யார் ஏழை


மனிதனின் தனிச்சிறப்பு ஆபரணங்களிலும் செல்வச்செழிப்பிலும் இல்லை, மாறாக அது நல்லொழுக்கத்திலும் உண்மையான புரிந்துகொள்ளலிலுமே உள்ளது. (பஹாவுல்லா)

rural scene

ஒரு நாள் ஒரு பணக்கார குடும்பத்தின் தந்தை மக்கள் எத்தகைய ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள் என்பதை தன் மகனுக்குக் காண்பித்திட அவனை  நாட்டுப்புறமான ஓர் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கு ஓர் ஏழை என கருதப்படக்கூடிய குடியானவரின் இல்லத்தில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தனர். அவ்விஜயத்திற்குப் பின்னர், “பயணம் எப்படியிருந்தது?” எனத் தன் மகனிடம் தந்தை வினவினார்.

அதற்கு அவரின் மகன்:

“வெகு நன்றாக இருந்தது அப்பா,” என்றான்

“அங்கு மக்கள் எத்தகைய  நிலையில் வாழ்கிறார்கள் என்பதைக் கவனித்தாயா?” எனத் தந்தை கேட்டார்.

“ஆம், கவனித்தேன்,” என்றான் மகன்.

“சரி, நமது பயணத்திலிருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்?” என்றார் தந்தை.

“நமக்கு ஒரு நாய்தான் உள்ளது, அவர்களிடமோ நான்கு நாய்கள் உள்ளன.

நமது தோட்டத்தின் நடுமத்தி வரை நீண்டிருக்கும் ஒரு நீச்சல் குளம் உள்ளது, ஆனால் அவர்களுக்கோ கண்ணுக்கு எட்டாத தூரம் வரை நீண்டிருக்கும் ஓர் நீரோடை உள்ளது.

நமது தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட அலங்கார விளக்குகள் உள்ளன, அவர்களுக்கோ இரவில் அளவற்ற பிரகாசமான நட்சத்திரங்கள் உள்ளன.

நமது முற்றம் வீட்டின் வாசற்படி வரை நீண்டிருக்கின்றது, ஆனால் அவர்களின் முற்றமோ வானெல்லை வரை நீண்டிருக்கின்றது.

வாழ்வதற்கு நமக்கிருப்பதோ ஒரு சிறிய நிலம் மட்டுமே, ஆனால் அவர்களுக்கோ கண்ணுக்கெட்டாத தூரம் வரை திறந்தவெளிகள் உள்ளன.

நமக்கு உதவியாக வீட்டில் வேலைக்காரர்கள் உள்ளனர், ஆனால் அவர்களோ பிறருக்குச் சேவை செய்கின்றனர்.

நமது உணவை நாம் வாங்கவேண்டியுள்ளது, ஆனால் அவர்களோ அவற்றைச் சொந்தமாகப் பயிர் செய்கின்றனர்.

பாதுகாப்பிற்கு நமது வீட்டைச் சுற்றி சுவர்கள் உள்ளன, ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அவர்களைச் சுற்றி  நிறைய நண்பர்கள் உள்ளனர்,” என்றான் மகன்.

அது கேட்டு தந்தை வாயடைத்து நின்றார்.

“அப்பா, நாம் எவ்வளவு ஏழைகள் என்பதை எனக்குச் சுட்டிக் காண்பித்ததற்கு மிகவும் நன்றி,” என்றான் மகன்.

உலக வெம்மைப்பாடு (Global Warming)


நன்றி: http://banoosh.com/blog/2014/04/14/over-the-last-3-days-the-world-has-experienced-something-we-havent-seen-in-800000-years/

கடந்த 3 தினங்களாக, 800,000 ஆண்டுகளாக உலகம் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவருகிறது

emissions

செய்தி: தட்ப வெட்பநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான ஐ.நாவின் குழு கடந்த மாதம் மிகவும் திடுக்கிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலகம் வெப்பமயமாவது குறித்த அதிகரித்து வரும் அபாயங்களை எடுத்துரைக்கின்றது. இக்குழு கரியமிலவாயுவின் வெளிப்பாட்டின் மீது கவனம் செலுத்தி, அது குறித்து செயல்படாமல் இருப்பதன் அபாயங்கள் பற்றி எச்சரிக்கின்தறு. ஆனால், ஏற்கனவே சூழ்நிலை தலைக்கு மேல் வெள்ளம் போனது போன்றே இருக்கின்றது.

தேசிய சமுத்திர மற்றும் காற்றுமண்டல நிர்வாகம் (NOAA) இவ்வாரம் வழங்கியுள்ள ஒரு அறிக்கை, காற்றுமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 10,00,000 பாகத்தில் 402 பாகமாக, கடந்த 8,00,000 வருடங்களில் வெகு அதிகமான அளவாக,  அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கின்றது. இத்தகவலே கவலைக்குறிய விஷயமாக இருந்தபோதும், இந்த அளவு மே மாதத்தில் தனது வருடாந்திர அளவை எட்டவிருக்கின்றது, அதாவது கரிமில வாயுவின் அளவு மேலும் அதிகரிக்கவிருக்கின்றது.

மார்ச் 30, 2014லிருந்து முதல் வாரத்தில்:          400.55 ppm

கடந்த ஒருவருடமான வாராந்திர அளவு:          398.17 ppm

கடந்த பத்து ஆண்டுகளாக வாராந்திர அளவு:  379.67ppm

இந்த NOAA வழங்கியுள்ள இவ்வறிக்கை தொழில்மயத்தின் (industrialisation) பிறப்பிலிருந்து கரியமில வாயுவின் அளவு சீராக ஏற்றம் கண்டுவருகிறது என்பதோடு ஒத்திருக்கின்றது.

co2 emissions graph

தொழிமய காலத்திற்கு முனிபிருந்து கரிமில வாயுவின் அதிகரிப்பைக் காட்டும் கிராஃப் படம்

 இதன் அர்த்தம் என்ன? ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முறை கரியமிலவாயு காற்றுமண்டலத்தில் கலந்துவிட்டால் அது நூற்றுக்காணக்கான அல்லது ஏன் ஆயிரக்கணக்கான வருடங்கள் கூட காற்றுமண்டலத்திலேயே நிலைத்திருக்கும். பிற கிரீன்ஹௌஸ் (கண்ணாடுக்கூடு) வாயுக்களோடு, அது வெளியாகும் சூரியக் கதிர்வீச்சுகளை தன்னுள் ஈர்த்தும் பிறகு அதை மீண்டும் பூமிக்கே திரும்பவும் அனுப்பி, காலப்போக்கில் வெப்பத்தை அதிகரிக்கின்றது. அதாவது, நாம் தற்போது வெளிப்படுத்தும் வாயுக்கள் வருங்காலத் தலைமுறையினரை பாதிக்கக்கூடியவையாகும்.

சில வகையான உலக வெப்ப அதிகரிப்பு சில இயற்கை காரணங்களால் விளைந்திட்டாலும், தொழில்மையத்தின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்டுள்ள கரியமிலவாயுவின் தீவிர அதிகரிப்பானது பெரும்பாலும் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதையே அது குறிக்கின்றது. ஐ.நாவின் அறிக்கை இருபதாம் நூற்றாண்டு மத்தியிலிருந்து காணப்படும் வெம்மை அதிகரிப்பு மனிதர்களாலேயே பெரும்பாலும் உருவாக்கப்பட்டது என்பதை 95% உறுதியுடன் கூறுகிறது.

காலப்போக்கில், கரியமிலவாயுவின் அதிகரிப்பானது, கடல்நீர் அளவின் அதிகரிப்பு, வெப்ப அலைகள், வரட்சி, வெள்ளம் ஆகியவற்றிற்கு வழிகோலி, கரையோர சமூகங்ககளுக்கும் மக்களின் உணவு உற்பத்திக்கும் அபாயம் விளைவிக்கின்றது. இம்மோசமடைந்துவரும் சூழல்கள் நிலம், உணவு, நீர் ஆகியவை குறித்து தற்போது நிகழும் உள்நாட்டுப் பூசல்களை மேலும் மோசமாக்கும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.

“நாம் உடனடியாகவும் தீவிரமாகவும் செயல்பட்டாலின்றி, நமது தட்ப வெட்ப நிலையும் நமது வாழ்க்கை முறையும் வெளிப்படையாகவே ஆபத்தான சூழலில் உள்ளன. அறிவியலை மறுப்பது ஒழுங்கீனமாகும்,” என ஐக்கிய அமெரிக்க மாநில செயலாளர் ஜான் கெர்ரி சென்ற மாதம் கூறினார்.

அடக்கமா தகனமா?


இறந்தவர்களை ஏன் தகனம் செய்வது நல்லதல்ல என்பது குறித்து அப்துல்-பஹா அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளித்துள்ளார். அவை கீழ வழங்ப்பட்டுள்ளன.

இறந்தவரை அடக்கம் செய்வதன் விவேகம்
=========================
மார்ஸியே கேய்லின் ‘ Summon up Remembrance (George Ronald, Oxford, 1987), pp. 174-176, (f.n. 106),’ உலக நீதி மன்றத்தின் ஆய்வுத் துறையின் சார்பாக மொழிபெயர்க்கப்பட்டது, மார்ச் 1987
=========================

அவரே கடவுள்

இறைவனின் பணிப்பெண்ணாகிய, குமாரி பார்னி, இறந்தோரைப் பூமியில் அடக்கம் செய்வதன் விவேகம் குறித்து ஒரு கேள்வியெழுப்பியுள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அறிவியலாளர்கள்கூட, இவ்விஷயம் குறித்து நீண்ட மற்றும் பரந்த ஆய்வுக்கும் வாதங்களுக்கும் பிறகு பகுத்தறிவின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, உடலைத் தகனம் செய்வதன் நன்மைகளை முழுமையாக ஸ்தாபித்துள்ளனர் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, பூமியில் நல்லடக்கம் செய்யவேண்டும் எனப் புனித சமயம் கூறுவதிலுள்ள விவேகம் யாது?

நீங்கள் அறிந்துள்ளதுபோல், ஒரு விரிவான விளக்கம் அளிப்பதற்கு இச்சேவகனுக்கு நேரம் போதாது, ஆகவே, இதற்கு ஒரு சுருக்கமான விளக்கமே அளிக்கப்பட முடியும். சர்வலோக இயல்நிகழ்வுகளைப் பொறுத்த வரையில், சரியான செய்முறைகளை அல்லது ஒரு பூரண முறையைக் கண்டுபிடிப்பதற்கு மனித அறிவாற்றல் எத்துணைக் காலத்திற்கும் எத்துணைக் கடுமையாக முயற்சித்தாலும், அது தெய்வீக படைப்பு போன்ற ஒன்றையும் வாழ்வெனும் சங்கிலித்தொடரினுள் அதன் இடமாற்றங்கள், பயணங்கள் ஆகியவற்றின் முறையையும் கண்டுபிடிக்கவே முடியாது. தனிமங்களின் இடமாற்றங்கள், அவற்றின் உள்ளடக்கங்கள், அவற்றின் ஒன்றுகூடல்கள், பரப்பல்கள் மற்றும் அவற்றின் ஆக்கக்கூறுகளும் உள்ளடக்கப் பொருள்களும் ஒரு வலிமையானதும் பிழையற்றதுமான சங்கிலித்தொடரின் வழி முன்செல்கின்றன. பயன்விளைவுமிக்க சர்வலோகச் சட்டங்களைக் கண்ணுற்று அவை எந்த அளவிற்கு உறுதியாகவும் பாதுகாப்புடனும் வலிமையோடும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள்.

பௌதீக உடலின் கூட்டுச் சேர்க்கை, உருவாக்கம், வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எவ்வாறு படிப்படியாக ஏற்பட்டுள்ளனவோ அதே போன்று அதன் சிதைவும் சிதறலும் படிப்படியாக இருந்திட வேண்டும். சிதைவு துரிதப்படுத்தப்படுமானால், அஃது இடமாற்றத் தொடரில் ஒன்று மற்றதன் மீது படிந்து(overlap), ஒரு தளர்வை ஏற்படுத்திவிடும். இத்தொடர்ச்சியின்மை படைப்புப் பொருள்களின் தொடரினுள் உள்ள சர்வலோக உறவைப் பாதிப்படையச் செய்திடும்.

உதாரணத்திற்குத் தனிமங்களால் ஆன இம்மனித உடல் கனிமம், தாவரம் மற்றும் மிருக உலகங்களிலிருந்து உருவாகியுள்ளது. மடிந்த பிறகு அது நுண்ம உயிரினங்களாக முற்றாக மாற்றம் காண்கின்றது. தெய்வீகமுறை, இயற்கையின் உந்தாற்றல் ஆகியவற்றின்படி இந்நுண்ணிய உயிரினங்கள் பிரபஞ்சத்தின் வாழ்க்கையின் மீது தாக்கம் செலுத்துவதோடு வேறு பல வடிவங்களாகவும் மாறும்.

இப்போது, இப்பூதவுடலை நீங்கள் தீக்கு இறையாக்குவீர்களேயாயின், அஃது உடனடியாகக் கனிம இராஜ்யத்திற்கு மாற்றம் காண்பதோடு எல்லாப் படைப்புப் பொருள்களின் சங்கிலித் தொடரான அதன் இயற்கைப் பயணத்திலிருந்து தடுக்கப்படும்.

தனிமங்களால் ஆன இவ்வுடல், அதன் மரணத்தைத் தொடர்ந்து, அதன் கலப்புருவான வாழ்விலிருந்து விடுபட்ட பின்பும், அது வெவ்வேறு கூறுகளாகவும் நுண்ணுயிர்களாகவும் தன்மைமாற்றமடைகின்றன. இப்போது மனித உருவிலான அதன் கூட்டுச்சேர்க்கை வாழ்வை அஃது இழந்துவிட்ட போதும், மிருகநிலையிலான வாழ்வு அதில் இன்னமும் இருக்கின்றது, அது முற்றிலும் உயிரற்ற ஒன்றும் அல்ல. மாறாக, அது தீயிடப்படுமானால், அது சாம்பலாகவும் கனிமங்களாகவும் மாறிவிடுகின்றது. ஒரு முறை அது கனிமமாக மாறிவிட்டால், அது மாற்ற இயலாத நிலையில், முதலில் தாவர நிலைக்குப் பயணித்துப் பிறகு மிருக உலகிற்கு உயர்கின்றது. இதைத்தான் நாம் படிப்படியாகச் செல்வதற்குப் பதிலாக வேறு ஒரு நிலைக்குத் தாண்டிச் செல்வதாகக் கூறுகின்றோம்.
சுருக்கமாகக் கூறின், சகல உயிரணங்களின் சேர்க்கை மற்றும் சிதைவு, ஒன்றுகூடல் மற்றும் பரப்பல் மற்றும் பயணம் இயற்கையான முறையிலும் தெய்வீக விதியின்படியும் கடவுளின் அதிபெரும் சட்டத்திற்கிணங்கவும் முன்செல்ல வேண்டும். அதன் மூலமாகப் படைப்புப் பொருள்களின் உள்ளார்ந்த மெய்ம்மையிலிருந்து வெளிப்படும் இன்றியமையா உறவுகளை எவ்வித சேதமோ பாதிப்போ வந்தடையாது. இதனால்தான், இறைவனின் சட்டப்படி இறந்தோரைப் புதைக்கும்படி நாம் ஆணையிடப்பட்டுள்ளோம்.

பண்டையகாலப் பாரசீக மக்கள் மண்ணில் புதைப்பது அனுமதிக்கப்படவில்லை எனவும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இயற்கை கோரும் செல்வழிகள், பயணங்கள் ஆகியவற்றைத் தடை செய்கின்றதெனவும் அவர்கள் நம்பினர். இதன் காரணமாக மலைகளின் மீது விண்ணைப் பார்த்தவண்ணம் ‘அமைதிக் கோபுரங்களை’ எழுப்பி, அவற்றினுள் இருக்கும் தரையின்மீது இறந்தவரைக் கிடத்தினர். ஆனால், படைப்பின் ஒரு முக்கியத் தேவையான மண்ணில் புதைக்கப்படுவது இயல்பான பயணங்கள், செல்வழிகள் ஆகியவற்றைத் தடுக்கவில்லை என்பதை உற்றுநோக்கத் தவறிவிட்டனர். மண்ணடக்கம் என்பது இயல்நிகழ்வுகள் சீராகத் தொடர அனுமதிப்பதற்கும் அப்பால், வேறு பல நன்மைகளையும் வழங்குகின்றது.

சுருக்கமாகக் கூறின், இவற்றுக்கும் அப்பால், மனித ஆன்மா உடலுடனான அதன் தொடர்பைத் துண்டித்துக்கொண்ட போதும் நண்பர்களும் அன்பர்களும் எஞ்சியிருப்பவை மீது வெகு தீவிரமான பற்று வைத்துள்ளனர். அஃது உடனடியாக அழிக்கப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது. உதாரணமாக, ஒரு நிழலுருவான படம், அதுவும் இறுதியில் அழியக்கூடிய ஒன்றுதான். ஆயினும் படமாக இருக்கும் இறந்த ஒருவரின் முகம் அழிந்து சிதறுவதை அவர்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களால் முடிந்தவரை, சிறு களிமண், ஒரு மரம் அல்லது கல்லாக இருப்பினும் அவரிடமிருந்து (இறந்தவர்) எஞ்சியிருப்பனவற்றை அவர்கள் பாதுகாக்கின்றனர். ஆகவே, அவரது பௌதீக உடலை அவர்கள் அதற்கும் அதிகமாக எவ்வளவு நேசிக்கக்கூடும்! ஒரு நண்பர், தகப்பனார், தாயார், சகோதரர், குழந்தை ஆகியோரின் நேசமிகு உடல் அழிந்துபோவதை அவர்களின் இதயம் எவ்வாறு தங்கிக்கொள்ள இயலும் – இது அன்பு குறித்த ஓர் அவசரத்தேவையாகும்.

அதனால்தான் பண்டைய எகிப்தியர்கள், சலடப்பதனீட்டின் மூலம் உடல் நிலையாக அழிவுறாமல் இருந்திடும் என்பதற்காக உடலைப் பதனம் செய்தனர். இறந்தோர் எவ்வளவு காலத்திற்கு நிலைபெற்றிருக்கின்றாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் தங்கள் கடவுள்களின் கருணையைப் பெறுவர் என நம்பினர். ஆனால், இந்தியாவின் இந்துக்களோ எவ்வித தயக்கமுன் இன்றி உடலைத் தகனம் செய்கின்றனர். அஃது அவர்களின் உள்ளங்களுக்கு ஆறுதலும் அளிக்கின்றது. இருந்தபோதும், இத்தகைய கவனமின்மை தற்செயலான ஒன்றாகும்: அது சமய நம்பிக்கைகளிலிருந்து உதித்ததல்ல, அஃது இயற்கையான ஒன்றுமல்ல. அவர்கள் உடல் எவ்வளவு விரைவாக அழிவுறுகின்றதோ அஃது அவ்வளவு விரைவாக தெய்வீகக் கருணையைச் சென்றடையும் என நினைத்தனர். இது பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கைக்கு எதிர்மாறான ஒன்றாகும். மேலும் இந்துக்கள், உடல் எத்துணை விரைவாக சிதைவுறுகின்றதோ அத்துணை விரைவாக மன்னிப்பைப் பெற்றிடும். இறந்தவர் நிலையாக ஆசீர்வதிக்கப்படுவார் எனவும் வலியுறுத்தினர். இந்த நம்பிக்கையே உடல் தகனத்தை அவர்களுக்கு ஏற்புடையதாக்கியது.
உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியதாகுக. ஒரு வரி எழுதக்கூட எனக்கு நேரம் இல்லாதபோதும், குமாரி பார்னியின் மீதுள்ள அன்பினால், இவ்வரிகள் பதிக்கப்பட்டுள்ளன.

(கையொப்பம்) ‘அய்ன்-‘அய்ன்

=====================

அவரே கடவுள்!

மற்றொரு விஷயமும் உள்ளது, அது பின்வருமாறு: பிளேக், காலரா போன்ற தொற்று நோய்களின்போது, சுண்ணாம்பு அல்லது பிற இரசாயனங்களோடு உடல்கள் தகனம் செய்யப்படுவது அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பதாகும். இவ்வித சூழல்களில் சுகாதாரமும் பாதுகாப்பும் முக்கியமாகின்றன; ஏனெனில், தெளிவுமிகு தெய்வீகத் திருவாசகங்களின்படி, மருத்துவச் சட்டங்களே இங்கு முதன்மை வகிக்கின்றன. ‘தடைசெய்யப்பட்டவற்றை அத்தியாவசியங்கள் சட்டபூர்வமாக்குகின்றன’ என்பது ஒரு முக்கிய விதியாகும்.

உங்கள் மீது சர்வ-மகிமையாளரின் மகிமை பொழியப்படுவதாக!

(கையொப்பம்) ‘அய்ன்-‘அய்ன்

(அப்துல்-பஹா, இறந்தோரைப் புதைப்பதன் விவேகம்)

814. படிப்படியாக உருவான மனித உடல், அதே போன்று படிப்படியாகவே சிதைவுற வேண்டும். மெய்யான, இயல்பான முறை மற்றும் தெய்வீகச் சட்டத்திற்கு ஏற்ப இஃது உள்ளது. இறப்புக்குப் பிறகு உடல் தீயிலிடப்படுவதே சிறப்பென்றால், அது படைக்கப்படும்போதே தன் இறப்புக்குப் பிறகு தன்னியல்பாகத் தீப்பிடித்தும், பொசுங்கியும் சாம்பலாகவும் மாறிடும் வகையில் ஏற்பாடாகியிருக்கும். தெய்வீகக் கட்டளையின்படி உருவாக்கப்பட்ட திவ்யமுறை கூறுவது யாதெனில், இறப்புக்குப் பிறகு இவ்வுடல் ஒரு நிலையிலிருந்து அதற்கு முன்னிருந்த நிலைக்கும் மாறுபட்ட வேறொரு நிலைக்கு இடமாற்றம் செய்யப்படவேண்டும். அதன் மூலமாக, இவ்வுலகில் வியாபித்திருக்கும் உறவுகளுக்கு ஏற்ப, அது பிற தனிமங்களுடன் படிப்படியாகச் சேர்ந்தும் கலந்தும், அதன் மூலமாக ஒவ்வொரு நிலையாக மாறி தாவர இராஜ்யத்தைச் சென்றடைந்து, அங்குத் தாவரங்களாகவும் மலர்களாகவும் மாறி, பிறகு அதிவுயர்ந்த சுவர்க்கத்தின் மரங்களாக மேம்பாடு அடைந்து, நறுமணத்தையும் வர்ணஜால அழகையும் பெறுகின்றது.

இத்தகைய நிலைமாற்றங்கள் அடைவதை தகனம் விரைந்து தடுக்கின்றது, தனிமங்கள் வெகு விரைவாகச் சிதைவுறுவதனால் இப்பல்வேறு கட்டங்களுக்குத் தன்மைமாற்றம் பெறுவது தடைசெய்யப்படுன்றது. 447
(பஹாய் இலக்கியங்கள், திரட்டுகள், பக். 446