ஹைஃபா நகரின் பஹாய் பூங்கா


இஸ்ரேல் நாட்டில் உள்ள பஹாய் புனிதஸ்தலங்களுள் இரண்டு மிகவும் முக்கியமானவையாகும். பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களான பாப், பஹாவுல்லா இருவரும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இரு இடங்களும் பஹாய்களால் புனிதஸ்தலங்கள் என கொண்டாடப்படுகின்றன. உலகம் முழுவதிலிமுள்ள பஹாய்கள் இவ்விடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிடவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.பஹாவுல்லா அவர்கள் 1892ல் தமது விண்ணேற்றத்திற்குப் பிறகு ஆக்கோ நகரில் பாஹ்ஜி எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். பாப் அவர்கள் 1850ம் ஆண்டு அரசாங்கத்தால் மரண தண்டனைக்கு உட்படு்த்தப்பட்டு 750 இராணுவ வீரர்களின் துப்பாக்கி இரவைகளுக்கு இரையாக்கப்பட்டார். இவரின் நல்லுடல் அவருடைய மரணத்திற்குப் பின் அவர் கொல்லப்பட்ட நகரமான தாப்ரீஸ் நகருக்கு வெளியே இருந்த ஒரு மதகில் வீசியெரியப்பட்டது. அதன் நோக்கம் பாப் அவர்களின் உடல் மிருகங்களுக்கு இரையாக வேண்டும் என்பதே ஆகும். ஷீயா மதப்பிரிவினரிடையே கடவுளின் அவதாரங்கள் குறித்து ஒரு நம்பிக்கை உள்ளது. அதாவது, கடவுளின் அவதாரங்களின் உடலை மிருகங்கள் தீண்டமாட்டா என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பாப் அவர்கள் கடவுளின் அவதாரம் என ஏற்க மறுத்த அரசாங்கம் அவரை ஏமாற்றுக்காரர் என நிரூபிப்பதற்காக அம் மதகில் அவருடைய உடலைக் கிடத்தி மிருகங்களுக்கு இரையாக்க நினைத்தனர். ஆனால், பாப் அவர்களின் மரணத்திற்குப் பின் நல்லிரவில் அவருடைய நம்பிக்கையாளர்கள் சிலர் அவருடைய உடலை மீட்டு ஒரு பட்டு நெசவாலையில் ஒளித்து வைத்தனர். இவ்விதமாக அவருடைய உடல் சுமார் 60 வருட காலங்கள் இங்கும் அங்குமாக ஒளித்து வைக்கப்பட்டு இறுதியில் அப்துல் பஹா அவர்களின் வழிகாட்டலில் ஹைஃபா நகருக்கு கொண்டுவரப்பட்டு அங்கு கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய புனித உடலைத் தாங்குவதற்காக பர்மாவில் உள்ள பஹாய் நம்பிக்கையாளர்கள் சுமார் ஒரு டன் எடையுடைய பளிங்குக் கல்லினால் ஆன ஒரு கற்சவப்பெட்டியை செய்து ஹைஃபா நகருக்கு அனுப்பி வைத்தனர். பாப் அவர்களின் உடல் இதில் வைக்கப்பட்டு பின் கார்மல் மலை சதுக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு மாடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்புனித மாடத்தைச் சுற்றிலும் இன்று மனதை மயக்கும் பூங்காக்களும் படித்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன மற்றுமற் யூனெஸ்கோவினால் (UNESCO) உலக மரபுச்செல்வஸ்தலங்களின் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாப் அவர்களின் நல்லடக்கத் திருமாடத்தையும் அதைச் சுற்றிலுமுள்ள கண்ணக் கவரும் பூங்காக்களையும் படித்தளங்களையும் கீழ்க்காணப்படும் இணைப்பின் வழி காணலாம்.

ஹைஃபா நகரின் பஹாய் பூங்கா

உலகில் அமைதி ஏற்படுமா?


சமீபத்தில் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஓரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாக கேட்டுள்ளார்?

மனுக்குலம் அடுத்த நூறு வருடங்களைத் தாங்குமா?

இதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார்.

ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம்.

The Myth of Stephen Hawking

அடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் எனக்குத் தெரியாது. அதனால்தான் அக்கேள்வியை நான் கேட்டேன். மக்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், நாம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். 1940-ற்கு முன்பு, நமது முக்கிய அச்சுறுத்தலாக வானவெளியில் சூரியனைச் சுற்றி வரும் அஸ்டராய்ட் எனப்படும் பெரும் விண்பாறைகளினால் ஆன சிறு கோள்களோடு பூமி மோதிக்கொள்ளும் அபாயம் விளங்கியது. இவ்வித மோதல்கள் பூமியின் பெரும்பாலான உயிரனங்களின் அழிவிற்கு காரணமாக விளங்கியது. இருந்தபோதிலும் இத்தகைய அழிவு ஏற்பட்டு 7 கோடி வருடங்களாகிவிட்டன. அடுத்த 100-களில் இத்தகைய மோதல் நிகழும் சாத்தியம் குறைவே. ஆனால், நாம் இப்போது எதிர்நோக்கும் முக்கிய அபாயமாக அனு ஆயுத போரே விளங்குகிறது. அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனுக்குலத்தை பலமுறை அழித்திடக்கூடிய அளவிற்கு அனு ஆயுதங்களைப் பெற்றிருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் அனுஆயுத போர் குறித்த அபாயகரமான சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளன. கோல்ட் வோர் எனப்படும் போர் நிலையின் முடிவோடு அத்தகைய அபாய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது, ஆனால் மறையவில்லை. மனிதர்களை முழுமையாக அழித்திடக்கூடிய அனு ஆயுதங்கள் இன்றும் போதிய அளவு உள்ளன. தன்னை வேறொரு நாடு தாக்கக்கூடும் எனும் பதட்டத்தில் ஒரு நாடு அனு ஆயுதத்தைக் கையாளக்கூடும்.

இன்று வேறொரு அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அது சில சிறிய நிலைத்தன்மையற்ற நாடுகள் அனு ஆயுதங்களைப் பெறுவதனால் ஏற்படக்கூடும். இத்தகையை சிறிய அனுசக்தி நாடுகள் பல கோடி மக்களின் அழிவை ஏற்படுத்தக்கூடும், ஆனால், அது மனுக்குலத்தின் முழு அழிவையே ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த நாடுகள் உலக வல்லரசுகளுக்கிடையே போர் மூட்டிவிட்டும் அதனால் பேரழிவுமிக்க அனு ஆயுதப் போர் நிகழும் அபாயமும் உள்ளது.

பூமியில் நமது நிலைத்த வாழ்விற்கு சவால்களாக இத்தகைய சிறுகோள்களின் கடுமோதல், அனு ஆயுத யுத்தம் ஆகியவற்றோடு மேலும் பல அச்சுறுத்தல்கள் சேர்ந்துகொண்டுள்ளன. தட்பவெப்ப நிலைமாற்றத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலக நாடுகள், கரியமிலவாயுவின் வெளிப்பாட்டை குறைப்பதன் வாயிலாக இத்தகைய தட்பவெப்ப மாற்றத்தின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தகைய தட்பவெப்ப மாற்றம் திரும்பவியலா ஒரு நிலையை அடைந்தும் அதனால் பூமியின் வெப்பம் சுயமாக அதிகரித்துக் கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இரு துருவங்களிலும் பனிக்கட்டிகள் கரைவதானது வானவெளியில் பிரதிபலிக்கப்படக்கூடிய வெப்ப அளவை குறைத்தும், அதனால் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவும செய்கின்றன. கடல் வெப்பத்தின் அதிகரிப்பினால் கடல் நீரின் அடியில் இருக்கும் கரியமிலவாயு பெரும் அளவில் வெளிப்பட்டும், அதனால் “கிரீன் ஹௌஸ் எபெக்ட்” எனப்படும் ஒரு நிலையை மேலும் அதிகரித்திட செய்யும். 250 சென்டிகிரேட் பாகைகள் வெப்பமுற்றும், கந்தக அமிலத்தை மழையாக பெய்தும் கொண்டிருக்கும் நமது சக கோளாகிய வெள்ளி கிரகத்தின் நிலையை நமது பூமியும் அடைந்திடாமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோமாக.

வேறு வகைகளில், ஏதேச்சையாக மரபனுரீதியாக பொறியமைக்கப்பட்ட கிருமிகளை வேண்டுமென்றோ, வேண்டாமலோ வெளிப்படுத்தும் அபாயமும் உள்ளது. நமது தொழில்நுணுக்கத்துறை சார்ந்த சக்திகளை நாம் அதிகரித்துக்கொள்ளும் போது, அதன் வாயிலாக பேரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலையையும் அதிகரித்துக்கொள்கின்றோம். மனுக்குலம் பேரபாயமிக்க எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. பூமிக்கு வேறு கிரகங்களில் வாழும் உயிரினங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த ஓர் வேடிக்கை பேச்சு வழக்கில் உள்ளது. அதாவது, ஒரு நாகரீகம் பூமியின் அளவு மேம்பாடு காணும்போது அது நிலைத்தன்மை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்பதாகும். வேறு உயிரினங்கள் பூமிக்கு வராததற்து வேறு பல காரணங்கள் உண்டென்றாலும் இத்தகைய வேடிக்கை கதைகள் அபாயமிக்க நமது சூழ்நிலையை உணர்த்துகின்றன. மனிதன் வானவெளி சென்றும் வேறு கிரகங்களுக்கு குடி பெயர்வதும் நமது நிலைத்தன்மையை பாதுகாக்க உதவிடும். ஆனால், இது அடுத்த 100 வருடங்கள் வரை நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு வேளை, மரபனு ஆய்வின் வாயிலாக நாம் விவேகம் மிக்கவர்களாகவும், சாந்தகுனமுடையவர்களாகவும் ஆகிடுவோம் என நம்பிக்கை கொள்வோமாக.

பஹாய் எழுத்துக்கள் இது குறித்து என்ன தெரிவிக்கின்றன?

இறைவன் மனிதனை அவன் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக படைத்துள்ளார். இறைவனின் படைப்புக்கு அளவில்லை மற்றும் அவர் இருக்கும் வரை அவருடைய படைப்பும் இருந்துவரும். இறைவனின் படைப்புகளிலேயே அதிசிறந்த படைப்பாக மனிதன் விளங்குகிறான். மற்ற அனைத்தையும் அவற்றின் சாயலாகவே படைத்த இறைவன் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் மற்றும் அவனுக்கு அவருடைய வழிகாட்டல் என்றென்றும் உண்டெனும் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.

அறிவியலாளர் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் இறைவன் குறித்தும் அவரது படைப்பாகிய மனிதனை குறித்தும் ஓர் அறிவியலாளர் எனும் முறையில் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக முதலில் நான் பாரம்பரிய வழக்காக வந்துள்ள ஐந்து காரணங்களை சமர்ப்பிக்கின்றேன்.

பிரபஞ்சவியல் வாதம்

இப் பிரபஞ்சத்தின் உளதாம்நிலையின் தாக்கத்திற்கு தகுந்த காரணம் ஒன்று இருக்கவேண்டும்.

இயல்திட்டவாதம்

இப் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அதன் பின்னனியில் ஒரு நோக்கத்தை அல்லது திசையை சுட்டுகின்றது

விவேகவாதம்

கட்டொழுங்கும் இயல்பான விதிமுறையும் பெற்றுள்ள இப் பிரபஞ்சத்தின் இயக்கமுறை அதன் பின்னனியில் அறிவாற்றல் ஒன்றை சுட்டுகின்றது.

மெய்ப்பொருள்மூலவியல்வாதம்

இறைவன் குறித்த மனிதனின் எண்ணங்கள் அல்லது விழிப்புணர்வு அத்தகைய விழிப்புணர்வினை அவனுள் பதித்துள்ள ஓர் இறைவனை சுட்டுகின்றது.

நெறிமுறைவாதம்

மனிதன் இயல்பாகவே பெற்றுள்ள நன்மை மற்றும் கெடுதல் குறித்த உள்ளுணர்வு அவன் தான் உள்ளார்ந்த நிலையில் பெற்றுள்ள, ஏதோ ஓர் உயர்ந்த ஆற்றலால் அவனுள் பதிக்கப்பட்ட, ஒரு விதிமுறை தொகுப்பை பிரதிபலிக்கின்றது.

அதாவது மனித சக்திக்கும் மீறிய தெய்வீக சக்தி ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் மனிதன் வாழ்ந்து வருகின்றான். அச்சக்தி அவனுக்கு வேண்டியதை வழங்கியும், வழிகாட்டியும் வந்துள்ளது, இனியும் அது அவ்வாரே தொடர்ந்து செய்து வரும். அதாவது மனிதன் இறைவனாலும், அவரது குறிப்பிட்ட திட்டம் ஒன்றின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளான். இத்திட்டத்திற்கேற்ப அவன் தான் படைக்கப்பட்டதிலிருந்து இதுவரை வளர்ச்சியடைந்து வந்துள்ளான். விஞ்ஞானிகள் மனிதன் ஒரு காலத்தில் ஓர் அனுவின் நிலையில் கடல் நீரில் வாழ்ந்தும் பிறகு சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சியடைந்து நிலத்தில் வாழும் ஓர் ஜீவனாகவும், பிறகு மரத்தில் குரங்கைப் போல் வாழ்ந்தும், பின் படிப்படியாக கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம், என பல படிகளைத் தாண்டி இப்போதிருக்கும் நிலையை அடைந்துள்ளான். அதாவது பாலப்பருவத்தைக் கடந்து அவன் இப்போது வாலிப பருவத்தை அடைந்துவிட்டான். இதுகாறும் உலகில் ஏற்பட்டு வந்துள்ள சச்சரவுகளும் சண்டைகளும் மனிதனின் முதிர்ச்சியின்மை மற்றும் இறைவன் அவனுக்கென வழங்கியுள்ள நல்லது கெட்டதை தேர்வு செய்யும் விசேஷ ஆற்றலின் விளைவுகளாகும். உடல் ரீதியாக அவனது பரிணாம வளர்ச்சி ஒரு நிலையை அடைந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டிய கட்டத்தில் உள்ளான்.

ஆனால் மனிதன் தனது விசேஷ ஸ்தானத்தை நோக்கி வளர்ச்சியடையும் அதே வேளை, அவன் கடந்து செல்ல வேண்டிய கரடு முரடான பாதை குறித்து பஹாய் எழுத்துக்களில் நிறையவே காணலாம். நமது உடனடி எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்த போதும், அதற்கு பின் வரும் காலம் ஒளிமயமானதாக இருக்கும் என பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எபெஃண்டி கூறியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதன் குழப்பங்கள் மற்றும் பேரழிவுகள் பலவற்றைச் சந்தித்து அவற்றின் பயனாக நல்ல அனுபவம் அடைந்து தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்து தனது படைப்பினுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தை காண்பான்.

வாசகர் ஒருவரின் பதில்

நெடுங்காலமாக அரசியல் சமூக குழப்பங்கள் நம்மோடு கூடவே இருந்துவந்துள்ளன. கடந்த கால மற்றும் நிகழ்கால புரட்சிகள், வகுப்பு கலவரங்கள், ஆட்சியை கைப்பற்ற நினைப்போரின் தீச்செயல்கள் ஆகியவற்றை கண்ணுறுகையில், மனுக்குலம் வெகு சிறந்த மீளுந்தன்மையை வெளிப்படுத்தியும் இதுவரை நிலைமையை நன்கு சமாளித்தும் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.

மனுக்குலம் மற்றும் இயற்கை சார்ந்த பிற ஜீவனங்களுக்கிடையிலான சமநிலை சமன்பாடு குறித்த புதிய காரணக்கூறுகளை காண்போம். அரசியல் சமூக குழப்பங்கள் ஆகியவை உருபெறும் வழிவகைகளை மாற்றியமைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள், மற்றும் சுற்றுச் சூழல் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல தொழில்துறை மேம்பாடுகள் இத்தகைய காரணக்கூறுகளாகும். அனு ஆயுத போர் மிரட்டல்கள், உயிரியல் பேரழிவு, தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து பிழைக்கப்போகிறது எனும் கேள்வியை எழுப்புகின்றன.

என் தனிப்பட்ட கருத்து யாதெனில், உலகில் மனுக்குலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மிரட்டல்களின் வளர்ச்சியினூடே, மனித நுன்னறிவாற்றலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். தொழில்துறை அறிவியல் எனும் பிராங்க்கன்ஸ்டைன் (Frankenstein) அரக்கனை நாம் இன்னமும் கட்டவிழ்த்துவிடவில்லை. பன்மடங்காக அனுவாயுத கையிருப்புகள் வளர்ச்சி கண்டுள்ள போதும் இதுவரை உலகளாவிய யுத்தம் ஏதும் ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி மேம்பட்ட மறுமலர்ச்சி நிலையில் உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் கவலையளிப்பதாக இருப்பினும், மனுக்குலம் இதுபோன்ற நிலை மாற்றங்களை, கடந்து சென்ற காலங்களில் சமாளித்தது போன்று இக்காலத்திலும் சமாளிக்கவே செய்யும் என்பது என் நம்பிக்கை.

மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து சமாளிக்கப்போகின்றது என்பதே இங்கு முதன்மையான கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வாய்த்துள்ள மூலவள ஆதாரங்கள் ஒரு நூற்றண்டு காலத்திற்கு பிறகு நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இல்லாத வள ஆதாரங்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல், மனுக்குலம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒர் இனமாகும். வள ஆதாரங்களுக்கான ஒரு வாசல் மூடப்படும் போது, அதற்கான மற்றொரு வாசல் திறக்கவே செய்யும்.

சகல உலக காரியங்களின் மேம்பாட்டின் வேகம் நிச்சயமாகவே அதிகரித்துள்ளது. இந்த வேகத்தோடு நாம் போட்டியிட இயலுமா? நம்மில் பலருக்கு இது இயலாத ஒன்றாக இருக்கும். ஆனால் 14ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கினர் ஒரு வகை நோயினால் அழிந்துபோயினர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஐரோப்பா அதிலிருந்து மீள்ந்தும் மேம்பாடு காணவும் செய்தது. ஒரு வேளை அதே போன்ற ஒரு பேரழிவை நாம் இக்காலத்திலும் காணக்கூடும், ஆனால் அத்தகைய பேரழிவிலிருந்தும் மனுக்குலம் மீண்டுவிடும் என்பதே என் எண்ணம்.

மனுக்குலத்தின் மீது நான் ஏன் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டுள்ளேன்? கண்டிப்பாக அவ்விதம் நான் நம்பி்க்கை கொள்ளவேண்டும். மானிட இனமெனும் முறையில் நாம் முதிர்ச்சியடையும் அதே வேளை நாம் தொடர்ந்து மேம்பாடு கண்டும் நம்மைத் தாக்கும் சமூக குழப்பங்களிலிருந்து மீளவும் செய்வோம் எனும் நம்பிக்கையின்றி இருப்பதற்கு பதிலாக, நாம் மனதில் எந்த பிடிப்பும் இல்லாமலேயே இருந்துவிடலாம். நான் இங்கு சமய நம்பிக்கை குறித்து பேசவில்லை (தற்போதைய நிலையில் உள்ள சமய நம்பிக்கைகள் ஒரு வேளை அதற்கு பங்காற்றலாம்) மாறாக, நாளை சூரியன் உதிப்பது எப்படி உறுதியோ அதே போன்று நாமும் பிழைத்திருப்போம் எனும் நம்பிக்கை குறித்தே பேசுகின்றேன்.

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது…


நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.  இத்தகைய பிரார்த்தனைகள் நோயை குணப்படுத்த உதவுகின்றனவா, அப்பிரார்த்தனையில் நாம் என்ன வேண்டுகிறோம் மற்றும் நாம் வேண்டுவதுதான் அந்நோயாளிக்குத் தேவையா என்பது போன்றவை குறித்த ஆய்வே பின்வரும் கட்டுரை.

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா?

ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, “நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவுகின்றது” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.

பிரார்த்தனையால் நாம் ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் பற்றி ஏதும் அறியாத நிலையில், இது குறித்த முதல் பிரச்சினை, அது பற்றிய ஒரு பரிசோதனையை வடிவமைப்பதாகும்.

“பிரார்த்தனையின் நோக்கம் ஆயுள்காலத்தை நீட்டிப்பது மட்டுமா?” என அவர் மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நேர்முகத்தின்போது வினவினார்.

அவர் பஹாய் போதனைகள் குறித்த தமது அறிவின் அடிப்படையில், அக்கேள்விக்கு பதிலளிக்க முனைந்தார். “இவ்வுலக வாழ்வின் நோக்கம் நீண்ட ஆயுள்காலம் மட்டுமல்ல. நமது வாழ்வின் நோக்கம் கடவுளை அறிந்துகொள்வது, அவரை வழிபடுவது மற்றும் அவருக்குச் சேவைபுரிவதாகும்.”

ஒருவரின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக அவருக்கு மேலும் அதிகமான கடுந்துன்பங்கள் ஏற்படுமாயின், அச்சூழ்நிலைகள் குறித்து என்ன செய்வது?” என அவர் வினவினார். அப்படியாயின், பிரார்த்தனையால் நாம் விரும்பும் விளைவுகள்தான் என்ன?

நாம் பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையால் நாம் விரும்பக்கூடிய விளைவுகள் யாதென நமக்கே தெரியாத நிலையில், ஓர் அறிவியலாளர் ஒரு பிரார்த்தனை தேவையான விளைவை ஏற்படுத்தியதாவென எவ்வாறு தீர்மானிக்கக்கூடும்?

“உண்மையில் நாம் இங்கு எதை அளவிடுகின்றோம் என்பது நமக்கே தெரியாது,” என டாக். குட்டுஸி கூறினார்.

“நலமடைதல் மற்றும் மறுதேர்ச்சியில் பிரார்த்தனையின் விளைவுகள்: “இதன் தொடர்பான எழுத்துக்களை மீளாய்வு செய்தல்,” என்பதே சான் டியேகோவில் 1 செப்டம்பரில் முடிவுற்ற பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் நான்கு நாள் நிகழ்ச்சியில் அவரின் படைப்பாக இருந்தது.

கனடாவின் மனிடோபா பல்கலைகழகத்தில் otolaryngology எனப்படும் கண், காது, மூக்கு மற்றும் தலை தொடர்பான நோய்கள் குறித்த மூன்றாவது ஆண்டு ரெசிடன்ட் மருத்துவரான டாக். குட்டுஸி, பிரார்த்தனையின் விளைவுகள் குறித்த தமது ஆய்வு குழப்பமான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

ஆனால் “meta-analysis” எனப்படும் ஆய்வுமுடிவுகளை தொகுதி சேர்க்கும் முயற்சி அளவிடக்கூடிய எவ்வித பயன்விளைவையும் வெளிப்படுத்தவில்லை, என அவர் தெரிவித்தார்.

ஆகவே, பிரார்த்தனை எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை எனப் பொருள்படுமா?

இல்லை, என்கிறார் அவர், ஏனெனில், எதை அளவிடுவது என்பதைத் தீர்மானிக்கும் பிரச்சினை போக, இவ்விஷயத்தைக் குழுப்பிவிடும் வேறு பல விஷயங்களும் உள்ளன – இவை அறிவியல் ரீதியான ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தும் தேவைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். உதாரணமாக:

  • தீவிரமாகப் பிரார்த்திப்பது அவசியமாகின்றதா? அவ்வாறு இருப்பின், அத்தீவிரத்தை நாம் எவ்வாறு அளவிடக்கூடும்?
  • எத்தனை பேர்கள் பிரார்த்திக்கின்றனர் என்பது முக்கியமா?
  • நாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ அந்நபர் அதற்குப் பாத்திரமானவர்தானா? தெய்வீக மன்னிப்பு இதில் என்ன பங்காற்றுகின்றது?
  • நோயின் தீவிரத்தை நாம் கருத்தில்கொள்ள வேண்டுமா?
  • இதில் சம்பந்தப்பட்ட மக்களின் சமய நம்பிக்கை, அல்லது அத்தகைய ஈடுபாடில்லாமை, பயன்விளைவைப் பாதிக்கின்றதா?
  • மக்கள் சதா யாருக்காவது பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் கடவுளின் கருணை தொடர்ச்சியானது மற்றும் எல்லையற்றதாக இருக்கும் பொழுதினில், இந்த ஆய்வுக்குச் சீர்நிலையான அல்லது நிலைமாற்றம் உறாத (control) ஆய்வுக் குழுமம் ஒன்றை நாம் உண்மையில் கொண்டிருக்க முடியுமா?

தமது அளிக்கை நிகழ்வில், டாக் குட்டுஸ் பஹாய் எழுத்துக்களிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்காட்டினார். அவற்றின் வாயிலாகப் பிரார்த்தனை இன்றியமையாதது ஆனால் அதன் விளைவுகள் எப்போதுமே வெளிப்படையானவையல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

பிரார்த்தனைகள் குறித்த பஹாய் போதனைகள்

அவர் பஹாய் எழுத்தோவியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார்: “உனது பிரார்த்தனை உன்னை நெருப்பிற்ககே வழிநடத்திச் சென்றாலும், அதே போன்று உனக்குச் சுவர்க்கமே பிரதிபலனாகக் கிடைத்தாலும் உனது வழிபாட்டில் எவ்வித மாறுபாடுமற்ற முறையில் நீ கடவுளைப் பிரார்த்திப்பாயாக.”

கடவுளின் ஓர் அவதாரமென பஹாய்களால் கருதப்படும் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, நோய்கண்ட காலங்களில் “திறமையான மருத்துவர்களை” நாடவேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகின்றார், அதே வேளை நோய் நிவாரணத்திற்கான பிராத்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குணப்படுதலுக்கான சில பிரார்த்தனைகளை பஹாவுல்லாவின் மூத்தத் திருமகனாரும் அவரது போதனைகளுக்கான விளக்கவுரையாளருமான அப்து’ல்-பஹா அவர்கள்: “குணப்படுத்துதலுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரார்த்தனைகள் பெளதீக, ஆன்மீக நிலைகள் இரண்டிற்குமே பொருந்தும். ஆகவே, ஆன்மா, உடல் இரண்டுமே குணமடைய அவற்றை(பிரார்த்தனைகளை) கூறுங்கள். நோயாளிக்கு உடல்நலனே முறையானதெனும்போது அது நிச்சயமாக வழங்கப்படும்; ஆனால் சில நோயாளிகளுக்கு அந்த நோயிலிருந்து குணப்படுவது வேறு பல நோய்களுக்குத் தோற்றுவாயாக நேரிடும், ஆகவே அப்பிரார்த்தனைக்கான உறுதியான பதிலை விவேகம் அனுமதிக்கவில்லை.”

டாக். குட்டுஸி அப்து’ல்-பஹாவின் பின்வரும் வாசகக் குறிப்பைப் படித்துக் காட்டுகின்றார்: “நீ வேண்டுவதை அவரிடம் மட்டுமே கேள்… ஒரே பார்வையில் அவர் ஓர் நூறாயிரம் நம்பிக்கைகளை வழங்கிடுவார், ஒரு தலையசைவில் அவர் காயம் ஒவ்வொன்றிற்கும் தைலமிடுவார்.”

டாக். குட்டுஸி வாசித்த பின்வரும் பகுதியில் அப்து’ல்-பஹா பிரார்த்தனை மற்றும் குணப்படுதலை விசேஷமாகக் குறிப்பிடுகின்றார்: “நோய் என்பது இருவகைப்படும்: ஆன்மீகம் மற்றும் பெளதீகம். வெட்டுக்காயம் பட்ட ஒரு கையை எடுத்துக்கொள்ளுங்கள்; காயம் ஆற வேண்டுமென மட்டும் பிரார்த்தித்துவிட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தாமல் இருப்பது எவ்வித நன்மையையும் விளைவிக்காது; பெளதீக ரீதியான குணப்பாடு தேவைப்படுகின்றது.”

மேலும்: “பெளதீக விபத்துக்களால் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் குணப்படுத்தப்பட வேண்டும்; ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் நோய்கள் ஆன்மீக ரீதியில் குணப்பாடு காணும்… இவ்விருவகையான வைத்தியமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை இரண்டும் ஒன்றுக்கொண்று எதிரானவையல்ல, மற்றும், தமது சேவகர்கள் அத்தகைய வைத்தியத்தாலும் பயனடைய வேண்டுமென மருத்துவ அறிவியலை வெளிப்படுத்தியுள்ளவரான, கடவுளின் கருணை மற்றும் சலுகைகளிலிருந்தே பெளதீக நிவாரணங்கள் தோன்றுகின்றனவென நீர் அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும். நீர் ஆன்மீக வைத்தியமுறைகளுக்கும் சரிசமமான கவனம் செலுத்தவேண்டும், ஏனெனில் அவை வெகுசிறப்பான பயன்விளைவை ஏற்படுத்துகின்றன.”

டாக். குட்டுஸ் அவர்களால் வாசிக்கப்பட்ட மற்றொரு குறிப்பில், அப்து’ல்-பஹா நோயுற்றோருக்கான பிரார்த்தனை குறிப்பாக எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விவரிக்கின்றார்:

” ஒரு வலுவான மனிதர் ஒரு நோயாளி ஆகியோருக்கிடையே ஓர் இணக்கமான தொடர்பு ஏற்படும் வகையில் தனது முழுநம்பிக்கைக் குவிப்புடன் ஒருவர் ஒரு வலுவான மனிதரின் ஆன்மீக ஆற்றலிலிருந்து குணப்பாடு விளையும் என ஒரு நோயாளி எதிர்ப்பார்க்கும்போது அந்த வலுவான மனதினர் நோயுற்றவரின்பால் செலுத்தும் முற்றான கூர்கவனத்தால் (ஆன்மீக குணப்பாடு) விளைகின்றது. அந்த வலுமிக்க மனிதர் அந்த நோயாளியை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், பிறகு அந்த நோயாளி தாம் குணப்படுவோம் என்பதில் உறுதியடைகின்றார்…

“ஆனால் இவை யாவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விளைவுகள் உண்டாக்குகின்றன, அதுவும் எல்லா வேளைகளிலும் அது நடைபெறுவதில்லை. ஏனெனில், ஒருவர் மிகவும் கொடுமையான நோயால் பாதிப்படைந்திருக்கும்போதோ, காயமுற்றிருக்கும்போதோ, இத்தகைய வழிமுறைகள் அந்நோயை அகற்றவோ அக்காயத்தை ஆற்றிடவோ முடியாது.

அறிவியல் ஆராய்ச்சி

பிரார்த்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அப்துல் பஹாவின் விளக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தாம் வெகு ஆர்வத்துடன் காண விரும்புவதாக டாக். குட்டுஸி கூறினார். இருந்தபோதும், சாத்தியமே இல்லாத அச்சூழ்நிலையில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றை வடிவமைக்க முடிந்தாலும் (“ஆன்மீக ரீதியில் ‘வெகு வலுவானவர்’ ஒருவரை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என அவர் வினவினார்,) பிரார்த்தனைகள் “ஒரு குறிப்பிட்ட அளவே விளைவுகள் ஏற்படுத்தும், அதுவும் அது எல்லா வேளைகளிலும் நடைபெறப்போவதும் இல்லை,” எனும் அப்துல் பஹாவில் கூற்றின் அடிப்படையில் நாம் எதையுமே நிரூபிப்பது சாத்தியப்படாது.

குணப்படுத்தும் பிரார்த்தனைகளின் ஆக்கவிளைவுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி அப்து’ல்-பஹா விவரித்துள்ள அச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே நடந்துள்ளது.

உதாரணமாக, சில ஆய்வுகளில், இருதய சிகிச்சை குறித்த ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இருதய கண்கானிப்புப் பிரிவில் உள்ள நோயாளிகள் ஆபரேஷனுக்குப் பிறகு எவ்வாறு தேறி வருகின்றனர் என்பதை சில ஆய்வுகளின் வாயிலாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு ஆய்விலும் நோயாளிகள் ரேண்டம் முறையில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டனர். அவற்றில் பாதி பேர்களுக்கு அந்த நோயாளிகளுக்கே தெரியாத சிலரைக் கொண்டு அவர்கள் குணமடைய பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களுக்கு ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பொதுவாக, அளவிடப்படக்கூடிய எவ்வித விளைவும் அங்கு காணப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொள்ளும் போது அம்முடிவுகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் டாக். குட்டுஸி கூறினார்.

தமது அளிக்கையின் போது, திடீரென டாக். குட்டுஸி, மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வெளியிடுவதனால் கடவுள் தாம் விரும்பும் குறிக்கோளிலிருந்து அப்பால் விலகுவாறா என வினவினார்.

அவர் டாக். எட்வர்ட் சி. ஹால்பெரின் எனும் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் ஆய்வை எடுத்துக்காட்டினார். ஒரு மருத்துவரீதியான ஆய்வில், முன்பின் அறியாதாரால் பிரார்த்திக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் காட்டிலும் எவ்வித பிரார்த்தனைக்கும் உட்படுத்தப்படாதோரை குணப்படுத்தும், தன்விருப்பமாக குணப்படுத்தும் ஒரு கடவுள் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு சற்ற சிரமாகவே இருக்கும். கடவுள் இவ்வாறாக முறண்பாடானவர் என கருதப்படக்கூடாது.”

டாக். குட்டுஸி தமது முடிவுரையில் பிரார்த்தனை குறித்த இவ்விதமான ஆராய்ச்சி சிலர் கூறுவது போல் கடவுள் நிந்தனையென தாம் கருதவில்லையென கூறினார்.

ஆனால் அறிவியல் நோய் நிவாரணத்திற்கு ஏதுவாக பிரார்த்தனையின் பயனுறுதியை அதன் அடிப்படையிலான ஆய்வின் போது வெளிப்படுத்தக்கூடுமாவென அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இது முக்கியமா எனும் கேள்விக்கு, அவர் அது முக்கியமல்லவென கூறினார். இருந்த போதும் அதை நிரூபிப்பது ஆர்வமளிப்பதாகவே இருக்கும் என்றார்.

(http://bci.org/prsamy/html/bns656.html)

மாற்றங்களும் மேம்பாடும்


இந்த பூமி தனியே உருவாக்கப்படவில்லை. ஆரம்பத்தில்  “பெருவெடிப்பு” (Big Bang) அல்லது அதிர்வெடி ஒன்றிலிருந்து ஒன்றாக இருந்த பொருள் அல்லது வஸ்து (matter) அண்டசராசரங்களாக, தீக்குழம்புக் கோள்களாக திக்கெல்லாம் தெறித்துச் சிதறி இன்று நாம் காணும் இந்த நிலைக்கு, பேரண்டமாக, அண்டங்களாக, மண்டலங்களாக, கோள்களாக, வின்கற்களாக உருவெடுத்துள்ளன. ஆம்பத்தில் ஒன்றாக இருந்தது மாற்றம் கண்டு இன்று பலவாக பல்கிப் பெருகியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த பூமி ஒரு தீக்குழம்புக் கோளாகவே இருந்துள்ளது. பிறகு சிறுகச் சிறுக குளிர்ந்து வாயு வகைகள் வாயுக்களாகவும், ஆவியாக இருந்த திரவ வகைகள் குளிர்ந்து அந்த அந்த திரவ வகைகளாகவும், குழம்பாக இருந்த வஸ்து வகைகள் இருகிய வஸ்துக்களாகவும் மாறின. பூமியின் மேல் தளத்தில் குளிர்ந்து திரவ நிலைக்கு வந்த நீராவி பிறகு ஆறுகளாகவும் சமுத்திரங்களாகவும் உருவெடுத்தது.

சமுத்திரங்களின் தோற்றத்தினால் அவற்றில் உயிரனங்கள் தோன்றுவதற்குச் சாதகமான  சூழ்நிலை உருவாகியது. ஆரம்பத்தில் ஓருயிரணுவாகவும் பிறகு அவை தங்களுக்குள் பிளந்து பல்கூறு நிலை உயிரணுக்களாகவும் மாறின. இப்படியே பல கட்டங்களான மாற்றங்களினால் நீர்வாழ் உயிரினங்களாகவும், அவை மேம்பாடடைந்து நீரிலும் நிலத்திலும் வாழும் நிலைக்கும், இவையும் மேம்பாடு அடைந்து முழுமையாக நிலத்தில் வாழும் ஆற்றல் பெற்றன.

நிலத்தில் வாழும் உயிரினங்களிலும் காலப்போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு “டைனசோர்” (dynosaur) வகை மிருகங்கள் தோன்றின. இவை பல கோடி வருடங்கள் உலகில் வெற்றிகரமாக வாழ்ந்து இறுதியில் பிரமாண்ட வின் கல், அல்லது சிறு கோள் ஒன்று பூமியைத் தாக்கியதால் இந்த இராட்சத மிருகவகைகள் அழிந்தன. ஆனால், இந்த இராட்சத மிருகங்களின் நிழலில் வாழ்ந்த சிறு வகை மிருகங்கள் இந்த தாக்குதலில் அழியாமல் வேறு வகைகளான ஊர்வனவாகவும் பாலூட்டிகளாகவும் பரிணமித்தன. இவற்றினூடே மனிதனும் தோன்றினான்.

ஓரணுவாக, பன்னணுக்களாக, நீர்வாழ் ஜந்துவாக, பிறகு நீர்நிலவாழி (amphibian) வகைகளாக, அதன் பிறகு நிலம் வாழ் உயிராக, குரங்கு போன்றிருந்து முழு மனிதர்களாக நாம் இன்று மேம்படு அடைந்துள்ளோம்.

அதாவது, மாற்றம் என்பது மேம்பாடு அடைவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். மாற்றங்கள் இல்லாமல் மேம்பாடு இல்லை. மேம்பாடு வேண்டுமானால் மாற்றங்கள் வேண்டும்.

மனிதனின் வாழ்க்கை முறையிலும், அவன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலிருந்து கற்காலம், வெண்கலம், இரும்பு காலங்கள் எல்லாமே மனிதன் மாற்றம் பெற்றதினால் ஏற்பட்ட மேம்பாடுகள். சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதவாழ்வில் பெரும் மாற்றம் ஒன்று ஏற்பட்டது. வேட்டுவ-சேகரிப்பாளர்களாக இருந்த மனிதர்கள் விவசாயத்தை கற்றுக்கொண்டு நெல் போன்றவற்றை பயிர் செய்தனர். இதனால் மனித வாழ்வில் தினமும் வேட்டையாட வேண்டும், கனி மற்றும் பிற உணவுப்பொருட்களை சேகரிக்கவேண்டும் எனும் நிர்ப்பந்தம் நீங்கியது. மனிதனின் கவனம் மற்ற விஷயங்களின் பக்கம் திரும்பியது. ஆன்மீகம் தோன்றியது, கலாச்சாரம் தோன்றியது. எல்லா மேம்பாடுகளுமே மானிடத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டாயின.

ஆனால் சில விஷயங்களில் மனிதன் மாற்றம் காண மறுத்து வருகிறான். சமயவேறுபாடுகளை களைவதற்கு, இனவேறுபாடுகளை களைவதற்கு, பொருளாதார வேறுபாடுகளை நீக்குவதற்கு மனிதர்கள் சுணக்கம் காண்பிக்கின்றனர். இன்று உலகில் நிலவும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இத்தகைய வேறுபாடுகளே காரணமாக உள்ளன. பஹாவுல்லாவின் பின்வரும் குறிப்பைக் காண்போம்:

“உலக மக்களே, நீங்கள் அனைவரும் ஒரே மரத்தின் கனிகள், ஒரே கிளையின் இலைகள்”

நாம் அனைவருமே ஒரே கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம், ஒரே நிலத்தில் வாழ்கின்றோம் அந்த ஒரே நிலம் நமக்கு உணவளிக்கின்றது, ஒரே சூரியன் நமக்கு ஒளி கொடுகின்றது மற்றும் வாழ்வாதாரமாக இருக்கின்றது, ஒரே வானம் மழை கொடுக்கின்றது. இத்தனை இருந்தும் மனிதர்களாகிய நாம் இன்னமும் மதத்தால், நிறத்தால், இனத்தால், பொருளாதாரத்தால், பிளவுபட்டு கிடக்கின்றோம். இத்தகைய குறுகிய சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த மறுக்கின்றோம். பஹாவுல்லாவின் மற்றொரு குறிப்பு பின்வருமாறு:

என்றென்றும் தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகத்தினை முன்னெடுத்துச் செல்லவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்.

நாம் பகுத்திறிவில், ஆன்மீக ஆற்றலில், கலாச்சாரத்தில், நாகரிகத்தில் மேம்பாடுகள் காண வேண்டுமானால் மனிதர்கள் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக நமக்கு சமய ரீதியில் மாற்றம் தேவை. சமயங்கள் அனைத்தும் ஒன்றே என கண்டுகொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இத்தகைய சிந்தனை மாற்றத்திற்கு உதவியாக பஹாவுல்லா தமது போதனைகளை உலகிற்கு வழங்கியுள்ளார். அவர் கேட்டுக்கொள்வதெல்லாம், அவரது போதனைகளை ஒவ்வொரு மனிதனும் சுயமாக ஆராய வேண்டுமென்பதே. இறைவன் நமக்குக் கொடுத்துள்ள பகுத்தறிவாற்றலைப் பயன்படுத்தி சுயமாக சிந்தித்து பஹாவுல்லாவின் போதனைகளை ஆய்வு செய்து அவற்றில் உலகின் மேம்பாட்டிற்கான வழிவகைகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.