செக்ஸ் (உடலுறவு) என்பது ஒரு திருமணப் பரிசு மட்டுமே


திருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொள்வதில் என்ன தவறு?


நன்றி: http://endlessmargrita.wordpress.com/2014/02/21/what-is-so-wrong-in-sex-before-marriage/
(பதிவாளரின் கருத்துகள் பெரும்பாலும் பதிவில் உள்ளவாறு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன)

எச்சரிக்கை: எழுத்தாளரின் கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றுடன் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்போருக்கு இப்பதிவு சங்கட உணர்வை ஏற்படுத்தலாம். ஆகவே, நீங்கள் உங்கள் சொந்த கருத்துகளைக் கொண்டிருக்க வரவேற்கப்படுகின்றீர்கள். நீங்கள் கொண்டிருக்கும் அக்கருத்துகளை தற்காத்திட வேண்டிய அவசியமில்லை. நன்றி

அன்பார்ந்த நண்பர்களே,

இன்று எனது பதிவு, குறிப்பிட்ட சிலருக்காக எழுதப்பட்டுள்ளது. ஆனால், நீங்களும் அதைக் கண்டிப்பாகப் படிக்கலாம்.

அன்பார்ந்த ஜோடிகளே,

Wedding Clipart 21
புதுமண ஜோடி

உங்களை எனக்குத் தெரியாது, என்னை உங்களுக்குத் தெரியுமா என்பதும் தெரியாது. சில விஷயங்களை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன், அவற்றைத் தயவு செய்து கவனமாகப் படிக்கவும். சில நேரங்களில் நான் எழுத விரும்புவதால் எழுதுகிறேன், ஆனால், சில நேரங்கள் எழுத வேண்டியதால் எழுதுகிறேன். அவ்வாறு எழுத வேண்டுமென தோன்றுவதற்கான காரணம், அஃது என்னுள் எழுகின்ற, என்னால் தவிர்க்கவியலாத ஒரு மர்மமான உந்துதலே காரணமாகும்.

இவ்வுலகில் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்பது நமக்குத் தெரியும். அதாவது அன்பு. ஆனால், இவ்வுலகம் எவ்வாறு அன்பை பாலுறவோடு (செக்ஸ்) தொடர்புபடுத்துகிறது என்பது வேடிக்கையாக உள்ளது. அஃது உண்மையிலேயே அவ்வாறுதானா?

அன்பு என்றால் உண்மையில் என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா என்பது எனக்குத் தெரியாது. வெகு எளியமையாகக் கூற வேண்டுமானால், அன்பு என்பது தியாகத்திற்குச் சமமான ஒன்றாகும். எனக்குத் தெரியும், இஃது உங்களால் கிரகிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் ஒருவரை உண்மையிலேயே விரும்பினால் நீங்கள் அவருக்கு எது சிறந்ததென நினைக்கின்றீர்களோ அதையே செய்திடுவீர்கள் அல்லவா? உங்களுடைய தேவைகளைவிட அவர்களுடைய தேவைகளுக்கே நீங்கள் முதன்மை அளிப்பீர்கள். நீங்கள் உங்களுடைய மகிழ்ச்சியைவிட அவர்களுடைய மனமகிழ்ச்சியைப் பற்றியே அதிகமாகச் சிந்திப்பீர்கள். உதாரணமாக, என் தாயார் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால், தமக்கும் மிகவும் பிடித்த சுவையான உணவில் பெரும் பகுதியை எனக்களித்துவிட்டு, தாம் அதில் சிறிதளவே உண்கின்றார். என்ன செய்வது, அன்பு தியாகத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை நீங்கள் தியாகம் செய்கிறீர்கள். அது கஷ்டமான ஒன்றுதான்… ஆனால், நீங்கள் உண்மையிலேயே ஒருவரை அதிகம் நேசித்தீர்களானால், நீங்கள் நிச்சயமாக அவருக்கு இதைச் செய்வீர்கள். ஆனால், அஃது உங்களுக்கு சிரமமாகத் தெரிந்தால், ம்ம்ம்ம… ஒருவேளை உங்கள் அன்பு உண்மையான அன்பெனும் தரத்தை இன்னமும் அடையாது இருக்கலாம்.

சரி, இப்போது நான் இதுவரைப் பதிவு செய்யாத ஒரு விஷயமான, பாலுறவு அல்லது செக்ஸ் பற்றி உரையாடுவோமே. உலகம் செக்ஸ் உறவை மிகக் கெட்டதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் வருணிக்கின்றது. செக்ஸை சுயநலமான ஒன்றெனவும் இன்பம் பெறுவதையே, அஃது உள்ளடக்கியுள்ளது என்றும் பறைசாற்றுகின்றது. ஒருவரின் சிற்றின்பக் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்வதே அதன் நோக்கமாகவுள்ளது எனும் ஒரு தோற்றத்தையும் அஃது ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்கள் எனும் முறையில் நமது உடல் சார்ந்த தேவையான, காம இச்சைக்கு நாம் ஆளாகிவிடுகின்றோம். இன்று உலகம் செக்ஸ் எனும் சொல்லுக்கு வேறு வார்த்தை ஒன்றோடு, ஆங்கிலத்தில் ‘F’ எனும் ஒரு வார்த்தையில் ஆரம்பிக்கும் ஒரு சொல்லோடு தொடர்புப்படுத்தியுள்ளது. சில காரணங்களினால், மக்கள் அவ்வார்த்தையை ஒவ்வொரு வாக்கியத்திலும் பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை அவ்வார்த்தையைப் பயன்படுத்துவது ‘கூல்’ (cool) அதாவது சகஜமான ஒன்றெனக் கருதுகின்றனர்.
சரி இப்போது சில அடிப்படைகளைப் பார்ப்போம். கடவுள் உடலுறவு எனும் ஒன்றை ஏன் படைக்க வேண்டும், பிறகு அது நமக்கு கெடுதலான ஒன்றென ஏன் கூறவேண்டும்? அஃது அவ்வாறுதான் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. புனித நூல்கள் உலக மரபுகள் பலவற்றோடு முரண்படுகின்றன. உலகம் செக்ஸை கெட்டதெனக் கூறுகின்றது! ஆனால், புனித நூல்களோ அதற்கு நேர்மாறான ஒன்றாக அதைப் பார்க்கின்றன! செக்ஸ் என்பது ஒரு பரிசாகும்! நேற்று ஒரு சொற்பொழிவைச் செவிமடுத்தேன். அங்கு சொற்பொழிவாற்றியவர், ‘செக்ஸ் என்பது திருமணமான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் கடவுள் அருளியுள்ள திருமணப் பரிசு!’ எனக் குறிப்பிட்டார்.

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவ்வார்த்தைகளை நான் செவிமடுத்தபோது அது மிகவும் அழகானதொரு கருத்தாக எனக்குத் தோன்றியது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பாலுறவு எனும் ஒன்றைக் கடவுள் படைத்ததானது, முதலாவதாக, அஃது இனப்பெருக்கத்திற்காகவும் இரண்டாவதாக, அது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் ஆகும்.
அதாவது, பாலுறவு என்பது கொடுக்கும் தன்மை குறித்த ஒன்றாகும். அது கொடுத்தல் பற்றிய குறிக்கோளுக்குத் துணைபோகின்றது. அதாவது பிள்ளைகள் பெறுவதும் உங்கள் துணைவர் அல்லது துணைவிக்காக உங்களை நீங்கள் அர்ப்பணிப்பது. அஃது (உடலுறவு) உங்கள் வாழ்நாள் முழுவதையும் யாருடன் கழித்திட விரும்புகின்றீர்களோ அவர்களோடு நீங்கள் இன்புற்றிருக்க வேண்டிய ஒரு விஷயமாகும். அது புனிதமானது, பிரத்தியேகமானது, உண்மையில் அது பவித்திரமிக்கது. ஒருவரை ஆழமாக விரும்பும்போது அவர்களுடன் உள்ளம், உடல், ஆன்மா ஆகியவற்றால் ஐக்கியமாகிட விரும்புவீர்கள். “என்னையே நான் உனக்கு முற்றாகக் கொடுக்கின்றேன். நான் கொடுக்க முடியாததென எதுவுமே இல்லை,” என்றும் கூறுவீர்கள்.
ஆனால், அதை (உடலுறவை) திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொண்டால் என்னவாகும்? அஃது அதன் குறிக்கோளை முற்றாக நாசப்படுத்திவிடுகின்றது. கொடுப்பதற்குப் பதிலாக நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள். நீங்கள் திருப்தியடைய விரும்புகின்றீர்கள். ஆகவே, வேறு ஒருவரைப் பயன்படுத்தி உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்கின்றீர்கள். ஆம், ‘பயன்படுத்துகின்றீர்கள்’. ‘பயன்படுத்துவது’ எனும் வார்த்தை மிகவும் கஷ்டப்படுத்தும் ஒரு வார்த்தையாகும். ஆனால், அஃது உண்மைதானே? இல்லையா? உங்கள் காதலியோ காதலனோ உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு கருவியாக, ஒரு பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றார், அவர் உங்கள் இச்சைக்கு ஆளாகின்றார். இருவரும் ஒருவர் மற்றவரைத் தங்கள் இச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது இது, “நான் என் உடலை உனக்கு வழங்குகின்றேன், ஆனால் நான் என்னை உனக்குத் தரப்போவதில்லை” என்றோ “நான் வேறொருவருக்கு சொந்தமாகும் வரை நான் உன்னுடையவளே(னே) எனக் கூறுவது போன்றோ இருக்கின்றது. பிறகு, அன்பென்பது இதுதான் என வெகு சாதாரணமாகக் கூறிடுவார்கள்..

(தோழமை ரீதியில் ஒன்றாக வாழும் ஜோடிகள்) அவ்வாறு திருமணம் ஆகாதிருக்கும் போது பிரிந்துபோவது சிரமமல்ல. ஏனெனில், அங்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒரு கடப்பாடு கிடையாது. ஆகவே, ஜோடிகளுள் ஒருவர் வேண்டும் போது அத்தோழமைத் திருமணத்திலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம். அங்கு ஒரு கட்டாயம் கிடையாது. ஒருவர் அத்தோழமையிலிருந்து வெளியேறும்போது… அங்கு ஏற்படும் உணர்வுப்பூர்வமான மனப்போராட்டம் தாங்கமுடியாததாக இருக்கும். பாலுறவு என்பது திருமணத்திற்கு உட்பட்டதாக இருப்பதனால், அஃது ஓர் ஆழ்ந்ததும் வலுவானதுமான தாம்பத்ய பந்தத்தை உருவாக்குகின்றது. ஆகவே, அதனால்தான் அது திருமணத்திற்கு வெளியே நடைபெறும்போது, அவ்வித உறவில் ஈடுபட்டுள்ள இருவரும் பிரியும்போது அவர்கள் மனக்காயங்களுக்கு ஆளாகின்றனர்.

ஆனால், பல ஜோடிகள் பாலுறவை ஒழுங்காகப் பயன்படுத்தாமலும் அதை ஏதோ ஒரு பொழுதுபோக்காகவும் கருதுவது மனதிற்குக் கவலையை ஏற்படுத்துகின்றது. பல இளம்பெண்களும் (ஆண்களும்) பாலுறவின் விளைவாக மனமுடைந்து போவதைக் காண கவலையாக இருக்கின்றது. பல திருமணங்களும் இதனால் சிதைந்து போவதும் கவலையளிப்பதாக இருக்கின்றது. மக்கள் ஒருவரை ஒருவர் ஏதோ பொருள்கள் போன்று பயன்படுத்துவதும் கவலையளிப்பதாக இருக்கின்றது.

கடவுள் நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றார். அவர் நமது பாதுகாப்பிற்காக, நமக்கு தீங்கு விளைவிக்கும் யாவற்றிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் செய்கின்றார். திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவது பல வழிகளில் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை அவர் நன்கு அறிவார். அதற்காக அவர் நமது சுதந்திரத்தைப் பறிக்கின்றார் என்பது பொருளல்ல. மாறாக, நாம் சுதந்திரமாகவும் முழுமையாகவும் வாழ்வதற்காக அவர் நமக்கு சுயக்கட்டுப்பாடு, அடக்கம், தூய்மை, கற்புடைமை ஆகியவற்றைப் பரிசாக வழங்கியுள்ளார் என்பதாகும்.

ஆகவே, இதைப் படிக்கும் ஆண்கள் அனைவருக்கும் நான் உண்மையில் கூற விரும்புவது இதுதான்.
பெண்களின் உடலுக்கு மதிப்பளியுங்கள். அவள் ஒரு கொடை, ஒரு பொருளல்ல. நீங்கள் உங்கள் இச்சையை அடக்க இயலாததால் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளுமல்ல. அவள் ஒருத்தி மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எல்லாப் பெண்களும் அவ்வாறானவர்களே. நீங்கள் இணையத்திலோ சஞ்சிகைகளிலோ காணும் பெண்களும் கூட இதிலடங்குவர். அவர்கள் கொடைகள் போன்றவர்கள், பொருள்களல்ல.

இதைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும்

உங்கள் தோழர் உங்களிடம் கோரக்கூடியவற்றிற்கு இணங்கிடாதீர்கள். உறுதியாக இருங்கள். உங்களுக்கென நெறிமுறைகளை வைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களை உண்மையில் விரும்பினால் அவர் புரிந்துகொள்வார். அவ்வாறில்லையென்றால் அவர் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார். அவ்வாறு நடக்குமானால் அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், கடவுள் உங்களை ஒரு சிம்ம சொப்பனத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.

ஜோடிகள் அனைவருக்கும்

நீங்கள் ஒருவரை உண்மையில் நேசித்தால், நீங்கள் அவருக்காக நிச்சயமாகக் காத்திருப்பீர்கள். எவர் வேண்டுமானாலும் “நான் உன்னை நேசிக்கின்றேன்” எனக் கூறிட முடியும்… ஆனால் ஓர் உண்மையான ஆண் அல்லது பெண்ணால் மட்டுமே பொறுமை காத்திட முடியும். உண்மையான அன்பு தியாகத்தை உட்படுத்தியதாகும். உண்மையான அன்பு பொறுமை மிக்கதாகும். உண்மையில் நீங்கள் கோருவது போன்று நேசிக்கின்றேன் எனக் கூறும்போது நீங்கள் காத்திருப்பீர்கள். நீங்கள் நேசிப்பவரை இழக்காதிருக்கும் பொருட்டு நீங்கள் அவருக்காகக் காத்திருப்பீர்கள். ஆகவே, அவரைப் பாதுகாத்திட நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள்.

சரி, உங்கள் இருவருக்குமே திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இல்லையெனும்போது என்னவாகின்றது? ஒரு முறை பாலுறவு என்பது ஒரு ஜோடியினரின் உறவிற்குள் ஊடுறுவிவிட்டால் அதுவே பிறகு அந்த உறவிற்கு மையமாக அமைந்துவிடும். நீங்கள் ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது உங்கள் மனதில் பாலுறவே ஓங்கியிருக்கும். இச்சையின் அடிப்படையில் அமைந்திருக்கும் நேசமானது நீடிக்காது. ஆகவே, உங்கள் உறவை ஏன் அபாயத்திற்குள்ளாக்க வேண்டும்.

“நாம் உடலுறவு கொள்ளவில்லையெனில்.. மற்ற அம்சங்கள் அனைத்தும் ஒழுங்காக இருக்கின்றதா?” அல்லது, “நமது உறவிற்கு எல்லையென்பது எது?” ஆனால், கேட்கப்பட வேண்டிய கேள்வி, நாம் எந்த எல்லைவரை செல்லமுடியும் என்பதல்ல. “நமது கற்புடைமையை நாம் எந்த அளவிற்குக் காத்திட முடியும்?” என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வி. நீங்கள் ஒரு புதிய கார் வாங்கும் போது, அதைக் குழிகள் நிறைந்த ஒரு சாலையில் ஓட்டிப்பார்க்க விரும்பமாட்டீர்கள், அல்லவா? உங்கள் வாகனத்தை அதற்குப் பக்கத்தில் கூட கொண்டு செல்ல மாட்டீர்கள். வாகனத்தைப் பேணுவதிலிருந்து, அதைச் சுத்தமாக வைத்திருப்பது வரை அனைத்தையும் நீங்கள் ஒழுங்காகச் செய்வீர்கள். ஏன்? உங்கள் வாகனத்தின் மீது ஏதாவது கீறல்கள் விழுந்துவிட்டால் என்னவாகும்? ஒரு சிறு கீறல் விழுந்துவிட்டால்கூட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாது. இப்போது அதே சூழலை உங்கள் துணைவி அல்லது துணைவருடன் பொருத்திப் பாருங்கள். உங்கள் உறவைப் பாதுகாப்பதில் நீங்கள் எந்த அளவிற்குச் செயல்பட முடியும்?

கற்புடைமையைக் கடைப்பிடியுங்கள். கற்புடைமை என்பது உடலுறவைத் தவிர்ப்பது என்பதல்ல. நீங்கள் இப்போது என்ன செய்ய முடியும்? எது முறையானது? என்பதன் மீது கவனம் செலுத்துவதற்கான ஓர் அறமுறையாகும் அது. அது சுதந்திரம், மரியாதை, அமைதி மற்றும் காதலையும் வழங்கிடும் ஒரு வாழ்வுமுறையாகும். நீங்கள் உடலுறவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளதால், அதை ஒழுங்கான முறையில் கடைப்பிடிப்பதற்கான எதையும் எல்லா வழிகளையும் நீங்கள் பின்பற்றிட விரும்புகின்றீர்கள். அதாவது, (கற்புடைமை) உண்மையான அன்பை அனுபவிப்பதற்கு உங்களுக்கு உதவிடும் ஒரு வழியாகும்.
தூய்மையைக் கடைப்பிடியுங்கள். தூய்மையாக இருங்கள். உள்ளம், இதயம், செயல்கள் ஆகியவற்றில் தூய்மையோடு இருக்கவேண்டும். “நீங்கள் புனிதத் தன்மையோடு இருக்கவேண்டுமென்பது கடவுளின் விருப்பமாகும்: நீங்கள் பாலுணர்வு சார்ந்த ஒழுக்கக்கேடுகளைத் தவிர்த்திட வேண்டும்.” (தெஸ்ஸலோனியர் 4:3)

இறுதியாக

காதல் என்பது சரசமாடுதல், தழுவல்கள், முத்தங்கள், உடலுறவு ஆகியன பற்றியதல்ல. அவை அனைத்தும் இல்லாத போதும் உங்கள் காதலி அல்லது காதலன் மீது நீங்கள் நேசம் கொண்டிருப்பதே உண்மையான காதலாகும்.

பாலுறவு அறநெறி சார்ந்த பஹாய் போதனைகள் திருமணம், குடும்பம் இரண்டும் மனித சமுதாய கட்டமைப்பு முழுமைக்குமான அடிதளம் என்பதை மையமாகக் கொண்டும் அத்தெய்வீக ஸ்தாபனத்தைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, பஹாய் சட்டமானது இசைவுடனான பாலுறவை ஓர் ஆணுக்கும் அவன் திருமணம் செய்துகொண்டுள்ள பெண்ணுக்குமிடையில் மட்டுமே அனுமதிக்கின்றன. (பஹாவுல்லா)

“…திருமணத்திற்குப் பிறகு சோரம் போகக்கூடாது. திருமணத்திற்கு முன்னரும் கள்ளப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது. …திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அஃது ஒரு பாவமல்ல, ஆனால், திருமணம் புரிந்துகொள்ள வேண்டுமென்பது… …ஊக்குவிக்கப்பட்டுள்ளது. …ஓர் ஆழமான ஆன்மீக நட்பிற்குத் திருமணம் வழிகோலும்… அஃது… மனித உறவின் வெறும் உடல்சார்ந்த பந்தத்தைப்போல் அல்லாத, என்றுமே நீடிக்கவல்ல ஆழமானதோர் ஆன்மீக பந்தமாகும். (உலக நீதிமன்றம்)

பால்மை சமத்துவம் குறித்த பஹாய் விளக்கம்: ஓர் அடிப்படை ஆன்மீக உண்மை


May Lample
Program Officer at the Institute for Studies in Global Prosperity

http://www.huffingtonpost.com/may-lample/equality-of-women-and-men_b_791230.html

நான் என்றுமே பெண்கள் மற்றும் ஆன்களின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவளாகவே இருந்துவந்துள்ளேன். பஹாய் சமய விசுவாசிகள் எனும் முறையில் சிறு வயது முதற்கொண்டே எனக்கு என் பெற்றோர்கள் போதித்து வந்துள்ள அடிப்படை கோட்பாடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவமும் ஒன்று.

பஹாய் சமயத்தின் ஸ்தாபக அவதாரமான பஹாவுல்லா பின்வருமாறு விளக்குகிறார்: “பெண்களும் ஆண்களும் கடவுளின் பார்வையில் என்றுமே சமமானவர்களாக இருந்துவந்துள்ளனர் இனியும் அவ்வாறே இருந்துவருவர்.” பஹாய் புனித வாக்குகளில் பெண்களும் ஆண்களும் ஒரு பறவையின் இரு சிறகுகளோடு ஒப்பிடப்படுகின்றனர். ஒரு சிறகு சற்று பலவீனமாக இருந்தால் அப்பறவையால் பறக்கமுடியாது. இரு சிறகுகளும் முற்றாக முதிர்ச்சி பெறாத வரையில் அப்பறவையால் பறக்க முடியாது. அதே போன்று, பெண்களும் ஆண்களும் தங்களின் முழு ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ளாத வரை உலகம் செழிப்புற வாய்ப்பு ஏற்படாது

என் சிறு வயதில், நான் எங்கும் சமத்துவத்தை கண்டேன் — பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளுமாக ஓடி விளையாடி விளையாட்டில் ஈடுபட்டும், வகுப்பு கலந்தாலோசனைகளில் பெண்கள் சுதந்திரமாகவும் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு வகுப்பில் சமபங்கில் பெண்களும் ஆண்களுமாக ஈடுபட்டும் இருந்தனர். பால்மை சமத்துவம் என்னுள் வெகுவாக ஊறிப்போயிருந்தபோதும், அது உண்மையில் என்ன என்பதை அப்போது நான் அறிந்திருக்கவே இல்லை என்பதை பல வருடங்களுக்குப் பிறகே உண்ர்ந்துகொண்டேன்

என் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பெண்கள் முன்னனியில் இருந்தார்கள் என்பதால் மட்டும் சமத்துவம் நிலவியது என அர்த்தப்படாது என என் கல்லூரி நாட்கள் வரை எனக்கு புரியவில்லை.பெண்களும் ஆண்களும் ஒன்றாக ஓடி விளையாட்டுகளில் ஈடுபட்டனர் என்பது பெரும்பாலும் பெண்கள் இறுதியில் வேறுவழியின்றியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுடைய திறன்கள் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன அல்லது கல்லூரி இறுதியாண்டில் வகுப்புகள் பால்மை அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் அல்லது தொழில்துறையில் ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கும் சம ஊதியம் கிடைக்கும் என்பதும் நிச்சயமல்ல.

என் குறுகிய உலகில் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வளங்கள் மற்றும் வாய்ப்புகள் கிட்டுவதனால் மட்டும் பரந்த வெளியுலகில் உண்மை நிலவரம் அதுபோன்றதே என்பது அர்த்தல்ல என்பதை நான் உணரத்தவறிவிட்டேன். என்னைச் சுற்றிலும் பால்மை சமத்துவத்திற்கான அறிகுறிகள் தென்பட்டபோதிலும், குறிப்பாக, எல்லாருமே பெண்களும் ஆண்களும் சமமானவர்கள் எனும் அறிவோடு வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள் எனும் யூகத்தோடு நாம் பார்த்தபோதிலும், நமது ஸ்தாபனங்களிலும் சிந்தனாமுறைகளிலும் சமத்துவமின்மை ஆழப்பதிந்துவிட்டது என்பது எனக்கு அப்போது புரிந்தது, மற்றும் அச் சமத்துவமின்மையை எதிர்ப்பதற்கு, சமத்துவநிலை ஏன் முக்கியப்படுகிறது என்பதையும் அதை நடைமுறைபடுத்திட தேவைப்படும் புரிந்துகொள்ளல்கள் யாவை என்பதும் எனக்கு அப்போது தெளிவாகியது.

சமத்துவம் குறித்த நமது புரிந்துகொள்ளலில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, பெண்களை ஆண்களின் நிலைக்கு மேம்படுத்திடும் ஒரு கருத்திலேயே அது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு விளைவுகள் உண்டாகும். ஒன்று, ஆண்கள் மேம்பாடு கண்டுவிட்டனர் எனும் எண்ணம்; அவர்கள் இப்போது உள்ளபடி முழுமை பெற்ற நிலையில் இருக்கின்றனர் என்பது. இரண்டு, இந்த கருத்து இருபாலரின் இடையே போட்டா போட்டியை உருவாக்கிவிடும், அதாவது, ஆண்களிடம் அதிகாரம் உள்ளது மற்றும் அவர்கள் அதை பெண்களுக்காக சிறிது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது (அல்லது பெண்கள் ஆண்களைவிட அதிக அதிகாரம் பெற போராட்டம் நடத்த வேண்டும்). இது இருபாலரிடையேயும் தேவையற்ற ஓர் இருமைப்பிளவை உருவாக்கிவிடும். சமத்துவத்தை புரிந்துகொள்ள லௌகீக அளவைகளை பயன்படுத்துவது பெண்களையும் ஆண்களையும் பெரும்பாலும் ஓர் குறுகிய எல்லைக்குள் அடக்கிவிடும்.

நமது தனித்தன்மையை பொருத்தவரை, வெளித்தோற்றத்திற்கும் மேல் வேறு விஷயங்கள் உள்ளன என்பதை கண்டுகொள்வதானது மனித இயல்பு மற்றும் சமத்துவம் என்றால் என்ன என்பது குறித்த நமது அறிவை மேலும் விசாலப்படுத்திடும். பரோபகாரம், அன்பு மற்றும் கருணை போன்ற ஆன்மீகப் பண்புகளை வெளிப்படுத்திடக் கூடிய தனிமனிதனின் உள்ளாற்றலில் வீற்றிருக்கும் அடிப்படையான மனித தனித்தன்மைக்கு பால், இனம், குடிநிலை அல்லது பௌதீக அல்லது சமூக வேறுபாடுகள் கிடையாது. மனிதர்கள் அனைவரிடமும் உள்வீற்றிருக்கும் ஆன்மீக இயல்பை கண்டுகொண்டு அவர்களின் தனித்தன்மை குறித்த எல்லா அம்சங்களின் வாயிலாக ஆன்மீக களிப்புணர்வு அடைவது சாத்தியப்படுகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே பெளதீக ரீதியில் வேறுபாடுகள் உண்டு மற்றும் அவர்கள் இருவரும் உலகை நுகரும் முறையின் மீது இவ்வேறுபாடுகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருந்தபோதும் சாரத்தில், அவர்களை வரையறைக்கும் பண்புகளிலும் உள்ளாற்றல்களிலும் அவர்கள் வேறுபாடுகள் அற்றவர்கள். குறுகிய முறையில் சில குறிப்பிட்ட பௌதீக அல்லது சமூக தனிப்பண்புகளோடு அடையாளப்படுத்திக்கொண்டு அவற்றை ‘அகம்’ குறித்த நமது புரிந்துகொள்ளலின் நடுமையமாக கொள்வது பெண்கள் மற்றும் ஆண்கள் மீது பேரழிவு மிக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே நிலவும் சமத்துவமின்மையை அகற்றிடவும் ‘அகம்’ பற்றிய புரிந்துகொள்ளலை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி ஒரு வழியாகும். உலகம் முழுவதும், தங்கள் குழந்தைகள் அவர்களின் உண்மை இயல்பை விளங்கிக்கொள்ள பஹாய் பெற்றோர்கள் அவர்களுக்கு கல்வியளிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். பெண்கள் இப்போதும் கூட பாகுபாட்டிற்கு உட்பட்டிருக்கும் நாடுகளில் கூட, தங்கள் பெண்பிள்ளைகள் கல்வி பெறுவதை உறுதிபடுத்திடுவதன் வழி இப் பஹாய் கோட்பாட்டை செயல்படுத்திடும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு மட்டுமே கல்வியளிக்க முடியும் எனும் சூழ்நிலையில், குடும்பத்தின் முதல் ஆசிரியை எனும் முறையில் தங்கள் பெண் குழந்தையையே பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஆன்களும் பெண்களும் சம நிலையில் சமூக மேம்பாடு குறித்த அச்செயற்பாட்டில் பங்கேற்க இயலும் வரை சமூக மேம்பாடு அடையப்படவே முடியாது என பஹாய் திருவாக்குகள் விளக்குகின்றன. மேலும், பெண்களின் சமத்துவத்தை மேம்படுத்தும் கடமை ஆண்களுக்கும் உண்டு, ஏனெனில் அவர்களின் விதி பெண்களின் நலனோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் பெண்களின் மேம்பாடு பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல மற்றும் அதனை அடைவது ஆண்களின் முழு பங்கேற்பையும் பரிந்துரையையும் சார்ந்துள்ளது. “உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் இருக்கின்றன; சமய ரீதியிலும் சமூகத்திலும் அவர்கள் முக்கிய அம்சங்களாவர். பெண்கள் தங்களின் அதி உயர்ந்த நிலையை அடைவதிலிருந்து தடுக்கப்படும் வரை, ஆண்கள் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள பெருமையை அதுவரை அடையவே முடியாது.

பால்மை சமத்துவத்திற்காக செயல்படும்போது, அதை ஒரு நடைமுறையான கருத்தாக கொள்ளாமல், ஓர் அடிப்படை கோட்பாடாக கருதும்போது, அது ஓர் அவசரத்தேவையாக பின்தொடரப்படுவதும் சரி சமத்துவத்தின் இறுதி இலக்கின் நிலையும் சரி அவை இரண்டும் ஓர் ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளாகும். மேலும், இந்த புரிந்துகொள்ளல் பெண்ணும் ஆணும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டுகொள்ளவும் உதவிடும்.

இருந்தும், பெண்கள் இன்று எதிர்நோக்கும் பாகுபாடு நோயுற்றிருக்கும் ஓர் உலகின் பல நோய்க்குறிகளுள் ஒன்றாகும். பல சமகால சமூக ஸ்தாபனங்கள், கட்டமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் சமத்துவமின்மையை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன மற்றும் இச் செயற்பாடுகளில் செயல்படும் மக்கள் கட்டுப்பாடுகளையும் அரசியல் சவால்களையும் எதிர்நோக்குகின்றனர்.

இத்தகைய சவால்களை வெற்றிகொண்டு பால்மை சமத்துவம் உண்மையாகவே செயல்படுத்தப்படுவதை காண தற்போது நிலவும் உலக நிலைமையை நீட்டித்துக்கொண்டிருக்கும் உலகின் சமூக அமைப்புமுறைகள் மற்றும் உலக கண்ணோட்டங்களுக்கு பின்தாங்கலாக இருக்கும் யூகங்களை நாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒற்றுமை மற்றும் நீதியை மேம்படுத்திடும் வகையில் ஸ்தாபனங்களையும் சமூக வழக்கங்களையும் நாம் மறுகட்டமைப்புக்கு உட்படுத்திடவும் வேண்டும். குடும்பம், சமூகம், காரியாலயங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்கள் குறித்த சூழ்நிலையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கிடையிலான உறவுகள் மறுவறையரை செய்யப்பட வேண்டும். இந்த ஒவ்வொறு உறவுகளும் பரிணாம வளர்ச்சி கண்டுவரும் மானிடத்தின் பொது ஆன்மீக இயல்பின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்படவும் வேண்டும். இது நிறைவேற்றம் காண, ஒரு புதிய சமூக கட்டமைப்பை உருவாக்கு தேவைப்படும் ஆன்மீக கோட்பாடுகளை அமல்படுத்திட அவர்கள் ஒன்றாக செயல்பட வேண்டும் மற்றும் இக்கட்டமைப்பு அமைதி, நீதி, கூட்டு மேம்பாடு ஆகியவற்றால் தனிச்சிறப்பு பெற்றிருக்க வேண்டும்.

இச்செயல்பாட்டின் ஓர் ஆங்கமாக இக்கருத்துக்களை கலந்தாலோசனை செய்திடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படத்தப்பட வேண்டும். மக்கள் பால்மை சமத்துவம் பற்றிய பிரச்சினைகள் குறித்த தங்கள் எண்ணங்களையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு ஊக்குவிப்பாக “சமத்துவத்தை உருபெறச்செய்தல்” எனும் ஒரு வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைப்பதிவு ‘Institute for Studies in Global Prosperity (ISGP)’,எனும் ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட, “பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை நோக்கி முன்னேறுதல்” எனும் ஒரு சாசனத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது.