மனிதனின் பௌதீக மற்றும் ஆன்மீகச் சிறகுகள்


மனிதனின் பௌதீக மற்றும் ஆன்மீகச் சிறகுகள்           

அப்துல்-பஹாவின் முதலாவது பொது உரை நியூ யார்க் நகரில் எஸ்ஸன்ஷன் கிருஸ்தவ கோவிலின் திருச்சபையினர் முன் ஏப்ரல் 14ம் தேதி நிகழ்த்தப்பட்டது. அவரது உரையின் மையக் கருத்துகள் பின்வருமாறு:

            இன்று மானிட உலகிற்கு அனைத்துலக ரீதியிலான ஐக்கியமும் இணக்கமும் தேவைப்படுகின்றது. இவ்வுயர்ந்த அடிப்படை கோட்பாடுகளை ஸ்தாபித்திட ஓர் இயக்க ஆற்றல் தேவைப்படுகின்றது. மானிட உலகின் ஐக்கியமும் ‘அதிவுயரிய அமைதியும்’ லௌகீக வழிகளில் சாதிக்கப்பட முடியாது. அவை அரசியல் வழிகளிலும் ஸ்தாபிக்கப்பட முடியாது, ஏனெனில் தேசங்களின் அரசியல் தேவைகள் பலவிதப்பட்டும் மக்களின் கொள்கைகளும் ஒன்றுக்கொண்று வேறுபட்டும் முறண்படவும் செய்கின்றன. அவை இன ரீதியிலோ தேசவிசுவாச சக்தியின் மூலமாகவோ ஸ்தாபிக்கப்பட முடியாது. ஏனெனில், இவை யாவும் தன்னலமிக்க, வலுவற்ற மானிட சக்திகளாகும். இனவேறுபாடுகள், தேசவிசுவாசம் சார்ந்த காற்புணர்வுகள் ஆகியவை இந்த ஐக்கியம், உடன்பாடு ஆகியவை நனவாக்கப்படுவதை தடுக்கின்றன. ஆதலால், கடவுள் அவதாரங்கள் அனைவரின் அடிப்படை போதனைகளான மானிட இராஜ்ய ஒருமைத்தன்மையின் மேம்பாடானது புனித ஆவியின் தெய்வீக சக்தி, மூச்சுகள் ஆகியவற்றின் வாயிலாகவின்றி வேறு வகைகளில் அடையப்படவே முடியாது. பிற சக்திகள் யாவும் வலுவற்றவை, இதை சாதிப்பதற்கு ஆற்றலற்றவை.

மனிதனுக்கு இரண்டு சிறகுகள் வேண்டும். ஒன்று பௌதீக ஆற்றலும் லௌகீக நாகரிகமும் ஆகும்; மற்றது ஆன்மீகச் சக்தியும் தெய்வீகப் பன்பாடும் ஆகும். ஒரு சிறகை மட்டும் வைத்துக்கொண்டு பறக்கஇயலாது. இரண்டு சிறகுகள் தேவை. ஆகவே, லௌகீக நாகரிகம் எவ்வளவுதான் மேம்பாடு கண்டிருந்த போதிலும் அது ஆன்மீக நாகரிகத்தின் வளர்ச்சியின்றி முழுநிறைவு அடையவே முடியாது.

            அக்கிருஸ்தவ கோவில் நகர இடமின்றி நிறைந்திருந்தது; அப்துல்-பஹா வெளியேறும் போது மக்கள் வாழ்த்துத் தெரிவிக்க அவரை நோக்கி விரைந்தனர். ஒரு பெண்மணி அவருடைய அங்கியைப் பற்றிக்கொண்டு கதறியழுதார். அழுகை, அப்பெண்மணி கூற முயன்ற வார்த்தைகளை மூழ்கடித்தது. எங்கு பார்த்தாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சி. கிழக்கிலிருந்து விஜயம் செய்துள்ள அவ்வற்புத மனிதரைச் சந்தித்திட மக்கள் அவரை நோக்கி விரைந்தவாறு இருந்தனர்; அவர்களிலிருந்து ஆழ்ந்த உணர்ச்சிவயம் வெளிப்பட்டது. அப்துல்-பஹா எல்லா சூழ்நிலைகளையும், பெருந்தகைமையோடும் அமைவடக்கத்துடனும் யாவற்றையும் உள்ளடக்கும் அன்புக்கருணையுடனும் இரக்கத்துடனும் எதிர்கொண்டார்.

(HM Balyuzi, “‘Abdu’l-Bahá – The Centre of the Covenant of Bahá’u’lláh”, pp. 174-175)

அப்துல்-பஹா: நகைச்சுவை


பஹாவுல்லாவின் மூத்த குமாரரும் அவரால் நியமிக்கப்பட்ட அவரது வாரிசும் ஒரு பஹாய் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரண புருஷருமான அப்துல்-பஹா, மனித வரலாற்றில் ஒரு தனித்துவமான ஸ்தானத்தை வகிப்பதுடன், அவரது ஆழ்ந்த ஞானம், மனித நாகரிகத்திற்கான அவரது ஆழ்ந்த பங்களிப்புகள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவராவார். அத்துடன், அப்துல்-பஹா தமது பெரும் நகைச்சுவை உணர்விற்காகவும் பெயர் பெற்றிருந்தார். சிரிப்பதற்கு மிகவும் விரும்புவார். சில வேளைகளில் கண்களில் நீர் வழிய, தமது தலைப்பாகை கீழே விழும் அளவிற்கு வாய்விட்டுச் சிரிப்பார்.

ஒரு முறை, “என் இல்லம், அமைதியின் இல்லம்” என அப்துல்-பஹா கூறினார். என் இல்லம், ஆனந்தம், களிப்பு ஆகியவற்றின் இல்லம்… இது அறிவுக்கான இல்லம்; அதில் பிரவேசிப்பவர் அறிவு பெற வேண்டும். இது அன்பின் இல்லம்: அதற்குள் வருபவர்கள் அன்பெனும் பாடத்தைப் பயில வேண்டும்; அதம் மூலம் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அன்பு செலுத்தக் கூடும்.”54

– Star of the West, Volume 5, p. 40.

நியூ ஹேம்ப்ஷாயரில் அப்துல்-பஹா (1912) (National Baha’i Archives, US)

ஒரு முறை பஹாய் ஒருவர் அப்துல்-பஹாவைச் சந்தித்து பின்வரும் கேள்வியைக் கேட்டார் “…எல்லாருமே சுவர்க்கம் செல்வோம் என பஹாவுல்லா கூறியுள்ளார் என்பது உண்மையா?” (பஹாய் போதனைகள் நரகம் என ஒன்று இல்லையென கூறுகின்றன—அடுத்த உலகில் எல்லா மக்களுக்குமான ஒரு தொடர்ச்சியான வாழ்க்கை மட்டுமே உள்ளது.) அதற்கு அப்துல்-பஹா இறைவன் அருளால், ஆமாம், எல்லாருமே சுவர்க்கம் செல்வர் என்றார். அம்மனிதர் மேலும் தொடர்ந்து, “பல மில்லியன் மக்களைக் கொன்று குவித்த மொங்கோலிய மன்னனான கெங்கிஸ் காஃன் கூட சுவர்க்கம் செல்வாரா? என்றார். அதற்கு அப்துல்-பஹா ஆமாம் அவரும் சுவர்க்கம் செல்வார், என்றார். பின்னர் அம்மனிதர், “பெருமளவு சேதங்களையும் மரணத்தையும் விளைவித்த நெப்போலியன் கூடவா சுவர்க்கம் செல்வார்? என்றார். மற்றும், பாப் பெருமானாரை கொலை செய்த நாஸிரிடின் ஷா கூடவா? எனக் கேட்டார். “அப்படியானால், யார்தான் நரகம் செல்வர்?” அதற்கு அப்துல்-பஹா, “அளவுக்கதிமான கேள்வி கேட்போர்” என சிரித்தவாறு பதிலளித்தார்.

வட கலிபோர்னியாவில் உள்ள போஷ் பஹாய் பள்ளியின் நிறுவனரான திரு ஜான் போஷ், அப்துல்-பஹாவைக் காண்பதற்காக நியூ யார்க் வந்திருந்தார். அவர் அப்துல்-பஹாவிடம் தாம் அவரைக் காண்பதற்காக கலிபோர்னியாவிலிருந்து நியூ யார்க் வரை 3,000 மைல்கள் பிரயாணம் செய்து வந்துள்ளதாகக் கூறினார். அதற்கு அப்துல்-பஹா, நான் உம்மைச் சந்திப்பதற்காக 8,000 மைல்கள் கடந்து வந்துள்ளேன் என்றார்!

ஒரு முறை, பிரிட்டிஷ் எழுத்தாளரும் மனிதாபிமானரும் ‘சிறார்களைப் பாதுகாப்போம்’ எனும் நிவாரண முகவாண்மையின் உடன்-நிறுவனருமான லேடி புலொம்ஃபீல்ட், அப்துல்-பஹாவைப் பார்த்து, அவருக்குப் பசியில்லை என்றாலும், அவர் கண்டிப்பாக உணவருந்த வேண்டும் என்றாராம். அதற்கு அப்துல்-பஹா சிரித்தவாறு, என்னதால் செய்தபோதிலும், பாரசீக மற்றும் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் கூட அவரை அசைக்க முடியவில்லை ஆனால் லேடி புலொம்ஃபீல்ட் அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்துவிட்டார் என அங்கிருந்த மக்களிடம் சிரித்தவாறு கூறினார்.

– H. M. Balyuzi, Abdu’l-Baha, p. 35.

அப்துல்-பஹாவின் நிருபங்களும் கடிதங்களும் பிஞ்சுப் பருவத்திலிருந்த பஹாய் சமூகத்தை ஒன்றுபடுத்தி வந்தன. அவற்றுள் சில நிருபங்கள் சற்று நகைச்சுவை கலந்தவை. ஒரு முறை, பாரசீகத்தின் இஸ்ஃபாஹான் நகர பஹாய் நிலையத்திற்குப் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்துல்-பஹாவிடம் ஒருவர் கூறினார். அப்துல்-பஹா அந்தப் பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் அவர் பஹாய் நிலைய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை தாம் அறிய வந்துள்ளதாகவும் அவரது பணியில் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார் எனவும் உறுதி கூறினார். அதே கடிதத்தில், அப்துல்-பஹா பஹாய்களின் சேவகர் என்பதை அப்பொறுப்பாளர் நினைவில் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதுடன், அப்பொறுப்பாளர் அப்துல்-பஹாவின் அந்தப் பணியை அபகரித்துக்கொள்ளக் கூடாது எனவும் அவர் அவ்வாறு செய்தால் அப்துல்-பஹா அவரை நீதிமன்றத்தில் நிறுத்திவிடுவேன் என (நகைச்சுவையுடன்) எச்சரித்தார்.

மற்றொரு முறை, யாஸ்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அப்துல்-பஹாவுக்கு விஜயம் செய்து, தாம் சமயத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வதாகவும் ஆனால் ஓர் உயிர்த்தியாகியாகிட மட்டும் விரும்பவில்லை எனக் கூறினாராம். ஆரம்பகாலங்களில் பாரசீக நாட்டில் ஒரு பஹாயாக இருப்பது பெரும்பாலும் மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாக இருந்தது. பல பஹாய்கள் சித்திரவதைக்கு உட்பட்டு தங்கள் உயிரை இழந்திருந்தனர். தாம் ஒரு பஹாய் எனும் முறையில் உயிரிழக்கமாட்டார் என அப்துல்-பஹா தமக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக அம்மனிதர் உணர்ந்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு அம்மனிதர் சந்தையில் இருந்தபோது, யாரோ ஒருவர் அவரை ஒரு பஹாய் என அடையாளங்கண்டும் அதனால் ஒரு கூட்டம் அவரை விரட்டவும் ஆரம்பித்தது. ஓடிய போது, அவர் நகரின் எல்லையை விட்டு மலைகளை நோக்கி ஓடினார். அப்போது அவர் அப்துல்-பஹாவை நினைத்துக்கொண்டு, “என்னை ஓர் உயிர்த்தியாகிட விடமாட்டீர் என வாக்குறுதியளித்தீரே, என்னவாயிற்று!” என்றார். அக்கணம் அவர் தடுமாறி ஒரு குழிக்குள் விழுந்துவிட்டார். கூட்டம் அவரைக் கடந்து சென்றுவிட்டது. உடனே அம்மனிதர் மேல்நோக்கிப் பார்த்து, “நல்ல வேளை நான் உங்களை ஞாபகப்படுத்தினேன்” என்றார்.

பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபென்டி, பஹாய்கள் சிடுசிடுப்பையும் சதா கவலை தோய்ந்த  முகத்தையும் காட்டிக்கொண்டிருக்கலாகாது எனக் கூறி, மகிழ்ச்சியும் ஹாஸ்யமும் பஹாய் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்றார். அப்துல்-பஹா தாமே அந்த அறிவுரைக்கு உதாரணமாக இருந்தார்.

வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம் – 3


கடவுள் அருட்பெருஞ்சோதியானவர்
(அருட்பெருஞ்சோதி அகவல்)

இறைவன் அருட்பெருஞ்சோதி என்னும் நம்பிக்கையின் விளைவாகப் பாடிய அருட்பெருஞ்சோதி அகவல் அருட்பெருஞ்சோதி என ஆரம்பித்து அருட்பெருஞ்சோதி என முடிகிறது. பழங்காலம் தொட்டு இந்நாள் வரை தமிழில் பாடப்பெற்ற பாடல்களிலேயே மிகவும் நீண்டது இதுவேயாகும். அருட்பெருஞ்சோதி என்னும் வாக்கியம் 1000 முறைகளுக்கு மேல் இப்பாடலில் வருகிறது. இராமலிங்கரின் எழுத்துப் படைப்புக்களிலேயே இந்த அகவலே நடு மையமாக விளங்குகிறது. இவ்வருட்பெருஞ்சோதியான ஆண்டவர், பூமியில் கூடிய விரைவில் தோன்றி மக்களை ஆட்கொள்வார் என இராமலிங்கர் வாக்களிக்கின்றார். பின்னாளில் அவர் எழுத்துக்கள் பெரும்பாலும் இவ்வருகை தொட்டே எழதப்பட்டுள்ளன. இவ்வருகைக்காக மக்கள் அனைவரும் அருளோடும் தூய சிந்தையுடனும் இருக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.

சிறு தெய்வ வழிபாடு கூடாது

சிறு தெய்வ வழிபாடு அறவே கூடாது என்று வள்ளலார் வலியுறுத்துகின்றார். சிறு தெய்வங்கள் இறைவனுடன் ஒப்பிடுகையில் தூசியைப் போன்றவர்கள் என்றும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளும் இச்சிறு தெய்வக் கூட்டத்தினர் என்பது வள்ளலாரின் கூற்று. (இங்கு ருத்திரன் என்பது சிவம் அல்லவென்றும் விளக்குகிறார். சிவன் முழுமுதற்பொருள், ருத்திரன் அவருடைய அம்சம்) இவர்கள் மூவரும் ஒரு காலத்தில் சமயத் தலைவர்கள். அருட்பெருஞ்சோதியரை வேண்டிக் கொண்டு, பிரம்மா சிருஷ்டிக்கும் சக்தியையும், விஷ்ணு சிருஷ்டி, காத்தல் சக்தியையும், ருத்திரன் சிருஷ்டி, காத்தல், அழித்தல் என்ற மூன்று சக்தியையும் பெற்றதாக வள்ளலார் கூறுகிறார். இவர்களை வணங்குவதால் இவர்கள் கொண்டுள்ள அற்பசக்திகளே வணங்குவோரைச் சாறும் என்றும் எல்லாம் வல்ல அருட்சோதி ஆண்டவரை வணங்குவதே எல்லா அருளையும் பெறும் மார்க்கம் என வள்ளலார் அறிவுறுத்துகிறார்,

இச்சிறு தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி கொடுப்பதையும் வள்ளலார் வன்மையாகக் கண்டிக்கின்றார்.

புலால் உண்ணாமை

சன்மார்க்கச் சங்கத்தினர் சைவ உணவே உட்கொள்ளவேண்டும் என்பது வள்ளலாரின் மற்றுமொரு கொள்கை. காலப்போக்கில் புலால் உணவு கைவிடப்படும் என அவர் மேலும் கூறுகிறார்.

சாதி சமய வேற்றுமைகள் கூடாது

இக்கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பிரார்த்தனையை வள்ளலார் ஓதுகின்றார்:

எல்லாம் உடைய அருட்பெருஞ் சோதி அற்புதக்கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார கங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரம முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதிற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் சோதியாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம்!
– சுத்த சன்மார்க்க சத்திய சிறுவிண்ணப்பம்.

மேலும்,

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே

என்றும் ஜாதி சமய வேறுபாட்டால் அழிவை நோக்கிச் செல்லும் மக்களுக்கு உபதேசிக்கின்றார். இக்காலத்தில் சகலவிதமான தத்துவங்கள் யாவற்றையும் அருட்பெருஞ்சோதியர் பயிர்களுக்கு எருவாக மாற்றி சுத்த சன்மார்கமே நிலைக்கச் செய்துள்ளார் எனவும் மார்க்கங்கள் எல்லாம் ஒன்றாகும் என்றும் சகல மார்க்கங்களையும் தாம் மதிப்பதாகவும் இராமலிங்கர் கூறுகிறார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை

இக்கோட்பாடு, எல்லா உயிரும் தன்னுயிர் போல எண்ண வேண்டும் எனவும் தளக்கெதுவோ அதுவே பிற உயிர்க்கும் என்னும் கருத்தைக் கொண்டது. இச்சிந்தை கொண்டவர்களுக்குச் சேவை செய்ய ஏங்கினேன் என்கின்றார் வள்ளலார். இச்சிந்தை கொண் டோரின் உள்ளங்கள்தான் இறைவன் திருவிளையாடல் நடைபெறும் தளம் எனவும் மேலும் சொல்கிறார்.

ற்போதுள்ள சமய நூல்கள் முடிவான உண்மையை தெரிவிப்பன அல்ல

இதையொட்டி இராமலிங்கர் கூறுவது, ‘இதற்கு மேற்பட, நாம் முன் பார்த்தும் கேட்டும் லதியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் . அணுமாத் திரமேனும் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை (மனித உடம்பின் அமைப்பை) அண்டத்தில் (தெய்வலக்ஷணமாக) காட்டிளார்கள். யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி யென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அவற்றில் லக்ஷியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் லக்ஷியம் போய்விட்டால் நீங்கள் அடையப்போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும்.

…… இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக்குறியாகக் குறித் திருக்கிறதே யன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் – அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆள்மானுபவத்தை பெற்றுக்கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில், நமக்குக் காலமில்லை. மேலும் இவைகளுக்கு சாக்ஷியாக நானே யிருக்கிறேன், நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வள வென்று அளவு சொல்லமுடியாது.

…….. அந்த லக்ஷியம் இப்போது எப்படி போய்விட்டது. பார்த்திர்களா!

…….ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமே லேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருத்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.

இறந்தவரை புதைத்தலல்லாது எரிக்கக்- கூடாது.

பிணத்தை எரிப்போரைப் பார்த்து ‘பிணங்கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்க ளேநீர்’ என்று திட்டுகிறார் வள்ளலார். பரன் அளிக்கும் தேகம் இது, சுடுவது அபராதம், சுட்டால் அது தான் கொலையாம்’ எனவும் கூறுகிறார்.

இறந்தவர் உயிரபெற்றெழுவர்

இக்கோட்பாடு ‘ரிசரெக்ஷன்’ எனும் கிருஸ்தவ கோட்பாட்டை ஒட்டியுள்ளது. அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இவ்வுலகில் தோன்றும் தருணம் இது. அப்போது இறந்தவர் உயிர்பெற்று எழக்காணலாம் என இராமலிங்கர் கூறுகிறார்.

பிற போதனைகள்

சன்மார்க்கம் விளங்கும் காலம் இக்காலமென்பது தெரிந்த தெரியாத இறந்தவர்களெல்லாம் உயிர்பெற்று சங்கத்தின் உறுப்பினர்களாகும் காலம். இதையொட்டி கலியுகம் என்பது 5000 வருடங்களே என்றும் சமஸ்கிருத பண்டிதர்கள் கூறுவது போல் 4,32,000 வருடங்கள் அல்லவென்று கூறுகிறார். அவருடை சீடர்கள் இதைக் குறிப்பிடுகையில் (1882ல்) இன்னும் 10 வருடங்களில் முழுதாக கலி திர்ந்துவிடும் எனக்கூறுகின்றனர்.

(தொடரும்)