வெள்ளிக்கிழமை
22 அக்டோபர் 2021

உலகின் பல பாகங்களில், வருடம் 1914-க்குள் மானிடத்திற்கான அவரது சேவைக்காக அப்துல்-பஹா நன்கு அறிமுகமாகியிருந்தார். அவர் தமது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்திருந்த புனித நிலத்தில், ஏழைகள் மற்றும் வறியோருக்கான அவரது சேவைக்காகவும் உள்ளூர் மற்றும் மண்டல அளவில் உயர் பதவியில் உள்ளோருடன் சொல்லாடல்களில் ஈடுபட்டு வந்ததற்காகவும் அவர் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவுக்கான அவரது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஜயங்களுக்கு முன்னும் பின்னும் எகிப்பு நாட்டில் அவர் கழித்த நாள்கள் குறிப்பிடத்தகும் அளவு கவனத்தை ஈர்த்து, வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் சார்ந்தோர் அவரது இரசிகர்களாயினர். 1914-இல், அவர் தமது மேற்கத்திய நாடுகளுக்கான பயணங்களை முடித்துக்கொண்டு அப்போதுதான் நாடு திரும்பியிருந்தார். அந்தப் பயணங்களின் விவரங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை, உலகளாவிய அமைதிக்கான அவசரத்தின் சூழலில் அவரது தந்தையார் போதனைகள் குறித்த, முறையான, முறைசாரா, மற்றும் பல்வகையான மக்களுக்கான அவரது விளக்கங்கள், அவரை உலக அரங்கில் ஒரு தனித்துவம் மிக்கவராக எடுத்துக்காட்டியது. யுத்த காலங்களில், தமது தாயகத்தில் உள்ள ஹைஃபா மற்றும் அக்காநகர் சார்ந்த மண்டலங்களில் ஏற்பட்ட பஞ்சத்தை நிவர்த்தி செய்வதற்கான அவரது உதவிக்கு அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். உலகைச் சுற்றிலும் உள்ள பலருக்கு, அவரது வாழ்க்கையின் உதரணமும் அவரது எண்ணிலடங்காக திருவாசகங்களும் அப்போதும் இப்போதும் வழிகாட்டலுக்கும் தெளிவுரைகளுக்கும் மூலாதாரங்களாக இருந்து வருகின்றன.
ஆனால், மத்திய கிழக்கில் நவீன கல்விக்கான அப்துல்-பஹாவின் தொடர்ந்தாற் போன்ற ஊக்குவிப்பு, இன்று அவ்வளவாக அறிந்திருக்கப்படவில்லை. இதன் தொடர்பில், பெய்ரூட் நகரில் ஒரு பஹாய் மாணவர் குழுவினர், பஹாய்கள் என்னும் அவர்களின் அடையாளத்துடன் ஒத்துப்போகும் முறையில், உயர் கல்வியை நாடுவதற்கு எவ்வாறு பல வருட காலங்களாக, அவர்களை அவர் ஊக்குவித்துப் பராமரித்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.

1914-இல் அப்துல்-பஹாவின் பல விருந்தினர்களுள், சிரியா புரொட்டெஸ்டன் காலேஜின் (Syrian Protestant College) தலைவரான ஹோவார்ட் பிலிஸ் என்பவரும் உள்ளார். இந்த ஸ்தாபனத்துடன் அப்துல்-பஹா நீண்டகால உறவைக் கொண்டிருந்தார். அந்த ஸ்தாபனத்தில், பிப்ரவரி மாதத்தில் பிலிஸ் அவர்களின் ஹைஃபா வருகைக்கு முன்பாகவே ஒரு பஹாய் மாணவர் குழுவினர் அங்கு தங்களை நன்கு ஸ்தாபித்துக்கொண்டிருந்தனர்.1 பிலிஸ், பெய்ரூட்டில் உள்ள அந்த காலேஜில் தமது வாழ்க்கையைக் கழித்திருந்தார் (அவரது தந்தையான டேனியல் பிலிஸ், அந்த காலேஜின் முதல் தலைவராக இருந்தவர்). அரபு மொழியில் நன்கு உரையாடக்கூடியவரான பிலிஸ், அந்தக் காலேஜில் பயின்ற பஹாய் மாணவர்கள் தங்களின் வசந்தகால விடுமுறையை ஹைப்பாவில் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் நினைவாலயங்களுக்கு அருகில் கழிப்பதற்கும் அதன் மூலம் அப்துல்-பஹாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் அப்துல்-பஹாவைக் காண வந்திருந்தார். ஆனால், அவர்களுக்கிடையிலான உரையாடல் அப்துல்-பஹாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்குத் தாவியது. தமது பயணங்களின்போது பலமுறை அவர் செய்தது போன்று, தமது மாணவர்களுள் பிற விஷயங்களுக்கிடையில், ‘மானிட உலகின் ஒருமை’ குறித்த கொள்கையைப் பேணுமாறு அப்துல்-பஹா பிலிஸ்ஸை ஊக்குவித்தார். அதன் மூலம் அம்மாணவர்களின் கல்வி “சர்வலோக அமைதியின்பால்”2 வழிநடத்தப்படக்கூடும்.
அப்துல்-பஹாவின் கருத்துகளுக்கும் ஊக்குவிப்பிற்கும் பிலிஸ்ஸின் ஏற்பிசைவு பத்து நாள்களுக்குப் பிறகு அவர் வழங்கிய ஓர் உரையில் வெளிப்பட்டது. பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி, அப்பள்ளியின் வளமான பல்வகைமையைப் பிரதிநிதிக்கும் ஒரு மாணவர் குழுவுடனான சந்திப்பில், அக்குழுவின் “பணிகளில்” ஒன்றாக “சர்வலோக அமைதியை ஸ்தாபிப்பதும் இருக்க வேண்டுமென பிலிஸ் வலியுறுத்தினார்.”3 அப்துல்-பஹாவுக்கும் பிலிஸுக்கும் நடந்த பரிமாற்றம், உண்மையில், பஹாய் சமூகமும் கல்லூரியும் பல ஆண்டுகளாக நடத்திவந்த, பஹாய் மாணவர்கள் பங்களிக்க முயன்று வரும் அந்த காலேஜின் சுயமான “சமய ஒன்றிணைவு ஆய்வின்” மீது மையப்படுத்தப்பட்ட ஒரு விரிவான உரையாடலின் அடையாளமாக இருந்தது.
(தொடரும்)