BIC பிரஸ்சல்ஸ்: இன தப்பெண்ணத்தை அகற்றுவதற்கு கொள்களை மட்டுமே போதாது


21 பிப்ரவரி 2023

BIC பிரஸ்ஸல்ஸ் – பஹாய் சர்வதேச சமூகத்தின் (பி.ஐ.சி) பிரஸ்சல்ஸ் அலுவலகத்தின் ஒரு புதிய அறிக்கை இன்று ஐரோப்பா எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றை ஆராய்கிறது– இன மற்றும் பிற வகையான தப்பெண்ணங்களை எவ்வாறு சமாளிப்பது.

“இனவெறிக்கு எதிரான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பிரதிபலிப்புகள்: அடிமட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல” என்னும் தலைப்பிலான இந்த அறிக்கை, இனவெறிக்கு எதிரான உறுப்பு நாடுகளின் செயல் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய (EU) மாநாட்டுடன் இணைவாக நடைபெற்றது. இந்தத் திட்டங்கள் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இன நீதிக்கு அழைப்பு விடுக்கும் 2020 ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய இனவெறி எதிர்ப்பு செயல் திட்டம் 2020-2025-ஐ ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து வருகின்றன.

தப்பெண்ணத்தை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்திற்கு ஒப்புதலளிக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தேசிய செயல் திட்டங்களை ஏற்றுக்கொள்வது ஒரு சாதகமான நடவடிக்கை என்பதை பிஐசி அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறாயினும், “இனவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் மட்டுமே தனிநபர்களின் இதயங்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் ஆழமாக வேரூன்றிய தப்பெண்ணங்களை வேரறுக்க முடியாது.” அவ்வாறிருக்க, சமூகத்திற்கும் அதற்குச் சேவை செய்யும் அமைப்புகளுக்கும் அடித்தளமாக இருக்கும் கட்டமைப்புகளிருந்து அதை அகற்றுதல் எங்ஙனம்? என அவ்வறிக்கைக் குறிப்பிடுகின்றது.

இது குறித்து பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி விவரிக்கையில், ஐரோப்பாவின் அதிகரித்து வரும் பல்வகை நகரங்கள் மற்றும் கிராமங்களில் சமத்துவமின்மை மற்றும் இனவாதத்தை நிவர்த்தி செய்ய உள்ளூர் மட்டத்தில் சமூக வாழ்க்கையின் இயக்கவியலை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

“சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இனவாதத்தை வெல்ல அடித்தட்டுகளில் நல்லிணக்கத்தை அடைவது முக்கியம்” என அவர் கூறுகிறார். ஒற்றுமைக்கும், ஒத்திசைவிற்கும் பாடுபடாமல், மக்கள் அருகருகே வாழ விரும்பினால், தீய மனப்பான்மை நீடிக்கவே செய்யும்.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்சல்ஸ் அலுவலகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கை, தேசிய மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தாங்கள் சேவை செய்யும் மக்களைத் “திறன் கொண்டவர்களாகவும் மாற்றத்தின் முன்னணியாளர்களாகவும்” கருதும்போது, அதனால் வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறுகளை அவ்வறிக்கை ஆராய்கிறது.

பி.ஐ.சி அறிக்கை ஐரோப்பா முழுவதும் பஹாய் சமூக-நிர்மாணிப்பு நடவடிக்கை அனுபவங்களிலிருந்து நுண்ணறிவுகளை ஈர்க்கிறது; பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் அண்டைப்புறங்களின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முன்முயற்சிகளில் கூட்டாக வேலை செய்யும்போது, அவர்கள் தங்களிலிருந்து வேறுபட்ட முன்னோக்குகளைச் சந்திக்கின்றனர், நட்பின் நெருக்கமான பிணைப்புகளை உருவாக்குகின்றனர், மேலும் தங்கள் அண்டையர்கள் எதிர்நோக்கும் பாகுபாடு குறித்து அதிக விழிப்புணர்வு பெறுகின்றனர்.

தேசிய மற்றும் ஐரோப்பிய ஸ்தாபனங்கள் தாங்கள் சேவை செய்யும் மக்களைத் “திறன்மிக்கவர்களாகவும் மாற்றத்தின் முன்னணியாளர்களாவும்” கருதும்போது, இனரீதியான தப்பெண்ணத்தை நிவர்த்தி செய்வதற்கு வெளிப்படக்கூடிய புதிய சாத்தியக்கூறுகளை பிஐசி அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் மூலம், உள்ளூர் மக்கள் ஒரு சமூகத்திற்கு வலிமைக்கான ஆதாரமாகப் பார்க்கப்படுவார்கள். சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் கொள்கை வகுப்பதில் பங்களிப்பதற்கும் அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய கலந்தாலோசனைத் தளங்களை உருவாக்குவதன் மூலம் இந்தப் பயன்படுத்தப்படாத திறனை உணர முடியும் என பிஐசி தெரிவிக்கிறது.

சமூக நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த உரையாடலுக்குப் பங்களிப்பதற்கான பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பிஐசி அறிக்கையை இங்கே காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1644/

துருக்கியில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்திட அவசர மேசை உருவாக்கப்பட்டுள்ளது


16 பிப்ரவரி 2023

இஸ்தான்புல், துருக்கி – துருக்கி மற்றும் அருகிலுள்ள நாடுகளை உலுக்கிய பேரழிவுமிக்க நிலநடுக்கங்களின் ஆரம்பத் தருணங்களிலிருந்து, துருக்கியில் உள்ள மண்டல மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள பஹாய் ஸ்தாபனங்கள் மக்களின் பாதுகாப்பை மதிப்பீடு செய்வதற்கும் தற்போதைய நிவாரணப் பணிகளில் அவர்களின் பங்களிப்பை ஒருங்கிணைப்பதற்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உள்ளூர் சமூகங்களுடன் அணுக்கமாகத் தொடர்புகொண்டு வருகின்றன.

இந்த முயற்சிகளின் மையத்தில், முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குள் துருக்கியின் பஹாய் தேசிய ஆன்மீக சபையால் உருவாக்கப்பட்ட அவசர மேசை உள்ளது. இந்த மேசை விரைவில் இஸ்கெண்டரூனில் உள்ள உள்ளூர் பஹாய் ஸ்தாபனங்களுடனும், ஹட்டாய் மாகாணத்தில் உள்ள வேறு சில உள்ளூர்களுடனும் தங்கள் சக நாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்திகளைப் பற்றி ஆலோசிக்கத் தொடங்கியது.

பல ஆண்டுகளாக பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள் மற்றும் வழிநடத்துனர்கள் மத்தியில் உருவான முறைசாரா வலையமைப்புகளும் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபைகளும் அவசரகால மேசையை நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் பல்வேறு வட்டாரங்களில், குறிப்பாக்க கிராமப்புறங்களில் முக்கிய தகவல்களைச் சேகரித்து அனுப்பிட உதவியது..

அடானா, இஸ்கெண்டரூன் மற்றும் செரின்யோல் பஹாய்கள், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடுகையில் அதிகாரிகள், முதல் விடையிருப்பாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோருக்கு மையமாகச் செயல்பட தங்கள் உள்ளூர் பஹாய் மையங்களைத் திறந்து விட்டுள்ளனர் என மேசை தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் இடம்பெயர்க்கப்பட்ட மக்களுக்குத் தங்குமிடத்தையும் வழங்கியுள்ளன.

இதற்கிடையில், மேசையானது, அவற்றின் உடனடி அணுகலுக்கு அப்பாற்பட்ட வளங்களுடன் சமூகங்களை இணைக்க முடிந்துள்ளது. ஒரு கிராமத்தில், மின்சாரம் இல்லாததால் சமையல் வேலைகளும் கால்நடை பராமரிப்பும் மிகவும் கடினமாக இருந்தது. அவசர மேசை, அருகிலுள்ள இடத்திலிருந்து ஜெனரேட்டர் ஒன்றைத் தேடிப் பிடித்து விநியோகித்தது. பல இடங்களில் இதே போன்ற தேவைகளுக்கு விடையிருக்கும் விதமாக, மேசை இப்போது அதிக ஜெனரேட்டர்களைப் பெறுவதற்கு முயன்று வருகின்றது.

நாட்டின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்தாலும், அவசர மேசைக்கு உத்வேகமளிக்கும் அறிக்கைகள் கிடைத்து வருவதாக தேசிய ஆன்மீகச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கைகளில் ஒன்று, தனது வீட்டை இழந்த பிறகும், அருகிலுள்ள நகரத்திலிருந்து தண்ணீரையும் உணவையும் சேகரித்து தனது அண்டை வீட்டாருக்கு விநியோகிக்கத் தீர்மானித்த ஒரு நபரைப் பற்றி விவரிக்கின்றது. அவர் சென்றுகொண்டிருந்த போது, வழியில் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துள்ளார் என்னும் துக்கச் செய்தி கிடைத்தது. இந்தச் சிரமத்திற்கு மத்தியிலும் அவர் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். அந்த நேரத்தில், உள்ளூரில் உணவோ தண்ணீரோ எதுவும் கிடைக்காததால் இது இன்றியமையாத ஒன்றாக விளங்கியது.

பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் மூலம் பேணப்படும் சேவையை நோக்கிய ஒரு நோக்குநிலையும் நட்பின் பிணைப்புகளும் எவ்வாறு நெருக்கடிக்கு விடையிறுப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன என்பதை அவசரகால மேசை அவதானித்துள்ளது. “இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒருமைப்பாட்டின் ஓர் உயர்ந்த உணர்வை உணர்கிறார்கள். மேலும், தேவைப்படும் எவருக்கும் உதவ உந்துதல் பெறுகின்றனர், அண்டை வீட்டாரையும் அந்நியர்களையும் தங்கள் சொந்தக் குடும்பத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கின்றனர்” என மேசையின் உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். “உதாரணத்திற்கு, பலர் தற்காலிக குடியிருப்புத் தேவைப்படும் மக்களுக்காகத் தங்கள் வீடுகளைத் திறந்துவிட்டுள்ளனர்.” அதன் அவசரகால மேசை சார்ந்த முயற்சிகளுக்கும் மேலதிகமாக, நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து தேசிய ஆன்மீக சபை ஊக்கமளிக்கும் வார்த்தைகளை தெரிவித்து வருகிறது. சபையானது அதன் கடிதம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளது: “இந்த நெருக்கடியான தருணத்தில், ஒவ்வொரு சூழலிலும், எல்லா சூழ்நிலைகளிலும் நம் சக குடிமக்களின் தேவைகள் சார்ந்த சேவைகளில் நாம் அனைவரும் அர்ப்பணிப்பு மற்றும் தியாக முயற்சியுடன் ஈடுபடுவோமாக. …அனைவருக்கும் நம்பிக்கையளியுங்கள், அவர்களின் காயங்களை அன்பினால் குணப்படுத்துங்கள்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1643/

பேரிடர்களுக்கு ஒரு நோக்கம் உள்ளதா?


இக்குழந்தை துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்ப இடிபாடுகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. இக்குழந்தையின் தாய் பிரசவத்திற்குப் பிறகு இறந்துவிட்டிருந்தார். இடிபாடுகளுக்கிடையே குழந்தையின் அழுகுரல் கேட்ட மீட்பாளர்கள் அதைக் காப்பாற்ற முயன்ற போது, குழந்தையின் தொப்புள் கொடி இன்னமும் அதன் தாயிடம் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, தொப்புள்கொடியை வெட்டி குழந்தையைக் காப்பாற்றினர். இக்குழந்தைக்கு அயா அல்லது ‘கடவுளின் அடையாளம்’ எனப் பெயிரிடப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தினால் இதுவரை சுமார் 30,000 பேர் இறந்துள்ளனர்.

அப்துல்-பஹா 1912-இல் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தார். அவர் அப்பயணத்தை மேற்கொள்வதற்கு வசதியாக சில பஹாய்கள் அவர் டைட்டானிக் கப்பலில் அதன் முதல் வெள்ளோட்டத்தில் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அப்துல்-பஹா, தமது பயணத்திற்காக வேறொரு கப்பலைத் தேர்ந்தெடுத்தார். டைட்டானிக் பேரிடருக்குப் பிறகு, பேரிடர்கள் குறித்து அப்துல்-பஹா பின்வருமாறு கூறினார்:

கடந்த சில நாட்களில் உலகில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது, இது ஒவ்வொரு இதயத்தையும் கவலையடையச் செய்து, ஒவ்வொரு ஆன்மாவையும் வருத்தமுறச் செய்துள்ளது. நான் இங்கு டைட்டானிக் பேரழிவைக் குறிப்பிடுகின்றேன், அதில் நமது சக மனிதர்கள் பலர் கடலில் மூழ்கிப் போயினர், பல அழகான ஆன்மாக்கள் இந்த பூவுலக வாழ்க்கையைத் துறந்துச் சென்றன. இத்தகைய நிகழ்வு உண்மையிலேயே வருந்தத்தக்கது எனும் போதிலும், நடப்பவை அனைத்தும் ஏதோ ஒரு விவேகத்தினால்தான் ஏற்படுகின்றன என்பதையும், காரணமின்றி எதுவும் நடக்காது என்பதையும் நாம் உணர வேண்டும். அதில் ஒரு மர்மம் இருக்கின்றது; ஆனால் காரணம் மற்றும் மர்மம் எதுவாக இருந்தாலும், இது மிகவும் சோகமான நிகழ்வு, இது பலரின் கண்களில் கண்ணீரையும் பல ஆன்மாக்களுக்குத் துயரத்தையும் கொண்டு வந்துள்ளது. இந்தப் பேரழிவினால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். காணாமல் போனவர்களில் சிலர் எங்களுடன் நேப்பிள்ஸ் வரை செட்ரிக் கப்பலில் பயணம் செய்து பின்னர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தனர். அவர்களை நினைக்கும் போது எனக்கு மிகவும் சோகமாக இருக்கின்றது. ஆனால், இந்தப் பேரிடரை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, கடவுளின் உலகங்கள் எல்லையற்றவை என்பதை உணர்ந்து நான் ஆறுதல் அடைகிறேன்; “என் பிதாவின் இல்லத்தில் அநேக மாளிகைகள் இருக்கின்றன” என இயேசு கிறிஸ்து சொன்னபடி, இந்த (உலக) வாழ்வை அவர்கள் இழந்திருந்தாலும், அதற்கு அப்பால் அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தற்காலிக வாழ்விலிருந்து அழைக்கப்பட்டு நித்திய வாழ்விற்கு மாற்றப்பட்டுள்ளனர்; அவர்கள் இந்த பௌதீக இருப்பைக் கைவிட்டு ஆன்மீக உலகின் நுழைவாயில்களுக்குள் பிரவேசித்துள்ளனர். பூவுலகின் இன்பங்களையும் சுகங்களையும் துறந்து, இறைவனின் இராஜ்யத்திற்கு விரைந்தபடியால், அவர்கள் இப்பொழுது மிகவும் நிலையானதாகவும் உண்மையானதாகவும் ஒரு மகிழ்ச்சியையும் களிப்பையும் பெறுகிறார்கள். இறைவனின் கருணை எல்லையற்றது, மறைந்த இந்த ஆன்மாக்களை நமது பிரார்த்தனைகளிலும் வேண்டுதல்களிலும் நினைவுகூர்வது நமது கடமையாகும். இதனால், அவர்கள் திருமூலாதாரத்திற்கு மேன்மேலும் அணுக்கம் அடைவர். (அனைத்துலக அமைதிக்கான பிரகடனம்)

துருக்கி நாட்டில் பூகம்பப் பேரிடர்

இக்கப்பல், அக்காலத்தில் மிகப் பெரிய கப்பலாகும். ஐம்பதாயிரம் டன்கள் கொண்ட அக்கப்பலைத் தயாரித்தோர், அதனை கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாது என தம்பமடித்தனர்.

மேலும், இந்த நிகழ்வுகளுக்கு ஆழமான காரணங்கள் உள்ளன. மனிதனுக்குச் சில பாடங்களைக் கற்பிப்பதே அவற்றின் குறிக்கோளும் நோக்கமும் ஆகும். பௌதீக சூழல்களையே நம்பியிருக்கும் ஒரு நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு கப்பலின் பெரிய அளவு, அதன் வலிமை, இயந்திரங்களின் பரிபூரணம் அல்லது ஒரு மாலுமியின் திறன் பாதுகாப்பை உறுதி செய்யும் என மனிதர்கள் கற்பனை செய்கின்றனர். ஆனாலும், இந்தப் பேரழிவுகள் சில நேரங்களில் நிகழவே செய்கின்றன. ஆனால் அவை கடவுளே உண்மையான பாதுகாவலர் என்பதை மனிதர்கள் அறியச் செய்வதற்காகும். மனிதனைப் பாதுகாப்பது கடவுளின் விருப்பமாக இருந்தால், ஒரு சிறிய கப்பல் கூட அழிவிலிருந்து தப்பிக்கலாம், அதே நேரத்தில் சிறந்த மற்றும் மிகவும் திறமையான மாலுமியைக் கொண்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட கப்பல் கூட அப்போது கடலில் நிலவிய ஆபத்தில் (பனிப்பாறைகள்) இருந்து தப்பிக்க முடியாது. இதன் நோக்கம் என்னவென்றால், உலக மக்கள் ஒரே பாதுகாப்பாளரான இறைவனிடம் திரும்ப வேண்டும்; மனித ஆன்மாக்கள் அவருடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கவும், அவர்தான் உண்மையான பாதுகாப்பு என்பதை அறிவதற்கும். மனிதனின் (கடவுள்) நம்பிக்கை அதிகரிக்கவும், பலப்படுத்தப்படவும் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே, நாம் வருத்தமும், மனச்சோர்வும் அடைந்தாலும், நம் இதயங்களை இராஜ்யத்தின்பால் திருப்பி, இந்த மறைந்த ஆத்மாக்களுக்காக அவரது எல்லையற்ற இரக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும். இதனால், அவர்கள் இந்த பூவுலக வாழ்க்கையை இழந்திருந்தாலும், பரலோக பிதாவின் உன்னத மாளிகைகளில் ஒரு புதிய வாழ்வை அனுபவிக்க முடியும். (அனைத்துலக அமைதிக்கான பிரகடனம்)

அத்தகைய நெஞ்சை பிளக்கின்ற நிகழ்வுகளுக்குப் பின்னால் அறிதிடவியலாத ஒரு தெய்வீக விவேகம் உள்ளது. அது ஓர் இரக்க  குணமுடைய  தோட்டக்காரர் அப்போதுதான் மலர்ந்திட்ட, ஒரு மென்மையான செடியை ஒரு நெருக்கமான இடத்திலிருந்து ஒரு விசாலமான இடத்திற்கு இடம் மாற்றி நடுவதைப் போன்றாகும். இந்த இடமாற்றமானது அந்தச் செடி  வாடிப் போவதற்கோ, குறைவுபட செய்வதற்கோ அதை அழிப்பதற்கான காரணமோ அல்ல; இல்லை, மாறாக, அது அந்தச் செடியை வளரவும் செழுமை அடையவும் செய்திடும், செழிப்பும் மென்மையும் பெற்று, பசுமையாக்கி  கனி  கொடுக்கவும் செய்திடும். இந்த மர்மமான இரகசியத்தை அந்த தோட்டக்காரர் நன்கறிவார், ஆனால் இந்த அருட்கொடையைப் பற்றி அறிந்திராத ஆன்மாக்கள், தோட்டக்காரர் தன் கோபத்தினாலும் சீற்றத்தினாலும் அந்தச் செடியை வேருடன் பிடுங்கிவிட்டார் எனக் கருதுகின்றனர். ஆனால் அறிந்தவர்களுக்கு, இந்த மறைவான உண்மை தெளிவானதாகும்; முன்கூட்டிய நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கட்டளை ஒரு கருணையாகக் கருதப்படும். (அப்துல்-பஹா, அப்துல்-பஹாவின் தேர்வு செய்யப்பட்ட சில வாசகங்கள், பக். 199-200)

சோதனைகளும் இடுக்கண்களும், நம்மை கடவுளிடம் அணுக்கமுறச் செய்வதற்காகவே நிகழ்கின்றன. ஆனால் அத்தகைய நிகழ்வுகளில் சிக்கிக்கொண்டோர் அவற்றின் உண்மையான நோக்கத்தை அறியாமல் இருக்கலாம். இருப்பினும், இத்தகைய பேரிடர்களில் சிக்கிக்கோண்டோருக்காக நாம் பிரார்த்திப்போமாக.

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென்பதை அறிவியல் நிரூபிக்கமுடியுமா?


ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – 1 ஆகஸ்ட் 2008-இல் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32-வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, “நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவுகின்றது” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.

பிரார்த்தனையால் நாம் ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் பற்றி ஏதும் அறியாத நிலையில், இது குறித்த முதல் பிரச்சினை, அது பற்றிய ஒரு பரிசோதனையை வடிவமைப்பதாகும்.

“பிரார்த்தனையின் நோக்கம் ஆயுள்காலத்தை நீட்டிப்பது மட்டுமா?” என அவர் மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நேர்முகத்தின்போது வினவினார்.

அவர் பஹாய் போதனைகள் குறித்த தமது அறிவின் அடிப்படையில், அக்கேள்விக்கு பதிலளிக்க முனைந்தார். “இவ்வுலக வாழ்வின் நோக்கம் நீண்ட ஆயுள்காலம் மட்டுமல்ல. நமது வாழ்வின் நோக்கம் கடவுளை அறிந்துகொள்வது, அவரை வழிபடுவது மற்றும் அவருக்குச் சேவைபுரிவதாகும்.”

ஒருவரின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக அவருக்கு மேலும் அதிகமான கடுந்துன்பங்கள் ஏற்படுமாயின், அச்சூழ்நிலைகள் குறித்து என்ன செய்வது?” என அவர் வினவினார். அப்படியாயின், பிரார்த்தனையால் நாம் விரும்பும் விளைவுகள்தான் என்ன?

நாம் பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையால் நாம் விரும்பக்கூடிய விளைவுகள் யாதென நமக்கே தெரியாத நிலையில், ஓர் அறிவியலாளர் ஒரு பிரார்த்தனை தேவையான விளைவை ஏற்படுத்தியதாவென எவ்வாறு தீர்மானிக்கக்கூடும்?

“உண்மையில் நாம் இங்கு எதை அளவிடுகின்றோம் என்பது நமக்கே தெரியாது,” என டாக். குட்டுஸி கூறினார்.

“நலமடைதல் மற்றும் மறுதேர்ச்சியில் பிரார்த்தனையின் விளைவுகள்: “இதன் தொடர்பான எழுத்துக்களை மீளாய்வு செய்தல்,” என்பதே சான் டியேகோவில் 1 செப்டம்பரில் முடிவுற்ற பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் நான்கு நாள் நிகழ்ச்சியில் அவரின் படைப்பாக இருந்தது.

கனடாவின் மனிடோபா பல்கலைகழகத்தில் otolaryngology எனப்படும் கண், காது, மூக்கு மற்றும் தலை தொடர்பான நோய்கள் குறித்த மூன்றாவது ஆண்டு ரெசிடன்ட் மருத்துவரான டாக். குட்டுஸி, பிரார்த்தனையின் விளைவுகள் குறித்த தமது ஆய்வு குழப்பமான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

ஆனால் “meta-analysis” எனப்படும் ஆய்வுமுடிவுகளை தொகுதி சேர்க்கும் முயற்சி அளவிடக்கூடிய எவ்வித பயன்விளைவையும் வெளிப்படுத்தவில்லை, என அவர் தெரிவித்தார்.

ஆகவே, பிரார்த்தனை எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை எனப் பொருள்படுமா?

இல்லை, என்கிறார் அவர், ஏனெனில், எதை அளவிடுவது என்பதைத் தீர்மானிக்கும் பிரச்சினை போக, இவ்விஷயத்தைக் குழுப்பிவிடும் வேறு பல விஷயங்களும் உள்ளன – இவை அறிவியல் ரீதியான ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தும் தேவைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். உதாரணமாக:

— தீவிரமாகப் பிரார்த்திப்பது அவசியமாகின்றதா? அவ்வாறு இருப்பின், அத்தீவிரத்தை நாம் எவ்வாறு அளவிடக்கூடும்?

— எத்தனை பேர்கள் பிரார்த்திக்கின்றனர் என்பது முக்கியமா?

— நாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ அந்நபர் அதற்குப் பாத்திரமானவர்தானா? தெய்வீக மன்னிப்பு இதில் என்ன பங்காற்றுகின்றது?

— நோயின் தீவிரத்தை நாம் கருத்தில்கொள்ள வேண்டுமா?

— இதில் சம்பந்தப்பட்ட மக்களின் சமய நம்பிக்கை, அல்லது அத்தகைய ஈடுபாடில்லாமை, பயன்விளைவைப் பாதிக்கின்றதா?

— மக்கள் சதா யாருக்காவது பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் கடவுளின் கருணை தொடர்ச்சியானது மற்றும் எல்லையற்றதாக இருக்கும் பொழுதினில், இந்த ஆய்வுக்குச் சீர்நிலையான அல்லது நிலைமாற்றம் உறாத (control) ஆய்வுக் குழுமம் ஒன்றை நாம் உண்மையில் கொண்டிருக்க முடியுமா?

தமது அளிக்கை நிகழ்வில், டாக் குட்டுஸ் பஹாய் எழுத்துக்களிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்காட்டினார். அவற்றின் வாயிலாகப் பிரார்த்தனை இன்றியமையாதது ஆனால் அதன் விளைவுகள் எப்போதுமே வெளிப்படையானவையல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

பிரார்த்தனைகள் குறித்த பஹாய் போதனைகள்

அவர் பஹாய் எழுத்தோவியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார்: “உனது பிரார்த்தனை உன்னை நெருப்பிற்ககே வழிநடத்திச் சென்றாலும், அதே போன்று உனக்குச் சுவர்க்கமே பிரதிபலனாகக் கிடைத்தாலும் உனது வழிபாட்டில் எவ்வித மாறுபாடுமற்ற முறையில் நீ கடவுளைப் பிரார்த்திப்பாயாக.”

கடவுளின் ஓர் அவதாரமென பஹாய்களால் கருதப்படும் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, நோய்கண்ட காலங்களில் “திறமையான மருத்துவர்களை” நாடவேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகின்றார், அதே வேளை நோய் நிவாரணத்திற்கான பிராத்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குணப்படுதலுக்கான சில பிரார்த்தனைகளை பஹாவுல்லாவின் மூத்தத் திருமகனாரும் அவரது போதனைகளுக்கான விளக்கவுரையாளருமான அப்து’ல்-பஹா அவர்கள்: “குணப்படுத்துதலுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரார்த்தனைகள் பெளதீக, ஆன்மீக நிலைகள் இரண்டிற்குமே பொருந்தும். ஆகவே, ஆன்மா, உடல் இரண்டுமே குணமடைய அவற்றை(பிரார்த்தனைகளை) கூறுங்கள். நோயாளிக்கு உடல்நலனே முறையானதெனும்போது அது நிச்சயமாக வழங்கப்படும்; ஆனால் சில நோயாளிகளுக்கு அந்த நோயிலிருந்து குணப்படுவது வேறு பல நோய்களுக்குத் தோற்றுவாயாக நேரிடும், ஆகவே அப்பிரார்த்தனைக்கான உறுதியான பதிலை விவேகம் அனுமதிக்கவில்லை.”

டாக். குட்டுஸி அப்து’ல்-பஹாவின் பின்வரும் வாசகக் குறிப்பைப் படித்துக் காட்டுகின்றார்: “நீ வேண்டுவதை அவரிடம் மட்டுமே கேள்… ஒரே பார்வையில் அவர் ஓர் நூறாயிரம் நம்பிக்கைகளை வழங்கிடுவார், ஒரு தலையசைவில் அவர் காயம் ஒவ்வொன்றிற்கும் தைலமிடுவார்.”

டாக். குட்டுஸி வாசித்த பின்வரும் பகுதியில் அப்து’ல்-பஹா பிரார்த்தனை மற்றும் குணப்படுதலை விசேஷமாகக் குறிப்பிடுகின்றார்: “நோய் என்பது இருவகைப்படும்: ஆன்மீகம் மற்றும் பெளதீகம். வெட்டுக்காயம் பட்ட ஒரு கையை எடுத்துக்கொள்ளுங்கள்; காயம் ஆற வேண்டுமென மட்டும் பிரார்த்தித்துவிட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தாமல் இருப்பது எவ்வித நன்மையையும் விளைவிக்காது; பெளதீக ரீதியான குணப்பாடு தேவைப்படுகின்றது.”

மேலும்: “பெளதீக விபத்துக்களால் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் குணப்படுத்தப்பட வேண்டும்; ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் நோய்கள் ஆன்மீக ரீதியில் குணப்பாடு காணும்… இவ்விருவகையான வைத்தியமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை இரண்டும் ஒன்றுக்கொண்று எதிரானவையல்ல, மற்றும், தமது சேவகர்கள் அத்தகைய வைத்தியத்தாலும் பயனடைய வேண்டுமென மருத்துவ அறிவியலை வெளிப்படுத்தியுள்ளவரான, கடவுளின் கருணை மற்றும் சலுகைகளிலிருந்தே பெளதீக நிவாரணங்கள் தோன்றுகின்றனவென நீர் அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும். நீர் ஆன்மீக வைத்தியமுறைகளுக்கும் சரிசமமான கவனம் செலுத்தவேண்டும், ஏனெனில் அவை வெகுசிறப்பான பயன்விளைவை ஏற்படுத்துகின்றன.”

டாக். குட்டுஸ் அவர்களால் வாசிக்கப்பட்ட மற்றொரு குறிப்பில், அப்து’ல்-பஹா நோயுற்றோருக்கான பிரார்த்தனை குறிப்பாக எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விவரிக்கின்றார்:

” ஒரு வலுவான மனிதர் ஒரு நோயாளி ஆகியோருக்கிடையே ஓர் இணக்கமான தொடர்பு ஏற்படும் வகையில் தனது முழுநம்பிக்கைக் குவிப்புடன் ஒருவர் ஒரு வலுவான மனிதரின் ஆன்மீக ஆற்றலிலிருந்து குணப்பாடு விளையும் என ஒரு நோயாளி எதிர்ப்பார்க்கும்போது அந்த வலுவான மனதினர் நோயுற்றவரின்பால் செலுத்தும் முற்றான கூர்கவனத்தால் (ஆன்மீக குணப்பாடு) விளைகின்றது. அந்த வலுமிக்க மனிதர் அந்த நோயாளியை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், பிறகு அந்த நோயாளி தாம் குணப்படுவோம் என்பதில் உறுதியடைகின்றார்…

“ஆனால் இவை யாவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விளைவுகள் உண்டாக்குகின்றன, அதுவும் எல்லா வேளைகளிலும் அது நடைபெறுவதில்லை. ஏனெனில், ஒருவர் மிகவும் கொடுமையான நோயால் பாதிப்படைந்திருக்கும்போதோ, காயமுற்றிருக்கும்போதோ, இத்தகைய வழிமுறைகள் அந்நோயை அகற்றவோ அக்காயத்தை ஆற்றிடவோ முடியாது.

அறிவியல் ஆராய்ச்சி

பிரார்த்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அப்துல் பஹாவின் விளக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தாம் வெகு ஆர்வத்துடன் காண விரும்புவதாக டாக். குட்டுஸி கூறினார். இருந்தபோதும், சாத்தியமே இல்லாத அச்சூழ்நிலையில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றை வடிவமைக்க முடிந்தாலும் (“ஆன்மீக ரீதியில் ‘வெகு வலுவானவர்’ ஒருவரை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என அவர் வினவினார்,) பிரார்த்தனைகள் “ஒரு குறிப்பிட்ட அளவே விளைவுகள் ஏற்படுத்தும், அதுவும் அது எல்லா வேளைகளிலும் நடைபெறப்போவதும் இல்லை,” எனும் அப்துல் பஹாவில் கூற்றின் அடிப்படையில் நாம் எதையுமே நிரூபிப்பது சாத்தியப்படாது.

குணப்படுத்தும் பிரார்த்தனைகளின் ஆக்கவிளைவுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி அப்து’ல்-பஹா விவரித்துள்ள அச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே நடந்துள்ளது.

உதாரணமாக, சில ஆய்வுகளில், இருதய சிகிச்சை குறித்த ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இருதய கண்கானிப்புப் பிரிவில் உள்ள நோயாளிகள் ஆபரேஷனுக்குப் பிறகு எவ்வாறு தேறி வருகின்றனர் என்பதை சில ஆய்வுகளின் வாயிலாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு ஆய்விலும் நோயாளிகள் ரேண்டம் முறையில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டனர். அவற்றில் பாதி பேர்களுக்கு அந்த நோயாளிகளுக்கே தெரியாத சிலரைக் கொண்டு அவர்கள் குணமடைய பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களுக்கு ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பொதுவாக, அளவிடப்படக்கூடிய எவ்வித விளைவும் அங்கு காணப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொள்ளும் போது அம்முடிவுகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் டாக். குட்டுஸி கூறினார்.

தமது அளிக்கையின் போது, திடீரென டாக். குட்டுஸி, மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வெளியிடுவதனால் கடவுள் தாம் விரும்பும் குறிக்கோளிலிருந்து அப்பால் விலகுவாறா என வினவினார்.

அவர் டாக். எட்வர்ட் சி. ஹால்பெரின் எனும் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் ஆய்வை எடுத்துக்காட்டினார். ஒரு மருத்துவரீதியான ஆய்வில், முன்பின் அறியாதாரால் பிரார்த்திக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் காட்டிலும் எவ்வித பிரார்த்தனைக்கும் உட்படுத்தப்படாதோரை குணப்படுத்தும், தன்விருப்பமாக குணப்படுத்தும் ஒரு கடவுள் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு சற்ற சிரமாகவே இருக்கும். கடவுள் இவ்வாறாக முறண்பாடானவர் என கருதப்படக்கூடாது.”

டாக். குட்டுஸி தமது முடிவுரையில் பிரார்த்தனை குறித்த இவ்விதமான ஆராய்ச்சி சிலர் கூறுவது போல் கடவுள் நிந்தனையென தாம் கருதவில்லையென கூறினார்.

ஆனால் அறிவியல் நோய் நிவாரணத்திற்கு ஏதுவாக பிரார்த்தனையின் பயனுறுதியை அதன் அடிப்படையிலான ஆய்வின் போது வெளிப்படுத்தக்கூடுமாவென அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இது முக்கியமா எனும் கேள்விக்கு, அவர் அது முக்கியமல்லவென கூறினார். இருந்த போதும் அதை நிரூபிப்பது ஆர்வமளிப்பதாகவே இருக்கும் என்றார்

கஸாக்ஸ்தான்: கலைகள் சமுதாய நல்லிணக்கத்தைப் பேணிட முடியும்


9 பிப்ரவரி 2023

அஸ்தானா, கஸாக்ஸ்தான் – உலகைப் பற்றிய நமது கண்ணோட்டம், அதில் நமது இடம் ஆகியவற்றின் மீது கலைகளின் தாக்கம் எத்தகையது? கலைகள் எவ்வாறு மக்களிடையே உயர்ந்த இலட்சியங்களைத் தூண்டி, சமுதாய நல்லிணக்கத்திற்குப் பங்களித்திட அவர்களை ஊக்குவிக்க முடியும்? மதம் எப்படி கலைகளில் அழகைத் தூண்ட முடியும்?

இவை, சமூகத்தின் நல்வாழ்வை ஊக்குவித்தல் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் தொடரின் ஒரு பகுதியாக கலைஞர்களும் கஸாக்ஸ்தானில் உள்ள பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகமும் ஆராய்ந்த கேள்விகளில் அடங்கும்.

சமூக நல்லிணக்கம் குறித்த உரையாடலில் பங்கேற்பதற்கான அலுவலகத்தின் நீண்டகால முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தக் கலந்துரையாடல்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த மற்றும் வளமான சமூகத்தைக் கட்டமைப்பதில் அவர்களின் துறைகள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்கிறது.

கலையில் அழகின் வெளிப்பாட்டைப் பிரதிபலிப்பதானது, நல்லிணக்கம் மற்றும் மனித ஆன்மாவை உத்வேகப்படுத்தல் குறித்த எண்ணங்களை மனதில் உண்டாக்குகின்றது என பொது விவகார அலுவலகத்தின் தைமூர் செக்கர்பயேவ் விளக்குகிறார். கலைகளானவை, மக்கள் தங்களின் சக மனிதர்களில் உள்ள மேன்மையை உணர உதவும் என அவர் கூறுகிறார்.

“நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதிலும், பிளவுகளைக் குறைப்பதிலும், ஒற்றுமை உணர்வைப் பேணுவதிலும் கலைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்காமல் சமூக முன்னேற்றத்தையும் அமைதியான உலகையும் கற்பனை செய்வது கடினம்” என திரு செக்கர்பயேவ் கூறினார்.

இருப்பினும், மனித இயல்பு குறித்த மக்களின் கண்ணோட்டத்தைச் சிதைத்திடவும், பிரிவினை என்னும் நெருப்பைத் தூண்டுவதற்கும் கலைகள் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றன என பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அலுவலகத்தின் மற்றொரு உறுப்பினரான லியாசாட் யாங்கலியேவா மேலும் கூறுகின்றார்: “சாந்தமான மனப்பான்மைகளை ஊக்குவிப்பதற்கான கலைகளின் சாத்தியத்தை உணர்வதற்கு, கலை சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் நம்பிக்கைமிகு கண்ணோட்டத்தைப் பராமரிப்பதன் மூலமும், ஆன்மீகக் கொள்கைகளைத் தங்கள் பணிகளில் பயன்படுத்துவதன் மூலமும் பெரிதும் பயனடையலாம்.”

இடமிருந்து வலமாக: கஸாக்ஸ்தானில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகத்தின் தீமூர் செக்பர்பயேவ்; கஸ்டீவ் அருங்காட்சியகத்தின் ஓவியர் மற்றும் கலை ஆசிரியரான நட்டாலியா பஸெனோவா; திரைப்பட தயாரிப்பாளரா அஜிஸ் ஜைரோவ்; அலுவலகத்தின் லியாஸ்ஸாட் யங்கலியேவா.

திரைப்படத் தயாரிப்பாளர் அஜீஸ் ஸைரோவ் இதே உணர்வை எதிரொலித்தார்; ஆழமான அர்த்தத்துடன் நிரப்பப்பட்ட படைப்பாற்றல் மிக்க படைப்புகள் மக்களை ஒன்றிணைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். “சமூக நனவுணர்வுள்ள கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் அர்த்தத்தைப் உட்புகத்துகின்றனர்; ஆன்மாவுடன் சேர்ந்து எதிரொலிக்கும் ஓர் ஆற்றலை தங்கள் படைப்புகளில் புகுத்துகிறார்கள். இத்தகைய படைப்புகள், பிறர் வாழ்க்கைகளைத் தாங்கள் மேம்படுத்துகின்றனர் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் தூண்டிட முடியும்.

கஸ்டீவ் அருங்காட்சியகத்தின் ஓவியரும் கலை ஆசிரியருமான நட்டாலியா பாஸெனோவா, படைப்பாற்றல் மற்றும் அழகு குறித்த ஆரம்பகால மதிப்புணர்வை மக்களிடையே பேண வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். “கலை சுய வெளிப்பாட்டுக்கான ஒரு வழிமுறையை வழங்குகிறது,” என அவர் கூறினார். “முறையாகப் பேணப்படும்போது, கலை சார்ந்த முயற்சிகள் ஒரு நபரின் வாழ்க்கை நோக்கத்தையும் செல்திசையையும் உயர்த்திட முடியும்.”

திருமதி பாஸெனோவா மேலும் கூறியதாவது: “நான் பல ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்குக் கற்பித்து வருகிறேன், அவர்கள் எவ்வாறு மாற்றம் காண்கின்றனர், அவர்கள் எவ்வாறு உலகில் அழகை பார்க்கத் தொடங்குகின்றனர் என்பதைப் பார்த்துள்ளேன். அழகின் மீதான ஈர்ப்பின்றி ஒருவர் வளர்ச்சி காண்பது கடினம்.”

இக்கலந்துரையாடல்கள் கலைகள் சமூகத்துடன் கொண்டிருக்கும் பலக்கிய மற்றும் பன்முக உறவை எடுத்துக்காட்டுகின்றன. கலைகள் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவும், மனிதப் படைப்பாற்றல் மற்றும் அனுபவத்தின் வளமான மற்றும் பல்வகைகளிலான வெளிப்பாடாகவும் செயல்பட முடியும்; அவை உலகைப் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கவும் உயர்த்திடவும் திறன்பாடு உடையவை.

இந்தக் கலந்துரையாடல் தொடரின் அணுகுமுறையைப் பற்றிப் பிரதிபலிக்கும் திருமதி யாங்காலியேவா, இந்த உரையாடல்களின் மையத்தில் உள்ள கலந்தாலோசனைக் கொள்கை பங்கேற்பாளர்கள் சமூகப் பிரச்சினைகளின் நுணுக்கங்களை ஆராய்வதில் ஒருவருக்கொருவரைப் பங்காளிகளாகப் பார்த்திட உதவுகிறது என கூறுகின்றார். “இந்த அணுகுமுறை எதிர்வாத உறவுகளைத் தவிர்க்கின்றது, (எதிர்நோக்கப்படும்) சவால்களின் மூல காரணங்களை வளமாக ஆய்வு செய்திட உதவுகின்றது” என அவர் கூறுகிறார். ஒற்றுமையைப் பேணுவதில் ஊடகங்களின் பங்கு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் உள்ளிட்ட சமூக நல்லிணக்கம் குறித்த சொல்லாடல் தொடர்பான விஷயங்களை பொது விவகார அலுவலகம் தொடர்ந்து ஆராயவிருக்கின்றது.

https://news.bahai.org/story/1642/

பிரேஸில்: பகிரப்பட்ட அடையாளத்தின் மூலம் பிரிவினைகளை எதிர்கொள்தல்


1 பிப்ரவரி 2023

பிரேசிலியா, பிரேசில் – பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் உள்ள தேசிய காங்கிரஸில் சமீபத்தில் நடைபெற்ற பொது விசாரணையானது, மனிதகுலத்தின் ஆன்மீக இயல்பை அங்கீகரிப்பதன் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்களிடையே பகிரப்பட்ட அடையாளத்தை ஊக்குவிப்பதில் மதத்தின் பங்கை ஆய்வு செய்தது.

காங்கிரஸின் கீழ்சபையின் ஃபெடரல் துணை அதிகாரி எரிகா கோகே தமது தொடக்கக் கருத்துக்களில், பின்வரும் யோசனையை வலியுறுத்தினார்: “நமது ஆன்மீக இயல்பை மறுப்பது மனித இருப்பின் அடிப்படை அம்சத்தைப் பிய்த்து எறிவது போன்றது.”

பிரேசிலின் பஹாய் வெளிவிவகார அலுவலகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசாரணையில், கல்வியாளர்கள், சமய சமூகங்கள், பொதுமை சமூக அமைப்புக்கள் ஆகியன அடங்கிய ஒரு சமய ஒருமைபாட்டுக் குழுவின் பங்கேற்பு இருந்தது.

ஆழமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் ஆன்மீகக் கொள்கைகளைத் தழுவுவதன் மூலம் எவ்வாறு பலப்படுத்தப்படலாம் என்பதை விவாதங்கள் ஆராய்ந்தன.

பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் உள்ள தேசிய காங்கிரஸில் நடைபெற்ற பொது விசாரணையில் பங்கேற்ற சிலரின் குழு புகைப்படம்.

வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான லூயிஸா கவால்கன்டி, சமூகத்தில் பிரிவினைகளின் மையத்தில் அடையாள நெருக்கடி உள்ளது என கூறினார். “நாம் மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் வாழ்கிறோம்… கொந்தளிப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய, நெருக்கடி மற்றும் மாற்றத்தின் காலம் அது,” என அவர் கூறினார்.

சில குழுக்கள், பெரும்பாலும் “மற்றவர்” என கருதப்படுபவர்களுக்கு எதிரான எதிர்ப்பின் அடிப்படையாக மாறும் குறுகிய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமை உணர்வைக் கொண்டுள்ளனர், என திருமதி காவலன்டி விளக்கினார்.

இந்த அணுகுமுறைகள் இறுதியில் கலாச்சார மட்டத்தில் வலுப்படுத்தப்படுகின்றன என அவர் கூறினார். “தவறுதலாக, ‘மற்றவர்’ என்னும் இந்தக் கலாச்சாரத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்வதுதான் இன்றைய நமது சவால் எனவும், இதுவே போதும் எனவும் நாம் எண்ணுகிறோம்.”

திருமதி. கேவல்காண்டி கூறுகையில், “தேவைப்படும தன்மைமாற்றமானது, மனிதத் தொடர்புகளின் கூட்டுறவு வடிவங்களையும்… நமது சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஒடுக்குமுறை மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கும் கலாச்சாரத்தின் கூறுகளை வேறுபடுத்திப் பார்க்க அதிக மக்களுக்கும் சமூகங்களுக்கும் உதவும் ஒரு பரந்த கற்றல் செயல்முறை நிறுவப்படுதலைக் கோருகின்றது.

அத்தகைய கற்றல் செயல்முறையை ஸ்தாபிப்பதற்கு, மதத்திலிருந்து வழிகாட்டும் கொள்கைகள் தேவைப்படும். அதாவது, “மனித கண்ணியத்தின் அசைக்க முடியாத பாதுகாப்பு, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வகைப்படுத்தும் இடைத்தொடர்பு” மற்றும் கூட்டு நடவடிக்கையும் தீர்மானம் செய்வதற்குமான அடிப்படையாக நீதி, கலந்தாலோசனை ஆகியன. பிரேசில் சமூகத்தின் ஒரு குறுக்குப் பிரிவினருடன் சமூக நீதி மற்றும் கலாச்சார மாற்றத்தின் பிரச்சினையை ஆராய்வதற்கான வெளியுறவு அலுவலகத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விசாரணை இருந்தது. பெரும்பாலும் அது வழக்கமாக நடத்தும் கலந்துரையாடல் மன்றங்கள் மூலம் நடைபெற்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1641/