் எதிர்ப்புக்குரலில் தாங்களும் சேர்ந்துள்ளனர். மத தப்பெண்ணத்தால் தெளிவாக உந்துதல் பெற்ற, ஈரானிய அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் நீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இது டஜன் கணக்கான (பஹாய்) குடும்பங்கள் உள்நாட்டில் குடியிருப்புகளை இழந்து பொருளாதார ரீதியில் அவற்றை வறுமைக்கு ஆளாக்கியுள்ளது.

அமெரிக்க இஸ்லாமிய காங்கிரஸ், கனேடிய இமாம்களின் கவுன்சில், நல்லொழுக்க நெறிமுறைகள் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் ஐக்கிய இராஜ்யத்தின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷேக் இப்ராஹிம் மோக்ரா, அகில இந்திய தன்சீம் ஃபலாஹுல் முஸ்லெமின் மற்றும் அகில இந்திய சையிஃபி சங்கம் ஆகியவை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பஹாய்களுக்கு ஆதரவளிக்கும் அவ்வறிக்கைள் இவெலில் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
“மசண்டரனில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் பொறுப்புள்ள அனைத்து நபர்களும் நடவடிக்கை எடுக்கவும், இவெலில் உள்ள பஹாய் சமூகத்திற்கு அவர்களின் சொத்துக்களை திரும்பப் பெற உதவவும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” என்று அமெரிக்க இஸ்லாமிய காங்கிரஸின் அறிக்கை கூறியுள்ளது. இந்த உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில், கனேடிய இமாம்கள் கவுன்சில், “விவசாய கிராமமான இவெல்லில் 27 பஹாய்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஈரானிய நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்,” எனக் கூறுகிறது.

ஐக்கிய இராஜ்யத்தைச் சேர்ந்த ஷேக் இப்ராஹிம் மோக்ரா, ஈரானின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசிக்கு “இந்த அநீதியை நிவர்த்தி செய்ய” அழைப்பு விடுத்துள்ளார். மேலும், “வேறு மதத்தைப் பின்பற்றுவதால் குடிமக்களிடமிருந்து நிலத்தை பறிமுதல் செய்ய இஸ்லாம் ஒரு அரசாங்கத்தை அனுமதிக்காது” என்றும் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பஹாய் சர்வதேச சமூகத்தின் (பி.ஐ.சி) பிரதிநிதி டயான் அலாயி: “உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் தலைவர்கள் ஈரானில் உள்ள தங்கள் பஹாய் நண்பர்களுக்கு ஓர் அசாதாரண ஆதரவ் அலையின் மூலம் உதவ வருகிறார்கள் என்பது இஸ்லாமிய குடியரசிற்கு உலகெங்கிலும் உள்ள அவர்களின் சக மதவாதிகள் அவர்களின் நடவடிக்கைகளை கண்டிக்கின்றனர் என்பதற்கான ஓர் ஆற்றல்வாய்ந்த சமிக்ஞையாகும்.
“150 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் முஸ்லீம் அண்டையர்களுடன் வசித்து வந்துள்ள இவெலில் உள்ள பஹாய்களுக்கு முன்னணி முஸ்லிம்களின் ஆதரவு அறிக்கைகள், ஈரானிய அரசாங்கம் இஸ்லாமிய சட்டத்தை இச்செயலுக்காகத சுட்டிக்காட்டுவது பஹாய்கள் துன்புறுத்தப்படுவதை மறைத்திடுவதற்கான ஒரு மெல்லிய திரை என்பதை எடுத்துக்காட்டுகிறன.”

ஈரான் பஹாய்களுக்கான சர்வதேச ஆதரவின் கூடுதல் அடையாளமாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்க அதிகாரிகள் ஈரானிய நீதிமன்ற தீர்ப்பை கண்டித்துள்ளனர். கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னியோ, தனது அரசாங்கம் இத்தீர்ப்பால் “கவலை கொண்டுள்ளது” என்று கூறுகிறார். அவர் “மதம் அல்லது சமயநம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்ற” ஈரானை வலியுறுத்தினார். இந்த அழைப்பை ஜெர்மனி, நெதர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராஜ்யம், பிரேசில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் எதிரொலித்துள்ளனர்.

ஸ்வீடனில், அதன் பாராளுமன்றத்தின் 12 உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பிரதிநிதிகளும் ஈவெல் பஹாய்களின் நிலங்களை திருப்பித் தருமாறு கடுமையாகக் கோரியுள்ளனர். உலகளாவிய மத சுதந்திரத்திற்கான ஜேர்மன் மத்திய அரசு ஆணையர் மார்கஸ் க்ரூபெல், பஹாய்களை நாட்டில் ஒரு மத சமூகமாக அங்கீகரிக்கவும், “பஹாய் சமூகங்களின் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு” முற்றுப்புள்ளி வைக்கவும் ஈரானுக்கு கோரிக்கை விடுத்தார்.
நிறவெறியின் போது மனித உரிமைப் பணிகளுக்குப் பெயர்பெற்ற ஓர் அமைப்பான தென்னாப்பிரிக்காவின் சட்ட வள மையம், சொத்துப் பறிமுதல் செய்வதைக் கண்டித்து ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளது.

“உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது, ஈரானிய அரசாங்கத்தின் பஹாய் சமூகத்திற்கு இழைக்கப்படும் அப்பட்டமான அநீதிகளால் அது திகைப்படைந்துள்ளது” என்று BIC’யின் திருமதி அலா’யி கூறுகிறார். “பஹாய்கள் அப்பாவிகள் என்பது சர்வதேச சமூகத்திற்கு முன்னெப்போதையும் விட இப்பாது தெளிவாகத் தெரிகிறது மற்றும், ஈரானில் பஹாய் சமூகத்திற்கு ஏற்படுத்தப்படும் கடுமையான அநீதிகளுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும். இவெலில் உள்ள பஹாய்களுக்கு நிலங்களை திருப்பித் தருவது மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் உள்ள பஹாய்கள் மீதான திட்டமிட்ட துன்புறுத்தல்களை முற்றாக ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”
ஈரான் பஹாய்கள் நில பறிமுதல் மற்றும் பெருமளவு இடம்பெயர்வு சார்ந்த வரலாறு கனேடிய பஹாய் சமூகத்தின் பொது விவகார அலுவலகத்தின் வலைத்தளத்தின் சிறப்பு பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது.