5 செப்டம்பர்
அயராத உறுதிப்பாட்டின் பாடங்கள்
இரான் நாட்டின் அரசியலமைப்பு கட்சியின் பிரகடனம்
இரான் நாட்டின் பஹாய் சமூகத்தின் தலைவர்களின் சிறை தண்டனை குறித்து வெறும் அனுதாபம் காட்டுவது மற்றும் கண்டனக் குரல் எழுப்புவது மட்டும் போதாது. இஸ்லாமிய சர்வாதிகார அரசு, இரான் நாட்டின் தனிச்சிறப்பு மிக்க இவ்விரண்டு பெண்களையும் ஐந்து ஆண்களையும், (யாரான் எனப்படும் இரான் நாட்டு பஹாய் தலைமைத்துவம்) அவர்கள் பஹாய்கள் எனும் காரணத்திற்காக மொத்தம் நூற்றிநாற்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு உட்படுத்தியுள்ளது. பஹாய் சமூகத்தின் தலைமையை அழித்துவிடும் தொடர் குறிக்கோளுக்கு இணங்க, மீண்டும் ஒரு பஹாய் குழு அவர்களின் சமய-சமூக நம்பிக்கைக்காக பலியிடப்பட்டுள்ளனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காஃஜார் ஆட்சியின் கீழ் கொடூரமான முறையில் இரத்தக்களரியில் ஆரம்பித்த நீண்ட வெட்கக்கேடான கதையோடு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இஸ்லாமிய குடியரசினால் தொடரப்படும் சமய சிறுபான்மையினரை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இக்குழுவினருக்கு எதிரான சிறைத் தண்டனையாகும். ஆனால், இந்த நீண்ட வெட்கக்கேடான கதைக்கு வேறொரு முகப்பும் உள்ளது, குறிப்பாக ஆட்சியிலுள்ள சர்வாதிகாரத்திற்கெதிரான மக்களின் போராட்டம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்: பஹாய்கள் அரசியலில் பங்கேற்பதில்லை; ஆனால் இரான் நாட்டு அரசியல் அவர்களிடமிருந்த நல்ல பாடங்களை கற்றுக்கொள்ளமுடியும்.
எத்தகைய பெருங் கொடுமையின் கீழும் சற்றும் வழுவாத உறுதிப்பாடென்பது பஹாய்கள் இரான் நாட்டவர்களுக்குக் வழங்கக்கூடிய முதல் பாடமாகும். பஹாய் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, வியாபாரங்கள் முடக்கப்பட்டுள்ளன, உடைமைகள் திருடப்பட்டுள்ளன, தொழில் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து பஹாய்கள் விரட்டப்பட்டுள்ளனர், அவர்கள் மரணதண்டனை அல்லது நீண்ட சிறைவாசத்தை எதிர்நோக்குகின்றனர், ஆனால், அவர்கள் சிறிதும் அயரவோ முனகவோ நம்பிக்கையிழந்தோ போவதில்லை. அவர்கள் தாங்கள் மனதொடிந்ததாகவோ வகையற்று போனதாகவோ கூறிக்கொள்வதில்லை. பச்சை இயக்கத்தின்(தற்போது இரான் நாட்டில் முடங்கிப்போய்விட்ட புரட்சிக்கு இடப்பட்ட பெயர்) தோல்வி குறித்து பேசுபவர்கள் தங்களின் சக பஹாய் பிரஜைகளைப் பார்த்தால் போதும். இவர்களுள் தோல்வி தொனியில் பேசுவதற்கு தகுதியானவர் யார் என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும்?
முதல் பாடம் போன்று அதே அளவு முக்கியத்துவம் கொண்டது, குறைந்த தனிநபர் ஆற்றல்களை ஒன்றுதிரட்டி அவர்களை ஒரு வலிமைமிக்க சமூக பின்னலமைப்பாக மாற்றுவது இரண்டாவது பாடமாகும். இந்த இஸ்லாமிய குடியரசு ஆட்சியின் போது பஹாய்கள் கையாண்ட சுயபாதுகாப்பு திட்டமுறைகள் வருங்காலத்தில் இரான் நாட்டின் அதிமேன்மைமிக்க வரலாற்றுப் பக்கங்களில் பதிக்கப்படப்போகின்றன. பஹாய் மாணவர்களுக்கு பல்கலைகழகங்களின் கதவுகள் மூடப்பட்டபோது, பஹாய்கள் தங்கள் இல்லங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றினர். ஐரோப்பாவிலும் அமெரிக்கவிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட கூடுவதற்கு சிறந்த பஹாய் போதகர்கள் சிறு குழுக்களான மாணவர்களுக்கு வீடுகளிலேயே இலவச பாடங்கள் வழங்கினர்.
பஹாய்களுக்கு முல்லாக்களோ மதகுருக்களோ கிடையாது. திருமணங்கள், பிறப்பு மற்றும் பிற சமய அனுசரிப்புகள் போன்ற “சொந்த விவகாரங்களை” பஹாய் சமூகங்களின் உள்ளூர் நிர்வாகிகள் கவனித்துக்கொள்கின்றனர். இத்தகைய நிர்வாகிகளே அடிப்படையாக எப்போதுமே நசுக்கல்களுக்கு குறிவைக்கப்படுவதால், எங்கெங்குமுள்ள பஹாய் உள்ளூர்களில் தனிநபர் பஹாய்கள் தேவையான பயிற்சிக்கு பிறகு இவ்வித கடமைகளை தாங்களே செயல்படுத்துகின்றனர். (பஹாய்) “தலைமைத்துவம்” அதன் எல்லைகள் வரை அகலச் செய்யப்பட்டுள்ளது. தலைமை பன்மடங்காகிவிட்டதால் இஸ்லாமிய குடியரசு அவற்றையெல்லாம் அழிக்க முடியாது.
அரசியல் மற்றும் சமய சமரசத்தை தனது திறந்த ஜனநாயக உரையில் தலையாய சிறப்பம்சமாக ஏற்றுக்கொண்டுள்ள பச்சை இயக்கம் தனது சக பஹாய் பிரஜைகளை சற்று கூர்ந்து கவனிப்பது அவசியமாகும். தாக்குதல்களின் போது சற்றும் அயராத அதன் தலைமைத்துவம், அத்தாக்குதல்களைச் சமாளிக்க ஒருமச் சிதறல்களாக உருமாறியுள்ளது. கூட்டுறவு மற்றும் எவ்வளவு சிறிதான போதும் தனது ஆற்றல்களை ஒன்று திரட்டுவது இரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்கு உதவுவது போன்று பச்சை இயக்கத்திற்கும் அது உதவே செய்யும்.
இரான் நாடு நீடூழி வாழ்க! இரான் நாட்டு மக்கள் நீடூழி வாழ்க!
-இரான் நாட்டின் அரசியலமைப்புக் கட்சி(சுதந்திர ஜனநாயக கட்சி)