சாலமன் ஃகான்
(அப்துல்-பஹா, தெய்வீகத் தத்துவம், பக். 47-49)
இரண்டு உயிர்த்தியாகிகளின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்; ஒருவர் பாரசீக பிரபு, அரச சபையில் பிரபலமானவர், அதிக செல்வம் படைத்தவர், நாடு முழுவதும் அறியப்பட்டவர். அவர் பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் என கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தப் புகழ்பெற்ற மனிதர் மற்றொருவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார், உணவோ நீரோ இல்லாமல் சிறையில் தள்ளப்பட்டார். சிறைசெய்யப்பட்ட மூன்றாம் நாள் அவர்களில் ஒருவர் தனக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுக்கும்படி சிறை காவலரிடம் கேட்டார். அவரது பணிவு மனப்பான்மையால் தாக்கம் அடைந்திருந்த, காவலர் அம்மனிதர் கேட்டுக் கொண்டபடி தேநீர் வழங்கினார்; அவருக்கு நன்றி தெரிவித்து, கைதி கூறினார்: “உங்களைத் தொந்தரவு செய்வதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால், இன்றிரவு எங்கள் கோரிக்கைகளுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள், நாளை இரவு நாங்கள் கடவுளின் விருந்தினர்களாக இருப்போம்,” என கூறினார்.
நான்காவது நாளன்று அவர்கள் சிறையிலிருந்து வெளியே கொண்டுச் செல்லப்பட்டனர்; இரண்டு கரடிகள் அவர்களுக்கு முன்பாக நடனமாட விடப்பட்டன; அவர்களை அவமானப்படுத்துவதற்காக பல குரங்குகள் கொண்டுவரப்பட்டன. சாலமன் ஃகானும் அவரது நண்பரும் ஓர் அறைக்குள் கொண்டுச் செல்லப்பட்டனர்; அவர்களின் மார்பகங்கள் கிழிக்கப்பட்டு, திறந்தநிலையில் இருந்த துளைகளில் ஒளிரும் மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டன. பாரசீகத்தில் இது சித்திரவதைகளில் ஒரு மிகவும் இழிவான வடிவமாகக் கருதப்படுகிறது.
பின்னர் நகர் முழுவதும் ஊர்வலமாகப் புறப்பட்டனர். சாலமன் ஃகான் காவலரைப் பார்த்துக் கூறினார்: “இந்தக் குழப்பநிலைக்கு அவசியமில்லை. எங்கள் மரணத்தைப் பற்றி ஏன் இத்தனை அக்கறை? உண்மையில், இது எங்களின் திருமண விருந்து. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். வாத்தியக் குழுவுடன், ஏராளமானோர் பின்தொடர்ந்து, நகரின் சந்தை மற்றும் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர். மக்கள் அவர்களை நீண்ட ஊசிகளால் குத்தி, “எங்களுக்காக நடனமாடுங்கள்!” என கூறினர். தளராத தைரியத்துடனும் களிப்பு நிறைந்த மகிழ்ச்சியுடனும் அவர்கள் நடந்து சென்றனர்; காலை முதல் மாலை வரை நகரின் வழியாக நடந்து சென்றனர். மெழுகுவர்த்திகள் எரிந்து முடிந்த போது, காவலர்கள் புதிய மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்.
எல்லா நேரத்திலும் நமது வீரமனதினர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்; அவர்கள் அணிவகுத்துச் செல்லும்போது அவர்கள் வலப்புறத்திலும் இடதுபுறத்திலுமு உள்ள மக்களைப் பார்த்து நகைத்தனர்; விண்ணுலகை நோக்கி முணுமுணுத்தனர். இறுதியில் அவர்கள் நகரின் வெளிப்புற வாயில்களுக்கு வந்தனர்; அங்கு அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டனர்.
தெஹ்ரான் நகரில் நான்கு உயரமான வாயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உடலின் ஒரு பகுதி வாயில்களின் இருபுறமும் அலங்கரித்தது. உடல் துண்டிக்கப்பட்ட போதும், சாலமன் ஃகான் கடவுளிடம் பிரார்த்தித்தும் மன்றாடவும் செய்தார். இந்தக் காரணத்திற்காக ஓர் எதிரியினால் தொகுக்கப்பட்ட வரலாற்றில் இந்தக் கதை காணப்படுகின்றது; ஏனெனில் அனைத்தும் ஷா மன்னரின் வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. முடிவில், வரலாற்றாசிரியர் சாலமன் ஃகானைப் பற்றி கூறுகிறார், “இந்த மனிதன் ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டான்.” கடவுளின் விசுவாசிகள் எவ்வளவு எளிதில் தங்கள் உயிரைக் கொடுக்கின்றனர், அவர்கள் எவ்வளவு சுய தியாகம் செய்கின்றனர், நித்தியமாக உறுதியுடனும் பற்றுறுதியுடனும் இருக்கின்றனர் என்பதை இந்தக் கதை காட்டுகிறது. எல்-அஃபாவின் அடிவானத்திலிருந்து இந்தத் தியாகிகள் நிலையான நட்சத்திரங்களைப் போன்று எப்போதும் பிரகாசிக்கக்கூடிய பிரதிபலிப்பு சக்தியுடன் கடவுளின் ராஜ்யத்திற்கு அவர்களை ஈர்த்த பஹாவுல்லாவின் ஒளியின் விளைவுதான் இந்த ஒளிபெற்ற ஆன்மாக்கள்.