(http://tinyurl.com/2eqjyd8)ன் மொழிபெயர்ப்பு
வேலை தேடி அலைவதில் நான் நினைத்ததைவிட சந்தை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தும், இடத்திற்கு இடம் வேலை காலி இல்லை எனும் அறிக்கைகளை கண்டும், மனம் மிகவும் தளர்ந்து போவது எளிதே. ஆனால், ஏதாவது ஒரு வழி தோன்றும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இழக்காமல் இருப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பிறக்கப்போகும் அவ்வழி நான் எதிர்ர்பார்த்திருந்த வழியாக இல்லாமலும் இருக்கலாம், அதனால் பாதகமில்லை. பின்வரும் திருவாக்குப் பகுதியை சிறிதுகாலமாக நான் படித்துவருகிறேன். அது மனதிற்கு ஆறுதலும் உறுதியும் அளிப்பதாக உள்ளது. மனம் தளர்வடையும் போதெல்லாம் இவ்வரிகளையே நான் சரனடைகிறேன்:
இறைவனின் இராஜ்ஜியத்தின் முன் பிரார்த்தனையோடு பனிந்து நிற்பவனே! தெய்வீக வதனத்தின் அழகு உன் உள்ளத்தை பரவசம் அடையச்செய்துள்ளது, உள்ளார்ந்த விவேகத்தின் ஒளி அதில் முழுமையாக நிறைந்துள்ளது, இராஜ்ஜியத்தின் பிரகாசம் அதனுள் ஒளிவீசுகின்றது. எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் உன்னோடு இருக்கின்றார், இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார், மற்றும் அவரது வலுமிகு திராட்சை தோட்டத்தில் உன்னை தமது பணிப்பெண்ணாக்கியுள்ளார் என்பதை அறிவாயாக.
உண்மையில், வாழ்க்கையில் நாம் இதற்கு மேலும் வேறு எதைத்தான் வேண்டக்கூடும்? “இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார்…” என்பது மனதுக்கு எத்துனை ஆதரவாக இருக்கின்றது. கடவுள் “வாஞ்சைமிக்கவர்” எனும் வார்த்தைகளை சமீபகாலமாக நான் தியானித்து வருகின்றேன். கடவுள் அதி வாஞ்சை மிக்கவர். ஆகவே அவரது படைப்புக்களாகிய நாமும் அவ்வாறே வாஞ்சைமிக்கவர்களாக இருக்கவேண்டும். போட்டி மற்றும் தன்னலம் மிகுந்த இச்சமூக சூழலில் நாம் ஒருவருக்கு ஒருவர் வன்மையாகவும் கடுமையாகவும் நடந்துகொள்கின்றோம். நான் சிறு வயது முதல் என் வாழ்வில் வாஞ்சைமிகு, அன்பான, மென்மை மிக்கோரை பெற்றுள்ளது என் அதிர்ஷ்டமே, மற்றும் நான் என் வாழ்வில் நன்றி நவிலும் விஷயங்களில் இதுவும் ஒன்றே… (மேல்நாடுகளில் கடைபிடிக்கப்படும் நன்றிநவில்தல் நாளை ஒட்டி எழுதப்பட்ட வரிகள்.)