

1 மே 2023
பஹாய் உலக மையம் — உலகின் சீர்திருத்தத்திற்காக என்னும் தலைப்பிலான வெளியீட்டின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பஹாய் சமூகம், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த சமூக நடவடிக்கையாளர்களுடன் இணைந்து, லௌகீக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பங்களிக்க மேற்கொண்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பஹாய் உலக மையத்தில் பஹாய் அனைத்துலக மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த வெளியீடு, பஹாய் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டை வழங்குகிறது.
பஹாய் போதனைகளிலிருந்து வரும் ஆன்மீகக் கொள்கைகளில் வேரூன்றிய கூட்டுக் கற்றலுக்கான ஒரு வளர்ந்து வரும் கட்டமைப்பும் அனைத்து மனிதர்களும் “தொடர்ந்து முன்னேறும் ஒரு நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக படைக்கப்பட்டுள்ளனர்” என்னும் நம்பிக்கையும் இந்த முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாகும், என வெளியீடு கூறுகின்றது. இந்த வெளியீடு, உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முயற்சிகளின் எடுத்துக்காட்டுகளை வழங்கி, இந்த கட்டமைப்பின் சில முக்கிய கூறுகளை ஆராய்கிறது.

கோட்பாடுகளும் அணுகுமுறைகளும்
பல தசாப்தங்களாக, வளர்ச்சி என்பது லௌகீகவாத அணுகுமுறைகளால் மட்டுமே தீர்க்க முடியாத ஒரு சிக்கலான செயல்முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என வெளியீடு கூறுகிறது. கொள்கை வகுப்பாளர்களும் பயிற்சியாளர்களும் அபிவிருத்தி நடைமுறையை மேம்படுத்துவதில் ஆன்மீகம் மற்றும் மதத்தின் பங்கு பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக மேம்பாடு என்னும் இப்பதிப்பு, இந்தக் கருத்தை ஆராய்கிறது; சமூக நடவடிக்கையில் பஹாய் முயற்சிகளைத் தொடருவதற்கு அவசியமான பல கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை ஆராய்கிறது, அவற்றுள்: ஒற்றுமை மற்றும் நீதி, சமூகத்தை நிலைநிறுத்தும் உறவுகளின் மறுபரிசீலனைக்கான அழைப்பு; அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், “அறிவியல் இல்லாத மதம் விரைவில் மூடநம்பிக்கை மற்றும் மதவெறியாகச் சீரழிகிறது, அதே நேரத்தில் மதம் இல்லாத அறிவியல் வெறுமனே முரட்டு லௌகீகவாதத்தின் கருவியாக மாறுகிறது” என்பதை அது எடுத்துக்காட்டுகிறது; மற்றும் சர்வலோக பங்கேற்புக்கு அனைத்து பின்னணிகளிலிருந்தும் மனித குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் பரந்த பங்கேற்பு தேவைப்படுகிறது.
சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் திறன் வளர்ப்பு என்னும் கருத்தாக்கம் சர்வலோக பங்கேற்பின் நோக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையதாகும். இது மக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களைத் தங்கள் சொந்த வளர்ச்சிப் பாதையைக் குறித்துக்கொள்வதில் முன்னணியாளர்களாகப் பார்க்கிறது.
சமூக மாற்றம் என்பது ஒரு குழு மற்றொரு குழுவின் நலனுக்காக மேற்கொள்ளும் திட்டம் அல்ல என்பது வெளியீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த கோட்பாட்டின் உட்குறிப்பு ஆகும். மாறாக, எந்தவொரு தேசமும் அல்லது மக்களும் பிறர் பின்பற்றுவதற்கான ஒரு மாதிரியாகச் செயல்படக் கூடிய உண்மையான அமைதி மற்றும் செழிப்பின் நிலையை அடையவில்லை என்பதை அங்கீகரிப்பதில், ஒவ்வொரு சமூக மற்றும் கலாச்சார சூழலிலும் வளர்ச்சியின் அர்த்தத்தையும் தாக்கங்களையும் அதன் அனைத்து பரிமாணங்களிலும் – லௌகீகம், ஆன்மீகம் மற்றும் சமூகம் – கற்றுக்கொள்வதற்கான ஒரு செயல்முறை தேவைப்படுகிறது.

நடவடிக்கைப் பகுதிகள் மற்றும் செயல்பாடுகளின் ஒரு ஸ்பெக்ட்ரம்
சிறிய அளவிலான அடித்தட்டுத் திட்டங்கள் முதல் பஹாய்-உத்வேகம் பெற்ற அமைப்புகளால் செயல்படுத்தப்படும் பலக்கியமான (complex) வளர்ச்சித் திட்டங்கள் வரை பரந்த அளவிலான பஹாய் மேம்பாட்டு முயற்சிகளை இந்த வெளியீடு ஆராய்கிறது.
இந்த முயற்சிகள் உள்ளூர் தேவைகளுக்கான விடையிறுப்புகளைப் (response) பிரதிநிதிக்கின்றன மற்றும் கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல், கலை மற்றும் ஊடகம், சுகாதாரம், உள்ளூர் பொருளாதாரம், பெண்களின் முன்னேற்றம் மற்றும் மனிதாபிமான நிவாரணம் உள்ளிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளுடன் தொடர்புடையவை. உதாரணங்கள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள சமூக மற்றும் கலாச்சார அமைப்புகளின் ஒரு நெடுக்கத்தைக் (range) கொண்டவை. அவை பஹாய் சமூகத்தைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சமூக நிர்மாணிப்பு மற்றும் உள்ளூர் நடவடிக்கையை அவசியமாக உள்ளடக்கிய ஒரு செயல்முறை என்பதைச் சித்தரிக்கின்றன.
இந்த முயற்சிகளில் மதம் மற்றும் அறிவியலின் கண்ணோட்டங்களை ஒருங்கிணைக்கக் கற்றுக்கொள்வதன் மூலம், மனித நிலையை மேம்படுத்துவதற்கான புதிய நுண்ணறிவுகள் மற்றும் பாதைகள் உருவாக முடியும் என்பதை இந்த வெளியீடு உறுதிப்படுத்துகிறது.

தொடரும் கற்றல் செயல்முறை
உலகின் மேம்பாட்டை பொறுத்த வரை, அது பஹாய் சமூக நடவடிக்கை முயற்சிகளில் கற்றலை ஒரு மைய கருப்பொருளாகவும் செயல்பாட்டு முறையாகவும் எடுத்துக்காட்டுகிறது. இது தொடர்ச்சியான ஆய்வு, கலந்தாலோசனை, செயல் மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் அறிவியல் மற்றும் மதத்தின் நுண்ணறிவுகளின் ஒளியில் மேற்கொள்ளப்படுகின்றன. அபிவிருத்தியைப் பற்றி கற்றுக் கொள்வதற்கு வசதியாக, உள்ளூர் முதல் அனைத்துலகம் வரை அனைத்து மட்டங்களிலும் பரிணமிக்கும் ஏற்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளால் இந்தச் செயல்முறை ஆதரிக்கப்படுகிறது.
இந்தக் கற்றல் செயல்முறையின் மூலம், அண்டை நாடுகள் மற்றும் கிராமங்களிலிருந்து பெறப்படும் நுண்ணறிவுகள் மண்டல மற்றும் தேசிய பஹாய் ஸ்தாபனங்களால் ஒரு பரந்த அறிவு அமைப்புடன் இணைக்கப்படுகின்றன. மேலும், பஹாய் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு அபிவிருத்தியில் உலகளாவிய அனுபவங்களை ஒருங்கிணைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கற்றல் அமைப்பாகச் செயல்படுகிறது.
கற்றலை முறைமைப்படுத்தல் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் வளர்ச்சியைப் பற்றிய வளர்ந்து வரும் அறிவு களஞ்சியத்திலிருந்து பயனடையவும் அதற்கு பங்களிக்கவும் உதவுகிறது. ‘For the Betterment of the World’ இன் இந்தச் சமீபத்திய பதிப்பு இந்த வரிசையில் நான்காவது பதிப்பாகும், முந்தைய பதிப்புகள் 2003, 2008 மற்றும் 2018-இல் வெளியிடப்பட்டன. 29 ஏப்ரல் 2023 அன்று தொடங்கிய அனைத்துலக பஹாய் மாநாட்டிற்கு வந்த சுமார் 1,400 பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்களுக்கு இவ்வெளியீட்டின் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. புதிய பதிப்பின் நகலையும் Bahai.org -இல பெறலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1663/