கோவிட்-19’க்குக் காரணமான நவல் கொரோனா நச்சுயிரி–இது SARS-CoV-2 எனப் பின்னர் பெயரிடப்பட்டது–குறித்த முதல் மனித தொற்று கடந்த டிசம்பர் 2019’இல் சீன நாட்டின் வூஹான் நகரின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. கொரொனாவுக்கு முதன் முதலில் பலியானவர் அறுபது வயதைத் தாண்டிய வயோதிகர் ஒருவர். பின்னர் சீன சுற்றுலா பயணி ஒருவரினால் இந்த நோய் பிரான்ஸ் நாட்டிற்குப் பரவியது. வருடம் 2020 மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு இந்த நோயை ஒரு பெருந்தொற்றாக பிரகடனம் செய்தது. இதற்குப் பிறகு இந்த நோய் உலகம் முழுவதும் பரவியது. பெரும்பாலான நாடுகள் இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் முடக்க நடவடிக்கை, நடமாட்டக் கட்டுப்பாடு போன்றவை முக்கிய நடவடிக்கைகளாகும்.
நோய் மிகவும் மோசமாகப் பரவிய போது, இதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்க பல நாடுகள் முயன்றன. ஐக்கிய அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி மும்முரமாகியது. முதல் மனிதர் மீதான சோதனை இரண்டு தடுப்பு மருந்துகளான அஸ்ட்ரா ஸெனேக்கா மற்றும் நோவாவேக்ஸ் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இன்று பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன மற்றும் தயாரிக்கப்பட்டும் வருகின்றன.
இந்த கோவிட்-19 நோய் பெருந்தொற்றாகிய போது, பல வதந்திகள் பரவ ஆரம்பித்தன. உதாரணமாக, இது மனிதர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு நச்சுயிரி எனவும் அது தவறுதலாக ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியாகி மனிதர்களிடையே பரவியது எனவும், இந்த தடுப்பூசிகளால் பல பக்கவிளைவுகள் உண்டாகின்றன எனவும் பெரும் மருந்தீட்டு நிறுவணங்களின் (pharmaceutical companies) பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம் எனவும் பலவிதமான வதந்திகள் உலா வந்தன.
எவ்வித வந்திகளானாலும் அவற்றின் வாய்மையைக் கண்டறியாமல் அவற்றின் மீது நம்பிக்கை வைப்போர் பலர் உள்ளனர். இதைத்தான் வள்ளுவர், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”, எனக் கூறியுள்ளார். தன்னிச்சையாக உண்மையை ஆராய்தல் பஹாய் கொள்கைகளில் ஒன்றாகும். இது சமயம் சம்பந்தமானது மட்டுமல்ல, இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். சந்தேகங்கள் இருப்பின் நல்ல அனுபவசாலிகளான மருத்துவர்களின் ஆலோசனையை நாட வேண்டுமென பஹாய் சமயம் அறிவுறுத்துகின்றது.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதனால் அவர்களுக்கு மோசமான சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாகக் கூறி, தாங்கள் மட்டுமல்ல, தங்களுடன் சேர்ந்து பிற பெற்றோர்களையும் இதை நம்ப வைத்துள்ளனர். இவ்வித வதந்திகளின் பரவலில் முகநூல் (Facebook) முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு செய்தி உண்மையா அல்லவா என்பது அறியப்படுவதற்குள் அது காட்டுத் தீ போன்று உலகம் முழுவதும் பரவிவிடுகின்றது.
சில இடங்களில், பல சாமியார்களும் இந்த தொற்றுநோய் வராமல் தங்களால் தடுக்க முடியும் எனக் கூறினர். அதில் ஒரு சாமியார் அதே கோவிட் தொற்றினால் தாமே இறந்தும் போனார். வேறு சிலரோ, வெண்ணீர் அருந்தினால் இந்த நோய் வராமல் தடுக்க முடியலும் என்றனர். சிலர் நாட்டு மருந்துகளைப் பரிந்துரைத்தனர். நாட்டு மருந்துகள் பரவாயில்லை ஆனால் அவை மட்டும் கோவிட்-19’ஐத் தடுத்திட முடியும் எனக்கூறுவது அபத்தமானது.
எவ்வாறாயினும், கோவிட்-19 ஒரு மெய்ம்மை, அதற்கு எதிராக நம்மைப் பாதுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்மைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மாறாக, கோவிட் நோய் நம்மூலமாக பிறருக்குப் பரவாமல் இருப்பதற்கும் தடுப்பூசி ஒரு முக்கிய வழியாகும். நாம் நம்மைப் பற்றி மட்டும் நினைக்காமல் நமது சொந்து விருப்பு வெறுப்புகளைப் பற்றி மட்டும் பார்க்காமல் எதையும் முடிவு செய்வதற்கு முன்னால் நமது சமுதாயம் சார்ந்த கடமைகள் மற்றும் பொது நலன்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
பெரும்பாலும் தடுப்பூசிகள், பல வருட காலங்களுக்கு சோதனை செய்யப்பட்ட பின்பே சந்தைக்கு வருகின்றன. ஆனால், கொரோனா-19’இன் கோரத் தாண்டவத்தினால் தடுப்பூசிகள் மிகவும் விரைவாக தயாரிக்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை உண்டாகியது. இருப்பினும், இத்தடுப்பூசி நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.
இன்று இந்த கோவிட் பரவலினால் வேறு பல சமுதாய பிரச்சினைகளும் இன்று படிப்படியாகத் தோன்றியுள்ளன: உடல்நிலையில் நிரந்தர பாதிப்பு, முழு கதவடைப்பினால் பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர், மற்றும் இழந்தும் வருகின்றனர், குடும்ப வன்முறைகளில் அதிகரிப்பு, மாணவர்கள் பள்ளி செல்ல முடிவதில்லை, அப்படியே இணையம் மூலம் கல்வியைத் தொடர்வதானாலும், அதற்குத் திறன்பேசிகள் அல்லது கணினிகள் வேண்டும், குடும்ப உறுப்பினர்களின் இறப்பால் பல குழந்தைகள் இன்று அநாதைகள் ஆகியுள்ளனர், வேலையிழந்து, உணவுக்கு வழியில்லாமல், இன்று தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த கொரொனா தொற்றின் நீண்டகால பாதிப்புகள் என்னவென்பதை நம்மால் முழுமையாக கணிக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்காவது அதன் பாதிப்புகளை நம்மால் உணர முடிகிறது. முக்கியமாக இன்றை இளைய தலைமுறையினர் மீதான தாக்கம் மிகவும் மோசமானதாகவே இருக்கும். இந்தக் கொரோனா இன்னும் பல வருடங்கள் நீடிக்கக் கூடியதாக இருந்தாலும், அது தோய்ந்து போவதற்குள் வேறு பல தொற்றுகளும் உண்டாக வாய்ப்புகள் உண்டு. மனிதர்கள் இன்று சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்தாலும் கடவுள் நம்பிக்கை எனும் புளியங்கொம்பில் தங்களின் முழு நம்பிக்கையை வாக்காத வரை உலகில் இத்தகைய நோய்களும் தொல்லகளும் உண்டாகிக் கொண்டேதான் இருக்கும்.