உடல்நலம் – கருஞ்சீரகம்


Nigella_Sativa_Seed

இவ்விதை பண்டைய எகிப்து நாட்டில் பயிரடப்பட்டும் சுமார் 3.300 ஆண்டுகளுக்கு முன் மரணமுற்ற துத்தான்காமுன் (Tutankhamun) எனும் ஃபேரோவின் (அரசனின்) கல்லறைக்குள் இவ்விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் காணப்பட்டுமுள்ளது.

உண்பதற்கு சிறிது சீரகத்தைப் போன்றும் பெரும்பாலும் ஓம விதைகளின் சுவையையும் இவ்விதை கொண்டுள்ளது.

அரபு மொழியில் இதற்கு “அருள் நிறைந்த விதை” எனும் பெயரும் உண்டு. முகம்மது நபியவர்களால் மரணத்தைத் தவிர மற்றெல்லாவற்றிற்குமான நிவாரணம் எனப் புகழப்பட்ட இந்த எளிய விதை பெரும் ஆற்றலை அதனில் உள்ளடக்கியுள்ளது.

Nigella Sativa எனும் பெயரைக் கொண்ட இவ்விதைகள் காலங்காலமாக அவற்றின் குணப்படுத்தும் ஆற்றலுக்குப் பெயர்போனவையாக இருந்துள்ளன.

இவ்விதைகளின் குணப்படுத்தும் ஆற்றல் உயிர்மருத்துவ (Biomedic) ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டு அது விவரம் குறித்த 450க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. இவ்விதையின் சக்தி குறித்த மேலோட்டமான விவரங்களைப் பார்ப்போம்:

MRSA (methicillin-resistant Staphylococcus aureus) எனப்படும் ஒருவிதமான, பல கிருமிநாசினிகளுக்கு உட்படாத, கிருமியை அழிக்கும் சக்தியை கருஞ்சீரகம் உள்ளடக்கியுள்ளது.

மனிதர்கள் உட்கொள்ளும் பலவிதமான இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாக மாறிவிடுகின்றன. கருஞ்சீரகம் இவ்விதமான விஷங்களிலிருந்து உடலைக் குணப்படுத்துகின்றது.

சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணையம்(pancreas) எனப்படும் உடல் உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இவ்விதை மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது.

வலி நிவாரணி, கிருமிநாசினி; அழற்சி, குடற்புண், பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கின்றது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது, வலிப்பை குறைக்கின்றது, வைரஸ் கிருமிகளை எதிர்க்கின்றது, நுறையீரல் அடைப்பைப் போக்கவல்லது, கல்லீரலைப் பாதுகாக்கின்றது, நீரிழிவை எதிர்க்கின்றது, சிறுநீரகத்தைப் பாதுகாக்கின்றது, புற்றுநோய்க்கான காரணிகளைத் தடுக்கும் சக்தியுடையது.

இரண்டாந் தர நீரிழிவிற்கு சுமார் இரண்டு கிராம் கருஞ்சீரகம் உட்கொள்வது காலைவேளை குலுக்கோஸ் அளவை குறைக்கின்றது.

பெரும்பாலானோர் வயிற்றில் காணப்படும் (Helicobacter Pylori) எனப்படும் கிருமிகளை இது அழிக்கக்கூடியது.

காக்காய் வலிப்புக்கு கருஞ்சீரகத்தை நீராக்கி குடிப்பது அவ்வித வலிப்பைப் பெரிதும் குறைக்கின்றது.

ஆஸ்துமாவின் வேகத்தைக் குறைக்கவல்லது. இதற்கு இவ்விதைகளை வேகவைத்து அந்த நீரைப் பருகலாம்.

பெருங்குடல் புற்று நோயின் பெருக்கத்தை குறைக்கின்றது.

போதைப் பொருட்களுக்கு ஆளானவர்களை குணப்படுத்துவதற்கு இவ்விதை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பலவிதமான நோய்களுக்கு இவ்விதை பயன்படுகின்றது.

இயற்கை தன்னுள் இத்தகைய பல பொருள்களை உள்ளடக்கியுள்ளது. மனிதர்கள் காலங்காலமாக அவற்றைப் பயன்படு்த்தியும் வந்துள்ளனர். ஆனால், அல்லோபதி மருத்துவமுறையின் பிரவேசம் அத்தகைய இயற்கை வைத்தியமுறைகளை பின்தள்ளியுள்ளது. இப்போது சிறிது சிறிதாக மனிதர்கள் இயற்கைமுறையிலான வைத்தியத்தின் சிறப்பை உணர ஆரம்பித்து பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

கருஞ்சீரகத்தின் ஆற்றல் குறித்த மேலும் அதிகமான தகவல்களுக்கு தயவு செய்து (nigella sativa) என கூகல் (google) தேடல் செய்து சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்.