BIC ஜெனீவா – சமீபத்திய மாதங்களில் ஈரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பது, அந்த நாட்டின் பஹாய்களை, அவர்களின் சமயத்தின் ஆரம்பத்திலிருந்தே பீடித்து வந்துள்ள துன்புறுத்தல்களின் தொடர்ச்சியான வெளிப்பாடாகும். அரசாங்கத்தால் தூண்டப்பட்ட இந்த அயராத தாக்குதல்கள் பல ஆண்டுகளாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இந்தப் பதிவுகளின் விரிவான மற்றும் அதிகரித்து வரும் தொகுப்பு பஹாய் அனைத்துலக சமூகத்தால் சேகரிக்கப்பட்டு, ஈரான் நாட்டில் பஹாய் துன்புறுத்தல் குறித்த ஆவணக்காப்பகங்களில் ஆன்லைனில் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பரந்த பொதுமக்களுக்கு இந்த துன்புறுத்தலின் போக்கையும் அதன் பல சம்பவங்களையும் விவரிக்கும் வரலாற்று ஆவணங்களுக்கான அணுகலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள பஹாய் துன்புறுத்தலின் ஆவணக் காப்பகம், அரசு மற்றும் நீதித்துறை ஆவணங்கள், மதகுரு ஃபத்வாக்கள், செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் பிற கணக்குகளின் நகல்களை உள்ளடக்கிய 10,000 க்கும் மேற்பட்ட துன்புறுத்தல் சம்பவங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளது, அவை அசல் ஆவணப் படங்களாக மட்டுமின்றி பாரசீக மொழியில் உரை வடிவத்திலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன.
தற்போது, தனித்துவமான சேகரிப்பில் 10,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள், படங்கள், மற்றும் 1848-ஆம் ஆண்டு முதல் ஈரான் நாட்டில் நடந்த துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான ஒலி மற்றும் காணொளி (audio and video) பதிவுகள் உள்ளன. காப்பகங்களில் உள்ள பெரும்பாலான உபகரணங்கள் 1979 -ஆண்டு முதல் மிக சமீபத்திய துன்புறுத்தல் அலைகளுடன் தொடர்புடையவை.
முழுவதுமாகத் தேடக்கூடிய காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் படங்களாக வழங்கப்படுவது மட்டுமல்லாமல், பெரும் சிரமத்துடன் உரை வடிவமாகவும் மாற்றப்பட்டுள்ளன. அவை பாரசீக அசலிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கிடைக்கின்றன. ஈரான் நாட்டில் பஹாய் அனுபவத்தின் பரிமாணம் பற்றிய ஏராளமான ஆவணச் சான்றுகளை வழங்கும் இந்த அம்சங்கள், இந்த வகை தரவுத்தளத்தை தனித்துவமான ஒன்றாக ஆக்குகின்றன.
ஆவணக் காப்பகங்களில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள், இப்போது ஈரான் நாட்டைப் பற்றிக் கொண்டிருக்கும் சமூக அமைதியின்மையை ஆழமாக எதிரொலிக்கின்றன. அங்கு அந்த நாட்டின் மக்கள் பல தசாப்தங்களாக பஹாய்களால் அனுபவிக்கப்பட்ட கஷ்டங்களை அவர்களும் இப்போது அனுபவித்து வருகின்றனர்.
ஆவணக் காப்பகங்களில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள், இப்போது ஈரானைப் பற்றிக் கொண்டிருக்கும் சமூக அமைதியின்மையுடன் ஆழமாக எதிரொலிக்கின்றன. அங்கு நாட்டின் மக்கள்தொகையில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒரு குறுக்குவெட்டினர் பல தசாப்தங்களாக பஹாய்களால் அனுபவிக்கப்பட்ட கஷ்டங்களைத் தாங்களும் அனுபவித்து வருகின்றனர்.
பஹாய் உலக மையம் – அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டு பங்கேற்பாளர்களின் பயணம் நேற்று மாலை மிகவும் உணர்ச்சிகரமாக முடிவடைந்தது, பேராளர்கள் பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் சன்னதியைச் சுற்றியுள்ள புனித மைதானத்தில் ரித்வான் திருவிழாவை நினைவுகூர்ந்தனர் – இது அவர்களை உத்வேகத்தில் ஆழ்த்திய ஆழமான நெகிழ்ச்சி மிக்க அனுபவமாக இருந்தது.
பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, இறைத்தூதராகத் தமது பணியை பகிரங்கமாக அறிவித்த காலகட்டத்தை குறிக்கும் வகையில், ரித்வான் பண்டிகை பஹாய்களின் இதயங்களில் ஒரு விசேஷ இடத்தைப் பிடித்துள்ளது. ஏப்ரல் 21 முதல் மே 2 வரை கொண்டாடப்படும் இந்த பன்னிரண்டு நாள் திருவிழா, உலகெங்கிலும் உள்ள பஹாய்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பிரதிபலிப்புக்குரிய நேரமாகும். மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள் ரித்வான் உணர்விலிருந்து உத்வேகம் பெற்றனர். இது ஒற்றுமை மற்றும் புதுப்பித்தலின் ஒரு முக்கிய தருணத்தை பிரதிநிதிக்கின்றது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் இல்லங்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கியபோது, பாஹ்ஜியில் நடந்த நினைவேந்தலானது மாநாட்டுக்கு ஒரு உருக்கமான கவசமாக அமைந்தது. கடந்த நாட்களில் அவர்களின் அனுபவத்தால் செறிவூட்டப்பட்ட பேராளர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்குத் திரும்பும்போது, அது அமைதியான சமூகங்களைப் பேணுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
பஹாய் உலக மையம் – ஹைஃபாவில் நடைபெற்ற ஒரு வரவேற்பு 13-வது அனைத்துலகப் பேராளர் மாநாட்டின் 160-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்கள் மற்றும் சுமார் 150 அரசாங்க அதிகாரிகள், இராஜதந்திரிகள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் யூத, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் ட்ரூஸ் சமய சமூகங்களின் தலைவர்களை, பேராளர் மாநாட்டுடன் தொடர்புடைய உலகளாவிய தேர்தல் செயல்முறையை மற்றும், சமூக தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கான பரந்த பஹாய் முயற்சிகளையும் ஆராய்வதற்கு ஒன்றுதிரட்டியது.
ஹைஃபா மேயர் ஐனாட் கலிஷ்-ரோட்டெம், பன்முகத்தன்மை கொண்ட குழுவில் உரையாற்றுவதற்கான வாய்ப்புக்கு ஆழ்ந்த மதிப்புணர்வைத் தெரிவித்து, பஹாய் சமயத்தின் மீதான தனது நீண்டகால ஆழ்ந்த மதிப்பை வெளிப்படுத்தினார். “ஹைஃபா நகரின் மேயராக உங்கள் முன் நிற்பது எனக்கு பெருமை அளிக்கிறது. அதன் அடையாள சின்னங்களில் ஒன்றான, பஹாய் சமூகத்தின் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக இடங்களில் ஒன்று இங்கு உள்ளது. பாப் பெருமானார் நினைவாலயம் மற்றும் படித்தளங்கள் உட்பட பஹாய் உலக மையம் ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவத்திற்கான பஹாய் அர்ப்பணத்தின் அடையாளமாகும்.”
டாக்டர் கலிஷ்-ரோட்டெம் மேலும் கூறியது: “ஹைஃபாவின் மேயர் என்னும் முறையில், பஹாய் சமயத்தின் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், ஹைஃபாவின் அனைத்து குடியிருப்பாளர்களும் வரவேற்கப்பட்டு, மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எங்கள் நகரம் பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்களின் தாயகமாகும், மேலும், எங்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் போதும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படும்போதும் நாங்கள் மேலும் வலுவடைகிறோம் என்பது எனது நம்பிக்கை.
பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுச் செயலாளர் டேவிட் ரட்ஸ்டீன் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்: “பஹாய் உலகின் மிக உயர்ந்த நிர்வாக அமைப்பான உலக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பது என்னும் ஒரு புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக நீண்ட தூரம் பயணித்த உங்களுக்கு பஹாய் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
மாநாட்டின் பேராளர்கள் சிலர் மாநாட்டில் கலந்து கொண்ட தங்கள் சொந்த அனுபவங்களைப் பற்றிப் பேசினர். கஸாக்ஸ்தானைச் சேர்ந்த பிரதிநிதி லியாசாட் யாங்கலியேவா, “உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒரே இடத்தில் கூடுவதையும், ஒரு பொதுவான, புனிதமான பொறுப்பில் ஒன்றுபடுவதையும் காண்பது இந்தக் கூட்டத்தை தனக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக ஆக்கியது” என கூறினார்.
யாங்கலியேவா இந்த மாநாட்டை, அதன் அழகு அவற்றின் பன்முகத்தன்மையால் அதிகரிக்கும் பல்வேறு மலர்கள் நிறைந்த ஒரு தோட்டத்துடன் ஒப்பிட்டார்.
வனுவாத்துவைச் சேர்ந்த பிரதிநிதி ஹென்றி தமாஷிரோ, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக மாநாட்டில் பங்கேற்ற அனைவரிடமும் பகிரப்பட்ட-விருப்பத்தை வலியுறுத்தினார். “எங்கள் நாளைகள் எங்களின் நேற்றைகளை விட சிறப்பாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.
இந்த நம்பிக்கையை நனவாக்க, சமூகத்திற்குச் சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவத்தின் ஒரு புதிய கருத்தாக்கம் தேவை என திரு தமாஷிரோ கூறினார். மாநாட்டில் கலந்துகொள்வது சமூக முன்னேற்றத்திற்கான விருப்பத்தின் வெளிப்பாடு என அவர் மேலும் கூறினார். “பஹாய் சமயத்தின் நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பது உண்மையில் ஒரு சிறந்த உலகத்திற்கான எங்கள் தேடலில் உதவும்.”
சேவைக்கான அழைப்பாண என்னும் தலைப்பில் ஒரு 7 நிமிட திரைப்படம் இந்த நிகழ்விற்காகத் தயாரிக்கப்பட்டது, மற்றும் அது உலகளாவிய பஹாய் தேர்தல் செயல்முறையை ஆராய்கிறது. பஹாய் தேர்தல்கள் நியமனங்கள் மற்றும் பிரச்சாரம் இல்லாததால் அவை தனித்துவமுடையவை. பஹாய் அனைத்துலக சமூகத்தின் துணை பொதுச் செயலாளர் ஏரியன் சபேட் கூறுகையில், “பஹாய் சமயம் அதன் விவகாரங்களை நிர்வகிக்கும் விதத்தையும், மனிதகுலத்தின் நல்வாழ்வை மையமாகக் கொண்டு அடித்தட்டிலிருந்து அனைத்துலக மட்டம் வரை அதன் தேர்தல்களை நடத்தும் விதத்தையும் இந்தப் படம் விவரிக்கிறது. நிர்வாகமுறையில், அடிப்படையான ஒரு புதுமை என்ன என்பதைப் பற்றிய கண்ணோட்டத்தை இந்த படம் வழங்குகிறது. இதை மிகவும் பலக்கிய சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்த நாங்கள் கற்றுக்கொள்கிறோம்.”
பஹாய் உலக மையம் – உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் அவர்கள் வசிக்கும் சமூகங்களின் ஆன்மீக, தார்மீக மற்றும் லௌகீக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்காக நடந்து வரும் திறனாற்றல் உருவாக்க செயல்முறை குறித்து பிரதிநிதிகளிடையே பல நாட்கள் கலந்தாலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, அனைத்துலக பஹாய் மாநாடு இன்று நிறைவடைந்தது.
ஓர் அமர்வுக்குத் தலைமை தாங்கிய ஆஸ்திரேலியாவின் ஆலோசகர்கள் வாரியத்தின் உறுப்பினரான டெஸ்ஸா ஸ்க்ரைன் தமது தொடக்க உரையில் பின்வருமாறு கூறினார்: “நம் முன் உள்ள தொலைநோக்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு தேசத்தின் பிரதிநிதிகளும், அங்கு இருக்க முடியாதவர்களும்… தங்கள் சொந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.”
அசர்பைஜானைச் சேர்ந்த ரம்ஜான் அஸ்கர்லி, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டில் பஹாய் சமூகத்துடனான கலந்துரையாடல்களால் ஈர்க்கப்பட்ட மதச் சங்கங்கள் குறித்த அரசாங்கத்தின் மாநில செயற்குழு நடத்திய சகவாழ்வு குறித்த தேசிய மாநாட்டின் அனுபவங்களை எடுத்துரைத்தார். சமூக நல்லிணக்கம் குறித்த எங்கள் நாட்டின் முதல் மாநாடு இதுவாகும். அந்த அனுபவத்திலிருந்து, நம் சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாக தன்னலமற்ற சேவை போன்ற கருப்பொருள்களை ஆராய நாடு முழுவதும் பல மாநாடுகளை நடத்த அரசாங்கம் ஊக்குவித்தது.
மாலியைச் சேர்ந்த பிரதிநிதியான பல்லகிஸ்ஸா டோகோலா, தம் கிராமத்தில் பல பெண்கள் கல்வியறிவுடன் போராடுகிறார்கள் என கூறினார். பஹாய்களின் முயற்சிகள் பெரும்பாலும் பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வந்துள்ளன. “நாங்கள் பக்திக் கூட்டங்களை நடத்தி வருகிறோம், அத்துடன் ஆன்மீக மற்றும் தார்மீக ஆற்றலளித்தல் நிகழ்ச்சிகளை வழங்குகிறோம். இது கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் திறந்திருக்கும்,” என அவர் கூறினார். “இந்தத் திட்டங்கள் பங்கேற்பாளர்கள் தங்கள் கல்வியறிவுத் திறனை மேம்படுத்த உதவுகின்றன; சில பெண்கள் தாங்களாகவே வழிநடத்துனர்களாக மாறி வருகின்றனர்.”
மிகவும் இளமையாக இருந்த, பல பேராளர்கள், அவர்களில் சிலர், இளைஞர்களுடனான தங்கள் பணியின் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தையும் வலியுறுத்தினர்.
மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் நகைச்சுவை மிகுந்த ஒரு தருணத்தில், கரோலின் தீவுகளின் தேசிய ஆன்மீக சபையில் பணியாற்றும் தனது பஹாய் குழந்தைகள் வகுப்பு ஆசிரியருடன் ஓர் இளம் பேராளர் மேடைக்கு வந்தார். தனது ஆன்மீக அடையாளத்தைப் பேணுவதிலும், சேவைக்கான அவரது அர்ப்பணிப்பைப் பராமரிப்பதிலும் அவரது ஆசிரியர் ஆற்றிய முக்கிய பங்கை அப்பேராளர் எடுத்துரைத்து, பஹாய் கல்வித் திட்டங்களின் உருமாற்ற சக்தியைச் சித்தரித்தார்.
வெனிசுவேலாவின் கார்மென் ரோஜாஸ், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் இளம் பங்கேற்பாளர்களின் அயராத முயற்சிகளைப் பற்றி பேசினார். “சமுதாய மற்றும் பொருளாதார சவால்கள் வெனிசுவெலாவிலிருந்து மக்களை வெளியேற்றத் தூண்டியுள்ளன. இருப்பினும், சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள் மீது அத்தகைய சக்திகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது. அவர்கள் தங்களைப் பகுத்தறியும் முன்னணியாளர்களாகக் வெளிப்படுத்தியுள்ளனர்— தேவைகளை நிவர்த்தி செய்யும் சமுதாய நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொள்வது மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிக்க உள்நாட்டிலேயே தங்கிடத் தீர்மானிப்பது.”
மால்டோவாவைச் சேர்ந்த பேராளரான அலெக்ஸாண்ட்ரா ஸ்டெபனோவா, அடித்தட்டு முன்முயற்சிகளின் சக்தியை எடுத்துக்காட்டினார். இது சமீபத்தில் ஓர் அண்டை சமூக மையத்தை நிறுவுவதில் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. “உள்ளூர் அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களே இந்தத் தொலைநோக்கை நனவாக்க எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படலாம் என்பதைப் பற்றி விவாதிக்க உதவும் கலந்தாலோசனை தளங்களின் தோற்றம் இதன் பின்னணியில் உள்ள படைப்பாற்றல் சக்தியாகும்” என அவர் வலியுறுத்தினார். இந்தச் செயல்முறையின் விளைவாக, குழந்தைகளும் இளைஞர்களும் மையத்தின் பராமரிப்பிற்கு அதிக பொறுப்புணர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர், இம்மையம் அவர்களின் சுற்றுப்புற மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்கான சமூகத்தின் முயற்சிகளின் மையமாக இருக்கும்.
பயிற்சிக்கழகத்தில் உள்ளார்ந்திருக்கும் சக்தியை மக்கள் புரிந்துகொண்டு, அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பொறுப்பேற்கும்போது ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க விளைவுகளைப் பல பங்கேற்பாளர்கள் விவரித்தனர்.
லாட்வியாவைச் சேர்ந்த பிரதிநிதியான நவா கோர்ரம் அகமது கூறுகையில், இளைஞர்கள் சிறு வயதிலிருந்தே அதிக அளவு குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனத்தை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில், அவர்களின் சமூகத்தின் பஹாய் பயிற்சிக்கழகம் வழங்கும் தார்மீக ஆற்றலளித்தல் திட்டங்கள் “பாதுகாப்பான இடங்களாக” மாறிவிட்டன. இந்தக் கல்வி முயற்சிகள், “இளைஞர்கள் தங்கள் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்க உதவியுள்ளன. இந்த இளைஞர்கள் ஒவ்வொரு மாதத்திலும் சேவை, உடல்நலம் மற்றும் நட்பு போன்றவைப் பற்றி கற்றுக்கொள்ள வெவ்வேறு கருப்பொருளைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் இந்தச் சமூகத் தளங்களுக்கு சாந்தி மற்றும் அமைதி உணர்வைப் புகுத்துகின்றனர்.” சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளில் அவர்கள் காணும் வளர்ச்சியைப் பிரதிபலித்து, தங்களுக்கும் இதேபோன்ற இடங்களை உருவாக்குவதை ஆராய்ந்து வருகின்றனர்.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஜூடித் வாட்சன், அந்த நாட்டில் சூறாவளியால் சீரழிந்த ஒரு பகுதி குறித்து பேசினார். பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அண்டைப்புறம் சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் பொருளியல் மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குவதற்காக “விரைவாகவும் விளைவுத்திறத்துடனும் அணிதிரள முடிந்தது…. இந்த முயற்சிகள் மூலம் உள்ளூர் அதிகாரிகளுடன் காலப்போக்கில் உருவாக்கப்பட்ட உறவுகள் நெருக்கடியின் போது மிகவும் பயனுள்ள ஒத்துழைப்பிற்கு இன்றியமையாதவை என அவர் குறிப்பிட்டார். பஹாய் கல்வித் திட்டங்கள் “மக்கள் தங்கள் பகுதிகளின் தேவைகளை அங்கீகரிப்பதற்கும் பதிலிறுப்பதற்குமான திறனை அதிகரிக்கின்றன” என அவர் வலியுறுத்தினார்.
உருகுவேயைச் சேர்ந்த ஒரு பேராளரான ரமோன் ஃபுமோன், உள்ளூர் பஹாய் ஆன்மீக சபைகள் அவர்கள் சேவை செய்யும் சமூகங்களின் முயற்சிகளை ஊக்குவிக்கவும் வழிநடத்தவும் அவற்றில் அதிகரித்து வரும் திறனைப் பற்றி கலந்துரையாடினார். “இந்த உள்ளூர் சபைகள் தனிநபர்களும் சமூகமும் தங்கள் சொந்த வளர்ச்சிக்குப் பொறுப்பேற்கும் திறனாற்றலின் வளர்ச்சியைத் தூண்ட கற்றுக்கொள்கின்றன.” சபையின் நிலைப்பாடு உள்ளூர் மட்டத்தில் தனிநபர்கள், சமூகங்கள், ஸ்தாபனங்கள் மற்றும் முகவாண்மைகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவின் வலுவான உணர்வைப் பேணுகிறது.
மேலும் ஒரு அமர்வுக்கு தலைமை வகித்து, அமெரிக்காவின் ஆலோசகர்கள் வாரியத்தின் உறுப்பினர் சோன்லா மரியா ஹீர்ன், “பஹாய் போதனைகளின் உத்வேகம் பெற்ற கல்வி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் இயக்கத்திலிருந்து எழும் ஒரு புதிய வகையான சமூக நடவடிக்கையாளர்” பற்றிப் பேசினார். இந்த இளைஞர்கள் ஒரு வலுவான ஆன்மீக அடையாளத்தைக் கொண்டுள்ளனர். இது “வீழ்ச்சியில் உள்ள ஒரு சமூகத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள அவர்களைச் சிறப்பாக தயார்படுத்துகிறது. மேலும், சமூக மேம்பாட்டிற்கான தைரியமான மற்றும் பகுத்தறியும் முன்னணியாளர்களாக மாற அவர்களை ஊக்குவிக்கிறது” என அவர் கூறினார்.
பஹாய் உலக மையம் — உலகின் சீர்திருத்தத்திற்காக என்னும் தலைப்பிலான வெளியீட்டின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பஹாய் சமூகம், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த சமூக நடவடிக்கையாளர்களுடன் இணைந்து, லௌகீக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பங்களிக்க மேற்கொண்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பஹாய் உலக மையத்தில் பஹாய் அனைத்துலக மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த வெளியீடு, பஹாய் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டை வழங்குகிறது.
பஹாய் போதனைகளிலிருந்து வரும் ஆன்மீகக் கொள்கைகளில் வேரூன்றிய கூட்டுக் கற்றலுக்கான ஒரு வளர்ந்து வரும் கட்டமைப்பும் அனைத்து மனிதர்களும் “தொடர்ந்து முன்னேறும் ஒரு நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக படைக்கப்பட்டுள்ளனர்” என்னும் நம்பிக்கையும் இந்த முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாகும், என வெளியீடு கூறுகின்றது. இந்த வெளியீடு, உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முயற்சிகளின் எடுத்துக்காட்டுகளை வழங்கி, இந்த கட்டமைப்பின் சில முக்கிய கூறுகளை ஆராய்கிறது.
‘உலகத்தின் சீர்திருத்தத்திற்காக‘ புதிதாக வெளியிடப்பட்ட பதிப்பு, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறையில் பஹாய் சமூகத்தின் கற்றல் மற்றும் செயல்பாட்டின் தற்போதைய செயல்முறையை ஆராய்கிறது.
கோட்பாடுகளும் அணுகுமுறைகளும்
பல தசாப்தங்களாக, வளர்ச்சி என்பது லௌகீகவாத அணுகுமுறைகளால் மட்டுமே தீர்க்க முடியாத ஒரு சிக்கலான செயல்முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என வெளியீடு கூறுகிறது. கொள்கை வகுப்பாளர்களும் பயிற்சியாளர்களும் அபிவிருத்தி நடைமுறையை மேம்படுத்துவதில் ஆன்மீகம் மற்றும் மதத்தின் பங்கு பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக மேம்பாடு என்னும் இப்பதிப்பு, இந்தக் கருத்தை ஆராய்கிறது; சமூக நடவடிக்கையில் பஹாய் முயற்சிகளைத் தொடருவதற்கு அவசியமான பல கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை ஆராய்கிறது, அவற்றுள்: ஒற்றுமை மற்றும் நீதி, சமூகத்தை நிலைநிறுத்தும் உறவுகளின் மறுபரிசீலனைக்கான அழைப்பு; அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், “அறிவியல் இல்லாத மதம் விரைவில் மூடநம்பிக்கை மற்றும் மதவெறியாகச் சீரழிகிறது, அதே நேரத்தில் மதம் இல்லாத அறிவியல் வெறுமனே முரட்டு லௌகீகவாதத்தின் கருவியாக மாறுகிறது” என்பதை அது எடுத்துக்காட்டுகிறது; மற்றும் சர்வலோக பங்கேற்புக்கு அனைத்து பின்னணிகளிலிருந்தும் மனித குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் பரந்த பங்கேற்பு தேவைப்படுகிறது.
சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் திறன் வளர்ப்பு என்னும் கருத்தாக்கம் சர்வலோக பங்கேற்பின் நோக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையதாகும். இது மக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களைத் தங்கள் சொந்த வளர்ச்சிப் பாதையைக் குறித்துக்கொள்வதில் முன்னணியாளர்களாகப் பார்க்கிறது.
சமூக மாற்றம் என்பது ஒரு குழு மற்றொரு குழுவின் நலனுக்காக மேற்கொள்ளும் திட்டம் அல்ல என்பது வெளியீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த கோட்பாட்டின் உட்குறிப்பு ஆகும். மாறாக, எந்தவொரு தேசமும் அல்லது மக்களும் பிறர் பின்பற்றுவதற்கான ஒரு மாதிரியாகச் செயல்படக் கூடிய உண்மையான அமைதி மற்றும் செழிப்பின் நிலையை அடையவில்லை என்பதை அங்கீகரிப்பதில், ஒவ்வொரு சமூக மற்றும் கலாச்சார சூழலிலும் வளர்ச்சியின் அர்த்தத்தையும் தாக்கங்களையும் அதன் அனைத்து பரிமாணங்களிலும் – லௌகீகம், ஆன்மீகம் மற்றும் சமூகம் – கற்றுக்கொள்வதற்கான ஒரு செயல்முறை தேவைப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பஹாய் உத்வேக வளர்ச்சி நடவடிக்கைகளை விளக்கும் உலகத்தின் மேம்பாட்டிற்காக வெளியிடப்பட்ட வரைபடம்.
நடவடிக்கைப் பகுதிகள் மற்றும் செயல்பாடுகளின் ஒரு ஸ்பெக்ட்ரம்
சிறிய அளவிலான அடித்தட்டுத் திட்டங்கள் முதல் பஹாய்-உத்வேகம் பெற்ற அமைப்புகளால் செயல்படுத்தப்படும் பலக்கியமான (complex) வளர்ச்சித் திட்டங்கள் வரை பரந்த அளவிலான பஹாய் மேம்பாட்டு முயற்சிகளை இந்த வெளியீடு ஆராய்கிறது.
இந்த முயற்சிகள் உள்ளூர் தேவைகளுக்கான விடையிறுப்புகளைப் (response) பிரதிநிதிக்கின்றன மற்றும் கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல், கலை மற்றும் ஊடகம், சுகாதாரம், உள்ளூர் பொருளாதாரம், பெண்களின் முன்னேற்றம் மற்றும் மனிதாபிமான நிவாரணம் உள்ளிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளுடன் தொடர்புடையவை. உதாரணங்கள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள சமூக மற்றும் கலாச்சார அமைப்புகளின் ஒரு நெடுக்கத்தைக் (range) கொண்டவை. அவை பஹாய் சமூகத்தைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சமூக நிர்மாணிப்பு மற்றும் உள்ளூர் நடவடிக்கையை அவசியமாக உள்ளடக்கிய ஒரு செயல்முறை என்பதைச் சித்தரிக்கின்றன.
இந்த முயற்சிகளில் மதம் மற்றும் அறிவியலின் கண்ணோட்டங்களை ஒருங்கிணைக்கக் கற்றுக்கொள்வதன் மூலம், மனித நிலையை மேம்படுத்துவதற்கான புதிய நுண்ணறிவுகள் மற்றும் பாதைகள் உருவாக முடியும் என்பதை இந்த வெளியீடு உறுதிப்படுத்துகிறது.
சிறிய அளவிலான அடித்தட்டுத் திட்டங்கள் முதல் பஹாய்-உத்வேக அமைப்புகளால் செயல்படுத்தப்படும் பலக்கிய வளர்ச்சித் திட்டங்கள் வரை பஹாய் மேம்பாட்டு முயற்சிகளின் பரந்த வரிசையை இந்த வெளியீடு ஆராய்கிறது.
தொடரும் கற்றல் செயல்முறை
உலகின் மேம்பாட்டை பொறுத்த வரை, அது பஹாய் சமூக நடவடிக்கை முயற்சிகளில் கற்றலை ஒரு மைய கருப்பொருளாகவும் செயல்பாட்டு முறையாகவும் எடுத்துக்காட்டுகிறது. இது தொடர்ச்சியான ஆய்வு, கலந்தாலோசனை, செயல் மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் அறிவியல் மற்றும் மதத்தின் நுண்ணறிவுகளின் ஒளியில் மேற்கொள்ளப்படுகின்றன. அபிவிருத்தியைப் பற்றி கற்றுக் கொள்வதற்கு வசதியாக, உள்ளூர் முதல் அனைத்துலகம் வரை அனைத்து மட்டங்களிலும் பரிணமிக்கும் ஏற்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளால் இந்தச் செயல்முறை ஆதரிக்கப்படுகிறது.
இந்தக் கற்றல் செயல்முறையின் மூலம், அண்டை நாடுகள் மற்றும் கிராமங்களிலிருந்து பெறப்படும் நுண்ணறிவுகள் மண்டல மற்றும் தேசிய பஹாய் ஸ்தாபனங்களால் ஒரு பரந்த அறிவு அமைப்புடன் இணைக்கப்படுகின்றன. மேலும், பஹாய் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு அபிவிருத்தியில் உலகளாவிய அனுபவங்களை ஒருங்கிணைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கற்றல் அமைப்பாகச் செயல்படுகிறது.
கற்றலை முறைமைப்படுத்தல் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் வளர்ச்சியைப் பற்றிய வளர்ந்து வரும் அறிவு களஞ்சியத்திலிருந்து பயனடையவும் அதற்கு பங்களிக்கவும் உதவுகிறது. ‘For the Betterment of the World’ இன் இந்தச் சமீபத்திய பதிப்பு இந்த வரிசையில் நான்காவது பதிப்பாகும், முந்தைய பதிப்புகள் 2003, 2008 மற்றும் 2018-இல் வெளியிடப்பட்டன. 29 ஏப்ரல் 2023 அன்று தொடங்கிய அனைத்துலக பஹாய் மாநாட்டிற்கு வந்த சுமார் 1,400 பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்களுக்கு இவ்வெளியீட்டின் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. புதிய பதிப்பின் நகலையும் Bahai.org -இல பெறலாம்.
பஹாய் உலக மையம் — ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டுமானம் பற்றிய ஒரு சிறு ஆவணப்படம் இன்று வெளியிடப்பட்டது.
13-வது அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டிற்காக உலக நீதிமன்றத்தினால் ஆணையிடப்பட்ட இந்த 22 நிமிட ஆவணப்படம், இன்று பிரதிநிதிகளுக்காக திரையிடப்பட்டது மற்றும் ஏப்ரல் 2022 தொடக்கத்தில் விபத்தினால் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் முயற்சிகள் உட்பட, அப்துல்-பஹா நினைவாலயம் கட்டப்பட்ட கதையைக் கூறுகிறது. .
ஆவணப்படத்தை மேலேயும் யூடியூபிலும் பார்க்கலாம். அரபு, பிரஞ்சு, ரஷியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வசன வரிகள் விரைவில் வெளியிடப்படும், அதே நேரத்தில் பாரசீக வசனங்களுடன் கூடிய பதிப்பு ஏற்கனவே இங்கே கிடைக்கிறது.
பஹாய் உலக மையம் – பஹாய் சமயத்தின் அனைத்துலக ஆளும் அமைப்பான உலக நீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
13-வது அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சுங்கு மாலிடோங்கா, பால் லாம்பிள், ஜுவான் பிரான்சிஸ்கோ மோரா, அய்மான் ரூஹானி, பேமான் மொஹஜர், ஷஹ்ரியார் ரஸாவி, பிரவீன் மாலிக், ஆண்ட்ரேஜ் டோனோவல் மற்றும் ஆல்பர்ட் நிஷிசு நசுங்கா.
உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட “ஒரு விரிவடையும் வாய்ப்பு” திரைப்படம், இன்று 13-வது அனைத்துலக பஹாய் மாநாட்டில் திரையிடப்பட்டது.
பஹாய் போதனைகளின் தன்மைமாற்றும் சக்தியை சமூக மாற்றத்தை நோக்கிச் செலுத்துவதற்கு மக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் இணைந்து பாடுபடும் உலகின் நான்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இந்தத் திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது.
பிரஞ்சு, பாரசீகம், ரஷ்ய மற்றும் ஸ்பானிஷ் மொழி வசனவரிகளுடனான 72 நிமிடத் திரைப்படத்தை ஆங்கிலத்தில் இங்கே பார்க்கலாம். அரேபிய மொழியில் படத்தின் குரல்வழி பதிப்பும் உள்ளது. கூடுதலாக, ஒரு விரிவான வாய்ப்பை YouTube-இல் பார்க்கலாம்.
பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பிரதிநிதிகளால் நேற்று வாக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 9-வது இடத்திற்கு சமநிலை வாக்குகள் இருப்பதாக இன்று காலை தலைமை தேர்தல் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டது. சமநிலையை முறிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறும். நீதிமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மாநாட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.