கடவுள் யார்?


கடவுள் யார் எனும் கேள்விக்கு பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து (பிரார்த்தனை) ஒரு விளக்கம்

பிரபுவே, எனதாண்டவரே, நீர், போற்றி மகிமைப் படுத்தப்படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.

என் இறைவா, சகலத்தையும் உணரக் கூடியவர் என உம்மை நான் வருணிப்பேனாயின், உணரும் சக்தியின் அதிசிறந்த உருவங்களானவர்களே உமது கட்டளையின் மூலமாகப் படைக்கப்பட்டோர் என ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் நான் என்னைக் காண்கின்றேன். நான் உம்மைச், சர்வ விவேகி எனப் புகழ்வேனாயின், விவேகத்தின் ஊற்றுகள் எனப்படுபவர்களே உமது விருப்பத்தின் இயக்கத்தினால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என உணர்கின்றேன். உம்மை நிகரற்ற ஒருவரென நான் பிரகடனஞ்செய்வேனாயின், விரைவில், ஒருமைத் தன்மையின் உள்ளார்ந்த சாராம்சங்களாகிய அவர்களே, உம்மால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும், உமது கைவேலையின் அடையாளங்களே எனவும் கண்டு கொள்கின்றேன். உம்மை, சகலமும் அறிந்தவரென நான் ஆர்ப்பரிப்பேனாயின், அறிவின் சாரம் எனப்படுபவர்களே உமது படைப்பெனவும், உமது நோக்கத்தின் சாதனங்களெனவும், நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாகின்றேன்.

மரணத்துக்குரிய மனிதன், உமது மர்மத்தினை வெளிப்படுத்தவோ, உமது மகிமையை வருணிக்கவோ, மேலும் கூறினால், உமது சாரத்தின் இயற் தன்மையினை அவன் மறைமுகமாகக்கூட குறிப்பிடவோ செய்திடும் முயற்சிகள் அனைத்திற்கும் அப்பால், அளவிடற்கரிய, அதி உயரிய நிலையில் நீர் இருந்து வருகின்றீர். எதனையெல்லாம் அத்தகைய முயற்சிகள் சாதிக்க இயன்றிடினும், அவை, உமது படைப்பினங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளைக் கடந்திடுவோம் என்ற நம்பிக்கைக் கொண்டிடவே இயலாது; ஏனெனில் அம்முயற்சிகளே உமது கட்டளையினால் இயக்கப்பட்டும், உமது புதியது புனைதலெனும் ஆற்றலினாலுமே தோற்றுவிக்கப்படுகின்றன.

அதிபுனித மகான்கள், உம்மைப் புகழ்வதற்காக வெளிப்படுத்திடும் அதி உயரிய உணர்ச்சிகள், மனிதரிலேயே அதி புலமைவாய்ந்தோர் உமது இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யும் முயற்சியில் வெளிப்படுத்த முடிந்த அறிவுக் கூர்மை, ஆகியவை அனைத்துமே, உமது ஆட்சியுரிமைக்கே முழுமையாக உட்பட்டு, அம் மையத்தையே சுற்றிச் சுழல்கின்றவையாகும்; அவை உமது திருவழகினையே வழிபடுகின்றன. அவை உமது எழுதுகோலின் அசைவினாலேயே இயக்கப்படுகின்றன.

இல்லை, என் இறைவா, உமது வெளிப்பாட்டின் எழுதுகோலானவருக்கும் படைப்புப் பொருள் அனைத்தின் சாராம்சத்திற்கும் இடையே, தேவையின் காரணமாக, எந்த நேரடித் தொடர்பும் இருக்கின்றதென எனது சொற்கள் பொருள்கொள்ளச் செய்திடுமாயின் அவற்றைத் தடைச் செய்திடுவீராக.

உம்முடன் தொடர்புடையோர் அத்தகையத் தொடர்புக் குறித்த புரியுந்திறனுக்கப்பால் கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ளனர்! எல்லா ஒப்புவமைகளும் ஒத்தத் தோற்றங்களும் உமது வெளிப்பாடெனும் விருட்சத்தினைத் தகுதியுற வருணிக்கத் தவறிவிடுகின்றன; உமது மெய்ம்மையின் வெளிப்படுத்துதலையும், உமது பேரழகு என்னும் பகலூற்றினையும் புரிந்துகொள்வதற்கான ஒவ்வொரு வழியும் தடுக்கப்பட்டுள்ளது.

உமது பேரொளியானது, மரணத்துக்குரிய மனிதனானவன் உம்மைக் குறித்து ஒப்புதலளிப்பதற்கும் உம்மைச் சார்ந்துரைப்பதற்கும் உம்மை மகிமைப்படுத்துவதற்குமான அவனது புகழுரைக்கும் அப்பால் வெகு தொலைவில் உள்ளது! உமது மாட்சிமையையும், மகிமையையும் மேன்மைப்படுத்திட நீர் உமது ஊழியர்களுக்கு விதித்துள்ள கடமை எதுவாயினும், அது, அவர்கள்பால் உமது கருணையின் ஓர் அடையாளமேயாகும்; அதனால் அவர்கள் தங்களின் சொந்த, உள்ளார்ந்த மெய்ம்மைக்கு அளிக்கப்பட்ட ஸ்தானத்தின்பால் – தங்களின் சொந்த அகநிலையைக் குறித்த அறிவு என்னும் ஸ்தானத்தின்பால் – உயர்ந்தெழுந்திட உதவப்படக் கூடும்.

உமது மர்மங்களை ஆழங்காண்பதோ, உமது மேன்மையைப் பொருத்தமுற பாராட்டுவதோ, அது, உம் ஒருவரைத் தவிர வேறெவராலும் என்றுமே இயலாது. தேடவியலாத நிலையிலும், மனிதர்களின் புகழ்ச்சிக்கு மேலான உயரிய நிலையிலும், நீர், என்றென்றும் இருந்து வருவீர். அணுகவியலாத, சர்வ வல்லவரான, சகலமும் அறிந்தவரான, புனிதருக்கெல்லாம் புனிதராகிய, உம்மைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

(Gleanings from the Writings of Baha’u’llah)

கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரம்


கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களும் சான்றுகளும்

மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதே கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஓர் அடையாளமும் நிரூபனமுமாக இருக்கின்றது: அவனுடைய படைப்பாளரும் வடிவமைப்பாளரும் மனிதனின்றி வேறொருவரே ஆவார்.

மனிதனின் சிருஷ்டிகர்த்தா மனிதனைப் போன்றவர் அல்லவென்பது உறுதி. அது மறுக்கமுடியாத ஒன்றுமாகும், எனெனில் சக்தியற்ற ஒரு சிருஷ்டி வேறொரு உயிரை உருவாக்கமுடியாது. படைப்பாளரான சிருஷ்டிகர்த்தா, படைத்தலுக்காக சகல பூரணத்துவங்களையும் பெற்றிருக்கவேண்டும்.

சிருஷ்டி பூரணத்துவம் கொண்டதாகவும் சிருஷ்டிகர்த்தா பூரணத்துவம் இல்லாதவராகவும் இருக்கமுடியுமா? ஒரு சித்திரம் பேரழகுவாய்ந்ததாகவும் ஓவியன் குறைகளுடையவானாகவும் இருக்கமுடியுமா? (ஓவியம்) அவனுடைய கலை மற்றும் சிருஷ்டியாகும். மேலும், ஓவியம் ஓவியனைப்போலவே இருக்கவும் முடியாது; இல்லையென்றால் அந்த ஓவியம் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டிக்கும். சித்திரம் எவ்வளவுதான் முழுநிறைவானதாக இருந்தபோதும், ஓவியனோடு ஒப்பிடுகையில்அச்சித்திரம் முற்றிலும் பூரணத்துவமற்றதே ஆகும்.

நிலையற்ற இப்பூவுலகம் பெரும் குறைபாடுகள் மிக்கதாகும்: குறைகள் அற்றவராக கடவுள் இருக்கின்றார். இந்த நிலையற்ற உலகின் குறைபாடுகள் கடவுள் பூரணமானவர் என்பதற்கான அடையாளமாகும்.

உதாரனமாக, மனிதனை பாக்கும்போது அவன் வலிமையற்றவனாக இருக்கின்றான். மனிதனின் இந்த வலிமையில்லாமையே என்றும் நிலையான கடவுளின் வலிமைக்கு ஆதாரமாகும், ஏனெனில் வலிமை என ஒன்று இல்லையெனில் வலிமையின்மை என ஒன்றை நாம் கற்பனை செய்யமுடியாது. அதனால், சிருஷ்டியின் வலிமையின்மையே கடவுளின் வலிமைக்கான ஆதாரமாகும்; சக்தி என்பது இல்லையெனில், சக்தியின்மை என்பது இருக்கமுடியாது; ஆகவே இந்த சக்தியின்மை என்பது சக்தி எனும் ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கின்றது. மேலும், நிலையற்ற இவ்வுலகில் வறுமை நிலவுகிறது; ஆகவே வறுமை என ஒன்று வெளிப்படையாக இருப்பதால் செல்வம் என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது. இப்பூவுலகில் அறியாமை நிலவுகிறது; ஆகவே, அறியாமை என ஒன்று இருப்பதால் அறிவு என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது; ஏனென்றால், அறிவு என ஒன்று இல்லையெனில் அறிவில்லாமை என ஒன்றும் இருக்க வழியில்லை; அறியாமை என்பது அறிவாற்றல் இல்லாமையை குறிக்கின்றது, மற்றும் இருத்தல்நிலை இல்லையெனில் இருத்தலின்மையை நாம் உணரமுடியாது.

ஆகவே, இப்படைப்புலகு கீழ்ப்படியாமல் இருக்கமுடியாத ஒரு விதிக்கு தான் உட்பட்டதாக இருக்கின்றது என்பது உறுதி; மனிதன் கூட இறப்பு, தூக்கம் மற்றும் பிற விதிகளுக்கு உட்பட்டவனாவான் – அதாவது, மனிதன் சில விஷயங்களில் ஆளுமைக்கு உட்பட்டவன், ஆகவே ஆளுமை என ஒன்று இருக்கும்போது ஆளுனர் என ஒருவர் இருப்பது உறுதி. ஏனெனில், நிலையற்ற சிருஷ்டிகளின் ஓர் அடையாளம் எதையாவது சார்ந்திருப்பதாகும், மற்றும் இந்த சார்தல்நிலை ஓர் இன்றியமையா தேவையும் ஆகும், ஆகவே, எதையும் சாராத சுயேச்சையான ஒரு திருப்பொருள் கண்டிப்பாக இருக்கவேண்டும் மற்றும் அதன் தன்னிச்சை அதற்கு இன்றியமையாத ஒன்றும் ஆகும்.

இதே முறையில், ஒருவன் நோய்வாயப்பட்டுள்ளான் எனும்போது உடல்நலத்தோடு ஒருவன் உள்ளான் என்பது அறிவு; ஏனெனில் சுகம் இல்லையெனில், அம்மனிதனின் சுகமின்மை நிரூபிக்கப்படமுடியாது.

ஆகவே, சகல பூரணத்துவங்களையும் உடைய என்றும் நிலையான சர்வவல்லமை மிக்க ஒருவர் இருக்கின்றார் என்பது வெளிப்படையாகின்றது. எனெனில், அவர் அவ்விதம் சகல பூரணத்துவங்களையும் பெறவில்லையெனில் அவர் தமது படைப்புகளைப்போலவே தாமும் இருப்பார்.

படைப்புலகு முற்றும் இவ்வாராகவே இருக்கின்றது; ஆகச் சிறிய சிருஷ்டியும் தன்னைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நிரூபிக்கின்றது. உதாரணமாக, இந்த ரொட்டி அதனை செய்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாகும்.

கடவுள் வாழ்த்தப்படுவதாக! ஆகச் சிறிய தனிமம் ஒன்றில் நிகழ்த்தப்படும் குறைந்த அளவான மாற்றம் கூட சிருஷ்டிகர்த்தா ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது: ஆகையால், முடிவில்லாத, இம்மகத்தான பிரபஞ்சம், வஸ்துவும் தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று கொண்ட பரிசெயல்பாட்டினால் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியுமா? இத்தகைய ஒரு கருத்து வெளிப்படையாகவே எவ்வளவு தவறானதாக இருக்கின்றது!

இந்த வெளிப்படையான விவாதங்கள் வலிமையற்ற ஆன்மாக்களுக்காக குறிப்பிடப்படுகின்றன; ஆனால், ஆன்மீகப்பார்வை திறக்கப்படுமாயின், ஆயிரமாயிரம் தெளிவான ஆதாரங்கள் பார்வைக்கு வெளிப்படும். அதுபோல், தன்னுள் வதியும் ஆன்மாவை மனிதன் உணர்வானாயின், அதன் இருப்பு குறித்து அவனுக்கு ஆதாரங்கள் தேவையில்லை; ஆனால், அதியாத்மீகத்தின் அருள் இல்லாதாருக்கு வெளிப்படையான ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும்.

(அப்துல் பஹா, சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள், ப. 5)

இணைப்புகள்


மனித வாழ்வு தன்னிச்சையானது அல்ல. அது மனிதனை சுற்றியுள்ளோரையும் சூழ்நிலையையும் உள்ளடக்கியதாகும். முழுநிறைவான தன்னிச்சை கடவுளுக்கே உரியாதாகும். மனிதன் தன் உலக வாழ்விற்கு சுற்றுச்சூழலோடு இணைக்கப்பட்டுள்ளவன் ஆவான். உதாரணமாக, 10 நிமிடங்களுக்கு காற்று மண்டலம் திடீரென காணாமல் போய்விட்டால் உயிரிணங்கள் அனைத்துமே அழிந்துவிடும். எத்தகைய ஜாம்பவான் ஆனாலும் காற்றின்றி 10 நிமிடங்களுக்கு மேல் வாழமுடியாது. நீரின்றி ஐந்து நாட்களுக்கு மேல் வாழ முடியாது மற்றும் உணவின்றி சுமார் பதினாறு நாட்களுக்கு மேல் வாழமுடியாது. ஆக மனிதன் ஒன்றும் தன்னிச்சையாக வாழ வல்லமை படைத்தவன் அல்ல. அவனை மீறிய சக்திகள் உண்டு. அவற்றுடன அவன் இணைந்தே வாழ வேண்டும். மழை, வெயில், காற்று, மண் ஆகியவற்றின் இணைப்பு அவனுக்கு அவசியமாகின்றன. இவற்றோடு அவன் ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அவன் உயிர்வாழ்வதற்கான ஆதாரங்களை வழங்குகிறது.

மனிதன் தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது தன் தாயையே முழுமையாக நம்பியிருக்கின்றான். தொப்புள் கொடியின் மூலமாக அவனுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்கின்றன. அவனும் அதன் மூலமாக தன்னையும் தன் அவயங்களையும் வளர்த்துக்கொள்கின்றான். இதுவே முதல் இணைப்பு. பிறந்த பிறகு தன் தாயாரிடம் தாய்ப்பால் அருந்தி வளர்ச்சியடைகின்றான். வளர வளர தன் தாய்க்கு அடுத்தபடி தன் தகப்பனோடும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களோடும் இணைப்பேற்படுகிறது. அதன் மூலமாக அவன் சிறிது சிறிதாத தன்னைப்பற்றியும் தன்னைச் சுற்றிலும் உள்ளவை குறித்தும் விழிப்புணர்வு பெறுகிறான். மேலும் பல இணைப்புகள் அவனுடைய உறவினர்களின் வாயிலாக ஏற்படுகிறது. தக்க வயது வந்தவுடன் பள்ளி செல்கின்றான். அங்கு ஆசிரியர் இணைப்பின் வாயிலாக அவன் கல்வி கற்று தன் அறிவை வளர்த்துக் கொள்கின்றான். அங்கு நண்பர்களின் இணைப்பேற்படுகிறது. இந்த நட்பின் வாயிலாக அவன் சமூக விழிப்புணர்வு பெறுகிறான். தக்க வயது வந்தவுடன் ஒரு பெண்ணோடு இணைப்பு ஏற்படுகிறது. திருமணம் எனும் இணைப்பின் வாயிலாக அவன் சந்ததி வளர்கின்றது. மற்றும் வேறு பல இணைப்புகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றன.

இவ்விதமாக மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவனுக்கு பலவிதமான இணைப்புகள் அவசியமாகின்றன. இத்தகைய லௌகீக இணைப்புகள் இன்றி அவன் இவ்வுலகில் வாழமுடியாது. ஒரு வேளை யாருமே இல்லாத வனாந்தரத்தில் ஒரு யோகியைப் போன்று வாழமுடியும் என கூறலாம். சற்று ஆழ சிந்தித்தோமானால் அங்கும் அவன் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையோடு இணைந்துள்ளான் மற்றும், வாழ்வதற்காக அது அவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்குகின்றது. மனிதன் எங்கு சென்றாலும் அவனுக்கு வாழ்வாதார இணைப்புகள் இன்றியமையாதவையாகும். அவன் முற்றிலும் தன்னிச்சையாக வாழவே முடியாது. இதன் காரணமாகவே மனிதன் சுற்றுசூழலுக்கு மரியாதை அளிக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாழ்பட்டால் இணைப்புகள் பாழ்பட்டு மானிடமும் பாழ்பட்டுவிடும். இன்று உலகில் அதுதான் நடக்கின்றது.

இதுவரையிலும் லௌகீக இணைப்புகள் குறித்து ஆய்வு செய்தோம். அவற்றிலிருந்து மானிடம் ஏதோ ஒரு வடிவமைப்பின் ஓர் அங்கமென்பது தின்னப்பட்டுள்ளது. அவ்வடிவமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ளாமல் அவன் வாழமுடியாது. அண்டசராசரங்களை காண்போம். அவை யாவும் ஒரே விதிமுறையின் கீழ் இயங்குகின்றன. மானிடமும் இதற்கு உட்பட்டதுதான். நாம் எங்குமே ஓடி ஒளிய முடியாது. இணைப்புகளுக்கு காரணமானது ஒரு வடிவமைப்பெனும் போது அதை உருவாக்கியது யார் எனும் கேள்வி எழக்கூடும். எல்லையற்ற அண்டசராசரங்கள் மற்றும் படைப்பினங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து சீராக இயங்க வைக்கும் இந்த சக்தி யாது? ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்வோம். அது சீராக இயங்குவதற்கு அதன் கூறுகள் சீராக இணைந்துள்ளதே காரணமாக இருக்கின்றது. இப்பிரபஞ்சத்தின் இயக்கமுறைக்கு அதே கடிகாரத்தை உதாரணமாக கொள்ளலாம். சீராக இயங்கும் கடிகாரம் தானாக உருவாகிடவில்லை என்பது நமக்குத் தெரியும். ஒரு கடிகாரத்தின் கூறுகளை ஒரு புட்டிக்குள் போட்டு எவ்வளவுதான் உலுக்கினாலும் அவை தாமாக ஒன்று சேர்ந்து ஒரு கடிகாரமாக உருவெடுக்க முடியாது. அதற்கு திறன்மிக்க வல்லுனர் ஒருவர் தேவை. கடிகாரக் கூறுகளை அவர் மட்டுமே ஒன்றுசேர்த்து கடிகாரத்தை உருபெறச் செய்யமுடியும். அதே போன்று இந்த அண்டசராசரங்கள், இப்பிரபஞ்சம் தாமாக உருவெடுத்தன என கூறுவதும் பிதற்றலாகும். ஏதோ ஓர் ஆற்றலும், வல்லமையும், பெரும் நுண்ணறிவும் மிக்க சக்தி சிருஷ்டிக்கு காரணமாக இருக்கவேண்டும். சுருக்கமாக, அச்சக்தியை கடவுள் என கூறிவிடலாம். ஆக, யாவற்றையும் படைத்த கடவுள் படைப்பு அனைத்தையும் ஒரே வடிவமைப்பின் கூறுகளாக ஆக்கியுள்ளார். இந்த வடிவமைப்பிற்கு உட்பட்டு அதோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாம் இயங்கும் வரை பிரச்சினை இல்லை. அதற்கு மாறாக, மனிதன் தன்னிச்சையாக இவ்வடிவமைப்புக்கு எதிராக செயல்பட முயலும் போது பிரச்சினைகள் உருவாகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடு இதற்கு நல்ல உதாரணமாகும்.

மானிடம் உட்பட படைப்பனைத்தும் ஒரே வடிவமைப்பு, ஒரே ஆற்றலுக்கு உட்பட்டவை என்பதே உட்கருத்து. அனைத்துமே இசக்தியின் கீழ் ஒன்றாக இணைந்துள்ளன. மானிடத்தின் கூறுகள் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. மனிதன் இச்சூழ்நிலைக்கு எதிர்மாறாக நடக்க முயலும் போது உலகத்தில் பிரச்சினைகள் உருவாகின்றன.

அனைத்தையும் உருவாக்கியுள்ள இறைவன் தம்மை முழுமையாக பிரதிபலிக்கும் ஆற்றலை மனிதனுக்கு மட்டுமே வழங்கியுள்ளார். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு இதுவே அர்த்தமாகும். ஆனால் மனிதன் இவ்வுண்மையை முதலில் உணரவேண்டும். உணர்ந்து இறைவன்பால் தன் முகத்தைத் திருப்பி அவரோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்ட பிறகே மனிதன் கடவுளின் பன்புகளை வெளிப்படுத்திட இயலும்.

அப்படியானால் கடவுளோடு நாம் எப்படி ஓர் உறவை, ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது?

ஒரு குழந்தைக்கும் அதனை பெற்றெடுத்த தாய்க்கும் இடையே ஓர் இணைப்பு, ஓர் உறவு இயல்பாகவே ஏற்படுகின்றது. ஆனால், மனிதனுக்கும் அவனை படைத்த கடவுளுக்கும் இடையே அத்தகைய உறவு இயல்பாக ஏற்பட வழியில்லை. இவ்வுறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றல் மனிதனிடம் உட்படையையாக மட்டுமே உள்ளது. மனிதன் தன் அறிவாலும் தன் சுய முயற்சியாலும் அத்தகைய ஆற்றலை மேம்படுத்திக்கொண்டு கடவுளோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது கடவுளின் விதி. அதை மனிதனால் மாற்றிட முடியாது. இதுதான் கடவுளின் சோதனை என்கின்றோம். கடவுளை உண்மையாக நேசிப்பவரிடமிருந்து மற்றவர்களை இது பிரித்துக்காட்ட உதவுகின்றது.

மனிதன் தன் உலக வாழ்வின்போது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய பிணைப்புகளுள் அவன் சகலத்தையும் படைத்தவரான தன் படைப்பாளரோடு ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும், தனி மனித வளர்ச்சியிலிருந்து உலக மேம்பாடு அனைத்திற்கும் இந்த உறவின் வலுவே தீர்வாக இருக்கின்றது, இருக்கவும் வேண்டும்.

மனித அறிவிற்கு அப்பாற்பட்ட கடவுளை மனிதன் நெருங்க முடியாது. அவனுக்கு அந்த ஆற்றல் கிடையாது .எவ்வளவுதான் அழகு படைத்திருந்தாலும் ஓர் அழகிய சித்திரம் தன்னை வரைந்த சித்திரக்காரனை அறிந்துகொள்ளமுடியாது. அதே போன்று ஓர் அழகிய சிற்பம் தன்னை உருவாக்கிய சிற்பியை அறிந்துகொள்ள இயலாது. அதே போன்று மனிதனும் தன்னைப் படைத்த கடவுளை நேரடியாக தெரிந்துகொள்வது இயலாததாகும். இதன் காரணமாகவே கடவுள் தம்மை முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய தெய்வ அவதாரங்களை படைத்துள்ளார் மற்றும் காலத்திற்கு காலம் உலகை உய்விக்க அவர்களை பூமிக்கு அனுப்பியும் வைக்கின்றார். இவர்கள் அனைவரும் காலத்திற்கு காலம் உலகில் தோன்றி தம் மூலமாக மனிதன் கடவுளை அறிந்துகொள்ள உதவுகின்றனர் மற்றும் கடவுள் மனிதனுக்காக விதித்துள்ளவற்றை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். இத்தகைய வெளிப்பாட்டின வாயிலாக மனிதன் ஆன்மீக வளர்ச்சியுற முடியும் மற்றும் உலகில் ஒரு புதிய நாகரிகமும் தலையெடுத்திட முடியும். ஆனால், இம் மேம்பாடு மனிதன் கடவுளின் அவதாரங்களின் வாயிலாக இறைவனோடு ஓர் இணைப்பை ஏற்படுத்திகொள்ளும் போது மட்டுமே நிறைவேறும். இந்த இணைப்பே எல்லா இணைப்புகளிலும் நித்தியமான இணைப்பாகும்.