

24 ஆகஸ்ட்
BIC நியூ யார்க் – அரசாங்க அதிகாரிகள், சர்வதேச மற்றும் தேசிய செய்தி ஊடகங்கள் மற்றும் டஜன் கணக்கான முக்கிய பொதுமை சமூக நடவடிக்கையாளர்கள் மற்றும் தனிநபர்கள் இந்த மாதம் ஈரான் நாட்டு பஹாய்களின் தற்காப்பிற்கு விரைந்துள்ளனர். இந்த மாதம், சமூகத்திற்கு எதிரான அதிகரித்துவரும் ஒடுக்குமுறை மற்றும் அதிகாரபூர்வ வெறுப்புப் பிரச்சாரத்தால் தூண்டிவிடப்பட்ட அறிக்கைகள், செய்திகள் மற்றும் சமூக ஊடக இடுகைகள், அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோருகின்றன. ஜூலை 31-ஆம் தேதி இந்த ஒடுக்குமுறை, கைதுகளின் அலை மற்றும் வடக்கு ஈரானில் ரோஷான்கூ கிராமத்தில் வீடுகள் வன்முறையாக அழிக்கப்பட்டதுடன் தொடங்கியது.
இந்த நிகழ்வுகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான ஆதரவு அறிக்கைகள் குறித்த இணைய மற்றும் வழக்கமான ஊடக செய்திகளின் மூலம் கோடிக் கணக்கான மக்கள் சென்றடயைப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) சொந்த ட்விட்டர் கணக்கு அதன் அணுகல் மற்றும் துன்புறுத்தல்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் திறனில் ஒன்பது மடங்கு அதிகரிப்பைக் கண்டது. ரோஷான்கூவில் உள்ள தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால் வெளியேற்றப்பட்ட பஹாய்களில் பலரைக் காட்டும் ஒரு வீடியோ மட்டுமே, ஓர் ஒளிபரப்பாளரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 3.4 மில்லியன் முறை காணப்பட்டது மற்றும் பல தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
ஈரானின் மனித உரிமைகள் நிலைமை, மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் மற்றும் சிறுபான்மை பிரச்சினைகள் குறித்து சிறப்பு அறிக்கையாளர்களால் வழிநடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு–ஜாவித் ரஹ்மான், நஸிலா கானியா மற்றும் ஃபெர்னாண்ட் டி வாரென்னஸ் ஆகியோர்–ஆகஸ்ட் 22 அன்று ஈரானிய அதிகாரிகள் மத சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல் மற்றும் உபத்திரவங்கள் அடிப்படை மனித உரிமைகளை மறுப்பதற்கு மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியது.
“அதிகரித்து வரும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், பஹாய் சமய உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவது மற்றும் அவர்களின் சொத்துக்களை அழித்தல் அல்லது பறிமுதல் செய்வது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது திட்டமிட்ட அடக்குமுறை குறித்த கொள்கையின் அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளது” என நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த ஒடுக்குமுறை நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு பரந்த கொள்கையின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்டனர்.
ஈரான் நாட்டில் நிலவும் நிலைமை உலகெங்கிலும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்களாலும் உரைக்கப்பட்டது.
நியூயார்க் டைம்ஸ் இந்த அடக்குமுறைகள் ஒரு “பரந்த ஒடுக்குமுறைக்கு” சமம் என கூறியுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் வாஷிங்டன் போஸ்ட் உட்பட பரந்த அளவில் பிரசுரம் செய்யப்பட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் பஹாய்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டிருந்தபோதிலும், “பஹாய்கள் சட்டவிரோதமாக எதையும் செய்கின்றனர் என்னும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக ஈரான் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை” என கூறியது.
Agence-France Presse நிலைமையை ஒரு “புதிய உச்சம்” என அழைத்ததோடு, பஹாய்களுடைய “சமயத்தின் கோட்பாடுகள் “ஆக்கபூர்வமான மீள்ச்சித்திறம்” என அழைக்கப்படும் ஒரு மோதல் அல்லாத அணுகுமுறையை ஊக்குவிப்பதாகக் கூறி, ஈரான் நாட்டு பஹாய்கள் அந்நாட்டின் நன்மைக்காக உழைக்க விரும்புவதன்றி விரும்புவதாகவும், அதன் தலைமைக்கு எதிராக செயல்பட அல்ல என வலியுறுத்துவதாகவும் தெரிவித்தது. அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவையும் நிலைமையைப் பற்றிய முக்கிய செய்திகளை வெளியிட்டன.
பிரிட்டனின் டைம்ஸ் மற்றும் டெலிகிராப் பத்திரிகைகளில் பல ஒளிபரப்புகளின் போது பிபிசியில் (ஒளிபரப்பு 1, ஒளிபரப்பு 2), ஜேர்மனியின் Deutsche Welle (கட்டுரை 1, கட்டுரை 2), ஜெருசலேம் போஸ்ட், புதிய அரபு, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் (கட்டுரை 1, கட்டுரை 2) மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸில் இரண்டு முறை இரண்டு கட்டுரைகளில் கவரேஜ் வெளிவந்தது. பிரெஞ்சு செய்தித்தாள்களான Le Figaro மற்றும் Le Monde ஆகியவையும் நிலைமையைப் பிரசுரித்தன. Le Monde-யில் வெளிவந்துள்ள கட்டுரை, அவற்றின் அறிக்கைகளில் மற்ற பல பத்திரிக்கைகள் போலவே ஈரானின் புவியரசியல் நிலைப்பாட்டின் பின்னணியில் சமீபத்திய துன்புறுத்தல்களை அறிவித்தது.
Toronto Star-இல் வந்துள்ள ஒரு அறிக்கை சமீபத்திய நிகழ்வுகளை ஈரானில் பஹாய்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டு வருவது, மற்றும் ஒரு தூரக்-கல்வி கற்கும் ஈரானிய பஹாய் மாணவர் அண்மையில் காணாமல் போனதுடன் தொடர்புபடுத்தியுள்ளது.
ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தால் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட பெரிதும் ஏளனத்துக்குரிய அறிக்கை, வெறுப்பூட்டும் பேச்சின் வாயிலாக பஹாய்களை “காலனித்துவம்” எனவும் “மழலையர் பள்ளிகளுக்குள் ஊடுருவுகின்றனர்” எனவும் குற்றம் சாட்டி, அதைத் தொடர்ந்து சிறையிலடைப்புக்கள், கைதுகள், பின்னர் வீடுகள் மற்றும் வணிகங்கள் மீதான சோதனைகள். இதனால் அசாதாரணமான அளவு ஆதரவும் செய்திகளும் வெளிவந்தன.
அது முதல் ஈரானிய அதிகாரிகள் 200 தனித்தனி சம்பவங்களில் பஹாய்களைக் குறிவைத்து கைதுகள், தடுப்புக்காவல்கள், வீட்டுப் படையெடுப்புகள் மற்றும் தேடுதல்கள், வீடுகளை அழித்தல் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தல், உயர்கல்வி மறுப்பு, மின்னணு கணுக்கால் குறியிடுதல், அதிகப்படியான ஜாமீன்கள், அடிதடிகள் மற்றும் கைதிகளுக்கு மருந்துகளை மறுத்தல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர்.
BIC-யின் பிந்தைய வெளிப்பாடு, அதே நாளில், ஈரானிய பாதுகாப்பு ஏஜன்டுகள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பஹாய் சமூகத்தின் மீது குற்றம் சாட்டிட ஒரு மழலையர் பள்ளியில் ஒரு ஜோடிக்கப்பட்ட காட்சியை அரங்கேற்றி படமாக்கினர் என்பதை அம்பலப்படுத்தியது.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி, 200 ஏஜண்டுகள் வரை மஸிந்தரானில் உள்ள ரோஷான்கூ கிராமத்தை சீல் வைத்தனர், அங்கு ஏராளமான பஹாய்கள் வசிக்கின்றனர், மேலும் ஆறு வீடுகளை இடிக்க கனரக வாகணங்களைப் பயன்படுத்தினர். பஹாய்களுக்குச் சொந்தமான சுமார் ௨௦ ஹெக்டேர் சொத்துக்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
ஐ.நா.வுக்கான BIC-யின் முதன்மை பிரதிநிதி பானி டுகால் கூறுகையில், அனைத்துலக மற்றும் ஈரானிய ஆதரவானது ஈரானிய அரசாங்கம் பஹாய்களை ஒழித்துக் கட்டவும் தனிமைப்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார்.
“மூன்று வாரங்களாக அனைத்துலக சமூகமானது, ஈரானிய அரசாங்கம் பஹாய்கள் மீதான அதன் அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அச்சமூகத்திற்கு எதிரான அதன் வெறுப்புப் பிரச்சாரத்தில் புதிய தாழ்வு நிலைக்குச் சென்று, கடந்த காலத்தில் உயர்கல்வியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு மேலாக, இன்னும் கூடுதலான இளம் பஹாய்களுக்கு பல்கலைக்கழகத்தில் சேரும் உரிமையை மறுத்துள்ள நிலையில்,. “ஈரானிய பல்கலைக்கழகங்களில் சமீபத்திய சேர்க்கை மீண்டும் பஹாய்களை விலக்கியது என்ற உண்மையையும் குறிப்பிட்டு மிஸ் டுகால் கூறினார். ” இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும், இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.”
அமெரிக்காவில், 30-க்கும் மேற்பட்ட பொதுமை சமூக அமைப்புக்களும் மனித உரிமைத் தலைவர்களும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஒரு கடிதம் எழுதினர், அதில் அவர்கள் ஜனாதிபதியை “ஈரான் பஹாய்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களின் அளவுகள் அதிகரித்து வருவது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலைக்கு குரல் கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர், மேலும் “வேண்டுமென்றே ஒரு வெளிப்படையான வடிவம் ஈரானில் உள்ள பஹாய் சமூகத்தின் மீதான அடக்குமுறையை கணிசமாக அதிகரிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என கூறுகிறது” எனவும் கூறினார்.
மத சுதந்திரத்திற்கான அமெரிக்க (ஐ.அ) தூதர் ரஷாத் ஹுசைன், “ஈரான் அனைத்து ஈரானியர்களின் மத சுதந்திரத்தை அல்லது நம்பிக்கையை மதிக்கும் அதன் சர்வதேச கடமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், பஹாய்களின் மீதான சோதனைகள், கைதுகள் மற்றும் அநீதியான சிறைவாசம் ஆகியவற்றின் தீவிரமடைந்து வரும் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனவும் கூறினார்.
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் குறித்த நாட்டின் வெளியுறவுத் துறையின் பிரிவு, “மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான அனைவரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும்” என ஈரானுக்குக் கோரிக்கை விடுத்தது, இது வெளியுறவுத்துறை துணை செயலாளர் உஸ்ரா ஜெயாவால் மறு ட்வீட் செய்யப்பட்டது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) ஈரானிய அரசாங்கம் நாட்டில் மத சிறுபான்மையினர் மீதான அதிகரித்த ஒடுக்குமுறையை கண்டனம் செய்கிறது” என ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, அவ்வறிக்கையில் “ஏராளமான பஹாய்கள்” துன்புறுத்தப்படுவதையும் குறிப்பிட்டுள்ளது.
“பாதிக்கப்படக்கூடிய மத சிறுபான்மையினர் மற்றும் அமைதியான அதிருப்தியாளர்களை குறிவைப்பதன் மூலம் ஈரான் அரசாங்கம் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உருவாக்க முடியாது, இருப்பினும் அந்த நாடு மத சுதந்திரத்தின் இந்த திகிலூட்டும் மீறல்களைத் தொடர்கிறது” என (USCIRF) ஆணையர் ஷரோன் க்ளீன்பாம் கூறினார்.
நீண்டகாலமாக ஈரானில் பஹாய்களின் உரிமைகளை ஆதரித்து வந்துள்ள லக்ஸம்பர்க்கின் வெளியுறவு மந்திரியான ஜீன் அஸ்ஸல்போன், தமது அரசாங்கத்தின் கவலையை வெளிப்படுத்தியதோடு, “மனித உரிமைகளை மதித்து, அனைத்து பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான அதன் கடப்பாடுகளை நிலைநிறுத்துமாறும்” ஈரானுக்குக் கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய அரசின் விம்பிள்டன் அஹ்மத் பிரபு, மனித உரிமைகள் மற்றும் மதம் மற்றும் சமய சுதந்திரம் மற்றும் நம்பிக்கைக்குப் பொறுப்பான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக அமைச்சர், கைதுகள், வீடுகள் அழிக்கப்படுவது மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்வது மற்றும் யாரானின் முன்னாள் உறுப்பினர்களை குறிவைப்பது குறித்து இங்கிலாந்து “ஆழ்ந்த கவலை” கொண்டுள்ளது என கூறினார். “மத சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலை 2022 இல் பொறுத்துக்கொள்ள முடியாது … ஈரானை பொறுப்பேற்க வைக்கவும், ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகள் கவலைகளை எழுப்பவும் எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், “எனவும் அவர் கூறினார்.
கனடாவின் மனித உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் உள்ளிணைவு அலுவலகம், “பஹாய்களை நசுக்கவும் துன்புறுத்தவுமான திட்டமிட்ட பிரச்சாரம்” குறித்து தனது கவலையை ட்வீட் செய்துள்ளது, மேலும் “ஈரான் மனித உரிமைகளை மதிக்கவும், மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து பாகுபாடுகளையும் அகற்றவும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கடமைகளை நிலைநிறுத்தவும் வேண்டும்” எனவும் கூறியுள்ளது.
மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான இங்கிலாந்தின் தூதரும் சர்வதேச மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான ஃபியோனா புரூஸ் MP., மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் 18-வது பிரிவு “தெளிவானது” எனவும், நம்பிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் வெளிப்படுத்தும் உரிமை “எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும்” எனவும் ட்விட்டரில் கூறினார்.
ஜெர்மனியின் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான தூதர் ஃபிராங்க் ஷ்வாப், ட்விட்டரில், பஹாய்கள் “அபத்தமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் … சிறைப்படுத்தப் பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும், என கூறியுள்ளார்.
பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க பிரதிநிதிகளும் அடக்குமுறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்புக் குரலை அதிகரித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெட் டியூட்ச், தான் அறிமுகப்படுத்திய ஒரு மசோதாவை நிறைவேற்றுமாறு பிரதிநிதிகள் சபையை வலியுறுத்தினார், அது “பஹாய்களின் மீதான ஈரானின் அடக்குமுறையைக் கண்டிக்கிறது மற்றும் பஹாய்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நேரடி பொறுப்பான ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஜனாதிபதியையும் வெளிவிவகாரச் செயலாளரையும் வலியுறுத்தினார்.”
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான ரூத் ஜோன்ஸ் எம்.பி., வீரேந்திர சர்மா எம்.பி., மற்றும் டேவிட் ஆல்டன் பிரபு ஆகியோரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் லாம்யா கட்டோர், ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர், பஹாய்கள் மீதான துன்புறுத்தல் “மிகவும் சிக்கலானது” எனவும் பல தசாப்தங்களாக நடந்து வருவதாகவும் கூறினார்.
பிரேசில் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர், Frei Anastácio, தனது “பஹாய்களுடனான ஐக்கியத்தை வெளிப்படுத்தினார்… அவர்கள் அனுபவிக்கும் தாக்குதல்கள் குறித்தும்” ஈரான் அரசாங்கம் “மனித உரிமைகள் உடன்படிக்கைகளை மதிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தும் அதே நேரத்தில் பிரேசில் அரசாங்கத்தை இதில் தலையிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
சர்வதேச மன்னிப்புச் சபையும் ஓர் அவசர நடவடிக்கையை வெளியிட்டது, அதில் ஈரானிய பஹாய்கள் “அவர்களின் மனித உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன” என கூறியதுடன், தேசிய பொதுமன்னிப்பு அத்தியாயங்களை ஈரானின் நீதித்துறையின் தலைவருக்கும் இரண்டு அரசு வழக்கறிஞர்களுக்கும் எழுதுமாறு கேட்டுக்கொண்டது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரான கென்னத் ரோத், நெருக்கடி வெடித்தபோது, ட்விட்டரில் ஆங்கிலத்தில் செய்திகளை முதலில் வெளியிட்ட அனைத்துலக மட்டத்தினருள் ஒருவராக இருந்தார்.
செமிட்டிஸ எதிர்ப்பு, தீவிரவாதம், வெறுப்பு மற்றும் மதவெறி ஆகியவற்றைக் கையாளும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மற்றும் அனைத்துலக பொது சமூக அமைப்பான அவதூறு எதிர்ப்பு லீக்கின் மத்திய கிழக்கு சிறுபான்மையினர் மீதான பணிக்குழு, ஈரானிய அரசாங்கம் ஈரானிய ஆட்சியால் “நீண்டகாலமாக அவதூறு செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு வரும்” ஈரானிய பஹாய்களுக்கு எதிராக “நடப்பிலிருக்கும் மிருகத்தனத்தை” நிரூபித்துள்ளது என அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
“ஈரான் அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் இருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான கடுமையான மற்றும் அதிகரித்து வரும் நடவடிக்கைகளில் இந்த தாக்குதல்கள் சமீபத்தியவை, கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டதை விட அதிக அளவு அடக்குமுறையைக் குறிக்கின்றன” என அந்த அறிக்கை கூறியது.
மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாடி மற்றும் அஃபிஃப் நயேமி ஆகியோர், கலைக்கப்பட்ட யாரானின் மூன்று முன்னாள் உறுப்பினர்கள், அல்லது ஈரானின் “நண்பர்கள்”, 2008 வரை ஈரானிய பஹாய் சமூகத்தின் முறைசாரா தலைமைக் குழுவாக இருந்த, கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இவர்கள் மூவரும் 2018-ஆம் ஆண்டு விடுதலை ஆவதற்கு முன்பு ஒரு தசாப்தம் சிறையில் கழித்திருந்தனர்.
எழுத்தறிவு வெளிப்பாட்டு சுதந்திரக் குழுவான PEN இன்டர்நேஷனல் மற்றும் அதன் ஆஸ்திரிய, ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் நோர்வே அத்தியாயங்கள், மஹ்வாஷ் சபேத்தின் கைது குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தின. சிறையில் இருந்த முந்தைய பத்தாண்டுகளில் கவிதை எழுதிய திருமதி சபெட், 2017-ஆம் ஆண்டில் ஆங்கில PEN-ஆல சர்வதேச தைரிய எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
கனடாவின் மனித உரிமைகளுக்கான ராவுல் வாலன்பெர்க் மையமும் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் சமீபத்திய நிகழ்வுகள் “ஈரானில் பஹாய்களுக்கு எதிரான ஈரானிய ஆட்சியின் நீண்டகால வெறுப்பு மற்றும் அடக்குமுறையை ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடி என பார்க்கின்றன” என கூறியது, ஈரானின் 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இதுபோன்ற குற்றங்களுக்காக எவரும் கைது செய்யப்படவோ அல்லது வழக்குத் தொடரப்படவோ இல்லை” என ஓர் பயமற்ற கலாச்சாரத்தில்” “தடையின்றி” இது தொடர்ந்துள்ளது.
ஈரானிய சிவில் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும், சமூக மற்றும் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கார்ட்டூனிஸ்டுகள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள், மத அறிஞர்கள் மற்றும் ஒரு சில மதகுருமார்கள், பத்திரிகையாளர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் மனசாட்சிக் கைதிகள், பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மத அறிவாளர்கள் மற்றும் சமூக மற்றும் அரசியல் விமர்சகர்கள், மற்றும் நூறாயிரக்கணக்கான பிற ஈரானியர்கள்.ஆகியோரிடமிருந்தும் ஒற்றுமைக்கான முன்கண்டிராத அழைப்புடன் இந்த ஆதரவை வழிநடத்தியது.
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ஈரானியர்கள் அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு, “பஹாய்களின் பொது மற்றும் மனித உரிமைகள் என வரும்போது, நாங்கள் எங்களையும் பஹாய்கள் என்றே கருதுகிறோம்” எனப் பிரகடனம் செய்தனர்.
கிளப்ஹவுஸில் உள்ள பல குழுக்கள் பஹாய் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்கு விருந்தளித்தன, அவர்கள் பத்தாயிரக்கணக்கான பார்வையாளர்களுக்காக, பஹாய்களின் நிலைமை ஏன் அனைத்து ஈரானியர்களையும் கவலைக்குள்ளாக்கியது.என்பதை விவாதித்தனர்.
ஒரு வியத்தகு ஒற்றுமை நடவடிக்கையில், மனித உரிமை ஆர்வலர்கள், நண்பர்கள் மற்றும் ஈரானுக்குள் உள்ள பஹாய்களின் ஆதரவாளர்கள், பாரசீக மொழி ட்விட்டரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக டிரெண்டிங் ஆன #BahaisUnderMassiveAttacks மற்றும் #BeingBahaiIsNotaCrime ஹேஷ்டேக்குகளுடன் ஒரு ட்விட்டர் புயலை ஏற்பாடு செய்தனர், மேலும் பல மணிநேரங்களுக்கு பாரசீக மொழியில் முதல் இரண்டு டிரெண்டிங் ஹேஸ்டேக்குகளாகவும் அவை இருந்தன
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மனித உரிமைகள் வழக்கறிஞருமான ஷிரின் எபாடி மற்றும் புகழ்பெற்ற ஈரானிய மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மெஹ்ராங்கிஸ் கார் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர். வரலாற்றாசிரியர் அப்பாஸ் மிலானி ட்விட்டரில், பஹாய் சமயத்தின் தொடக்கத்திலிருந்தே, “பஹாய்களுக்கு எதிரான கொடிய வெறுப்பு மற்றும் அவர்களின் படுகொலை” என்று அவர் குறிப்பிட்டது மத தப்பெண்ணத்தில் வேரூன்றியுள்ளது என கூறினார்.
ஈரானில் மனித உரிமை செயற்பாட்டாளரான அராஷ் சதேகி, பஹாய்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரினார்.
ஈரானிய ஷியா மதகுருவான செயித் முகமது அலி அய்யாசி, “பஹாய்களின் வீடுகளை இடிப்பதை எந்த மதக் கட்டமைப்பு நியாயப்படுத்துகிறது?” என கேள்வி எழுப்பினார். … ஏற்கனவே தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்துள்ள குடிமக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நாம் இப்போது காண்கிறோம்.
ஈரானிய-அமெரிக்க எழுத்தாளரும், வர்ணனையாளருமான ரோயா ஹகாக்கியன், “என்றாவது ஒரு நாள் மற்றவர்கள் ஈரானைத் திரும்பிப் பார்ப்பார்கள், மிகவும் சோகமான கதையும் கூட மிகவும் எழுச்சியூட்டும் கதை- பஹாய்களின் கதைதான் என்பதைக் காண்பார்கள். 43 ஆண்டுகளாக வேறு எந்த சிறுபான்மையினரும் இவ்வளவு முறைமையுடன் தாக்கப்படவில்லை. ஆயினும்கூட, மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மைக்கு அவர்களை விட வேறு யாரும் வாதிடவில்லை.”
பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான ஜாவத் அப்பாஸி தவலாலி கூறுகையில், “பஹாய்’களில் மதகுருமார்கள், முல்லாக்கள் அல்லது முஃப்திகள் இல்லை. ஈரானிய ஆட்சி பஹாய் நம்பிக்கைகளைக் கண்டு அஞ்சுகிறது. நமது பஹாய் சக குடிமக்களின் குரலாக நாம் இருப்போம்.”
நியூசிலாந்தைச் சேர்ந்த ஈரானியரான பெஹ்ரூஸ் பூச்சானி, “பாகுபாடு என்னும் சொல் ஈரானில் பஹாய் சிறுபான்மையினரின் நிலைமையை போதுமான அளவு விவரிக்க முடியாது. அவர்கள் கடந்து வருவது பாகுபாடு அல்ல, மாறாக ஓரங்கட்டுதல், நாடுகடத்துதல் மற்றும் இறுதியில் அகற்றுதல் ஆகியவற்றிற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். பாரபட்சம் சமத்துவமற்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பொருந்தும், ஆனால் பஹாய்களுக்கென வரும்போது, அவர்களை ஒழிப்பதே குறிக்கோளாகும்.”
ஜெர்மனியில் ஈரானிய பத்திரிகையாளரான மரியம் மிர்ஸா கூறுகையில், “ஈரானிய பஹாய்களின் தற்போதைய சூழ்நிலையில் நாங்களும் எங்கள் பெற்றோர் மற்றும் எங்கள் பெற்றோர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒரு பங்கைக் கொண்டுள்ளோம். நமது வரலாற்றுக் கூட்டு பஹாய் எதிர்ப்பு என்னும் அவமானத்தை ஈடுகட்டும் வகையில் நமது குரலை உயர்த்துவோம்.”
ஈரானிய தத்துவஞானியான சோரூஷ் டப்பாக் கூறுகையில், “ஒரு முஸ்லிமாகவும், ஒரு மத அறிவார்ந்த குடும்பத்தின் உறுப்பினராகவும், அன்புள்ள பஹாய் சக குடிமக்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன், மேலும் ரோஷான்கூ, மஸிந்தரானில் வசிப்பவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன், இது பஹாய் சமயத்தில் உரிமையாளர்களின் சமய நம்பிக்கை காரணமாக நடந்தது. நாம் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, யூதர்களாக இருந்தாலும் சரி, பஹாய்களாக இருந்தாலும் சரி, நாத்திகர்களாக இருந்தாலும் சரி, நமது சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது சகவாழ்வுக்கான முன்நிபந்தனையாகும், அதை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க முடியாது.”
ஒரு வரலாற்றாளரான, அபான் தஹ்மாஸ்பி, ஈரானிய பஹாய்களுக்கு ஒரு குரலாக இருப்பது தமக்கு “கௌரவமாகும்” என கூறினார்.
பஹாய் அனைத்துலக சமூக செய்தித் தொடர்பாளர்கள் பல்வேறு பாரசீக மொழி சுயாதீன ஒளிபரப்பாளர்களால் குறைந்தது 37 முறை நேர்காணல் செய்யப்பட்டனர். பி.ஐ.சி. பிரதிநிதிகள் தங்கள் முயற்சிகளின் விளைவாக அச்சுறுத்தல்கள் மற்றும் பிற வகையான வெறுப்பு பேச்சுக்களையும் கூட பெற்றனர்—ஈரானிய பார்வையாளர்களுடன் துன்புறுத்தல் தொடர்பான பொருண்மைகளையும் உண்மைகளையும் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் பெற்ற வெற்றியின் தெளிவான அறிகுறியாகும்.
எகிப்து, அஜர்பைஜான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லெபனான், யேமன் மற்றும் குர்திஸ்தான் உட்பட மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதிலும் டஜன் கணக்கான செய்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமை சமூகக் குழுக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு மற்றும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டன. “உலகளாவிய சமூகத்தின் விடையிறுப்பு இதயத்தைத் தூண்டும் மற்றும் முற்றிலும் தெளிவாக உள்ளது: ஈரானிய அரசாங்கம் பஹாய்களை இடைவிடாது துன்புறுத்துவது உலகின் பார்வையில் அதன் சொந்த நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் சேதப்படுத்துகிறது” என திருமதி டுகால் கூறினார். ” துன்புறுத்தல் முடிவுக்கு வரும் வரை பொதுக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படும் என்பதையும், பஹாய்கள் தங்கள் சொந்தத் தாய்நாட்டில் முழு குடிமக்களாக வாழ முடியும் என்பதையும் ஈரான் அறிந்து கொள்ள வேண்டும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1613/