வாழ்வும் மரணமும்


மனிதர்களின் வாழ்வில் பிறப்புக்கு பின் இறப்பு என்பது தவிர்க்கமுடியாததாகும். காலங்காலமாக மனிதர்கள் இறப்பிலிருந்து விடுபட முடியுமாவென வினவிக்கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால், இதுவரை மரணத்திற்கு மாற்றை யாரும் கண்டுபிடித்ததில்லை. மரணம் என்றால் என்ன? பஹாவுல்லா தமது மறைமொழிகள் எனும் நூலில் மரணத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்:

அதீதரின் மைந்தனே!
மரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளேன். நீ ஏன் வருந்துகிறாய்? ஒளியின் பிரகாசத்தினை உன்மீது விழுமாறு செய்துள்ளேன். அதிலிருந்து நீ ஏன் உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்கின்றாய்?

பெரும்பாலான மனிதர்கள் என்றுமே இறப்பை கண்டு பயந்தே வந்துள்ளனர். இது எல்லா ஜீவராசிகளுக்கும் இயல்பாகவே உள்ள ஓர் உணர்வு. அதை ஓர் ஆற்றல் எனவும் கூறலாம். ஆம், பயம் என்பதும் ஒருவித ஆற்றல்தான் அதாவது பயப்படுவதற்கான ஆற்றல். இந்த ஆற்றல் இயல்பானது, உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இது குறித்த உணர்வு மிகவும் அவசியமாகின்றது. பயம் இல்லையேல் மனிதர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதில் கவனமாக இருக்கமாட்டார்கள். மனிதப் பிறவியின் பாதுகாப்பிற்கு இந்த உணர்வு அவசியமாகின்றது. ஆனால், இந்த உணர்வு மனிதனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பிரத்தியேக உணர்வும் அல்ல. அது எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமானது. மனிதர்கள் சில வேளைகளில் இப்பய உணர்வை மீறி தற்கொலை, போர் போன்றவற்றில் மரணத்தை தழுவுகின்றனர். வேறு சிலர் தங்கள் நம்பிக்கைக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர். உதாரனமாக பஹாய் சமயத்தின் ஆரம்பகாலத்தில் புதிய சமயமான பஹாய் சமயத்தின் துரிதமான பரவலால் பீதியடைந்த அதிகாரிகள் சுமார் 20,000 விசுவாசிகளை கொன்றனர். இதில் விசேஷம் என்னவெனில் இவர்கள் எல்லோரும் தங்கள் நம்பிக்கையை விடமுடியாது என கூறியதால் கொலை செய்யப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளில் இரான் நாட்டில் சுமார் 300க்கும் அதிகமானோர் இதே ரீதியில் கொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் மரண தண்டனைக்கு உள்ளாகியும் உள்ளனர். ஆகவே மரணம் இயல்பாகவும் நிகழலாம் அல்லது அகாலத்திலும் நிகழலாம்.

மனிதர்களின் படைப்பு குறித்த பஹாய் வாசகங்களைப் படிப்போர் பின்வரும் குறிப்பைக் காணலாம்:

வள்ளன்மையின் மைந்தனே!
வெறுமை என்னும் கழிவுப் பொருள்களினின்று, எனது கட்டளை என்னும் களிமண்ணைக் கொண்டு, உன்னைத் தோற்றுவித்தேன்;…

எல்லா சமயங்களிலும் உள்ளது போல், மரணத்திற்கு பிறகு வாழ்வு குறித்த பஹாய் கருத்துப்படிவம் ஆன்மாவின் இயல்பு மற்றும் இவ்வுலக வாழ்வின் நோக்கத்தோடு மிகவும் ஆழமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பகுத்தறியும் தனி ஆன்மா உள்ளது என பஹாவுல்லா உறுதிபடுத்தியுள்ளார். இறைவனின் உலகங்களில் இந்த ஆன்மா தோற்றம் காண்கிறது. அந்த உலகம் லௌகீகமானதல்ல. அஃது ஆன்மீக உலகம். கருத்தரிப்பின் போது அனுவளவே ஆன பூதவுடல் ஜடப்பொருள்களால் உருவாகின்றது மற்றும் அத் தருணமே இறைவனின் உலகில் இருக்கும் ஆன்மா இந்த கருவோடு இனைகின்றது, இந்த உலக வாழ்வின் போது அந்த ஆன்மா பௌதீக உடலோடு இணைந்தே உள்ளது மற்றும் அதன் பயனாக மனிதப்பிறவி ஏற்படுகின்றது. ஆன்மா நமது உடலுக்கு உயிரியக்க சக்தியை வழங்குகின்றது மற்றும் அந்த ஆன்மா நாமே அன்றி வேறெதுவுமில்லை.

ஆன்மாவை நாம் பௌதீக கருவிகளைக் கொண்டு கண்டுணர முடியாது ஆனால், ஒவ்வொரு தனிமனிதனோடும் நாம் தொடர்புபடுத்தும் நடத்தைப் பண்புக்கூறுகளால் ஆன்மா தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது. அன்பு மற்றும் கருணை, நம்பிக்கை மற்றும் மனவுறுதி, மற்றும் மனிதனை ஒரு மிருகம் அல்லது ஒரு பல்கூறான ஜீவனுடைய யந்திரம் என மட்டும் விளக்கமுடியாத இது போன்ற பிற “மானிட” பண்புக்கூறுகளுக்கும் ஆன்மா ஒரு குவிமையமாகும்.

ஆன்மா மரிப்பதில்லை; அது என்றும் நிலைத்திருக்க வல்லது. மனித உடல் மரணமெய்தும்போது, ஆன்மா பூதவுடலுடனான தனது தொடர்பிலிருந்தும் அதனைச் சுற்றியுள்ள பொருளுலகிலிருந்தும் விடுபட்டு ஆன்மீக உலகங்களினூடே அதன் வளர்ச்சியை ஆரம்பிக்கின்றது. ஆன்மீக உலகென்பது நேரம், இடம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட, நமது பிரபஞ்சத்தின் ஒரு தொடர்ச்சியே என்பது பஹாய்களின் நம்பிக்கையாகும் – அதற்கு மாறாக அது எங்கோ உள்ள அல்லது நமக்கு அப்பாற்பட்ட ஓர் இடமல்ல.

ஒன்பது மாத காலம் மனிதன் தாயின் கர்ப்பத்தில் வளர்ச்சி பெறுகின்றான். ஆனால், இந்த கர்ப்ப உலகம் அவனுக்கு நிலையானதல்ல. பிறகு தாயின் வயிற்றிலிருந்து இவ்வுலகில் பிறக்கின்றான். இவ்வுலகில் சுமார் என்பது தொன்னூறு வருடங்கள் வாழ்ந்து அவன் மடிந்துவிடுகின்றான். இவ்வுலக வாழ்வும் அவனுக்கு நிறந்தரமல்ல. தாயின் கர்ப்பத்திலிருந்து அவன் ஒன்பது மாதமானவுடன் வெளிவந்துவிடுகின்றான். அதை பிறப்பு என்கிறோம். பிறகு அவன் காலம் கனிந்தவுடன் மரணம் எய்துகிறான், அதை இறப்பு என்கிறோம். ஆனால், பஹாய் திருவாக்குகள் மரணத்தை, அதாவது இறப்பை மனிதனின் மறுபிறப்பு என கூறுகின்றன. அதாவது கர்ப்பத்திலிருந்து இந்த உலகிலும், அதன் பிறகு இந்த உலகிலிருந்து வேறோர் உலகில், ஓர் ஆன்மீக உலகிலும் மனிதன் பிறக்கின்றான். ஆனால், கர்ப்பத்தில் உள்ள ஓர் சிசு எவ்வாறு இவ்வுலகை உணர முடியாதோ அதே போண்று நாம் இந்த உலகிலிருந்துகொண்டு மறு உலகை உணரமுடியாது. இந்த உலகிற்கு புலன்களும் அவயங்களும் அவசியமாகின்றன. அவ்வுலகிற்கு வேறு விதமான ஆற்றல்கள் அவசியமாகின்றன. கர்ப்பத்தில் நாம் இவ்வுலகிற்கு தேவையான புலன்களையும், அவயங்களையும் அடைந்தது போல், அவ்வுலகிற்கான ஆற்றல்களை நாம் இவ்வுலகிலேயே அடைய வேண்டும். மறுமை உலகிற்கான நமது பிரவேசம் நமக்கு பெரும் களிப்பை அளிக்கும் இயல்திறம் கொண்டது. பஹாவுல்லா மரணத்தை பிறப்பு குறித்த ஒரு படிசெயற்பாட்டோடு ஒப்பிடுகின்றார். அவர் பின்வருமாறு விளக்குகின்றார்: “தனது தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையின் உலகு இவ்வுலகினின்று எவ்வாறு வேறுபட்டுள்ளதோ அதுபோன்றே அவ்வுலகு இவ்வுலகினின்று வேறுபட்டுள்ளது.”

உலகவாழ்வு குறித்த பஹாய் கண்ணோட்டத்தை கர்ப்பம் குறித்த ஒப்புமை பல வகைகளிலும் தொகுத்துரைக்கின்றது. ஒரு மனிதனின் ஆரம்ப உருவாக்கத்திற்கு கருப்பை எவ்வாறு ஒரு முக்கிய இடமாக திகழ்கின்றதோ, அது போன்றே பொருளுலகு தனி ஆன்மாவின் மேம்பாட்டிற்கான ஒரு முதிர்விடமாக திகழ்கின்றது. அதன்படி, இவ்வுலகவாழ்வை அடுத்த உலகிற்கு தேவைப்படும் பண்புக்கூறுகளை மேம்படுத்திடும் ஒரு பயிலரங்கமென பஹாய்கள் கருதுகின்றனர்.

பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

“ஒரு மனிதனின் ஆன்மா இறைவன் வழியில் நடந்திருக்குமாயின், அது நிச்சயமாகத் திரும்பிச் சென்று, நேசரின் பேரொளியினில் ஒன்று திரட்டப்படும் என்பதை, நீங்கள், மெய்யாகவே அறிவீராக. இறைவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த ஓர் எழுதுகோலும் விவரிக்க இயலாத, எந்த ஒரு நாவும் வருணிக்க இயலாத ஸ்தானத்தை எய்திடும்.”

ஆனாலும், நாம் நமது வாழ்க்கையை பின்வரும் எச்சரிக்கை்கு இணங்க வாழ்ந்தால் மட்டுமே தேவையான அந்த ஆன்மீக ஆற்றல்களை நாம் அடைய முடியும்.

தூய்மையான நற்செயல்களின் மூலமும், மெச்சத்தகுந்ததும் மிகப் பொருத்தமான ஒழுக்கத்தின் மூலமும் உலகம் சீர்திருத்தம் பெறக்கூடும்

என்பது மற்றொரு போதனை. இங்கு உலக சீர்திருத்தம் என்பது தனிமனிதனின் சீர்திருத்தத்தை உள்ளடக்கியுள்ளது. தனிமனிதனின் சீர்திருத்தம் அவனுடயை தூய்மையான நற்செயல்கள் மற்றும் மெச்சத்தகுந்த பொருத்தமான ஒழுக்கத்தை சார்ந்திருக்கின்றது. அடுத்த உலகிற்கான நமது ஆன்மீக ஆற்றல்கள் இந்த தூய்மையான நற்செயற்களையும் மெச்சத்தகுந்த பொருத்தமான ஒழுக்கத்தையும் சார்ந்துள்ளன. நல்ல உணவு உடலுக்கு ஊட்டமும் வளர்ச்சியும் அளிப்பது போல நல்ல செயல்களும் நல்லொழுக்கமும் நமது ஆன்மாவுக்கு ஊட்டமும் வளர்ச்சியும் அளிக்கின்றன, நாம் ஆன்மீக ஆற்றல்களை அதன் மூலம் பெற்றிட வாய்ப்பும் ஏற்படுகின்றது.

உயிருருவின் புத்திரனே!
மொத்தக் கணக்குப் பார்க்க அழைக்கப்படுவதற்கு முன், நீ, உனது ஒவ்வொரு நாளையச் செயலையும் கணக்கிட்டுக் கொள்வாயாக; ஏனெனில், மரணம், முன்னறிவிப்பு எதுவுமின்றி உன்னைத் தாக்கும், அப்பொழுது, நீ, உன் செயல்களுக்குக் காரணம் கூற அழைக்கப்படுவாய்.

சமயங்கள் அனைத்தும் மனிதர்களின் உலகவாழ்விற்கு வழிகாட்டிகளாக நம்மிடையே தோன்றுகின்றன. பஹாய் சமயமும் இதற்காகவே தோன்றியுள்ளது. அதன் போதனைகள் நாம் அடுத்த உலகிற்கு செல்வதற்கான வழிகாட்டிகளாக இருக்கின்றன. அவற்றில் நாம் கவனமாக இல்லையெனில் அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும். மேற்கண்ட வாசக குறிப்பு இதைத்தான் நமக்கு கூறுகிறது.

இறுதியில், சுவர்க்கம் என்பது ஆண்டவனின் அருகாமை குறித்த ஒரு நிலையே என ஒரு வகையில் நாம் கருதக்கூடும்; நரகம் என்பது கடவுளிடமிருந்து தூர விலகியிருக்கும் ஒரு நிலையே ஆகும். ஆன்மீக மேம்பாட்டுக்கான தனிமனித முயல்வுகளின் இயல்விளைவாக, அல்லது அவ்வாறு முயலாமல் இருந்ததின் விளைவாக ஏற்படுவதே சுவர்க்கம் மற்றும் நரகம் எனும் நிலைகளாகும். கடவுளின் அவதாரங்கள் வரையறுத்துள்ள வழியை பின்பற்றுவதே ஆன்மீக மேம்பாட்டிற்கான திறவுகோல் ஆகும்.

மறுமை, விண்ணுலகம், அடுத்த உலகம், சுவர்க்கம், பரமண்டலம் என்பதெல்லாம் ஒரே அர்த்தத்தை கொண்டவையாகும். மற்றபடி மனிதன் தோற்றம் காணும் கர்ப்ப உலகம், பிறகு இவ்வுலகம், அதன் பிறகு விண்ணுலகம் என மனிதன் ஒவ்வோர் உலகமாக படிப்படியாக வெவ்வேறு உலகங்களில் வளர்ந்துகொண்டே செல்வான் மற்றும் செல்கிறான். விண்ணுலகமும் ஒரே உலகம் அல்ல. அதிலும் கணக்கிலடங்கா உலகங்கள் இருக்கின்றன. அவை குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

ஆண்டவனின் உலகங்களைக் குறித்து உங்கள் கேள்வி சம்பந்தமாக. இறைவனின் உலகங்கள், எண்ணிக்கையில் கணக்கற்றவை என்பதையும், அளவில் எல்லையற்றவை என்பதையும் நீங்கள், உண்மையாகவே அறிந்திடுவீராக. சர்வஞானியும் சர்வ விவேகியுமான இறைவனைத் தவிர வேறு எவருமே அவற்றைக் கணக்கிடவோ புரிந்து கொள்ளவோ இயலாது…

ஆகவே, நாம் ஒவ்வோர் உலகமாக வளர்ந்துகொண்டே செல்வோம். ஓர் உலகைத் தாண்டி அடுத்த உலகிற்குள் அடியெடுத்து வைப்பதே மறுபிறப்பென்பதாகும். அது மனிதனுக்கு தொடர்ச்சியான ஒரு முன்னேற்றமும் ஆகும்.

மறுமை உலகம் குறித்து பஹாய் திருவாக்குகள் பல குறிப்புகளை வழங்குகின்றன. அவற்றை கீழே காணலாம்:

மறுமை உலகென்பது லௌகீக உலகல்ல. அது ஆன்மீக ரீதியானது. ஆகவே அங்கு பரிமாணங்கள் (dimensions) கிடையாது. அதாவது, பொருள் சார்ந்த, நீளம், கொள்ளளவு, வெப்பம், நேரம் என்பன போன்ற அளவைகள் அங்கு கிடையாது. உதாரணமாக, நீர் உறைந்தால் கட்டியாகும், கட்டி கரைந்தால் அது திரவமாகும், வெப்பம் அதிகரித்தால் திரவம் ஆவியாகிவிடும். இந்த ஒவ்வோர் நிலையிலும் நீரின் (H2O) பண்புக்கூறுகளும் அதன் இயங்குமுறைகளும் வெவ்வேறாகவே இருக்கும். நீர் நீர்தான் ஆனால் கட்டி, திரவம், ஆவி ஆகிய நிலைகளில் அதன் செயல்பாடு முற்றிலும் வேறுபட்டிருக்கும். அது போன்றுதான் லௌகீக உலகு மற்றும் ஆன்மீக உலகின் இயல்பு. மனிதர்கள் இரண்டிலும் வாழ்கிறார்கள் அனால் அவற்றின் பண்புக்கூறுகள் முற்றிலும் வேறுபட்டவை.

மறுமை வாழ்வு பற்றி பஹாய் திருவாசகங்களில் கணக்கிலடங்கா குறிப்புகளை காணலாம். அவற்றுள் சில கீழே வழங்கப்பட்டுள்ளன:

“ஓர் ஆத்மா உடலை விட்டுப் பிரியும் வேளையில் உலக மனிதர்களின் வீண்கற்பனைகளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்டிருக்குமாயின் அது பேறு பெற்றதாகும். அப்படிப்பட்ட ஆத்மா அதன் படைப்போனின் விருப்பத்திற்கிணங்கவே வாழ்ந்து, இயங்கி மிக உயரிய சொர்க்கத்தினுள் பிரவேசிக்கும். விண்ணுலகக் கன்னிகளும் மிக உயர்வான மாளிகைகளின் வாசிகளும் அதனைச் சுற்றி வலம் வருவர். இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அதன் உறவை நாடுவர். அவர்களுடன் அவ்வாத்மா தங்குதடையின்றிச் சம்பாஷித்து அது எல்லா உலகங்களிலும் தேவராகிய ஆண்டவனின் பாதையில் சகித்துக் கொண்டவைகளை எல்லாம் அவர்களுக்கு எடுத்துரைக்கும்.”

“இருப்பினும் நாத்திகர்களின் ஆன்மாக்கள், கடைசி மூச்சு விடும் வேளையில் அவர்களது கவனத்தை ஈர்க்காதிருந்த நற் செயல்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். தங்களது நிலையினை எண்ணி வருந்துவர். இறைவனின் முன்னிலையில் பணிவு காட்டுவர். இதற்கு யாமே சாட்சியம் கூறுகிறோம். உடலை விட்டுத் தங்களது ஆத்மாக்கள் பிரிந்த பின்பும் தொடர்ந்து அவ்வாறே செய்து வருவர்.”

“அவன் பாவிகளை மன்னித்து அவர்களது தாழ்வான நிலையினை நிந்திக்கச் செய்யலாகாது; ஏனெனில் இறுதியில் தன் நிலை எவ்வாறு இருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. எத்தனை முறை ஒரு பாவி மரணத்தறுவாயில் இருக்கும்போது, நம்பிக்கையின் சாராம்சத்தினைப் பெற்று நிலையான நீரினைப் பருகி விண்படையினரின் முன்னிலைக்கு உயர்ந்திருக்கின்றான்! மற்றும் எத்தனை முறை பக்தியுடைய ஒரு நம்பிக்கையாளன் தனது ஆத்மாவின் பிரிவு நேரத்தில் நரகத்தீயில் விழுமளவு மாற்றம் அடைந்திருக்கின்றான்!”

“இந்த லெளகீக உலகில், எந்தப் புதிர்களைப் பற்றி மனிதன் கவனமில்லாமல் இருக்கின்றானோ, அவற்றை அவன் விண்ணுலகில் கண்டுபிடிப்பான், மெய்ம்மையின் இரகசியத்தை பற்றி அவன் அங்கு அறிவிக்கப்படுவான்: அப்படியென்றால் தான் நெருங்கி பழகியவர்களை அவன் இன்னும் எவ்வளவு அதிகமாக அடையாளங்காணவோ, கண்டுபிடிக்கவோ முடியும். சந்தேகமின்றி தூய்மையான கண்ணைக்கொண்டு, உட்பார்வைகளைக் கொண்டிருக்கும் சலுகையைப் பெற்ற புனித ஆன்மாக்கள் ஒளிகளின் இராஜ்ஜியத்தில் எல்லா புதிர்களைப் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வோர் உயர்வுமிக்க ஆன்மாவுடைய மெய்ம்மையினைப் பார்க்கும் வெகுமதியை நாடுவார்கள். மேலும் அவர்கள் அவ்வுலகில் இறைவனுடைய பேரழகினை வெளிப்படையாகக் கண்ணுறுவார்கள். அவ்வாறே, கடந்த மற்றும் சமீபத்திய காலங்கள் ஆகிய இரண்டினையும் சார்ந்த இறையன்பர்கள் அனைவரும் விண்ணுலகக் கூட்டத்தினரின் சந்நிதானத்தில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். 15

“எல்லா மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடும், தனிச்சிறப்பும் இயற்கையாகவே, அவர்கள் இந்த லெளகீக உலகிலிருந்து பிரிந்து சென்றபிறகு, உணரப்படும். ஆனால் இது (தனிசிறப்பு) இடம் சம்பந்தமானதல்ல; ஆன்மா மற்றும் மனசாட்சி சம்பந்தமானதாகும். ஏனெனில் இறைவனுடைய இராஜ்ஜியமானது நேரம் மற்றும் இடம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அது வேறோர் உலகம் வேறொரு பிரபஞ்சம். ஆனால் புனித ஆன்மாக்களுக்காகப் பரிந்துரைப்பு எனும் பரிசு வாக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் தெய்வீக உலகங்களில் ஆன்மீக அன்பிற்குரியவர்கள் (நம்பிக்கையாளர்கள்) ஒருவரை ஒருவர் அடையாளங்கண்டு (ஒருவரோடு ஒருவருக்கான) இணக்கத்தை – ஆன்மீக இணக்கத்தை நாடுவார்கள் என்பதனை நீங்கள் நிச்சயமாகவே அறிவீர்களாக. அதுபோலவே ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தப்படும் அன்பானது இராஜ்ஜியத்தின் உலகத்தில் மறக்கப்படாது. அவ்வாறே, நீங்கள் லெளகீக உலகில் வாழ்ந்த வாழ்க்கையை (அங்கே) மறக்க மாட்டீர்கள்.”

“உடலைவிட்டுப் பிரிந்தபின் ஆத்மாவின் நிலை சம்பந்தமாக மேலும் தாங்கள் என்னைக் கேட்டிருந்தீர்கள். ஒரு மனிதனின் ஆத்மா ஆண்டவனின் வழியில் சென்றிருக்குமாயின், அது நிச்சயமாக அன்பரின் ஒளியின்பால் திரும்பி அவரால் ஒன்று சேர்த்துக் கொள்ளப்படும் என்பதனை மெய்யாக நீங்கள் அறிந்து கொள்வீர்களாக. ஆண்டவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த எழுதுகோலும் விளக்கவோ எந்த நாவும் வர்ணிக்கவோ இயலாத நிலையினைச் சென்றடையும். ஆண்டவனின் சமயத்தின்பால் விசுவாசத்தோடு இருந்து அவரது வழியில் அசையாத வலுவுடன் நிற்கும் ஓர் ஆத்மா மேலுலகை எய்தியதும், எல்லாம் வல்லவர் படைத்துள்ள உலகங்கள் அனைத்தும் அவர் மூலம் பயன் பெறும் அளவு அத்துணைச் சக்தியினைப் பெறும்.”

“எனது ஊழியர்களே! இந்நாட்களில் இவ்வுலக மட்டத்தில் உங்கள் விருப்பத்திற்கு மாறானவைகள் இறைவனால் நியமிக்கப்பட்டு வெளிப்படுத்தியிருப்பதை கண்டு வருந்தாதீர்கள். ஏனெனில் பேரானந்தம், தெய்வீக மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் நிச்சயமாக உங்களுக்கென காத்துக் கொண்டிருக்கின்றன. புனிதமான, ஆன்மீக ஒளிமிக்க உலகங்கள் உங்கள் கண்களுக்கு வெளிப்படுத்தப்படும். நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் அவைகளின் நன்மைகளை அனுபவிக்கவும், அவைகளின் இன்பத்தில் பங்குப் பெறவும், அவைகளின் பேணும் அருளின் ஒரு பகுதியினைப் பெறவும், விதிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அவை ஒவ்வொன்றையும், அடைவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.”

இதற்கும் மேற்பட்டு மறுமை வாழ்வு குறித்து உண்மை நிலவரம் ஒரு பெரும் மர்மமாகும். இறப்பிற்கு பின் ஆன்மாவின் இயல்பு எவ்வகையிலும் வருணிக்கப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்.