மாஸ்டரவர்களின் திருமுன்னாகிய திருவாசலில் நான் வாழ்ந்த பல வருடகாலத்தில், பொங்கியெழும் இன்னல்கள் மற்றும் துன்பப் புயல்களினால் உருவாக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அந்தப் புனிதப் பேராளுமையினால் எவ்வாறு தீர்க்க முடிகிறது என்பதைப் பற்றி நான் அடிக்கடி யோசித்தேன். சிறிதோ பெரிதோ, எந்த விஷயமாயினும் தமக்கு வேறு எந்த அலுவலே கிடையாது எனத் தோன்றச் செய்யும் கௌரவம், கட்டுப்பாடு மற்றும் சிதறாத கவனத்துடன் அவரால் எப்படி செயல்பட முடிகிறது?
திரண்டுவரும் விதியாகிய வெள்ளப்பெறுக்கு வேகமாக அணுகிவரும் வேளை, கொந்தளிக்கும் இன்னல்புயல் மிரட்டிய போது, மோதல்களுக்குட்பட்ட கடவுள் சமயம் என்னும் மரக்கலம் கொந்தளிக்கும் அலைகளினால் மூழ்கிடுமோ எனத் தோன்றியபோது, அந்தத் தெய்வீக அன்பரின் வாழ்க்கையே அபாயத்திற்குள்ளாகிய போது–நான் முற்றிலும் குழப்பமடைந்து, எல்லா சூழ்நிலைகளையும் கட்டுக்குள் கொண்டுவரவும் எல்லா துன்பங்களையும் எதிர்கொள்ளவும் அவருக்குக் கைகொடுத்த, அவரது ஒவ்வொரு செயலையும் தனிப்படுத்திக் காட்டிய, அவரின் உள்ளார்ந்த சக்திகளுக்கும் அப்பாற்பட்டு—(அவரது) யுக்தியைப் புரிந்துகொள்வதற்கு ஆவலுற்றேன். ஒரு நாள், இந்தக் குழப்பத்தை அவர் தமது அற்புதமான வழியிலேயே தீர்த்துவைத்தார்; இந்த நெடுங்கால மர்மத்திற்கான பதிலை என்னுடன் பகிர்ந்துகொண்டார். பல ஆண்டுகளாக எந்த விளக்கத்திற்காக நான் ஏங்கிவந்தேனோ, அந்த விளக்கமானது குறிப்பிடத்தக்கதும் பொக்கிஷம் போன்றதுமாக விளங்கியது. அப்துல்-பஹா கூறியவற்றை வைத்து நான் நுறு புத்தகங்கள் எழுதினாலும் இந்த ஒரு விடையிருப்பே அவருடைய வார்த்தைகளின் எடுத்துக்காட்டாகத் தனித்து நிற்கும். அவர் எனக்கு வழங்கிய அதே முறையில், அதை ஒரு விலைமதிப்பற்ற ஒரு பரிசாக, என் மதிப்புமிக்க வாசகர்களுக்கு இப்போது நான் வழங்குகிறேன்.

காரிருள் சூழ்ந்த ஓரிரவு, வரவேற்பறையின் நீண்ட நடைபாதையில் நாள் முழுவதின் (மன)அழுத்தங்களைக் குறைத்திட, அவர் மேலுங் கீழும் ஓய்வாக நடந்தவண்ணமாக இருந்தபோது, பின்வரும் கேள்வியை அவர் என்னிடம் கேட்டார். அப்போது நான் மட்டுமே அவரது திருமுன் இருந்தேன், சுமார் ஒரு மணி நேரம் அவருடைய தெய்வீகச் செப்புதல்களைச் செவிமடுக்கும் தனிச்சிறப்பான பாக்கியம் பெற்றேன்.
“நான் இந்த சமயத்தை எப்படி நிர்வகிக்கின்றேன் என்பது உனக்குத் தெரியுமா?”
பின்னர் அவர், “நான் மரக்கலத்தின் பாய்களை உறுதியாக இழுத்துப்பிடித்து கயிற்றை இருகக் கட்டுவேன். நான் செல்லவேண்டிய திசையைத் தீர்மானிப்பேன், பின்னர் என் சொந்த சித்தத்தின் சக்தியைக் கொண்டு சக்கரத்தைப் பிடித்து புறப்படுகிறேன். புயல் எத்துணை தீவிரமாக இருப்பினும் கப்பலின் பாதுகாப்பிற்கான மிரட்டல்கள் என்னதான் அபாயகரமாக இருந்தபோதும் செல்திசையில் நான் மாற்றம் ஏதும் செய்வதில்லை. நான் குழப்பமோ மனத்தளர்வோ அடைவதில்ல; என் இலக்கை அடையும்வரை நான் விடாமுயற்சியுடன் செயல்படுவேன். எதிர்படும் ஒவ்வொரு ஆபத்தின்போதும் நான் தயக்கம் காட்டி, திசைமாற்றம் செய்வேனாயின் கடவுள் சமயத்தின் மரக்கலம் அதன் இலக்கை சென்றடைவதில் தோல்வியே காணும்.” நான் ஒரு புதிய கொள்கையைக் கண்டுணர்ந்தேன்; மாஸ்டரின் வழிமுறைகளைப் புரிந்துகொண்டேன். கடவுளுடைய மரக்கலத்தின் பாய்கள் இறுகக் கட்டப்பட்டுள்ளதையும் அதன் சக்கரம் சக்திவாய்ந்த கரங்களில் இருப்பதையும் நான் உணர்ந்தேன்.
கோட்டையை நீர் பாதுகாத்திடும் போது ஏனைய நாங்கள் பயப்பட காரணமும் உண்டோ?
சக்கரம் நோவா’வின் கைப்பிடியில் இருக்கும் போது சமுத்திரத்தின் அலைகள் கண்டு எவர் பயப்படுவர்.
தேவையற்ற கவலை அல்லது துக்கத்தின் தாக்குதலுக்கு என்னை அனுமதியாமல் இருக்கவேண்டுமென நான் அங்கு அப்பொழுதே முடிவெடுத்தேன்; அதற்கு மாறாக, இதயங்கள் அனைத்தின் பேராவலானாவரில் என் நம்பிக்கையை வைத்து, அவற்றின் இயல்பினால் சமயத்தின் மேம்பாட்டிற்கு அவை உதவுவதன் காரணமாக, இனி நிகழும் சம்பவங்கள் அல்லது விபத்துகளை மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்குமான தறுவாய்களாகக் கருதிட நான் உறுதிபூண்டேன்.
– அக்காநகரில் ஒன்பது வருட நினைவுகள், பக். 186-187, டாக். யூனெஸ் அஃப்ருக்தே