பாஹிய்யா காஃனும்


பாஹிய்யா காஃனும்

அவர் பஹாவுல்லா, ஆசிய்யா காஃனும் தம்பதியரின் புதல்வியும், அப்துல் பஹாவின் சகோதரியும் ஆவார். பஹாவுல்லாவின் சமய நம்பிக்கையாளர்களிடையே ‘அதிப்புனித இலை’ என அறியவும் போற்றவும் பெற்றிருந்தவர். அவரைச் சுற்றியிருந்தோருக்கு அவர் ‘காஃனும்’, அதாவது ‘பெருமாட்டி’. இந்தப் பெண்மணி, ‘காஃனும்’ அவர்கள், தம்மை அறிந்து அன்பு கொண்ட எல்லோருடைய மனதிலும் ஊடுருவும் புத்துணர்ச்சியளிக்கவல்ல வகையில் வாழ்கிறார் – நாள் முழுவதும் காஃனும் கடமை உணர்ச்சியுடனும், இங்கிதம் மிக்க மனதுடனும், சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட அத்தியாவசியங்களை எளிமையாகப் பகிர்ந்து, தமது தினசரி ஜீவ உணவாக விளங்கிய அவற்றை நாமும் நமது பங்கிற்கு எடுத்துச் சென்று பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுப்பார்.

Tomb of Bahiyyih Khanum
பாஹிய்யா காஃனும் அவர்களின் கல்லறை


தனிப்பாங்கு மற்றும் வழிவகைகளை உள்ளடக்கிய அவருடைய இனிய சுபாவத்தைப் பற்றி சிந்திக்கையில்: தமது விருந்தினர்களோடு உங்களை அவர் வரவேற்கும் விதம், வசீகரம் கலந்த திடகாத்திரம், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும், அதே வேளையில் இலகுவாகவும், அன்னியோன்னியம் இல்லாமலேயே எல்லோரையும் மகிழ்வடையச் செய்வதில், – மென்மை கலந்த பெருந்தன்மை மற்றும் சுயநலம் பாராத ஒரு மேன்மை மிகு பெண்மனியாகத் திகழ்வார். அரச குல மாதர்களின் மனோபாவத்தை அவர் பிரதிபலித்ததானது, முன்னாள் பாரசீக நாட்டின் ராஜசபையை நினைவூட்டியது. தமது குடும்பத்தினருடன் அந்நாளைய சில சம்பிரதாயங்களை அவர் கடைபிடித்தே வந்தார். அவை, அவருக்கு உயிரற்ற செயல்களாக இல்லாமல், ஜீவனுள்ள நடைமுறைகளாகவே விளங்கின; வெளித்தோற்றம் மற்றும் நடப்பு நாகரீகம் இரண்டையும் கடந்த, சக மனிதர் ஒவ்வொருக்கும் உள்ளுறைந்த மரியாதை மற்றும் அக்கரையை வெளிப்படுத்தும் மென்மையான மனித உறவுக் கோட்பாடுகளாக அவை காஃனும் அவர்களுக்கு விளங்கின.

உயர்குடி மற்றும் மேல்வர்க்கத்தைச் சார்ந்த காஃனும் போன்ற பெண்மணிகளை முடக்கிவைக்கும் கிழக்கத்திய கட்டுப்பாடுகளை, ஒருவர் அடைமழையின் காரணமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது போல் ஏற்றுக்கொண்டுள்ளதையும், வாழ்க்கையை அந்தக் கட்டுப்பாட்டிற்குள் வார்த்து, தமது ஆன்ம சக்திகளை அங்கு வெளிப்படுத்தி, தமது உயர் பண்புகள் பிரதிபலிக்கப்படும் அரங்கமாகவும் அதை ஆக்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். வீட்டிற்குள் அமைதிச் சூழ்நிலை மற்றும் உயர்கடப்பாடுகளை உருவாக்க வெளிப்படுத்திய அவருடைய கவனம், மென்மைத்தன்மை கலந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கைக்காண கூறுகள் யாவற்றையும் அவர் சுமுகத்துடன் ஐக்கியப்படுத்தினார். அவர் உறுதிமனப்பான்மை எவரையும் அடக்க முயன்றதில்லை, அவர் முடிவான எண்ணங்கள் யார் மேலும் சுமத்தப்பட்டதில்லை. அவர் வழி மென்மையான வழி. ஓட்டை பிறர் ஒரே அடியில் நொறுக்கும்போது, காஃனும் அவர்கள் அளவுகடந்த கவனத்துடனும் திறனுடனும் ஓட்டின் உள்ளிருப்பதை வெளிக்கொணருவார். அவர் போக்கில் வற்புறுத்தலையோ சாதிக்க நினைக்கும் மனோபாவத்தையோ காணமுடியாது: எவர் மனதிலும் சுமையை ஏற்றமாட்டார், தமது விருப்பத்தையும் பிறர் மேல் நிச்சயமாக சுமத்த நினைக்கமாட்டார். மெல்லிய புன்னகையுடனேயே அழைப்பு வரும். காஃனும் அவர்களின் ஆதிக்கம் யாருமே உணராத நிலையில் செயல்படும். ஆக்கம் நிறைந்த அவரது அனுதாபம் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை அங்கங்களில், மிருதுவான அக்கரையாக வெளிப்பட்டு, கவலை தோய்ந்த நேரங்களில் அவர்களை இன்பத்தால் நிரப்பும். அந்த நேரத்தில், இந்த அனுதாபத்தை அனுதாபமாகக் காணாமல், களிப்புடனேயே யாவரும் அதை அனுபவிப்பார்கள். பரிசுகள் வழங்கும்போது அவற்றை ஒரு மெல்லிய பட்டுத்துணியில் சுற்றி வழங்குவது பாரசீக வழக்கம். அதாவது, உள்ளிருக்கும் பண்பட்ட பரிசை குறிக்க வெளியே மென்பட்டுத் துணி போர்த்தப்பட்டு இருக்கும். இதைப்போலவே காஃனும் அவர்களும் பரிசுக்குள் பரிசு வழங்குவார். அவர் அருகாமையில் இருக்கும் போது அடையும் இதமான மனநிறைவை, அவரைப் பிரியும் போது கூடவே ஈர்த்துச் செல்வோம். ஆனால் இந்த மனநிறைவு ஒரு மிகுந்த களிப்பை, ஆழ்ந்த மனோநிலையை அடக்கியிருக்கும் ஒரு பரிசுப் பொட்டலம் என்பது பிறகே தெரிய வரும். குறையாமல் வெளிப்பட்ட இந்த இரட்டை ஆசியினைக் கண்ணுற, ஃகாணும் அவர்களோடு நாங்கள் ஆக்கோ நகரில் இருந்தபோது வாய்ப்பு கிட்டியது. பிற குடும்ப அங்கத்தினர்கள் ஒரு திருமண வைபவத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, காஃனும் அவர்கள் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். திருமண சடங்கிற்குச் சற்று முன்பாக காஃனும் அவர்கள், அப்பொழுதுதான் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய வயதினளோ என்று நினைக்கப்படக்கூடிய மணப்பெண்னை, வரச்சொல்லியனுப்பினார். நீர் தோய்ந்த கண்களுடனும் நடுங்கிய தேகமுமாக அந்தப் பெண் வந்தாள். சிறிய புன்னகையை உதிர்த்து, வெள்ளை நிறத்திலான திருமண உடை, முகத்திரை, தலையில் மேல்நாட்டு முறையில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பூக்கள் ஆகியவற்றை காஃனும் அவர்கள் மெல்லத் தொட்டு, மென்மையான குரலில், “எவ்வளவு அழகாக உள்ளன,” என கூறினார். அந்த ஒரு அங்கீகார வார்த்தையில் மணப்பெண் தனது பயம் அனைத்தையும் மறந்து, திருமண வைபவத்திற்குத் தன்னால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஓர் ஆசீர்வாதத்துடன் சென்றாள்.

Bahiyyih Khanum
தமது வாலிபத்தில் பாஹிய்யா காஃனும்


பாரசீகரிடையே, ஒரு தாய் தன் குழந்தையை கண்டிக்கும்போதோ அல்லது ஆறுதல் கூறும் போதோ ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். இந்த வாஞ்சை நிறைந்த சொல்லை காஃனும் அவர்கள் தமக்கு நெருங்கியவர்கள் மற்றும் தம்மைச் சுற்றியுள்ள அனைவர்பாலும் உபயோகிப்பார். ‘மாடர் அய்ப் நடாரட்,’ ‘பரவாயில்லை அம்மா பரவாயில்லை’ எனும் மெல்லிய தொனியிலான வார்த்தைகளின் ஆறுதல் அளிக்கும் எதிரொலி சதா கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர் ஆறுதலளிப்பவராய் விளங்கினார். ஆனால் அவரைத் தாய் போன்றவர் என்று சொல்லுவதில் மனம் நிறைவு பெறாது. தாயைப் போன்றவர் என்பது ஒரு வரம்பிற்குட்பட்ட வார்த்தை. தாயன்பு மெல்ல அரவனைத்து தான் அன்பு செலுத்துவோரை தனது பிடியிற் கொள்ளும்; ஆதிக்கம் அதில் அடங்கியிருக்கின்றது. பிரதி அன்பையும் அது எதிர்பார்க்கின்றது. காஃனும் அவர்களின் வாஞ்சை இதையெல்லாம் கடந்தது. காஃனும் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் இதயம் மற்றும் உடல் இரண்டும் பெரும் சுதந்திரத்துடன் இருக்கும். அன்புக்கடன் பட்டுள்ளோமே, என்ற எண்ணம் எவருக்குமே இல்லாமல் செய்துவிடுவார். காஃனும் இவ்வளவு அன்பாக இருக்கின்றாரே, என்ற எண்ணம்கூட அவர்கள் மனதில் தோன்றா வண்ணம் காஃனும் அவர்களின் அன்பு அவ்வளவு இயற்கையானதாக இருக்கும். அவர் தொடுவது தெரியாமல் தொட்டு நன்றிக்கடன் மற்றும் பொறுப்புணர்வுகள் எதுவும் எழாமல் செய்துவிடுவார். அவர் ஆறுதலில் பஞ்சின் மென்மை இருக்கும்: காரணம், மனம் பெரிதும் புண்பட்டிருக்கும் வேலையில் தயையின் அழுத்தம்கூட மனதை மேலும் காயப்படுத்திவிடும் என்பதே. தைலம் தடவிவிடுவார் ஆனால் அவரது விரல்களின் கணம் தெரியாது; அதனால் நிவாரணமும் ஆறுதலும் மாயப் பரிசுகளாக கிடைக்கும். அந்த நேரத்தில் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரியாது தெரிந்துகொள்ளவும் முயற்சி இருக்காது. அந்தப் பரிசினை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நன்றியுணர்ச்சி கரைபுரண்டோடும்.

அவர் நம்மை அளந்துபார்த்து அதற்கேற்றவாறு வழங்கமாட்டார்; அல்லது வலி தானாக ஏற்படுத்திக்கொண்டதா அல்லவா, என்றெல்லாம் பார்க்கமாட்டார். துன்பத்திற்கு இயற்கையாகவே ஒரு புனிதத்தன்மை உள்ளது என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார். அவர் எப்போதும் நீதிபதியாக வீற்றிருந்தது இல்லை, ஆடுகளையும் ஓநாய்களையும் பிரித்துப்பார்க்க நினைத்ததும் இல்லை. மந்தையில் உள்ள ஆடுகளை வெள்ளை என்றோ கருப்பு என்றோ அவர் பார்த்ததில்லை, ஒருவர் உள்ளத்தில் இருந்து கிளம்பும் நல்ல எண்ணங்களை நல்ல எண்ணங்கள் என்றோ கெட்டவைகளை துர்எண்ணங்கள் என்றோ அவர் கூறியதில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் பழக்கமோ கண்டிப்போ அவரிடம் கிடையாது. இருள் சூழ்ந்த மனதுடன் சென்றால் அதில் அவர் விளக்கேற்றிவைப்பார்; தவறிழைத்துவிட்டாலோ அல்லது முயலாமல் இருந்துவிட்டாலோ அல்லது முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டோலோ, அந்த தோல்வியினால் நாம் அடைந்த ஏமாற்றத்தை அறிந்து நம்மேல் அதிக அன்பே நல்குவார்; நமது பலவீனம் மற்றும் தோல்விகளின்பால் பரிவும், அப்படியே முயற்சியின்போது துன்பம் ஏதும் அனுபவிக்காதவர்பாலும், தோல்வியில் அவமானப்படாதவர்பாலும் தயையே கொள்வார்.

யாராவது ஒருவர் அவரை துன்புறுத்த நினைத்தால், அப்படிச் செய்ய நினைப்பவரின் மனதில் அவ்வித கொடுமை உணர்ச்சி தோன்றியதற்காக அந்த மனிதருக்கே ஆறுதல் வார்த்தைகள் காஃனும் கூற நினைப்பார் என நிச்சயமாக நம்பலாம். அவர் அன்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அது முகத்திரையைக் கிழித்து அந்தச் சினத் திரையின் பின்னால் கிடக்கும் ஆன்மீகப் பசியை உணர்ந்து கொள்ளும். மிகக் கொடுமைக்கார உள்ளமே ஆனாலும் அது பிறரிடம் மென்மையைத்தான் எதிர்பார்க்கின்றது என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்தார். அவரிடம் அந்த அபூர்வமான மனோசக்தி, எந்தச் சூழ்நிலையிலும் வாஞ்சையையே வெளிப்படுத்தும் இயல்பு இருந்தது. அவர் புறிந்துணர்வின் ஆழம், மனித இதயங்களின் துயரங்கள் அனைத்தையும் ஊடுருவி அவற்றின் காரணங்களை கண்டறிந்து, அதன்மூலமாக அந்தத் துன்பமும், துன்பம் கொண்டோரும் ஆசி பெறவும் செய்தது.

எல்லா தயைகளுக்கும் தோற்றுவாயை நன்கு அறிந்துவைத்திருந்த அவர், தம்பாலான தயைகளை தெரிந்துகொள்ளவில்லை. அவர் ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கும் போது, அந்தப் பரிசுக்காக பரிசு வழங்கப்பட இருப்போரிடம் நன்றி தெரிவிப்பதைப்போல் இருக்கும். கொடுக்கவேண்டும் என்ற உணர்ச்சி நன்றி உணர்வுடனேயே அவரிடம் பிறக்கும். நமக்கு அன்பை வழங்கும்போதும் அந்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவார். கொடுப்பதற்கும் பெறுவதற்கும் அவர் வேறுபாடு காணவில்லை போலும். இது பின்வரும் சம்பவம் மூலம் தெரியவரும். தம்முடைய உலக வாழ்வின் கடைசி வருடத்தின் போது ஒரு நாள், தமது குடும்பத்தாரின் குழந்தைகளுடன் மலைக்கு சென்றிருந்தபோது, அங்கு உட்கார்ந்து குழந்தைகளையும் நிகழ்ச்சியையும் கவனித்துக்கொண்டிருந்தார். அன்று காஃனும் அவர்கள் தங்களுடன் இருந்தது, குழந்தைகளுக்கு ஒரு திருவிழா போல் மகிழ்ச்சியாக இருந்தது. தாம் சதா வெளிப்படுத்தும் களிப்பை அங்கும் அன்று அவர் பகிர்ந்துகொண்டார்… ஆனால் அன்று மாலை வீடு திரும்பிய பிறகு, அன்று கேளிக்கைகளில் தாம் பெற்ற இன்பத்திற்காகவும், குழந்தைகளின் மகிழ்சியினால் தாம் பெற்ற மகிழ்ச்சிக்காகவும் எல்லோருக்கும் அவர் நன்றி செலுத்தினார்!

தமக்குள் பிரகாசித்த பாசத்துடனான அன்புணர்வை அவர் உணர்ந்திருக்கவில்லை, ஆனால் இதே உணர்வை பிறரிடம் காணும்போது மிகுந்த நெகிழ்ச்சி கொள்வார். அவருக்குச் சேவை செய்வதை கடமையாகக் கொள்ளமுடியாது: அது ஒரு கிடைத்தற்கறிய பாக்கியம். இருந்தபோதிலும் அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை, தம்முடைய கடைசி மூச்சு உள்ளவரையிலும் தமக்காக பிறர் செய்யும் எந்த சிறு உதவிக்கும் சேவைக்கும் ஒரு புன்னகை மூலமாகவோ ஒரு வார்த்தை மூலமாகவோ நன்றி தெரிவிக்கத் தவறியதில்லை. பரோபகாரம் என்பது அவர் சிந்தித்து செயல்படுத்தும் ஒன்று அல்ல, அது அவரது இயற்கை. ஒரு காரியத்திற்கான தூண்டுதலுக்கும் அதனை அவர் செயல்படுத்துவதற்கும் இடையே எந்த சிறு தாமதமும் அவரிடம் காணமுடியாது. அவரது வெளிப்படையான போக்கு, அவருக்குள் பாயும், என்றும் தவறாத, தொடர்ச்சியான அன்பின் உந்துதலே என்பதை உணரலாம். குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், தின்பண்டங்கள், மற்றும் பணம் வழங்குவதிலும் மற்றவர்களுக்கு மலர்கள், கைப்பொருள்கள், ரோஜா அத்தர், ஒரு ஜபமாலை, அல்லது தாம் மிகவும் விரும்பி வைத்திருந்த பொருள் எதையாவது பரிசாக வழங்குவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். தாம் பெற்றவற்றை என்றாவது ஒரு நாள் அது தேவைப்படும் பிறருக்கு, ஒரு விசேஷ சலுகை தேவைப்படும் ஒருவருக்கு வழங்கிவிடுவார். அவர் ஒரு கொள்கலன் அல்ல, வாய்க்கால்; மூடிய இருப்புப் பெட்டியல்ல, .திறந்து கிடக்கும் போக்கிஷம்.

அதே சமயம் தம்முடைய சிறு சிறு பொக்கிஷங்களை அவர் பூட்டிவைத்துக்கொள்ளவில்லை, அதே போல் தம்முடைய விவேகம் மற்றும் வாழ்க்கையின் பெரும் அனுபவங்களையும் மறைத்ததில்லை. அவரது வாழ்வில், கடந்தகால அனுபவங்கள் எந்த ஒரு வெறுப்புணர்ச்சியையும் விட்டுச் சென்றதில்லை. அவர் வெளிப்படுத்தியக் கனல், வாழ்வின் அனைத்தையும் சுவர்ணமாக மாற்றியது. இந்தச் சுவர்ணத்தையே அவர் பகிர்ந்துகொண்டார். அவர் விவேகம் இதயத்தோண்றலாய் விளங்கியது. அவர் இந்த விவேகத்தை ஒரு கோட்பாடாகவோ அடிக்கோளாகவோ மட்டப்படுத்திக் கொண்டதில்லை. சுவற்றில் தொங்கவிடக்கூடிய அளவிற்கு அவர் எந்த விவேக வார்த்தைகளையும் கூறியதில்லை. ஆனால் அவர் அவராக இருந்தபடி தமக்குத் தெரிந்த அனைத்தையும் வழங்கினார். மனித நாவால் கூற முடியாத ஆயிரம் விஷயங்களை அவர் ஒரு புன்னகையாலும், ஒரு பார்வையாலும், அல்லது மென்மையான மௌனத்தின் மூலமுமாகவும் வெளிப்படுத்தினார்.

பலர் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் அவர் மௌனமாக இருப்பதுண்டு, மௌனமாக இருந்த போதிலும் அங்கு அவர் ஒதுங்கியிருப்பதில்லை. வாய்தான் மூடியிருக்குமே ஒழிய ஆவி அங்கு அலவலாவிக்கொண்டிருக்கும். அவர் மௌனம், அப்படி இருந்திடவேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டதும் அல்ல, சூன்யமானதும் அல்ல. அது அவரைப்போல் மற்றவரையும் மௌனமுறச் செய்யக்கூடிய ஒன்றும் அல்ல, மாறாக, மற்றவர் குரல் ஒலியோடு தானும் கலந்து இசை சேர்க்கும் அவரது ஆன்ம ஒலி அது. எவ்வளவு ஆழ்ந்த சாந்தம் கொண்டவராக இருந்தாரோ அந்த அளவுக்கு யாவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். களிப்புணர்ச்சி மிகுந்தவர், தம்மைச் சூழ்ந்திருக்கும் இளையவர் கேளிக்கைகளில் தாமும் மகிழ்வார். இந்த களிப்புணர்வுகள் அவரது ஆழ்ந்த சாந்தக் கடலின் சந்தோஷ அலைகள்.

அபூர்வமாகவே தனித்திருப்பார். தனிமையில் ஒருமையும் சாந்தியும் காண்பர் பிறர், ஆனால் காஃனும் அவர்களோ பிறர் சகவாசத்தில் அவற்றைக் கண்டும் பேணியும் வளர்த்தார். வாழ்வின்பால் அவர் போக்கு பிரார்த்தனை உணர்வாய் வெளிப்பட்டது. அவரது எண்ணங்கள் பனிந்த எண்ணங்கள். பிறருடன் தொடர்பை அவர்களுடன் ஒன்றுகலந்த அமைதியில் பெற்றார், குழந்தைகள் நிறைந்த, ஒளி சூழ்ந்த அறையில் தனிமையும் கண்டார். அவரது பிரத்தியேக அறை அவ்வீட்டின் இதயமாய் விளங்கியது. குளிர் காலத்தில் அவருடைய குளிர் போக்கும் சூட்டடுப்பின் ஜுவாலையின் அருகிலோ அல்லது சூரிய ஒளியில் சன்னல் அருகே மஞ்சத்தில் அவர் அமர்ந்திருக்கும் போதோ, சிறியோரும் பெரியோருமாக ஒருவர் ஒருவராக அவரைச் சூழ்ந்தும் பிறகு ஒருவர் ஒருவராக தத்தம் வேளைகளுக்கோ விளையாடவோ செல்வர் அல்லது காஃனுமை அவரது அறை வாசலில் நின்று ஒரிரு வினாடிகள் தரிசித்தோ செல்வர். அவர் அறைக்கு வெளியே நாமும், காலனிகளை கலற்றி வைப்பதோடு பொருளற்ற வெளியுலகக் கலாச்சாரம் அனைத்தையும் கலற்றிவைத்தே அவர் முன்னிலை செல்வோம். அவரது உலகத்தில், அந்த அறையில், நடிப்பிற்கும் சம்பிரதாயங்களுக்கும் இடமில்லை: அவர் ஒளிமிகுந்த எளிமையின் முன் நாமும் எளிமை பெறுவோம். அங்கு சகல பீதி, கூச்சம், பயசுபாவம் அனைத்தும் மறைந்துவிடும். நாம் உணராமலேயே நமது உணர்ச்சியின்மையை குறைப்பார், சிரத்தையின்மையை அகற்றுவார். இவர் எவ்வளவு நல்லவர், நான் அப்படி அல்லவே என்றெல்லாம் நினைக்க மாட்டோம். அங்கு ‘நான்’ எனும் எண்ணம் தற்காலிகமாக மறந்து போய், அந்த மறதியில் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் காணமற் போய்விடும். அகந்தையின் உயிர் ஓட்டம் வெட்டுண்டுபோகும். நாம் பற்றற்ற பறவைகளாவோம்.

பரந்த அந்த வீட்டின் தலைவியாகவும், அதன் தனி விவகாரங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிப்பவராகவும் பல வருஷங்கள் அவர் இருந்த போதிலும், தலைவி என்ற முறையில் எதையும் மேலோட்டமாக செய்தாரில்லை. ஏதாவது செய்யப்பட வேண்டுமானால், அதை உடனடியாகவும், முழுமையாகவும் செய்து முடிப்பார். கைகட்டி உட்கார்திருந்தாலும், அவர் அங்கு முழுமையாக வீற்றிருப்பார். அவர் மனது அடுத்து வேறு என்ன செய்வோம் எனும் எண்ணத்தில் மூழ்கியிருக்காது. வாழ்வுடனான ஐக்கியத்திற்கென்று, பிறருடன் இருக்கும் நேரத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, அந்த விநாடிகளை முழுமைப்படுத்தவும் செய்தார். அந்த விநாடிகள், காலத் தீவுகள்.

அவர் வாழ்வுடனும் அதை தமக்காக நிர்வகிப்போருடனும் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கவில்லை, தமக்குள்ளும் அவர் சொல் வேறு செயல் வேறு என்றோ, வேறுபட்டோ இருக்கவில்லை. அவர் ஒரு செயலில் இறங்கும் முன்பாக, தொடர்ந்து இதைச் செய்யலாமா வேண்டாமா என்பதை குறிக்கும் மனமாற்றத்தை அறிவிக்கும் தாமதமோ, அல்லது அச்செயலின் தூய்மையை அபகரிக்கும் தயக்கத்தின் முனுமுனுப்போ இருக்காது. அவரது சுபாவம் அவர்தம் ஆவியுடன் இரண்டறக் கலந்து, தூய்மையும் நேர்மையும் அவரது இயற்கை குனங்களாக விளங்கி, யாவற்றிலும் தூய்மையைக் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் பழக்கம், ஒரு தூண்டுதலும் தேவைப்படாத இயற்கை குணமாகவும் விளங்கியது. அப்பாவி என்பதைவிட, பாவங்கள் தம்மை அனுகவிடாமல் தடுக்கும் ஒருவரவர், ஏனென்றால் அவர் பாவத்தின் பல்வேறு உருவங்களை நன்கு கண்டுகொண்டு, பயமின்றி அவற்றை எதிர்நோக்குவார். வாழ்க்கையின் எல்லா அங்கங்களையும் பரந்த உள்ளத்துடனேயே ஏற்றார், அவற்றை என்றுமே சுமையாகக் கொண்டது கிடையாது, அவரது போக்கில் தப்பெண்ணங்களின் நிழல்கூட பட்டது கிடையாது. அவரிடம் குற்றம் காணப் புறப்பட்டால், அங்கு அபூர்வ பன்புகளின் மனிதப் பிரதிபலிப்பையே கண்டும், இந்த சுபாவங்கள் அவரை நம்மோடு புறிந்துணர்வின் அடிப்படையில் இனைத்தும், ஆச்சர்யம் விலகி ஒரு சேவித உணர்வே மிஞ்சவும் செய்யும்.

உலக ரீதியில், அவர் கற்றுணர்ந்தவர் என்றோ அல்லது கற்பிக்கப்பட்டவர் என்றோ கூற இயலாது: அவர் தமது விவேகத்தை மறைந்துள்ள அறிவூற்றுகளிலிருந்து ஈர்த்தார். அவரது பகுத்தறிவு அவருடைய இதய உதயமாக விளங்கினாலும், அந்த இதயம், மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மூல விஷயங்களைக் கொண்டு நிறைந்திருந்தது. அவர் அதிகமாக படித்தாரில்லை, எழுதினாருமில்லை, ஆனால் உயிர்களுடனான தொடர்பை சர்வ காலமும் கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளும் அவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாகவே இருக்கக் காண்போம்; இயற்கையின் எல்லா அங்கங்களும் எல்லா பொருள்களும், ஜீவனுடனோ அல்லது ஜீவனற்றோ, செய்தி ஒன்றை படிப்பதற்கு அட்சரங்களாகவும், உயிர் மற்றும் மெய் எழுத்துக்களாவும் அவருக்கு விளங்கின என மனம் எண்ணவே செய்யும். அதிலிருந்து அவர் பெற்றவைகளை வாழ்க்கை முறைகளாக அவர் செயல் படுத்தினார். அவர் விளக்கம் சொல்லியதுமில்லை, போதித்ததுமில்லை: நம்மை வாக்கு வண்மையினாலோ அல்லது புத்திசாதுர்யத்தினாலோ அவர் வென்றதில்லை: வற்புருத்தலுக்கோ, கவரும் முயற்சிக்கோ அவர் தம்மை ஈடுபடுத்தியது கிடையாது. நமது உடனடித் தேவையை நிவர்த்தி செய்யும் ஆவியின் ரசாயனக் கலப்பினால் உருவான ஒரு ரகசியத்தை, ஆழத்திற்கு ஆழம், அவர் நம்மோடு பகிர்ந்துகொள்வார்.

மனம் கலக்கமடைந்திருக்க நம்மைக் கண்டால், நமது இன்னல்களை கேட்டறியவோ அல்லது அவற்றை தீர்க்கவோ முனையமாட்டார். அவற்றை அவருடன் இருக்கும் போது நாம் மறந்துவிடுவோம். அவருடைய நிர்மலமான அன்பில் குழப்பங்களும் சிக்கல்களும் மறைந்துபோம். அவரோடு நாம், கொந்தளிப்பு, சந்தேகங்கள், மற்றும் கேள்விகளுக்கும் அப்பால் உள்ள ஒரு விழிப்புணர்ச்சி நிலையை அடைவோம். நாம் மறு உறுதிப்படுத்தப்படுவோம். ஒரே வார்த்தையில் நிச்சயநிலையையும் உறுதிப்பாட்டின் மெய்மையையும் அவர் அளிப்பார்.

சூரியனின் கதிர்கள் பட்டு வெப்பம் அடைவதற்கு முன்னால் அதிகாலையில் அத்திப்பழத்தை பறிக்கும் போது, அதன் அடியில் தெளிந்த தேன் கலந்த ஒரு சொட்டு நீர் இருக்கும். அத்தியின் ஆவியோ எனும் அதன் இனிமை, இரவில் காய்ச்சப்பெற்று, அதிகாலையில் ஒரு சிறு துளியாகச் சுண்டி, அந்த குளிர்ந்த பழத்தின் அடியில் வீற்றிருக்கும்…. அவ்வாரே, மெய்மையின் திட உடலோடு கூடி அதன் சாரத்தையும் காஃனும் வழங்கினார்.

அன்பை அதன் பலவகைகளிலான வழிகாட்டும் சக்திகளுடன் கூடி, பல வர்ணங்களில் பிரதிபலிக்கப்பட்ட அதன் மகிமையோடு, நமக்குக் காட்டினார், அதன்(அன்பின்) மூச்சின்பால் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, காற்றிற்கு தன்னை ஒப்படைத்த மரம், உருவம்பெற்ற தென்றலாக எப்படி அசைகின்றதோ, அதே போன்று நாம் தற்போது முழுமையாக, புறிந்துகொள்ள, சுமக்கமுடியாத நிலையில், அன்பின் பிண்ணனியில், ஒரு மாபெரும் சக்தி, அதன் சாரம், உள்ளதென்பதை விளக்கினார்.

நாம் திருப்தியற்றும், நிலையில்லாமலும் அவரிடம் சென்றபோது, அந்த திருப்தியின்மையும் போதாமையும் ஆன்மாவின் நிலையற்ற தன்மையே என்பதைக் கண்டுகொள்வோம். இந்தச் சோதனைக்கு அப்பால் என்றும் அடுத்த சோதனைக்கும் அப்பால் என்றும் ஆசிரமத்தையும் அமைதியையும் தேடி நாம் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இதோ அவரது வெள்ளை அறையில் அவற்றைக் கண்டோம். சிறு சிறு விஷயங்களில் சுவர்க்கத்தையே கொண்டுவரவும், முடிவற்ற அதை நான்கு சுவர்களுக்குள் கவரவும் இங்கு வழிகள் கண்டோம். இதோ இங்குதான் நிவாசம்.

இவ்வுலகையும் அவ்வுலகையும் அவர் வேறுபடுத்திப் பார்த்ததில்லை, அல்லது தமது ஆயுளில் தாம் கண்ட கொடுமைகளின் பயனாக, ஒளிமிக்க அற்புதங்களைக் கொண்ட அடுத்த உலகத்திற்கு தப்பிச் செல்லவும் அவர் ஏங்கியதில்லை. தமது தினசரி வாழ்க்கையில், அன்றாட நிகழ்வுகளை கனவின்பங்களின் விளிம்பிற்கே கொண்டுசென்றார், அற்பமான நிலையற்ற விஷயங்களிலும் அவர் அற்புதங்களைக் காண்பித்தார். சிறு சிறு விஷயங்கள் அவருக்கு சிறு விஷயங்கள் என்றில்லாமல், அவையெல்லாம் அகன்ற ஏதோ ஒன்றின் வெவ்வேறு கூறுகளாகவே விளங்கின. துன்பமுற்றோர் வருங்காலத்தில் இன்பம் பெற ஆறுதல் கூறாமல், நிகழ்காலத்திலேயே சூழ்ந்துள்ள இன்பத்தை அவர் உணரச் செய்வார். அவருடன் இருக்கையில், வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய கூறுகளிலும் அற்புதங்களைக் காண்போம்,ஒரு பூ, சுவற்றில் படரும் ஒரு நிழல், அவரது முகத்திரையின் ஒரு மடிப்பு, அல்லது கீழே தோட்டத்தில் கேட்கும் ஒரு குரல்; எல்லாமே மாயாஜாலங்களுடன் இனைக்கப்பட்டன. அனைத்தையும் இயக்கும் ஆவியின் மர்மங்களை, ஒவ்வொரு கண நேரத்தின் விலைமதிப்பற்றத் தன்மைகளை, உணர்ந்துகொள்வோம். இந்தத் தருணம், இந்தப் பொழுது, அந்த அந்தமில்லாத ஒன்றின் அழகு படர்ந்து, நிரந்தர மற்றும் நிலையான மகிழ்ச்சித் துளி ஒன்றையும் கொண்டுள்ளது.

ஆடம்பரங்கள் இல்லாமலும், பொருட் செல்வங்கள் குறைவாக, அதுவும் எந்த ஒரு பிரத்தியேக மதிப்பும் இல்லாதவையாக வைத்திருந்தாலும், உலகைத் துறந்தோர் போல் தமது வாழ்க்கையில் அவர் எதையும் துறக்கவில்லை. எதிலும் அழகை மிகவும் விரும்புவார். தம்மைச் சுற்றியுள்ளவற்றிக்கு அவருக்குள் விளங்கும் ஒழுங்கின் ஒளியையும், சுகந்தத்தையும், நேர்த்தியையும் அளித்தார். ஆனால் வெளித் தடயமாக விளங்கிய இந்த ஒளிக்கான உள் விவேகத்தை விவரிக்கக் கிளம்பினால், கிடைக்காத வார்ந்தைகளுக்காக வீனே தேடி அலையவேண்டியதுதான். அவரை அறிந்தோருக்கு எந்த ஒரு அழகிய பொருளும், பூரண பண்பட்டமையும், காஃனுமையே நினைவு படுத்துபவையாகவே இருக்கும். பூரண அழகில் அவர் அமரராய் விளங்குகின்றார். அவருடைய சுகந்த மனம் மற்றும் மென்மையை இளம் பச்சையும் வெள்ளியும் சூழ்ந்த இளவேனிற் காலத்தில் காண்போம்: தோட்டத்தின் நீரூற்றில் அவருடைய குரல் ஒளி கேட்கும். குழந்தைகளின் சிரிப்பொலி, கடலின் அலையோசை அவரையே நினைவுபடுத்தும். எங்கெங்கு மகிழ்ச்சியும் தோழமையும் உண்டோ , அங்கெல்லாம் அவரும் இருப்பார்.

மேற்கு நாடுகளில் உள்ள நாம் அவரை அவரது இறுதி நாட்களிலேயே கண்டோம். ஆனால், ‘இவரை வாழ்வின் சாயுங்காலத்தில் காணாமல், அவருடைய வாலிபப் பருவத்தில் அல்லது இளம் வயதிலேயே அறியாமற் போனோமே,’என்ற எண்ணம் அப்பொழுது மனதில் எழக் காரணமே இல்லாமற் போனது. முதிய வயதினரோடு நாம் ஒப்பிடும் சில மனப் பழக்க வழக்கங்களின் அறிகுறிகள் அவரிடம் இல்லை. கடந்த காலத்தைப் எண்ணிப்பார்த்து, வருடத்திற்குப் பின் வருடம் திருப்பப்படும் நினைவேடுகளுக்கிடையே நசுங்கிக் கிடக்கும் பழைய நினைவுகளில் பெருமூச்சு, முதிய வயதில் அவர் மனதில் ஓடுவது தெரிகின்றது, அந்த நினைவுகள் தெளிவாக மனதில் நின்றாலும், உயிருள்ள உணர்வுகளின் வர்ணம் மற்றும் முழுமை அற்றுப்போனவை அவை. காஃனும் அவர்கள் பழைய ஏடுகளைத் திருப்பி, உருண்டோடிய வாழ்வின் காணாமற்போன விநாடிகளை மறுபடியும் எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கடந்து போன வாழ்வின் முக்கிய இழைகள் நடப்பு வாழ்வு முறையின் இழைகளோடு பின்னப்பட்டுவிட்டன. அவருடைய நிகழ்காலம் எல்லா கடந்தகாலத்தையும் உள்ளடக்கியது.

அவர் இப்போதும் அழகாக இருக்கின்றார் என்று கூறமாட்டோம், ஏனென்றால் அது கடந்தகால தருணங்களை பாடம் பன்னும் ஒரு செயல். அவரது தற்போதைய அழகு சிறு வயதில் இருந்த உடல் அழகின் தொடர்ச்சி என்றில்லாது, முழுமை பெற்ற வாழ்வே அவரது அழகாக விளங்கியது. தமது சக்தியையும் வடிவமைக்கும் மேன்மையையும் ஒன்று திரட்டி, ஒரு காந்தி நிறைந்த மென்மை அவர் முகத்தில் இழையோடுவதைக் காணலாம். தெளிந்த நீலமாக இருக்கும் அவர் கண்களைத் தவிர பிற கவர்ச்சிகள் இன்று மங்கிவிட்டிருந்தாலும், அவரது மிருதுவான தேகத்தின் அமைப்பு காலச் சிற்பியினால் மாற்றப்பட்டிருந்தாலும், மிகுந்த மெலிவு மற்றும் மென்மையாலும், ஸ்பரிசத்தில் மிருதுவாகவும், அமைப்பிலும், உயர்ந்த சிந்தனை, செயல்கள் ஆகியவற்றின் இனைப்பால் உண்டான உயர்ந்தபோக்கு ஆகியவற்றால் அவர் புற அழகைவிட உயர்ந்தே இருந்தார். அவர் அங்க அசைவுகள் அர்த்தங்களை உள்ளடிக்கியிருந்தன: நீண்டு வரும் அவரது கைகள் நம்மைத் தொடும் முன்னரே நம்மை ஆசீர்வதித்திருக்கும். பேசும் மொழிக்குத் தமது சுவபாவத்தின் கவர்ச்சியை கலப்பதில் இளமையின் வேகமும் முதுமையடையாத சக்தியும் அவருக்கு இருந்தன. ஒரு சிறிய கதை சொல்கையிலோ அல்லது ஒரு சிறிய விஷயத்தை விவரிக்கும் போதோ, அவர் நிதானித்தும் புன்னகைத்தும், அந்தக் கதாபாத்திரத்தை முன் நிறுத்தி; ஒளியேற்றிய பிறகே நமக்குக் கொடுப்பார். அமளியும் கலவரங்களும் நிறைந்த அவருடைய இளமை பருவத்தில் அல்லது தேசப்பிரஷ்டத்திலும் சிறைவாசத்தின்போதிலும் நடந்த சம்பவங்களை விவரிக்க நாங்கள் வேண்டிய போது, விவரிப்புக்கு அடங்காத காட்சிகளை மறு விமர்சனம் செய்யவோ அல்லது தமது துன்பம் நிறைந்து வாழ்வின் ஒரு பகுதியை வெளிப்படுத்த முயற்சிக்கவோ மாட்டார். தம்முடைய அமைதி நிறைந்த உள்மனதிலிருந்து ஜீவனுள்ள காட்சிகள் மற்றும் விசனமான அம்சங்கள் சிலவற்றை வெளிவர அனுமதித்து, நம் எல்லோரையும் இந்தச் சிறு காட்சிகளைக் கொண்டு மனம் நெகிழச் செய்து, அதனால் எல்லா காலங்களிலும் அவர் அனுபவித்த கொடுந் துயரம் மற்றும் அவர் மனம் அடைந்த துக்கத்தின் முழு அளவையும் உணரச் செய்வார்: இந்தத் துயரம், இந்த வலி யாவும் அவர் தமக்கென்று அனுபவிக்கவில்லை என்பதையும் நாம் உணர்வோம். ஒரு பார்வையில் மனவேதனையை அப்படியே வெளிப்படுத்துவார். இந்தத் தாக்கம் நிறைந்த பார்வையில், முதலில் மனிதத் துன்பங்களைக் காண்போம், பிறகு அதன் பின்னனியில் இந்த கொடுமைகளுக்குக் காரணமானவர்கள், தமது இருளடைந்த புறிந்துணர்வினால் அறிய முடியாத அக்கொடுமைகளின் தடயங்களைக் காண்போம்.

அவருடைய சுமைகள் பார்வைக்கு எளியவையாகத் தோன்றின, காரணம் அவர் அந்த சுமைகளின் பாரத்தால் கூனிப்போகவில்லை, பெரும் காரியங்களை கடும் முயற்சிகள் ஏதும் இன்றி நிறைவேற்றுவதாகத் தோன்றும். அவர் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவோ அல்லது வேறு ஓன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருப்பதாகவோ தெரியவேயில்லை, காரணம் அவர் முகத்தில் களைப்பு மற்றும் பிரயாசைக்கான அறிகுறிகள் கிடையா. அவர் வாழ்நாள் முழுவதும், மனிதப் போராட்டத்தின் தூசிப் படலம் சூழ்ந்த தகிக்கும் நேரங்களையோ, மூச்சு வாங்கச் செய்யும் சிறிய சாதனைகளையோ அறியவில்லை, ஆனால் இதயம் சாந்தத்தால் உயர்ந்து, அடுத்தடுத்து வரக்கூடிய சிறமம் மிக்க நாட்களை எதிர்நோக்கி, கால் இடறாமல், முன்நோக்கிச் சென்றார்.

அவர் வாழ்வை ஒரு தியாகமரணத்திற்கு ஈடான வாழ்வு என்று கூறமுடியாது, ஏனென்றால் அவர் அதை அவ்விதமாக நினைக்கவேயில்லை. அவர் உயிர்த்தியாகிகளின் புளகாங்கிதத்தில் மெய்மறந்துப் போகவில்லை மற்றும் அதன் கொடியை உயர்த்தி, எதிர்கொள்ளப் பாய்ந்து முன்நோக்கிச் சென்று வீர தீரத்துடன் அர்ப்பணம் செய்யவில்லை. அவர் ஆர்வம் ஒரே சீராக ஜுவாலை விட்டுக்கொண்டிருந்தது. சோதனைகள் மற்றும் ஆபத்துகளை எதிர்நோக்கும் வேளைகளில் அவசரப்படவுமில்லை அல்லது பின்தங்கவுமில்லை, மாறாக அபாயம் நிறைந்த பாதையில் மூச்சு விடுவதுகூடத் தெரியாமல் அமைதியாகச் சென்றார். அவர் மனோதைரியம் அவருடைய புறிந்துகொள்ளும் நம்பிக்கையிலிருந்து பிறந்தது மற்றும் இந்த நம்பிக்கையே, இந்த விளக்கமே வருடா வருடங்கள் முடிவில்லா உழைப்பிற்கும், நுனுக்கமான சேவைக்கும், மற்றும் கை வசம் ஒன்றும் இல்லாமல் காத்திருந்த நேரங்களில்,ஈடுசெய்யமுடியாத துக்கம் மற்றும் இழப்புகள் தோறும் அவரை சாந்தத்துடன் வழிநடத்திச் சென்றது.

அவர் தம்முடைய சொந்த வாழ்வில் சந்தித்த கொடுமைகள்பாலும், கண்டனங்கல்பாலும், மன்னிப்பு என்பதைவிட உயர்ந்த வேறு ஏதோ ஒன்றையே வழங்கினார். புண்பட்டுப் பின் மன்னிப்பது மிக உயர்ந்த செயல் ஆனால் புறிந்துகொண்டு பின் புண்படாமல் இருப்பது அதற்கும் மேலானது. இந்த சக்தியை அவர் பெற்றிருந்தார். புகார் கூறாமல் ஏற்றுக்கொள்வது எனப் பொருள்படும் ‘மாஸ்லூம்’ எனும் வார்த்தை காஃனும் அவர்களின் பெயரோடு தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது. அவர் குறைபட்டார் என்றோ புலம்பினார் என்றோ தெரிந்ததே இல்லை. அவர் இருப்பதைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவுபடுத்திக்கொண்டார் என்றில்லை, ஆனால் ஒவ்வொன்றிலும், கொடுமைகளிலும் கூட, விவேகத்தின் சிதைக்கப்படாத விதைகளைக் கண்டார். அவர் வாழ்வின் அதிர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் எதிர்க்கவில்லை மற்றும் இடையூறுகளை விட்டு ஓடவுமில்லை. அவர் எதற்கும் பொறுமையற்றுப் போகவில்லை. அப்படி பொறுமையற்றுப் போகவோ அதே சமயம் கிளர்ச்சி செய்யும் தன்மையோ அவருக்கு இல்லை. ஆனாலும் இது தொடர்-துன்பம் பொறுத்தல் என்பதைவிட நாம் காத்திருக்கும் மற்றும் செயல்படாத காலங்களில், தாம் செயல்படும் சக்திகளைப் புறிந்துகொண்டதே ஆகும்.

இறுதி இலக்கை அடைய படைப்பை இயக்கும் சக்தி மற்றும் பரந்த செயற்பாடுகளோடு அவரும் இயங்கினார். நம்பிக்கையின் அடித்தலமாய் இருக்கின்ற முழுமையான அர்ப்பணம், குறைகளற்ற இணக்கம் ஆகியவற்றோடு நிச்சயத்துடனும், மனோதிடத்துடனும், அவர் தமது வாழ்வின் ‘திருச்சூரியரின்’ சுற்றுப்பாதை வட்டத்தை வலம் வந்தார்.

ஆக, இவ்விதமாகவே அவர் வாழ்ந்தார். அவரது இறுதி நாட்களில், நழுவும் சிந்தனா சக்திகள் அவருடைய இதயம் ஆவி இரண்டையும் மேலும் கூர்மைபடுத்தவும் தீவிரப்படுத்தவுமே செய்தன. உடல் ஹீனம் மற்றும் வலி ஆகியவை அவரை மேகம் போல் மூடாமல், மனக் கருவிகளையும், நிறந்தரமற்ற இந்திரியங்களையும் துறந்தனரோ என எண்ணும்படியாக, தமது வாழ்வின் சாரங்களாக விளங்கிய அம்சங்களை மட்டுமே அவர் இறுதி வரை இருகப் பற்றியிருந்தார். அந்த நிலையிலும் அவர் புண்ணகையானது, சக்தியை, சாந்தத்தை, மென்மையை மற்றும் புறிந்துகொண்டமை அருள் ஆகிய இரண்டுமான அன்பை நினைவூட்டியது. இவ்விதமாகவே தமது இறுதித் தெளிவான குறிப்புகளாக தமது வாழ்க்கை முறையை ஞாபகார்த்தமாக விட்டுச் சென்றார்.

புரிந்துகொள்ளல்-1


கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள வெகுமதிகளுள் பகுத்தறியும் ஆற்றலே அதி உயர்ந்தது என கூறலாம். இந்த ஆற்றலின் வாயிலாகவே மானிடம் அனைத்து உயிரினங்களில் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் ஒரே உயிரினமாக தனித்தன்மை பெற்றுள்ளது. மனிதனுக்குப் பஞ்சேந்திரியங்களான பார்வை, செவி, நுகர்வு, சுவை, ஸ்பரிசம் ஆகிய புற ஐம்புலன்கள் உள்ளன இவற்றின் உதவியுடன் மனிதன் வஸ்துநிலையில் உள்ளவற்றை உணர்கின்றான். இவையல்லாமல் மனிதனுக்கு கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளல், பொதுப்புலன் மற்றும் நினைவாற்றல்கள் என அக ஐம்புலன்கள் உள்ளன.

வெளிப்புலன்கள் மற்றும் உட்புலன்கள் என கூறுகின்றோம். புற ஐம்புலன்களான வெளிப்புலன்கள் குறித்து எல்லாருமே ஓரளவுக்கு அறிவுற்றிருப்பார்கள், ஆனால், இந்த உட்புலன்களின் தன்மை யாது? ஆங்கிலத்தில் இவற்றை:

  • imagination(கற்பனை)
  • thought(சிந்தனை)
  • comprehension(புரிந்துகொள்ளல்)
  • common faculty(பொதுப்புலன்)
  • memory(நினைவு)

என அழைக்கின்றோம். இந்த ஐந்து உட்புலன்களுள் பொதுப்புலன் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். பொதுப் புலனானது புறப்புலன்களுக்கும் அகப்புலன்களுக்கும் இடையீட்டாளராகச் செயல்படுகிறது. உதாரணமாக நமது கண்ணின் உதவியோடு நாம் ஒரு பூவைப் பார்க்கின்றோம். இந்தத் தகவலை பார்க்கும் ஆற்றலானது பொதுப்புலன் என்படும் இடையாற்றலுக்கு அனுப்பிவைக்கின்றது. இந்தப் பொதுப்புலன் அத்தகவலை கற்பனையாற்றலிடம் அனுப்புகிறது. கற்பனா சக்தி அத்தகவலை உருவகப்படுத்தி சிந்தனாசக்தியிடம் அனுப்புகிறது; சிந்தனாசக்தி அதை சிந்தனையில் செலுத்தி புரிந்துகொள்ளும் ஆற்றலிடம் அனுப்புகிறது, பிறகு புரிதலானது அதன் மெய்ம்மையை உணர்ந்தவுடன்,தகவலை நினைவாற்றலிடம் அனுப்பி, நினைவாற்றல் பிறகு அதை தனது களஞ்சியத்தில் சேமித்து வைக்கின்றது. பின்வரும் வரைபடத்தைக் காணவும்:

மிருகங்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவற்றுக்கு வெறும் புறப்புலன்கள் மட்டுமே உள்ளன மற்றும் பிறக்கும் போதே அவற்றுள் இயல்பாக உள்ள உள்ளுணர்வுகளின்(instincts) உதவியோடு செயல்படுகின்றன.

powers of a man

தாதுப்பொருட்களுக்கு பிணைப்பாற்றல் உள்ளது; தாவரங்களுக்கு பிணைப்பாற்றலோடு வளரும் ஆற்றல் உள்ளது; மிருகங்களுக்கு பிணைப்பாற்றல் மற்றும் வளரும் ஆற்றல்களோடு வெளிப்புலன்களான ஐம்புலன்களும் உள்ளன.

நாம் இதுவரை இங்கு அறிந்துகொண்டவரை மனிதனுக்கு ஆறறிவு உள்ளது எனக் கூறுவது தவறாகும். ஆறாவது அறிவான பகுத்தறிவு என்பது அவனுடைய உட்புலன்கள் ஐந்தில் ஒரு புலன் ஆகும் என்பதே உண்மை.

பஹாவுல்லா தமது எழுத்தோவியங்களில் மனிதனுக்கு வழங்கப்பட்ட வெகுமதிகளுள் புரிந்தல் ஆற்றலே மிக உயர்ந்தது எனக் கூறுகின்றார். இந்தப் புரிந்துகொள்ளும் ஆற்றலின்வாயிலாக மனிதன் தன் பிறப்பின் நோக்கத்தையும், தன்னைப் படைத்தவராகிய ஆண்டவரைப்பற்றியும் அறிந்துகொள்ளமுடிகிறது.
(தொடரும்)

எவின் சிறையிலிருந்து ஒரு பரிசு


5 ஜூன் 2009

இரான் நாட்டில் பஹாய் சமயம் ஆரம்பித்ததிலிருந்து பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர், மற்றும் பல பஹாய்கள் ஜோடிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் ஒருவர் திருமதி பாஃரிபா கமாலபாடி.

திருமதி பாஃரிபா கமாலபாடி, மற்றும் ‘யாரான்’ எனப்படும் ஆறு பஹாய் தலைவர்கள், மற்றும் வேறு பல பஹாய்கள் பிரசித்தமான எவின் சிறையில் வாடுகின்றனர். அவர்களின் உடல்கள் சிறைப்படுத்தப்பட்டும் உளவியல் ரீதியில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போதிலும், அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், மற்றும் உலகைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான அவர்களின் நலன்விரும்பிகளை மனதிற்கொண்டு அவர்களின் ஆன்ம ஒளி மேலும் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு
எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு


மார்ச் மாதம் திருமதி கமாலபாடியின் கடைக்குட்டி மகளான, தரானியின், பிறந்த நாளாகும், ஆனால் அவளுடைய அன்னையினால் தம் மகளுக்கு சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்து ஒன்றும் செய்யமுடியவில்லை! இருந்தபோதும், தம்மால் முடிந்த ஒன்றை தமது மகளுக்காக செய்தார். அவர், கடுமையான சிறைவாசத்திற்கு உட்பட்டிந்தபோதிலும், தம்மைப்போல் சிறைப்படுத்தப்பட்டோருக்காக வாழ்வும் அன்பும் துளிர்விட முடியும் என்பதை நினைவூட்ட சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு சிறு செடியை வளர்த்தார் — அச்செடியை தமது மகளான தரானிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இங்கு இணைக்கப்பட்டுள்ள படத்தில் அச்செடியையும் அதைப் பெற்ற தரானியையும் காணலாம். அடுத்தவருடமாவது, எவின் சிறையின் கடுமைகளுக்கு வெகு தொலைவிற்கு அப்பால், தங்கள் சொந்த வீட்டிலேயே களிப்போடு ஒரே குடும்பமாக தரானியின் பிறந்த நாள் கொண்டாடப்பட நாம் பிரார்த்திப்போமாக.

இப்படம் Iran Press Watch எனப்படும் செய்தி நிறுவனத்திற்கு திருமதி பாஃரிபாவின் சகோதரரால் வழங்கப்பட்டது.

உலகில் அமைதி ஏற்படுமா?


சமீபத்தில் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஓரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாக கேட்டுள்ளார்?

மனுக்குலம் அடுத்த நூறு வருடங்களைத் தாங்குமா?

இதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார்.

ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம்.

The Myth of Stephen Hawking

அடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் எனக்குத் தெரியாது. அதனால்தான் அக்கேள்வியை நான் கேட்டேன். மக்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், நாம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். 1940-ற்கு முன்பு, நமது முக்கிய அச்சுறுத்தலாக வானவெளியில் சூரியனைச் சுற்றி வரும் அஸ்டராய்ட் எனப்படும் பெரும் விண்பாறைகளினால் ஆன சிறு கோள்களோடு பூமி மோதிக்கொள்ளும் அபாயம் விளங்கியது. இவ்வித மோதல்கள் பூமியின் பெரும்பாலான உயிரனங்களின் அழிவிற்கு காரணமாக விளங்கியது. இருந்தபோதிலும் இத்தகைய அழிவு ஏற்பட்டு 7 கோடி வருடங்களாகிவிட்டன. அடுத்த 100-களில் இத்தகைய மோதல் நிகழும் சாத்தியம் குறைவே. ஆனால், நாம் இப்போது எதிர்நோக்கும் முக்கிய அபாயமாக அனு ஆயுத போரே விளங்குகிறது. அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனுக்குலத்தை பலமுறை அழித்திடக்கூடிய அளவிற்கு அனு ஆயுதங்களைப் பெற்றிருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் அனுஆயுத போர் குறித்த அபாயகரமான சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளன. கோல்ட் வோர் எனப்படும் போர் நிலையின் முடிவோடு அத்தகைய அபாய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது, ஆனால் மறையவில்லை. மனிதர்களை முழுமையாக அழித்திடக்கூடிய அனு ஆயுதங்கள் இன்றும் போதிய அளவு உள்ளன. தன்னை வேறொரு நாடு தாக்கக்கூடும் எனும் பதட்டத்தில் ஒரு நாடு அனு ஆயுதத்தைக் கையாளக்கூடும்.

இன்று வேறொரு அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அது சில சிறிய நிலைத்தன்மையற்ற நாடுகள் அனு ஆயுதங்களைப் பெறுவதனால் ஏற்படக்கூடும். இத்தகையை சிறிய அனுசக்தி நாடுகள் பல கோடி மக்களின் அழிவை ஏற்படுத்தக்கூடும், ஆனால், அது மனுக்குலத்தின் முழு அழிவையே ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த நாடுகள் உலக வல்லரசுகளுக்கிடையே போர் மூட்டிவிட்டும் அதனால் பேரழிவுமிக்க அனு ஆயுதப் போர் நிகழும் அபாயமும் உள்ளது.

பூமியில் நமது நிலைத்த வாழ்விற்கு சவால்களாக இத்தகைய சிறுகோள்களின் கடுமோதல், அனு ஆயுத யுத்தம் ஆகியவற்றோடு மேலும் பல அச்சுறுத்தல்கள் சேர்ந்துகொண்டுள்ளன. தட்பவெப்ப நிலைமாற்றத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலக நாடுகள், கரியமிலவாயுவின் வெளிப்பாட்டை குறைப்பதன் வாயிலாக இத்தகைய தட்பவெப்ப மாற்றத்தின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தகைய தட்பவெப்ப மாற்றம் திரும்பவியலா ஒரு நிலையை அடைந்தும் அதனால் பூமியின் வெப்பம் சுயமாக அதிகரித்துக் கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இரு துருவங்களிலும் பனிக்கட்டிகள் கரைவதானது வானவெளியில் பிரதிபலிக்கப்படக்கூடிய வெப்ப அளவை குறைத்தும், அதனால் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவும செய்கின்றன. கடல் வெப்பத்தின் அதிகரிப்பினால் கடல் நீரின் அடியில் இருக்கும் கரியமிலவாயு பெரும் அளவில் வெளிப்பட்டும், அதனால் “கிரீன் ஹௌஸ் எபெக்ட்” எனப்படும் ஒரு நிலையை மேலும் அதிகரித்திட செய்யும். 250 சென்டிகிரேட் பாகைகள் வெப்பமுற்றும், கந்தக அமிலத்தை மழையாக பெய்தும் கொண்டிருக்கும் நமது சக கோளாகிய வெள்ளி கிரகத்தின் நிலையை நமது பூமியும் அடைந்திடாமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோமாக.

வேறு வகைகளில், ஏதேச்சையாக மரபனுரீதியாக பொறியமைக்கப்பட்ட கிருமிகளை வேண்டுமென்றோ, வேண்டாமலோ வெளிப்படுத்தும் அபாயமும் உள்ளது. நமது தொழில்நுணுக்கத்துறை சார்ந்த சக்திகளை நாம் அதிகரித்துக்கொள்ளும் போது, அதன் வாயிலாக பேரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலையையும் அதிகரித்துக்கொள்கின்றோம். மனுக்குலம் பேரபாயமிக்க எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. பூமிக்கு வேறு கிரகங்களில் வாழும் உயிரினங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த ஓர் வேடிக்கை பேச்சு வழக்கில் உள்ளது. அதாவது, ஒரு நாகரீகம் பூமியின் அளவு மேம்பாடு காணும்போது அது நிலைத்தன்மை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்பதாகும். வேறு உயிரினங்கள் பூமிக்கு வராததற்து வேறு பல காரணங்கள் உண்டென்றாலும் இத்தகைய வேடிக்கை கதைகள் அபாயமிக்க நமது சூழ்நிலையை உணர்த்துகின்றன. மனிதன் வானவெளி சென்றும் வேறு கிரகங்களுக்கு குடி பெயர்வதும் நமது நிலைத்தன்மையை பாதுகாக்க உதவிடும். ஆனால், இது அடுத்த 100 வருடங்கள் வரை நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு வேளை, மரபனு ஆய்வின் வாயிலாக நாம் விவேகம் மிக்கவர்களாகவும், சாந்தகுனமுடையவர்களாகவும் ஆகிடுவோம் என நம்பிக்கை கொள்வோமாக.

பஹாய் எழுத்துக்கள் இது குறித்து என்ன தெரிவிக்கின்றன?

இறைவன் மனிதனை அவன் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக படைத்துள்ளார். இறைவனின் படைப்புக்கு அளவில்லை மற்றும் அவர் இருக்கும் வரை அவருடைய படைப்பும் இருந்துவரும். இறைவனின் படைப்புகளிலேயே அதிசிறந்த படைப்பாக மனிதன் விளங்குகிறான். மற்ற அனைத்தையும் அவற்றின் சாயலாகவே படைத்த இறைவன் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் மற்றும் அவனுக்கு அவருடைய வழிகாட்டல் என்றென்றும் உண்டெனும் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.

அறிவியலாளர் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் இறைவன் குறித்தும் அவரது படைப்பாகிய மனிதனை குறித்தும் ஓர் அறிவியலாளர் எனும் முறையில் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக முதலில் நான் பாரம்பரிய வழக்காக வந்துள்ள ஐந்து காரணங்களை சமர்ப்பிக்கின்றேன்.

பிரபஞ்சவியல் வாதம்

இப் பிரபஞ்சத்தின் உளதாம்நிலையின் தாக்கத்திற்கு தகுந்த காரணம் ஒன்று இருக்கவேண்டும்.

இயல்திட்டவாதம்

இப் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அதன் பின்னனியில் ஒரு நோக்கத்தை அல்லது திசையை சுட்டுகின்றது

விவேகவாதம்

கட்டொழுங்கும் இயல்பான விதிமுறையும் பெற்றுள்ள இப் பிரபஞ்சத்தின் இயக்கமுறை அதன் பின்னனியில் அறிவாற்றல் ஒன்றை சுட்டுகின்றது.

மெய்ப்பொருள்மூலவியல்வாதம்

இறைவன் குறித்த மனிதனின் எண்ணங்கள் அல்லது விழிப்புணர்வு அத்தகைய விழிப்புணர்வினை அவனுள் பதித்துள்ள ஓர் இறைவனை சுட்டுகின்றது.

நெறிமுறைவாதம்

மனிதன் இயல்பாகவே பெற்றுள்ள நன்மை மற்றும் கெடுதல் குறித்த உள்ளுணர்வு அவன் தான் உள்ளார்ந்த நிலையில் பெற்றுள்ள, ஏதோ ஓர் உயர்ந்த ஆற்றலால் அவனுள் பதிக்கப்பட்ட, ஒரு விதிமுறை தொகுப்பை பிரதிபலிக்கின்றது.

அதாவது மனித சக்திக்கும் மீறிய தெய்வீக சக்தி ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் மனிதன் வாழ்ந்து வருகின்றான். அச்சக்தி அவனுக்கு வேண்டியதை வழங்கியும், வழிகாட்டியும் வந்துள்ளது, இனியும் அது அவ்வாரே தொடர்ந்து செய்து வரும். அதாவது மனிதன் இறைவனாலும், அவரது குறிப்பிட்ட திட்டம் ஒன்றின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளான். இத்திட்டத்திற்கேற்ப அவன் தான் படைக்கப்பட்டதிலிருந்து இதுவரை வளர்ச்சியடைந்து வந்துள்ளான். விஞ்ஞானிகள் மனிதன் ஒரு காலத்தில் ஓர் அனுவின் நிலையில் கடல் நீரில் வாழ்ந்தும் பிறகு சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சியடைந்து நிலத்தில் வாழும் ஓர் ஜீவனாகவும், பிறகு மரத்தில் குரங்கைப் போல் வாழ்ந்தும், பின் படிப்படியாக கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம், என பல படிகளைத் தாண்டி இப்போதிருக்கும் நிலையை அடைந்துள்ளான். அதாவது பாலப்பருவத்தைக் கடந்து அவன் இப்போது வாலிப பருவத்தை அடைந்துவிட்டான். இதுகாறும் உலகில் ஏற்பட்டு வந்துள்ள சச்சரவுகளும் சண்டைகளும் மனிதனின் முதிர்ச்சியின்மை மற்றும் இறைவன் அவனுக்கென வழங்கியுள்ள நல்லது கெட்டதை தேர்வு செய்யும் விசேஷ ஆற்றலின் விளைவுகளாகும். உடல் ரீதியாக அவனது பரிணாம வளர்ச்சி ஒரு நிலையை அடைந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டிய கட்டத்தில் உள்ளான்.

ஆனால் மனிதன் தனது விசேஷ ஸ்தானத்தை நோக்கி வளர்ச்சியடையும் அதே வேளை, அவன் கடந்து செல்ல வேண்டிய கரடு முரடான பாதை குறித்து பஹாய் எழுத்துக்களில் நிறையவே காணலாம். நமது உடனடி எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்த போதும், அதற்கு பின் வரும் காலம் ஒளிமயமானதாக இருக்கும் என பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எபெஃண்டி கூறியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதன் குழப்பங்கள் மற்றும் பேரழிவுகள் பலவற்றைச் சந்தித்து அவற்றின் பயனாக நல்ல அனுபவம் அடைந்து தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்து தனது படைப்பினுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தை காண்பான்.

வாசகர் ஒருவரின் பதில்

நெடுங்காலமாக அரசியல் சமூக குழப்பங்கள் நம்மோடு கூடவே இருந்துவந்துள்ளன. கடந்த கால மற்றும் நிகழ்கால புரட்சிகள், வகுப்பு கலவரங்கள், ஆட்சியை கைப்பற்ற நினைப்போரின் தீச்செயல்கள் ஆகியவற்றை கண்ணுறுகையில், மனுக்குலம் வெகு சிறந்த மீளுந்தன்மையை வெளிப்படுத்தியும் இதுவரை நிலைமையை நன்கு சமாளித்தும் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.

மனுக்குலம் மற்றும் இயற்கை சார்ந்த பிற ஜீவனங்களுக்கிடையிலான சமநிலை சமன்பாடு குறித்த புதிய காரணக்கூறுகளை காண்போம். அரசியல் சமூக குழப்பங்கள் ஆகியவை உருபெறும் வழிவகைகளை மாற்றியமைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள், மற்றும் சுற்றுச் சூழல் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல தொழில்துறை மேம்பாடுகள் இத்தகைய காரணக்கூறுகளாகும். அனு ஆயுத போர் மிரட்டல்கள், உயிரியல் பேரழிவு, தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து பிழைக்கப்போகிறது எனும் கேள்வியை எழுப்புகின்றன.

என் தனிப்பட்ட கருத்து யாதெனில், உலகில் மனுக்குலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மிரட்டல்களின் வளர்ச்சியினூடே, மனித நுன்னறிவாற்றலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். தொழில்துறை அறிவியல் எனும் பிராங்க்கன்ஸ்டைன் (Frankenstein) அரக்கனை நாம் இன்னமும் கட்டவிழ்த்துவிடவில்லை. பன்மடங்காக அனுவாயுத கையிருப்புகள் வளர்ச்சி கண்டுள்ள போதும் இதுவரை உலகளாவிய யுத்தம் ஏதும் ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி மேம்பட்ட மறுமலர்ச்சி நிலையில் உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் கவலையளிப்பதாக இருப்பினும், மனுக்குலம் இதுபோன்ற நிலை மாற்றங்களை, கடந்து சென்ற காலங்களில் சமாளித்தது போன்று இக்காலத்திலும் சமாளிக்கவே செய்யும் என்பது என் நம்பிக்கை.

மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து சமாளிக்கப்போகின்றது என்பதே இங்கு முதன்மையான கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வாய்த்துள்ள மூலவள ஆதாரங்கள் ஒரு நூற்றண்டு காலத்திற்கு பிறகு நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இல்லாத வள ஆதாரங்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல், மனுக்குலம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒர் இனமாகும். வள ஆதாரங்களுக்கான ஒரு வாசல் மூடப்படும் போது, அதற்கான மற்றொரு வாசல் திறக்கவே செய்யும்.

சகல உலக காரியங்களின் மேம்பாட்டின் வேகம் நிச்சயமாகவே அதிகரித்துள்ளது. இந்த வேகத்தோடு நாம் போட்டியிட இயலுமா? நம்மில் பலருக்கு இது இயலாத ஒன்றாக இருக்கும். ஆனால் 14ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கினர் ஒரு வகை நோயினால் அழிந்துபோயினர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஐரோப்பா அதிலிருந்து மீள்ந்தும் மேம்பாடு காணவும் செய்தது. ஒரு வேளை அதே போன்ற ஒரு பேரழிவை நாம் இக்காலத்திலும் காணக்கூடும், ஆனால் அத்தகைய பேரழிவிலிருந்தும் மனுக்குலம் மீண்டுவிடும் என்பதே என் எண்ணம்.

மனுக்குலத்தின் மீது நான் ஏன் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டுள்ளேன்? கண்டிப்பாக அவ்விதம் நான் நம்பி்க்கை கொள்ளவேண்டும். மானிட இனமெனும் முறையில் நாம் முதிர்ச்சியடையும் அதே வேளை நாம் தொடர்ந்து மேம்பாடு கண்டும் நம்மைத் தாக்கும் சமூக குழப்பங்களிலிருந்து மீளவும் செய்வோம் எனும் நம்பிக்கையின்றி இருப்பதற்கு பதிலாக, நாம் மனதில் எந்த பிடிப்பும் இல்லாமலேயே இருந்துவிடலாம். நான் இங்கு சமய நம்பிக்கை குறித்து பேசவில்லை (தற்போதைய நிலையில் உள்ள சமய நம்பிக்கைகள் ஒரு வேளை அதற்கு பங்காற்றலாம்) மாறாக, நாளை சூரியன் உதிப்பது எப்படி உறுதியோ அதே போன்று நாமும் பிழைத்திருப்போம் எனும் நம்பிக்கை குறித்தே பேசுகின்றேன்.

தப்ரீஸ் நகரில் ஒரு நாள்…


(மார்ஸியே கேய்ல் அவர்களின் – “தப்ரீஸ் நகரில் ஒரு நாள்” என்னும் கட்டுரையின் தமிழாக்கம்)

மரம் ஒன்றின் கீழ் வழிந்தோடும் நீரோடையின் கரைதனில் சாய்ந்துகொண்டு, ஓடையில் வழிந்தோடும் நீரை ஒரு பாரசீகர் மணிக்கணக்காகப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். சீனர்களோ, கண்ணாடியைப் போன்று தோற்றமளிப்பதும், சப்பென்றிருப்பதுமான நீரையே விரும்புவார்கள் எனக் கூறுகின்றனர்; ஆனால் ஒரு பாரசீகரோ, தெளிந்த, குறுகிய நீரோடையில் நெளிந்து பிரயாசையுடன் ஒடும் நீரையே விரும்பி ரசிப்பார். ஒரு வேளை அக்குளிர்ந்த நீரோடையினுள் ஒரு குடுக்கை நிறைய திராட்சை மதுவை அவர் குளிர வைத்துக்கொண்டும் இருக்கலாம். சித்திரங்களில் மட்டுமே காணப்படும் மறைந்து போய்விட்ட பாரசீகர்களைப் போல், மனித சஞ்சாரத்திற்கு அப்பால் அவரும் ஒரு குன்றின் ஓரமாக ஒரு சமுக்காளத்தில் சாய்ந்துகொண்டிருக்கலாம். முசுக்கட்டை மரத்தின் இலைகள் பரப்பப்பட்ட ஒரு தட்டில் நிறைய இலந்தைப் பழங்கள் அவர் முன் இருக்கின்றன. அவர் ‎ஹஃபீஸின் கவிதைகளில் ஒன்றை முனுமுனுத்துக் கொண்டிப்பார். ‎ஹஃபீஸ் பல காலங்களுக்கு முன் ஷிராஸில் வாழ்ந்த, “அருவமானவரின் நாவென” போற்றப்பட்ட ஒரு மாபெரும் கவிஞராவார். ‘உமது முக ஒளியினைத் தவிர வேறெதனிலும் என் பார்வை படாதிருக்க, உலகில் உள்ள அனைத்திலிருந்தும், ஒரு வல்லூறுக்கு மறைக்கப்பட்டிருப்பது போல் நான் என் கண்களை மறைத்துக்கொண்டுள்ளேன்.” அந்த பாரசீகரைச் சுற்றி மஞ்சள் நிற பாலைவனம்; அவரும் பூத்துக் குலுங்கும் ஒரு சேர்ரி மரத்தின் கீழோ, ஓடைக்கருகே நீரில் சாயந்துகொண்டிருக்கும் வில்லோ வகை மரத்தின் கீழோ அவர் சாய்ந்துகொண்டிருக்கலாம். ஏனெனில், இது நகரத்திற்கு வெகு தூரத்திற்கப்பால் இருக்கும்; அவருக்குப் பின்னால், பல மைல்களுக்கும் அப்பால், பளிச்சிடும் வெள்ளி மலைகள், இருக்கின்றன.

அவர் தான் அருந்திய மதுவாலும், கவிதையினாலும், அல்லது ஒரு வேளை நீரோடையின் ஈர்ப்பினாலும் போதையுற்று இருக்கலாம். ஓடைக் கரையின் ஓரங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் இளம் பசுமை நிற கொடிகளை அவரால் தொட முடிகிறது; இதை உமார்-இ-ஃகய்யாம் பின்வரும் நாலடிகளில் விவரித்துள்ளார்:

நாம் சாய்ந்திருக்கும் ஆற்று விளிம்பெனும் உதடுகளுக்குச் சிறகுகளோ,
வெனக் காட்சி தரும் மெல்லிய பசுங் கொடிகள்.
சாயும் போது மெல்லச் சாயுங்கள்! யாரே அறிவார் இங்கு
கனிந்த உதடு எதனிலிருந்து அறியா வன்னம் இங்கே இது உதித்தது!

இக்கவிஞர், ஆற்று விளிம்பின் இப்பசுமையை, இளைஞன் ஒருவனின் முகத்தில் தோன்றும் முதல் குறுமுடிகளுக்கு இணையாக வருணிக்கின்றார்.

பாரசீகர்களுக்கு நகரத்தை விட்டு வெளியேறுவது மிகவும் விரும்பத்தக்கதாகும். ஏனெனில், நகரங்களில் காவி நிற செங்கற்களிலான சுவர்களே எங்கும் காணப்படுகின்றன. அச் சுவர்களுக்கிடையே குளங்களும், எலுமிச்சை இன மரங்களும், மல்லிகைப் புதர்களும்; தட்டையான கூறை கொண்ட செம்மண் பூசப்பட்ட வீடுகளுமே இருக்கின்றன. குளிர்காலத்தில் அக்கூறைகளிலுள்ள வெண்பனி குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சீர்படுத்தப்படுகின்றன; கோடைக்கால இரவுகளில் அக்கூறைகளில் கொசுவலைகளின் தோற்றம். வீடுகளுக்கு உள்ளே, வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்; பளிச்சிடும் மாதாக்கோவில் ஜன்னல்கள் போன்ற நிறத்திலான செம்மையாகப் பின்னப்பட்ட சமுக்காளங்கள். நகங்களில் மருதானி பூசப்பட்டும், தலைகளில் முத்துக்கள் சூடியுமுள்ள பெண்களும் அங்கிருக்கின்றனர். வெளியே தூசிப்படலம் சூழ்ந்த தெருக்கள். பளிச்சிடும் பழுப்பு நிற மை பூசப்பட்ட வால்களைக் கொண்ட அரசகுலத்தினரின் அரபுக் குதிரைகளில் பவனி வரும் பிரபுக்கள். புண் அரித்துப்போன முகங்களுடைய பிச்சைக்காரர்களும் பிரபு ஒருவரின் வாசலில் நின்றுகொண்டிருக்கின்றனர். ப‎ஹாய்ப் பிரார்த்தனைகளில் இத்தகைய பிச்சைக்காரர்களை நாம் காணலாம். அருவமானவரின் வாயிலினருகில் நிற்கும் மனிதர்களின் ஏழ்மை நிலையைக் குறிப்பதற்கு இவர்களுடைய உவமானம் பயனுள்ளதாகின்றது.

19-ம் நூற்றாண்டுக்கும், 20-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த பாரசீகத்தின் ஓர் அகக்காட்சியே இது. பாப் அவர்கள் இதைக் கண்டிருக்க வேண்டும்; அவர் இவ்வாறு கண்டிருக்கக்கூடும்: நாம் இப்போது பார்க்க முடிவது போல, வேலமரத்தினூடே எழும் சந்திரோதயத்தை அவர் பார்த்திருந்திருக்கலாம். “கடவுளே, கடவுளே” என இரவு முழுவதும் கத்திக்கொண்டிருக்கும் ‎‘ஹக்’ பறவையை அவர் பார்த்திருந்திருப்பார்; இப்பறவை இரவு முழுவதும் கடவுளே, கடவுளே என கத்தி விடியற்காலையில் தன் தொண்டையைக் கிழித்துக் கொள்ளும் என்பது ஐதீகம்.

18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நிலை குறித்து வில்லியம் போலித்தோ இவ்வாறு எழுதியுள்ளார்: ‘ஐரோப்பா தன் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு சாவியைத் தொலைத்துவிட்டது…. ஒரு பூட்டிய அறைக்குள் ஏற்படக்கூடிய ஒரு வெடிப்பைப் பற்றி கற்பனைப் பண்ணிப்பாருங்கள்…’. பாப் அவர்கள் பாரசீகத்தில் தோன்றியது இதற்குச் சமமான ஒரு நிகழ்ச்சியாக வருணிக்கப்படலாம். அக்காலத்தில் பாரசீகம் ஓர் ஆன்மீகச் சிறைக்கூடமாக ஆகிவிட்டிருந்தது. ‘பாஸ்ட்டில்’ எனப்படும் பாரீஸ் சிறைச்சாலையைவிட பயங்கரமாக இருந்தது; ஆனால் மனிதர்கள் விடுதலையையும், ஒளியையும் தேடிக்கொண்டிருந்தனர். ஒரு மகத்தான நாள் நெருங்கி வந்துகொண்டுள்ளதாகையால், நம்பிக்கையை இழக்கவேண்டாமெனக் கூறும், மரபுக்கூற்றுகள் வழிவழியாக அவர்களையும் வந்தடைந்திருந்தன. திருக்குரானின், ஆராதனை அத்தியாயத்தில் ஒரு வரியுண்டு; அது பின்வருமாறு கூறுகின்றது:

விண்ணுலகங்களையும், மண்ணுலகையும் இறைவனே படைத்துள்ளார்… அவரைத் தவிர இரட்சகரோ, இடையீட்டாளரோ வேறு எவரும் இலர். ஆதலால் நீங்கள் இதைக் கருதமாட்டீர்களா? விண்ணுலகிலிருந்து மண்ணுலகு வரை அவர் அனைத்தையும் நிர்வகிக்கின்றார்; ஆயிரம் ஆண்டுகள் அளவு கொண்ட அந்த நாளில், அவர்கள் அவரிடமே திரும்பிச் செல்லப் போகின்றனர்…

வருடம் 260 ‎ஹிஜ்ரியில் இறுதியாகத் தோன்றிய இமாம் மறைந்துவிட்டார் என்பது எல்லா (ஷீயா) முஸ்லிம்களுக்கும் தெரியும்; ஹிஜ்ரி 1260ம் வருடத்தில் அவர்கள் காத்திருந்த நாட்கள் ஒரு முடிவுக்கு வரும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

வேறு தீர்க்கதரிசனங்களையும், வேறு சமய நூலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளில் வில்லியம் மில்லர் போன்ற சில மனிதர்கள் போதித்து வந்தது போல், பாரசீகத்திலும் குறிப்பிட்ட சில மனிதர்கள் இது குறித்து அவர்களுக்குப் போதித்து வந்தனர். ஒரு நாள் இத்தகைய தீர்க்கதரிசனங்கள் விளக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வகுப்பிற்குள் பாப் பெருமானார் பிரவேசித்தார். அவர் உட்கார்ந்த போது அவருக்குக் குறுக்காக ஒளிக் கீற்று ஒன்று பளிச்சிட்டது. போதித்துக் கொண்டிருந்தவர் தமது பாடத்தை நிறுத்தினார். பாப் அவர்களை அவர் பார்த்தார். ‘அகோ, அந்த மடியில் விழுந்துள்ள ஓளிக் கீற்றைவிட உண்மை அதி வெளிப்படையாகவுள்ளது,’ எனக் கூறினார்.

ஒரு மாதாக்கோவிலைவிட ஒரு பள்ளிவாசல் வசிப்பிடமாக அதிகம் பயன்படுத்தப்பட்டும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும். வாரத்தின் எந்த நாளில் வேண்டுமானாலும் மக்கள் அங்கு நடமாடிக்கொண்டும், பிரார்த்தித்துக்கொண்டும் இருப்பர். தேகசுத்திக்காக அங்கு நீரூற்றுகள் பாய்ந்த வண்ணம் இருக்கும் – அஃது உண்மையான நீராகும்; (மாதாக்கோவில்களில் காணப்படுவது போல, ஓர் அடையாள அறிகுறியாக நிலைதாழ்ந்துள்ள, ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரல்ல. தரைகளில் கம்பளங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கும். மனிதர்கள் மண்டியிட்டுக்கொண்டும், எழுந்துகொண்டும், தலைவணங்கிக்கொண்டும் இருப்பர்; அங்கு, உள்ளம் விண்ணுலகச் சிந்தனைகளில் ஈடுபடுவதை தடுக்கும் சிலைகளோ, படங்களோ கிடையாது. பாப் அவர்கள் அடிக்கடி பள்ளிவாசல் செல்வார்; அங்கு அவருடைய கண்களில் கண்ணீர் மல்கும்; அவர், ‘கடவுளே, என் கடன்வுளே, எனதன்பரே, என் இதயத்தின் ஆவலே!’ எனக் கூறிக்கொண்டிருப்பார். அவர் வானிபத் தொழில் புரிந்து வந்தவர். வெள்ளிக்கிழமைகளில் அவருடைய கடை அடைக்கப்பட்டிருக்கும். அன்று அவர் தமது வீட்டின் உப்பரிகைக்குச் சென்று, வெள்ளி நிற சூரிய ஒளியில் நின்றும், மண்டியிட்டுக் கொண்டும், முஸ்ஸுல்மான்கள் வழிபடுவது போல் தாமும் வழிபடுவார்.

பார்ப்பதற்கு அவர் வசீகரம் மிக்கவராவார். ஒரு சாதாரன பாரசீகரைவிட அதிக வெண்மை நிறம் மிக்கவர்; உயரம் குறைந்தவர், மனதில் நிற்கும் குரல்வளம் படைத்தவர். இங்கு நான்காவது இமாமாகிய, பாதி பாரசீகராகிய சைனு’ல்-அபிதினை நாம் நினைவுகூர்கின்றோம். அவர் தமது வீட்டின் கூறையில் இரவு நேரங்களில் பிரார்த்தனைகளை ஓதிக் கொண்டிருப்பார்; கீழே கனமான தோல் பைகளில் நீர் கொண்டு செல்வோர் கூட அவர் ஓதுவதை சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டே செல்வர் என்பர். அவருடைய நடையும் நினைவில் நிற்கக்கூடியதாகும். தெய்வங்கள் அவற்றின் நடையிலிருந்து அறியப்படுகின்றன என வெர்ஜில் என்பவர் கூறியுள்ளார்; நம்மிடையே தோன்றும் மகாபுருஷர்களுக்கும் இது பொருந்தக்கூடியதாகும். ஒரு முறை பாப் அவர்களை முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் தேடிக்கொண்டிந்தார். ஆனால், பாப் அவர்களின் சிஷ்யர் ஒருவர் வழியை மறைத்துக்கொண்டிருந்தார். அப்போது பாப் அவர்கள் அவ்வழியே நடந்து சென்றதைக் கண்ட அம்மனிதர்: ‘அவரை என்னிடமிருந்து ஏன் மறைக்க முயல்கின்றீர்? அவருடைய நடையிலிருந்தே அவர் யார் என்பது எனக்குத் தெரியும்,’ என்றாராம். பாப் அவர்கள் இறைத்தூதர் முகம்மது அவர்களின் வழித்தோன்றலாவார். அவர் அவரைப் போன்றே இருந்திருக்கக்கூடும். அவரைப் பற்றி சகாபாக்களில் ஒருவர், ‘முகம்மதைப் போன்று வேறு அழகு எதனையும் நான் கண்டதில்லை; அவருடைய முகத்தில் சூரியனே நகர்கின்றது எனக் கூறலாம், என்றாராம்.

பாப் அவர்கள் திருமணம் புரிந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சின்னாளில் இறந்தது. அதன் தந்தையார் அக்குழந்தையை இறைவனுக்கே அற்பணித்தார்: ‘என் இறைவா, என் மகனை நான் தியாகம் செய்துள்ளதானது… உமக்கு ஏற்புடையதாக இருந்திட அருள்வீராக. உமது நல்விருப்பம் என்னும் பாதையில் என்னையே… நான் அர்ப்பணம் செய்திடுவதற்கு இது ஒரு முன்னோடியாக இருந்திட அருள்வீராக.

பிறகு அவர்பால் சில மனிதர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர் அவர்களை ஆணையிட்டு அழைக்கவில்லை – அவர்களே, பாலைவனப் பிரதேசங்களைத் தாண்டி அவரைக் காணவந்தனர். சிலர் கழுதைகளின் மீதமர்ந்து வந்தனர் – வெள்ளை நிற கழுதைகள். ஒரு வேளை அவற்றின் மீது மருதானி பூசப்பட்ட கைகளின் கறை படிந்திருத்திருக்கலாம், நீலக்கல் மாலைகளை அவை அனிந்திருந்திருக்கலாம்; இத்தகைய கழுதைகள் பாரசீகத்தின் தெருக்களில் இன்னமும் காணப்படுகின்றன – கார்களும், இரயில் வண்டிகளும் அவற்றை இதுவரை ஒழிக்க முடியவில்லை. இம் மனிதர்கள் தாங்கள் கண்ட கனவுகளின் வாயிலாகவும், மனக்காட்சிகளின் வாயிலாகவும் பாப் அவர்களைக் காண வந்தனர்; பார்க்கப்போனால் பல அமெரிக்கர்களும் இதே முறையில் ப‎ஹாய்கள் ஆகியுள்ளனர். இந் நிகழ்ச்சிகள் விஞ்ஞானிகளால் ஆராயப்பட வேண்டியவை. அவற்றை நாம் அறிவியற்கூட ரீதியில் புரிந்துகொள்ள இயலாது. ஓர் இறைத்தூதர் தோன்றப்போகும் வேளையில், அவருக்காகப் பல சிஷ்யர்கள் காத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். காலங்கள் தோறும் தோன்றும் ‘நம்பமுடியாத நூற்றுக்கணக்கான இறைக்காவலர்களிலிருந்து,’ தனிப்பட்டு நிற்கும் உண்மையான இறைத்தூதர்கள் உண்டென்பதும் நமக்குத் தெரியும்; மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் மறுஉயிர்ப்புறச் செய்யும், மூலாதாரமாக இருக்கும் ஒருவர் இருக்கின்றார் என்பதும் நமக்குத் தெரியும். திருத்தூதர் முகம்மது அவர்களைப் பற்றி கார்லைல் இவ்வாறு கூறுகின்றார்:

புராதன மனிதர் என இத்தகைய மனிதரையே நாம் கூறுகின்றோம்; அவர் நம்மிடம் நேரடியாகத் தோன்றுகின்றார்… அவரை, கவிஞர், இறைத்தூதர், இறைவன் என நாம் அழைக்கலாம்; – இப்படியோ, அப்படியோ, அவர் உச்சரிக்கும் வார்த்தைகள் வேறு எந்த மனிதனும் உச்சரிக்க முடியாத வார்த்தைகள் என நாம் உணருகின்றோம். விஷயங்களின் உள்ளார்ந்த மெய்மையிலிருந்து அவர் நேரடியாகத் தோன்றுகின்றார்; – அவர் வாழுகின்றார், அதனோடு தினசரி தொடர்பு கொண்டு, அவர் வாழ்ந்துதான் ஆகவேண்டும்… உலகின் மையத்திலிருந்தே அவர் தோன்றுகின்றார்; அவர் விஷயங்களின் பூர்வமெய்மையின் ஒரு பகுதியாவார்.

பாப் அவர்கள் இச் சிஷ்யர்களை ஆங்காங்கு அனுப்பினார். அவர்கள் கிழக்குப் பிரதேசங்களைத் தட்டியெழுப்பினர்; நூறு நகரங்களில், கருகிப்போனதும் உருக்குலைந்து போனதுமான தங்கள் உடல்களை விட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் தலைவரின் செய்தியை வழங்கினர். எந்தத் தோட்டாவும் அவர்களுடைய உதடுகளின் அசைவை நிறுத்தமுடியவில்லை. ஒரு மாபெரும் உலகக் காப்பாளர் குறித்த நற்செய்தியை அவர்கள் வழங்கினர். பாப் அவர்கள், ‘இறைவன் வெளிப்படுத்தவிருக்கும் அவருடைய கைகளில் நான் வெறும் ஒரு மோதிரம் மட்டுமே ஆவேன்.’ பிறகு அவர், இஸ்லாத்தின் அதிப்புனிதஸ்தலமாகிய மெக்காவுக்கு பயணம் செய்தார். அங்கு, கா’பாவின் புனித கருப்புநிற கல்லிற்கு முன்பாக அவர் தமது செய்தியைப் பிரகடணம் செய்தார்; அதன் வாயிலாக தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. சம்பிரதாயமாக வழங்கி வந்தது போல், அவர் மிகவும் சிறந்த செம்மறியாட்டு வகையிலிருந்து பத்தொன்பது ஆடுகளைப் பலி கொடுத்தார்; மிகவும் கவனமாக வாய்களில் சர்க்கரை ஊட்டப்பட்டவையாகவும், கண்களில் அஞ்சனம் பூசப்பட்டவையுமாக, அந்த ஆடுகள் இருந்திருக்கலாம். இந்தப் பலியானது ஏழைகளுக்குப் பெரும் ஆசீர்வாதம் போன்றதாகும், ஏனெனில், இறுதியில் அந்த ஆட்டிறைச்சி ஏழைகளுக்கே விநியோகம் செய்யப்படும். இந்த இறைச்சியிலிருந்து பாப் அவர்கள் தமக்கென ஒரு பங்கு எடுத்துக்கொள்ளவில்லை. இது, எப்போதும் குறைவான உணவே இருக்கும் முகம்மது அவர்களின் இல்லத்தில் ஓர் ஆடு எவ்வாறு பலி கொடுக்கப்பட்டது எனும் கதையை நினைவிற்குக் கொண்டுவருகின்றது. பலி கொடுக்கப்பட்ட அந்த ஆடு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, நபியவர்களின் மனைவியான ஆயிஷா, இறைச்சி அனைத்தும் கொடுக்கப்படுகின்றதே என அங்கலாய்த்தார். ‘தோள்பட்டையைத் தவிர வேறொண்றும் மீதமில்லை,’ எனக் கூறினார். அதற்கு நபியவர்கள், ‘தோள்பட்டையைத் தவிற முழு ஆடும் மீதமுள்ளது,’ என்றாராம்.

பாரசீகத்தில் பாப் அவர்கள் பள்ளிவாசல்கள் அனைத்திலும் பிரகடனம் செய்தார். அங்கு அவர் நுழையும் போதெல்லாம் மக்கட் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொள்ளும். ஷிராஸில் நீர் ஓரத்தில் சா’ஆடி கூறியது போல்: ‘எங்கெங்கு அதிமதுரமான நீரின் ஊற்று இருக்கின்றதோ, அங்கெல்லாம் மனிதர்களும், பறவைகளும், பூச்சிகளும் ஒன்றாகத் திரளும்.’ உரையாற்றிட அவர் பள்ளிவாசல்களின் சமயமேடை ஏறி பேசும்போதெல்லாம் அவர்கள் அமைதியோடு நிற்பார்கள்.

இஸ்லாத்தின் மையங்களாகிய அவற்றில், அவர் முன்னெழுந்தார், தாக்கினார். மரணத்தை அரவனைக்கப் போகும் மனிதரைப்போல் அவர் அறைகூவல் விடுத்தார். அவர் மக்கட் கூட்டத்தின் பிரபுக்களாக விளங்கிய சமயத்தலைவர்களுக்கு எதிராக குரலெழுப்பினார். முல்லாக்களுக்கு திருக்குரான் மனப்பாடமாகும். ஆனால், பாரசீகர் எவருமே அதைத் தங்கள் சொந்த மொழியில் படிக்கும் வாய்ப்புக் கிடையாது. முல்லாக்களுக்கு எது சட்டரீதியானது எது சட்டரீதியானதல்ல என்பதும், ஒரு மருந்து எப்போது உட்கொள்ளப்பட வேண்டும், அல்லது கூடாது என்பதும், ஒரு பயணம் எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும், ஒரு பெண்ணின் திருமணம் எப்போது நிகழ வேண்டும் என்பதெல்லாம் தெரியும். மற்ற மனிதர்களுக்குத் தெரியாததெல்லாம் முல்லாக்களுக்குத் தெரியும். ஆனால், அவரது மூதாதையரான முகம்மது நபி அவர்கள் அக்காலத்து அராபிய சிறுதெய்வங்களைக் குறை கூறியது போல் பாப் அவர்களும் முல்லாக்களை குறைகூறினார். முகம்மது அவர்கள்: ‘நீங்கள் அவற்றின்(சிலைகள்) மீது எண்ணெய், மெழுகு ஆகியவற்றைக் கொண்டு பூசுகின்றீர்கள், அவற்றின் மீது ஈக்கள் ஒட்டிக்கொள்கின்றன, – இவை வெறும் மரக்கட்டைகளே என நான் கூறுகின்றேன்!’ என்றார். இயேசு நாதர் தமது காலத்து மனிதர்களை, வேஷதாரிகள் – நாய்கள் – விஷப்பாம்புக் கூட்டம் – சோரம்போனவர்கள் என அதே போன்று கூறினார்.

பாரசீகம் முழுவதும் இப்போது அவரைப் பற்றியே பேச்சாக இருந்தது. அவரை ஒரு மலைக்கோட்டையில் வைத்து அடைத்தார்கள். அங்கு அவர்: “இரவு நேரத்தில் எமக்கு ஒரு விளக்கு கொண்டு வருபவரும் கிடையாது.” இஸ்லாத்தின் பலன் பாப் அவர்களை ஏற்றுக்கொள்வதே, இருந்தும் அவர்கள் அவரை சிறைப்படுத்தியுள்ளனர்.’ அவர் மேலும் எழுதினார்: ‘இவ்விடத்தின் அனுக்கள் அனைத்தும், “இறைவனைத் தவிற வேறு இறைவன் கிடையாது!” என கூக்குரலிடுகின்றன. பிறகு அவர் பஹாவுல்லாவின் வருகையை முன்னறிவிக்கும், தமது படைப்புக்களிலேயே மாபெரும் படைப்பை தமது செயலாளருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஓதும் போது அவருடைய குரலொலி மலைக்குக் கீழும், மலைப்பள்ளத்தாக்கின் மீதும் எதிரொலித்தது. பனிக்காலத்தின் குளிரினால் அவர் பெரும் இன்னலுக்குள்ளானார். தமது தேகசுத்திக்காக அவர் பயன்படுத்திய நீர், அவருடைய முகத்திலேயே உரைந்து போனது.

மக்கள் அவரை நேசித்தனர், அவரைத் தேடி வந்தனர். அவர்கள் இந்தியாவிலிருந்தும் கால் நடையாக வந்தனர். அவர் வேறொரு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய விசுவாசிகள் தெருக்களில் கொலை செய்யப்பட்டனர்.

பிறகு தாப்ரீசில் ஒன்றுகூடியிருந்த இளவரசர், மதகுருக்கள் ஆகியோரின் முன்னிலைக்கு அவர் ஆணையிட்டு அழைக்கப்பட்டார். சபையில் ஒரு நாற்காலி மட்டுமே மீதமிருந்தது; அஃது இளவரசனுடையதாகும். பாப் அவர்கள் இந்த நாற்காலியிலேயே அமர்ந்தார். அவருடைய முகத்தில் பெரும் சக்தி பிரகாசித்தது; அதனால் சபை நிசப்தமானது. பிறகு, ஒரு மதகுரு கேள்வி கேட்டார்: ‘நீர் யாரென உம்மைப் பிரகடனப்படுத்துகின்றீர்?’ அதற்கு அவர்: ‘நீங்கள் ஆயிரம் வருடங்களாக எவருடைய நாமத்தை உச்சரித்தீர்களோ, எவருடைய வருகையைக் கண்ணுறுவதற்காக ஏங்கினீர்களோ… எவருடைய வெளிப்பாட்டின் நேரத்தைத் துரிதப்படுத்துமாறு இறைவனை வேண்டினீர்களோ, அந்த ஒருவர் யானே ஆவேன். மெய்யாகவே யான் கூறுகின்றேன், எமது வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டியது கிழக்கிலும் மேற்கிலுமுள்ள எல்லா மனிதர்களுக்கும் விதிக்கப்பட்டதாகும்…

பிறகு நடந்தது அனைத்தும் நமக்குத் தெரியும். ஆனால், இந்நாள்கள் அவரது வெற்றிக்கான நாள்கள். தாப்ரீசில் அந்தக் காலை வேளையில் அவர் எவ்வாறு ஒரு சுவற்றில் தொங்கவிடப்பட்டு சுடப்பட்டார் என்பதை நாம் நினைவுகூர்ந்திட வேண்டியதில்லை. மாறாக, அவர் இன்று உலகம் முழுவதும் வாழ்வதை நாம் பார்க்கின்றோம்.

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது…


நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.  இத்தகைய பிரார்த்தனைகள் நோயை குணப்படுத்த உதவுகின்றனவா, அப்பிரார்த்தனையில் நாம் என்ன வேண்டுகிறோம் மற்றும் நாம் வேண்டுவதுதான் அந்நோயாளிக்குத் தேவையா என்பது போன்றவை குறித்த ஆய்வே பின்வரும் கட்டுரை.

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா?

ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, “நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவுகின்றது” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.

பிரார்த்தனையால் நாம் ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் பற்றி ஏதும் அறியாத நிலையில், இது குறித்த முதல் பிரச்சினை, அது பற்றிய ஒரு பரிசோதனையை வடிவமைப்பதாகும்.

“பிரார்த்தனையின் நோக்கம் ஆயுள்காலத்தை நீட்டிப்பது மட்டுமா?” என அவர் மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நேர்முகத்தின்போது வினவினார்.

அவர் பஹாய் போதனைகள் குறித்த தமது அறிவின் அடிப்படையில், அக்கேள்விக்கு பதிலளிக்க முனைந்தார். “இவ்வுலக வாழ்வின் நோக்கம் நீண்ட ஆயுள்காலம் மட்டுமல்ல. நமது வாழ்வின் நோக்கம் கடவுளை அறிந்துகொள்வது, அவரை வழிபடுவது மற்றும் அவருக்குச் சேவைபுரிவதாகும்.”

ஒருவரின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக அவருக்கு மேலும் அதிகமான கடுந்துன்பங்கள் ஏற்படுமாயின், அச்சூழ்நிலைகள் குறித்து என்ன செய்வது?” என அவர் வினவினார். அப்படியாயின், பிரார்த்தனையால் நாம் விரும்பும் விளைவுகள்தான் என்ன?

நாம் பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையால் நாம் விரும்பக்கூடிய விளைவுகள் யாதென நமக்கே தெரியாத நிலையில், ஓர் அறிவியலாளர் ஒரு பிரார்த்தனை தேவையான விளைவை ஏற்படுத்தியதாவென எவ்வாறு தீர்மானிக்கக்கூடும்?

“உண்மையில் நாம் இங்கு எதை அளவிடுகின்றோம் என்பது நமக்கே தெரியாது,” என டாக். குட்டுஸி கூறினார்.

“நலமடைதல் மற்றும் மறுதேர்ச்சியில் பிரார்த்தனையின் விளைவுகள்: “இதன் தொடர்பான எழுத்துக்களை மீளாய்வு செய்தல்,” என்பதே சான் டியேகோவில் 1 செப்டம்பரில் முடிவுற்ற பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் நான்கு நாள் நிகழ்ச்சியில் அவரின் படைப்பாக இருந்தது.

கனடாவின் மனிடோபா பல்கலைகழகத்தில் otolaryngology எனப்படும் கண், காது, மூக்கு மற்றும் தலை தொடர்பான நோய்கள் குறித்த மூன்றாவது ஆண்டு ரெசிடன்ட் மருத்துவரான டாக். குட்டுஸி, பிரார்த்தனையின் விளைவுகள் குறித்த தமது ஆய்வு குழப்பமான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

ஆனால் “meta-analysis” எனப்படும் ஆய்வுமுடிவுகளை தொகுதி சேர்க்கும் முயற்சி அளவிடக்கூடிய எவ்வித பயன்விளைவையும் வெளிப்படுத்தவில்லை, என அவர் தெரிவித்தார்.

ஆகவே, பிரார்த்தனை எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை எனப் பொருள்படுமா?

இல்லை, என்கிறார் அவர், ஏனெனில், எதை அளவிடுவது என்பதைத் தீர்மானிக்கும் பிரச்சினை போக, இவ்விஷயத்தைக் குழுப்பிவிடும் வேறு பல விஷயங்களும் உள்ளன – இவை அறிவியல் ரீதியான ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தும் தேவைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். உதாரணமாக:

  • தீவிரமாகப் பிரார்த்திப்பது அவசியமாகின்றதா? அவ்வாறு இருப்பின், அத்தீவிரத்தை நாம் எவ்வாறு அளவிடக்கூடும்?
  • எத்தனை பேர்கள் பிரார்த்திக்கின்றனர் என்பது முக்கியமா?
  • நாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ அந்நபர் அதற்குப் பாத்திரமானவர்தானா? தெய்வீக மன்னிப்பு இதில் என்ன பங்காற்றுகின்றது?
  • நோயின் தீவிரத்தை நாம் கருத்தில்கொள்ள வேண்டுமா?
  • இதில் சம்பந்தப்பட்ட மக்களின் சமய நம்பிக்கை, அல்லது அத்தகைய ஈடுபாடில்லாமை, பயன்விளைவைப் பாதிக்கின்றதா?
  • மக்கள் சதா யாருக்காவது பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் கடவுளின் கருணை தொடர்ச்சியானது மற்றும் எல்லையற்றதாக இருக்கும் பொழுதினில், இந்த ஆய்வுக்குச் சீர்நிலையான அல்லது நிலைமாற்றம் உறாத (control) ஆய்வுக் குழுமம் ஒன்றை நாம் உண்மையில் கொண்டிருக்க முடியுமா?

தமது அளிக்கை நிகழ்வில், டாக் குட்டுஸ் பஹாய் எழுத்துக்களிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்காட்டினார். அவற்றின் வாயிலாகப் பிரார்த்தனை இன்றியமையாதது ஆனால் அதன் விளைவுகள் எப்போதுமே வெளிப்படையானவையல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

பிரார்த்தனைகள் குறித்த பஹாய் போதனைகள்

அவர் பஹாய் எழுத்தோவியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார்: “உனது பிரார்த்தனை உன்னை நெருப்பிற்ககே வழிநடத்திச் சென்றாலும், அதே போன்று உனக்குச் சுவர்க்கமே பிரதிபலனாகக் கிடைத்தாலும் உனது வழிபாட்டில் எவ்வித மாறுபாடுமற்ற முறையில் நீ கடவுளைப் பிரார்த்திப்பாயாக.”

கடவுளின் ஓர் அவதாரமென பஹாய்களால் கருதப்படும் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, நோய்கண்ட காலங்களில் “திறமையான மருத்துவர்களை” நாடவேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகின்றார், அதே வேளை நோய் நிவாரணத்திற்கான பிராத்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குணப்படுதலுக்கான சில பிரார்த்தனைகளை பஹாவுல்லாவின் மூத்தத் திருமகனாரும் அவரது போதனைகளுக்கான விளக்கவுரையாளருமான அப்து’ல்-பஹா அவர்கள்: “குணப்படுத்துதலுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரார்த்தனைகள் பெளதீக, ஆன்மீக நிலைகள் இரண்டிற்குமே பொருந்தும். ஆகவே, ஆன்மா, உடல் இரண்டுமே குணமடைய அவற்றை(பிரார்த்தனைகளை) கூறுங்கள். நோயாளிக்கு உடல்நலனே முறையானதெனும்போது அது நிச்சயமாக வழங்கப்படும்; ஆனால் சில நோயாளிகளுக்கு அந்த நோயிலிருந்து குணப்படுவது வேறு பல நோய்களுக்குத் தோற்றுவாயாக நேரிடும், ஆகவே அப்பிரார்த்தனைக்கான உறுதியான பதிலை விவேகம் அனுமதிக்கவில்லை.”

டாக். குட்டுஸி அப்து’ல்-பஹாவின் பின்வரும் வாசகக் குறிப்பைப் படித்துக் காட்டுகின்றார்: “நீ வேண்டுவதை அவரிடம் மட்டுமே கேள்… ஒரே பார்வையில் அவர் ஓர் நூறாயிரம் நம்பிக்கைகளை வழங்கிடுவார், ஒரு தலையசைவில் அவர் காயம் ஒவ்வொன்றிற்கும் தைலமிடுவார்.”

டாக். குட்டுஸி வாசித்த பின்வரும் பகுதியில் அப்து’ல்-பஹா பிரார்த்தனை மற்றும் குணப்படுதலை விசேஷமாகக் குறிப்பிடுகின்றார்: “நோய் என்பது இருவகைப்படும்: ஆன்மீகம் மற்றும் பெளதீகம். வெட்டுக்காயம் பட்ட ஒரு கையை எடுத்துக்கொள்ளுங்கள்; காயம் ஆற வேண்டுமென மட்டும் பிரார்த்தித்துவிட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தாமல் இருப்பது எவ்வித நன்மையையும் விளைவிக்காது; பெளதீக ரீதியான குணப்பாடு தேவைப்படுகின்றது.”

மேலும்: “பெளதீக விபத்துக்களால் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் குணப்படுத்தப்பட வேண்டும்; ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் நோய்கள் ஆன்மீக ரீதியில் குணப்பாடு காணும்… இவ்விருவகையான வைத்தியமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை இரண்டும் ஒன்றுக்கொண்று எதிரானவையல்ல, மற்றும், தமது சேவகர்கள் அத்தகைய வைத்தியத்தாலும் பயனடைய வேண்டுமென மருத்துவ அறிவியலை வெளிப்படுத்தியுள்ளவரான, கடவுளின் கருணை மற்றும் சலுகைகளிலிருந்தே பெளதீக நிவாரணங்கள் தோன்றுகின்றனவென நீர் அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும். நீர் ஆன்மீக வைத்தியமுறைகளுக்கும் சரிசமமான கவனம் செலுத்தவேண்டும், ஏனெனில் அவை வெகுசிறப்பான பயன்விளைவை ஏற்படுத்துகின்றன.”

டாக். குட்டுஸ் அவர்களால் வாசிக்கப்பட்ட மற்றொரு குறிப்பில், அப்து’ல்-பஹா நோயுற்றோருக்கான பிரார்த்தனை குறிப்பாக எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விவரிக்கின்றார்:

” ஒரு வலுவான மனிதர் ஒரு நோயாளி ஆகியோருக்கிடையே ஓர் இணக்கமான தொடர்பு ஏற்படும் வகையில் தனது முழுநம்பிக்கைக் குவிப்புடன் ஒருவர் ஒரு வலுவான மனிதரின் ஆன்மீக ஆற்றலிலிருந்து குணப்பாடு விளையும் என ஒரு நோயாளி எதிர்ப்பார்க்கும்போது அந்த வலுவான மனதினர் நோயுற்றவரின்பால் செலுத்தும் முற்றான கூர்கவனத்தால் (ஆன்மீக குணப்பாடு) விளைகின்றது. அந்த வலுமிக்க மனிதர் அந்த நோயாளியை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், பிறகு அந்த நோயாளி தாம் குணப்படுவோம் என்பதில் உறுதியடைகின்றார்…

“ஆனால் இவை யாவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விளைவுகள் உண்டாக்குகின்றன, அதுவும் எல்லா வேளைகளிலும் அது நடைபெறுவதில்லை. ஏனெனில், ஒருவர் மிகவும் கொடுமையான நோயால் பாதிப்படைந்திருக்கும்போதோ, காயமுற்றிருக்கும்போதோ, இத்தகைய வழிமுறைகள் அந்நோயை அகற்றவோ அக்காயத்தை ஆற்றிடவோ முடியாது.

அறிவியல் ஆராய்ச்சி

பிரார்த்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அப்துல் பஹாவின் விளக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தாம் வெகு ஆர்வத்துடன் காண விரும்புவதாக டாக். குட்டுஸி கூறினார். இருந்தபோதும், சாத்தியமே இல்லாத அச்சூழ்நிலையில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றை வடிவமைக்க முடிந்தாலும் (“ஆன்மீக ரீதியில் ‘வெகு வலுவானவர்’ ஒருவரை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என அவர் வினவினார்,) பிரார்த்தனைகள் “ஒரு குறிப்பிட்ட அளவே விளைவுகள் ஏற்படுத்தும், அதுவும் அது எல்லா வேளைகளிலும் நடைபெறப்போவதும் இல்லை,” எனும் அப்துல் பஹாவில் கூற்றின் அடிப்படையில் நாம் எதையுமே நிரூபிப்பது சாத்தியப்படாது.

குணப்படுத்தும் பிரார்த்தனைகளின் ஆக்கவிளைவுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி அப்து’ல்-பஹா விவரித்துள்ள அச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே நடந்துள்ளது.

உதாரணமாக, சில ஆய்வுகளில், இருதய சிகிச்சை குறித்த ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இருதய கண்கானிப்புப் பிரிவில் உள்ள நோயாளிகள் ஆபரேஷனுக்குப் பிறகு எவ்வாறு தேறி வருகின்றனர் என்பதை சில ஆய்வுகளின் வாயிலாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு ஆய்விலும் நோயாளிகள் ரேண்டம் முறையில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டனர். அவற்றில் பாதி பேர்களுக்கு அந்த நோயாளிகளுக்கே தெரியாத சிலரைக் கொண்டு அவர்கள் குணமடைய பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களுக்கு ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பொதுவாக, அளவிடப்படக்கூடிய எவ்வித விளைவும் அங்கு காணப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொள்ளும் போது அம்முடிவுகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் டாக். குட்டுஸி கூறினார்.

தமது அளிக்கையின் போது, திடீரென டாக். குட்டுஸி, மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வெளியிடுவதனால் கடவுள் தாம் விரும்பும் குறிக்கோளிலிருந்து அப்பால் விலகுவாறா என வினவினார்.

அவர் டாக். எட்வர்ட் சி. ஹால்பெரின் எனும் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் ஆய்வை எடுத்துக்காட்டினார். ஒரு மருத்துவரீதியான ஆய்வில், முன்பின் அறியாதாரால் பிரார்த்திக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் காட்டிலும் எவ்வித பிரார்த்தனைக்கும் உட்படுத்தப்படாதோரை குணப்படுத்தும், தன்விருப்பமாக குணப்படுத்தும் ஒரு கடவுள் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு சற்ற சிரமாகவே இருக்கும். கடவுள் இவ்வாறாக முறண்பாடானவர் என கருதப்படக்கூடாது.”

டாக். குட்டுஸி தமது முடிவுரையில் பிரார்த்தனை குறித்த இவ்விதமான ஆராய்ச்சி சிலர் கூறுவது போல் கடவுள் நிந்தனையென தாம் கருதவில்லையென கூறினார்.

ஆனால் அறிவியல் நோய் நிவாரணத்திற்கு ஏதுவாக பிரார்த்தனையின் பயனுறுதியை அதன் அடிப்படையிலான ஆய்வின் போது வெளிப்படுத்தக்கூடுமாவென அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இது முக்கியமா எனும் கேள்விக்கு, அவர் அது முக்கியமல்லவென கூறினார். இருந்த போதும் அதை நிரூபிப்பது ஆர்வமளிப்பதாகவே இருக்கும் என்றார்.

(http://bci.org/prsamy/html/bns656.html)

மனிதன் என்பவன்…


வருங்காலத்தில் மனிதர்களின் உணவு எதுவாக இருக்கும் என அப்து’ல்-பஹாவிடம் வினவப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

“பழங்களும் தானியங்களும். புலாலே உண்ணாத ஒரு காலம் வரும். மருத்துவ அறிவியல் இப்போது அதன் ஆரம்பப் பருவத்தில் இருக்கின்றது, இருந்தபோதும் அது நமது இயல்பான உணவு பூமியில் விளையக்கூடியவையே என எடுத்துக்காட்டியுள்ளது. இந்த இயற்கை உணவுக்கான நிலையை மனிதர்கள் படிப்படியாக அடைவார்கள்.”

வேறோர் இடத்தில், அவர் மனிதர் மற்றும் மிருகங்களின் பற்கள் மற்றும் ஜீரன உருப்புக்கள் குறித்து விளக்கினார். மனிதர்கள், தாவரவுண்ணிகள், புலாலுண்ணிகள் ஆகியவற்றின் பற்களை ஒப்பிட்டு, மனிதர்களின் பற்கள் தாவரங்கள் மட்டும் உண்பதற்கோ புலால் மட்டும் உண்பதற்கோ படைக்கப்பட்டதல்ல என்கிறார். அவை பழங்கள், தானியங்கள், கிழங்குகள் போன்றவற்றை உண்பதற்கான அமைப்பைக் கொண்டுள்ளன எனவும், அதே போன்று இம்மூன்று வகை உயிரினங்களின் ஜீரண உறுப்புக்களான குடல்களை ஒப்பிட்டு மனிதர்களின் குடல்முறை புலால் உண்பதற்கோ தாவர வகைகளை உண்பதற்கோ தேவையான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை என விளக்கினார். மாறாக, தானியங்கள், பழங்கள் போன்ற உணவு வகைகளை ஜீரணிப்பதற்கான அமைப்பை மட்டுமே அவை கொண்டிருக்கின்றன என அவர் மேலும் விளக்குகிறார்.

இன்று உலகின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என நாம் அடிக்கடி செவிமடுக்கின்றோம். இது ஓர் உலகளாவிய பிரச்சினையாகவும் இருக்கின்றது. மனிதர்கள் புலால் உண்பதற்கும் உலகின் வெப்பநிலை அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கின்றது என்பது நமக்குத் தெரியுமா?

உலகம் முழுவதும் எரிபொருளைப் பயன்படுத்தும் யந்திரங்கள் வெளியாக்கும் புகைகளின் அதிகரிப்பு காற்று மண்டலத்தை பாதிக்கிறது என்கிறார்கள் இது உண்மைதான். ஆனால், இதைவிட அதிகமாக, காற்றுமண்டல தூய்மைக் கேட்டிற்கு, ஐந்தில் ஒரு பகுதி பங்களிக்கும் ஒரு தொழில் இருக்கின்றது. அது உலகளாவிய கால்நடை தொழிலாகும் (Global livestock production). கால்நடைகளிலிருந்து வெளிப்படும் (மீத்தேன்)methane வாயு காற்று மண்டலத்தில் சேர்ந்து வெப்பத் தேக்கத்தை அதிகரிக்கின்றது.

இப்பிரச்சினை போக, கால்நடைகள் வளர்ப்புக்கு மற்ற உணவு வகைகளுக்குத் தேவைப்படும் வளங்களின் அளவைவிட இருமடங்கு தேவைப்படுகின்றது. மற்றும், மீன்பிடி தொழிலினால் இன்று கடுமையான பின்விளவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அதை இங்கு விளக்குவதற்கு இடம் போதாது.

மனிதர்கள் புலால் உண்ணும் பழக்கத்திற்கு சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பே ஆளாகிவிட்டனர் என்பது தொல்பொருள் ஆய்வுகளின் வாயிலாக தெரிய வருகின்றது. ஆனாலும், இது இடையில் ஏற்பட்ட பழக்கமே ஆகும். ஆங்கிலத்தில் இது  (acquired habit) என அழைக்கப்படுகிறது.

மனிதர்கள் புலால் உண்ணிகள் இல்லையென தெரிந்துகொண்டோம். அப்படியானால் அவர்களின் உண்மையான இயல்புதான் என்ன? மனிதன் தன் உண்மை நிலை அறியாமல் ஏன் ஏதேதோ செய்துகொண்டிருக்கின்றான். உண்மையில் மனிதனை கடவுள் எதற்காக படைத்துள்ளார் எனும் கேள்வியை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், மனிதர்களின் வாழ்க்கைமுறையில் அவர்கள் தங்கள் உண்மையான இயல்புக்கு எதிர்மாறான பல பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரியவரும். அவற்றோடு ஒப்பிடும்போது புலால் உண்ணுவது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தோன்றாது.

“மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை தெரிந்துகொண்டான்… மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை” எனும் பாடலை நாம் அடிக்கடி கேட்டதுண்டு. மனிதன் என்பவன் உண்மையில் யார் எனும் கேள்விக்கு காலம் காலமாக மனிதர்கள் பதில் தேடி அலைந்துள்ளனர். ஆனாலும், “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே” எனும் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மற்றும், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,” என்னும் பாடலும் ஞாபக்திற்கு வருகிறது.

அவ்வாறாயின், மனிதன் எவ்வாறு தெய்வமாகலாம்? மனிதன் தெய்வமாக முடியாது, ஆனால் அவன் தெய்வதன்மையை அடையலாம். தெய்வத்தன்மை என்பது கடவுளின் ஆன்மீக சிறப்புகளை பிரதிபலிப்பதன் மூலம் அடையப்படும். அன்பு, கருணை, இரக்கம், தயவு, பொறுமை, போன்ற ஆன்மீகப் பண்புகளே மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்துகின்றன. அவற்றை நாம் தேடி அலைய வேண்டியதில்லை, அவை நமக்குள்தான், மறைந்திருக்கும் இரத்தினங்களைப் போன்று இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர வேண்டியதே நம் கடமை. அதற்கு முதல் படி, கடவுளை அறிந்துகொள்வது. அதையடுத்து அவருடைய சேவையில் ஈடுபடுவது. இதைச் செய்யும் போது ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’.

மாற்றங்களும் மேம்பாடும்


இந்த பூமி தனியே உருவாக்கப்படவில்லை. ஆரம்பத்தில்  “பெருவெடிப்பு” (Big Bang) அல்லது அதிர்வெடி ஒன்றிலிருந்து ஒன்றாக இருந்த பொருள் அல்லது வஸ்து (matter) அண்டசராசரங்களாக, தீக்குழம்புக் கோள்களாக திக்கெல்லாம் தெறித்துச் சிதறி இன்று நாம் காணும் இந்த நிலைக்கு, பேரண்டமாக, அண்டங்களாக, மண்டலங்களாக, கோள்களாக, வின்கற்களாக உருவெடுத்துள்ளன. ஆம்பத்தில் ஒன்றாக இருந்தது மாற்றம் கண்டு இன்று பலவாக பல்கிப் பெருகியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த பூமி ஒரு தீக்குழம்புக் கோளாகவே இருந்துள்ளது. பிறகு சிறுகச் சிறுக குளிர்ந்து வாயு வகைகள் வாயுக்களாகவும், ஆவியாக இருந்த திரவ வகைகள் குளிர்ந்து அந்த அந்த திரவ வகைகளாகவும், குழம்பாக இருந்த வஸ்து வகைகள் இருகிய வஸ்துக்களாகவும் மாறின. பூமியின் மேல் தளத்தில் குளிர்ந்து திரவ நிலைக்கு வந்த நீராவி பிறகு ஆறுகளாகவும் சமுத்திரங்களாகவும் உருவெடுத்தது.

சமுத்திரங்களின் தோற்றத்தினால் அவற்றில் உயிரனங்கள் தோன்றுவதற்குச் சாதகமான  சூழ்நிலை உருவாகியது. ஆரம்பத்தில் ஓருயிரணுவாகவும் பிறகு அவை தங்களுக்குள் பிளந்து பல்கூறு நிலை உயிரணுக்களாகவும் மாறின. இப்படியே பல கட்டங்களான மாற்றங்களினால் நீர்வாழ் உயிரினங்களாகவும், அவை மேம்பாடடைந்து நீரிலும் நிலத்திலும் வாழும் நிலைக்கும், இவையும் மேம்பாடு அடைந்து முழுமையாக நிலத்தில் வாழும் ஆற்றல் பெற்றன.

நிலத்தில் வாழும் உயிரினங்களிலும் காலப்போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு “டைனசோர்” (dynosaur) வகை மிருகங்கள் தோன்றின. இவை பல கோடி வருடங்கள் உலகில் வெற்றிகரமாக வாழ்ந்து இறுதியில் பிரமாண்ட வின் கல், அல்லது சிறு கோள் ஒன்று பூமியைத் தாக்கியதால் இந்த இராட்சத மிருகவகைகள் அழிந்தன. ஆனால், இந்த இராட்சத மிருகங்களின் நிழலில் வாழ்ந்த சிறு வகை மிருகங்கள் இந்த தாக்குதலில் அழியாமல் வேறு வகைகளான ஊர்வனவாகவும் பாலூட்டிகளாகவும் பரிணமித்தன. இவற்றினூடே மனிதனும் தோன்றினான்.

ஓரணுவாக, பன்னணுக்களாக, நீர்வாழ் ஜந்துவாக, பிறகு நீர்நிலவாழி (amphibian) வகைகளாக, அதன் பிறகு நிலம் வாழ் உயிராக, குரங்கு போன்றிருந்து முழு மனிதர்களாக நாம் இன்று மேம்படு அடைந்துள்ளோம்.

அதாவது, மாற்றம் என்பது மேம்பாடு அடைவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். மாற்றங்கள் இல்லாமல் மேம்பாடு இல்லை. மேம்பாடு வேண்டுமானால் மாற்றங்கள் வேண்டும்.

மனிதனின் வாழ்க்கை முறையிலும், அவன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலிருந்து கற்காலம், வெண்கலம், இரும்பு காலங்கள் எல்லாமே மனிதன் மாற்றம் பெற்றதினால் ஏற்பட்ட மேம்பாடுகள். சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதவாழ்வில் பெரும் மாற்றம் ஒன்று ஏற்பட்டது. வேட்டுவ-சேகரிப்பாளர்களாக இருந்த மனிதர்கள் விவசாயத்தை கற்றுக்கொண்டு நெல் போன்றவற்றை பயிர் செய்தனர். இதனால் மனித வாழ்வில் தினமும் வேட்டையாட வேண்டும், கனி மற்றும் பிற உணவுப்பொருட்களை சேகரிக்கவேண்டும் எனும் நிர்ப்பந்தம் நீங்கியது. மனிதனின் கவனம் மற்ற விஷயங்களின் பக்கம் திரும்பியது. ஆன்மீகம் தோன்றியது, கலாச்சாரம் தோன்றியது. எல்லா மேம்பாடுகளுமே மானிடத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டாயின.

ஆனால் சில விஷயங்களில் மனிதன் மாற்றம் காண மறுத்து வருகிறான். சமயவேறுபாடுகளை களைவதற்கு, இனவேறுபாடுகளை களைவதற்கு, பொருளாதார வேறுபாடுகளை நீக்குவதற்கு மனிதர்கள் சுணக்கம் காண்பிக்கின்றனர். இன்று உலகில் நிலவும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இத்தகைய வேறுபாடுகளே காரணமாக உள்ளன. பஹாவுல்லாவின் பின்வரும் குறிப்பைக் காண்போம்:

“உலக மக்களே, நீங்கள் அனைவரும் ஒரே மரத்தின் கனிகள், ஒரே கிளையின் இலைகள்”

நாம் அனைவருமே ஒரே கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம், ஒரே நிலத்தில் வாழ்கின்றோம் அந்த ஒரே நிலம் நமக்கு உணவளிக்கின்றது, ஒரே சூரியன் நமக்கு ஒளி கொடுகின்றது மற்றும் வாழ்வாதாரமாக இருக்கின்றது, ஒரே வானம் மழை கொடுக்கின்றது. இத்தனை இருந்தும் மனிதர்களாகிய நாம் இன்னமும் மதத்தால், நிறத்தால், இனத்தால், பொருளாதாரத்தால், பிளவுபட்டு கிடக்கின்றோம். இத்தகைய குறுகிய சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த மறுக்கின்றோம். பஹாவுல்லாவின் மற்றொரு குறிப்பு பின்வருமாறு:

என்றென்றும் தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகத்தினை முன்னெடுத்துச் செல்லவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்.

நாம் பகுத்திறிவில், ஆன்மீக ஆற்றலில், கலாச்சாரத்தில், நாகரிகத்தில் மேம்பாடுகள் காண வேண்டுமானால் மனிதர்கள் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக நமக்கு சமய ரீதியில் மாற்றம் தேவை. சமயங்கள் அனைத்தும் ஒன்றே என கண்டுகொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இத்தகைய சிந்தனை மாற்றத்திற்கு உதவியாக பஹாவுல்லா தமது போதனைகளை உலகிற்கு வழங்கியுள்ளார். அவர் கேட்டுக்கொள்வதெல்லாம், அவரது போதனைகளை ஒவ்வொரு மனிதனும் சுயமாக ஆராய வேண்டுமென்பதே. இறைவன் நமக்குக் கொடுத்துள்ள பகுத்தறிவாற்றலைப் பயன்படுத்தி சுயமாக சிந்தித்து பஹாவுல்லாவின் போதனைகளை ஆய்வு செய்து அவற்றில் உலகின் மேம்பாட்டிற்கான வழிவகைகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

புறங்கூறாமை


புறம்பேசாதே-1

புறம் பேசுவது சாதாரன மனித இயல்பாக இன்று இருக்கின்றது. எங்காவது நான்கு பேர்கள் கூடிவிட்டால் அங்கு பிறரைப் பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அவ்வாறு புறம்பேசுவதன் விளைவுகள் குறித்து அறியாமலும் ஆழச் சிந்திக்காமலும் இச் செயலில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்துல்-பஹா அவர்கள் நாம் ஒரு புலியைக் கண்டால் எவ்வாறு தலைதெறிக்க ஓடிடுவோமோ அவ்வாறே புறம்பேசுதலிலிருந்து ஓடிப்போக வேண்டுமென அறிவுறுத்துகின்றார். பஹாய் எழுத்தோவியங்கள் புறம்பேசுதலை கொலைக்குச் சமமாக மதிப்பிடுகின்றன மற்றும் கடவுளின் சாபத்தை ஈர்க்கும் ஒரு கொடிய செயல் எனவும் கூறுகின்றன. ஏன்? கொலையைவிட பெரும் பாவ காரியமாக புறம்பேசுதல் ஏன் கருதப்படுகின்றது? புறம்பேசுதல் எதை அழிக்கின்றது? இது குறித்து பின்வரும் குறிப்புகளைப் பார்ப்போம்:

“…மேலும் புறம்பேசுதல் உள்ளத்தின் ஒளியை தனியச் செய்தும் ஆன்மாவின் உயிரையும் அழித்துவிடும்.”

“நீயே ஒரு பாவியாக இருக்கும் வரையில் மற்றவர்களின் பாவங்களைப் பற்றி மூச்சுவிடாதே.”

“தீயதைப் பேசாதே, அதனால் மற்றவர்கள் அதை உன்னிடம் பேசுவதைக் கேட்கத் தேவையில்லை; மற்றவர்களின் குறைகளைப் பெரிது படுத்தாதே, அதனால் உன்னிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தோன்றாது…”

“உருவின் புத்திரனே! உன்னிடத்திலுள்ள குறைகளை மறந்துவிட்டு எப்படி நீ மற்றவர்களின் குறைகளைக் காணுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறாய்?” அங்ஙனம் செய்கிறவன், எமது சாபத்திற்கு ஆளாகிறான்.”

மனித குணங்களிலேயே, குறிப்பாக கடவுளின் நம்பிக்கையாளர்களின் நாவுகளிலிருந்து அது உதித்திடும்போது, புறம்பேசுதலே மிக மோசமனதும் அதி பெரும் பாவச்செயலாகவும் உள்ளது. புறம்பேசுலுக்கான வாசல்களை நிரந்தரமாக மூடுவதற்கு ஏதாவது வழிகளை அமைத்து நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை வாழ்த்துவதற்கு தங்கள் உதடுகளைத் திறந்தால், பஹாவுல்லாவின் போதனைகள் பரவியும், இதயங்கள் ஒளிபெற்றும், ஆன்மாக்கள் மகிமைபெற்றும், மனித உலகு என்றும் நிலையான களிப்புணர்வையும் அடையும்.”

மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் புறம்பேசுதல் ஒருவித மனநோயாகவும் கருதப்படக்கூடும். ஒருவரின் தாழ்வு மனப்பான்மை மற்றும் பொறாமை இதன் விளைநிலமும் பிறர் குறைகளை பெரிதாக்குவதன் வாயிலாக தன் குறைகளை மறைக்க முயலுவது இதன் ஓர் அடையாளமும் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தாழ்வுமனப்பான்மை வசப்பட்டவர்களாக இருக்கக்கூடும். இதைக் களைந்திட ஒரு வேளை ‘கௌன்சலிங்’ போகவேண்டியிருந்தாலும் இருக்கலாம்.

சாதாரணமாக, இத்தகைய கெட்ட பழக்கத்தை நாம் எவ்வாறு அகற்றுவது?

புறம்பேசாதே-3

ஒருவர் மனதில் வொறொருவரைப் பற்றி குறைபேசும் உணர்வு ஏற்படும்போது அவர் தான் குறை பேச நினைக்கும் மனிதரிடம் தான் கண்டுள்ள நல்ல குணங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதாவது இருளை முறியடிக்க வேண்டுமானால் அது ஒளியினால் மட்டுமே முடியும். புறம் பேசுவது என்பது இருள். அதை அன்பான எண்ணங்கள் எனும் ஒளியினால் அழிக்க முயல வேண்டும்.

“…வெறுப்பு எனும் எண்ணம் அதனினும் வலுவான அன்பு எனும் எண்ணத்தால் அழிக்கப்பட வேண்டும்”

மேலும் பஹாவுல்லா தமது ஊழியர்களைப் பற்றி கூறும்போது: “…ஏனெனில் அவன் முகமே என் முகம்,…” எனக் கூறியுள்ளார். மனிதனின் இயல்குணம் புறம் பேசுவது அல்ல. அவ்வாறு புறம் பேசுவதற்கு முன் தான் குறைசொல்லக்கூடியவரின் ‘முகம் கடவுளின் முகமே’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். மறைமொழிகள் நூலில், “யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளோம், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக்கொண்டுள்ளாய்…” என கூறுகின்றார்.

மேலும், புறம்பேசுவதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து சிந்திக்கவேண்டும். ‘ஒருவிரல் நீட்டி எதிரியைக் காட்டி குறை சொல்லும் வேளையிலே, மறுவிரல் நான்கும் மார்பினை நோக்கி வருவதை அறியாயோ,’ எனும் கூற்றின்படி நாம் மற்றவர்கள் குறைகளைப் பற்றி பேச முற்படும் முன் நாம் நமது குறைகளைப் பற்றி முதலில் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றி குறைபேசுவது ஒருவரின் ‘ego’வின் ஏற்றத்தை குறிக்கின்றது. அது சற்று நேரம் மனதுக்கு நிறைவைத் தரும். ஆனால், அந்த நிறைவு தற்காலிகமானது. நிறந்தர மனநிறைவு மற்றவர்களின் நன்மைக்காக பாடுபடுவதிலும், மற்றவர்களை சிறப்புப்படுத்துவதிலுமே இருக்கின்றது.

ஒரு பெண்மனி தன் குருவிடம் சென்று தனக்கு மிக மோசமான குறைபேசும் குணம் இருப்பதாகவும் அதை அவர் களைந்திட உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டாள். குருவும் அப்பெண்ணிடம் வீட்டிற்குச் சென்று ஒரு பையில் கோழி இறகுகளைக் கொண்டு வருமாறு கூறினார். அப்படி கொண்டுவரும்போது வரும் வழியில் அந்த இறகுகளை ஆங்காங்கே இரைத்துக்கொண்டு வரவேண்டுமெனவும் கூறினார். அப்பெண்ணும் வீட்டிற்குச் சென்று அவர் கூறியபடியே கோழி இறகுகளை பையில் கட்டிக் கொண்டு பிறகு அவற்றை வழியெல்லாம் இரைத்துக்கொண்டும் வந்தாள். பிறகு குருவிடம் சென்று அவர் கூறியபடி செய்துவிட்டதாக கூறினாள். குருவும், “நல்லது, இப்போது திரும்பச் சென்று இரைத்த கோழி இறைகுகளையெல்லாம் மறுபடியும் சேகரித்துக்கொண்டு வருமாறு பணித்தார். அதற்கு அந்த பெண்மனி, அது எப்படி முடியும் கோழி இறகுகளெல்லாம் காற்றில் பறந்திருக்குமே என்றாள். அதற்கு குரு குறைபேசுவதும் அதுபோன்றதே எனக் கூறினார். சொன்ன சொற்களையெல்லாம் திரும்பப் பெற முடியாது. ஆகவே, ஒரே வழி குறைபேசாமல் இருப்பதே நலம் என்றார்.

புறம்பேசாதே-2

‘நாண் விட்ட அம்பும் வாய் விட்ட சொல்லும்…’ என்பதற்கிணங்க ஒரு சமுதாயத்தில் குறைபேசும் குணம் ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்திவிடும். அதனால் ஏற்படும் தீமைகள் நீங்குவதற்கு பல ஆண்டுகாலம் ஆகும். ஒருமுறை அத்தவறை செய்துவிட்டால் அதை மீட்டுக்கொள்வதென்பது இயலாதது. ஆகவே, நாம் புறம்பேசும் குணத்தைக் கட்டுப்படுத்துவற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை உறுதியாக பின்பற்றவும் முயலவேண்டும்.

உங்கள் சிந்தனைக்கு:

…ஓர் ஒற்றுமை ஆவியினால் எல்லாருமே ஒட்டுமொத்தமாக உய்விக்கப்படும் ஓரு சூற்றுச்சூழலாக விளங்கும் — ஒரு சமூகத்தில்தோழமை உறவுகள் அவர்களை இணைக்கின்றன; தவறுகள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன, தோல்வி குறித்த பயம் குறைந்துவிடுகிறது; பிறரைக் குறைகூறுவது தவிர்க்கப்படுகிறது, பரஸ்பர ஆதரவு, ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு புறம்பேசுதலும் வெட்டிப்பேச்சும் வழிவிடுகின்றன;”

“…பஹாய் சமூகத்தில் வீண்பேச்சுகளுக்கும் புறம்பேசுதலுக்கும் அல்லது பிறரை எடைபோடும் மனப்பான்மைக்கும் தானே-நேர்மையானவன் என்பதற்கும் இடமில்லை.”

“…ஒரு தனிநபரின் போராட்டங்கள் சமூகத்தில் புறம்பேசுதலுக்கோ ஒற்றுமை குலைவிற்கோ காரணமாக இல்லாதிருப்பதை உறுதிச்செய்திட, நிச்சயமாகவே, கவனம் தேவைப்படுகின்றது.”

-சமயத்தின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பேணுதல்
சமயத்தின் திருவாக்குகளிலிருந்தும் உலக நீதி மன்றத்தின் வழிகாட்டல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள். -ஆகஸ்ட் 2017

“…பஹாய் சமூகத்தில் வீண்பேச்சுகளுக்கும் புறம்பேசுதலுக்கும் அல்லது பிறரை எடைபோடும் மனப்பான்மைக்கும் தானே-நேர்மையானவன் என்பதற்கும் இடமில்லை.”

உலக நீதிமன்றம், 23 ஏப்ரல் 2013