
16 ஜூன் 2022
(கூடுதல் படங்களுக்கு https://news.bahai.org/story/1599/ செல்லவும்)
BIC நியூயார்க், 16 ஜூன் 2022, (BWNS) – “மனிதகுலத்தின் சொந்த விதியும் கிரகத்தின் விதியும் பிரிக்கமுடியாமல் பின்னிப்பிணைந்துள்ளன என்னும் உண்மையின் அடிப்படையில் மானிடம் செயல்படுமா? அல்லது அதைச் செயல்பட தூண்டுவதற்கு இன்னும் பெரிய பேரழிவுகள் தேவைப்படுமா? என பஹாய் சர்வதேச சமூகம் (BIC) ஸ்டாக்ஹோம்+50 நிகழ்வில் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்புகிறது.
“பருவநிலை மாற்றம் மற்றும் உலகின் பிற முக்கிய நெருக்கடிகள் மனிதகுலத்தை ஓரே இனமெனும் அதன் தனித்தன்மையை அங்கீகரிக்க நிர்பந்திக்கின்றன. ஆதலால், இன்றைய தேவைகளுக்கு ஏற்ப புதிய அமைப்புகள் தேவையாகின்றன” என BIC’இன் பிரதிநிதி டேனியல் பெரல் கூறினார். ஸ்வீடன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் இரண்டு ஸ்வீடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொதுமை சமூக அமைப்புகளுடன் BIC’யினால் இணைந்து நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் சீர்குலைவு அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் வாசிப்பை இந்த அறிக்கை முன்வைத்தது. பல தசாப்தங்களாகக் குவிந்த அனுபவத்தின் மூலம் “சர்வதேச சமூகம் ஒரு சிறந்த உலகத்தை கற்பனை செய்தது மட்டுமல்லாமல், முன்னர் பயணிக்காத பாதைகளில் செயல்படவும் முயன்றது.”
அதன் மையத்தில், இந்த அறிக்கை மனிதகுலம் எதிர்கொள்ளும் மைய சவால்களில் ஒன்றாக எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த இலக்கை நோக்கித் தங்கள் பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளின் முயற்சிகளால் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும் என BIC கூறுகிறது. இருப்பினும், மாற்றத்தின் வேகம் இந்தத் தருணத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உயரவில்லை.
“தேவையான அளவுகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு, மனிதகுல வளர்ச்சியின் தற்போதைய கட்டத்தால் கோரப்படும் விழுமியங்களைச் சுற்றி நாடுகளிடையே மிகவும் வலுவான ஒருமித்த கருத்து மற்றும் கூட்டு விருப்பம் தேவை” என அறிக்கை கூறுகிறது.
‘ஒரே கிரகம், ஒரே வாழ்விடம்’ ஆகியவற்றில் BIC ஆல் ஆராயப்பட்ட சில கருப்பொருள்கள் பின்வருமாறு: நிலையான சமூகங்களை நிர்மாணிக்கக்கூடிய ஒரே அடித்தளமாக மனிதகுலத்தின் ஒருமைப்பாடு என்னும் அடிப்படைக் கொள்கை; நீதியே செயல்முறையாகவும் விளைவுகளாகவும் இருத்தல்; கலந்தாலோசனை மற்றும் செயல்பாட்டில் ஒருமித்த கருத்தை வளர்த்தல்; மேம்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய கருத்துக்களை மறுவரையறை செய்தல்.
அறிக்கையில் வழங்கப்படும் பரிந்துரைகளில், மிகவும் நிலையான உலகை நிர்மாணிப்பதில் அரசாங்கத்தின் முக்கிய பங்கு பற்றிய சில பரிந்துரைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, உலகளாவிய வரி ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறை மற்றும் சட்டவிரோத நிதி ஓட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பானது நாடுகளுக்கு இடையிலான செல்வத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கலாம், மேலும், அவை உடனடியான மற்றும் எதிர்காலத் தேவைகளை நிவர்த்தி செய்ய வளங்களைச் சேகரிக்க அனுமதிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் முன்னாள் தலைவரான மரியா பெர்னாண்டா எஸ்பினோசா, “எதிர்காலத்திற்கான ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு விழுமியங்கள் அடிப்படையிலான பலதரப்பு அமைப்பு தேவை” என குறிப்பிட்டு, இந்த யோசனைகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “இது ஒரு சுருக்கமான அறிக்கை அல்ல. செல்வம் மற்றும் அதிகாரத்தின் மறுபகிர்வு மற்றும் பேராசையிலிருந்து ஒற்றுமைக்கு, தப்பெண்ணத்திலிருந்து பச்சாதாபம் மற்றும் இரக்கம், அலட்சியம் மற்றும் வெறுப்பிலிருந்து மனிதகுலம் மற்றும் இயற்கையின் மீதான தீவிர அன்புக்கு மாறுதல் தேவைப்படுகிறது.
ஒரே கிரகம், ஒரே வாழ்விடம் என்பது சுற்றுச்சூழலைப் பற்றிய உரையாடலில் BIC’இன் பங்களிப்பில் இது சமீபத்திய ஒன்றாகும். 2015’இல் பாரிஸில் நடைபெற்ற UNFCCC மாநாட்டின் 21’வது கூட்டம், 1992 ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு அல்லது “பூமி உச்சமாநாடு, 1972 ஆம் ஆண்டு மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அசல் மாநாடு ஆகியவற்றுக்கு மற்ற குறிப்பிடத்தக்க அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1599/