

ரோம், 11 நவம்பர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஜெனீவா அலுவலகம் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியை ஆராய்வதற்காக ஒரு குழு (panel) விவாதத்தை நடத்தியது. கல்வி முறைகள் கிராமப்புறங்களில் உள்ள இளம் சிறு குழு விவசாயிகளின் சவால்கள் மற்றும் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியும்.
உணவுப் பாதுகாப்பு பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிக்கும் BIC இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நிலையான விவசாய அமைப்புகளை உருவாக்க மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, அறிவியல் & மதத்தின் நல்லிணக்கம், மற்றும் நீதி போன்ற ஆன்மீகக் கோட்பாடுகளின் பயன்பாட்டை ஆராய்வதன் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடைபெற்றது. BIC நிகழ்வு இந்த ஆண்டு உலக உணவு கருத்தரங்குடன் சம நேரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது மற்றும் FAO-இன் பிரதிநிதிகள், இளம் விவசாயிகளின் ஐரோப்பிய கவுன்சில் (CEJA) மற்றும் பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்புகளுடன் பணிபுரியும் ஓர் ஆராய்ச்சியாளர் ஆகியோரை ஒன்றிணைத்தது.
BIC-யின் ஜெனீவா அலுவலகத்தின் சிமின் ஃபஹண்டேஜ் தமது தொடக்கக் கருத்துக்களில் பின்வருமாறு கூறினார்: “உலகின் பல பகுதிகளில், இளைஞர்கள் சமநிலையற்ற சவால்கள் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வதால், ஆபத்தான விகிதத்தில் விவசாயத் துறையை விட்டு வெளியேறுகின்றனர்.”

இந்தச் சவால்களில் சிலவற்றில், அறிவுக்கான அணுகல் இல்லாமையும் அடங்கும்; விவசாயத்திற்குத் திறமை மற்றும் முறையான கல்வி தேவையில்லை என்னும் கருத்து; மற்றும் விவசாய அறிவியல் குறித்த சில பல்கலைக்கழக திட்டங்கள் கோட்பாட்டில் (theory) கவனம் செலுத்துகின்றன, ஆனால் இளைஞர்கள் தங்கள் கிராமங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகளுக்கு அந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஓர் ஆராய்ச்சியாளரான சனெம் கவ்ருல், உப-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள, விவசாய நடவடிக்கை-ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் இந்த சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ளும் நோக்கத்தை கொண்டுள்ள பஹாய்-உத்வேக அமைப்புகளின் வலையமைப்பிலிருந்து வெளிவரும் நுண்ணறிவுகளை ஆராய்ந்தார்.
“வேளாண் அறிவியல் மற்றும் விவசாயத்தின் மீதான அன்பை வளர்ப்பதற்கும்… இளைஞர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தார்மீகத் திறன்களை உருவாக்குவதற்கும், அவர்களின் யதார்த்தங்களுக்குப் பொருந்தக்கூடிய விவசாய அறிவின் உருவாக்கம், பயன்பாடு மற்றும் பரப்புதல் ஆகியவற்றிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் இந்த அமைப்புகள் முயல்கின்றன” என திருமதி கவ்ருல் கூறினார். .
சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான இந்த பஹாய் முயற்சிகள் அனைத்தும், வெறும் உதவி பெறுபவர்களாக மட்டுமின்றி, அவர்களின் சொந்த லௌகீக, ஆன்மீக மற்றும் அறிவுசார் முன்னேற்றத்தின் முன்னணியாளராக மக்கள் இருக்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த அடிப்படைக் கொள்கையானது, பஹாய்-உத்வேக நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டங்களில் பங்கேற்பவர்கள் தங்கள் சமூகங்களில் தங்கி, அவர்களின் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார யதார்த்தத்திற்கு ஏற்ற விவசாய அமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு விருப்பத்தை எழுப்புகிறது.
அறிவியல் மற்றும் மதம் இரண்டிலிருந்தும் அறிவு பெறுவதற்கான திறனை இளைஞர்களிடம் வளர்ப்பதற்கான அமைப்பின் முயற்சிகளின் விளைவு இது என திருமதி கவ்ருல் விளக்கினார்.
நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களுள் வலுவான நோக்கத்தைப் பேணுகின்றன, அவர்களின் சாத்தியதிறன்களை வளர்த்துக் கொள்ளவும், சமூகத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கவும் அவை உதவுகின்றன. “பொருளாதார உறுதியற்ற காலங்கள் உட்பட உற்பத்தி செயல்பாட்டில் இயற்கையாக எழும் எந்தவொரு சிரமத்தையும் இளைஞர்கள் தாங்கிக்கொள்ள இது உதவுகிறது” என திருமதி கவ்ருல் கூறினார்.
கல்வி முறைகளை வடிவமைப்பதில் பங்கேற்பு அணுகுமுறையின் முக்கியத்துவத்தை உள்ளடக்கிய மற்ற கருத்துகள் கூட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டன. FAO மின்கற்றல் அகாடமியின் தலைவரான கிறிஸ்டினா பெட்ராச்சி, இது போன்ற அமைப்புகள் “உள்ளூர் நடைமுறைகள் மற்றும் மரபுகளை ஒருங்கிணைக்கவும்” இளம் கிராமப்புற விவசாயிகளின் தேவைகள் மற்றும் உண்மைகளுக்குப் பதிலளிக்கவும் முயலும் என கூறினார். தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில், மற்ற கருப்பொருள்களுடன், நிலையான உணவு முறைகளை உருவாக்குவதற்கான அதன் ஆய்வை BIC தொடரும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1624/