இரட்டை பிறந்தநாள் விழாக்கள்


இரட்டை புனித நாள்கள்

equinox

இதுநாள் வரை பஹாய் நாள்காட்டியான ‘படீ நாள்காட்டி ஆங்கில நாள்காட்டியான கிரேகோரிய நாள்காட்டியோடு பிணைக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால், ‘படீ நாள்காட்டியின் அமுலாக்கத்தோடு, இந்த இணைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. ‘படீ நாள்காட்டியின் முதல் நாளான நவ்-ருஸ் திருநாள், வானசாஸ்திர கணக்கின்படி நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு வருடமும் ‘மஹா விஷுவமாகிய’, சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணத்திற்கு ஏற்ப நவ்-ருஸ் புத்தாண்டு நிர்ணயிக்கப்படும். பஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பிக்கின்றதன் காரணமாக, சூரியன் மேஷ ராசிக்குள் அஸ்தமனத்திற்கு முன்பாக பிரவேசிக்கின்றதா அல்லது அதற்கு பிறகு பிரவேசிக்கின்றதா என்பதைப் பொறுத்து நவ்-ருஸ் பண்டிகை நிர்ணயிக்கப்படும். இனி நவ்-ருஸ் பண்டிகை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு வரக்கூடும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பஹாய் புனிதநாளும், பிற முக்கிய நாள்களும் கடந்தகாலத்தில் நடந்தது போன்று, இனி சூரிய நாள்காட்டிக்கு இணங்கவல்லாமல், இனி ‘படி நாள்காட்டிக்கு இணங்கவே வரும். இதில் இரட்டைப் பிறந்தநாள்கள் குறித்த தினங்கள் சற்று விசேஷமானவையாக இருக்கும். அதன் விவரத்தைக் கீழே காணலாம்.

பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் பிறந்தநாள்கள் இதுநாள் வரை ஒவ்வொரு வருடமும் முறையே அக்டோபர் 20, நவம்பர் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டு வந்தன. ஆனால், பஹாய்களின் நாள்காட்டியான ‘படீ நாள்காட்டியின் அமுலாக்கத்தோடு, இந்தப் பிறந்த நாள்கள் “நவ்-ருஸ் புத்தாண்டிற்கு அடுத்த எட்டாவது அமாவாசையைத் தொடர்ந்து வரும் முதலாம் மற்றும் இரண்டாம் நாள்களில் இனி கொண்டாடப்படும். பாப் பெருமானார் முஹாரம் 1-ஆம் தேதி, 1819-இல் பிறந்தார் (நவ்-ருஸ்சிற்குப் பிறகு வந்த எட்டாவது அமாவாசைக்கு அடுத்த நாள்). பஹாவுல்லா, நவ்-ருஸ்சிற்குப் பிறகு வந்த எட்டாவது அமாவாசையைத் தொடர்ந்த இரண்டாவது நாளான முஹாரம் 2, 1817-இல் பிறந்தார். இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இவ்விரண்டு கிரேகோரிய வருடங்களிலும், சூரிய நாள்காட்டியின்படி, ஐந்தாவது இஸ்லாமிய மாதமான ஜோமாடா அல்-உலாவில் நவ்-ருஸ் வந்தது. இதன்படி, தொடர்ந்து வரும் முஹாரம் மாதத்தின் (முதல் சந்திர மாதத்தின்) அமாவாசை நவ்-ருஸ் புத்தாண்டிற்குப் பிறகு தோன்றிய எட்டாவது அமாவாசையாகும்.

twinbirthdays

பாப் பெருமானாரும், பஹாவுல்லாவும் முறையே முஹாரம் முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் பிறந்ததன் காரணமாக, இஸ்லாமிய சந்திர நாள்காட்டியைப் பயன்படுத்தும் நாடுகளிலுள்ள பஹாய்கள் இவ்விரண்டு பஹாய் புனிதநாள்களையும் இரட்டைப் புனிதநாள்களாகக் கொண்டாடி வந்துள்ளனர். சூரிய வருட நாள்காட்டியைக் கொண்ட இரான் நாட்டின் பஹாய்களும், இஸ்லாமிய சந்திர நாள்காட்டியிலுள்ள தேதிகளை இரண்டு புனிதநாள்களுக்கான தேதிகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்காலத்தில், உலகின் பிற பாகங்களிலுள்ள பஹாய்கள் இவ்விரண்டு புனித நாள்களையும் அக்டோபர் 20 மற்றும் நவம்பர் 12-ஆம் தேதிகளில் கொண்டாடி வந்துள்ளனர். 2015 முதற் கொண்டு, ‘இரட்டைப் பிறந்தநாள்கள்’ கிரேகோரிய நாள்காட்டியின்படி, அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தி வரை, அடுத்தடுத்து வரும் நாள்களில், ஒரு ‘நகரும் விருந்தாக’ (ஈஸ்டர் புனிதநாளைப் போன்று) கொண்டாடப்படும். அடுத்த வருடம், இரட்டைப் பிறந்தநாள்கள் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் (குட்ராட் 10 மற்றும் குட்ராட் 11) வரும்.

உலக நீதிமன்றத்தின் இத்தீர்மானத்தின்படி, விழாக்காலங்கள் இளவேனிற் காலத்திலும், இலையுதிர் காலத்திலும் வரும் மற்றும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பஹாய்கள் அவற்றை ஒரே நேரத்தில் கொண்டாடுவர். இம்மாற்றத்தின் காரணமாக, கிழக்கத்திய பஹாய்களுக்கு நேர்ந்தது போன்று இரட்டைப் பிறந்தநாள்கள் இனி உண்ணா நோன்பு காலத்தில் வரவே வராது. மேலும் கடந்தகாலங்களில், ஷீயா இஸ்லாமியர் கர்பிலா போரில் இமாம் ஹுசேய்னின் வீரமிகு தற்காப்பு மற்றும் தியாகமரண நிகழ்ச்சிகளை நினைவுகூறும் நாள்களான முஹாராம் 10-நாளன்று வரும் ‘அஷுரா நாளை’ அணுகிவரும் நாள்களின் போது கிழக்கத்திய பஹாய்கள் இரண்டு விழாக்களையும் கொண்டாடி வந்தனர். இந்த பஹாய் புனித நாள்கள் சூரிய நாள்காட்டியோடு இணைக்கப்பட்டுவிட்டதால், சந்திர மாதமான முஹாரத்திற்கு மாறாக, 354 நாள்களைக் கொண்ட இஸ்லாமிய வருடத்தை விட சூரிய வருடம் 11.25 நாள்கள் அதிகமாகும் என்பதன் காரணமாக, ஒரு 32 காலவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே இவ்விழாக்கள் அஷுரா நாளிற்கு அணுக்கமாக வரும்.

கி.பி.1844 – எல்லா சமயங்களுக்கும் மையக்குறியான ஆண்டு


அவதார எதிர்ப்பார்ப்பும் பஹாய் சமயமும்

19-ஆம் நூற்றாண்டில் கிருஸ்துவ சமயத்தினரிடையே மட்டுமல்லாது, இஸ்லாமியரிடையிலும் கூட 1844-ஆம் ஆண்டில் இயேசுநாதர் அவதரிக்கவிருக்கின்றார் என்னும் நம்பிக்கை பரவலாக நிலவியிருந்தது. முக்கியமாக, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த (1782-1849) வில்லியம் மில்லர் என்பவர் கி.பி.1844-இல் இயேசுநாதரின் மறுவருகை கண்டிப்பாக நடைபெறும் என உறுதியாக நம்பினார். அவரைப் பின்பற்றியோர் எண்ணற்றோர். அதே போன்று மத்திய கிழக்கிலும் ஹிஜ்ரி 1260 (கி.பி.1844) இயேசு நாதர் மறுபடியும் தோன்றுவார் என சுன்னப் பிரிவினரிடையிலும், 12-வது இமாமாகிய இமாம் மஹதி ஹிஜ்ரி 1260-இல் உலகில் தோன்றப்போகின்றார் என்னும் நம்பிக்கை ஷியா வர்க்கத்தினரிடையிலும் நிலவியது. ஆனால், அவரவர் புனித வேதங்களில் இந்த 1844-ஆம் ஆண்டு வெளிப்படையாகக் கூறப்படவில்லை. மறைமுகமான வார்த்தைகளிலேயே கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் தானியேலின் நூலில், புனிதஸ்தலம் எப்பொழுது பரிசுத்தமாகும் என்பது குறித்து, அது 2300 நாள்களுக்குப் பிறகு நடைபெறும் என்னும் தீர்க்கதரிசனம் உள்ளது. இங்கு ‘நாள்’ எனக் குறிப்பிடப்படுவது, விவிலிய திருநூலில் கடவுளின் ஒரு நாள் என்பது மனிதரின் ஒரு வருடமாகும் என கூறப்பட்டுள்ளது. ஆதலால் புனிதஸ்தலம் 2300 வருடங்களுக்குப் பிறகு புனிதப்படுத்தப்படும் என்பது அர்த்தமாகும். ஆனால், இந்த 2300 வருடங்கள் எப்பொழுது ஆரம்பித்தன என்பதைப் பார்க்கையி்ல், அது கி.மு.457-இல் ஆரம்பித்தது. அதாவது புனிதஸ்தலத்தை மறுசீரமைக்கும்படி அர்டிஷேர் விடுத்த மூன்றாவது ஆணையிலிருந்து ஆரம்பித்தது. கி.மு. 457-லிருந்து கி.பி. 1844 வரை சரியாக 2300 வருடங்கள் உள்ளன. இதையெல்லாம் மேலும் ஆழமாக விவரிப்பதற்கு இங்கு இடம் போதாது. சுருங்கக் கூறின் கி.பி.1844 எல்லா சமயங்களுக்கும் ஒரு முக்கியமான, தீர்க்கதரிசனங்களுக்கு உட்பட்ட ஓர் ஆண்டாகும். இதன் அடிப்படையில், இந்து சமயத்தில் இந்த 1844-ஆம் ஆண்டு ஏதாவது ஒரு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்போம்.

உலகளாவிய எதிர்ப்பார்ப்பு

கிருஷ்னரின் வின்னேற்றத்திற்கும், கலியுகத்தின் ஆரம்பத்திற்கும் ஒரு தொடர்புள்ளது. அதாவது, புராணங்களின் கூற்றுப்படி, கிருஷ்னர் உலக வாழ்வை நீத்த மறுணமே கலியுகம் பிறந்தது. கலியுகத்தின் ஆரம்பம் சில மிகவும் விசேஷமான கிரக சேர்க்கைகளின் போது ஆரம்பித்ததாக சில வானசாஸ்திர வல்லுனர்கள் கூறுகின்றனர். உண்மையில் இந்து சமய புனிதநாள்கள் எல்லாமே கிரக சேர்க்கைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு கலியுகம் எப்போது முடிவுறும் என்பதை, மகாபாரதத்தை எழுதிய பராசர முனிவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

யதா சந்திரஸ்ச ஸூர்யஸ்ச ததா திஷ்யோ ப்ருஹஸ்பதி|
ஏக ராஸௌ ஸமேஷ்யந்திததா பவதிக்ருதம்||
சந்திரனும் சூரியனும் அதே போன்று குருவும் ஒரே ராசியில் ஒன்றுகூடும் போது அது கிருத யுகம் ஆகும்.
ஸ்ரீ விஷ்ணுபுரானம்(4-24-102)

ஆனால், மேற்கண்ட கிரக சேர்க்கையானது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றது. இதில் விசேஷம் ஒன்றுமில்லை. ஒரு பஹாய் ஆன வடமொழி பண்டிதர் டாக்டர் முஞ்ஜே இதற்கு வேறு விளக்கம் அளிக்கின்றார். அதாவது, பஹாய் சமயத்தின் மூன்று மையநாயர்களான பாப் பெருமானார், பஹாவுல்லா, அப்துல்-பஹா ஆகியோர் வரிசையாகத் தோன்றிய காலமே இங்கு குறிப்பிடப்படுகின்றது. சந்திரன் என்பது பாப் பெருமானார், பஹாவுல்லாவின் முன்னோடியாக செயல்பட்டவர். பஹாவுல்லா தமது திருவெளிப்பாட்டின் மூலம் உலகிற்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்றவர். ப்ருஹஸ்பதி எனப்படும் குரு கிரகம் பஹாய் சமயத்தின் வழிகாட்டும் உதாரண புருஷரான அப்துல்-பஹாவைக் குறிக்கின்றது. இவர்கள் கி.மு. 1844 முதல் 1921 வரை பஹாய் சமயத்திற்குத் தெய்வீக வழிகாட்டலை வழங்கிவந்தனர்.

பொதுவாக கலியுகம் கி.மு.3102-இல் கிருஷ்னரின் மறைவோடு ஆரம்பித்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும், இது இன்னமும் சர்ச்சைக்குறிய ஒரு விஷயமாகவே இருக்கின்றது. வேறு பல தேதிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. பின்வரும் பட்டியலைப் பார்க்கவும்.

• ஆர்யபட்டர், 18 பிப்ரவரி கி.மு. 3102
• டாக்டர் அபியங்கர் & டாக்டர் வல்லபா – 7 பிப்ரவரி கி.மு. 3104
• வேதாங்க ஜோதிஷம் – 1173 B.C.
• கர்காச்சாரியர் – கி.மு. 3104’க்கு சில வருடங்களுக்கு முன்
• கல்ஹனா – கி.மு. 2500

கலியுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதைப் பார்க்கும் போது, அது சில மிகவும் விசேஷமான கிரக சேர்க்கைகளின்படி கி.மு.3104-இல் ஆரம்பித்ததென வானசாஸ்திர மற்றும் கணித வல்லுனரான K.D. அபியங்கர் கூறுகின்றார். இவர் கலியுக ஆரம்பம் கி.மு.3102 என்பதை முற்றாக மறுக்கவில்லை. மாறாக, தற்போது இருக்கும் கணிணி தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் கணிக்கப்பட்ட இந்த கலியுக ஆரம்பத்தை அவர் நவீன முறைகளைப் பயன்படுத்தி, சரிசெய்து, கலியுகம் உண்மையில் கி.மு.3104, பிப்ரவரி 7-இல் ஆரம்பித்ததென கணித்துள்ளார். [1]

ஒரு வல்லுனர் எனும் முறையில் அபியங்கரின் கூற்றை நாம் ஏற்றுக்கொண்டு வேறு சில அடிப்படையான விஷயங்களை இப்பொழுது பார்ப்போம்.

கலியுகத்திற்கு 4,32,000 வருடங்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதில் இதுவரையிலும் சுமார் 5000 வருடங்களே கழிந்துள்ளன என கூறப்படுகின்றது. இந்த 4,32,000 ஆண்டுகளுக்குப் பிறகே உலகின் கலி தீர்க்க கிருஷ்னர் கல்கி அவதாரமாக தோற்றமளிப்பார் என நம்பப்படுகின்றது. உண்மையில், இன்று உலகைப் பார்க்கையில், கிருஷ்னர் 4,32,000 வருடங்களுக்குப் பிறகு தோன்றுவார் எனக் கூறுவது சற்று அபத்தமாக உள்ளது. உலகம் அத்தகைய மோசமான, விஷ்ணு புராணத்தில் கூறுப்பட்டுள்ள மோசமான, நிலையில் இன்று இருக்கின்றது. இந்த 4,32,000 வருடங்கள் எங்கிருந்த வந்தன மற்றும் கலியுகத்திற்கு, சந்தி சந்தியாம்ச காலங்கள் உட்பட 4800 வருடங்களே என்பதற்கான விளக்கத்தை இதே வலைப்பதிவின் https://prsamy.wordpress.com/2009/09/22/கலியுக-முடிவும்-கல்கி-அவ -இல் காண்க.)

கலியுகத்திற்கு 4800 வருடங்களே என்பதை ஏற்றுக்கொண்டோமானால், இந்த கி.மு. 1844-ஆம் ஆண்டு இதில் எப்படி வருகின்றது? (புராணங்களில் யுகங்கள் சார்ந்த வருடம் திவ்யாப்தம் என குறிப்பிடப்படுகின்றது. திவ்யம் என்பது சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். ஆதலால் யுகங்கள் சூரிய வருடங்களன்றி சந்திர வருடங்கள் அல்ல)

புனித வேதங்களிலும், புராணங்களிலும் வருடங்கள் குறித்த தீர்க்கதரிசனங்கள் வெளிப்படையான மொழிகளில் கூறப்படவில்லை. அந்தந்த காலத்தின் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அல்லது, அக்கால மக்கள் அறிந்திராத சில வருங்கால நிகழ்வுகளின் அடிப்படையில் அக்காலத்து மக்களுக்கு சில விவரங்கள் மறைமுகமாக வழங்கப்பட்டிருந்தன. இதன்படி, கலியுகத்தின் முடிவில் கிருஷ்னர் கல்கியாக அவதரிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. சரி, கலியுகம் எப்பொழுது முடிவுற்றது என்பதைப் பார்ப்போம்?

கலியுகத்திற்கு 4800 சூர்ய வருடங்களே என்பதை ஏற்றுக் கொண்டோமானால், இந்த 4800 வருடங்கள் கி.மு. 3104-இல் ஆரம்பித்து கி.பி. 1696-லேயே முடிவுற்றிருக்கவேண்டும். ஆனால், 1844-ஆம் வருடம் இதில் எங்கும் வரவில்லை. இதை எப்படி விளக்குவது?

சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு தற்போது வழக்கிலிருக்கும் 365.242 நாள்களைக்கொண்ட சூர்ய வருடங்களோடு 354.367 நாள்களைக் கொண்ட சந்திர வருடமும் வழக்கில் இருந்தது, இன்றும் பிரபலமாகவுள்ள விக்கிரம ஆண்டின் வருடப்பிறப்பு, சில மாற்றங்களுடன் இந்த சந்திர வருடத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றது. (அதே போன்று கிருஷ்ன சம்வத்சரமும் சந்திர வருடத்தையே பின்பற்றி வருகின்றது.) சந்திர வருடத்தை சூரிய வருடத்திற்கு இணையாக்குவதற்காக, சந்திர வருடம் சூரிய வருடத்தைவிட சுமார் பதினொரு நாள்கள் குறைவானது என்பதன் காரணமாக, சந்திர நாள்காட்டி சில முறைகளின்படி சரிசெய்யப்பட்டு சூரிய வருடத்திற்கு இணைவாக்கப்படுகின்றது. இது சில கணிப்புகளின்படி அவ்வப்போது சில வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது ஒவ்வொரு வருடத்திற்கும் 10.875 நாள்களைச் சேர்ப்பதற்குச் சமமாகும்.

ஏற்கனவே கூறியுள்ளபடி, தீர்க்கதரிசனங்கள் உடனடியாக விளங்கிக்கொள்ள முடியாத, மறைமுகமான மொழிகளிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி பராசர முனிவர் கி.மு. 1844-ஆம் ஆண்டை இந்த கலியுக வருடங்களுக்கிடையில் மறைமுகமாக வைத்திருக்கலாம்.

கி.மு. 3104 பிப்ரவரி 7-ம் தேதியிலிருந்து கி.பி.1844, 23-ஆம் தேதி வரை சரியாக, 4947.302 வருடங்கள் உள்ளன. அதாவது தன்னிச்சையாக மனிதர்களால் இடைச் செருகப்படும் ‘அதிக மாதம்’ எனப்படும் அவ்வப்போது பஞ்சாங்கத்தில் வரும் அந்த ஒரு மாதத்தை விட்டுவிடுவோமானால் மீதமிருப்பது 354.367 நாள்கள் கொண்ட வருடமே. இது ஒரு சந்திர வருடத்திற்குச் சமமாகும். இந்த 4947.302 வருடங்களை வழக்கில் தற்போது இருக்கும் சூரிய வருடங்களாக ஓர் எண்ணிக்கை முறையில் மாற்றிப் பார்ப்போம்:

சந்திர வருடத்திற்குச் சரியாக 354.367 நாள்கள் உள்ளன.

சூரிய வருடத்திற்குச் சரியாக 365.242 நாள்கள் உள்ளன

கிருண்னர் மறைந்ததிலிருந்து பாப் பெருமானார் பிரகடனம் வரை சரியாக 4947.302 சந்திர வருடங்கள் உள்ளன, அல்லது 4947.305 சந்திர வருடங்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், பாப் பெருமானாரின் பிரகடனம் 23 மே 1844 சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தொடங்கி அடுத்த நாள் மே 24 காலை பொழுது வரை நீடித்தது. பொதுவாக, சந்திர வருடங்கள் என்னும் போது அவை கிரிகோரிய வருடங்களைப் போன்று நடுநிசி 12 மணிக்கு ஆரம்பிப்பதில்லை, மாறாக அவை சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பிக்கின்றன. ஆதலால், இங்கு மே 23 என்னும் போது, அது மே 24, 1844-ஐயும் உள்ளடக்கியுள்ளது.

இந்த 4947.305 வருடங்களை சூரிய வருடங்களாக மாற்றுவோமானால் அது பின்வருமாறு இருக்கும்:

4947.305 சந்திர வருடங்களை சூரிய வருடங்களாக மாற்றுவதற்கு அவற்றை 354.367’ஆல் பெருக்கி 365.242’ஆல் வகுக்க வேண்டும்:

4947.305 x 354.367)/365.242=4800, அதாவது சரியாக 4800 சூரிய வருடங்கள்.

நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி புராண தீர்கதரிசனங்கள் இந்த 4800-ஐ மறைமுகமாக குறிப்பிட்டிருப்பினும் அதை தகுந்த கணிப்புகளுடன் நாம் வெளிக்கொணர்ந்துள்ளோம்.

மேற்கண்டவற்றிலிருந்து, பஹாய் சமயம் பிறந்த ஆண்டான கி.மு.1844, ஹிந்து சமயத்தின் 1000 வருடங்களைக் கொண்ட சத்திய யுகம் பிறந்த ஆண்டும் ஆகின்றது.

பஹாய் சமயம் கி.பி.1844-இல் மே மாதம் 23-ஆம் தேதி தோற்றம் கண்டது. பாப் அல்லது ‘திருவாசல்’ என்பார் எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே எனவும், தனக்குப் பின் தோன்றவிருக்கும் மற்றொரு அவதாரத்திற்கு (பஹாவுல்லா) தாம் ஒரு முன்னோடி எனவும் அறிவித்தார். (bahai.org)

அதாவது, கி.பி. 1844-உடன் கலியுகம் மறைந்து சத்திய யுகம் ஆரம்பித்துவிட்டது. கல்கி விஷ்ணு யாஷா அவதரித்து விட்டார். பாரசீக சொல்லான பஹாவுல்லா எனும் திருநாமத்தை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்ப்போமானால் அது ‘விஷ்ணு யாஷா’ என்றே வரும், அதாவது ‘கடவுளின் பேரொளி’ அல்லது ‘கடவுளின் ஜோதி’


[1] According to KD Abhyankar, the starting point of Kaliyuga is an extremely rare planetary alignment, which is depicted in the Mohenjo-Daro seals[citation needed]. Going by this alignment the year 3102 BCE is slightly off. The actual date for this alignment is February 7 of 3104 BCE. There is also sufficient proof to believe that Vrdhha Garga knew of precession at least by 500 BCE. Garga had calculated the rate of precession to within 30% of what the modern scholars estimate. (https://en.wikipedia.org/wiki/Kali_Yuga)

பற்றின்மை


(வாட்ஸாப்பில் கிடைத்த, பற்றின்மையை விளக்கிடும் ஓர் அருமையான கதை.)

refuse

உலகம் இவ்வளவுதான்..நன்பர் திரு அனந்த நாராயண் எவ்வளவு கருத்துள்ள கதையை பதிவு செய்து இருக்கின்றார் பாருங்கள்.. படியுங்கள் கதையை…..கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..

கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்..

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..
அதேபோல ராணியாருக்கும்..
மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்… நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.

இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..

“அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..
காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார்.

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்..அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்.. சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..

உடனே, மக்களில் நிறைய பேர்..செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தனர்..

மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது… இதெல்லாம் அதற்க்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான்..

அதற்கு “மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது” என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது..

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறத்துவங்கினான் மன்னன்.

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..

அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர்

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.. விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்க்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான்..

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்..

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்..
மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை..

ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்.. மந்திரியும்.. தளபதியும்..மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..

சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால்வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..

அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.

கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி எங்கே உன் மக்கள் என்றார்..

மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன்..

அதற்கு கடவுள் “நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்..அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..

உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து…என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்..

இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்” என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.

மெய்ம்மையைத் தேடுவோருக்கான வழிகாட்டி


காலங்காலமாக மனிதன் உண்மையை அல்லது மெய்மையைத் தேடி காடு, மேடு, வனவாசம், துறவறம், சன்னியாசம் என பலவகைகளில் முயற்சித்து வந்துள்ளான். கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர், மனிதன் அவரை சமநிலையிலிருந்து அறிந்துகொள்ள முடியாது. ஆனால், கடவுளின் பண்புகளின் வாயிலாக அவரை அறிந்துகொள்ளலாம். சூரியனை அதன் வெப்பம், வடிவம், ஒளி ஆகியவற்றின் மூலம் நாம் தெரிந்துகொள்வதற்கு இது சமமானதாகும். படைப்பனைத்தும் அதனதன் சாயலில் படைக்கப்பட்டுள்ளன, ஆனால் மனிதன் மட்டும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என புனித நூலான விவிலியத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இதன் தாத்பரியம் யாதெனில் மனிதன் கடவுளின் பண்புகள் அனைத்தையும் பிரதிபலிக்க வல்லவன் என்பதே ஆகும். ஆனால் இ்ந்த நிலையை அவன் அடைவதற்கு அவன் முயல வேண்டும். இம்முயற்சிக்கு முதல் படி இறைவனைத் தேடுதலாகும். இவ்வாறு இறைவனை அல்லது மெய்ம்மையைத் தேடும் ஒருவர் அப்பிரயாணத்தை எவ்வாறு துவங்குவது மற்றும் அப்பிரயாணத்தின்போது மனிதன் செய்யக்கூடியவற்றை பஹாவுல்லா பின்வரும் அறிவுரையின் மூலம் விவரிக்கின்றார்

எனது சகோதரனே,

(இதயத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ளல்)

உண்மையாகத் தேடும் ஒருவர், ‘தொன்மையான நாள்களின்’ அறிவின்பால் அழைத்துச் செல்லும் தேடுதல் என்னும் பாதையில் அடியெடுத்து வைக்க உறுதி கொள்ளும் பொழுது, மற்றெல்லாவற்றிற்கும் முன், அவர், இறைவனின் உள்ளார்ந்த மர்மங்களின் வெளிப்படுத்துதலுக்கு இருப்பிடமாகிய தனது இதயத்தைக் கற்றக் கல்வி என்னும் புழுதியிலிருந்தும் சாத்தானின் கற்பனை என்னும் உருவங்களின் நிலைக்கலன்களாக விளங்கிடுபவற்றிலிருந்தும் அவசியம் துப்புரவாக்கித் தூய்மைப் படுத்த வேண்டும். அன்புக்குரியவரின் நிலையான இருப்பிடமாயுள்ள தமது நெஞ்சத்தினை மாசு ஒவ்வொன்றிலிருந்தும் துப்புரவாக்கி, தமது ஆன்மாவை நீரும், களிமண் சார்ந்த அனைத்திலிருந்தும், மாயையிலிருந்தும், நிலையற்ற பற்றுக்களிலிருந்தும், புனிதப்படுத்த வேண்டும். அதனில் விருப்பும், வெறுப்பும் கிஞ்சிற்றும் எஞ்சியிராத அளவு தன் உள்ளத்தினைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லயெனில், விருப்பம், கண்மூடித்தனமாகத் தவறிழைத்திடவோ, வெறுப்பு அவரை உண்மையைவிட்டு விலகிச் சென்றிடவோ செய்திடக்கூடும். இன்றும், நீங்கள் காண்பது போலவே, பெரும்பான்மை மனிதர்கள் இவ்வித விருப்பு, வெறுப்பு ஆகியவையின் காரணமாக, நித்திய வதனத்தை இழந்து, தெய்வீக மர்மங்கள் என்னும் திருவுருவங்களிலிருந்து வெகுதூரத்திற்கப்பால் வழிதவறிச் சென்றோராகி, வழிகாட்டுவாரின்றி, மறதி, தவறு என்னும் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தவாறு இருக்கின்றனர்.

(பற்றின்மையைக் கடைப்பிடித்தல்)

அத் தேடுபவர், எல்லாவேளைகளிலும் இறைவனிடத்தில் நம்பிக்கை வைத்து, உலக மக்களைத் துறந்து, புழுதி என்னும் உலகிலிருந்து தன்னைப் பற்றறுத்துக் கொண்டு, பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவரை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். எவருக்கு மேலாகவும் அவர் தன்னை உயர்த்திக்கொள்ள என்றுமே முயற்சி செய்யலாகாது. தனது இதயமெனும் நிருபத்திலிருந்து செருக்கு, வீண் பெருமை ஆகியவற்றின் சுவடுகள் அனைத்தையும் அவர் முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டும்; பொறுமை, சகிப்பு ஆகியவற்றை இறுகப்பற்றிக்கொண்டு மௌனமாய் இருப்பதோடு, வீண் பேச்சுகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். ஏனெனில், மனிதனின் நா உள்ளூர கனன்று எரியும் நெருப்பாகும்; அளவற்ற பேச்சோ ஒரு கொடும் விஷமாகும். தீ உடலை எரிக்கும்; ஆனால், நாவின் நெருப்போ, உள்ளம், ஆன்மா ஆகிய இரண்டையுமே அழித்திடும். முன்னதன் ஆற்றல் சிறிது காலத்திற்கேயாகும். ஆனால், பின்னதன் விளைவுகளோ ஒரு நூற்றாண்டு நீடிக்கும்.

(புறங்கூறுதலிலிருந்து விடுபட்டிருத்தல்)

மேலும், அத் தேடுபவர், புறங்கூறுதலைக் கடுந் தவறாகக் கருதி, அதன் தாக்கத்திற்கு உட்படாது ஒதுங்கிட வேண்டும். ஏனெனில், புறங்கூறுதல் உள்ளத்தின் ஒளியை அணைத்து ஆன்மாவின் ஜீவனையும் அழித்திடுகின்றது. குறைவில் மனநிறைவுப்பெற்று, மிதமிஞ்சிய ஆசைகள் அனைத்தினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். உலகைத் துறந்தோரின் தோழமையைப் பொக்கிஷமாகப் போற்றி, அவர், தற்பெருமை பேசித்திரிவோர், உலக இன்பங்கள் மீது பாசம்வைத்தோர் ஆகியோரைத் தவிர்ப்பதை ஓர் அரிய நன்மையாகக் கருத வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் இறைவனோடு தொடர்புக் கொள்ள வேண்டும்; தனது அன்புக்குரியவரைத் தேடும் முயற்சியில் அவர் சிறிதும் மனந் தளரலாகாது. ஒழுங்கற்ற எண்ணம் ஒவ்வொன்றையும், அவர்பாலுள்ள அன்பின் உச்சரிப்பு என்னும் ஒளிப்பிழம்பினைக் கொண்டு எரித்துவிட்டு, அவரைத் தவிர மற்றதனைத்தையும் மின்னல் வேகத்தில் கடந்து சென்றிட வேண்டும். அவர் பறிகொடுத்திட்டோருக்கு உதவிக்கரம் நீட்டி, வறியோருக்கு மறுக்காது என்றும் ஆதரவு நல்க வேண்டும். அவர் பிராணிகளுக்கே அன்பு காட்ட வேண்டும் என்றால், பேசுந்திறன் வழங்கப்பெற்ற தன் சக மனிதரிடம் நடப்பது எத்தகையதாய் இருத்தல் வேண்டும். தனது அன்புக்குரியவருக்காக அவர் தன் உயிரையே அர்ப்பணிக்க தயங்கலாகாது; அன்றியும், மனிதரின் கண்டனம் தன்னை உண்மையிலிருந்து விலகிச் சென்றிட அனுமதிக்கலாகாது. தனக்காகத் தான் விரும்பாதததை அவர் மற்றவர்களுக்காக விரும்பலாகாது; அன்றியும், நிறைவேற்ற முடியாததனை வாக்களிக்கவுங் கூடாது. அவர், தீமை இழைப்போரின் தோழமையை முழுமனதாகத் தவிர்த்து, அவர்களின் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கவும் வேண்டும். அவர் பாவியை மன்னிக்க வேண்டும்; என்றுமே அவனது தாழ்ந்த நிலையை இழித்துரைக்கலாகாது; ஏனெனில், தனது சொந்த முடிவு எவ்வாறிருக்கும் என்று யாருக்குமே தெரியாது. எத்தனை முறை, பாவி, தான் சாகுந் தறுவாயில், நம்பிக்கையின் சாரத்தைப் பெற்று, நித்திய ஜீவநீரினைப் பருகி, விண்ணவர் கூட்டத்தின் முன்னிலைக்குச் சிறகடித்துப் பறந்திருக்கின்றான். அதே வேளையில், எத்தனை முறை பக்திமிக்க ஒரு நம்பிக்கையாளன் தனதான்மா பிரியும் வேளையில் நரகத் தீயில் விழுமளவு மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றான்.

நம்பிக்கையூட்டக் கூடிய, கருத்து நிறைந்த இத் திருச்சொற்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், உண்மையைத் தேடுபவர், இறைவனைத் தவிர மற்றனைத்தையும் நிலையற்றவையாகக் கருதிடவும், சகல போற்றுதலுக்கும் உரிய அவரைத் தவிர மற்ற அனைத்தையும் முற்றிலும் வெறுமை எனக் கருதிடவும் வேண்டும் என்பதுதான்.

(கடவுளின் பண்புகளை கடைப்பிடித்தல்)

இவை மேன்மைமிக்கோனின் இயல்புகளுள் சில; அவையே ஆன்மீக மனம் படைத்தோரின் தரக்குறியீடாகும். ஆக்கமுறையான அறிவின் பாதையில் நடப்போருக்கான தேவைகள் சம்பந்தமாக முன்பே குறிப்பிடப்பட்டுவிட்டன. பற்றற்ற வழிப்போக்கரும், உண்மையாகத் தேடுபவருமான அவர் அத்தியாவசியமான இந்நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகேதான், அவர், உண்மையாகத் தேடுபவர் என அழைக்கப்பட முடியும். “எவரொருவர் எமக்காக முயற்சிகளை மேற்கொள்கின்றாரோ,” என்னும் வசனம் குறிப்பிடுகின்ற நிபந்தனைகளை எப்போது அவர் நிறைவேற்றுகின்றாரோ அப்போதெல்லாம், “உறுதியாகவே அவரை யாம் எமது வழியில் நடத்திடுவோம்,” என்னும் சொற்கள் வழங்கிடும் அருட்பாலிப்புகளால் இன்புறுவார்.

(தேடுபவரின் உள்ளத்தில் பதிய வேண்டிய ஆன்மீகப் பண்புகள்)

தேடுதல், பேரார்வமிகு முயற்சி, ஏக்கமிகு வேட்கை, உணர்ச்சிமிகு ஆழ்ந்த பக்தி, முனைப்புமிகு அன்பு, பேருவகை, ஆனந்தப் பரவசம் என்னுந்தீபம் உண்மையைத் தேடுபவரின் உள்ளத்தில் ஏற்றப்பட்டு, இறைவனின் அன்பு என்னும் தென்றல் அவரது ஆன்மாவின் மீது வீசினாலன்றி, தவறு என்னும் இருள் அகற்றப்பட மாட்டாது; ஐயப்பாடுகள், அவநம்பிக்கைகள் என்னும் பனிமூடங்கள் விலக்கப்படமாட்டா; அறிவு, உறுதிப்பாடு ஆகியவற்றின் ஒளிகள் அவரை ஆட்கொள்ளவும் இயலாது. அந் நேரத்தில் மெய்யறிவுமிகு முன்னறிவிப்பாளர் ஆவியின் நற்செய்திகளைத் தாங்கியவராக, இறைவனின் திருநகரத்திலிருந்து ஒளிமிக்கக் காலையைப்போன்று பிரகாசித்து, அறிவெனும் எக்காள முழக்கத்தின் வாயிலாக, கவனமின்மை என்னும் உறக்கத்திலிருந்து இதயத்தையும், ஆன்மாவையும், ஆவியையும், தட்டி எழுப்பிடுவார். அதன் பின்னர், புனிதமானதும், நித்தியமானதுமான ஆவி தேடுபவர்பால் வழங்கிடும் அருட்கொடைகளும், பெருங்கருணையும் அத்தகையதொரு புதிதான வாழ்வினைத் தந்திடுமாதலால் ஒரு புதிய கண்ணும், ஒரு புதிய செவியும், ஒரு புதிய உள்ளமும், ஒரு புதிய மனமும் தனக்கு அருளப்பட்டுள்ளதை அவர் உணர்ந்திடுவார். பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள தெளிவான அடையாளங்கள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, ஆன்மாவினுள் மறைந்துள்ள மர்மங்களை அவர் ஊடுருவுவார். இறைவனின் கண்கொண்டு பார்த்து, நிச்சயமான உறுதிப்பாட்டின் ஸ்தானங்களின்பால் தன்னை வழிநடத்திச் செல்லவல்ல கதவினை ஒவ்வோர் அணுவினுள்ளும் கண்டுணர்வார். சகல பொருள்களிலும் அவர் தெய்வீக வெளிப்பாட்டின் மர்மங்களையும், நித்தியமான ஓர் அவதரிப்பின் சான்றுகளையும் காண்பார்.

(நேர்மையான நடத்தையின் நல்விளைவுகள்)

இறைவன் மீது ஆணை! அவர், வழிகாட்டுதல் என்னும் பாதையில் நடந்து, மகிமைமிக்கதும், அதி உயரியதுமான இந்த ஸ்தானத்தை அடையும் பொருட்டு நேர்மை என்னும் உச்சத்தை அடைய முற்படுவாராயின், ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திலிருந்துங் கூட அவர் இறைவனின் நறுமணத்தினை நுகர்ந்து, அனைத்துப் பொருள்களின் பகலூற்றுக்கும் மேலாக தெய்வீக நல்வழிகாட்டலின் பிரகாசமான காலை உதயமாவதைக் காண்பார். ஒவ்வொரு பொருளும், அது எத்துணைச் சிறியதாயினும், தேடுதலின் இலக்கான தனது அன்புக்குரியவரின்பால் தன்னை அழைத்துச் சென்றிடும் ஒரு வெளிப்பாடாகவே விளங்கும். அத் தேடுபவரின் உய்த்துணரல் அந்தளவு பெரிதாக இருக்குமாதலின், மெய்ம்மைக்கும் பொய்ம்மைக்குமுள்ள வேறுபாட்டினைச் சூரியனை நிழலிலிருந்து பிரித்துப் பார்ப்பதுபோல் காண்பார். கிழக்குத் திசையில், அதி தொலைவில், இறைவனின் நறுமணம் வீசுமாயின், அவர் மேற்குத் திசையின் அதிதூரத்து எல்லைகளில் இருந்தபோதும், அவற்றின் நறுமணத்தை நிச்சயமாக உணர்ந்திடுவார். அதே போன்று, அவர், இறைவனின் அடையாளங்கள் அனைத்தையும் — அவரது அற்புத வெளியிடுகைகள், அவரது பெரும் வேலைப்பாடுகள், அவரது வலிமைமிகு செயல்கள் ஆகியவற்றை மனிதர்களின் செயல்களிலிருந்தும், அவர்களின் சொற்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிலிருந்தும், ஒரு நகைவியாபாரி, வைரம், கல் இவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டைத் தெரிந்திருப்பது போன்றும், இளவேனிற் காலத்திலிருந்து வசந்தத்தையும், வெப்பத்திலிருந்து குளிரையும் அறிந்திருப்பது போன்றும் தெளிவாக வேறுபடுத்திக் காண்பார். மனிதனின் ஆன்மீகத்திற்கான நுழைவழி, இம்மைக்குரியதும் தடுக்கவியலாததுமான பற்றுக்களிலிருந்தும் தூய்மைப்படுத்தப்படுமாயின், அது அளவிடற்கரிய தூரங்களுக்கப்பால் இருக்கும் நேசரின் மூச்சினைத் தவறாது உணர்ந்து, அதன் நறுமணத்தால் வழிநடத்தப்பட்டு, மெய்யுறுதி என்னும் நகரையடைந்து அதனுள் பிரவேசித்திடும்.

(ஆன்மீக இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்)

அவர், அதனில், இறைவனின் புராதன விவேகத்தின் அற்புதங்களை உணர்ந்து, அம் மாநகரில் செழித்து வளர்ந்திடும் திருவிருட்சத்தின் இலைகளின் சலசலப்பில் மறைக்கப்பட்டுள்ள போதனைகள் அனைத்தையும் உணர்வார். அதன் மகிமை என்னும் தூசியிலிருந்து போற்றுதல் என்னும் கீதங்கள் பிரபுக்கெல்லாம் பிரபுவாகியவரின்பால் உயர்வதைத் தன் உட்செவி, புறச்செவி ஆகியவற்றின்வழி செவிமடுத்து, தனது அகக்கண் துணைக்கொண்டு “மீண்டும் வருதல்,” மற்றும் “மறுமலர்ச்சி” ஆகியவையின் மர்மங்களைக் கண்டுணர்வார்.

(மெய்யுறுதி என்னம் நகரை அடைதல்)

நாமங்கள், நற்பண்புகள் ஆகியவற்றின் மன்னரானவர் அம் மாநகருக்கு ஈந்துள்ள அடையாளங்கள், சின்னங்கள், வெளிப்பாடுகள், பிரகாசங்கள் ஆகியன எந்தளவு சொல்லொணா மகிமை மிகுந்தவை! இம்மாநகரை அடைதலானது நீரின்றித் தாகந் தணிக்கும்; நெருப்பின்றி இறைவன்பால் அன்பு என்னும் தீயை மூட்டும். புல்லின் ஒவ்வோர் இதழினுள்ளும் அறிவுக்கெட்டாத விவேகத்தின் மர்மங்கள் புதையுண்டுள்ளன; ஒவ்வொரு ரோஜாப் புதரின் மீதிருந்து பல்லாயிரம் இராப்பாடிகள் தங்களின் பேரின்பக் களிப்பில் இனிய கீதங்களைப் பொழிகின்றன. அதன் அற்புதமிகு மணிமலர்ச்செடிகள் எரியும் புதரின் அணையா நெருப்பின் மர்மத்தினை வெளிப்படுத்துகின்றன; அதன் புனிதமெனும் இனிமைச் சுவைகளின் சுகந்தம் இரட்சகரின் திருஆவியின் நறுமணத்திணைச் சுவாசிக்கின்றது. அது தங்கமின்றிச் செல்வம் வழங்குகின்றது; மரணமின்றி நித்திய வாழ்வினை வழங்குகின்றது. அதன் ஒவ்வோர் இலையிலும் விவரிக்க இயலா மகிழ்ச்சிகள், பேரானந்தங்கள், புதைந்து கிடக்கின்றன; ஒவ்வொரு பகுதியிலும் எண்ணிறந்த மர்மங்கள் மறைந்து கிடக்கின்றன.

(மெய்யுறுதியின் வாயிலாக அடையப்படக்கூடியவை)

இறைவனின் நல்விருப்பத்தினை நாடும் பொருட்டுத் துணிவுடன் பெருமுயற்சி செய்திடுவோர், அவரைத் தவிர மற்றதனைத்தையும் துறந்தபின், அம் மாநகரோடு அந்தளவு அணுக்கமாக ஐக்கியமாய் இருப்பார்களாதலின், ஒரு கணமேனும் அதனை விட்டுப் பிரிந்திருப்பது என்பது அவர்களுக்கு நினைத்துக் கூடப்பார்க்க முடியாததாகும். அச்சபையின் செந்நீல மலரிலிருந்து தவறில்லா நிரூபணங்களை அவர்கள் செவிமடுப்பர்; அதன் ரோஜாவின் அழகிலிருந்தும், அதன் இராப்பாடியின் இன்னிசையிலிருந்தும் நம்பத்தகுந்த அத்தாட்சிகளைப் பெறுவர்.

(ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை கடவுள் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார்)

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இம் மாநகர் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் அழகுப்படுத்தப்படும். அந்நகர் ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வோர் அருளாட்சியிலும் வெளிப்படுத்தப்படும் இறைவனின் திருவாக்கேயன்றி வேறெதுவுமன்று. மோஸஸின் நாள்களில் அது பெந்தாத்தியூக்; இயேசுவின் நாள்களில் அது விவிலிய நூல்; இறைவனின் திருத்தூதரான முஹம்மதுவின் நாள்களில் அது குர்-ஆன்; இந் நாளில் அது பாயான்; கடவுள் வெளிப்படுத்தவிருக்கும் அருளாட்சிக் காலமான அவரது காலத்தில் அவரது நாளின்போது அவரது சொந்தத் திருநூலாகும். இத்திருநூல், கடந்தகால அருளாட்சிகளின் திருநூல்கள் அனைத்திற்கும் மேற்கோளாகவும், அவற்றுக்கெல்லாம் அதிவிழுமியதும் அதிவுயரியதுமாகும்.

எதிர்காலம்


பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எஃபெண்டி அவர்கள் உலகின் எதிர்காலம் பற்றி கூறுகையில்:

“(உலகின்) உடனடி எதிர்காலம் காரிருள் சூழ்ந்ததாகும், ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அதன் வருங்காலமோ எல்லையற்ற பிரகாசமிக்கதாகும்”

என கூறியுள்ளார்.

ஆனால் மனிதர்கள் தங்களின் படைப்பின் நோக்கத்தைத் தெரிந்துகொள்வதில் கவனமற்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்ந்தால் என்னவாகும் என்பது குறித்து பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா எச்சரிக்கின்றார் . உதாரணமாக:

உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்ந்து வருகின்றது. கடுந் தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஆற்றிய செயல்கள் எனது பார்வையில் இருந்து மறைக்கப் பட்டுவிட்டன என்று எண்ணிடாதீர். எனது அழகின் மீது ஆணை! உங்களின் செயல்கள் அனைத்தையும், எனது எழுதுகோல், மரகதத் தகடுகளின்மீது தெளிவான எழுத்துக்களால் செதுக்கி வைத்துள்ளது.
மனிதர்களே, யாம் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துள்ளோம். நியமிக்கப்பட்ட நேரத்தில், நீங்கள், இறைவன்பால் திரும்பத் தவறுவீராயின், மெய்யாகவே அவர், உங்கள் மீது ஆவேசமாகக் கை வைத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் கடுந் துன்பங்கள் உங்களைத் தாக்குமாறு செய்திடுவார். உண்மையாகவே, அப்பொழுது உங்களின் பிரபுவானவர் உங்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைதான் எத்துணை கொடூரமானது!

இதே தொனியில் பாதுகாப்பாளர் ஷோகி எஃபெண்டி பஹாய் போதனைகளின் தன்மைகள் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

‘(போதனைகள்)எல்லா விஷயங்களிலும் மிதத்தன்மை’ குறித்த கோட்பாட்டை வலியுறுத்துகின்றன; தன்னிச்சை, நாகரிகம் மற்றும் அதுபோன்றவை எதுவாயினும், மிதத்தன்மையின் எல்லைகளை மீறும்போது அது மனிதர்கள் மீது பெருங் கேடுபயக்கவல்ல தாக்கத்தை உண்டாக்கும்

மேலும்,

“மேற்கத்திய நாகரிகம் உலக மக்களைப்பெருங் கலக்கத்துக்குள்ளாக்கவும் திகிலடையவும் வைத்துள்ளது; மற்றும் ‘அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் தீ’ நகரங்களைத் தனக்கு இறையாக்கிக்கொள்ளும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது,”

என ஆரூடமாகக் கூறியுள்ளார்.

கட்டுப்பாடற்ற உலகில் அனுசக்தியால் ஏற்படக்கூடிய அழிவுகளை பஹாவுல்லா அக்காலத்திலேயே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“வினோதமும் அதே வேளை அற்புதமானதுமான ஒரு கருவியம் (அனுசக்தி) உலகில் உள்ளது; ஆனால் அது மனங்களுக்கும் ஆன்மாக்களுக்கும் மறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியம் உலகம் முழுவதன் காற்றுமண்டலத்தையே மாற்றியமைக்கும் ஆற்றலைக்கொண்டது, மற்றும் அதன் பீடிப்பு அழிவை ஏற்படுத்தும்.”

அப்துல் பஹாவின் முதலாம் உலக யுத்தம் குறித்த எச்சரிக்கைகள்:

இப்போதிருந்து சுமார் இரண்டு வருடங்களில், ஒரு சிறு பொறி கூட போரில் மூழ்கச் செய்யக்கூடிய அபாயம் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சூழ்ந்துள்ளது. எல்லா நாடுகளிலும் மூண்டுள்ள சமூக ரீதியிலான அமைதியின்மை, இச்சகாப்தத்தின் முன் அறிகுறிகளுள் ஒன்று, இப்போதே தோற்றங்கண்டுவிட்டதுமான மதங்கள் மீதிலான அவநம்பிக்கை ஆகியவை விவிலியத்தின் தானியல் நூலில் உரைத்துள்ளபடி ஐரோப்பா முழுவதையும் போர்த்தீயில் மூழ்கச்செய்யவிருக்கின்றது. 1917ற்குள் இராஜ்ஜியங்கள் கவிழ்ந்து பெரும் பிரளயங்கள் இவ்வுலகை உலுக்கவிருக்கின்றன.

என அப்துல் பஹா 1910ல் தமது அமெரிக்கா விஜயத்தின் போது கூறியுள்ளார்.

ஜனவரி 1920ல் முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு இரண்டாம் உலக யுத்தம் குறித்த அப்துல் பஹாவின் ஆரூடம்:

“உலகத்தை இப்போது பாதித்துள்ள நோய்கள் … மேலும் பன்மடங்காகும்; அதைச் சூழ்ந்துள்ள இருள் மேலும் அதிகரிக்கவே செய்யும். பால்கன்(Balkan) பிரதேசங்களில் இப்போது பரவியுள்ள கொந்தளிப்புக்கள் அடங்காது. அதன் அமைதியின்மை மேலும் அதிகரிக்கும். (போரில்) தோல்வியுற்ற நாடுகள் தொடர்ந்து அமைதியை குலைத்தே வரும். போரை மீண்டும் தூண்டிவிடக்கூடிய எல்லாவித நடவடிக்கைளிலும் அவை தொடர்ந்து ஈடுபட்டுவரும்.”

இருந்த போதும் இறுதியில் பாதுகாப்பாளர் ஷோகி எஃபெண்டி கூறியுள்ளபடி:

“(உலகின்) உடனடி எதிர்காலம் காரிருள் சூழ்ந்ததாகும், ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அதன் வருங்காலமோ எல்லையற்ற பிரகாசமிக்கதாகும்”

கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரம்


கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களும் சான்றுகளும்

மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதே கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஓர் அடையாளமும் நிரூபனமுமாக இருக்கின்றது: அவனுடைய படைப்பாளரும் வடிவமைப்பாளரும் மனிதனின்றி வேறொருவரே ஆவார்.

மனிதனின் சிருஷ்டிகர்த்தா மனிதனைப் போன்றவர் அல்லவென்பது உறுதி. அது மறுக்கமுடியாத ஒன்றுமாகும், எனெனில் சக்தியற்ற ஒரு சிருஷ்டி வேறொரு உயிரை உருவாக்கமுடியாது. படைப்பாளரான சிருஷ்டிகர்த்தா, படைத்தலுக்காக சகல பூரணத்துவங்களையும் பெற்றிருக்கவேண்டும்.

சிருஷ்டி பூரணத்துவம் கொண்டதாகவும் சிருஷ்டிகர்த்தா பூரணத்துவம் இல்லாதவராகவும் இருக்கமுடியுமா? ஒரு சித்திரம் பேரழகுவாய்ந்ததாகவும் ஓவியன் குறைகளுடையவானாகவும் இருக்கமுடியுமா? (ஓவியம்) அவனுடைய கலை மற்றும் சிருஷ்டியாகும். மேலும், ஓவியம் ஓவியனைப்போலவே இருக்கவும் முடியாது; இல்லையென்றால் அந்த ஓவியம் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டிக்கும். சித்திரம் எவ்வளவுதான் முழுநிறைவானதாக இருந்தபோதும், ஓவியனோடு ஒப்பிடுகையில்அச்சித்திரம் முற்றிலும் பூரணத்துவமற்றதே ஆகும்.

நிலையற்ற இப்பூவுலகம் பெரும் குறைபாடுகள் மிக்கதாகும்: குறைகள் அற்றவராக கடவுள் இருக்கின்றார். இந்த நிலையற்ற உலகின் குறைபாடுகள் கடவுள் பூரணமானவர் என்பதற்கான அடையாளமாகும்.

உதாரனமாக, மனிதனை பாக்கும்போது அவன் வலிமையற்றவனாக இருக்கின்றான். மனிதனின் இந்த வலிமையில்லாமையே என்றும் நிலையான கடவுளின் வலிமைக்கு ஆதாரமாகும், ஏனெனில் வலிமை என ஒன்று இல்லையெனில் வலிமையின்மை என ஒன்றை நாம் கற்பனை செய்யமுடியாது. அதனால், சிருஷ்டியின் வலிமையின்மையே கடவுளின் வலிமைக்கான ஆதாரமாகும்; சக்தி என்பது இல்லையெனில், சக்தியின்மை என்பது இருக்கமுடியாது; ஆகவே இந்த சக்தியின்மை என்பது சக்தி எனும் ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கின்றது. மேலும், நிலையற்ற இவ்வுலகில் வறுமை நிலவுகிறது; ஆகவே வறுமை என ஒன்று வெளிப்படையாக இருப்பதால் செல்வம் என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது. இப்பூவுலகில் அறியாமை நிலவுகிறது; ஆகவே, அறியாமை என ஒன்று இருப்பதால் அறிவு என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது; ஏனென்றால், அறிவு என ஒன்று இல்லையெனில் அறிவில்லாமை என ஒன்றும் இருக்க வழியில்லை; அறியாமை என்பது அறிவாற்றல் இல்லாமையை குறிக்கின்றது, மற்றும் இருத்தல்நிலை இல்லையெனில் இருத்தலின்மையை நாம் உணரமுடியாது.

ஆகவே, இப்படைப்புலகு கீழ்ப்படியாமல் இருக்கமுடியாத ஒரு விதிக்கு தான் உட்பட்டதாக இருக்கின்றது என்பது உறுதி; மனிதன் கூட இறப்பு, தூக்கம் மற்றும் பிற விதிகளுக்கு உட்பட்டவனாவான் – அதாவது, மனிதன் சில விஷயங்களில் ஆளுமைக்கு உட்பட்டவன், ஆகவே ஆளுமை என ஒன்று இருக்கும்போது ஆளுனர் என ஒருவர் இருப்பது உறுதி. ஏனெனில், நிலையற்ற சிருஷ்டிகளின் ஓர் அடையாளம் எதையாவது சார்ந்திருப்பதாகும், மற்றும் இந்த சார்தல்நிலை ஓர் இன்றியமையா தேவையும் ஆகும், ஆகவே, எதையும் சாராத சுயேச்சையான ஒரு திருப்பொருள் கண்டிப்பாக இருக்கவேண்டும் மற்றும் அதன் தன்னிச்சை அதற்கு இன்றியமையாத ஒன்றும் ஆகும்.

இதே முறையில், ஒருவன் நோய்வாயப்பட்டுள்ளான் எனும்போது உடல்நலத்தோடு ஒருவன் உள்ளான் என்பது அறிவு; ஏனெனில் சுகம் இல்லையெனில், அம்மனிதனின் சுகமின்மை நிரூபிக்கப்படமுடியாது.

ஆகவே, சகல பூரணத்துவங்களையும் உடைய என்றும் நிலையான சர்வவல்லமை மிக்க ஒருவர் இருக்கின்றார் என்பது வெளிப்படையாகின்றது. எனெனில், அவர் அவ்விதம் சகல பூரணத்துவங்களையும் பெறவில்லையெனில் அவர் தமது படைப்புகளைப்போலவே தாமும் இருப்பார்.

படைப்புலகு முற்றும் இவ்வாராகவே இருக்கின்றது; ஆகச் சிறிய சிருஷ்டியும் தன்னைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நிரூபிக்கின்றது. உதாரணமாக, இந்த ரொட்டி அதனை செய்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாகும்.

கடவுள் வாழ்த்தப்படுவதாக! ஆகச் சிறிய தனிமம் ஒன்றில் நிகழ்த்தப்படும் குறைந்த அளவான மாற்றம் கூட சிருஷ்டிகர்த்தா ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது: ஆகையால், முடிவில்லாத, இம்மகத்தான பிரபஞ்சம், வஸ்துவும் தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று கொண்ட பரிசெயல்பாட்டினால் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியுமா? இத்தகைய ஒரு கருத்து வெளிப்படையாகவே எவ்வளவு தவறானதாக இருக்கின்றது!

இந்த வெளிப்படையான விவாதங்கள் வலிமையற்ற ஆன்மாக்களுக்காக குறிப்பிடப்படுகின்றன; ஆனால், ஆன்மீகப்பார்வை திறக்கப்படுமாயின், ஆயிரமாயிரம் தெளிவான ஆதாரங்கள் பார்வைக்கு வெளிப்படும். அதுபோல், தன்னுள் வதியும் ஆன்மாவை மனிதன் உணர்வானாயின், அதன் இருப்பு குறித்து அவனுக்கு ஆதாரங்கள் தேவையில்லை; ஆனால், அதியாத்மீகத்தின் அருள் இல்லாதாருக்கு வெளிப்படையான ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும்.

(அப்துல் பஹா, சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள், ப. 5)

ஒற்றுமை எனும் திருக்கோயில் – மானிக்ஜியின் கேள்விகளும் பஹாவுல்லாவின் பதில்களும்


பஹாய்களுக்கு தெரிந்தவரை யூத, கிருஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்கள் தவிர்த்து வேறு சமயங்கள் எதை பற்றியும் பஹாவுல்லா தன்னிச்சையாகவும் விரிவாகவும் கருத்துரைத்ததில்லை. பார்ஸி சமயத்தவரான மானிக்ஜி என்பார் பஹாவுல்லாவிடம் ஹிந்து மற்றும் பார்ஸி (Zoroastrianism) சமயங்கள் பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு பஹாவுல்லா சில நிருபங்கள் மூலமாக பதிலளித்துள்ளார். அப்பதில்கள் அடங்கிய நிருபங்கள் மானிக்ஜியின் செயலாளராக பணியாற்றிய மிர்ஸா அபுல் பாஸில் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அந் நிருபங்களில், சமய ஒப்பீடு, ஹிந்து சமயம் மற்றும் பிற சமயங்கள் பற்றி பஹாவுல்லாவின் கருத்துரைகள் உள்ளன, ஆனால் அதில் பஹாவுல்லாவின் பதில்கள் வெளிப்படையாக இல்லாமல் பெரும்பாலும் உள்ளர்த்தம் கொண்டவையாக மிகவும் கவனமாக படிக்கப்படவேண்டிய நிலையிலும் உள்ளன. மேலும், அவருடைய பதில்கள் உலக சமயங்களின் ஒருமைத்தன்மை குறித்த புரிந்துகொள்ளலை வழங்கிடவே பெரும்பாலும் முற்படுகின்றன. இந்த கேள்விகளும் பதில்களும் உள்ள நிருபங்கள் இன்று ‘ஒற்றுமை எனும் திருக்கோயில்’ (Tabernacle of Unity) எனும் நூலின் ஒரு பகுதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்த நூலிலிருந்து ஹிந்து சமயம் குறித்து மானிக்ஜி கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இங்கு தனியே வழங்கப்படுகின்றன.

விண்ணகத் திருநூல்கள் குறித்த உங்களது கேள்வி தொடர்பாக:
அனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார். அவர் வியாதியை அறிகின்றார்; தனது தவறா விவேகத்தினைக் கொண்டு பரிகாரம் வழங்குகின்றார். ஒவ்வொரு காலமும் அதற்குச் சொந்தமான பிரச்சினையையும், ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பிரத்தியேக அவாவையும் கொண்டுள்ளது. இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது. நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளில் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப் படுத்துங்கள்.

இப்பதிலிலிருந்து உலக சமயங்களுக்கிடைய நிலவும் வேறுபாடுகளுக்கான காரணங்களை நாம் நன்கு யூகிக்கமுடிகிறது. ஒவ்வொன்றும் காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்ப உலகில் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் ஒருவித சூழ்நிலைக்கு மிகவும் ஏற்புடையாதாக இருக்கும் ஒரு சமயம் பிற்காலத்தில் உருவாகும் வேறுவிதமான சூழ்நிலைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. அது அச்சமயத்தின் குறையல்ல. அது தோன்றியது ஒருவித சூழ்நிலைக்கு ஆனால், உருவாகியிருப்பதோ வேறுவிதமான சூழ்நிலை.

மானிக்ஜி சாஹிப் ஏற்கனவே கேட்டிருந்த பல கேள்விகளுக்கு பஹாவுல்லா பதிலளித்திருந்தார். ஆனால் அப்பதில்களால் மானிக்ஜி திருப்தியடையவில்லை. அது குறித்து பஹாவுல்லா:

மதிப்புமிகு அறிஞர் சாஹிப் – அவர் மீது இறைவனின் கிருபை தவழட்டுமாக- அவர் கேட்டிருந்த கேள்விகள் தொடர்பாக நீங்கள் எழுதியிருந்தது குறித்து, அவர் எழுதியனுப்பியதை வைத்துப் பார்க்கையில்,அவரது மன நிலையும், சூழ்நிலையும் தெள்ளத்தெளிவாகவே புலனாகின்றன. இப்பொழுது அவரது கேள்விகள் சம்பந்தமாக, அக் கேள்விகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவ்வாறான பதில்,விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில்புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும். அவ்வாறிருந்தும், தெய்வீக உதவியெனும் விண்ணுலகிலிருந்து அற்புதத் தெளிவுடன் துல்லியமாக அவரது நற்பெயரின்பேரில் மறுமொழிகள் வழங்கப்பட்டன. ஆயினும், அவ்விஷயத்தை அவர் மிக அணுக்கமாகக் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், அவர் முறையாக அம்மறுமொழிகளை கவனித்திருப்பின், எந்தவொரு கருத்தும் மறுமொழியளிக்கப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை என்பதை அவர் உடனே ஒப்புக் கொண்டு, “இது மிகத் தெளிவானதும்,ஆணித்தரமானதுமான வெளியிடுகையேயன்றி வேறில்லை,” என வியந்து கூறியிருப்பார்.

இங்கு பஹாவுல்லா ஒரு கடவுளின் அவதாரம் எனும் முறையில் பெரும் விவேகத்துடன் “அவ்வாறான பதில், விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும்“, என கூறியுள்ளார். இது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய வார்த்தைகளாகும். பூர்வீகத்தில் ஹிந்து சமயம் எனும் ஒரு தனி சமயம் கிடையாது. பின்னாளில் வெள்ளையர் ஆட்சியின் போது சிந்து நதிக்கு அப்பால் வாழ்வோர் அனைவரையும் இந்துக்கள் என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். அங்கு வழக்கில் இருந்த வைதீகத்தை அடிப்படையாக கொண்ட சமயங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஹிந்து சமயம் என அழைக்கப்பட்டன. பஹாவுல்லாவின் சமயம் உலக சமயங்கள் தங்களுக்கிடையிலான ஒற்றுமையை புரிந்துகொண்டு ஒன்றுபட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. ஹிந்து சமயம் குறித்த பஹாவுல்லாவின் பதில்கள் ஒரு சாரருக்கு ஏற்றதாக இருக்கும் அதே வேளை பிறருக்கு அது ஏற்றதாக அமையாமல் போகலாம். ஏற்கனவே இருக்கும் பிரிவுகளுக்கிடையே மேலும் ஒரு புதிய விளக்கத்தையும், பிரிவினையையும் உருவாக்குவதை பஹாவுல்லா தவிர்த்து மக்களின் கவனம் நாம் வாழும் காலத்தின் தேவைகளின்பால் இருப்பதே முக்கியம் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றார் என்றே பொருள்படுகிறது.

மானிக்ஜியின் கேள்விகளுள் ஒன்று பின்வரும் வினாவை உள்ளடக்கியுள்ளது:

… சில இந்து தீர்க்கதரிசிகள் பிரகடனப்படுத்தியுள்ளதாவது: ”யாமே இறைவன். எம்பால் விசுவாசம் காண்பித்திடுவதை படைப்பு முழுமைக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடையே பிளவும், பிரிவும் தோன்றும் போதெல்லாம், அதனை அணைப்பதற்காக யாம் முன்னெழுந்திடுவோம்.” தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் “ஆதியில் தோன்றியவரும் யாமே,” என அறிவித்தள்ளனர், எனும் வரிகளை குறிப்பிட்டு இக்கூற்றுகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடுமா மற்றும் எந்த தீர்க்கதரிசி அல்லது அவதாரத்தை ஏற்றுக்கொள்வது என மானிக்ஜி வினவுகிறார்.

முதலாவதாக, தீர்க்கதரிசிகள் எனும் வார்த்தை ஆங்கிலத்தில் ‘ப்ரொஃபெட்’ (Prophet) எனும் வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். சமய ஸ்தாபகர்கள் இரண்டு நிலையில் வெளிப்படுகின்றனர். ஒன்று தீர்க்கதரிசிகள்(Prophets) எனும் நிலை மற்றது கடவுளின் அவதாரங்கள்(Manifestations of God) எனும் நிலை. கடவுளின் அவதாரங்கள் அல்லது வெளிப்பாட்டாளர்கள் எனும் நிலையில் இவர்கள் கடவுளின் நிலையிலேயே பேசுகின்றார்கள், அதாவது கடவுள் மானிடத்திற்கு கூற நினைப்பதை தமது அவதாரங்கள் மூலமாக தெரியப்படுத்துகின்றார். பகவத் கீதையில் ஒவ்வொரு செய்யுளின் ஆரம்பத்திலும் ‘ஸ்ரீகிருஷ்ன உவாச’ என்றில்லாமல் ‘ஸ்ரீபகவான் உவாச’ எனும் வார்த்தைகள் உள்ளன. அதாவது கிருஷ்னர் கடவுளின் நிலையிலிருந்து பேசுகிறார் என்பது இதன் விளக்கமாகும். ஆகவே, பகவத் கீதையில் வரும் பின்வரும் வரிகள் இவ்விளக்கத்தின்படியே பார்க்கப்படவேண்டும்:

ஸ்ரீ பகவான் திருவாய்மொழிகின்றார்:
இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.

இதற்கு மறுமொழியாக அர்ஜுனன் பின்வருமாறு வினவுகின்றான்:

அர்ஜுனன் கூறுவது:
உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீரே இதை ஆதியில் கூறினீரென்று நான் தெரிந்துகொள்வதெப்படி? .

இதன் பொருள் காலங்காலமாக கடவுள் தமது திருவிருப்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தியே வந்துள்ளார். அவர் முதலில் விவஸ்வானுக்கும் பிறகு மனுவிற்கும் அதன் பிறகு இக்ஷ்வாகுவிற்கும் நிகழ்காலத்தில் கிருஷ்னர் மூலமாக அர்ஜுனனுக்கு உபதேசிக்கின்றார்.

“…எல்லா திருத்தூதர்களும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்து, மீண்டும் அவரிடமே திரும்பிச் சென்றுள்ளவர்கள்.” .

மேலும் கீதோபதேசத்தில் இதே பொருள் குறித்த பின்வரும் வரிகள் காணக்கிடக்கின்றன:

பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் ஒரு (புனித)ஆன்மாவைப் படைக்கின்றேன்.
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் சம்பவிக்கின்றேன்”. .

கடவுள் தமது அவதாரங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார். அவ்வாறு வந்தவர்களே ராமர், கிருஷ்னர், புத்தர், மோசஸ், இயேசு, முகம்மத் போன்றோர். இவர்கள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் தங்கள் மெய்ம்மையில் இவர்கள் அனைவரும் கடவுளின் பிரதிபிம்பங்களே ஆவார்கள்.

“…இந்த வகையில் பார்க்குமிடத்து அவர்கள் அனைவரும் ஒரே நபர் ஆவர். ஏனெனில், தங்களது சொந்தவிருப்பத்தின் பேரில் அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசினார்களில்லை, ஒரு செய்தியைக்கூட கொண்டு வந்தார்களில்லை அல்லது ஒரு சமயத்தைக் கூட வெளியிட்டார்களில்லை. இல்லை. அவர்கள் மொழிந்துள்ளவை அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்தவையாகும்.”

மானெக்ஜியின் கேள்வி ஒன்று கடந்தகால தீர்க்கதரிசிகளுள் யாரை தேர்வு செய்வது என்பதாகும். இதற்கு பஹவுல்லா:

“அவரது திருத்தூதர்கள் எவரையுமே யாம் வேறுபடுத்திப்பார்த்ததில்லை.” “தீர்க்கதரிசிகள் அனைவருமே இறைவனது திரு ஆலயங்களே என்பது உங்களுக்குத் தெளிவானதும் ஆதாரப் பூர்வமானதும் ஆகும். நீங்கள் உய்த்துணரும் கண்களைக் கொண்டு கூர்ந்து கவனிப்பீராயின், அவர்கள் அனைவருமே அதே கூடாரத்தினில் வசிப்பதையும், அதே வானத்தில் பறப்பதையும், அதே அரியாசனத்தின் மீது அமர்ந்திருப்பதையும், அதே சொற்பொழிவை ஆற்றிடுவதையும், அதே சமயத்தினைப் பிரகடனப் படுத்திடுவதையும் காண்பீர்.”

என கூறுகின்றார். (உலகில் இதுவரை 127,000 திருத்தூதர்கள் தோன்றி மறைந்துள்ளனர் எனும் ஒரு நம்பிக்கை இஸ்லாம் சமயத்தில் உள்ளது.)

சாஹிப் அவர்களின் மற்றுமொரு கேள்வி சமய கோட்பாடுகள் மற்றும் சட்டதுறை குறித்த்தாகும். ஹிந்து சமயத்தில் சட்டத்துறை யல்லாது கோட்பாடுகளே யாவற்றையும் வழிநடத்துகின்றன. சட்டங்கள் அனைத்தும், நீர் அருந்துவது தொடர்பான சட்டங்கள் கூட அல்லது திருமணத்தில் கொடுத்தல், எடுத்தல் போன்ற சட்டங்கள் கூட, மானிட வாழ்வில் மற்ற அம்சங்களைப் போலவே, இக் கோட்பாடுகளின் ஓர் அங்கமாகவே கருதப்படுகின்றன. இதில் எது சிறந்தது என்பது சாஹிபின் கேள்வியாகும்.

இதற்கு பஹாவுல்லாவின் பதில்:

சமயக் கோட்பாடுகள் பல்வேறு நிலைகளையும்,ஸ்தானங்களையும் கொண்டவை. எல்லாக் கோட்பாடுகளுடைய ஆணிவேரும், எல்லா அடித்தளங்களின் அஸ்திவாரமும் இறைவனை அறிந்து கொள்ளுதலாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது, இனியும் அவ்வாறே அது நிலைத்திருக்கும். இன்றைய நாள்கள் உண்மையில் எல்லா கருணைமிக்கவரை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளலின் வசந்த காலமாகும். அவர்தம் சமயமெனும் களஞ்சியத்திலிருந்தும், அவர்தம் வெளிப்படுத்துதலிருந்தும் எதுவெல்லாம் வெளிவருகின்றதோ அதன்பால், உண்மையில் அனைவரும் விசுவாசங் காண்பிக்க வேண்டும் என்பது அடித்தள கோட்பாடாகும். மேலும்:

“நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.”

என அவர் அறிவுறுத்துகின்றார்.

மாமிசம் அருந்துவது குறித்தது சாஹிபின் அடுத்த கேள்வி. அதாவது ஹிந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை மற்றும் முஸ்லீம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை. இதற்கு பஹாவுல்லா பின்வருமாறு பதிலளிக்கின்றார்:

“அனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார்,” எனும் வாசகமே அவரது கேள்விக்கான பதிலாக இருக்கின்றது. அவர் மேலும் கூறுவதாவது: “நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அதிக அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.” மேலும், ஏற்கணவே கூறியுள்ளது போல், “இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது.”

அதாவது அறிவியல் வளர வளர உணவு வகைகளும் மாறி வருகின்றன. சுகாதார சூழ்நிலைகள் பெருகிவிட்டன; மனிதர்களுக்கு ஏற்ற உணவு வகைகளை அறிவியல் ரீதியில் நாம் கண்டறிந்துகொள்ளலாம்.

ஹிந்துக்களின் அஹிம்சை கோட்பாடு குறித்த மற்றொரு கேள்விக்கு:

எவருடனும் சச்சரவு கொ ள்வது அனுமதிக்கப்படவுமில்லை, ஓர் ஆன்மாவைத் துன்புபறுத்துவதோ, கொடுமைப்படுத்துவதோ இறைவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. எல்லா வேளைகளிலும், ஒவ்வொரு காலத்திலும் இந்த உயரிய வார்த்தைக ள் அதி உயரிய எழுதுகோலிலிருந்து பெருக்கெடுத்துள்ளன- அவர் ஆசீர்வதிக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்படுவாராக: “மனிதரின் குழந்தைகளே! இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கமானது, மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர்.”

ஒருவர் பிறப்பால் மட்டுமே ஹிந்துவாகவும் ஸோராஸ்திரியராகவும் (யூதராகவும்) இருக்கமுடியும் மாறாக, ஒருவர் சுயவிருப்பதால் அச்சமயங்களில் சேர முடியாது எனும் நம்பிக்கை, மற்றும் வன்மதமாற்றம் குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகிறார்:

மனிதர்களின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள் ஆவர். சகோதரத்துவத்திற்கான முன்தேவைகள் பல்வகையானவை. அவற்றில் ஒன்று, தனக்காக எதை ஒருவர் விரும்புகின்றாரோ, அதனையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். எனவே, உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான பரிசைப் பெறும் ஒருவர் அல்லது விண்ணுலகத் திவ்விய உணவைச் சுவைத்திடும் ஒருவர், தனது நண்பர்களிடம் அதனைத் தெரிவித்து அதி அன்புடனும், இரக்கத்துடனும் அவர்களையும் அதன்பால் அழைத்திட வேண்டும் என்பது அவருக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

மற்றும்,

அவர்கள் அதற்குச் சாதகமாக செவிசாய்ப்பின், அவரது குறிக்கோள் அடையப்பட்டுவிட்டது; அவ்வாறில்லையெனில், அவர்களுடன் எதிர்வாதம் செய்யாமலும் அல்லது அவர்களுக்குக் கிஞ்சிற்றும் சோகமிழைக்கவல்ல எந்தவொரு வார்த்தையையும் கூறாமலும், அவர்களை அவர்களுடைய வழியிலேயே விட்டுச் சென்றிட வேண்டும்.”

மேலும் படித்திட:
Tabernacle of Unity
Baha’i Publishing Trust of Malaysia

வசிஷ்ட-யோகமும் காலக்கணக்கு குறித்த பஹாவுல்லாவின் விளக்கவுரையும்


‘ஜுக் நூல்’ என்பது ‘வசிஷ்ட யோகம்’ எனும் நூலாகும். இந் நூல் முகாலயர் ஆட்சியின் போது மொழிபெயர்கப்பட்டு பாரசீக நாட்டில் பல நூற்றாண்டுகாலமாக பிரபலமாக, குறிப்பாக இந்திய-பாரசீக விஷய ஆர்வலர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பஹாவுல்லாவின் நிருபம் ஒன்றில் ஆதாமுக்கு முற்பட்ட வரலாற்று குறிப்புகள் ஏதும் இல்லாதது பற்றி அவர் கருத்துரைக்கின்றார். இங்கு அவர் ஜுக்-பஸிஷ்ட் (ஜுக் நூல்) எனும் வசிஷ்டயோக நூலைச் சுட்டுகின்றார். இந்த நூல் ஹிந்து மறைபொருளியல் குறித்த படைப்பாகும்.

வசிஷ்டர் வாழ்ந்த காலத்தில் நாட்டை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிய இராமர் நாட்டில் தாம் கண்ட காட்சிகளினால் (புத்தரைப் போன்றே தாமும்)  மனம் குழம்பியிருந்தார். அது கண்ட இராமரின் பிதாவான  தசரதர் வசிஷ்ட முனிவரை அழைத்து தமது கவலையை தெரிவித்தார். வசிஷ்டரோ இராமர் இப்போது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தயாராக இருக்கின்றார் எனவும் இதில் அவர் உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் கூறுகிறார். இதன் தொடர்பில் இராமர் கேட்ட கேள்விகளும் அதற்கான வசிஷ்டரின் பதில்களுமே வசிஷ்ட-யோகம் என வழங்கப்படுகின்றன.

இந்த நூல் நிஸாமுட்-டின் பானிப்பதி என்பவரால் 16ம் நூற்றாண்டின் இறுதியில் மொழிபெயர்க்கப்பட்டது. சாஃபாவிட் காலத்து இரானிய தத்துவ-மறைஞானியான மீர் பிஃன்டிரிஸ்கி (கிபி.1641) என்பார் பானிப்பதி மொழிபெயர்த்த வசிஷ்ட யோகத்தின் சில பகுதிகளை விரிவுரைத்துள்ளார்.  இந்த வஸிஷ்ட யோகத்தின் அத்தியாயங்களுள் ஒன்றான புஸுந்தாவின் (ஒரு முதிய முனிவர்) கதையில், ஹிந்து பஞ்சாங்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள பூவுலக வரலாற்றில் வரும் தொடரான சகாப்தங்களை புஸுந்தா நினைவுகூறுகிறார். இப்பகுதியில், பஹாவுல்லா இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ சமயங்கள் போதிக்கும் உலகத்தின் வயது குறித்த 6,000 அல்லது 12,000 வருடங்களைவிட ஹிந்து சமயத்தின் வேத, புராண, இதிகாசங்கள் குறிப்பிடும் கோடிக்கணக்கான வருடங்களையே தேர்வு செய்கிறார். உண்மையில் இதே நிருபத்தில் பஹாவுல்லா ஹிந்துக்களில் பலர் நம்பும் “சிருஷ்டி என்றென்றுமே இருந்துவந்துள்ளது” எனும் கூற்றை முன்வைக்கின்றார். ஓர் அன்பர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பஹாவுல்லா இந்த நூலில் வரும் பூவுலக வரலாற்றை சுட்டி பின்வருமாறு பதிலளிக்கின்றார்:

வரலாற்று குழப்பங்கள்

இப்பொழுது, “மனித இனத்தின் தந்தையாகிய ஆதாமிற்கு1 முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும், அவர்கள் காலத்தில் வாழ்ந்த அரசர்களையும் பற்றிய பதிவேடுகள் எதுவுமே காணப்படவில்லையே, அது எப்படி?” என்னும் உங்களின் கேள்வி சம்பந்தமாக: அவர்கள் சம்பந்தமான எவ்விதக் குறியீடுகளும் இல்லாதிருப்பது அவர்கள் இல்லாதிருந்தனர் என்பதற்கு ஆதாரமாகாது என்பதை நீங்கள் அறிவீராக. அவர்களைக் குறிக்கும் பதிவேடுகள் எவையும் இப்பொழுது கிடைக்காததற்குக் காரணம், அக்காலம் நெடுங்காலத்திற்கு முந்தியதாய் இருந்ததுதான்; அதோடு, அவர்களின் காலத்திற்குப் பின் உலகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களும் அதற்கு மற்றொரு காரணமாகும்.

எழுத்துமுறை குழப்பங்கள்

மேலும், மனிதரிடையே இப்பொழுது வழக்கிலிருந்து வரும் எழுத்து வகைகளும் முறைகளும் ஆதாமுக்கு முன்பாக இருந்த தலைமுறையினருக்குத் தெரியாதிருந்தது. மனிதர்கள் முற்றிலும் எழுத்தறிவே இல்லாதிருந்த ஒரு காலமும் இருந்தது; அக்காலத்தில், இப்பொழுது அவர்கள் உபயோகித்து வரும் முறையை விட முழுமையாக வேறுபட்ட முறையை மேற்கொண்டிருந்தனர். இதனைப் பொருத்தமுற விவரிப்பதற்கு விரிவான விளக்கம் தேவைப் படும். ஆதாமின் காலமுதல் இன்றுவரை தோன்றியுள்ள மாற்றங்களை எண்ணிப் பாருங்கள்.

மொழி குழப்பங்கள்

இப்பொழுது உலக மக்களால் பேசப்படும் பல்வேறான, பரவலாகத் தெரிந்துள்ள மொழிகள், இப்பொழுது அவர்களிடையே நடைமுறையிலுள்ள விதிகளையும் சம்பிரதாயங்களையும் போலவே, தொடக்கத்தில் தெரியாதிருந்தன. அக்காலத்திய மக்கள், இப்பொழுதுள்ள மக்களுக்குத் தெரிந்திராத ஒரு மொழி பேசினர். மொழி வேறுபாடுகள் பிற்காலத்தில்தான் ஏற்பட்டன; அது பேபல்2 எனப்படும் இடத்தில் நிகழ்ந்தது. அது “மொழிகளில் குழப்பம் தோன்றிய இடம்“ என பொருள்படுவதால் அதற்கு பேபல் என்ற பெயர் கொடுக்கப் பட்டது. அதற்குப்பின், அப்பொழுது இருந்த மொழிகளில் சிரியாக்3 மொழி பிரபலமடைந்தது. முந்தைய திருமறைகள் அம்மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன. பிறகு, ஆப்ரஹாம், ஆண்டவனின் நண்பர்4, தோன்றி, தெய்வீக வெளிப்பாட்டின் ஒளியினை உலகின்மீது விழச்செய்தார். அவர் ஜோர்டான் நதியைக் கடக்கும் பொழுது உபயோகித்த மொழி ஹிப்ரு5 மொழியாகும் (இப்ரானீ); அதன் பொருள், “கடக்கும் மொழி”. அதன் பிறகு, இறைவனின் நூல்களும் திருமறைகளும் அந்த மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன; ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே அரபு மொழி வெளிப்பாட்டு மொழியாக ஆகியது …. ஆகவே, ஆதாமின் காலம் முதல் இன்றுவரை, மொழி, பேச்சு, எழுத்து ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எத்துணை எண்ணற்றதும் பரவலானதுமாய் இருந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள். இன்னும் எந்தளவு அதிகமானதாய் இருந்திருக்க வேண்டும் அவருக்கு முன்பாக ஏற்பட்டிருந்த மாற்றங்கள்!

கடந்தகால அவதாரங்கள்

யாம் இவ்வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் நோக்கம், ஒரே உண்மைக் கடவுளாகிய அவர், தமது அதிவுயரிய, அனைத்திற்கும் மேம்பட்ட ஸ்தானத்தில், எப்பொழுதுமே தன்னைத் தவிர மற்றனைவரின் புகழ்ச்சிக்கும், புரிந்துகொள்ளலுக்கும் மேலான மிகச் சிறந்த நிலையிலேயே இருந்துவந்திருக்கின்றார், தொடர்ந்தும் எக்காலத்தும் அவ்வாறே இருந்தும் வருவார் என்பதைச் சுட்டிக் காட்டுவதே. அவரது படைப்பு எக்காலத்தும் இருந்து வந்தே உள்ளது; அவரது தெய்வீக மகிமையின் அவதாரங்களும் அவரது நித்திய புனிதத் தன்மை என்னும் பகலூற்றுகளானோரும், நினைவுக்கெட்டாத காலம் முதல், மனித இனத்தை ஒரே உண்மைக் கடவுளின்பால் அழைத்திடுமாறு பொறுப்பு வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களுள் சிலரின் பெயர்கள் மறக்கப்பட்டும், அவர்களின் வாழ்க்கையைக் குறிக்கும் பதிவேடுகள் இழக்கப்பட்டுமிருப்பற்கு உலகத்தில் ஏற்பட்டு வந்துள்ள கொந்தளிப்புகளும் மாற்றங்களுமே காரணங்களாகும்.

பிரளயங்கள்

சரித்திரக் குறிப்புகளும் மற்றப் பொருள்களும் உள்பட, உலகத்தில் உள்ளவற்றை எல்லாம் அழித்திட்ட ஒரு பிரளயத்தைப் பற்றிச் சில நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது; அன்றியும், பல நிகழ்வுகளின் அடையாளங்களைத் துடைத்தழித்திட்டப் பல பிரளயங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும், இப்பொழுதிருக்கும் சரித்திர வரலாறுகளில் வேறுபாடுகள் காணப் படுகின்றன; உலகின் பல்வேறான இனங்கள் ஒவ்வொன்றும் அக்காலக் கட்டத்தையும் அதன் சரித்திரத்தையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன. சில, எட்டாயிரம் ஆண்டுகளிலிருந்து அவற்றின் வரலாற்றினை விவரிக்கின்றன; மற்றவை, பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் செல்கின்றன. “ஜூக்“ நூலைப் படித்திருப்பவர் யாராயினும் அதற்கும் பற்பல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாறுகளுக்கும் இடையே எந்தளவு வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் தெரிந்திடும். நீங்கள், இம் முரண்பாடான கதைகளையும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் புறக்கணித்து, இவ்வதி மேன்மைமிகு வெளிப்பாட்டின்பால் உங்கள் பார்வையைத் திருப்பிட இறைவன் அருள் புரிவாராக.

அதாவது, பஹாவுல்லா வசிஷ்ட யோகத்தில் காணப்படும் காலக் கணக்கை தாமும் ஆதரிக்கின்றார் எனவே இதிலிருந்து புலப்படுகின்றது.

குறிப்புகள்:

1 – ஆதாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் முதல் பகுதியில் ஜனனம் (Genesis) வரும் ஒரு அவதார புருஷராவார். இவரே முதல் மனிதர் எனும் நம்பிக்கை பரவலாக இருந்தபோதிலும் பஹாய் திருவாக்குகள் இவரை ஓர் அவதார புருஷர் எனவே விவரிக்கின்றன.

2 – பேபல் (Babel) – ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரு மொழி மட்டுமே பேசி வந்தனர் எனவும் பிற்காலத்தில் பேபல் எனும் இடத்தில் (இராக் நாட்டில் இருந்த ஓர் இடம்) மொழிகள் பலவாறாக பிரிந்தன எனவும் கூறப்படுகிறது. இவ்விஷயத்தை பஹாய் திருவாக்குகளும் ஆதரிப்பனவாக இருக்கின்றன.

3 – சிரியாக் (Syriac) – ஹிப்ரூ மற்றும் அரமேய்க் மொழிகள் தோன்றுவதற்கு முன் பேசப்பட்டு வந்த ஒரு மொழி

4 – ஆப்ரஹாம் (ஆண்டவரின் நண்பர்) – இவர் பழைய ஏற்பாட்டில் வரும் அவதார புருஷர் மற்றும் விவிலியத்தில் வரும் எல்லா அவதார புருஷர்களுக்கும் இவரே தோற்றுவாய் என குறிக்கப்படுகிறது.

5 – ஹிப்ரூ மொழி – தற்போது இஸ்ரேல் நாட்டின் தேசிய மொழி.

கடவுளுக்கு நன்றியுடையோர்களாக இருப்போமாக


(http://tinyurl.com/2eqjyd8)ன் மொழிபெயர்ப்பு

வேலை தேடி அலைவதில் நான் நினைத்ததைவிட சந்தை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தும், இடத்திற்கு இடம் வேலை காலி இல்லை எனும் அறிக்கைகளை கண்டும், மனம் மிகவும் தளர்ந்து போவது எளிதே. ஆனால், ஏதாவது ஒரு வழி தோன்றும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இழக்காமல் இருப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பிறக்கப்போகும் அவ்வழி நான் எதிர்ர்பார்த்திருந்த வழியாக இல்லாமலும் இருக்கலாம், அதனால் பாதகமில்லை. பின்வரும் திருவாக்குப் பகுதியை சிறிதுகாலமாக நான் படித்துவருகிறேன். அது மனதிற்கு ஆறுதலும் உறுதியும் அளிப்பதாக உள்ளது. மனம் தளர்வடையும் போதெல்லாம் இவ்வரிகளையே நான் சரனடைகிறேன்:

இறைவனின் இராஜ்ஜியத்தின் முன் பிரார்த்தனையோடு பனிந்து நிற்பவனே! தெய்வீக வதனத்தின் அழகு உன் உள்ளத்தை பரவசம் அடையச்செய்துள்ளது, உள்ளார்ந்த விவேகத்தின் ஒளி அதில் முழுமையாக நிறைந்துள்ளது, இராஜ்ஜியத்தின் பிரகாசம் அதனுள் ஒளிவீசுகின்றது. எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் உன்னோடு இருக்கின்றார், இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார், மற்றும் அவரது வலுமிகு திராட்சை தோட்டத்தில் உன்னை தமது பணிப்பெண்ணாக்கியுள்ளார் என்பதை அறிவாயாக.

உண்மையில், வாழ்க்கையில் நாம் இதற்கு மேலும் வேறு எதைத்தான் வேண்டக்கூடும்? “இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார்…” என்பது மனதுக்கு எத்துனை ஆதரவாக இருக்கின்றது. கடவுள் “வாஞ்சைமிக்கவர்” எனும் வார்த்தைகளை சமீபகாலமாக நான் தியானித்து வருகின்றேன். கடவுள் அதி வாஞ்சை மிக்கவர். ஆகவே அவரது படைப்புக்களாகிய நாமும் அவ்வாறே வாஞ்சைமிக்கவர்களாக இருக்கவேண்டும். போட்டி மற்றும் தன்னலம் மிகுந்த இச்சமூக சூழலில் நாம் ஒருவருக்கு ஒருவர் வன்மையாகவும் கடுமையாகவும் நடந்துகொள்கின்றோம். நான் சிறு வயது முதல் என் வாழ்வில் வாஞ்சைமிகு, அன்பான, மென்மை மிக்கோரை பெற்றுள்ளது என் அதிர்ஷ்டமே, மற்றும் நான் என் வாழ்வில் நன்றி நவிலும் விஷயங்களில் இதுவும் ஒன்றே… (மேல்நாடுகளில் கடைபிடிக்கப்படும் நன்றிநவில்தல் நாளை ஒட்டி எழுதப்பட்ட வரிகள்.)

கித்தாப்-இ-இகான் – ஓர் அறிமுகம்


(ஆக்கம்: திரு அந்தோனிசாமி)

பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலேயே இரண்டாவது ஸ்தானத்தை வகிக்கும் மிக வலிமை பொருந்திய திருநூலான கித்தாப்-இ-இகான் (மெய்யுறுதி நூல்) பாக்தாத் நகரில் பஹாவுல்லா அவர்களால் இரு பகல் மற்றும் இரண்டு இரவுகள் காலஅளவு நேரத்திற்குள் வெளிப்பாடு செய்யப்பட்டது. பாப் பெருமானாரின் தாய் மாமனான ஹஜி மிர்ஸா சிய்யித் முகமது அவர்கள் தமது தங்கையின் புதல்வரைப் பற்றி தொடுத்திருந்த கேள்விகளுக்கு மறுமொழியாகத்தான் பஹாவுல்லா இறைவனின் இத்தகைய கிருபைமிகு வெளிப்பாட்டை வெளியிட்டார். இம் மாபெரும் திருநூல் கடந்த காலத்தினுடைய புனித நூல்களின் மர்மங்களைத் திரை நீக்குவதுடன் மனிதகுல முழுமைக்கும் பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டிய ஓர் இரத்தினச் சுரங்கத்தை வழங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

கித்தாப்-இ-இகான் திருநூலின் மகத்துவத்தை எடுத்துரைக்கையில் பஹாய் சமயத்தின் பாதுகாவலாரான ஷோகி எபெஃண்டி அவர்கள் கூறுகின்றதாவது: “பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாடு என்னும் ஆர்ப்பரித்திடும் மகா சமுத்திரத்திலிருந்து வெளிவந்துள்ள கித்தாப்-இ-இகான் திருநூல். பாரசீகக் கவித்துவத்திற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன், அசல்தன்மைமிக்கதாகவும், புனிதமிக்கதாகவும், விறுவிறுப்புமிக்கதாகவும், பாராட்டத்தக்க அளவில் மிகத்தெளிவாகத் துலங்குவதாகவும் விளங்குகின்றது. அத்துடன் தனது வாதத்தில் வலிமைமிக்கதாகவும், எதிர்க்கப்படவியலா தனது கனிவான தன்மையில் ஈடிணையற்றும் திகழும் இத் திருநூல் இறைவனது மாபெரும் மீட்புப் பணியை எடுத்துரைத்து, பஹாய் இலக்கியத்தில் பஹாவுல்லாவினுடைய அதிபுனித திருநூலான கித்தாப்-இ-அக்டாஸ் நூலைத் தவிர மற்ற எந் நூலுமே வகித்திடாத ஓர் அதிவுயரிய நிலையில் ஈடிணையற்றதாகத் திகழ்கின்றது.”

பாப் பெருமானாரின் தாய் மாமன்கள்

பாப் பெருமானாருக்குத் தனது தாய்வழி மூன்று மாமன்மார்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஹஜி மிர்ஸா சிய்யித் அலி ஆவார். இவருக்கு “கால்-யி-அஸாம்” (மாபெரும் மாமன்) என்ற ஓர் அடைமொழியும் உண்டு. பாப் பெருமானாரின் தந்தையாருடைய மரணத்திற்குப் பிறகு இவர்தான் பாப் அவர்களைப் பராமரித்து வந்தார். அத்துடன் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்ட முதல் தாய் மாமனும் இவரே என்பது இங்குக் குறிப்படத்தக்கதாகும். இவர் பாப் பெருமானாரின் சமயத்தில் இறுதி வரை பற்றுறுதியுடன் இருந்தார். பாப் பெருமானார் உயிர் தியாகமடைவதற்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். தமது சமய நம்பிக்கையைக் கைவிட மறுத்ததற்காக இவர் பொது மக்கள் முன்னிலையில் உயிர்த் தியாகத்தை தழுவினார். தெஹ்ரானின் ஏழு உயிர்த் தியாகிகளில் இவரும் ஒருவராவார்.

பாப் பெருமானாரின் தாய் மாமன்களில் மூத்த தாய் மாமன் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம் மது ஆவார். இவருக்கு “கால்-யி-அக்பர்“ என்றும், “கால்-யி-அஸ்கார்“ என்றும் அடைமொழிகள் உண்டு. இவர் பூஷிர் பட்டணத்தில் வணிகராக இருந்தவர். பாப் பெருமானார் ஷிராஸ் நகரில் தமது சமயத்தைப் பிரகடனம் செய்தத் தருணத்தில் இவர் இன்னமும் பூஷிர் பட்டணத்திலேயே தமது வணிகத்தொழிலை மேற்கொண்டிருந்தார். இவர் பாப் பெருமானார் பறைசாற்றிய வெளிப்பாட்டில் பற்றும் மரியாதையும் வைத்திருந்தார். ஆனால், இவர் பஹாவுல்லாவைச் சந்திக்கும் வரை சமயத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இவர் எழுப்பிய வினாக்களுக்கு மறுமொழியாகத்தான் பஹாவுல்லா அவர்கள் கித்தாப்-இ-இகான் திருநூலை வெளிப்பாடு செய்தார்.

பாப் பெருமானாருடைய இளைய தாய் மாமன் ஹஜி மிர்ஸா ஹாசான் அலி ஆவார். தமது சகோதரருடன் பயணம் சென்றிருக்கையில் இவர் முதலில் பஹாவுல்லாவை சந்திக்க மறுத்து சமயத்தை ஏற்றுக் கொள்ளவில்லையானாலும்கூட, பின்னாளில் சமயத்தை ஏற்றுக்கொண்டு இறுதி வரை பற்றுறுதியுடன் வாழ்ந்தவர்.

கித்தாப்-இ-இகான் வெளிப்பாடு செய்யப்பட்ட சூழ் நிலை பாப் பெருமானார் தமது சமயத்தை ஷிராஸ் நகரில் முல்லா ஹ§சேய்னுக்கு பிரகடனம் செய்தார் என்பது அனைவரும் அறிந்த சரித்திரமே. 1845ம் ஆண்டு வசந்த காலத்தின்போது, பாப் பெருமானார் மெக்கா நகருக்கு புனித யாத்திரையை மேற்கொண்டு அங்குச் சில பிரமுகர்களுக்கும், சக யாத்திரிகர்களுக்கும் தமது சமயச் செய்தியை வழங்கி விட்டு புஷீர் பட்டணத்திற்குத் திரும்பினார். அங்கு தமது தாய் மாமனான ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது அவர்களின் இல்லத்தில்தான் பாப் பெருமானார் தங்கியிருந்தார். இருபத்தைந்தே வயதுடைய தமது சகோதரியின் புதல்வரது மகிமைமிக்க ஸ்தானத்தை அறியாதிருந்த அந்தத் தாய்மாமன் தமது அன்னைக்கும், அன்பு சகோதரிக்கும் பின் வருமாறு ஒரு கடிதம் எழுதினார்: “பிரகாசமும், மதிப்புமிக்க எனது அன்னைக்கும், சகோதரிக்கும்(அடியேன் எழுதும் கடிதம்). இறைவனின் சாந்தம் உங்கள் மீது தவழ்வதாக. மாண்புமிகு ஜினாபி ஹஜி அவர்கள் பாதுகாப்பாக இல்லம் திரும்பியுள்ளதற்கு இறைவன் போற்றப்படுவாராக. எனது நேரத்தை அவரது முன்னிலையில் கழிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சிறிது காலத்திற்கு அவர் புஷீர் பட்டணத்தில் தங்கியிருப்பதுதான் நல்லது எனத் தெரிகின்றது. ஆனாலும், வெகு விரைவிலேயே அவர் (ஷிராஸ்) இல்லத்திற்குத் திரும்பி விடுவார். கவலையடையா தீர்கள்….மெய்யாகவே, அவரது கொடைமிகு ஆன்மாவானது இவ்வுலக மக்கள் மற்றும் மறுவுலக மக்களின் பெரும் ஆனந்தத்திற்கு மூலாதாரமாகும். எங்கள் அனைவருக்கும் அவர் நன்மதிப்பைக் கொண்டு வருகின்றார்.” (திரு.அடீப் தாஹெர்சாடி எழுதியுள்ள “பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாடு” முதல் தொகுதி, பக்கம் 154)

இதன் பிறகுதான் பாப் பெருமானார் உரிமைகோரிய அந்த இறைசெய்தி ஷிராஸ் நகரில் பரவியது. இதன் வாயிலாக பாப் பெருமானாரின் அன்னையும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரைப் பற்றி வெகுவாகவே கவலைப்படலானார்கள்.

பாப் பெருமானாரின் இந்த மூத்த தாய் மாமன் இதே நேரத்தில் தமது இளைய சகோதரருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். தமது தங்கையின் புதல்வர்(பாப்) பறைசாற்றுகின்ற செய்திக்குத் தாம் ஆணித்தரமாகச் சாட்சியமளிப்பதாகவே அக் கடிதத்தின் வாசகங்கள் தெரியப்படுத்துகின்றன. தமது சமயம் குறித்துத் தமது உறவினர்கள் சிலரது மனங்களில் தலைதூக்கியுள்ள நம்பிக்கையின்மையைப் பற்றி கேள்விப்பட்டவுடன் பாப் பெருமானார் அடைந்த மன வருத்தத்தைப் பற்றி அக் கடிதம் தெரிவிப்பதாக உள்ளது. அக் கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு: “தமது சமயத்தைச் சந்தேகித்து, உண்மையின் பாதையில் தற்பெருமையுடன் நடைபோடும் எவரும் தம்மை நேருக்கு நேர் சந்திக்க முன்வர வேண்டுமென பாப் பெருமானார் தமது நூல்கள் பலவற்றில் சாட்சியமளித்துள்ளார். தமது கோரிக்கையை மிக மிக உறுதியுடன் வலுவாக எடுத்துரைக்கும் அவர் எங்ஙனம் புத்தி சுவாதீனமற்றவராக இருக்கக்கூடும்? அவர் புத்தி சுவாதீனமற்றவர் என அவர்கள் கூறினால் எந்தப் பகுத்தறிவும் அந்த வாதத்தை முறியடித்து விடும். ஏனெனில், அவர் புத்தி சுவாதீனமற்றவராக இருப்பின், எங்ஙனம் அவர் அறிவுமிக்கவராக இருக்கின்றார்? அவர்களது பாஷையில் அவர் “புத்தி சுவாதீனமற்றவராக” ஆனவுடன் அவர் ஒரு கல்விமானுக்குள்ள அறிவுடன் வாதிடுகின்றாரே? இந்த அடியேனுக்கு அவரதுச் சமயத்தைப் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. எனக்குத் தெரிந்த வரையில் இது இறைவனிடமிருந்து வந்த சமயமே.”

பாப் பெருமானாரின் சமயத்தில் இந்தத் தாய் மாமன் நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்பது இக்கடிதத்தை வாசிக்கும் எவருக்கும் எளிதில் புரிந்தாலும் கூட, இந்தத் தாய் மாமனுக்கும் ஒரு சந்தேகம் அவரது மனதிற்குள்ளாகவே வெகு நாட்களாக இருந்து வந்தது என்பது அக் காலத்தில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமது சந்தேகமிகு கேள்விகளுக்கு மறுமொழியாக பஹாவுல்லா வெளியிட்ட கித்தாப்-இ-இகான் பெறப்பட்ட பின்னரே இந்த ஐயப்பாடு அவரை விட்டு நீங்கியது.

பாப் பெருமானாரின் ஷிராஸ் இல்லத்து மெய்க்காவலர்களில் ஹஜி மிர்ஸா ஹபிபுல்லா என்பவரும் ஒருவர். இவரது தந்தையான அகா-மிர்ஸா-நூரிடின் என்பவர் பாப் பெருமானாரின் நம்பிக்கையாளர்களில் ஒருவர். பாப் அவர்கள் உயிர்த்தியாகமடைந்த பிறகு இந்த அகா-மிர்ஸா-நூரிடின் என்பவர் பாப் பெருமானாரின் தாய் மாமனான ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மதுவுடன் மேற்கொண்ட உரையாடல்ளைப் பற்றி மகன் ஹபிபுல்லாவிடம் எடுத்துரைக்க, அவரும் அதுபற்றி குறித்து வைத்துள்ளார். பாப் பெருமானாரின் தாய் மாமனது ஆன்மீக வாழ்க்கையில் இந்த உரையாடல்களே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இறைவனின் சமயச் செய்தியை நம்பிய அவர் தமது தங்கையின் புதல்வரான பாப் பெருமானார்தான் வாக்களிக்கப்பட்ட காயிம் என்பதை நம்புவதில் சிரமத்தை எதிர்நோக்கினார் என்பது அந்தக் குறிப்புக்களிலிருந்து தெரிய வருகின்றது. அந்த உரையாடலும், அதன் பிறகு சம்பவித்த நிகழ்ச்சிகளையும் விளக்கும் இக்குறிப்புக்கள் சிலவற்றை இப்பொழுது நாம் பார்ப்போம்:

“…..உரையாடலின் ஆரம்ப நிலையின்போது நான் எந்தவிதமான ஆதாரங்களை முன் வைத்தாலும் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது அதனைக் தட்டிக் கழிப்பதாகவே தெரிந்தது. இத்தகைய ஆரம்பநிலை மறுப்பு எங்களது பல சந்திப்புக்களில் தொடர்ந்தது. அத்தகைய ஓர் உரையாடலின்போது நான் ஆணித்தரமாக எனது வாதத்தை முன்வைத்தபோது, அவர் என்பக்கம் திரும்பி, ‘மெய்யாகவே எனது தங்கையின் புதல்வர்தான் வாக்களிக்கபட்ட காயிம் என நீங்கள் கூறுகின்றீரா?’ என்று கேட்டார். அக் கேள்விக்கு ‘ஆமாம்,’ என நான் பதில் சொல்லியபோது, அவர் அது தமக்கு விந்தையாக உள்ளதாகக் கூறிவிட்டுப் பிரார்த்தனைக்குச் சென்று விட்டார். அவர் பிரார்த்தனையில் ஈடுபட எத்தணிக்கும் போது அவரது நிலையைக் கண்டு நான் சிரித்து விட்டேன். எனது சிரிப்புக்கானக் காரணத்தை அவர் என்னிடம் கேட்டபோது நான் ஒன்றுமில்லை எனக்கூறி மழுப்பி விட்டேன். சிரிப்புக்கானக் காரணத்தை அறிந்துகொள்ள அவர் பிடிவாதமாக இருந்தார். அப்பொழுது நான், ‘உங்களது தங்கையின் புதல்வரான பாப் பெருமானார்தான் வாக்களிக்கப்பட்ட காயிம் என்பதை நீங்கள் மறுப்பதைக் காணும் பொழுது, தமது தங்கையின் புதல்வரான முஹம்மதுதான் திருத்தூதர் என்பதை நம்பிட மறுத்த அபு லாஹாப் அவர்களின் மறுப்பும் உங்களது மறுப்பும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது’ என பதிலளித்தேன். தொடர்ந்து நான், ‘அவரும் கூட, தனது தங்கையின் புதல்வர் எப்படி இறைத்தூதராக ஆக முடியும் என்றே வினவினார். ஆனால், உண்மையில் அண்ணல் முஹம்மதுதானே இறைத்தூதராக விளங்கினார்? இப்பொழுது இந்தச் சமயத்தைப் பற்றி தீவிரமாக ஆராய்வது என்பது முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு. உண்மையின் மெய்ம்மைச் சூரியன் உங்களது குடும்பத்தில் உதித்துள்ளதற்காகவும், உங்கள் இல்லத்திலிருந்து ஒளிவீசுவதற்காகவும் நீங்கள் நிச்சயமாகப் பெருமை கொள்ள வேண்டும். அந்த உண்மையை நீங்களே தடுத்து விடாதீர்கள்…’ என்று சொன்னேன்.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளால் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது கவரப்பட்டு, ‘நீங்கள் சொல்லிய இந்த உண்மை மறுக்க முடியாததாகும். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று என்னையே திருப்பிக் கேட்டார். ஈராக் தேசத்திலுள்ள புனித ஸ்தலங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு, பாப் பெருமானார் உயிர்த்தியாகமடைந்து விட்ட பிறகு அங்கேயே தங்கியிருக்கும் தமது தங்கையைச் சென்று கண்டு விட்டு, பிறகு அங்கிருந்து பாக்தாத் நகர் சென்று பஹாவுல்லாவைக் கண்டு தனது சந்தேகங்களை அவரிடம் முன் வைத்திட நான் ஆலோசனைக் கூறினேன். இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் மிக தீவிர முயற்சி மேற்கொண்டு இறைவன் மீது முழுநம்பிக்கை வைக்குமாறு நான் அவருக்கு வலுவாக அறிவுறுத்தினேன். உண்மையைக் காண்பதிலிருந்து அவரைத் தடுத்திடும் திரை விலக்கப்பட்டு இறைவனின் மெய்யான சமயத்தை அவர் அடைவார் என்ற எனது நம்பிக்கையையும் அவரிடம் நான் சொன்னேன். தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள அதுவே சரியான வழிமுறை என அப்போது அவர் ஒத்துக் கொண்டார்.”

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது கடைசி இளைய சகோதரரான ஹஜி மிர்ஸா ஹாஸான் அலிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த இளைய சகோதரர் யாசிட் நகரில் ஒரு வணிகராவார். புனித ஸ்தலங்களுக்குச் சென்று விட்டுத் தங்களது தங்கையை சந்திக்க தாம் திட்டமிட்ட பயணத்தில் கலந்து கொள்ளுமாறு அக் கடிதத்தில் அவர் தமது இளைய சகோதரரை அழைத்திருந்தார். அந்த இளைய சகோதரரும் அத்திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்து, தாம் ஷிராஸ் நகர் வரும்வரை காத்திருக்கும்படியும் மறுமொழி எழுதினார். பிறகு, திட்டமிட்டபடி சகோதரர்கள் இருவரும் பூஷிர் பட்டணம் வழியாக தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனாலும், ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது பயணத்தின் உண்மையான நோக்கத்தைத் தனது கடைசி இளையச் சகோதரருக்கு பாக்தாத் நகர் அடையும் வரையில் தெரிவிக்கவே இல்லை. பாக்தாத் நகர் சென்ற பிறகுதான் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது பயணத்தின் தலையாய நோக்கம் சமயத்தின் உண்மையை ஆராய்ந்து விட்டு, புனித ஸ்தலங்களைச் சென்று கண்டு விட்டு, பாப் பெருமானாரின் தாயையும் போய் பார்ப்பதுதான் என்று கூறினார். பஹாவுல்லாவைச் சென்று காண்பதற்கு ஏதுவாக தமது இளைய சகோதரர் பாக்தாத் நகரில் சிலகாலம் தங்குவது நல்லது என ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது எடுத்துச் சொன்னார்.

இதைச் செவிமடுத்த இளைய சகோதரர் சினமடைந்து தனது மூத்த சகோதரரை எதித்துப் பேசினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் அத்தகைய விவகாரங்களில் அவருடன் கூட்டுச் சேரப்போவதில்லை எனவும், புதிய சமயத்தைப்பற்றி தாம் அறிந்து கொள்ள விரும்பவில்லை எனவும் இளைய சகோதரர் காட்டமாகவே கூறிவிட்டு அன்றைய தினமே பாக்தாத் நகரிலிருந்து புறப்பட்டு விட்டார்,” (ஆதாரம்: திரு.அடிப் தாஹெர் சாடி எழுதியுள்ளள பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாடு, பாகம்1, பக்கம் 155-157)

இதைக் கண்ட மூத்த சகோதரர் தனது இன்னொரு இளைய சகோதரருடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று விட்டு பாக்தாத் திரும்பியபோதுதான் பஹாவுல்லாவுடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்லபட்டார். ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனியாகவே பஹாவுல்லாவைச் சந்தித்தார். இச் சம்பவம் நடந்தது 1862ல் . முதல் சந்திப்பிலேயே ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது பஹாவுல்லாவின்பால் நன்கு வசப்பட்டு விட்டார். சந்திப்பின் இறுதியில் பாப் பெருமானாரின் செய்தியைப் பற்றியும், வரவிருக்கும் காயிம் பற்றியும் மரபுவழக்குகளின் நிறைவேற்றம் குறித்தும் சந்தேகங்கள் சிலவற்றைத் தமக்குத் தெளிவுபடுத்துமாறு அவர் பஹாவுல்லாவை வேண்டினார். பஹாவுல்லாவும் அதற்கு இணங்கினார். தமக்கு ஏற்பட்டுள்ளச் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவாகக் பட்டியலிட்டுத் தம்மிடம் கொண்டு வருமாறு கூறி பஹாவுல்லா அவரை வழியனுப்பி வைத்தார்.

மறுநாள் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது அவர்கள் பஹாவுல்லா அறிவுறுத்தியது போலவே தமது சந்தேகங்களைத் தெளிவாகக் பட்டியலிட்டுக் கொண்டு வந்தார். ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது கேள்விகளை நான்கு தலைப்புக்களின் கீழ் பட்டியலிட்டுக் கொண்டு வந்தார். அத் தலைப்புக்களின் சுருக்கம் பின்வருமாறு:

(அ) மீண்டும் உயிர்த்தெழும்நாள் – இதை அப்படியே நேரடியாக அர்த்தம் கொள்ளலாமா? எப்படி நீதிமிக்கவர்கள் நடத்தப்படுவார்கள், எப்படி அநீதிமிக்கவர்கள் தண்டிக்கப்படுவார்கள்?

(ஆ) பன்னிரண்டாவது இமாம்- பன்னிரண்டாவது இமாம் பிறந்து எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது ஒரு மரபுவழக்கு. இம் மரபு வழக்கு அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுகின்றது. அவ்வளவுதான். இக்கூற்றை எப்படி விளக்கலாம் ?

(இ) புனித நூல்களுக்கான விளக்கவுரை- காலங்காலமாக மக்கள் நம்பிக்கை வைத்திருந்த உண்மைகளை இந்த பாப்-யி- சமயம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. வாசிக்கும்போது, புனித வாசகங்களின் நேரடியான அர்த்தங்களை ஒருவர் புறக்கணிக்க முடியாது. இதனை எப்படி விளக்குவது?

(ஈ) இமாம்கள் வழங்கியுள்ள மரபுவழக்குகளுக்கொப்ப சில சம்பவங்கள் காயிம் அவதரிக்கும் பொழுதுதான் நிறைவேற வேண்டும். அத்தகைய சம்பவங்கள் இதுவரையில் நடைபெறவில்லை. இதனை எப்படி விளக்குவது?
(ஆதாரம் : ஹாசான் பால்யூசி எழுதிய மகிமையின் மன்னர் பஹாவுல்லா, ப.163-165)

அந்த வினாக்களுக்கு மறுமொழியாக பஹாவுல்லா இரு பகல் இரண்டு இரவுகள் நேர கால அளவுக்குள் கித்தாப்-இ-இகான் எனும் புனித நூலை வெளிப்பாடு செய்தார். அப் புனித நூல் வெளிப்பாடு செய்யப்பட்ட வேளையில் அதைத் தம்கைப்பட எழுதியது அப்துல் பஹாதான். அப்பொழுது அப்துல் பஹாவுக்குப் பதினெட்டே வயதுதான். இந்த புனித நூல் சிய்யித் முஹம்மதுவின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்தது. ஆரம்ப நாட்களில் இப்புனித நூல் ‘மாமனுக்கான திருமுகம் ‘ என அழைக்கப்பட்டது. ஆனால், பின்னர் அதன் தலைப்பை பஹாவுல்லா அவர்கள் கித்தாப்-இ-இகான் (மெய்யுறுதி நூல்) என்று மாற்றினார்.

கித்தாப்- இ- இகான் திருநூலின் அசல்பிரதியினைப் பற்றிய சில கூடுதல் தகவல்கள்

கித்தாப்-இ-இகான் திருநூலின் வாசகங்களை பஹாவுல்லா அவர்கள் வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல அவரது மூத்த புதல்வரான அப்துல் பஹாதான் அதனைத் தமது கைப்பட எழுதினார். எனவே, கித்தாப்-இ-இகான் திருநூலின் அசல் பிரதி அப்துல் பஹாவினுடைய கையெழுத்துப் பிரதிதான். அந்தக் காலத்தில் பாரசீகத்தில் அச்சுத்தொழில் மிக பிரபலம் அடையவில்லை. எனவேதான், பஹாவுல்லா வெளியிட்ட புனித நூல்களை நம்பிக்கையாளர்கள் பார்த்து எழுதிக்கொள்வார்கள். அதி புனித நூலான கித்தாப்-இ-அக்டாஸ் கூட பஹாவுல்லாவினுடைய விண்ணேற்றத்திற்குப் பிறகு 1893ம் ஆண்டு இந்திய நாட்டு பம்பாய் நகரிலுள்ள (இப்பொழுது அந்நகரம் மும்பாய் என அழைக்கப்படுகின்றது.) ஓர் அச்சுக்கூடத்தில்தான் அச்சடிக்கப்பட்டது. கித்தாப்-இ-இகான் திருநூல் 1882ல் பம்பாய் நகரில் அச்சடிக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. ஆக, பஹாய் சமயத்தில் முதன் முதலாக அச்சேறிய முதல் நூல் இந் நூல்தான்.

சிய்யித் முஹம்மது 1877ல் காலமானவுடன் அவரது விருப்பத்திற்கு ஏற்ப ஷிராஸ் நகரத்தின் ஒரு மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டார். தாம் இறப்பதற்கு முன்பதாக எழுதிய உயிலில் தாம் பஹாய் சமயத்தை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவியும் ஐந்து பிள்ளைகள் அனைவரும் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் சமயத்தில் பற்றுறுதியுடன் இருந்தனர்.

பாப் பெருமானாரின் தாய் மாமனது இல்லத்தில்தான் கித்தாப்-இ-இகான் திருநூலின் அசல்பிரதி 1948 வரை இருந்தது. பிறகு, பாப் பெருமானாரின் தாய் மாமனுடைய கொள்ளுப் பேத்தியான பாத்திமி-கனும் -இ-அஃப்னான் அந்த அசல்பிரதியை அன்புமிகு பாதுகாவலரான ஷோகி எஃபெண்டியிடம் சமர்ப்பிக்கும் பொருட்டுக் கொடுத்தனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு அந்த அசல் பிரதியை ஷோகி எஃபெண்டி அவர்கள் பஹாய் உலக நிலையத்திலுள்ள பஹாய் அருங்காட்சியகத்தில் வைத்தார். இன்றைக்கும் அப்துல் பஹாவின் கையெழுத்திலான அந்த அசல்பிரதி அக் காப்பகத்தில் அப்படியே பத்திரமாக இருக்கின்றது. அப்துல் பஹாவின் கையெழுத்துப் படிவத்தில் கித்தாப்-இ-இகானின் அசல்பிரதி ஷோகி எஃபெண்டியிடம் புனித பூமியில் முதன் முறையாக வந்து சேர்ந்தபோது, இறைசமயத்தின் திருக்கரம் டாக்டர் யுகோ கியாச்சேரி அங்கிருந்தார். ஷோகி எஃபெண்டி பற்றிய தமது “மலரும் நினைவுகள்” எனும் நூலில் அந்த இனிய சம்பவத்தை டாக்டர் யுகோ கியாச்சேரி பின்வருமாறு விவரிக்கின்றார்: …..சமயத்தினுடைய எழுத்தோவியங்கள் மற்றும் சரித்திரத்தைப் பற்றிய பின்னணித் தகவல்களையும், உண்மைகளையும் சேகரிப்பதில் ஷோகி எஃபெண்டிக்கு இருந்த அளவிட முடியா ஆர்வத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு நாள் மாலை நேரம் நான் ஷோகி எஃபெண்டியினுடைய சாப்பாட்டு அறையில் நுழைந்தபோது, அந்த அறையில் ஷோகி எஃபெண்டி ஏற்கனவே அமர்ந்திருந் தார். அவரது முகம் மறைக்கப்பட முடியாத ஒருவித மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. அவர் அமர்ந்திருந்த சாப்பாட்டு மேசையின் மேல் வண்ண ஓவியங்கள் கொண்ட ஒரு பட்டுக் கைக்குட்டையால் ஒரு பொருள் சுற்றப்பட்டிருந்தது. மிக முக்கியமான ஒரு பொருளை இப்படி வண்ணக் கைக்குட்டையால் சுற்றப்படும் இப் பழக்கம் குறிப்பாக ஈரான் நாட்டில்தான் உள்ளது. நாங்கள் அனைவருமே சாப்பாட்டு மேசை நாற்காலிகளில் உட்கார்ந்து விட்ட பிறகு, இரவு உணவு பரிமாறப்படுவதற்கு முன்பு ஷோகி எஃபெண்டி முந்திக்கொண்டு, தெஹ்ரான் நகரிலிருந்து அன்று ஒரு யாத்திரிகர் வந்திருப்பதாகவும் அவர் தம்மோடு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டிய ஒரு தஸ்தாவேஜுவை பழஞ்சுவடிக் காப்பகத்தில் வைக்கப்படும்பொருட்டு தம்மிடம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். பிறகு, ஷோகி எஃபெண்டி அக் கைக்குட்டையை அவிழ்த்து அதிலிருந்து புத்தக வடிவிலான ஒரு பிரதியை மிக மிக பயபக்தியுடன் தமது கையில் எடுத்து அனைவரும் பார்க்கும் வண்ணம் மேசை மீது வைத்தார். அதில் இரண்டு நிருபங்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று இகான் திருநூல் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். அதிலிருந்த மற்றொரு நிருபத்தின் பெயர் இப்பொழுது எனக்கு நினைவில்லை.”

முதலில் இகான் திருநூலின் உள்ளடக்கத்தைப் பஹாவுல்லா வாய்மொழியாக எடுத்துச் சொல்லியபோது, அதனை அப்துல் பஹா கையெழுத்தில் எழுதிக்கொண்டார் என்றும், பிறகு அதனை பஹாவுல்லா சரிபார்த்தபோது, சில பத்திகளின் ஓரத்தில் தமது சொந்தக் கையெழுத்தில் சில கூடுதல் குறிப்புக்களைச் சேர்த்துக் கொண்டார் என்றும் ஷோகி எஃபெண்டி எங்களுக்குத் தெரிவித்தார். ஷோகி எஃபெண்டி இகான் திருநூலின் அசல் பிரதியை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பதுடன், பஹாவுல்லா தாம் வெளியிட்ட இகான் திருநூலைச் சரிபார்ப்பு செய்தபோது பஹாவுல்லா தமது கைப்பட எழுதி இணைத்துக்கொண்ட ஒரு வாசகத்தைத்தான் ஷோகி எஃபெண்டி தமது “உதயத்தை வென்றவர்கள்” எனும் மொழிபெயர்ப்பு நூலின் முதற் பக்கத்தில் பொருத்திடத் தேர்ந்தெடுத்தார். (பாப் பெருமானாருக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட) அந்த வாசகம் பின்வருமாறு: “இவை அனைத்திற்கும் நடுவே எமது உயிரைக் கையில் பிடித்தவாறு அவரது விருப்பத்திற்கே சரணடைந்து நிற்கின்றோம். ஒருவேளை இறைவனின் அன்புப் பரிவு, கிருபை ஆகியவற்றின்வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளதும், துலங்கச் செய்யப்பட்டுள்ளதுமான இவ்வெழுத்து (பஹாவுல்லா), அதி மேன்மையான சொல்லும், பிரதான மையப் புள்ளியுமான அவரது (பாப்) பாதையில் தனது உயிரைத் தியாகம் செய்யக்கூடும்.”

அந்த இரவு நேரத்தில் பாதுகாவலர் வெறும் மகிழ்ச்சியில் மட்டும் திளைத்திருக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் பாப் பெருமானாரின் வாழ்வுக்குத் தமது சொந்த வாழ்வையே தியாகம் செய்திடத் துடிக்கும் பஹாவுல்லாவின் ஏக்கத்தை உள்ளடக்கியுள்ள இந்தப் பத்தியை (அதாவது பஹாவுல்லா விசேஷமாக இகான் திருநூலில் இறுதியாக தமது சொந்தக் கையெழுத்தில் இணைத்த இந்த வாக்கியத் தொடரைத் தம்மை அறியாமலேயே) தேர்ந்தெடுத்ததின்வழி, தாம் தெய்வீகமாக வழிகாட்டப்படும் ஒரு செயல்பாட்டைக் கண்டு பிரமித்துப்போனார். பாதுகாவலருக்கும், கண்ணுக்குப் புலனாகா இறைவனுக்கும் உள்ள இந்த மர்ம தொடர்பை நாம் ஒருபோதும் சந்தேகப்படலாகாது என்பதை உணர்ந்து நாங்கள் அனைவரும் மிக ஆழமாக உருகினோம் என்றுதான் சொல்ல வேண்டும்.”

கித்தாப்-இ-இகான் திருநூலைக் கற்பதன் முக்கியத்துவம்
பல சமய அறிஞர்கள் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொள்வதற்கு கித்தாப்-இ-இகான் திருநூல் காரணமாக இருந்துள்ளது. உதாரணமாக, பஹாய்களுக்கு மிகவும் அறிமுகமான மிர்ஸா அபுல் பஃடீல் பல காலமாக பஹாவுல்லாவை ஏற்றுக் கொள்ளாதபோதிலும், இறுதியில் பஹாவுல்லாவின் மகத்துவத்தை கித்தாப்-இ-இகான் திருநூலின் பக்கங்களை நேர்மையான மனதுடன் திருப்பும் போதுதான் சமயம் எடுத்துரைக்கும் உண்மைகளை ஏற்றுக்கொண்டார். இறைசமயத்தின் திருக்கரம் ஜார்ஜ் டௌன்ஷெண்ட் கித்தாப்-இ-இகான் திருநூலை விவரிக்கையில், அதனை விவிலிய நூலின் இதயமென வருணிக்கின்றார். இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று, பஹாய் சமயத்தின் அன்புமிகு பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி இத் திருநூலை வருணிக்கப் பயன்படுத்திய பின்வரும் வார்த்தைகளிலிருந்து இத்திருநூலின் முக்கியத்துவம் புலனாகின்றது. இத்தகைய வருணனைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம் .

“..சமயத்தினுடைய ஆன்மீக முக்கியத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட நூல்களிலேயே மிக முக்கியமான நூல் கித்தாப்-இ-இகான் திருநூலாகும் .” (ஷோகி எஃபெண்டியின் சார்பாக 14 ஜூன் 1930 எனத் தேதியிடப்பட்டு ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து)

“சமயத்தினுடைய அடிப்படை நம்பிக்கைகளைப் பஹாவுல்லா விளக்கியிருக்கும் மிக முக்கியமான நூல் கித்தாப்-இ-இகான் ஆகும்.” (ஷோகி எஃபெண்டியின் சார்பாக, 28 ஜூன் 1930 எனத் தேதியிடப்பட்டு ஒரு தேசிய ஆத்மீக சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து)

பாப் பெருமானாரின் புனித நூல் பாயான் என்பது நமக்கு எல்லாருக்கும் தெரியும். அந்த பாயான் பற்றி குறிப்பிட்ட பொழுது, பாயான் இன்னும் முழுமை பெறவில்லை என்றும் “கடவுள் வெளிப்படுத்தப் போகும் அவர்” தோன்றுகையில் அந் நூல் முழுமைபெறும் என்றும் பாப் பெருமானார் வாக்களித்துள்ளார். கித்தாப்-இ-இகான் ஆனது பாயானின் தொடர்ச்சி என நம்பப்படுகின்றது. பாயான் திருநூல்பற்றி ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டபோது, கடவுள் கடந்து செல்கிறார் எனும் தமது நூலில், ”முடிவு பெறாத பாரசீக பாயான்..” என்றுதான் குறிப்பிடுகின்றார். நமது புனித பூமியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பஹாவுல்லாவினுடைய நிருபங்கள் ஒன்றில் பஹாவுல்லா அவர்கள் கித்தாப்-இ-இகான் திருநூலினை “நூல்களுக்கெல்லாம் பிரபு“ என வருணித்துள்ளதைக் காண முடியும். இந்த பின்னணித் தகவல்களோடு கித்தாப்-இ-இகான் திருநூலினுள் காலடி எடுத்து வைத்தால்தான் சில சமய உண்மைகளைப் பஹாவுல்லா சற்று வித்தியாசமாக விளக்கியிருப்பதன் காரணம் சற்றுத் தெளிவாக நமக்கு விளங்கும்.

அன்புமிகு உலக நீதிமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர் திரு.ஹ§ப்பர் டுன்பார் அவர்கள் உலக நிலையத்தில் பணியாற்றி வரும் தொண்டூழியர்களுக்குப் பதினான்கு மாதகாலம் கித்தாப்-இ-இகான் திருநூல்பற்றி ஆழ்நிலை வகுப்பினை நடத்தி வந்துள்ளார். அந்த ஆழ்நிலை வகுப்பு நடைபெற்றபோது நான்கு வருடத் திட்டம் நடப்பிலிருந்த நேரம் அது. கித்தாப்-இ-இகான் திருநூலோடு தம்மை மிக நெருக்கமாக இணைத்துக் கொண்டது குறித்து திரு.ஹ§ப்பர் டுன்பாரை திரு.நய்சான் சபாஹ் என்பவர் பேட்டி கண்டார். அந்த நேர்காணலின்போது திரு.டுன்பார் அவர்கள் தாம் இகான் திருநூலோடு பின்னியிருப்பதற்குக் காரணமாயிருந்த ஒரு கடிதச் செய்தியை பகிர்ந்து கொள்கின்றார். பஹாய் சமயத்தின் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் கலிஃபோர்னியாவிலுள்ள நண்பர் ஒருவருக்கு இகான் திருநூல் குறித்து எழுதிய கடிதம் தான் அது. “பஹாய் சமயத்தில் திறமையான, பயனுள்ள போதகர்களாகத் திகழ விரும்பும் நண்பர்கள் கித்தாப்-இ-இகான் திருநூலில் காணப்படும் ஒவ்வொரு விவரத்தையும் தங்களால் இயன்ற அளவுக்கு மிக ஆழமாக அறிந்து வைத்திருப்பதை தங்களது முதல் கடமையாகக் கருதிட வேண்டும். அதனால் அவர்கள் சமயச் செய்தியை மிகவும் ஏற்புடைய வகையில் பிறருக்கு வழங்க முடியும்,” என்னும் வாசகங்களை வாசிக்க நேர்ந்த பிறகுதான் கித்தாப்-இ-இகான் திருநூலைப் பற்றி ஓர் ஆழமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கை தம்மிடம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். அந் நேர்காணலில் பல சுவையான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.