எல்லைகள் அற்ற கோவில்


உலகில் காலங்காலமாக தெய்வ வழிபாட்டுக்கென கோவில்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சிறியதும் பெரியதுமாக பல கோடி கோவில்கள் உலகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றில் தலைசிறந்தவையாக உள்ளவற்றைக் காண்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழில்துறை நிபுனத்துவம் இல்லாத அக்காலத்தில்கூட இத்தகைய பல பிரமாண்டமான கோவில்கள் எழுப்பப்பட்டதானது நம்மை பிரமிக்கவைக்கின்றது.

உதாரணமாக, ஆரம்பத்தில் விஷ்ணு வழிபாட்டிற்காக கம்போடிய நாட்டில் பல நூறு வருடங்களுக்கும் முன் எழுப்பப்பட்ட “அங்கோர் வாட்” எனப்படும் கோவில் உலகில் உள்ள இந்து கோவில்களிலேயே அதி பெரியது என வருணிக்கப்படுகின்றது. அதே போன்று துருக்கி நாட்டில் உள்ள பைசன்டைன் கட்டிடக்கலை பள்ளிவாசல்கள், வட்டிக்கன், இத்தாலியில் உள்ள 60,000 மக்களை உள்ளடக்கக்கூடிய செயின்ட் பீட்டர் தேவாலயத்தையும் நாம் குறிப்பிடலாம். இன்று உலகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள பஹாய்களின் வழிபாட்டு இல்லங்களையும் நாம் இங்கு குறிப்பிடக்கூடும்.

இங்கு கோவில்கள் என ஒரு மதச்சார்ப்புடையோரின் கோவில்களை மட்டும் உள்ளடக்காமல் எல்லா சமய வழிபாட்டு இல்லங்களையும் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். ஐரோப்பிய நாடுகளில் எழுப்பப்பட்டுள்ள மாதாகோவில்கள், இஸ்லாமிய நாடுகளின் பள்ளிவாசல்கள் மற்றும் இந்துக்களின் கோவில்கள் பெரும்பான்மையானவை. கடந்தகாலத்தில் பல அரசர்கள் இத்தகைய பெரும் பெரும் வழிபாட்டு இல்லங்கள் கட்டியே தங்கள் பொக்கிஷங்களை காலி செய்தும் உள்ளனர்.

வழிபாட்டுக்காக கோவில்கள் தேவைதான். ஆனால், அவை இத்தகைய மாபெரும் கட்டிடங்களாக இருக்கவேண்டுமா எனும் கேள்வி எழக்கூடும். சிறு சிறு கோவில்களில் வழிபாடுகள் செய்யமுடியாதா? அவற்றில் செய்யப்படும் வழிபாடுகளை கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டாரா?

இது குறித்து சற்று ஆழ சிந்தித்தோமானால் இத்தகைய பிரமாண்டமான கோவில்கள் நிறுவப்பட்டது வழிபாட்டிற்காக மட்டுமல்லாமல் கடவுள் மீதுள்ள தங்களின் பக்தியை மக்களும் அரசாங்கங்களும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் இதை நாம் கருதக்கூடும் மற்றும் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு பொருள் கடவுளின் உயர்வை பிரதிபலிப்பதாகவும் இருக்கவேண்டும் என்பதாகவும் இருக்கலாம். இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். அவற்றை இங்கு விமர்சிப்பது நமது நோக்கமல்ல.

அங்கோர் வாட்

கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவதன் நோக்கமென்ன? ஆண்டவரை நாம் வீட்டில் இருந்து கொண்டே வழிபட முடியாதா? அவர் அத்தகைய வழிபாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டாரா? இதுவும் தேவை அதுவும் தேவைதான். தனிமையில் வழிபடுவதும் முக்கியம்தான் அதே வேளை ஒரு சமூகமாக வழிபடுவதும் முக்கியம்தான். அனைத்திற்குமே அதனதன் தாத்பரியங்கள் உண்டு. அவற்றின் முக்கியத்துவத்தை நாம் ஒப்பீடு செய்யவும் முடியாது அவற்றை குறைத்து மதிப்பிடவும் முடியாது.

வழிபாடு என்பது வழிபாட்டு இல்லங்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது மட்டுமா அல்லது வழிபாட்டுக்கு வேறு உள்ளர்த்தங்களும் உண்டா என்பதை நாம் இங்கு ஆய்வு செய்யவேண்டும்.

உலகில் பல பிரமாண்டமான கோவில்கள் உள்ளன ஆனால், நாம் அறியாத, எல்லயற்ற, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அதிவுயர்ந்த கோவில் ஒன்று உள்ளது என்பதை நாம் அறிவோமா? இக்கோவிலில் செய்யப்படும் வழிபாடே மற்ற எல்லா வழிபாடுகளுக்கும் மூலாதாரம் என்பதையும் நாம் அறிவோமா? இக்கோவிலில் வழிபாடு இல்லையெனில் எக்கோவிலிலும் உண்மையான வழிபாடு கிடையாது.

இந்த மனித அறிவிற்கு அப்பாற்பட்ட கோவிலோடு ஒப்பிடும்போது மற்ற கோவில்கள் அனைத்தும் வெறும் பிரதிபலிப்புக்களே ஆகும். ஒப்பீடற்ற இக்கோவிலுக்கு இயல்பான அளவு கிடையாது. இக்கோவிலில் சடங்கு சம்பிரதாயங்கள் கிடையாது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் அங்கு செய்யப்படும் வழிபாட்டின் அளவை எல்லைக்குட்பட்டதாக்குகின்றன. எல்லையற்ற இக்கோவிலின் அளவை நமது கடவுள் வழிபாடுகளின் வாயிலாக நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம் பிறகு அதனை மாற்றியும் கொள்ளலாம்.

அப்படியானால் இது எந்த கோவில்?

பஹாவுல்லாவின் மறைமொழிகளில் பின்வரும் வாக்கு ஒன்றை நாம் காணலாம்:

இருப்பின் புத்திரனே!
உனது உள்ளமே எனது இல்லம். எனது வருகைக்காக அதனை புனிதப்படுத்துவாயாக

ஆம், கடவுள் உண்மையிலேயே குடிகொண்டிருக்கும் கோவில் நமது உள்ளமே ஆகும். அவர் அங்குதான் முதன்மையாக குடிகொண்டிருக்கவேண்டும். நமது உள்ளத்தைதான் இறைவன் தமது இல்லமென்கிறார். இறைவன் குடிகொண்டிருக்கும் இடம் கோவிலும் ஆகும். ஆகவே, அவர் இருக்கும் அல்லது இருக்கவேண்டிய இடத்தை ஒரு புன்யபீடமாக்குவது நமது கடமையாகும். நாம் அவ்வாறு செய்யவில்லையெனில் கடவுள் அங்கு குடிகொள்ளமாட்டார், அக்கோவில் ஒரு வெற்றிடமாகிவிடும் மற்றும் அவ்வுள்ளம் இருளைடைந்து போகும் பிறகு எங்கு சென்று அவரை பூஜித்தாலும் அதனால் எந்த பயனும் இல்லாமல் போகும்.

மனித உள்ளம் அன்பின் உதயமையமும் ஆகும். அங்கு கடவுள் குடிகொண்டிராவிடில் உள்ளத்தில் உதயமாகும் அன்பு கடிவாளம் இல்லாத குதிரை போன்றதாகி லௌகீக பற்றுக்களில் மனிதன் ஆழ்ந்துவிடுவான்.

கடவுளை மனித இதயத்தில் வைத்து பூஜிப்பது என்பதன் தாத்பர்யம் என்ன?

உள்ளம் எனும் கோவிலில் மனிதன் கடவுளை பூஜிப்பது என்பது மனதால் கொள்ளப்படும் ஒரு செயல் மட்டும் அல்ல. கடவுளின் படைப்பு இருவிதமானது. ஒன்று ஆன்மீகம் மற்றது லௌகீகம் அல்லது பௌதீகம். உணர்வுகள் ஆன்மீகம். அந்த உணர்வுகளிலிருந்து வெளிப்படும் செயல்கள் பௌதீகமானவை. அதாவது வழிபாடு என்பது வெறும் உணர்வுகளை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது அவ்வாறு இருக்கவும் முடியாது. உதாரணமாக ஒருவர்பால் கொண்டிருக்கும் அன்பு எனும் உணர்வு அதே நபர்பால் செயல்களாக வெளிப்படாத வரை அந்த அன்பினால் எவ்வித பயனும் இல்லை. அதே போன்று கடவுள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு செயல்களாக வெளிப்படாத வரை அந்த அன்பினால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை.

கடவுள் யாவற்றையும் அதனதன் சாயலிலேயே படைத்துள்ளார். ஜடப்பொருட்களை ஜடப்பொருட்களின் சாயலிலும் தாவர வகைகளை அவற்றின் சாயலிலும் மிருகங்களை மிருகங்களின் சாயலிலும் அவர் படைத்துள்ளார். ஆனால், மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார். மனிதனுக்கு தமது பன்புகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஆற்றலை வழங்கியுள்ளார். இதைத்தான் அவர் நம்மிடமிருந்தும் எதிர்ப்பார்க்கின்றார். “மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு அர்த்தமும் இதுதான். மனிதப்படைப்பின் நோக்கமும் இதுதான். மனிதன் கடவுளை தன் இதயத்தில் வைத்து பூஜிப்பது என்பதன் அர்த்தமும் இதுதான்.

மனித உள்ளம் எனும் கோவிலின் மூலஸ்தானம் ஒரு கண்ணடியைப்போன்றது. அக்கண்ணாடி எவ்வேளையிலும் இறைவனை நோக்கியே திரும்பியிருக்க வேண்டும், அவர் வழியிலேயே மனிதன் நடக்க வேண்டும். சக மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும். ஆகவே, மனிதர்களுக்கு சேவை செய்வதிலேயே மனிதன் தன் வாழ்க்கையை அர்ப்பனிக்க வேண்டும். இதுவே உண்மையான கடவுள் பக்தி மற்றும் வழிபாடு. இதுவே மனிதப்படைப்பின் குறிக்கோள். இதற்காகவே கடவுள் மனிதனுக்கு மனித உள்ளமெனும் கோவிலை வழங்கியுள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணர்


கடவுளின் அவதாரங்கள்

ஓர் அவதாரத்தின் பூலோக வாழ்வைப் பற்றி ஆராயும் போது, மனிதக் கண்களால் பார்க்கமுடியாத பரம்பொருளான புனித ஆவியின் பிரதிபலிப்பாகிய அவரது மேலான நிலை சார்ந்த செயல்கள் தவிர்த்து, அவரது மற்ற நடவடிக்கைகள் யாவும் சாதாரண மனிதர்களின் உலக வாழ்வியல் முறைகளைச் சார்ந்திருக்கவே காணலாம்.

பார்ப்பதற்கு சாதாரண மனிதரைப்போல்தான் அவரும் காட்சியளிக்கின்றார். எல்லா மனிதர்களைப் போலவே அவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கின்றார், வளர்கிறார், திருமணம் செய்துகொள்கிறார், அவரது மனைவியின் மூலமாக குழந்தைகள் பெறுகின்றார், இறுதியில் எல்லா மனிதர்களைப் போலவே இறந்தும் போகின்றார். அதாவது, மனிதர்களாகிய நாம் அவரை அடையாளங் கண்டுகொள்ள ஏதுவான முறையில் அவரை இறைவன் நம்மிடம் அனுப்பியும் நம்மிடையே வாழவும் வைக்கின்றார்.

ஓர் அவதாரத்தின் லௌகீக வாழ்க்கையுடன் நமது லௌகீக வாழ்க்கையை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதை நம்மால் புறிந்து கொள்ளவும் முடியும். அவர்களும் மனித உணர்வுகளுக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கும் நம்மைப் போன்றே லௌகீக மற்றும் பௌதீகத் தேவைகள் உள்ளன. அவர்களுடைய போதனைகளையும் வாழ்க்கையையும் நாம் அறிந்தும் புறிந்தும் கொள்ள வேண்டும் என்று தானே இறைவன் அவர்களை நம்மிடம் அனுப்பி வைக்கின்றார். எல்லா வேளைகளிலும் நமது அறிவிற்கு அப்பாற்பட்டு அவர்களுடைய வாழ்க்கையும் போதனைகளும் இருக்குமாயின் அதனால் நமக்கு என்ன பயன்!

இக்கால இறைத்தூதர்களான பாப் அவர்கள், பஹாவுல்லா, மற்றும் அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய இயேசு, முகம்மது போன்றோரின் வாழ்க்கையும் இதே ரீதியில்தான் அமைந்துள்ளது. அவர்களுடைய வாழ்க்கைகளில் நடந்த சம்பவங்களை நம்மால் ஆராய முடியும். அவர்களது வாழ்க்கையில் நடந்த லௌகீக நிகழ்ச்சிகள் நமது வாழ்க்கைச் சம்பவங்களுடன் ஒத்திருக்கின்றன. இதன் காரணமாகவே ஆன்மீகக் கண்களற்ற மனிதர்கள் அவர்களை இறைத் தூதர்களென கண்டுகொள்ளாமல் அவர்களும் தங்களைப்போல சாதாரண மனிதர்களே என உதாசீனப்படுத்தியும், அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு எள்ளி நகையாடியும், இறுதியில், சில வேளைகளில் அவர்களைக் கொன்றும் உள்ளனர்.

கிருஷ்ணாவதாரம்

கடவுளின் அவதாரங்களை கண்டுகொள்ள பஹாவுல்லா நமக்கு வழங்கியுள்ள அளவையை வைத்து வைதீக சமயமாகிய ஹிந்து சமயத்தை நாம் ஆராயுமிடத்து, பௌத்த, கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயத் தூதர்களைப் போல் ஹிந்து சமயத்தில் நாம் அறிந்து கொள்ளும் வண்ணம் இறைத்தூதர்கள் சித்தரிக்கப்படவில்லை என்பதைக் காணலாம். புராண இதிகாசங்களில் இறைத்தூதர்களின் லௌகீக வாழ்க்கைப் பற்றி நாம் அறிந்துகொள்வது சிறிது சிறமமே. பொதுவாக அவர்களுடைய வாழ்க்கை சாதாரண மனித வாழ்விற்கு அப்பாற்பட்டும், மாயாஜாலங்கள் நிறைந்தும், எளிதில் நாம் புறிந்து கொள்ள முடியாத வகையிலும் உள்ளது.

வைதீக சமயங்களில் வெகு சமீபத்தில் தோன்றிய அவதாரங்களென, இராமரையும் கிருஷ்ணரையும் கூறலாம். சுமார் 7550 வருடங்களுக்கு முன்பு இராமர் தோன்றியதாக பஞ்சாங்கக் கணிப்புக்கள் காட்டுகின்றன. அவர் மூலமாக ‘சம்பூர்ண இராமாயனம்’ என்னும் இராமகாதை பிறந்து, பாரதத்தை மட்டும் அல்லாது தென் கிழக்கு ஆசியா முழுவதையுமே கவர்ந்துள்ளதுடன், இன்றளவும் அதன் தாக்கங்களை அந்தப் பிரதேசங்களில் காண முடிகிறன்றது. அதே பஞ்சாங்கக் கணக்குப்படி கிருஷ்ணர் பிறந்தது கிமு 3228-இல். இந்த வைதீக சமயங்களில், அவதாரங்கள் “துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்” செய்வதற்காக பூமியில் பிறக்கின்றார்கள் என்பது ஐதீகம். அதாவது துஷ்டத்தனத்தைக் கட்டுப்படுத்தி, ஒற்றுமையைப் பரிபாலிப்பதற்காக அவர்கள் பூமியில் தோன்றுகின்றனர். தேவாசுர யுத்தங்கள் இதற்காகவே நடத்தப்பட்டன. ‘பூபாரத்தைக்’ குறைக்க அசுரர்களையும் அதர்மக்காரர்களையும் அக்காலத்து அவதாரமாகியவர் அழித்து சிஷ்ட பரிபாலனம் செய்வதைப் புராணங்களில் நாம் காணலாம். பூமியில் அதர்மமும் பாவங்களும் ஓங்கி நிற்பதே இங்கு ‘பூபாரம்’ என அழைக்கப்படுகிறது. சாதாரன மனித வாழ்வில் நடக்கும் சம்பங்களுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வைதீக அவதாரங்களின் வாழ்க்கையை, நாம் அறிந்துள்ள வகையில் பிற அவதாரங்களின் வாழ்க்கையோடு எந்த கோணத்தில் ஒப்பிடுவது? ஒன்று நிச்சயம், இந்த நோக்கம் நிறைவேற புராணங்களை நாம் ஆராய்ந்தே ஆகவேண்டும்! இப்புராணங்களையும் இதிகாசங்களையும் நாம் ஆராய்வோமானால் அவற்றின் அசாதாரண சம்பவங்களின் வர்ணனைகளுக்கிடையே சாதாரண மனித வாழ்வைப் பிரதிபலிக்கும் சம்பவங்கள் பலவற்றை ஆங்காங்கு நாம் காணமுடிகின்றது.

கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கையும் இத்தகையதாகவே இருந்துள்ளது. அவரது வாழ்க்கையின் அசாதாரண சம்பவங்களுக்கிடையே ஆங்காங்கு சாதாரண மனித வாழ்க்கை சம்பவங்களும் நிறைந்திருப்பதைப் பகுத்துணரலாம். புராணங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மாயா ஜாலங்கள் சாதாரணமாக மனிதவாழ்க்கையில் நடப்பவை அல்ல. அவை ஆன்மீக அழுத்தம் நிறைந்த உலகியல் நிகழ்வுகள். அவற்றைப் புறிந்து கொள்ள ஆன்மீகக் கண்கள் வேண்டும். எல்லா கடவுள் அவதாரங்களின் வாழ்க்கைகளும் இத்தகைய சம்பவங்களை வெவ்வேறு அளவில் வெளிப்படுத்தியுள்ளன. நமக்குச் சமீபமாக உள்ள அவதாரங்களில் இத்தகைய மாயாஜாலங்கள் குறைந்தும் புராண காலத்தில் இவை மிகுந்தும் உள்ளது ஆராய்ச்சிக் குரிய ஒரு விஷயமாகும். புராண காலத்தில், அப்போதைய நிலையில், மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இறைவன் சம்பந்தப்பட்ட உயர்வான விஷயங்களை, அவற்றின் உயர்வு குன்றாமல் விளக்குவதற்கு மாயாஜாலம் கலந்த வர்ணனைகளைத் தவிர வேறு வழிகள் இல்லையோ என்னவோ, அல்லது அக்கால மனிதர்களின் மனவளர்ச்சிக் குறைவு அத்கைய விஷயங்களை, கருத்தாக்கங்களை நேரடியாக புரிந்துகொள்ள முடியாமல் செய்திருக்கலாம். குழுந்தைகளைப்போல் அவர்களும் இவ்வித அற்புதங்களின் கவர்ச்சியின் மூலமாகத்தான் ஓர் அறிவுநிலைக்கு வரவேண்டிய நிலையில் இருந்திருக்கலாம்..

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்களின் மனதில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தி, இன்றும் ஏற்படுத்திக் கொண்டும் உள்ள, கண்ணன், முகுந்தன், நந்தகோபாலன், முரளீதரன், கேசவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வரும் கிருஷ்ணாவதாரத்தின் வரலாற்றைப் பற்றி புராணங்களில் நாம் படிக்கும் போது, உலகியல் ரீதியிலான பல விஷயங்களும் அதே சமயம் நமது அளவிற்கு உட்பட்ட அறிவிற்குப் பொருந்தாத பல சம்பவங்களும் அங்கு நிறைந்திருக்கின்றன. இங்கு, நாம் அறிந்துள்ள மற்ற அவதாரங்களைப் போல் கிருஷ்ணரையும் இவ்வுலகுக்கு இறைவனின் வெளிப்பாட்டைக் கொணர்ந்த ஓர் அவதாரமாக பார்க்க முயல்வதோடு, அவரது வாழ்க்கையில் நடந்த ஓரிரு சம்பவங்களைக் கண்ணோட்டமிடுவதுமே நமது நோக்கமாகும். எதுவாயினும், கிருஷ்ண பரமாத்மாவின் கதை ஒரு நித்தியமான கதை, இறைவனின் அருள் மிகுந்த கதை, தீராத விளையாட்டுப் பிள்ளை என வழங்கப்பட்ட கண்ணனின் கதை, இறைவன் மனிதன் மேல் கொண்ட தமது அன்பினால் அவனை எப்போது படைத்தாரோ அப்போதிருந்தே நடந்துகொண்டிருக்கும் அவதாரங்களின் கதை என்பதை நாம் க்ஷன நேரமும் மறந்துவிடக்கூடாது.

பழங்காலங்களில் பாரதம் என வழங்கப்பட்டு வந்துள்ள தற்போதைய இந்தியாவில் புத்தர் தோன்றுவதற்கு முன் கிமு 3228-இல், இன்று கிருஷ்ண ஜெயந்தி என்று வழங்கப் பெறும் அதே நாளில், வட இந்தியாவின் யமுனா நதிக் கரையிலுள்ள மதுரா நகரிலோ அல்லது அதற்கு அருகிலோ, கண்ண பரமாத்மா பிறந்திருக்கக் கூடும் என யூகிப்பது சிரமமான காரியமல்ல. அதாவது ஒரு சதுர்யுகத்தில் அடங்கியுள்ள நான்கு யுகங்களில் மூண்றாவது யுகமான துவாபர யுகத்தின் கடைப்பகுதியான சந்தியாம்ச காலத்தில்தான் அவர் பிறந்தார். அவரது 122-வது வயதில் அவர் மோட்சம் அடைந்த மறு கனமே கலி யுகம் பிறந்தது. அந்தக் கலி யுகத்தின் முடிவில்தான் கல்கி அவதாரம் தோன்ற வேண்டும். கலி யுகம் எப்போது முடிந்தது மற்றும் சத்திய யுகம் எப்போது ஆரம்பித்தது என்பன போன்ற கேள்விகளுக்கு இங்கு விரிவான பதிலளிக்க முடியாது. சுறுக்கமாக கூறவேண்டுமானால் வள்ளலார் இராமலிங்கர், விவேகானந்தர் போன்றோர் கலியுகம் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே முடிந்துவிட்டதென கூறியுள்ளனர்.

கருநெய்தல் பூவைப் போன்ற திருமேனி

வெளியே கடும் மழை பெய்ய, அருகிலிருந்த யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, காரிருள் சூழ்ந்த ஒரு சிறைக்குள், கருநெய்தல் பூவைப்போன்ற திருமேனியுடனான குழந்தை ஒன்று பிறந்தது. அந்நாட்டு அரசனுக்கு ஒன்றுவிட்ட தங்கை மகன் என்னும் உறவோடு தங்கத் தொட்டிலில் பிறந்திருக்க வேண்டிய அக்குழந்தை, வௌவால்கள் வாசம் செய்திருக்கக் கூடிய, சில்லிட்ட சிறைச் சாலையின் சுவர்களுக்கிடையில் பிறக்க நேர்ந்தது. குழந்தை பிறந்த பேரின்பத்தில் திளைத்திருக்க வேண்டிய தாய் தந்தையர், குழந்தை பிறந்துவிட்டதே இப்போது என்ன செய்வது என பதைபதைத்தனர். சிறை அதிகாரிகள் அறியா வண்ணம், இரவோடு இரவாக, குழந்தையின் தந்தையாகிய வாசுதேவர் அக்குழந்தையை ஒரு கூடையில் வைத்து, அதைத் தமது தலை மேல் சுமந்து கழுத்தளவு நீர் ஓடி வெள்ளக்காடாக தோற்றமளித்த யமுனை ஆற்றைக் கடந்து, அக்கரை சென்றார். அங்கு அந்த நாட்டின் அரசனுக்குக் கப்பங்கட்ட வந்திருந்த பலர் கூடியிருந்தனர். அவர்களில் தமது நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அந்த நண்பருடைய மனைவியும் அதே வேளையில் பிரசவித்து ஒரு பெண் குழந்தையை ஈன்றிருந்தாள். என்ன செய்வதென யோசித்த நண்பர்கள் இருவரும் தத்தம் குழந்தைகளை பரிமாற்றிக் கொண்டனர். ஆண் குழந்தை இருந்த இடத்தில் பெண் குழந்தையும் பெண் குழந்தை இருந்த இடத்தில் ஆண் குழந்தையுமாக திரும்பிச் சென்றனர்.

அந்நாட்டு அரசனின் சிறையில் பிறந்த அக்குழந்தை தன் தந்தைக்கு எட்டாவது குழந்தை. அதற்கு முன் ஆறு குழந்தைகள் பிறந்து அனைத்தும் அவற்றின் தாய்மாமனான அரசனால் கொல்லப்பட்டன. ஏழாவதாக ஒரு குழந்தை கம்சனுக்குத் தெரியாமல் அதன் தந்தையின் மற்றொரு மனைவியான ரோகினி என்பவளிடம் எப்படியோ ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்த நாட்டின் அரசனாகிய கம்சனின் ஒன்று விட்ட தங்கையே அக்குழந்தையின் தாயாகிய தேவகி. அரசன் தன் தங்கையையும் அவளது கனவனையும் சிறையிலிட்டிருந்தான். இந்தக் குழந்தையே அந்த எட்டாவது குழந்தை. ஆனால் ஏழாவது குழந்தை பிறந்தது தெரியாத அரசன் இதுவே ஏழாவது குழந்தை என நம்பினான். எப்படியாவது தமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பது அக்குழந்தைகளின் தகப்பனின் ஆசை.

அரசனுக்கு ஒரு பச்சிளம் சிசுவிடம் அப்படி என்ன பயம்? பாராளும் மன்னனை பாலுண்ணும் குழந்தை என்ன செய்து விட முடியும்? சாதரணக் குழந்தையாக இருந்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது தான். ஆனால் பிறந்தது சாதாரணக் குழுந்தையல்லவே! பாராளும் மன்னரையெல்லாம் வேரோடு தரையில் வீழ்த்தக்ககூடிய சக்தி படைத்த தெய்வீகக் குழந்தையாயிற்றே அது! பூமியில் அன்பெனும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவும், தர்மம் ஓங்கிடவும் இறைவனின் தடுக்கவியலா விருப்பத்திற்கினங்க பிறந்த தெய்வீகக் குழந்தையாயிற்றே அது!

தேவகி கல்யாணம்

மதுரா நகரத்தின் அரசனான கம்சன் தன் தங்கையான தேவகிக்கு வயது வந்தவுடன் யதுகுலத்தவரான வசுதேவருக்கு அவளை மணமுடித்தான். திருமணம் முடிந்து தானே மணமக்கள் இருவரையும் தேரில் வைத்து மதுரா நகரின் சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான். அப்போது திடீரென கம்சனின் செவிகளில், எந்தத் தங்கையை அரசன் ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றானோ, அதே தங்கையின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது என்னும் வார்த்தைகள் ஒலித்தன. அதைக் கேட்ட அரசன், தங்கை என்றும் பாராமல் உடனே தேவகியைக் கொல்ல முற்பட்டான். வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை உனக்கே தந்துவிடுகிறேன் ஆனால் என் மனைவியை ஒன்றும் செய்துவிடாதே, எனக் கம்சனிடம், கெஞ்சினார். அதற்கு மனம் இளகிய கம்சன், அவர்கள் இருவரையும் கொல்லவில்லை ஆனால் அதற்கு பதிலாக அவர்களைச் சிறையில் அடைத்து வைத்தான். குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். எட்டாவதாக கிருஷ்ணர் அவதரித்த போதே மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்தது.

இடையில், கம்சனுக்கு சந்தேகம் ஏற்பட்டதோ என்னவோ, தன்னை அழிக்கக் கூடிய குழந்தை எங்கோ வளர்ந்து வருகிறான் என்பதைப் புறிந்துகொண்டான். தன் காவலர்களை அழைத்து, தனது நாட்டிலுள்ள விசேஷ பலமும் சாமர்த்தியமும் நிறைந்த ஆண் குழந்தைகள் அனைவரையும் கொண்றுவிடுமாறு கட்டளையிட்டான். முன்பொரு காலத்தில் எகிப்திலும், பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நாதர் பிறந்த போதும், இதே காரணத்திற்காக ஆயிரக் கணக்கில் குழுந்தைகள் மடிந்ததை இது ஞாபகப்படுத்துகின்றது.

எட்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருப்பது கண்டு, கம்சன் சஞ்சலமுற்று, வசுதேவரையும் அவரது மனைவியான தேவகியையும் அதற்கு மேல் சிறையில் வைத்திருப்பதால் எவ்விதப் பயனும் இல்லையென அவர்களை அப்போதே விடுதலை செய்துவிட்டான். விடுதலையான வசுதேவர், நாட்டிலுள்ள குழந்தைகளைக் கொல்லும் கம்சனின் உத்தேசத்தை உணர்ந்து உடனடியாக யமுனை ஆற்றைக் கடந்து, நந்தகோபரிடம் சென்று அதற்கு மேல் அவர் அங்கிருப்பது நல்லதல்ல எனவும், உடனடியாக கோகுலம் என்னும் தமது ஊருக்குச் சென்றுவிடுவது நன்மை எனவும் உபதேசித்தார். கோகுலத்தில் வசுதேவருடைய மற்றொரு மனைவியான ரோஹினியிடம் இருந்த பலராமர் என்னும் குழந்தையையும் தம் குழந்தையைப்போலவே நந்தகோபர் வளர்த்து வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பாலகிருஷ்ணன்

கோகுலத்தில் கம்சனின் ஏவலாளிகளினால் குழந்தையாக இருந்த, ஆனால் விசேஷ பலமும் சாமர்த்தியமும் மிக்க கிருஷ்ணரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. பாப் அவர்களும் பஹாவுல்லாவும் தங்கள் பால பருவத்தில் இருந்தது போல் கிருஷ்ணர் தமது பால பருவத்தில் ஓர் அமைதியான குழந்தையாக இருக்கவில்லை என்பது மிகவும் தெளிவு. குழந்தையாக இருக்கும் போதே அசாதாரண பலம் கொண்டவராக விளங்கினார். ஒரு முறை குழந்தையாகிய கிருஷ்ணரைக் கட்டுப்படுத்த முடியாமல், அவரது தாயான யசோதை, ஓர் உரலில் கயிற்றைக் கட்டி மறு முனையை குழந்தையின் காலில் கட்டி வைத்தார். தவழும்போது அந்த உரலையே தம்மோடு சேர்த்து இழுத்துச் சென்றாராம் கிருஷ்ணர். ஏறக்குறைய இது நடந்த போது கிருஷ்ணருக்கு ஒன்றிலிருந்து மூன்று வயதிற்குள் இருந்திருக்கலாம். கிருஷ்ணரும் பலராமரும் விளையாட்டு பருவத்தில் படுக்கச் செல்லுமுன் இடைச் சிறுவர்களோடும் மாடுகளோடும் சிறிது நேரம் விளையாடிவிட்டே படுக்கச் செல்வராம். இதன் பிறகு கிருஷ்ணருக்கு சுமார் மூன்று வயதாகிய போது, சில காரணங்களினால் ஆயர்பாடிகளான இடையர்கள் வேறொரு இடத்திற்குப் பெயர்ந்து சென்றனர். பிருஹத் வனமாக இருந்த புதிய இடம், கிருஷ்ணரின் வருகைக்கு பிறகு பிருந்தாவணமாகியது. அதன் பிறகு நந்தகிராமம் எனப்படும் இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். கிருஷ்ணருக்குச் சுமார் ஏழிலிருந்து பத்து வயதிற்குள் பலராமருடன் சேர்ந்து ஒரு மல்யுத்தப் போட்டியில் கலந்துகொள்ள மதுரா நகர் சென்றார். போட்டிகளில் வென்றதோடன்றி அங்கு கம்சனையும் அழித்தார். அவரது பத்தாவது வயதிலிருந்து மதுரா நகருக்கே இடம் பெயர்ந்து சென்றார். பிறகு தமது இருபத்தொன்பதாவது வயதில் துவாரகாபுரியில் தமது இராஜ்யத்தை ஸ்தாபித்து தமது இறுதி நாட்கள் வரை அங்கேயே வாழ்ந்திருந்தார்.

குழலூதும் கண்ணன்

ஆயர்பாடிகளின் வாழ்க்கை முறைக்கு ஒப்ப கிருஷ்ணரும் பலராமரும் தக்க வயது வந்தவுடன் மாடுகள் மேய்த்திட அனுப்பப்பட்டனர். கைகளில் புல்லாங்குழல் கொண்டு காட்சி அளிப்பதும் இந்தக் காலத்தில்தான். பஹாவுல்லாவுக்கு அவரது எழுகோலும், கிருஷ்ணருக்கு புல்லாங்குழலும் சின்னங்கள். இந்த இரண்டும் ஒரே மூல விஷயத்தின் சின்னங்கள். முன்பு புல்லாங்குழலின் இசை, இப்போது நானல் எழுதுகோலின் கிரீச்சுக் குரல். இரண்டுமே இறை அவதாரத்தின் மெய்யன்பர்களைத் தம்பால் கூவி அழைக்கும் சின்னங்கள்.

பகவத் கீதை தவிர்த்து கிருஷ்ணர் வேறு பல போதனைகளையும் வழங்கியுள்ளார். உதாரணமாக, பிருந்தாவன வாசத்தின் போது ஓரு முறை, கிருஷ்ணர், “பரதர்மம் பயாவஹ,” என்னும் போதனையை, அதாவது ஒருவர் தனது கடமைகளைச் செய்யாது சம்பந்தமில்லா பிற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்பதைக் குறிக்கும் போதனையை வெளிப்பாடுத்தியிருப்பதை புராணத்தில் காணலாம்.. இறைவனை, தான் சிறப்புடன் செய்யக்கூடிய தொழிலின் மூலம் பூஜிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இடையர்களான ஆயர்கள் சரத்காலத்தில் விவசாயிகள் கொண்டாடி மகிழும் இந்திர விழா எனப்படும் ஒரு விழாவில் ஈடுபட்டிருந்த போது கிருஷ்ணர் இதை உபதேசித்தார்.

ராசக் கிரீடை

நந்தகிராமத்தில்தான் கண்ணபரமாத்மா கோபிகாஸ்திரிகளுடன் விளையாடி மகிழ்ந்தார் எனக் கூறுவர். இதை ராசக் கிரீடை என புராணங்கள் கூறுகின்றன. அன்பர்களும் அன்புக்கினியவரும் ஒன்று சேரும் நேரங்கள் அவை. வெண்ணெய் திருடுவதும், பால் திருடுவதும், கிருஷ்ணருக்கு பால பருவத்து விளையாட்டுகள். ஓர் இறைத்தூதர் இவ்வாறெல்லாம் செய்வாரா என கேட்கப்படலாம். ஏன், இறைத் தூதரான மோசஸ் கொலை செய்யவில்லையா? அதனால் அவர் இறைத்தூதர் இல்லை என்றுதான் ஆகிவிட்டதா? “தாம் விரும்பியதை அவர் செய்வார்,” எனும் பஹாவுல்லாவின் வாசகத்தை இவ்வேளைகளில் நாம் நினைவு கூறுவது நலமாயிருக்கும்.

கிருஷ்ணர் தமது 28-வது வயதில் மதுராபுரியை விட்டு துவாரகாபுரியில் தமது சொந்த இராஜ்யத்தை ஸ்தாபித்தார். இக்காலத்தில்தான் ருக்மினியைத் திருமணம் புரிந்தார். ருக்மினியின் சகோதரன் கிருஷ்ணரின் எதிரியாகையால் தன் தங்கையைக் கிருஷ்ணருக்கு மணம் முடிக்க மறுத்தான். ஆனால் கிருஷ்ணரோ இதைப் பொருட்படுத்தாமல், தம்மை விரும்பிய ருக்மினியை அவருக்கு விருப்பமில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவாகத்தின்போது தமது படையுடன் வந்து கடத்திச் சென்று மணம் புரிந்தார். இதற்கு ருக்மிணி கிருஷ்ணருக்கு எழுதிய ஒரு கடிதமே காரணமாக இருந்துள்ளது:

“ஹே பக்தானுக்கிரகதேவ, தங்கள் பாதங்களில் அனேக தண்டங்களிட்டு இக்கடிதம் எழுதுகிறேன். ஹே பரந்தாமா, பீஷ்மகனுடைய புத்திரியான அடியாள் ருக்மணி தங்கள் கல்யாண குணங்களைக் கேட்டதிலிருந்து தங்கள் திவ்விய மங்கள ரூபத்தை என் இதயத்திலே பிரதிஷ்டை செய்து பூஜித்து வருகிறேன். அடியாளைத் தங்களுக்கே அர்ப்பணித்து விட்டேன். இப்போது என் சகோதரன் ருக்குமி தன் நண்பனான சேதி நாட்டு மன்னனுக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறான். பிரபோ, அடியாள் ஆதரவற்று தங்களையே ரட்சகராக எண்ணிக் காத்திருக்கின்றேன். கோவிந்தா, தாங்கள் என்னைக் கைவிட்டு விடமாட்டீர்கள் என நம்புகிறேன். தங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த உடல் மாற்றானுக்குச் சொந்தமாக்க ஒரு போதும் அனுமதியேன். தாங்கள் என்னைக் கைவிட்டு விட்டால் என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, ஹே கோகுலபால, திருமணத்துக்கு முன்னர் கௌரி பூஜை செய்வதற்காக ஆலயம் வருவேன். அந்தச் சமயம் தாங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்படி வேண்டுகிறேன்.
தங்களையே எண்ணியிருக்கும்,
“ருக்மிணி” -விஷ்ணு புராணம்

ருக்மினி, மித்திரவிந்தை, சத்தியை, ஜாம்பவதி, ரோகிணி, சுசீலா, சத்தியபாமா, லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்ணருக்கு இருந்தனர். இவர்களில் ருக்மினியின் வாயிலாக பிரத்தியும்னன் எனும் மகனும் அவன் வாயிலாக அநிருத்தன் என்னும் பேரன் முதலியோர் பிறந்தனர்.

நரகாசுரன்

பிராக்ஜோதிஷம் என்னும் ஒரு நகரை நரகாசுரன் ஆண்டு வந்தான். இவன் அசுர குணம் கொண்டவன். அவனது கொடிய, கொடூர செயல்களால் நாட்டில் பெரும் கஷ்டங்கள் மிகுந்திருந்தன. இந்திரனின் (இந்த இந்திரன் உண்மையில் பாரதத்தின் வடமேற்கை ஆண்டு வந்த ஒரு அரசனே என சில சரித்திர ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்) வேண்டுகோளுக்கு இனங்க கிருஷ்ணபரமாத்மா தமது மனைவியான சத்தியபாமாவுடன் நரகன் எனும் நரகாசுரனின் நாட்டிற்குச் சென்று அவனைப் போரில் வென்று பூபாரம் குறைத்தார். இங்கு கூர்ந்து கவனிக்கும் போது, புராணங்களில் பெரும்பாலும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் என இரு பிரிவினர்களைக் காணலாம். அசுரர்கள் பைசாச குணங்கள் படைத்தவர்களாகவும் தேவர்கள் கல்யான குணங்கள் கொண்டவர்களாவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மனிதர்கள் அனைவரும் மிருக இயல்பான அசுர சுபாவத்திற்கும் ஆன்மீக இயல்பான தேவ சுபாவத்திற்கும் இடையில் பல நிலைகளில் வாழ்பவர்களாக இருக்கின்றனர். அசுர குணம் மிகும்போது தர்மம் அழிந்துவிட்டது எனக் கூறுகின்றோம். தர்மம் பெரிதும் அழிந்திட்ட நிலையில் இறைவனின் அவதாரம் உண்டாகி, தர்மம் மீண்டும் தலைத்தோங்கச் செய்கின்றது.

குசேலர்

கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் சுதாமரெனும் குசேலரும் ஒருவர் ஆவார். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர். சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார். வறிய நிலையிலேயே சுதாமரின் வாழ்க்கை கழிந்தது. குழுந்தைகளுக்கு நல்ல உடையோ உணவோ கிடையாது. நிலைமை இவ்வாறாக இருக்க, அதைத் தாங்க முடியாத அவரது மனைவி மிகவும் மனம் வருந்தினாள். இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணர் அவரது பால்ய சிநேகிதராகையால் அவரைச் சென்று கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் சிறிது அவலை கட்டிக் கொடுத்தாள். குசேலரும் சரியெனக் கூறி கிருஷ்ணரைச் சந்திக்க கிளம்பினார். கிளம்பிவிட்டாரே தவிர, எப்போதோ பால்ய வயதில் ஒன்றாகப் பழகியிருந்தாலும், அவர் பரந்தாமன் அல்லவா அவர், தன்னை ஞாபகத்தில் வைத்திருப்பாரா? என்றெல்லாம் அவர் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டன. துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார். ருக்மிணியை அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். தங்கத் தாம்பளத்தில் அவரது பாதகங்களுக்கு ருக்மிணி நீர் வார்க்க, கிருஷ்ணர் அவற்றை அலம்பி சந்தனம் பூசி மலர்களால் அர்ச்சித்தார். அதன் பிறகு இருவரும் தாங்கள் ஒன்றாக அத்தியாயனம் செய்திருந்த காலத்தைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கினர். உணவு முடிந்ததும் குசேலரைத் தமது மஞ்சத்திலேயே நித்திரை கொள்ள வைத்து கிருஷ்ணர் தமது கைகளாலேயே சாமரம் வீசினார். உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார். அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை, அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டுவந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்த அவலையா கொடுப்பது. சர்வாந்தர்யாமியான கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம் வினவினார். குசேலர் தமது அக்குளில் வைத்திருந்த மூட்டையப் பார்த்து, இது என்ன என்று வினவியவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார். அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது வாயில் போட்டுக் கொண்டார். கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக் கொடுத்தோம் என வெட்கியவாறு குசேலரும் தமது கிராமம் நோக்கிப் புறப்பட்டார். தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின் அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார். வீடு திரும்பிய குசேலர் தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் களிப்புடன் வாழ்ந்தார்..

கிருஷணர் தமது 122-வது வயதில் இறந்தாலும், அவர் வயோதிகம் வயப்பட்டு இறக்கவில்லை. யாதவர்கள் அனைவரும் ஒரு முறை கடற்கரைக்குச் சென்றிருந்த போது, ஏதோ சில காரணங்களினால் தமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டு அழிந்து போனதாக புராணங்கள் கூறுகின்றன. அப்போது அருகிலிருந்த ஓர் அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணரை மான் என நினைத்த உலபதன் என்னும் வேடன் அம்பெய்தினான். விஷங் கலந்திருந்த அந்த அம்பு அவரது காலில் தைத்தது. கிருஷ்ணபரமாத்மாவும் அதன் பயனாக விண்ணேற்றம் அடைந்தார். இதன் பிறகு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் துவாரகா பட்டணம் முழுவதுமே மூழ்கி இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

மேற்கண்ட இந்த சில நிகழ்ச்சிகள் கிருஷ்ணருடைய வாழ்க்கையில் நடந்த, ஆனால் நாம் புரிந்துகொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள். இவை தவிர்த்து அசுரர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் புராணங்களில் நிறையவே உள்ளன. உதாரணமாக காளிங்கன், கேசி, நரகாசுரன் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைக் கூறலாம். சம்பந்தப்பட்ட அசுரர்களில் சிலர் அரசர்களாக இருந்துள்ளனர். காளிங்கன் ஒரு பாம்பாகத் தோன்றினான், பெண் அரக்கிகள் மற்றும் கரடி ரூபத்திலும் அசுரர் தோன்றியுள்ளனர். ஏற்கனவே எச்சரித்துள்ளபடி ஞானக் கண் கொண்டு பார்த்து அந்தந்த சம்பவங்களில் அடங்கியுள்ள தத்துவங்களைக் கிரகித்துக் கொள்ளவேண்டும். கிருஷ்ணத் துவைபாயனர் என்னும் வியாசர் எழுதிய புராணங்கள் முழுவதும் இத்தகைய நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கின்றன. அவற்றின் பின்னனியில் மேற்குறிப்பிட்ட தத்துவங்களும் நிறைய அடங்கியுள்ளன. அதுவே நோக்கம். ஆம், தத்துவங்களை மனதிற் பதியும் வகையில் வித்தியாசமாக மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்பதே புராண கதைகளின் நோக்கம்.

இந்தச் சம்பவங்கள் கிருஷ்ணரது வாழ்க்கையில் நடந்த பொதுவான சம்பவங்கள். ஆனால் அவர் ஓர் கடவுள் அவதாரம் என்னும் முறையில் வெளிப்படுத்திய போதனையான “பகவத் கீதை” என்னும் இறைவனின் கீதம் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது என்னும் வரலாற்றைக் காண வேண்டுமானால் மாஹாபரதம் என்னும் இதிகாசத்தைச் சிறிது ஆராய வேண்டியிருக்கும். புராணங்களில் பகவத் கீதையின் வெளிப்பாட்டின் சூழ்நிலைகள் விவரிக்கப் படவில்லை. ஆனால் மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் இதை மிகவும் விரிவாகவே காணலாம்.

மகாபாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள், அதாவது “இவ்வாறு நடந்தது/இருந்தது” என்னும் பொருளிலான சரித்திரக்காலத்திற்கு முந்திய சம்பவங்களை அவை உள்ளடக்கியுள்ளன. ஆங்கிலத்தில் அவற்றை “லெஜன்ட்” என அழைப்பார்கள். மஹாபாரத யுத்தமானது ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கிடையில் நடந்த ஒரு போராகும். இதுவும் ஒரு வகையில் தேவாசுர யுத்தமாக, ஒரு புறம் தர்மமும் மறுபுறம் அதர்மமுமாக, நடந்தது. ஒரு புறம் கிருஷ்ணரின் மைத்துனர்களான பாண்டவர்களும் மறுபுறம் அவர்களின் எதிரிகளான பாண்டவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களான கௌரவர்களும் இருந்தனர். சூதாட்டத்தில் பாண்டவர்களை வஞ்சகத்தால் வென்று அவர்களுடைய இராஜ்யங்களை எல்லாம் கௌரவர்கள் அபகரித்தனர். பாண்டவர்கள் தங்களின் இராஜ்யத்தைத் திரும்பப் பெறும் முயற்சின் பலனாகவே இம்மகாபாரத யுத்தம் மூண்டது. இப்போரின் சூத்திரதாரியாக வீற்றிருந்தவர் கிருஷ்ணரே. போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகப் பங்கெடுத்து அவன் மூலமாக போர் சென்ற திசையையே அவர் மாற்றியமைத்தார். தன் மகனாகிய அபிமன்யுவை வஞ்சகத்திற்குப் பலிகொடுத்து, அதன் பலனாக துக்கத்திற்குத் தன் அறிவைப் பறிகொடுத்திருந்த அர்ஜுனனுக்கு உபதேசித்த வார்த்தைகளே பிறகு கீதோபதேசமாயின. உதாரணமாக, பகவத்கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் துக்கித்திருந்த அர்ஜுனனுக்கு ஆன்மாவின் இயல்புகள் குறித்து கிருஷ்ணர் அளித்த விளக்கங்கள் அவனுக்கு வாழ்வின் உண்மைகளை எடுத்துக்கூறி தன் மகனின் மரணத்தை மறந்து மேற்கொண்டு போரில் அவன் தன் கடமைகளை ஆற்றவேண்டியதின் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன.

புராண இதிகாசங்கள், குடும்ப உறவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுப்பதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணலாம். உதாரனமாக, தேவகி கம்சனின் தங்கை என கூறப்பட்டாலும், அவள் கம்சனுக்கு ஒன்று விட்ட தங்கையே. இருந்தும் அவளை கம்சனின் தங்கை எனவே புராணங்கள் சித்தரிக்கின்றன. கிருஷ்ணரும் பாண்டவரும் மைத்துனர்கள் ஆவார்கள். அதாவது கிருஷ்ணருக்குப் பாண்டவரின் அன்னையாகிய குந்திதேவி அத்தை உறவு கொண்டவள். அப்போது நிலவிய இந்த நெருக்கமான உறவு முறைகள் இப்போதும் இந்தியரிடையே நிலவுவதைக் காணலாம்.

ஆக, ஸ்ரீ கிருஷ்ணர் உண்மையில் கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ள கடவுளின் அவதாரம் என்பதைக் கண்டுகொள்வது சிரமமல்ல. அவர் தோன்றிய காலத்திற்கு ஏற்றவாறு அவருடைய வரலாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவு பெருக்கம் நிறைந்த இன்று அவருடைய மெய்ம்மையை அறிவுபூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும், தத்துவார்த்தமாகவும் கண்டுகொள்ளலாம் என்பது திண்ணம்.

ஒரு முல்லாவின் வசைமாரி


பஹாய் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பஹாய்களுக்கு புதியனவல்ல. இவ்வருடம் இரான் நாட்டின் முல்லா ஒருவர் தமது சமயக்கூட்டத்தினருக்கு பின்வருமாறு பஹாய்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார்.

உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!
பஹாய்கள் பெரும் சலசலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதைப் பார்த்தீர்களா?
உங்களுக்கு அது தெரியுமா?

அவர்களின் செயல்கள் எவ்வாறு அவர்களின் போதனைகளோடு ஒத்திருக்கின்றன என்பதைப் பார்த்தீர்களா? அவர்கள் தங்கள் சமயத்தை இவ்வகையிலேயே மிகவும் வெற்றிகரமாகப் போதிக்கின்றனர்.
இதை நீங்கள் தெரிந்துவைத்திருக்கின்றீர்களா? தெரிந்துவைத்திருக்கின்றீர்களா?

800 மாணவியரைக் கொண்ட ஒரு பள்ளியில், ஒரு பஹாய் மாணவி வெகு கெட்டிக்காரத்தனமாகப் பயின்று எல்லாரும் பிரமிக்கும் அளவுக்கு நடத்தையுடைவளாக இருக்கின்றாள்.
இதுவும் உங்களுக்குத்தெரியுமா?

அவளுடைய நடத்தையின் மேன்மை எத்தகையது என்றால் அவளை முன் பின் தெரியாத எவரும் அவளை ஓர் ஆயத்துல்லாவின் மகள் என்றே நினைப்பார்கள்… ஆனால், அவள் ஒரு பஹாய்.

ஒரு பஹாய் பெண்ணின் நடத்தையையும், ஒரு ஷியா பெண்ணின் நடத்தையையும் பாருங்கள்!
ஆ ஆ ஆ! நான் மேற்கொண்டு பேசிக்கொண்டு போனால் நீங்கள் அனைவரும் நம்பிக்கையிழந்து போவீர்கள்! உண்மையில் “நான் உங்களை நாளைக்கு நரகத்திலேயே பார்த்துக்கொள்கிறேன்,” என கூறிவிடுவது நல்லது.

அவர்கள் செய்வதைப்பாருங்கள். நான் உங்களை நம்பிக்கையிழக்கச் செய்திட விருப்பமில்லை. – உங்களை விழித்தெழச் செய்திடவே விரும்புகிறேன்!

உங்களுக்கு (முல்லாக்கள்) எதையாவது செய்யத் தெரியுமோ தெரியாதோ. அப்படி இயலாதென்றால், தொலைந்து போய்விடுங்கள், வேறு யாராவது இந்த வேலையை செய்யட்டும். ஒரு முல்லா ஏதாதவது நல்ல காரியம் செய்த மறு கணமே, உங்களில் ஒருவர் வேறு எதையாவது செய்து குழப்பிவிடுகிறீர்கள்.

நான் ஒன்று சொல்லப் போகின்றேன். அது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் இங்கு நாளைக்கு வரத்தேவையில்லை.

பஹாய்களின் சமயம் நமக்கும் நமது முயல்வுகளுக்கெல்லாம் ஓர் ஓநாயைப் போன்றது.
போதைப் பழக்கத்துக்குள்ளான ஒரு பஹாய் அல்லது யூதரை எனக்குக் காட்டும் முதல் மனிதருக்கு நான் ஒரு பரிசு கொடுக்கிறேன்.
போதைப் பழக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் ஒரு பஹாயைக்கூட நீங்கள் காணமுடியாது.
கெட்ட நடத்தையுடைய அல்லது மற்றவர் சட்டையைப் பிடித்து கொச்சையாகத் திட்டும் ஒரு பஹாயைக் கூட நீங்கள் பார்க்கமுடியாது.

குர்’ஆன் குறித்து நடத்தப்பட்ட ஒரு பள்ளி சோதனையில், ஒரு பஹாய் 20/20 மார்க் வாங்குகிறார் ஆனால் ஒரு ஷியா முஸ்லிம் 2/20 வாங்குகிறார்.(அது கூட, அம் மாணவரின் தந்தை நமக்குத் தெரிந்தவர் என்பதால் அந்த 2 புள்ளிகளை நாம் வழங்குகிறோம்). இல்லையென்றால் அந்தத் தந்தை திருப்தியடையாமல் ஆத்திரம் கொள்ளக்கூடும்.

நானும் ஒரு பஹாய், யூத, மற்றும் கிருஸ்தவ மாணவனை பெற்றிருந்தேன். அந்தப் பஹாய் மாணவரின் இயல்பு மற்றும் நடத்தைக்கு நான் 20/20 புள்ளிகள் கொடுப்பேன்… ஏனெனில் நான் அவருக்கு 30/20 என கொடுக்க முடியாது.

ஒரு வகுப்பில் ஒரு பஹாய் மாணவன் யாருடனும் சண்டையிட மாட்டார், மற்றவரைப் பார்த்து சாபமிடமாட்டார், வகுப்பை குலைக்கமாட்டார், (சத்தமாக) மிகவும் நேர்த்தியான உடைகள் (மேலும் சத்தமாக): ஆனால் ஒரு ஷியாவின் நிலை என்ன? ஒன்றுமே இல்லை. அப்பள்ளி முழுவதும் தேடினாலும் 2 கிலோ விஷயம் கூட கிடைக்காது.

சமையல்


நன்றி: கோபால் K.

சமையல்

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்

தக்காளி – 3
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
பூண்டு – 10 பல்
கடுகு – 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

ரசப் பொடி செய்ய

துவரம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
மல்லி – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், வெந்தயத்தூள் ஆகியவற்றை தனியே நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2. சிறிது தண்ணீரில் தக்காளியை உப்பு சேர்த்து கையால் கரைத்து தோலினை எடுத்து விடவும்.

3. புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

4. இதனுடன் கரைத்த தக்காளியை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

5. பூண்டை தோல் உரிக்காமல் ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.

6. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

7. இதனுடன் நசுக்கிய பூண்டை போட்டு லேசாக ஒரு பிரட்டு பிரட்டி, தனி பாத்திரத்தில் வைத்துள்ள புளி, தக்காளி கரைசலில் சேர்க்கவும். பின்னர் இந்த கரைசல் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

8. பிறகு இதனுடன் ரசப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து வேக விடவும். ரசம் நுரைத்து ஒரு கொதி வந்த உடனே மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்

கொள்ளு – 50 கிராம்
தக்காளி – 1
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
வரமிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு

ரசப் பொடி செய்ய

துவரம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
மல்லி – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. கொள்ளை நன்றாக ஊறவைத்து களைந்து, வேகவைத்துக் கொள்ளவும்.

2. வேக வைத்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு மசித்த கொள்ளையும் கலந்து எடுத்துக் கொள்ளவும். (ஒரு கோப்பை அளவு)

3. புளியை 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணிரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

4. புளிக்கரைசலில் தக்காளி, உப்பு போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

5. பூண்டை ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து, நசுக்கிய பூண்டையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி-தக்காளி கரைசலையும், கொள்ளுத் தண்ணீரையும் சேர்க்கவும்.

8. அதில் சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்று இரண்டாக பொடித்து சேர்க்கவும். அல்லது ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும்.

9. பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

10. ரசம் நுரைத்து பொங்கி வரும் போது மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. கொள்ளு ரசம் உடல் வலிமைக்கு நல்லது. சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடடக்கும்.

2. கொள்ளு பெண்கள் கருப்பைப்பையில் இருக்கும் அழுக்கை அகற்றும் சக்தி கொண்டது.

3. கொள்ளு சூடான உணவுப்பொருள் என்பதால் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.

அரிசி மாவு முறுக்கு

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கிலோ
பொட்டுக்கடலை – 300 கிராம்
எள் – 25 கிராம்
வர மிளகாய் – 4
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 லிட்டர்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. இட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு (தண்ணீர் சேர்க்காமல்) நன்கு பொடி செய்து கொள்ளவும்.

3. வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

4. ஊறவைத்த இட்லி அரிசி, வர மிளகாய் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு, அதிகம் தண்ணீர் சேர்க்காமல், முடிந்தவரை கெட்டியாக, மைய அரைத்துக் கொள்ளவும்.

5. அதனுடன் பொட்டுக்கடலை மாவு, வறுத்த எள், உப்பு, பெருங்காயம் ஆகிவற்றை சேர்க்கவும்.

6. 100 மில்லி எண்ணெயை ஒரு பாத்திரத்தில் தனியே கொதிக்க வைத்து இந்த மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 4 கோப்பை
வறுத்த உளுத்தம் பருப்பு மாவு – 1 கோப்பை
வெண்ணெய் – 1 மேஜைக் கரண்டி
தேங்காய் – 1
சீரகம் – சிறிதளவு
மிளகு – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. மிளகு சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

2. இதனுடன் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3. பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும்.

4. தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுக்கவும்.

5. பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும்.

6. ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

7. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

8. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

9. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

10. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

11. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

ஜவ்வரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1 கோப்பை
அரிசி மாவு – 6 கோப்பை
கடுகு – சிறிதளவு
எலுமிச்சைம்பழம் – 1
புளித்த தயிர் – 1 கோப்பை
பச்சைமிளகாய் – 3
பெருங்காயம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு கழுவி புளித்த தயிரில் ஊற வைக்கவும்.

2. ஊறிய ஜவ்வரிசியுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

3. சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு தாளித்து விழுதில் சேர்க்கவும்.

4. பின்னர் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து இந்த விழுதுடன் சேர்க்கவும்.

5. அதனுடன் அரிசி மாவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை 3 அல்லது 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.

6. பின்னர் ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கிலோ
உளுந்து – 200 கிராம்
அவல் – 1 கைப்பிடி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி

செய்முறை

1. அரிசியை, வெந்தயத்துடன் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. அரிசியை அரைப்பதற்கு 10 நிமிடம் முன் அவலை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

3. அரிசி, வெந்தயத்துடன், அவலைச் சேர்த்து, நைசாக இல்லாமல் கொஞ்சம் மரமரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

4. உளுந்தை 1 மணி நேரம் (அறைப்பதற்கு முன்) ஊற வைத்து மெத்மெத்தென வரும் வரை அரைக்கவும்.

5. இரண்டு மாவையும் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கி (கையினால்) வைக்கவும்.

6. அரைத்த மாவினை 8 மணி நேரம் வைத்து புளிக்க வைக்கவும்.

7. மாவு புளித்து மேலே வரும். அப்போது கரண்டியை விட்டு நன்றாக கலக்கி, இட்டிலி தட்டில் எண்ணெய் தடவு மாவை ஊற்றி ஆவியில் வேக வைத்து இட்லியாக வார்த்து எடுக்கவும்.

குறிப்பு

1. இட்லிக்கு தொட்டுக் கொள்ள தக்காளி, தேங்காய், கொத்தமல்லி சட்னிகளும், நல்லெண்ணெய் கலந்த இட்லிபொடியும் சுவையாக இருக்கும்.

2. அவலை 10 நிமிடம் மட்டும் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறவைத்தால் கூழ் போலாகிவிடும்.

ரவா தோசை

தேவையான பொருட்கள்

ரவை – 400 கிராம் (2 கோப்பை)
அரிசி மாவு – 1 மேஜைக் கரண்டி
மைதா மாவு – 1 மேஜைக் கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. புளித்த மோரில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மோரில் சேர்க்கவும்.

3. பின்னர் அதனுடன் வறுத்த ரவை, மைதா மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

4. பிறகு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து அதில் மிளகு, சீரகம், கடுகு ஆகியவை சேர்த்து தாளித்து, கலந்து வைத்த மாவில் கொட்டவும்.

5. பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு

1. மாவை அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது.

2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 2
பூண்டு – 3 பல்லு
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, இவை அனைத்தையும் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை அதில் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

குறிப்பு

1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

கறிவேப்பிலை சட்னி

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 1 கோப்பை
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/2 தேக்கரண்டி
புளி – 1 கொட்டை அளவு
தேங்காய் துருவல் – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 4 பல்லு
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/4தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.

4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.

6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.

7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும்.

குறிப்பு:

1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

தீபாவளி லேகியம்

தீபாவளியன்று ஏகப்பட்ட பட்சனங்களை செய்து, வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்த பின்னர் பட்டாசையம் கொளுத்தி கொண்டாடியாயிற்று. அடுத்து முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. அதுதான் தீபாவளி லேகியம்.

சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த தீபாவளி லேகியம்.

தீபாவளி லேகியம் என்றதும் பயந்து போய் விட வேண்டாம். சாதாரண இஞ்சி கஷாயம்தான் இது.

தீபாவளி லேகியம் தயாரிக்க தேவையான பொருட்கள்..

இளம் இஞ்சி – ஒரு பெரிய துண்டு.
மல்லி விதைகள் – 1 கப்.
ஜீரகம் – அரை கப்.
நெய் – 3 தேக்கரண்டி
வெல்லம் – 1 கப்.

செய்முறை:

கொத்தமல்லி விதைகளையும், ஜீராவையும், அரை குவளை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில், இந்த பேஸ்ட்டை கலந்து நன்கு நைசாக வருமாறு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு மெதுவாக நெய்யை கலந்து அப்படியே கலக்கி வரவும். இந்தக் கலவையில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாகி, அப்படியே இறுக்கமான பேஸ்ட் ஆக மாறி விடும். இதுதான் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து.

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு முடித்ததும் இந்த தீபாவளி மருந்தை உட்கொண்டால் வயிறு கெடாது, ஜீரணப் பிரச்சினை வராது.

தித்திப்பான தீபாவளிக்கு இந்த கஷாயம் அவசியம் தேவை. மறந்துடாம தயாரிச்சுடுங்க.

அச்சு முறுக்கு (தீபாவளி ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு – 2 கப்

சர்க்கரை – 1 கப்

முட்டை – 1

எள் – 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு – ஒரு சிட்டிகை

சோடா உப்பு – ஒரு சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான, இனிப்பு அச்சுமுறுக்கு தயார்.