கல்கி தோன்றிவிட்டார்


கல்கி அவதாரம் குறித்து பரவலான அவாத்தூண்டல் ஏற்பட்டுள்ளதை இவ்வலைப்பதிவை தினந்தோறும் நாடி வரவோரிலிருந்து காணமுடிகிறது. அதற்கான காரணம் பெரும் சிக்கலானதல்ல. இன்றிருக்கும் உலக நிலை மக்கள் மனதில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியும், இது எங்கு சென்று முடியும் என்பது குறித்தும் கேள்விகள் எழக்கூடும். அதற்கான பதில்களை பஹாவுல்லா நூறாண்டுகளுக்கு முன்பே வழங்கிச் சென்றுள்ளார். பஹாய் சமயத்தை ஆராய்வோர் அவற்றைக் கண்டிப்பாகக் கண்டுகொள்வர்.

இவ்வலைப்பதிவு நிச்சயமாகவே பஹாய் சமயத்தை பிரச்சாரம் செய்வதெனும் குறுகிய நோக்கம்கொண்டு அமைக்கப்பட்டதல்ல. இருக்கும் சமயங்களுக்கிடையில் வேறொரு புதிய சமயத்தை உட்புகுத்தி, சமய ரீதியிலான பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா அவதரிக்கவில்லை. மாறாக, கடவுளின் சமயம் ஒன்றே ஒன்றெனவும், தற்போது உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் அந்த ஒரே சமயத்தின் வெவ்வேறு அத்தியாயங்களே எனவும் அவர் போதிக்கின்றார். உலகம் ஐக்கியம் பெறுவதற்கான காலம் கனிந்துவிட்டதென அவர் எடுத்தியம்பியுள்ளார். இவ்வுண்மையை உலக மக்கள் அறிந்துகொண்டு உலக ஐக்கியத்திற்கான அடித்தலத்தை பஹாவுல்லா விசேஷமாக இக்காலத்திற்கென வழங்கியிருக்கும் போதனைகளப் பின்பற்றுவதன் வாயிலாக அமைத்துக்கொள்ள முடியும்.

இன்று உலகம் ஆன்மீகம், ஒழுக்கநெறிமுறை ஆகியவற்றின் சீரழிவினால் பெரும் அழிவுப்பாதையில் தலைதெறிக்கச் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறியின் சீரழிவு சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை பெரிதும் பாதித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நிலையை திசைதிருப்புவது எவ்வாறு? அதற்கான வழிவகைகளை அரசாங்கங்களும் மக்களும் அறிந்துள்ளனரா? அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும் இதற்கு என்னதான் தீர்வு என தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இருக்கின்ற சமயங்கள் அனைத்தும் உலகப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்கிட சக்தியற்றிருக்கின்றன. ஆனால், 1863-இல் தாம் இக்காலத்திற்கான ஒரு பேரவதாரம் என தம்மை உலகறிய அறிவித்துக் கொண்ட பஹாவுல்லா நாம் வாழும் இவ்வுலகின் வழிகாட்டுதலுக்காகவும் சீர்திருத்தத்திற்காகவும் தாம் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இக்காலத்திற்கான அவதாரம் என அறிவித்துள்ளார். அவ்வாறு பிரகடனப்படுத்திய போதிலும், மக்கள் தம்மையும் தமது போதனைகளையும் தன்னிச்சையாக ஆய்வு செய்த பிறகே தம்மைக் குறித்த ஒரு முடிவிற்கு வரவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக நிலைமை குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

உலகம் பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது; நாளுக்கு நாள் அதன் கலவரம் அதிகரித்து வருகின்றது. அதன் முகமோ கீழ்ப்படியாமை, அவநம்பிக்கை ஆகியவற்றின்பால் திருப்பப்பட்டுள்ளது. அதன் அவலநிலை அத்துணை மோசமடையவிருப்பதனால் அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்துவது பொருத்தமுமன்று, சரியுமன்று. அதன் முறைகேடான நடத்தை நெடுங்காலத்திற்குத் தொடரும். அக்குறிப்பிட்ட நேரம் வந்ததும், மனித இனத்தின் அங்கங்களையே நடுக்கமுறச் செய்யக்கூடியதொன்று திடீரெனத் தோன்றும்; அப்பொழுதுதான், தெய்வீகக்கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும்; விண்ணுலக இராப்பாடி அதன் இன்னிசையை ஒலித்திடும்.

இங்கு பஹாய் நம்பிக்கையாளர்களின் கடமை, பஹாவுல்லாவின் போதனைகளை உலகிற்கு எடுத்துரைப்பதே ஆகும். அதற்கு மேல் எவ்வழி செல்வதன்பது அவரவரின் சுயத்தேர்வாகும். குறைந்த பட்சமாக பஹாவுல்லாவின் போதனைகளை உலகம் அறிந்துகொண்டால், அவசியம் நேரும் போதோ தீர்வுகள் தேவைப்படும்போதோ எங்கு திரும்புவது எனும் கேள்விக்கு இடமிருக்காது.

பஹாவுல்லா பெரும் செல்வந்தராகப் பிறந்தபோதும், அவர் இறுதியில் சிறைச்செய்யப்பட்டும், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும், தமது செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில், தமது தாயகத்திலிருந்து நிரந்தரமாக நாடுகடத்தப்பட்டார். அவர் தாம் உலகிற்கு வெளிப்படுத்திய நற்செய்தியின் பிரதிபலனாக தாம் அனுபவித்த துன்பங்கள் குறித்து பின்வருமாறு கூறுகின்றார்:

புராதன அழகானவர்(பஹாவுல்லா), மனித இனம், அதன் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப்பெற வேண்டும் என்பதற்காகவே, அவர் சங்கிலியினால் பிணைக்கப்படுவதற்கு இணங்கி இருக்கின்றார்; உலகனைத்தும் உண்மையான சுதந்திரம் பெறக்கூடும் என்பதற்காகவே, அவர், அதி வலுமிக்கக் கோட்டையினுள் கைதியாக்கப்படுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். உலக மக்கள் எல்லையிலாக் களிப்புற்று, மகிழ்ச்சியினால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக அவர் கடுந்துன்பமெனும் கிண்ணத்தை அடிமண்டிவரை உலரச் செய்துள்ளார். இதுவே இரக்கமும், அதி கருணையும் மிக்க உங்களது பிரபுவின் அருளிரக்கமாகும். இறைவனின் ஒருமைத்தன்மையில் நம்பிக்கையுடையோரே, நீங்கள் மேன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக யாம் இழிவுப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டோம். நீங்கள் வளம் பெற்றுத் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவே யாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்திட்டோம். உலகனைத்தையுமே புதுப்பிக்க வந்துள்ள அவரை, எவ்வாறு, இறைவனுடன் பங்காளிகளாகச் சேர்ந்துள்ளவர்கள் மிகப்பாழடைந்த நகரங்களுள் ஒன்றினில் வற்புறுத்திக் குடியிருக்கச் செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள்!

பஹாவுல்லா தமது சமயத்தின் நோக்கம் குறித்தும் தற்போது உலகில் நிகழ்ந்துவரும் குழப்பங்கள் குறித்தும் உரைத்துள்ளார்:

கடவுள் சமயத்தின் நோக்கம்

மேன்மைமிகு திருவுருவானவர் மொழிகின்றார்: மனிதரின் குழந்தைகளே! இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கம்: மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர். இதுவே நேர்வழி; நிலையான, அசைக்கவியலாத அஸ்திவாரத்தைக் கொண்டுள்ளது. எவையெல்லாம் இவ் வஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளனவோ, இவ்வுலகத்தின் மாற்றங்களும் தற்செயல் நிகழ்வுகளும் அவற்றின் பலத்தைப் பாதிக்கவோ, எண்ணற்ற நூற்றாண்டுகளின் புரட்சிகள் அதன் அமைப்பினை வலுவிழக்கச் செய்யவோ இயலாது. 

உலக சீர்திருத்தத்திற்கு கலந்தாலோசனை அவசிம்

உலகத்தின் மதத் தலைவர்களும் அதன் மன்னர்களும், இக் காலத்தைச் சீர்த்திருத்தவும், அதன் பாக்கியத்தை மறுசீரமைப்பதற்காகவும் ஏகமனதாக எழுவார்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.அதன் தேவைகள் சம்பந்தமாக ஆழ்ந்து சிந்தித்த பின், அவர்கள், கூட்டாகக் கலந்தாலோசித்து, அக்கறையுடன் கொண்ட ஆழ்ந்த யோசனையின் மூலம், நோயுற்று, கடுந் துன்பத்தில் இருக்கும் உலகத்திற்குத் தேவையான சிகிச்சை அளித்திடட்டும். அதிகாரம் படைத்தோர், எல்லாக் காரியங்களிலும், நிதானத்தைக் கையாளவேண்டியது கடமையாகின்றது. எவை நிதானத்தின் எல்லையைக் கடக்கின்றனவோ அவை நன்மை பயக்கும் சக்தியை இழந்திடும். உதாரணமாக, சுதந்திரம், நாகரிகம் ஆகியவற்றைக் கவனியுங்கள். புரியுந்திறன் கொண்டுள்ள மனிதர் எவ்வளவுதான் அவற்றைக் குறித்து அனுகூலமான கருத்தினைக் கொண்டிருப்பினும், அவை, வரம்பு மீற விடப்படுமாயின், அவை மனிதரில் மிக மோசமான தாக்கத்தைத் தான் உண்டு பண்ணும்…. இறைவா, மனிதர் மத்தியிலுள்ள ஆட்சியாளர்கள், விவேகிகள், கற்றோர் முதலியோரின் கடுமுயற்சிகளின் விளைவாக உலக மனிதர்கள் தங்களுக்கு நன்மை பயக்கவல்லவற்றைக் கண்டிட வழிகாட்டப் படுவராக.

உலகம் தற்போது தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது

எத்தனை காலந்தான் மனித இனம் தனது தவறான வழியில் பிடிவாதமாக இருந்திடும்? எத்தனை காலந்தான் அநீதி தொடர்ந்திடும்? எத்தனை காலந்தான் மனிதரிடையே ஒழுங்கின்மையும் குழப்பமும் ஆட்சி செலுத்திடும்? எத்தனை காலந்தான் முரண்பாடு சமுதாயத்தின் வதனத்தைக் கிளர்ச்சியுறச் செய்திடும்? நம்பிக்கையின்மை என்னும் காற்று, அந்தோ, எல்லாத் திசைகளிலிலிருந்தும் வீசிக்கொண்டு இருக்கின்றது; மனித இனத்தைப் பிளவுறச் செய்து வேதனைப்படுத்திடும் மாறுபட்ட கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வரவிருக்கும் கொந்தளிப்புகள், பெருங்குழப்பங்கள், ஆகியவற்றின் அறிகுறிகள் இப்பொழுது காணப்படுகின்றன; ஏனெனில், வழக்கிலிருக்கும் அமைப்புமுறைகள் வருந்தத்தக்கக் குறைபாடு உடையனவாகத் தோன்றுகின்றன. உலக மக்களை விழிப்புறச் செய்திடவும், அவர்களின் நடத்தை தங்களுக்கு நன்மை செய்யவல்லதாய் ஆவதற்கு உடன்படவும், அவர்களின் நிலைக்குப் பொருத்தமானதனைச் சாதித்திட உதவிடவும் ஆண்டவன், அவரது ஒளி உயர்வு பெறுமாக, அருள் பாலித்திட நான் வேண்டிக் கொள்கின்றேன்.

இதயம் – அன்பின் மையம்


மனிதன் பிறக்கும் போது இயல்பாக பல ஆற்றல்களை உள்ளடக்கியே பிறக்கின்றான். பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐம்புலன்கள் வெளி ஆற்றல்களாகும் மற்றும் பகுத்தறிவு என ஒட்டுமொத்தமாக அழைக்கப்படும் உள் ஆற்றல்கள் ஐந்து உள்ளன. அவையாவன, கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளுதல், ஞாபகம் மற்றும் பொதுப்புலன் எனப்படுவது. இது தவிர மனிதனும் வேறு பல ஆற்றல்களும் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளன.

பஹாய் திருவாக்குகளில் பின்வரும் வாசகம் ஒன்றை காணலாம்:

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்புப் பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”

இதன் காரணமாகவே மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து கொள்ளும் இயல்திறத்தோடு பிறக்கின்றான். மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள ஆற்றல்களிலேயே தன் படைப்பாளரை அறிந்துகொள்ளும் ஆற்றலே மகத்தான முக்கியத்துவம் கொண்டதாகும். ஒரு குழந்தை பிறக்கும் போது எவ்வாறு குறிப்பிட்ட சில இயல்திறன்களோடு பிறக்கின்றதோ, அவ்வாறே அது சில ஆன்மீக ஆற்றல்களுடனும் பிறக்கின்றது. குழந்தைக்கு பால்குடிக்க யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை. பால்குடிப்பது இயல்பான ஒன்று. குழந்தை பிறந்தவுடன் அது இயல்பாகவே பால் குடிக்கும். அதே போன்று கடவுளை, தன்னை படைத்தவரை, அறிந்துகொள்ளும் திறனை மனிதன் இயல்திறமாக பெற்றுள்ளான். ஆனால் பால்குடிக்கும் திறன் போன்று இத்திறன் தானாக வெளிப்படுவதில்லை. அது தக்க கல்வி மூலம் மேம்படுத்தப்பட, பயிற்றுவிக்கப்பட வேண்டும், மற்றும் அது மனிதனின் சுயவிருப்ப ஆற்றலையும் பொருத்த ஒன்றாகும். மனிதன் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவன் தன்னை படைத்தவரை கண்டுகொள்ளவும் வழிபடவும் முடியும். இது கடவுள் வகுத்துள்ள ஒரு மர்மமான விதி.

கடவுளை அறிந்துகொள்ளும் இயல்திறத்தோடு மனிதனுக்கு அன்பு செலுத்தும் இயல்திறமும் உள்ளது. பால்குடிக்கும் ஆற்றல்போன்று இந்த அன்பு செலுத்தும் ஆற்றலை அவனுக்கு யாரும் கற்றுத் தர வேண்டியதில்லை. இந்த ஆற்றல் எங்கும் எப்போதும் எதற்கும் எதன்மீது வேண்டுமானாலும் வெளிப்படும், அதற்கு கட்டுப்பாடு கிடையாது. நல்லதோ கெட்டதோ அது எதை வேண்டுமானாலும் விரும்பும். மண்ணாசை, பெண்ணாசை, பொண்ணாசை ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். அதே போன்று கடவுள் மீது பக்தி கொள்ளவும் முடியும். இது கடவுள் மீது கொள்ளும் ஆசையாகும்.

மனித இதயமே அன்புணர்வின் மையம் என பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன. அதே வேளை தன்னைப் படைத்தவரை அறிந்து அன்புகொள்ளவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதும் பஹாய் போதனையாகும். பஹாவுல்லாவின் பின்வரும் பிரார்த்தனையின் வாயிலாக இதை அறிந்துகொள்ளலாம்:

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர்.

அதாவது மனித படைப்பின் நோக்கமே மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து அவர் மீது அன்பு செலுத்த வேண்டும், மற்றும் அவர் வழியில் நடக்கவேண்டும் என்பதாகும். ஆனால், இந்த நோக்கம் நிறைவேறுவதும் மனிதனின் சுயவிருப்ப ஆற்றலை பொருத்த ஒன்றாகும். மனிதன் தானாக விரும்பி இதில் ஈடுபடவேண்டும். இம்முயற்சிக்கு முறையான ஆன்மீக கல்வி பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், அன்பு செலுத்தவே படைக்கப்பட்டுள்ள மனித இதயம் கடவுளின்பால் திசை திருப்பப்படாவிட்டால் அது வேறு விஷயங்களிலும் திசை திரும்பும் மற்றும் அவற்றின் மீது ஆழ்ந்த பற்றும் கொள்ளும். அன்பு செலுத்தும் ஆற்றல் ஒரு கொடி போன்றது. அதற்கு முறையாக ஒரு கொம்பை ஊண்றி வைத்தால் அது அந்த கொம்பின் மீது படரும். அவ்வாறு செய்யாவிடில் அருகில் எது இருக்கின்றதோ அதன் மீதே அக்கொடி படர்ந்துவிடும். இங்கு பொருளாசை, மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை, அதிகார ஆசை ஆகியவற்றை குறிப்பிடலாம். கடவுள் பக்தியற்ற இதயம் வேறு எதை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும். இத்தகைய ஆசைகள் குறித்து பஹாய் திருவாக்குகளில் பின்வருமாறு காணலாம்:

கருத்தின்மை மற்றும் உணர்வெழுச்சியின் மைந்தர்களே!

உங்கள் இதயங்களில் என்னைத் தவிர வேறு ஒருவர் மீதான அன்பை ஆலயிக்க செய்துள்ளீர்கள், அதனால் என் இல்லத்தில் என் எதிரி நுழைந்திட அனுமதித்து என் நண்பனை வெளியேற்றியுள்ளீர்கள்.

அதாவது நாம் கடவுள் மீது அன்பு செலுத்திட தவறினால் அந்த அன்பு வேறு பக்கம் திரும்பிவிடும். அவை தீய ஆசைகளாகவும் இருக்கலாம். கடவுள் பக்தி அல்லது கடவும் பயம் உள்ள உள்ளம் இத்தகைய ஆசைகளில் பற்று வைக்காது.

கடவுள் மீது நாம் அன்பு செலுத்துவது எப்படி? கடவுளின் படைப்பினங்களின் மீது செலுத்தப்படும் அன்பே கடவுள் மீது நாம் காட்டக்கூடிய அன்பாகும். பிறருக்காக நாம் செய்யும் சேவைகள், நமது நற்செயல்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் அமைந்தால் அதுவே கடவுளின் மீது நாம் கொள்ளும் அன்பின் வெளிப்பாடாகும். இதனால்தான் உலகெங்கிலும் உள்ள பஹாய்கள், தாங்கள் வாழும் இடங்களிலெல்லாம் பலவிதமான சேவைகளில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக, குழந்தைகளுக்கு கல்வி, ஆன்மீக கல்வி, வழங்கும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். சிறு வயதிலேயே குழந்தைகள் தங்கள் பிறவியின் நோக்கத்தை புரிந்துகொண்டால் அவர்கள் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்களுக்கும் உலகுக்கும் பயன்தரும் வாழ்க்கையை வாழலாம். இந்த உலகமும் அதன் வாயிலாக சிறுக சிறுக சீர்திருத்தம் பெறும்.

கம்போடியா – ஒரு கண்ணோட்டம்


கம்போடிய பஹாய் இளைஞர்கள்
கம்போடிய பஹாய் இளைஞர்கள்

கம்போடியாவில் பஹாய் சமயம் அறிமுகமாகி அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும். அதன் வளர்ச்சி இடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த பஹாய்களில் பலர் பட்டினி, நோய் மற்றும் கொல்லப்பட்டும் இறந்து போயினர். சுமார் 15 வருட காலமாக மீண்டும் ஒரு பஹாய் சமூகம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய 10,000 உறுப்பினர்கள் கொண்ட இச்சமூகம் கிபி 2000 க்குப் பிறகே சீரான மறுவளர்ச்சி கண்டது. அந்த நாட்டில் பஹாய் போதனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்கூடு. இது எதனால் என்பதை ஆராயும்போது அந்த நாட்டு மக்கள் கெமேர் ரூஜ் அரசாங்கத்தின் கீழ் அனுபவித்த கொடுமைகளே இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது தெளிவாகும்.

tuol sleng
கெமேர் ரூஜ் ஆட்சியில் குழந்தைகள் வதை

சுமார் 1.3 கோடி மக்களைக் கொண்ட கம்போடியா ஏறக்குறைய 30 ஆண்டுகள் போராலும், வன்முறைகளாலும் சீரழிக்கப்பட்ட, 20ம் நூற்றாண்டில் எங்குமே நடைபெறாத அட்டூழியங்களை அனுபவித்த நாடாகும். 20 லட்சம் மக்களுக்கு மேல் பசியாலும், கொடுமைகளாலும், கொல்லப்பட்டும் மடிந்தனர். இக் கொடுமைகளுக்கு மூலகாரணமாக விளங்கியது “கெமேர் ரூஜ்” எனப்படும் ஓர் இயக்கமாகும். கம்யூனிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் நாட்டைக் கைப்பற்றி மறுசீரமைப்பு எனும் பெயரில் முதலில் கல்வி கற்றோரையும், பிரபலமானவர்களையும் கொன்றனர். அறிவுடையோரும் ஆற்றல் பெற்றோரும் அரசாங்கத்தின் எதிரிகளாக காணப்பட்டனர். எல்லாவித நூல்களும் பிரசுரங்களும் தடை செய்யப்பட்டு பிறகு அழிக்கவும் பட்டன. ஒரு முழு தலைமுறையினர் கல்வியற்றும், போர், பட்டினி, நோய் போன்றவையல்லாது வேறெதனையும் அறியாதே வளர்ந்தனர். கல்விமுறை கிட்டத்தட்ட அறவே இல்லாமலேயே போய், கோடிக்கணக்கில் மக்கள் எழுத்தறிவின்றி வாழ்ந்தனர். தற்போதுள்ள அரசாங்கம் கல்விமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் இன்றும் கல்வி பெறுவதில் சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர்.

tuol sleng
தொல் சிலேய்ங் - இங்குதான் ஆயிரக்கணக்கில் கம்போடியர்கள் கொலை செய்யப்பட்டனர்

கம்போடியா பெரும் குழப்பங்களைச் சந்தித்தது என்பது பொதுவாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந் நாட்டு மக்கள் அக்காலத்தில் குறிப்பாக என்ன நிலைக்கு ஆளாகினார்கள் என்பது பலருக்குத் தெரியாது. மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக படையெடுத்த போதுதான் கம்போடியவில் என்ன நடந்தது என்பது நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் கடல் மார்க்கமாகவும், நில வழியாகவும் லட்சக் கணக்கில் அகதிகளாக சென்றனர். இப்படி நில வழியாகஓடுபவர்களை தடுப்பதற்காவும் எதிரிகளை தடுத்து நிறுத்துவதற்காகவும் கம்போடியாவின் பல பாகங்களில் கெமேர் ரூஜ்ஜின் நில கன்னி வெடிகள் இன்றளவும் புதைந்த வன்னம் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும் என அவற்றை தோன்றி எடுக்க உதவி செய்யும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.

killing fields
கொலை வயல்கள் - இங்குதான் கொலைசெய்யப்பட்டோர் புதைக்கப்பட்டனர்

இந்த நிலவெடிகள் பதிக்கப்பட்டு 30 வருடங்களானாலும் அவை இன்றும் பல உயிர்களை பலி வாங்கியும் பலர் கால்கள் ஊனமுற்று போகவும் காரணமாக இருக்கின்றனர். கம்போடியாவுக்கு சுற்றுப்பயனிகளாக செல்வோர் பொய்க்கால்கள் பொருத்தியும் அல்லது கால்களை இழந்து குச்சிகளை ஊனிக்கொண்டு கையேந்தி பிச்சையெடுக்கும் பலரைக் காணலாம். பத்தம்பாங் நகரில் அரசியல் சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியோடு நிலவெடிகளுக்கு பலியாவோருக்கு மருத்துவ உதவி வழங்குவற்கெனவே ஒரு மருத்துவசாலை இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

ஹிட்லரின் அரஜகத்தையும் மிஞ்சும் வகையில் கெமேர் ரூஜின் அரசியல் கைதிகள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம் ஒன்று ப்னொம் பென்ஞ் நகரில் உள்ளது. மாவ் சீ தொங் சாலைக்கு அருகில் “தொல் சிலேங் மியூசியம்” என ஓரிடம் உள்ளது. ஒரு காலத்தில் உயர்நிலைப் பள்ளியாக இயங்கிய அக்கட்டிடம் கெமேர் ரூஜ் படைகளால் அது ஒரு சிறைச் சாலையாக மாற்றப்பட்டு அரசியல் கைதிகள் பலர் இங்கு அடைக்கப்பட்டனர் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.

skeletal remains
இறந்தோரின் எலும்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

இந்த கெமேர் ரூஜ் அராஜகத்தின் மேலும் ஒரு அடையாளமாக “கில்லிங் ஃபீல்ட்ஸ்” எனப்படும் கொலைவயல்கள் உள்ளன. கெமேர் ரூஜினரின் கைகளில் உயிரிழந்தோர், புதைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட குழிகளுக்கு இப் பெயர் வைக்கப்பட்டது. கம்போடிய தலைநகருக்கு அருகில் செங் எய்க் எனப்படும் இடத்தில் இத்தகைய குழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. கம்போடியா முழுவதும் ஆங்காங்கே உள்ள இக் குழிகளில் கிடந்த மனித எலும்புக்கூடுகள் இன்று அவ்விடங்களிலேயே மக்களின் பார்வைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பெரியவர்கள் மட்டும் இன்றி குழந்தைகளும் இந்த தொல் சிலேங் சிறையில் உயிரழந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பங்கள் பிரிக்கப்பட்டு மறுகல்வி எனும் பெயரில் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.

kalki temple
கல்கிக்கு கட்டப்பட்ட கோவில்

இன்றைய நிலையில் நாடு சற்று மோசமான நிலையில் இருந்தாலும், அதன் கடந்த கால வரலாறு மகோன்னதம் மிக்கதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேல் “துன்லே சாப்”எனப்படும் பெரும் ஏரியின் கரையோரங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மாபெரும் நகரமே இந்த அங்கோர் வாட் ஆகும். “அங்கோர்” என்றால் நகரம் மற்றும் “வாட்” என்பதன் அர்த்தம் விஹாரம் அல்லது கோவில் என்பதாகும். அதாவது கோவில் நகரம் என இதனை கூரலாம். அதன் உச்சநிலையில் அங்கோர் நகரம் சுமார் 10லட்சம் மக்களைக் கொண்டிருந்த ஒரு பெரும் நாகரிகமாக விளங்கியது. ஐரோப்பா கண்டம் நாகரிகத்தின் விடிவெள்ளியைக் கூட எட்டிப் பிடிக்காத நிலையில் கம்போடிய நாட்டில் 10 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் நகராக, சிறந்த நீர்ப்பாய்ச்சலும், சாலை போக்குவரத்து வசதிகளும் நிறைந்த ஒரு நகராக அங்கோர் விளங்கியது. இதன் மன்னர்களில் தலையாய மன்னனாக 7வது ஜெயவர்மன் எனும் ஒரு மன்னன்

kalki
கல்கியின் உருவச் சிலை - இப்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளது

விளங்கினான். இவன் காலத்தில் அங்கோர் புகழின் உச்சத்தில் இருந்தது. தற்போதைய கெமேர் மொழிக்கான அஸ்திவாரத்தை அமைத்தவன் இந்த அரசனே. இந்த அங்கோர் நகரத்தில் கோவில்கலிலேயே தலைசிறந்ததும் மிகப் பெரியதுமாக அங்கோர் வாட் கோவிலே விளங்கியது. தற்போது அங்கோர் கோவில் ஒரு புத்த கோவிலாக மாறியிருந்தாலும் அது ஒரு விஷ்ணு ஆலயமாகவே ஆரம்பத்தில் கட்டப்பட்டது. அங்கோர் வாட்டில் இன்றும் இந்து தெய்வங்களின் வடிவங்கள் அதன் சுவற்றில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அங்கோர் வாட்டிற்கு அருகில் உள்ள அங்கோர் தோம்மில் சிவலிங்க சிலைகள் இன்றும் உள்ளன. இந்த அங்கோர் தோம் நான்கு முகங்களான சிலைகளைக் கொண்ட கோவிலைக் கொண்டது. இந்த நான்கு முக சிலைகள் பிரம்மாவின் உருவங்கள் என ஒரு காலத்தில் எண்ணப்பட்டதுண்டு ஆனால் அவை 7வது ஜெயவர்மனின் உருவங்களே என இப்போது அடையாளங் காணப்பட்டுள்ளது. கம்போடியா முழுவதும் நூற்றுக்கணக்கில் இவை போன்ற பல கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கம்போங் தோம் அருகில் உள்ள சம்போர் பிரேய் கொக் எனும் இடத்தில் அங்கோரைவிட பழமை வாய்ந்த பல பாழடைந்த கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் அங்கு கல்கி விஷ்ணு யாஷாவிற்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதுதான். விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகிய கல்கியின் இந்த உருவச் சிலை இன்று பிரான்ஸ் நாட்டில் உள்ளது. ஆனால் கோவில் சிதைந்த நிலையிலிருந்து சீரமைப்பு பெற்று வருகிறது.

kalki restoration
கல்கி கோவிலின் மறுசீரமைப்பு பணி

சுருங்கக் கூறப்போனால் ஒரு பெரும் நாகரிகத்தைக் கொண்டிருந்த நாடாக கம்போடியா ஒரு காலத்தில் விளங்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மக்கள் மிகச் சிறந்த கலைஞர்களாக, சிற்பிகளாக இருந்துள்ளனர். தென்கிழக்காசிய கலாச்சாரம், கலைகள் கம்போடியாவிலிருந்தே உதித்தவை என்பதிலும் சந்தேகமில்லை.

பிணைப்புகள்


பெரும்பாலும் கிராமப்புரங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் இன்று சமுதாய மேம்பாட்டின் பயனாக சிறிது சிறிதாக வெளிநகர் பகுதிகள் அல்லது அது போன்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர். கடந்தகாலத்தில் கூட்டு வாழ்க்கை என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தது.  ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ளோரோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தான். ஆனால் இன்று அது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. தன் பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் யார் என்பது கூட தெரியாமல் வாழ்கிறார்கள். பிணைப்புகள் சிறிது சிறிதாக தோய்ந்துகொண்டிருக்கின்றன.

மனிதன் தன் வாழ்க்கை சூழ்நிலையோடு இரு விதத்தில் பிணைக்கப்பட்டுள்ளான். ஒன்று, பௌதீகம் மற்றது ஆன்மீகம். ஒன்று பொருள் சார்ந்தது, மற்றது ஆவி சார்ந்தது.

முதலாவதாக, மனிதன் தன் பிறப்பிற்கு முன் தாயின் கர்ப்பத்தில் தொப்புள் கொடியின் வாயிலாக தன் தாயோடு மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தான். அந்த கர்ப்ப உலகில் அவனுக்கு தேவைப்பட்ட ஊட்டம் அனைத்தும் அவன் தன் தாயோடு கொண்டிருந்த அந்த பிணைப்பின் வாயிலாக அவனுக்கு கிடைத்து வந்தது மற்றும் அப்பிணைப்பின் வாயிலாகவே அவன் வளர்ச்சியும் அடைந்தான். ஆனால், கர்ப்ப உலகில் தொப்புள் கொடியின் பிணைப்பு அறுபட்டால், குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு துண்டிக்கப்பட்டால், குழந்தை மடிந்துவிடும்; அதற்கு மாற்று கிடையாது. மேலும் கூறப்போனால், மனிதன் கர்ப்ப உலகில் எப்போதுமே தன்னிச்சையாக வாழவில்லை, வாழவும் முடியாது. கர்ப்ப உலகில் குழந்தைக்கு தன்னிச்சையென்பது இறப்பிற்கு சமமாகும்.

இரண்டாவதாக, பிறப்பிற்கு பின் தக்க வயது வந்து அக்குழந்தை தன் வாழ்வை தானே நிர்ணயித்துக்கொள்ளும் காலம் வரை தாய்க்கும் சேய்க்கும் உள்ள தொடர்பு வேறு வகைகளில் நீடிக்கின்றது. மனிதன் கர்ப்ப உலகிலிருந்து இயலுலகிற்குள் பிரவேசிக்கும் போது தொப்புள் கொடி அறுபடுகிறது. தாய்க்கும் சேய்க்கும் உள்ள பௌதீக தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால், எல்லா தாய்மார்களுக்கும் இயல்பாகவே உள்ள தாய்-சேய் இயல்புணர்வான மற்றும் ஆன்மீக ரீதியான இணைப்பு தொடர்கிறது, அது தாயன்பாக, பாசமாக வெளிப்படுகிறது. தாய் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாள், உணவூட்டுகிறாள், குழந்தையின் நலனை பேணிப் பாதுகாக்கிறாள், அக்குழந்தைக்கு கல்வியளிக்கின்றாள். தொப்புள் கொடியின் இணைப்பைப்போல் இத்தகைய ஆன்ம இணைப்பும் அதன் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த இணைப்பு இறுக்கமாக இருக்கும் வரை குழந்தையின் உடல்நலன், மனநலன், ஆன்மநலன் யாவும் அதன் தாயின் மூலமாக பாதுகாக்கப்படுகின்றன.

தாய்க்கும் சேய்க்கும் இருக்கும் இந்த இரண்டாவது வகையான பிணைப்பைப் போன்றே மனிதன் இயலுலகோடு பிணைக்கப்பட்டுள்ளான். பௌதீக ரீதியில் அவனுக்கு தேவைப்படும் யாவும் இப்பூமியின் வாயிலாகவே அவனுக்கு கிடைக்கின்றது. உணவு, நீர், பிராணவாயு போன்றவற்றை நாம் இங்கு முக்கியமாக குறிப்பிடலாம். மனிதன் உயிரோடு இருக்கும் வரை அவன் இப்பிணைப்பிலிருந்து தப்பிக்க முடியாது. படைப்புலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஓரிடம் உள்ளது, ஆனால் அது தன்னிச்சையானது அல்ல. மனிதன் தன் சூழ்நிலையோடு, தன்னினைவில்லாமல் பிணைக்கப்பட்டுள்ளான். உதாரணமாக, காற்று மண்டலத்தை விட்டு மனிதன் பத்தே நிமிடங்கள் அகன்றால் அவன் நிலை என்னவாகும்? இதுதான் அவனுடைய மெய்ம்மை.

தாயையும் சேயையும் இணைக்கும் தொப்புள் கொடி போன்றே கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஓர் பிணைப்பு உள்ளது. அது ஓர் ஆன்மீக, உறுதிமிகு பிணைப்பாகும். ஆனால், இங்கு ஒரு வேறுபாடு உள்ளது. கர்ப்பத்தில் தாயோடு கொண்டிருக்கும் சேயின் பிணைப்பு தன்னிச்சையானதல்ல. குழந்தை என்னதான் முயன்றாலும் அப்பிணைப்பை தானே துண்டித்துக்கொள்ள முடியாது. ஆனால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பிணைப்பு மனிதனின் விருப்பத்தை பொறுத்த ஒன்றாகும். மனிதன் விரும்பினால் மட்டுமே அவன் அந்த ஆன்மீகத் தொடர்பில், பிணைப்பில் ஈடுபடமுடியும். இது கடவுள் மனிதனுக்கு வழங்கியிருக்கும் பல ஆற்றல்களில் ஒன்றான தன்விருப்ப ஆற்றல் குறித்ததாகும் (free-will).

இந்த இரண்டாவது வகையான இணைப்பின் வாயிலாகவே மனிதன் தன் பிறப்பின் இரகசியத்தை, படைப்பின் குறிக்கோளை. தான் யார் என்பதையும் தன் வாழ்நாளில் தான் ஆற்ற வேண்டிய மற்றும் கற்க வேண்டியவற்றை புரிந்துகொள்ளமுடியும். பஹாவுல்லா இப்பிணைப்பு குறித்து பின்வரும் திருவாக்கை வழங்கியுள்ளார்:

உயிருருவின் புத்திரனே! என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.

அடுத்து, கடவுளோடு நாம் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது மற்றும் அவர்மீது அன்புகொள்வது எவ்வாறு எனும் கேள்வி நம் மனதில் எழக்கூடும். ஒருவரை அறவே அறிந்துகொள்ளாமல் அவர்மீது அன்பு ஏற்படுவது அறிது. கடவுள் மீது எவ்வாறு அன்பு ஏற்படும்? இதற்கு பதில், ஒரு குழந்தை தான் பிறக்கும் போதே தாய்ப்பால் குடிக்கும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருக்கின்றது. இதை யாரும் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. அதே போன்று மனிதன் தன்னை படைத்த கடவுளை அறிந்து கொள்ளும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருக்கின்றான் என பஹாவுல்லா கூறுகின்றார்.

உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து பாராட்ட முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும். அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்?

தகுந்த கல்வியின் மூலம் மனிதன், கடவுளை அறிந்துகொள்ளும் ஆற்றல் உட்பட, தான் இயல்பாகவே பெற்றிருக்கும் ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ளமுடியும், கடவுளை அறிந்துகொள்ள முடியும் மற்றும் தன் படைப்பின் நோக்கத்தை தெரிந்துகொள்ளவும் முடியும். ஆனால், அது அவன் விருப்பத்தை பொருத்த ஒன்றாகும். மனிதனாக விரும்பினால் அன்றி அவன் தன் படைப்பாளரோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

பால்மை சமத்துவம் குறித்த பஹாய் விளக்கம்: ஓர் அடிப்படை ஆன்மீக உண்மை


May Lample
Program Officer at the Institute for Studies in Global Prosperity

http://www.huffingtonpost.com/may-lample/equality-of-women-and-men_b_791230.html

நான் என்றுமே பெண்கள் மற்றும் ஆன்களின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவளாகவே இருந்துவந்துள்ளேன். பஹாய் சமய விசுவாசிகள் எனும் முறையில் சிறு வயது முதற்கொண்டே எனக்கு என் பெற்றோர்கள் போதித்து வந்துள்ள அடிப்படை கோட்பாடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவமும் ஒன்று.

பஹாய் சமயத்தின் ஸ்தாபக அவதாரமான பஹாவுல்லா பின்வருமாறு விளக்குகிறார்: “பெண்களும் ஆண்களும் கடவுளின் பார்வையில் என்றுமே சமமானவர்களாக இருந்துவந்துள்ளனர் இனியும் அவ்வாறே இருந்துவருவர்.” பஹாய் புனித வாக்குகளில் பெண்களும் ஆண்களும் ஒரு பறவையின் இரு சிறகுகளோடு ஒப்பிடப்படுகின்றனர். ஒரு சிறகு சற்று பலவீனமாக இருந்தால் அப்பறவையால் பறக்கமுடியாது. இரு சிறகுகளும் முற்றாக முதிர்ச்சி பெறாத வரையில் அப்பறவையால் பறக்க முடியாது. அதே போன்று, பெண்களும் ஆண்களும் தங்களின் முழு ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ளாத வரை உலகம் செழிப்புற வாய்ப்பு ஏற்படாது

என் சிறு வயதில், நான் எங்கும் சமத்துவத்தை கண்டேன் — பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளுமாக ஓடி விளையாடி விளையாட்டில் ஈடுபட்டும், வகுப்பு கலந்தாலோசனைகளில் பெண்கள் சுதந்திரமாகவும் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு வகுப்பில் சமபங்கில் பெண்களும் ஆண்களுமாக ஈடுபட்டும் இருந்தனர். பால்மை சமத்துவம் என்னுள் வெகுவாக ஊறிப்போயிருந்தபோதும், அது உண்மையில் என்ன என்பதை அப்போது நான் அறிந்திருக்கவே இல்லை என்பதை பல வருடங்களுக்குப் பிறகே உண்ர்ந்துகொண்டேன்

என் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பெண்கள் முன்னனியில் இருந்தார்கள் என்பதால் மட்டும் சமத்துவம் நிலவியது என அர்த்தப்படாது என என் கல்லூரி நாட்கள் வரை எனக்கு புரியவில்லை.பெண்களும் ஆண்களும் ஒன்றாக ஓடி விளையாட்டுகளில் ஈடுபட்டனர் என்பது பெரும்பாலும் பெண்கள் இறுதியில் வேறுவழியின்றியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுடைய திறன்கள் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன அல்லது கல்லூரி இறுதியாண்டில் வகுப்புகள் பால்மை அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் அல்லது தொழில்துறையில் ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கும் சம ஊதியம் கிடைக்கும் என்பதும் நிச்சயமல்ல.

என் குறுகிய உலகில் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வளங்கள் மற்றும் வாய்ப்புகள் கிட்டுவதனால் மட்டும் பரந்த வெளியுலகில் உண்மை நிலவரம் அதுபோன்றதே என்பது அர்த்தல்ல என்பதை நான் உணரத்தவறிவிட்டேன். என்னைச் சுற்றிலும் பால்மை சமத்துவத்திற்கான அறிகுறிகள் தென்பட்டபோதிலும், குறிப்பாக, எல்லாருமே பெண்களும் ஆண்களும் சமமானவர்கள் எனும் அறிவோடு வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள் எனும் யூகத்தோடு நாம் பார்த்தபோதிலும், நமது ஸ்தாபனங்களிலும் சிந்தனாமுறைகளிலும் சமத்துவமின்மை ஆழப்பதிந்துவிட்டது என்பது எனக்கு அப்போது புரிந்தது, மற்றும் அச் சமத்துவமின்மையை எதிர்ப்பதற்கு, சமத்துவநிலை ஏன் முக்கியப்படுகிறது என்பதையும் அதை நடைமுறைபடுத்திட தேவைப்படும் புரிந்துகொள்ளல்கள் யாவை என்பதும் எனக்கு அப்போது தெளிவாகியது.

சமத்துவம் குறித்த நமது புரிந்துகொள்ளலில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, பெண்களை ஆண்களின் நிலைக்கு மேம்படுத்திடும் ஒரு கருத்திலேயே அது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு விளைவுகள் உண்டாகும். ஒன்று, ஆண்கள் மேம்பாடு கண்டுவிட்டனர் எனும் எண்ணம்; அவர்கள் இப்போது உள்ளபடி முழுமை பெற்ற நிலையில் இருக்கின்றனர் என்பது. இரண்டு, இந்த கருத்து இருபாலரின் இடையே போட்டா போட்டியை உருவாக்கிவிடும், அதாவது, ஆண்களிடம் அதிகாரம் உள்ளது மற்றும் அவர்கள் அதை பெண்களுக்காக சிறிது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது (அல்லது பெண்கள் ஆண்களைவிட அதிக அதிகாரம் பெற போராட்டம் நடத்த வேண்டும்). இது இருபாலரிடையேயும் தேவையற்ற ஓர் இருமைப்பிளவை உருவாக்கிவிடும். சமத்துவத்தை புரிந்துகொள்ள லௌகீக அளவைகளை பயன்படுத்துவது பெண்களையும் ஆண்களையும் பெரும்பாலும் ஓர் குறுகிய எல்லைக்குள் அடக்கிவிடும்.

நமது தனித்தன்மையை பொருத்தவரை, வெளித்தோற்றத்திற்கும் மேல் வேறு விஷயங்கள் உள்ளன என்பதை கண்டுகொள்வதானது மனித இயல்பு மற்றும் சமத்துவம் என்றால் என்ன என்பது குறித்த நமது அறிவை மேலும் விசாலப்படுத்திடும். பரோபகாரம், அன்பு மற்றும் கருணை போன்ற ஆன்மீகப் பண்புகளை வெளிப்படுத்திடக் கூடிய தனிமனிதனின் உள்ளாற்றலில் வீற்றிருக்கும் அடிப்படையான மனித தனித்தன்மைக்கு பால், இனம், குடிநிலை அல்லது பௌதீக அல்லது சமூக வேறுபாடுகள் கிடையாது. மனிதர்கள் அனைவரிடமும் உள்வீற்றிருக்கும் ஆன்மீக இயல்பை கண்டுகொண்டு அவர்களின் தனித்தன்மை குறித்த எல்லா அம்சங்களின் வாயிலாக ஆன்மீக களிப்புணர்வு அடைவது சாத்தியப்படுகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே பெளதீக ரீதியில் வேறுபாடுகள் உண்டு மற்றும் அவர்கள் இருவரும் உலகை நுகரும் முறையின் மீது இவ்வேறுபாடுகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருந்தபோதும் சாரத்தில், அவர்களை வரையறைக்கும் பண்புகளிலும் உள்ளாற்றல்களிலும் அவர்கள் வேறுபாடுகள் அற்றவர்கள். குறுகிய முறையில் சில குறிப்பிட்ட பௌதீக அல்லது சமூக தனிப்பண்புகளோடு அடையாளப்படுத்திக்கொண்டு அவற்றை ‘அகம்’ குறித்த நமது புரிந்துகொள்ளலின் நடுமையமாக கொள்வது பெண்கள் மற்றும் ஆண்கள் மீது பேரழிவு மிக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே நிலவும் சமத்துவமின்மையை அகற்றிடவும் ‘அகம்’ பற்றிய புரிந்துகொள்ளலை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி ஒரு வழியாகும். உலகம் முழுவதும், தங்கள் குழந்தைகள் அவர்களின் உண்மை இயல்பை விளங்கிக்கொள்ள பஹாய் பெற்றோர்கள் அவர்களுக்கு கல்வியளிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். பெண்கள் இப்போதும் கூட பாகுபாட்டிற்கு உட்பட்டிருக்கும் நாடுகளில் கூட, தங்கள் பெண்பிள்ளைகள் கல்வி பெறுவதை உறுதிபடுத்திடுவதன் வழி இப் பஹாய் கோட்பாட்டை செயல்படுத்திடும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு மட்டுமே கல்வியளிக்க முடியும் எனும் சூழ்நிலையில், குடும்பத்தின் முதல் ஆசிரியை எனும் முறையில் தங்கள் பெண் குழந்தையையே பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஆன்களும் பெண்களும் சம நிலையில் சமூக மேம்பாடு குறித்த அச்செயற்பாட்டில் பங்கேற்க இயலும் வரை சமூக மேம்பாடு அடையப்படவே முடியாது என பஹாய் திருவாக்குகள் விளக்குகின்றன. மேலும், பெண்களின் சமத்துவத்தை மேம்படுத்தும் கடமை ஆண்களுக்கும் உண்டு, ஏனெனில் அவர்களின் விதி பெண்களின் நலனோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் பெண்களின் மேம்பாடு பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல மற்றும் அதனை அடைவது ஆண்களின் முழு பங்கேற்பையும் பரிந்துரையையும் சார்ந்துள்ளது. “உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் இருக்கின்றன; சமய ரீதியிலும் சமூகத்திலும் அவர்கள் முக்கிய அம்சங்களாவர். பெண்கள் தங்களின் அதி உயர்ந்த நிலையை அடைவதிலிருந்து தடுக்கப்படும் வரை, ஆண்கள் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள பெருமையை அதுவரை அடையவே முடியாது.

பால்மை சமத்துவத்திற்காக செயல்படும்போது, அதை ஒரு நடைமுறையான கருத்தாக கொள்ளாமல், ஓர் அடிப்படை கோட்பாடாக கருதும்போது, அது ஓர் அவசரத்தேவையாக பின்தொடரப்படுவதும் சரி சமத்துவத்தின் இறுதி இலக்கின் நிலையும் சரி அவை இரண்டும் ஓர் ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளாகும். மேலும், இந்த புரிந்துகொள்ளல் பெண்ணும் ஆணும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டுகொள்ளவும் உதவிடும்.

இருந்தும், பெண்கள் இன்று எதிர்நோக்கும் பாகுபாடு நோயுற்றிருக்கும் ஓர் உலகின் பல நோய்க்குறிகளுள் ஒன்றாகும். பல சமகால சமூக ஸ்தாபனங்கள், கட்டமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் சமத்துவமின்மையை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன மற்றும் இச் செயற்பாடுகளில் செயல்படும் மக்கள் கட்டுப்பாடுகளையும் அரசியல் சவால்களையும் எதிர்நோக்குகின்றனர்.

இத்தகைய சவால்களை வெற்றிகொண்டு பால்மை சமத்துவம் உண்மையாகவே செயல்படுத்தப்படுவதை காண தற்போது நிலவும் உலக நிலைமையை நீட்டித்துக்கொண்டிருக்கும் உலகின் சமூக அமைப்புமுறைகள் மற்றும் உலக கண்ணோட்டங்களுக்கு பின்தாங்கலாக இருக்கும் யூகங்களை நாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒற்றுமை மற்றும் நீதியை மேம்படுத்திடும் வகையில் ஸ்தாபனங்களையும் சமூக வழக்கங்களையும் நாம் மறுகட்டமைப்புக்கு உட்படுத்திடவும் வேண்டும். குடும்பம், சமூகம், காரியாலயங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்கள் குறித்த சூழ்நிலையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கிடையிலான உறவுகள் மறுவறையரை செய்யப்பட வேண்டும். இந்த ஒவ்வொறு உறவுகளும் பரிணாம வளர்ச்சி கண்டுவரும் மானிடத்தின் பொது ஆன்மீக இயல்பின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்படவும் வேண்டும். இது நிறைவேற்றம் காண, ஒரு புதிய சமூக கட்டமைப்பை உருவாக்கு தேவைப்படும் ஆன்மீக கோட்பாடுகளை அமல்படுத்திட அவர்கள் ஒன்றாக செயல்பட வேண்டும் மற்றும் இக்கட்டமைப்பு அமைதி, நீதி, கூட்டு மேம்பாடு ஆகியவற்றால் தனிச்சிறப்பு பெற்றிருக்க வேண்டும்.

இச்செயல்பாட்டின் ஓர் ஆங்கமாக இக்கருத்துக்களை கலந்தாலோசனை செய்திடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படத்தப்பட வேண்டும். மக்கள் பால்மை சமத்துவம் பற்றிய பிரச்சினைகள் குறித்த தங்கள் எண்ணங்களையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு ஊக்குவிப்பாக “சமத்துவத்தை உருபெறச்செய்தல்” எனும் ஒரு வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைப்பதிவு ‘Institute for Studies in Global Prosperity (ISGP)’,எனும் ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட, “பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை நோக்கி முன்னேறுதல்” எனும் ஒரு சாசனத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது.

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே


வள்ளலார் இராமலிங்கரின் பாடல் ஒன்றில் பின்வரும் வரிகளைக் காணலாம்:

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே

வள்ளலார் இராமலிங்கர் இப்பாடலை சாதி மற்றும் சமய அடிப்படையில் பாடியிருந்தபோதும் இப்பாடலின் பொது கருத்து மனிதர்கள் எவ்வாறு மனிதவாழ்வின் மைய குறிக்கோளை மறந்துவிட்டு தேவையற்ற பிரச்சினைகளில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறித்ததாகும். சாதி மற்றும் சமய சண்டைகள் பெரும்பாலும் குறைந்துவிட்டிருந்தாலும் இன்று பொருளாதார ரீதியிலான ‘போர்கள்’ மனிதவாழ்வை ஆக்கிரமித்துள்ளன. இராமலிங்கரின் இப்பாடல் சாதி மற்றும் சமயம் தவிர பொருளாதார ரீதியிலும் இன்று பொருந்தக்கூடிய ஒன்றாகும்.

ஆங்கிலத்தில் ‘rat race’ எனும் ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை போட்டி போட்டுக்கொண்டு ஊதியம் தேடுவதிலும், செல்வம் சேர்ப்பதிலும், சுகபோகங்களை அடைவதிலும் செலவிடுகின்றனர். பயனீடு (consumerism) எனும் புதிய சமயம் இன்று மனிதர்களில் வாழ்வை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளது. காலையிலிருந்து மாலை வரை மனிதர்களின் வாழ்க்கை இதன் அடிப்படையில் செலவிடப்படுகின்றது. அடிப்படை தேவைகளுக்கு ஊதியம் தேடுவது இன்றியமையாததுதான் ஆனால், இன்று அதற்கும் மேலாக வாழ்க்கை சௌகரியங்களை தேடுவதையும் செல்வம் சேர்ப்பதையும் வாழ்க்கையின் இலட்சியமாக கொண்டுவிட்ட பெரும்பாலான மனிதர்களை காண்கின்றோம். மனிதப்படைப்பின் நோக்கமே லௌகீக இலாபங்களை அடைவதற்கே எனும் தோற்றத்தை மனிதர்களின் இக்கால வாழ்க்கைமுறை ஏற்படுத்துகின்றது.

பஹாவுல்லாவின் திருவாக்குகளில் பின்வரும் ஒரு குறிப்பை காணலாம்:

கூறுங்கள்: இதை உணர்ந்துகொள்வோராயின், நீங்கள் இம்மை வாழ்வு மற்றும் அதன் படாடோபங்களை தேடுவோராயின், அவற்றை நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பப் பையால் சூழப்பட்டிருந்த போதை தேடியிருக்க வேண்டும், ஏனெனில் அவ்வேளை நீங்கள் அவற்றை தொடர்ந்தாற்போல் அனுகிக்கொண்டிருந்தீர்கள். மாறாக, நீங்கள் பிறந்ததிலிருந்து முதிர்ச்சியடைந்தது வரை, உலகிலிருந்து பின்வாங்கிக்கொண்டும், புழுதியை நோக்கி விரைந்துகொண்டும் இருக்கின்றீர்கள். உங்கள் வாழ்நாள்கள் கணக்கிடப்பட்டும், உங்கள் வாய்ப்புகள் ஏறத்தாழ கைநழுவியும் போகும் வேளை உலகின் பொக்கிஷங்களை குவிப்பதில் ஏன் இத்தகைய பேராசையை வெளிப்படு்த்துகிறீர்கள்? அக்கறையற்றோரே, நீங்கள் உங்கள் தூக்கத்திலிருந்து விழிப்புற மாட்டீர்களா?

பஹாவுல்லா, SLH_5.40, p”CURSOR:-202

நாம் ஓரிடத்திற்கு சென்று வாழவேண்டுமென்றால் அங்கு வெறுங்கையுடன் சென்று வாழமுடியாது. தேவையான பொருள்வசதிகளை சேகரித்த பிறகே அங்கு செல்ல வேண்டும். ஆவது ஆகட்டும் அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தால் பிறகு விளைவு ஆபத்துதான். இது பொது அறிவு. அதே போன்று வாழ்க்கையின் குறிக்கோள் இவ்வுலகில் வசதியாக வாழ்வது மட்டுமே என்றிருந்தால் இவ்வுலக வாழ்வுக்கு தேவையானவற்றை நாம் பிறக்கும் போதே கையோடு கொண்டு வந்திருக்க வேண்டும்.இங்கு வந்த பிறகு பொருள் சேர்ப்பதில் வாழ்நாட்களை விரையம் செய்து பிறகு மாண்டும் போகின்றோம். சேகரித்த சுகபோகங்களை முழுவதாக அனுபவிக்கக்கூட முடியாமல் போகின்றது. அப்படியென்றால் மனிதப் பிறப்பின் நோக்கம்தான் என்ன?

இது குறித்து பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதை பார்ப்பதற்கு முன் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தை ஆராய்ந்து பார்ப்போம். அந்த அத்தியாயம் முழுவதும் வாழ்வும் மரணமும் பற்றியது. தன் மகனான அபிமன்யுவை இழந்து தவிக்கும் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்னர் ஆன்மாவைப் பற்றியும் மறுமை உலகைப் பற்றியும் அளிக்கும் உபதேசம் அதில் காணப்படுகிறது. மனிதனுக்கு இரண்டு இயல்புகள் உள்ளன. ஒன்று மிருக இயல்புடைய அவனுடைய உடல் மற்றது ஆன்மீக இயல்புடைய அவனது ஆன்மா. ஸ்ரீ கிருஷ்னர் தமது உபதேசத்தில் உடல் அழியும் ஆனால் ஆன்மா அழியாது என்பது குறித்து அர்ஜுனனுக்கு அறிவுரை வழங்குகிறார்.

மனிதன் இவ்வுலக வாழ்விற்கு தேவையானவற்றை உழைத்து சம்பாதிக்கவேண்டும். அது தவிர்க்கவியலாதது. இது இவ்வுலக வாழ்வின் முடிவு வரை தேவைப்படும் ஒன்று. ஆனால், இதற்கும் மேலாக மனிதனின் ஆன்மாவுக்கும் மனிதன் சேகரிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. இது மனிதனின் உயிரை பாதுகாப்பதற்கும் மேல் முக்கியமானதாகும்.

ஆன்மா சம்பந்தமான பஹாவுல்லாவின் திருவாக்குகளை படிப்போர் மனிதனுக்கு என்றுமே அழிவில்லை, அழிவது அவன் உடலே என்பதை புரிந்துகொள்வார்கள். ஆன்மாவிற்கு உடல் உடையைப் போன்றதே. உடை நைந்துபோனால் அதை வீசிவிடத்தான் வேண்டும். ஆனால், அதை அனிந்திருந்த மனிதன் அப்படியேதான் இருப்பான். அவனுக்கு அழிவில்லை.

மனிதன் தன் ஆன்மாவை பற்றிய அறிவு பெற்றும் அதை எவ்வாறு பேணி வளர்க்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோளாகும். இம்மை வாழ்விற்கு உடல் தேவைப்படுவது போன்று மறுமை வாழ்விற்கு ஆரோக்கியமான ஆன்மா தேவைப்படுகின்றது.

இதை அறிந்து அதற்கேற்றவாறு வாழாமல் மனிதர்கள் சம்பந்தா சம்பந்தமில்லாதவற்றை தேடியலைந்து தங்கள் பொண்ணான வாழ்வை வீனாக்கி இறுதியில் மண்ணோடு மண்ணாகிவிடுகின்றனர்.

உலகில் ஏன் இத்தனை புரட்சிகளும் போராட்டங்களும் நடக்கின்றன?


சமீபகாலமாக உலகின் பல பகுதிகளுக்கு பரவியுள்ள எதிர்ப்புக் கூட்டங்கள் சற்று மனதை ஆச்சரியப்படவே வைக்கின்றன. திடீரென ஏன் இத்தனை உணர்வெழுச்சி? திடீர் காரணங்கள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்கப்போகின்றது என்பதற்கு வெளிப்படையான அறிகுறிகளும் இல்லை. ஆனால், உலக சரித்திரத்தை சற்று ஆராய்வோமானால் இத்தகைய எதிர்ப்புகள் நிகழ்வது பல நூற்றாண்டுகளாகவே அவ்வப்போது நிகழ்ந்துள்ளன என்பது தெளிவு. ஒரே காரணத்திற்காக அன்றி அவை பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு பஞ்சம், போர், சமயங்கள், அரசியல் என பல மூலகாரணங்களைக் கூறலாம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ரோம் நகரில் ஒரு போராட்டம் நடந்தது. இது அடிமைகளால் நடத்தப்பட்ட ஒரு போராட்டம். அடிமைகளுக்கு தலைவனாக விளங்கிய ஸ்பார்ட்டகஸ் அடிமைத்தனத்திற்கு எதிராக ரோம் நகரின் பிரபுக்களுக்கு எதிராக நடத்திய போராட்டம் இது. போராட்டம் பல விதமாக சென்று இறுதியில் ஸ்பார்ட்டகஸ் தமது வீரர்களோடு போர்க்களத்தில் மரணம் அடைந்தார் என ரோம் சரித்திரம் கூறுகிறது. அதே போன்று 1381ல் இங்கிலாந்தில் நடந்த உழவர் புரட்சி அந்த நாட்டில் நடந்த ஒரு முக்கிய புரட்சியும் வருங்காலத்தில் பெரிதும் பேசப்படும் ஒரு புரட்சியாகவும் அமைந்தது.பிறகு பிரான்ஸ் நாட்டில் (1789-1799) நடந்த புரட்சியை குறிப்பிடலாம். இப்புரட்சியில் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறைக்கு சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் இவை யாவும் ஆங்காங்கே தனித் தனியாக நடந்த புரட்சிகள். உலகளாவிய நிலையில் நிகழ்ந்தவை அல்ல.

19ம் நூற்றாண்டு தொடங்கி 20ம் நூற்றண்டில் கடுவேகத்துடன் செயல்பட்டு உலக அரசர்கள் பெரும்பாலோர் தங்கள் இராஜ்ஜியங்களை இழந்து நடுத்தெருவில் நின்றது மட்டுமல்லாமல் தங்கள் உயிரையும் இழக்கச் செய்தது ஓர் உலக அளவிலான புரட்சி. ரஷ்ய நாட்டின் போல்ஷெவிக் புரட்சியில் அந்த நாட்டு மன்னரும் அவர்தம் குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது ஞாபத்திற்கு வரும். இதன் பின்னர் கம்யூனிச புரட்சியில் பல உலக நாடுகள் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் தங்கள் அரசாங்கங்களை அமைத்துக்கொண்டன பிறகு அவையும் 20ம் நூற்றாண்டின் இறுதியில் அடித்த ஒரு புரட்சிப் புயலில் வேரோடு சாய்ந்து போயின. இப்போது மத்திய கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் இந்த புரட்சிப் புயல் அடிக்கத் துவங்கியுள்ளது. உலகத்தில் ஏற்பட்ட பல புரட்சிகளின் கணக்கிலடங்கா பட்டியலை இங்கு காணவும்:

இவ்விதமாக உலகில் காலங்காலமாக மக்கள் புரட்சிகள் என்பன தொடர்ந்தாற்போல் நடந்துவந்துள்ளன. இவ்விதமான புரட்சிகள் மனித இயல்பின் ஓர் அங்கமா அல்லது இதற்கு ஏதோ உள் காரணம் உள்ளதா எனும் கேள்வி எழுகின்றது. இதற்கு சுலபமாக பதில் காண்பது என்பது சற்று இயலாததாகும். இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும்; சமூக-பொருளாதார காரணங்கள் மற்றும் அரசியல் காரணங்களைக் கூறலாம். இவைகூட சூழ்நிலைகளைப் பொருத்தே ஏற்படுகின்றன. நடப்பில் உள்ள அரசாங்கம் வலுவிழந்து எதிர்ப்பு சக்திகள் வலுவடையும்போதும் இவ்வித புரட்சிகள் நிகழவும் வாய்ப்பேற்படுகின்றன. ஏற்கணவே கூறியது போன்று இதற்கு சுலபமான பதில் கிடையாது. மூல காரணங்களை காண்பதற்கு முன் மனிதன் என்பவன் யார், அவன் எதற்காக இப்பூமியில் உலவி வருகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும்.

இரான் நாட்டில் 1844ல் துவங்கிய பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமான பஹாவுல்லா மனிதனின் படைப்பு குறித்து பிரார்த்தனை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி.

அதாவது மனிதனின் நடுநோக்கம் தன் படைப்பின் உண்மையை அறிந்து அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இத்திருவாக்கின் அர்த்தமாகும். கடவுள் தமது படைப்பில் ஒவ்வொரு ஜீவராசியையும் அதனதன் விதத்தில் படைத்தார் ஆனால், மனிதனை மட்டும் அவர் தமது சாயலில் படைத்துள்ளார் என விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டின் ஜெனசிஸ் அத்தியாயத்தில் காண்கின்றோம். அதாவது மனிதனுக்கு கடவுளின் எல்லா தெய்வீகத் தன்மைகளையும் பிரிதிபலிக்கும் ஆற்றல் உள்ளது என்பது இதன் பொருள். பஹாவுல்லா பின்வருமாறு கூறுகிறார்:

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியாலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிராகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினை பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்பு பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”

இதை அறியாமலும் அத்தகைய ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளாமலும் மனிதன் வாழும் போது அவன் மிருக நிலையிலேயே செயல்படுகிறான்.

பஹாய் திருவெளிப்பாடு 1844ல் முதலில் உண்டாகியது. அவ்வெளிப்பாட்டின் விளைவாக உலகத்தின் சமநிலை நிலைகுலைவிற்கு ஆளாகியிருப்பதாக பஹாவுல்லா கூறுகிறார்:

இம்மாபெரும், இப் புதிய உலக அமைப்பின் அதிர்வு மிக் தாக்கத்தின் மூலம் உலகின் சமநிலை நிலைகுலையச் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்தின் சீரான வாழ்வு இத் தனிச் சிறப்புடடைய இவ்வற்புதமிக்க அமைப்பு முறையின் மூலமாக மகத்தான மாற்றத்ததிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பஹாவுல்லாவின் சமயத்தின் நோக்கம் உலகத்தை ஒரே உலக அரசாங்கத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவதாகும். அதற்கான முதிர்ச்சி நிலையை மனிதன் அடைந்துவிட்டான், அவனுடைய பௌதீக ரீதியான பரிணாம வளர்ச்சி ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இனி அவன் ஆன்மீக ரீதியில் தனது படைப்பின் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். இதற்கான கல்வி முறைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மனிதன் இனியும் அறியாமையில் வாழ்ந்து வந்தால் என்ன நடக்குமோ அதுதான் இன்று உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றது.

இணைப்புகள்


மனித வாழ்வு தன்னிச்சையானது அல்ல. அது மனிதனை சுற்றியுள்ளோரையும் சூழ்நிலையையும் உள்ளடக்கியதாகும். முழுநிறைவான தன்னிச்சை கடவுளுக்கே உரியாதாகும். மனிதன் தன் உலக வாழ்விற்கு சுற்றுச்சூழலோடு இணைக்கப்பட்டுள்ளவன் ஆவான். உதாரணமாக, 10 நிமிடங்களுக்கு காற்று மண்டலம் திடீரென காணாமல் போய்விட்டால் உயிரிணங்கள் அனைத்துமே அழிந்துவிடும். எத்தகைய ஜாம்பவான் ஆனாலும் காற்றின்றி 10 நிமிடங்களுக்கு மேல் வாழமுடியாது. நீரின்றி ஐந்து நாட்களுக்கு மேல் வாழ முடியாது மற்றும் உணவின்றி சுமார் பதினாறு நாட்களுக்கு மேல் வாழமுடியாது. ஆக மனிதன் ஒன்றும் தன்னிச்சையாக வாழ வல்லமை படைத்தவன் அல்ல. அவனை மீறிய சக்திகள் உண்டு. அவற்றுடன அவன் இணைந்தே வாழ வேண்டும். மழை, வெயில், காற்று, மண் ஆகியவற்றின் இணைப்பு அவனுக்கு அவசியமாகின்றன. இவற்றோடு அவன் ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அவன் உயிர்வாழ்வதற்கான ஆதாரங்களை வழங்குகிறது.

மனிதன் தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது தன் தாயையே முழுமையாக நம்பியிருக்கின்றான். தொப்புள் கொடியின் மூலமாக அவனுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்கின்றன. அவனும் அதன் மூலமாக தன்னையும் தன் அவயங்களையும் வளர்த்துக்கொள்கின்றான். இதுவே முதல் இணைப்பு. பிறந்த பிறகு தன் தாயாரிடம் தாய்ப்பால் அருந்தி வளர்ச்சியடைகின்றான். வளர வளர தன் தாய்க்கு அடுத்தபடி தன் தகப்பனோடும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களோடும் இணைப்பேற்படுகிறது. அதன் மூலமாக அவன் சிறிது சிறிதாத தன்னைப்பற்றியும் தன்னைச் சுற்றிலும் உள்ளவை குறித்தும் விழிப்புணர்வு பெறுகிறான். மேலும் பல இணைப்புகள் அவனுடைய உறவினர்களின் வாயிலாக ஏற்படுகிறது. தக்க வயது வந்தவுடன் பள்ளி செல்கின்றான். அங்கு ஆசிரியர் இணைப்பின் வாயிலாக அவன் கல்வி கற்று தன் அறிவை வளர்த்துக் கொள்கின்றான். அங்கு நண்பர்களின் இணைப்பேற்படுகிறது. இந்த நட்பின் வாயிலாக அவன் சமூக விழிப்புணர்வு பெறுகிறான். தக்க வயது வந்தவுடன் ஒரு பெண்ணோடு இணைப்பு ஏற்படுகிறது. திருமணம் எனும் இணைப்பின் வாயிலாக அவன் சந்ததி வளர்கின்றது. மற்றும் வேறு பல இணைப்புகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றன.

இவ்விதமாக மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவனுக்கு பலவிதமான இணைப்புகள் அவசியமாகின்றன. இத்தகைய லௌகீக இணைப்புகள் இன்றி அவன் இவ்வுலகில் வாழமுடியாது. ஒரு வேளை யாருமே இல்லாத வனாந்தரத்தில் ஒரு யோகியைப் போன்று வாழமுடியும் என கூறலாம். சற்று ஆழ சிந்தித்தோமானால் அங்கும் அவன் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையோடு இணைந்துள்ளான் மற்றும், வாழ்வதற்காக அது அவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்குகின்றது. மனிதன் எங்கு சென்றாலும் அவனுக்கு வாழ்வாதார இணைப்புகள் இன்றியமையாதவையாகும். அவன் முற்றிலும் தன்னிச்சையாக வாழவே முடியாது. இதன் காரணமாகவே மனிதன் சுற்றுசூழலுக்கு மரியாதை அளிக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாழ்பட்டால் இணைப்புகள் பாழ்பட்டு மானிடமும் பாழ்பட்டுவிடும். இன்று உலகில் அதுதான் நடக்கின்றது.

இதுவரையிலும் லௌகீக இணைப்புகள் குறித்து ஆய்வு செய்தோம். அவற்றிலிருந்து மானிடம் ஏதோ ஒரு வடிவமைப்பின் ஓர் அங்கமென்பது தின்னப்பட்டுள்ளது. அவ்வடிவமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ளாமல் அவன் வாழமுடியாது. அண்டசராசரங்களை காண்போம். அவை யாவும் ஒரே விதிமுறையின் கீழ் இயங்குகின்றன. மானிடமும் இதற்கு உட்பட்டதுதான். நாம் எங்குமே ஓடி ஒளிய முடியாது. இணைப்புகளுக்கு காரணமானது ஒரு வடிவமைப்பெனும் போது அதை உருவாக்கியது யார் எனும் கேள்வி எழக்கூடும். எல்லையற்ற அண்டசராசரங்கள் மற்றும் படைப்பினங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து சீராக இயங்க வைக்கும் இந்த சக்தி யாது? ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்வோம். அது சீராக இயங்குவதற்கு அதன் கூறுகள் சீராக இணைந்துள்ளதே காரணமாக இருக்கின்றது. இப்பிரபஞ்சத்தின் இயக்கமுறைக்கு அதே கடிகாரத்தை உதாரணமாக கொள்ளலாம். சீராக இயங்கும் கடிகாரம் தானாக உருவாகிடவில்லை என்பது நமக்குத் தெரியும். ஒரு கடிகாரத்தின் கூறுகளை ஒரு புட்டிக்குள் போட்டு எவ்வளவுதான் உலுக்கினாலும் அவை தாமாக ஒன்று சேர்ந்து ஒரு கடிகாரமாக உருவெடுக்க முடியாது. அதற்கு திறன்மிக்க வல்லுனர் ஒருவர் தேவை. கடிகாரக் கூறுகளை அவர் மட்டுமே ஒன்றுசேர்த்து கடிகாரத்தை உருபெறச் செய்யமுடியும். அதே போன்று இந்த அண்டசராசரங்கள், இப்பிரபஞ்சம் தாமாக உருவெடுத்தன என கூறுவதும் பிதற்றலாகும். ஏதோ ஓர் ஆற்றலும், வல்லமையும், பெரும் நுண்ணறிவும் மிக்க சக்தி சிருஷ்டிக்கு காரணமாக இருக்கவேண்டும். சுருக்கமாக, அச்சக்தியை கடவுள் என கூறிவிடலாம். ஆக, யாவற்றையும் படைத்த கடவுள் படைப்பு அனைத்தையும் ஒரே வடிவமைப்பின் கூறுகளாக ஆக்கியுள்ளார். இந்த வடிவமைப்பிற்கு உட்பட்டு அதோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாம் இயங்கும் வரை பிரச்சினை இல்லை. அதற்கு மாறாக, மனிதன் தன்னிச்சையாக இவ்வடிவமைப்புக்கு எதிராக செயல்பட முயலும் போது பிரச்சினைகள் உருவாகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடு இதற்கு நல்ல உதாரணமாகும்.

மானிடம் உட்பட படைப்பனைத்தும் ஒரே வடிவமைப்பு, ஒரே ஆற்றலுக்கு உட்பட்டவை என்பதே உட்கருத்து. அனைத்துமே இசக்தியின் கீழ் ஒன்றாக இணைந்துள்ளன. மானிடத்தின் கூறுகள் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. மனிதன் இச்சூழ்நிலைக்கு எதிர்மாறாக நடக்க முயலும் போது உலகத்தில் பிரச்சினைகள் உருவாகின்றன.

அனைத்தையும் உருவாக்கியுள்ள இறைவன் தம்மை முழுமையாக பிரதிபலிக்கும் ஆற்றலை மனிதனுக்கு மட்டுமே வழங்கியுள்ளார். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு இதுவே அர்த்தமாகும். ஆனால் மனிதன் இவ்வுண்மையை முதலில் உணரவேண்டும். உணர்ந்து இறைவன்பால் தன் முகத்தைத் திருப்பி அவரோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்ட பிறகே மனிதன் கடவுளின் பன்புகளை வெளிப்படுத்திட இயலும்.

அப்படியானால் கடவுளோடு நாம் எப்படி ஓர் உறவை, ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது?

ஒரு குழந்தைக்கும் அதனை பெற்றெடுத்த தாய்க்கும் இடையே ஓர் இணைப்பு, ஓர் உறவு இயல்பாகவே ஏற்படுகின்றது. ஆனால், மனிதனுக்கும் அவனை படைத்த கடவுளுக்கும் இடையே அத்தகைய உறவு இயல்பாக ஏற்பட வழியில்லை. இவ்வுறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றல் மனிதனிடம் உட்படையையாக மட்டுமே உள்ளது. மனிதன் தன் அறிவாலும் தன் சுய முயற்சியாலும் அத்தகைய ஆற்றலை மேம்படுத்திக்கொண்டு கடவுளோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது கடவுளின் விதி. அதை மனிதனால் மாற்றிட முடியாது. இதுதான் கடவுளின் சோதனை என்கின்றோம். கடவுளை உண்மையாக நேசிப்பவரிடமிருந்து மற்றவர்களை இது பிரித்துக்காட்ட உதவுகின்றது.

மனிதன் தன் உலக வாழ்வின்போது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய பிணைப்புகளுள் அவன் சகலத்தையும் படைத்தவரான தன் படைப்பாளரோடு ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும், தனி மனித வளர்ச்சியிலிருந்து உலக மேம்பாடு அனைத்திற்கும் இந்த உறவின் வலுவே தீர்வாக இருக்கின்றது, இருக்கவும் வேண்டும்.

மனித அறிவிற்கு அப்பாற்பட்ட கடவுளை மனிதன் நெருங்க முடியாது. அவனுக்கு அந்த ஆற்றல் கிடையாது .எவ்வளவுதான் அழகு படைத்திருந்தாலும் ஓர் அழகிய சித்திரம் தன்னை வரைந்த சித்திரக்காரனை அறிந்துகொள்ளமுடியாது. அதே போன்று ஓர் அழகிய சிற்பம் தன்னை உருவாக்கிய சிற்பியை அறிந்துகொள்ள இயலாது. அதே போன்று மனிதனும் தன்னைப் படைத்த கடவுளை நேரடியாக தெரிந்துகொள்வது இயலாததாகும். இதன் காரணமாகவே கடவுள் தம்மை முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய தெய்வ அவதாரங்களை படைத்துள்ளார் மற்றும் காலத்திற்கு காலம் உலகை உய்விக்க அவர்களை பூமிக்கு அனுப்பியும் வைக்கின்றார். இவர்கள் அனைவரும் காலத்திற்கு காலம் உலகில் தோன்றி தம் மூலமாக மனிதன் கடவுளை அறிந்துகொள்ள உதவுகின்றனர் மற்றும் கடவுள் மனிதனுக்காக விதித்துள்ளவற்றை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். இத்தகைய வெளிப்பாட்டின வாயிலாக மனிதன் ஆன்மீக வளர்ச்சியுற முடியும் மற்றும் உலகில் ஒரு புதிய நாகரிகமும் தலையெடுத்திட முடியும். ஆனால், இம் மேம்பாடு மனிதன் கடவுளின் அவதாரங்களின் வாயிலாக இறைவனோடு ஓர் இணைப்பை ஏற்படுத்திகொள்ளும் போது மட்டுமே நிறைவேறும். இந்த இணைப்பே எல்லா இணைப்புகளிலும் நித்தியமான இணைப்பாகும்.

முதல் மின்விளக்கை கண்டுபிடித்தவர்


யார் யாரோ எதை எதையோ கண்டுபிடித்தார்கள் என நாம் பள்ளிப்பாடத்தில் கற்கின்றோம். ஆனால், அந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் அவர்களுடையதுதானா?

எலியட், மேய்ன் – அதன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இருநூறாவது ஆண்டு கொண்டாத்திற்கு ஒரு வாரமே இருக்கும் வேளையில், அந்த ஊரின் சரித்திரத்தையும் அதன் வரலாற்றில் முக்கியமானவர்களையும் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாக இருக்கின்றது.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தோரில் மோசஸ் ஜி. பாஃர்மர் அவர்களைவிட பிரபலமானவர் யாரும் இல்லை. இவருடைய பெயர் அந்த வட்டாரத்தில் வசிப்போர் அனைவராலும் அறியப்பட்டு, அவர் விட்டுச் சென்றுள்ள நற்செயல்கள் அந்த நகரத்தின் பல மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கின்றது.

“அவர் எலியட்டின் மக்கள் பெருமையாக பேச விரும்பும் உருச்சின்னம் ஆவார்,” என தமது வீட்டின் முன் நின்று முன்னாள் பெண்கள் கூடைப்பந்து பயிற்சியாளர் பாப் பெர்ஹாம் கூறினார். தாம் தற்போது வசிக்கும் வீடு முன்பு பாஃர்மர் அவர்களால் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

“அவ்வீடு பாஃர்மர் அவர்களின் குதிரைவண்டி கொட்டகை மற்றும் பணிமனையும் ஆகும் மற்றும் அவர் இங்குதான் தமது முதல் மின்விளக்கையும் கண்டுபிடித்தார்,” என பெர்ஹாம் கூறினார்.

“முதல் மின்விளக்கை பாஃர்மர் அவர்கள் கண்டுபிடித்தபோதும் அவர் எடிசனுக்குக் கீழ் வேலை செய்ததால் அக்கண்டுபிடிப்புக்கு எடிசனே பெயர்வாங்கிக்கொண்டார்,” என பெர்ஹாம் கூறினார்.

பாஃர்மர் அவர்கள் பாஸ்டன் தீ அலாரத்தையும் கண்டுபிடித்தவர் ஆவார். இக்கருவியில் இருக்கும் கண்ணாடியை உடைத்தால் எச்சரிக்கை சப்தம் எழும் மற்றும் வேறு பல கருவிகளையும் அவர் கண்டுபிடித்தார்.

1858ல், தமது 39வது வயதில், சேலம், மாசாசுசட்டில், பாஃர்மர் தமது வீட்டின் வரவேற்பரையை மின் விளக்குகள் கொண்டு ஒளியேற்றினார். உலகில் அந்த வீடே முதன் முதலாக மின்விளக்குகள் கொண்டு ஒளியேற்றப்பட்டதாகும். எடிசன் அந்த கண்டுபிடிப்பை ஒரு சிறு விலை கொடுத்து வாங்கி அக்கண்டுபிடிப்பை தம்முடையது என உரிமைப்பதிப்பு செய்தார்.

19ம் நூற்றாண்டின் பல கண்டுபிடிப்புகளுக்கு பாஃர்மர் காரணமாக இருந்தபோதும், அவரும் அவருடைய மனைவியைும், ஆன்மீகவாதிகள் எனும் முறையில் தங்கள் கண்டுபிடிப்புகள் யாவும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன எனவும் அவற்றுக்கு தாங்கள் பெயர்வாங்கிக்கொள்வது முறையல்ல என அவர்கள் கருதியதாக பெர்ஹாம் வீட்டிற்கு அருகே திடீருணவு கடை வைத்திருக்கும் எலியட் மீட் மார்க்கெட் சக உரிமையாளரான ஸ்காட் ஜான்சன் கூறுகிறார்.

“அவர் மின்சாரத்திற்கான உரிமைப்பதிப்பை எடிசனின் ஆட்களுக்கே விட்டுக்கொடுத்தார். தமது கண்டுபிடிப்புகளுக்காக சிக்காகோ உலக சந்தையில் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பாராட்டு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அவர் மரணமுற்றார்.”

மோசஸ் பாஃர்மர் தமது மனைவியான ஹான்னா ஷாப்லே அவர்களை எலியட்டிலேயே சந்தித்தார். அம் மாது ஒரு பிரபல வள்ளலாகவும், பெண்ணியம் சார்ந்தவர் ஆகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். அவர் அக்காலத்து பிரபலமான சீர்திருத்தவாதிகளான கிளாரா பார்ட்டன், ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், ஹேரியட் டப்மேன் போன்றோருடன் நன்கு பழக்கப்பட்டிருந்தார்.

வடக்கிலும் கெனடாவிலிருந்தும் சுதந்திர மாநிலங்களுக்கு தப்பிச் செல்லும் அடிமைகளுக்கு பாஃர்மர்களின் வீடு இரகசிய தொடர்வண்டி வழியில் பாதுகாப்பான பிராயணத்திற்கு ஒரு முக்கிய கூடுமிடமாக விளங்கியது.

மோசஸ் பாஃர்மரின் மறைவிற்குப் பிறகு, அவருடைய மகளான சாரா பிஸ்காட்டாக்குவா ஆற்றின் கரைகளில் கிரீன் ஏக்கர் என பெயரிடப்பட்ட ஓர் உல்லாச தங்கும் விடுதியை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.

அந்த உல்லாச விடுதி முயற்சி தோல்வி கண்ட பிறகு உலகை சுற்றியுள்ள பகுத்தறிவாளர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் மேம்பாட்டு சிந்தனையாளர்களுக்கு ஒன்றுகூடுமிடமாக பயன்படக்கூடிய ஒரு மாநாட்டு மையத்தை உருவாக்கினார்.

1894ல் அவர் கிரீன் ஏக்கர்ஸ் மாநாட்டு மையத்தை திறந்தார், மற்றும் அவருடைய ஆன்மீக விழித்தெழுதலை குறிக்கும் பிரமாண்டமான அமைதிக் கொடி ஒன்றை அங்கு ஏற்றினார்.

அப்துல் பஹாவோடு சாரா பாஃர்மர்

பின்னாட்களில், ஐரோப்பாவில் பிரயாணம் செய்த போது, அவருடை பிற்கால தீர்மானங்கள் மீது தாக்கம் செலுத்திய உற்சாக தூரநோக்கை வழங்கிய பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் மகனான அப்துல் பஹாவை சந்தித்தார்.

கிரின் ஏக்கருக்கு மீண்டும் திரும்பிய பிறகு, அவர் கிரீன் ஏக்கர் பஹாய் பள்ளியை நிறுவினார்.

அவர் எலியட் நகரில் பிட்டர்ஸ்வீட் எனும் பாஃர்மர் இல்லத்தில் 1916ல் காலமானார்.

http://www.seacoastonline.com/articles/20100802-NEWS-8020326

காதலுக்கு கண்ணில்லை…


காலஞ்சென்ற சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டு ஒன்று “காதலுக்குக் கண்ணில்லை காதில்லை கேளாயோ,” எனும் வரியோடு ஆரம்பிக்கின்றது. ஒரு வகையில் இது உண்மையே. வாலிப வயதில் இயற்கையின் உந்துதலுக்கு வயப்பட்ட குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பாகவே ஏற்படக்கூடிய ஈர்ப்புச் சக்தி்யைக் காதல் எனக் கூறுகின்றோம். ஆனால் மிருகவியல்பான இவ்வீர்ப்புச் சக்தியை அன்பு எனக் கூறுவது தவறாகும். அன்பு திடீரென ஏற்படாது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளும் போது, அதாவது ஒருவர் மற்றவரின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டு, அக்குறைநிறைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் அக்கறையே அன்பாகும்.. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்புச்சக்தியோடு இவ்வித அன்பு சேரும்போது அங்கு உண்மையான காதல் உருவாகின்றது.

வெறும் காதல் லௌகீகமானது, எல்லைக்குட்பட்டது. அன்பு ஆன்மீகமானது. அன்பு என்பது “unconditional” அதாவது அது (நிபந்தனையற்றது) பாகுபாடு பார்க்காதது, எல்லையற்றது, எதிர்பார்ப்புகள் இல்லாதது. நல்லவர் கெட்டவர், என்னுடையது உன்னுடையது, அழகு குரூபம் என்ற பாகுபாடெல்லாம் உண்மையான அன்பிற்குக் கிடையாது. அதற்கு வயது வரம்பெல்லாம் கிடையாது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ், அன்பே உலக மகா சக்தி, அன்பே சிவம் என்பதெல்லாம் இவ்வித விதிகளுக்கு அப்பாற்பட்ட அன்பையே குறிப்பிடுகின்றன. ஆனால், இங்கு ஒரு விஷயத்தை நாம் மறுக்க முடியாது. பொதுவாக மனிதர்களுக்கிடையில் அன்பு எனும் ஒன்று இருந்தபோதும் திருமணமானவர்களுக்கிடையில் ஆன்மீக ரீதியான அன்பு என்பது உடல் சார்ந்த ஈர்ப்பு சக்தியோடு இணைந்திருக்க வேண்டும், அதாவது காதல் எனும் ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். உடலும் உள்ளமும் சேர்ந்ததே உண்மையான காதலாகும்.

பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பஹாய் உலகை வழிநடத்திய பஹாவுல்லாவின் மூத்த புதல்வரான அப்துல்-பஹா, அன்பு என்பது நான்கு விதமாக பிரிக்கப்படலாம் எனக் குறிப்பிடுகின்றார். அதாவது, கடவுள் மனிதன் மீது கொள்ளும் அன்பு, மனிதன் கடவுள் மீது கொள்ளும் அன்பு, மனிதன் மனிதன் மீது கொள்ளும் அன்பு மற்றும் கடவுள் தமது படைப்பினங்களில் வெளிப்படும் தமது சுயபிரதிபலிப்பின் மீது கொண்டுள்ள அன்பு. கடவுள் தமது படைப்பினங்களின் மீது கொள்ளும் அன்பை கருணை எனக் கூறுகின்றோம். மனின் சகமனிதன் மீது கொள்ளும் அன்பை பாசம், நேசம், காதல் என கூறுகின்றோம். தாய் தன் சேய்மீது கொள்ளும் அன்பு பாசமாகும். இது ஒரு தாய் தன் சேயின் மீது கொள்ளும் சுயநலம் கலந்த அன்பாகும். ஒரு குடும்பத்தினர் தமது பிற குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளும் அன்பும் இத்தகையதாகும். சினேகிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கொள்வது நேசமாகும். இதிலும் சுயநலம் கலந்துள்ளது. பருவமடைந்த ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு காதலாகும். காதல் உணர்வில் காம உணர்வு கலந்தே இருக்கும். இல்லையெனில் அங்கு ‘காதல்’ பிறக்க வழியில்லை. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இது இயல்பாகவே, உள்படையான ஓர் உணர்வாகும். இவ்வுணர்வு பகுத்தறிவிற்கு உட்பட்ட ஓர் உணர்வல்ல.

வெறும் காதலைப் பொருத்தமட்டில் அது பல காரணங்களின் அடிப்படையில் ஏற்படக்கூடும். ஒரு வகையான காரணத்தைத் தமிழ் சினிமாப் படங்களில் காணலாம். அதில் காதல் வயப்படும் ஆண் வாலிப முறுக்கு மிக்கவராகவும், நல்ல உயரம் மற்றும் அழகுமிக்கவராகவும் இருப்பார். பெண்ணைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அவர் உலக அழகி போன்று இருக்கவேண்டும். இல்லையென்றால் காதல் ஏற்பட வழியில்லை. குட்டையாக, கருப்பாக, சாதரமான பெண்களுக்கெல்லாம் தமிழ்ப் படங்களில் காதலுக்கு வழியில்லை போலும். வாலிப வயதைத் தாண்டியவர்களுக்குச் சினிமாப் படங்களில் வாழ்க்கை என்பதே இல்லை எனும் விதத்தில் படங்களின் ஹீரோக்களின் மீதே கவனம் மையப்படுத்தப்படுகின்றது. அதாவது, சினிமாவைப் பொருத்த மட்டில் அழகற்றவர்களுக்கு வாழ்க்கையே கிடையாதது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. “உண்மைக் காதல்” எனும் வார்த்தைகளை வேறு அவ்வப்போது நாம் இச்சூழலில் செவிமடுக்கின்றோம். அவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்னவென்பது தெரியுமா என்பது கேள்விக்குறியே. இப்படிப்பட்ட காதல் குறித்து சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டின் வரிகளை எழுதியவர் இன்னொரு வார்த்தையையும் சேர்த்து எழுதியிருக்கலாம், அதாவதுகாதலுக்குக் கண்ணில்லை, காதில்லை என்பதோடு “மூளையும்” இல்லை என்று எழுதியிருக்கலாம்.

இப்படி இந்த சினிமா காதலைத் தினசரி நமது தொலைக்காட்சியிலும், வீடியோக்களிலும் காணும் இளவயதினர் மனதில் எவ்வித எண்ணங்கள் பதிகின்றன? அவர்கள் அறியாமல் அவர்களின் மனங்கள் எவ்வித பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன என்பது பொதுவாக அறியப்படவில்லை. இவ்வேளையில் Insidious” எனும் ஆங்கில வார்த்தை ஞாபகத்திற்கு வருகிறது. சிறு குழந்தைகள் இவ்வித சினிமாக்களைப் பார்க்கும் போது அவர்களின் மனங்களில் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை கருத்துகள் எத்தகையவையாக இருக்குமெனத்  தெரியவில்லை. மனித வாழ்விற்கு அஸ்திவாரமான அக அழகு, அதாவது மனித நற்பண்புகள் பற்றி அறிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்கள் புற அழகு குறித்தே பெரும்பாலும் தெரிந்துகொள்கின்றனர். முளைத்து மூன்று இலை விடுவதற்குள் இ்ப்போதெல்லாம் காதல் செய்யவும் நமது சிறார்கள் கிளம்பிவிடுகின்றனர். பிற்காலத்தில் தங்கள் சிறு வயதில் தாங்கள் அடைந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர்களின் வாழ்கையை அமைத்துக்கொள்ளவும் முயல்கின்றனர். இதன் விளைவு என்ன? முதல் கோணல் முற்றும் கோணல்.

இந்தியாவில் விவாகரத்து எனும் வார்த்தை அபூர்வமானது ஆனால், இன்று அங்கும் 2 – 5 விழுக்காடு திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மலேசியா போன்ற நாடுகளில் 10 – 20 விழுக்காடு திருமணங்கள் முறிந்து விடுகின்றன. அமெரிக்காவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அங்குப் பாதிக்குப் பாதி திருமணங்கள் பொசுங்கிப் போய்விடுகின்றன. பல மேற்கத்திய நாடுகளில் திருமணம் செய்துகொள்வது கூட குறைந்து “companionate marriage” எனும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் முறை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒருவரை ஒருவர் பிடிக்காது போகும்போது அவரவர் வழியே போய்க்கொள்ளலாம். அமெரிக்காவில் ஒரு பழமொழி (அல்லது புதுமொழி?) உண்டு. அதாவது, “ஒரு காலத்தில் பெற்றோர்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தன. ஆனால், இன்று குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள்,” என்பது. இத்தகைய விளைவுகளினால் திருமணம் என்றாலே ஒரு விதமான பீதி (phobia) ஏற்படுகின்றது.

ஒரு காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் இல்லைதான். விவாகரத்து என்பது ஒரு கெட்ட வார்த்தையாக இருந்தது. ஆனால் அதற்காக அந்தத் திருமணங்களும் இக்கலாத்திற்குச் சரியென கொள்ளமுடியாது. காரணம், கடந்தகாலங்களில் ஆண்கள் சாம்ராஜ்யம் நடந்தது. கவன் வைத்ததே சட்டம் மற்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் (அல்லது கள்ளனானாலும் கணவன் மற்றும் புல்லனானாலும் புருஷன்?), கணவனே கண் கண்ட தெய்வம் என்றெல்லாம் போதனை வழங்கப்பட்டது. அந்தக் காலத்திற்கு இதெல்லாம் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று பெண்களும் ஆண்களுக்குச் சரி நிகர் சமமாக வாழ்கின்றனர், வேலைக்குச் செல்கின்றனர், சமூக விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த நிலைக்குத் தங்களை ஈடுபத்திக்கொள்ள முடியாத ஆண்களாலும், அதே வேளை தங்களுக்குக் கிடைத்துள்ள இப்புதிய சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படு்த்திக் கொள்ளாத பெண்களாலும் திருமணங்கள் முறிந்து போகின்றன.

இதற்கு முடிவுதான் என்ன?

பஹாய் திருமொழிகளில் ஒரு குறிப்பு உண்டு, “மனிதனை விலைமதிப்பற்ற இரத்தினங்கள் நிறைந்த ஒரு சுரங்கமாகக் கொள்வாயாக. கல்வி மட்டும் தனியே அதன் பொக்கிஷங்களை வெளிக்கொணரச் செய்து மனிதர்கள் அதன் வாயிலாக பயனடையச் செய்ய முடியும்,” என்பது ஏறக்குறைய அதன் கருத்து. இ்ங்குக் கல்வி என்பது தெய்வீகப்ண்புகள் பற்றிய ஆன்மீகக் கல்வியைக் குறிக்கின்றது. சிறு வயதிலேயே இத்தகைய கல்வியை வழங்குவதன் மூலம் நமது குழந்தைகள் சரியான உட்பார்வைகள் பெற்று, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இத்தகைய கல்வி சிறு வயதிலேயே வழங்கப்பட வேண்டும். வளர்ந்து வாலிப வயதை அடைந்த பிறகு இதைச் சரி செய்ய நினைப்பது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும். இன்று உலகம் முழுவதும் பஹாய்கள் தங்கள் நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய கல்வியைத் தங்களைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கு வழங்கிட முயன்று வருகின்றனர். குழந்தைகள் நற்பண்புகள் பற்றி தெரிந்துகொண்டும் தங்கள் ஆன்மீக ஆற்றல்களை அப்போதிருந்தே வளர்த்துக் கொள்ளவும் ஆரம்பிக்கின்றனர். தனிநபர் மற்றும் உலக பிரச்சினைகள் உடனே தீர்க்கப்பட முடியாதவை. சிறுக சிறுகவே இது மாற்றப்பட முடியும். ஆனால், அதற்கான முயற்சிகள் இப்பொழுதிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.