
8 அக்டோபர் 2021
மாத்துண்டா, கென்யா, 24 மே 2021, (BWNS) – ஆப்பிரிக்கா கண்டத்தின் முதல் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லமான கென்யாவின் மாத்துண்டா சோய்’இல் ஒரு பிரகாசமான ‘தோற்றம்’ ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு திறப்பு விழாவில் அர்ப்பணம் செய்யப்பட்டது.
ஓர் உள்ளூர் பாடகர் பாடிய “என் கடவுளே, என் பிரார்த்தனையை ஒரு ஜீவ நீர் ஊற்றாக்குவீராக” என்னும் குழுவிசை, தங்கள் மக்களின் ஆன்மீக பயணத்தில் ஒரு மகத்தான அடியெடுப்பை கொண்டாடுவதற்கு வந்திருந்த,.அர்ப்பணிப்பு விழாவில் கூடியிருந்த மக்களிடையே ஆழமாக எதிரொலித்ததுடன், அருகிலுள்ள மற்றும் கென்யா முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
வழிபாட்டு இல்லம் – பஹாய் எழுத்துகளில் மாஷ்ரிகுல் ‑ அஸ்கார் எனக் குறிப்பிடப்படுகிறது, இதன் பொருள் “கடவுள் புகழின் உதயபீடம்” – இதற்கு ஒரு தனித்துவமான மெய்நிலையுள்ளது. இது சமூகத்தின் மையத்தில் உள்ளது, எல்லா மக்களுக்கும் திறந்திருக்கும், மற்றும் பிரார்த்தனையும் சிந்தனையும் சமூக சேவையை ஊக்குவிக்கும் இடமுமாகும்.
ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழாவில், இந்த நிகழ்விற்கு உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாக பெயரிடப்பட்ட ஆப்பிரிக்காவில் உள்ள ஆலோசகர்கள் கண்ட வாரியத்தின் உறுப்பினரான டவுன்ஷெண்ட் லிஹாண்டாவின் கருத்துக்களும் அடங்கும்.
திரு. லிஹாண்டா நீதிமன்றத்தின் ஒரு கடிதத்தைப் படித்தார், அதில் கூறியதாவது: “… உலகம் நிச்சயமற்ற நிலையில் சிக்கித் தவிக்கும் ஒரு நேரத்தில், மாத்துண்டா சோய் மற்றும் அதற்கும் அப்பால் உள்ள நண்பர்களின் முயற்சிகள், மகிழ்ச்சி மற்றும் மிகுந்த களிப்பிற்கான ஒரு காரணமாக விளங்கும் ஆர்வநம்பிக்கைக்கான கலங்கரை விளக்கத்தை ஸ்தாபிப்பதில் அதன் உச்சநிலையை அடைந்துள்ளன.”
உலக நீதிமன்றம், மூன்று ஆண்டுகளில் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதானது “கென்யா மக்களின் உள்ளுரம், வள ஆற்றல், மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்” எனக் கூறியது.
அரசாங்க அதிகாரிகள், கிராமம் மற்றும் மாவட்டத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளூர் மற்றும் தேசிய பஹாய் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், கட்டிடக் கலைஞர் மற்றும் கட்டுமானக் குழுவின் பிற பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டோரில் அடங்குவர்.
கோவில் அமைந்துள்ள கிராமங்கள் குழுமத்தின் தலைவரான மோரிஸ் முகோபி, “பஹாய் கோவில் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அனைவரும் இங்கு வந்து வழிபடுவதை பஹாய் கோவில் வரவேற்கிறது என்பதாகும்.”

பஹாய் உலக செய்தி சேவையுடன் பேசும்போது, அப்பகுதியில் வசிப்பவர்கள் பின்வரும் உணர்வுகளை எதிரொலித்துள்ளனர்: “மாத்துண்டா சோய் மக்கள் வழிபாட்டு இல்லத்தை ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கிறார்கள்” என்று ஆண்ட்ரூ ஜுமா கூறுகிறார்.
உள்ளூர் சமூகத்தின் மற்றொரு உறுப்பினரான எல்டர் கெய்ம்பா இவ்வாறு கூறுகிறார்: “எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் கோவிலில் பிரார்த்தனைக்கு ஒன்று சேர்வதால், முன்பு இருந்த வேறுபாடுகள் மறைந்துவிட்டன.”
ஒரு கிராம மூப்பரான ஜஸ்டஸ் வஃபுலா பின்வருமாறு கூறுகிறார்: “வழிபாட்டு இல்லம் என்பது சமூகத்தின் எதிர்மறை சக்திகளுக்கு இடந்தராத தளமாகும். நாம் கோவிலுக்குச் செல்லும்போது, நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை அறிவோம். நாம் இல்லம் சென்றுவி்ட்டோம் என்பது நமக்குத் தெரியும். ”
கோவிலின் தோற்றம் உருவாக்கியுள்ள ஓர் இல்லத்தின் உணர்வு இப்பகுதியின் பாரம்பரிய குடிசைகளை நினைவூட்டுகிறது என்று வழிபாட்டு இல்லத்தின் கட்டிடக்கலைஞரான நேடா சமீமி விளக்குகிறார். “வழிபாட்டுத் தலம் என்பது உங்கள் ஆத்மாவுக்கு சொந்தமான இடமாகும்; அங்கு உங்கள் மதம் எதுவாக இருந்தாலும் நீங்கள் சௌகர்யமாக இருப்பதுடன், உங்கள் படைப்பாளருடன் இணைவு கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் முடியும்.”
கோயிலை எழுப்புவதற்கான செயல்முறை எவ்வாறு ஒன்றிணைவை உருவாக்கியது என்பதை திருமதி சமிமி விவரிக்கிறார்.

“இந்த கட்டமைப்பானது ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் கடவுளைப் புகழ்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நமது எல்லா பணிகளும் கலந்தாலோசனையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எங்கள் கூட்டங்கள் வெவ்வேறு சமயங்களின் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கும். ”
இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன் கட்டுமானம் இந்த மாதத்தில் நிறைவடைந்தது. அதிவுயரிய நாமம் என அழைக்கப்படும் ஒரு புனிதமான பஹாய் சின்னம் குவிமாடத்தின் உச்சியில் உயர்த்தப்பட்டது.

பின்னர், சனிக்கிழமையன்று, பஹாய் உலக மையத்தில் உள்ள புனித நினைவாலயங்கள் ஒன்றின் தூசி அடங்கிய ஒரு சிறிய அலங்காரச் சிமிழ் வழிபாட்டு மன்றத்தின் கட்டமைப்பிற்குள் வைக்கப்பட்டது, இது கோயிலுக்கும் பஹாய் சமயத்தின் ஆன்மீக மையத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் குறிக்கிறது.

1970’களில் சமயம் இங்கு தோன்றியதிலிருந்து இப்பகுதியில் பஹாய் சமூக வாழ்க்கை எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதை மாத்துண்டா பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை உறுப்பினரான ஜான் மடாஹனி விளக்குகிறார். “கடந்த காலத்தில், சில பஹாய்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் பிரார்த்தனைக்காக கூடிவருவார்கள். இப்போது 300’க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழக்கமாக பக்தி கூட்டங்களை நடத்துகின்றன, தங்கள் அண்டையர்களுடன் பிரார்த்தனை செய்கின்றன, ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என வினவாமல் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.
“கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பு அதிகாலையில் கோவில் மைதானத்தில் ஒன்றுகூடும் நடைமுறையை நாங்கள் ஆரம்பித்தபோது, சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் அன்றாட பணிகள் குறித்து செல்வதற்கு முன்பு,, அதுபோன்ற ஒரு தருணத்தில் அவர்கள் ஒன்றுசேர்வது, எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாங்கள் கண்டோம். இல்லையெனில், நாங்கள் ஒருபோதும் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களை ஒரே நேரத்தில் ஒன்றாகப் பார்க்க மாட்டோம். ”
உள்ளூர் சபையின் மற்றோர் உறுப்பினரான பெர்னார்ட் லியோசி: “வழிபாடு மற்றும் சேவை இரண்டின் மூலமும் வழிபாட்டு இல்லம் நம்மை கடவுளின் அண்மைக்குக் கொண்டு வருகிறது. கோயிலில் ஒன்றுகூடுவதன் மூலம் நாங்கள் ஆற்றல் பெறுகிறோம், மற்றும் வலுவான சமூகங்களை உருவாக்குவதற்கு நாங்கள் இந்த ஆற்றலை கால்வாய் இடுகின்றோம்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1511/